புதிது – வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ – நகரத்துக்கு வந்த பசு

வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள்.

எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய குளித்துச் சுத்தமாகத் தெரியும் சமையல்காரர்கள் காலை உணவைப் பாகம் செய்து கொண்டுருந்தார்கள். ஆளோடி இறுதியில் ஒரு ஓர அறை ஆகாயத்தைப் பார்தது கூரை இல்லாமல் நீண்டிருக்க, அங்கே உத்தியோகம் செய்கிறவர்கள், உபயோகித்த பாத்திரங்களைக் கழுவி அலம்பித் தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

குசினி வாசலில் நின்றபோது பிரதம சமையல்காரர் ஒரு வினாடி தன் உதவியாளனிடம் அடுப்பைக் காட்டிச் சொல்லியபடி ராணிக்கு மரியாதை செலுத்த ஓடி வந்தார்.

எல்லாம் சரியாக நடக்கிறது தானே?

ஆமாம் அம்மா.

காலை உணவு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இட்டலிகளும் தோசையும் துவையலும் பாகம் செய்துகொண்டிருக்கிறோம் அம்மா. வெண்பொங்கலும் வெந்துகொண்டிருக்கிறது. இன்று வெள்ளி என்பதால் பூஜை நைவேத்தியமாகப் படைக்கப் பலாப்பழப் பாயசமும் சமைத்து வைத்தாகி விட்டது அம்மா. நீங்கள் சொன்னபடி குறைந்த அளவு சர்க்கரையே சேர்த்துச் செய்தோம். துரை அவர்கள் காணிக்கையாகத் தந்த கொய்யாப் பழங்களையும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கிறோம்.

சரி ரொம்ப நல்லது. எனக்கு வேண்டிய தினசரி பானம் அனுப்புகிறீர்களா?

நிச்சயமாக அம்மா. உங்கள் தினசரி வழக்கப்படி எலுமிச்சைச் சாறும் தேனும் வென்னீரில் கலந்து வைத்திருக்கிறது. இன்று தேன் சேர்க்க வேண்டாம் என்றால் தேனில்லாமல் கருப்பட்டிக் கூழ் சேர்த்த இன்னொரு குவளையும் உண்டு. இரண்டையும் தங்கள் திருமனசுப்படி அனுப்புகிறேன்.

தேனை நாம் விலக்கவில்லை. அடிகளார் வந்தபோது அவருக்கு விலக்கு என்பதால் சொன்னோம். இப்போது தேன் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.

மண்டபத்தில் நேமிநாதன் நின்றபடி சென்னா வரக் காத்திருந்தான். வலதுகைச் சுட்டி விரலில் வெள்ளைத் துணியால் கட்டி வைத்திருந்ததை முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாலும் சென்னா கண்ணில் அது படத் தவறவில்லை. பார்த்தபடி தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள் சென்னா.

வணக்கம் அம்மா, நன்றாக உறங்கினீர்களா? நேற்று முன் தினம் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே அந்தக் குத்திருமல் கட்டுப்பட்டதா? வயிறு சீரணப் பிரச்சனை இன்றி சீராக இயங்குகிறதா?

அவன் சொல்லச் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள் சென்னா. வயிறு பற்றிய ஆம் உதிர்த்த உடன், அவனை இருக்கச் சொல்லி விட்டு தாதியைப் பார்த்தாள் சென்னா.

கொல்லைக்குப் போக கூட்டு எதுக்குன்னு பழஞ்சொல் தமிழ்லே உண்டு. ஆனா எனக்கு அறுபது வயசாகி எல்லா சீக்கும் வந்து சேர்ந்திருக்கு. கொல்லையிலே கழிப்பறையிலே கொண்டு போய் விட்டு காத்திருந்து திரும்பக் கூட்டிவர தாதி இருந்தால் மனசு ஆறுதலோட இருக்கு. சுத்தப்படுத்தறதெல்லாம் நானே தான் இதுவரைக்கும் செய்துக்கறது. வெறும் துணைதான். நான் போயிட்டு தோட்டம் போறேன். நேமி, நீ குளிச்சு உண்டு விரைவாக காரியாலயம் வந்துடறியா?

சரி அம்மா, அப்படியே ஆகட்டும். காலைச் சாப்பாடு?

அவன் தயங்கி நின்றான்.

என்ன சந்தேகம்? எப்பவும் போல சேர்ந்துதான். ரஞ்சனாவும் இருக்கட்டும். எட்டு மணிக்கு காலை ஆகாரம் இன்னிக்கு. அரை மணி நேரம் முன்னதாக.

பிடவை இடுப்பு மடிப்பில் வைத்திருந்த கடியாரத்தை எடுத்து மணி பார்த்தபடி சொல்லி விட்டு ஜாக்கிரதையாக தாதியிடம் கொடுத்தாள் சென்னா. தாதி அவளை அணைத்துக் கழிப்பறைக்குக் கூட்டிப் போக மெல்ல நடந்தாள். தாதியிடம் ஏதோ சொல்லி சென்னா கம்பீரமாகவும் தாதி தயங்கியும் சிரிக்கும் சத்தம் அடுத்துக் கேட்டது.

வயிறு சீராக இயங்கும் சந்தோஷத்தோடு கோட்டைத் தோட்டம் போகும் ஒற்றையடிப் பாதையில் நடந்தாள் சென்னா. அறுபது வயதில் கொல்லைக்குப் போய் அடிவயிற்றுக் கழிவு வெளியேற்றினாலே அந்த தினம் கொண்டாடப்பட வேண்டியது. நாள் முழுக்க சிறப்பாகப் போகும் என்று நம்பிக்கை வருகிறது. இன்று வந்தது.

மெய்க்காவலரை விலக்கித் தாதி மிங்குவை மாத்திரம் கூட இருத்திக்கொண்டு தோட்டம் பார்க்கப் புறப்பட்டாள் சென்னா.

“ஏக் அஸ்லி காய்..”

கொங்கணி மொழியில் ஒரு குழந்தைப் பாடலை உரக்க முணுமுணுத்தபடி சென்னா தோட்டத்துக்குப் போகும்போது தாதி மிங்குவைப் பார்த்து பாடுடீ என்று புன்சிரிப்போடு கட்டளையிட்டாள். ஒரு நிமிடம் மகாராணி நான் மாட்டேன் ஐயயோ என்று பயந்து நாலு திசையும் அவசரமாகப் பார்த்தாள் மிங்கு. அடுத்த நிமிடம் இரண்டு குழந்தைகள் நகரத்துக்கு வந்த பசுவைச் சேர்ந்து வரவேற்றுப் பாடியபடி கை கோர்த்துத் தோட்டத்துக்குள் நடந்தன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2021 19:21
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.