ஆமென்பது… [சிறுகதை]

”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான்” பிரபானந்தர் சொன்னார். “சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சில தேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்”

நான்கு நாட்களுக்கு முன்புதான் நாங்கள் ஹைதராபாதுக்கு வந்தோம். அது முதலே அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் அதேபோல எதிலும் பட்டுக்கொள்ளாமல் வேறெதையோ பேசிக்கொண்டிருந்தார். நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் கைகளை மடியில் ஊன்றி முதுகை குவித்து தலைகுனிந்து மண்ணை நோக்கி அமர்ந்திருந்தார். நான் தூணில் சாய்ந்து நின்றிருந்தேன்.

அது போதானந்த மடத்திற்குச் சொந்தமான விருந்தினர் விடுதி. ஆனால் காவி உடையுடன் பிரபானந்தர் அங்கே பொருந்தாமல் தெரிந்தார்.“வானத்தில் கோடானுகோடி தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள், பேய்கள், ஆவிகள் நிறைந்திருக்கின்றன. உண்மையில் அதெல்லாம் சொற்கள், நான் அச்சொற்களால் உத்தேசிக்கப்படும் ஒன்றைச் சொல்கிறேன். அவை நம்மை ஒவ்வொரு கணமும் கடந்துசெல்கின்றன. நம்மிலெழும் ஒவ்வொரு எண்ணமும் அவ்வாறு ஒன்று நம்மைக் கடந்துசெல்வதனால் உருவாவது. அவற்றை அப்படியே விட்டுவிடவேண்டும். மலைகளின்மேல் காற்றுபோல அவை சென்றுவிடவேண்டும்” என்றார்.

பித்தர்களுக்குரிய இடம்பொருள் தொடாத ஒரு பாவனை அவரிடமிருந்தது. ”உண்மைதான், காற்று தடம்பதிக்காமல் செல்வதில்லை. மலைகளின் முகங்கள் காற்றால் செதுக்கப்பட்டவை. ஆனால் மலை காற்றை அள்ளிப்பற்ற முயல்வதில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் தெய்வங்களையும் பேய்களையும் அப்படியே விட்டுவிடவேண்டும்” என்று அவர் தொடர்ந்தார். “சில தெய்வங்கள் நம்மில் ஒருகணம், கணத்தில் ஆயிரத்திலொரு துளிநேரம் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சில நிமிடங்கள். சில தெய்வங்கள் மணிக்கணக்கில் நாட்கணக்கில் வாரக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சிலரை வாழ்க்கை முழுக்க கவ்விக்கொள்கின்றன.”

”அதை நாம் தீர்மானிக்கமுடியாது. அது விதி. அதை அவை தீர்மானிக்கின்றன. அவை இங்கே தங்களை ஊன்றிக்கொள்ள முயல்கின்றன. அவ்வாறுதான் இத்தனை தெய்வங்கள் இங்கே” என்றார் பிரபானந்தர் “பூமியில்தான் எத்தனை கோடி தெய்வங்கள். கொடியும் கோட்டையும் கொண்டு படுத்துக் கிடக்கும் அனந்தபத்மநாப சாமி முதல் வயல் வரப்பில் ஒற்றைக்கல்லாக அமர்ந்திருக்கும் காட்டு மறுதா வரை…அவையெல்லாம் ஒவ்வொரு கணத்தில் மானுட மனத்தை தொட்டவைதான். ஏதோ காரணத்தால் அவற்றை அறிந்தவர்கள் அவற்றை பிடித்து நிறுத்திக்கொண்டார்கள்”

“ஒரு கல்லில் அவற்றை இங்கே நிறுத்திவிடலாம். ஆனால் நிலைகொண்டுவிட்ட தெய்வம் பலி கேட்கிறது. வழிபாடுகளை பூசைகளைக் கோருகிறது. அதற்கு துதியும் தோத்திரமும் தேவைப்படுகிறது. அது ஒருபோதும் நம்மை அதை மறக்கும்படி அனுமதிப்பதில்லை….” கைகளை விரித்து பிரபானந்தர் சொன்னார் “ஆகவேதான் நான் சொல்கிறேன், இருக்கும் தெய்வங்கள் போதும் நமக்கு. தெய்வங்களை அதன் போக்கில் விட்டுவிடுங்கள்… எதையும் பிடித்து நிறுவ முயலாதீர்கள். பிரதிஷ்டிக்காதீர்கள். ஆமாம்,பிரதிஷ்டிக்கவே செய்யாதீர்கள். நான் சொல்லும் ஒரே உபதேசம் அதுதான்”

அவர் ஒரு வகையான ’எக்ஸெண்டிரிக்’ என்று முன்னரே சொல்லியிருந்தார்கள். சூடன்சாமி என்றுதான் அவரைப்பற்றி மடத்திலும் சொன்னார்கள். “… ஆனால் பிரச்சினையற்றவர், அவர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்காமலிருந்தால் மட்டும் போதும்” என்று திருவனந்தபுரம் தலைமை மடத்தில் சாது சங்கரதாஸ் நாங்கள் கிளம்பும்போது சொன்னார்.

“நேற்று என்னிடம் கௌமுதியிலிருந்து கே.வி.ஜயானனைப்பற்றி கேட்டார்கள். நான் எதையும் வாசித்ததில்லை என்று சொன்னேன். எழுத்தாளர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தாங்கள் அறியாத தெய்வங்களை பிடித்து நிறுவிவிடும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று சொன்னேன். அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்காது” என்றார் பிரபானந்தர்.

உள்ளிருந்து அர்ஜுனன் நாயர் வெளியே வந்தார். வாயில் போட்டிருந்த வெற்றிலையை சுவர் மடிப்பில் துப்பிவிட்டு நாவால் பற்களை துழாவியபடி படியேறிவந்தார். வேட்டி நுனியை தூக்கி வாயின் ஓரங்களை துடைத்துக்கொண்டு சுவர் ஓரமாக திண்ணை விளிம்பில் அமர்ந்தார்.

“என்ன ஆயிற்று?”என்று நான் கேட்டேன்.

“இன்னும் திரும்பி வரவில்லை… வந்தால் உடனே சொல்வதாக வீட்டு உரிமையாளர் பெண்மணி சொன்னார்… அதைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்”

நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

“அவன் எங்கே போனான் என்று எவருக்குமே தெரியாதா? ஆச்சரியம்தான்”என்று பிரபானந்தர் சொன்னார்.

“அமெரிக்கா அப்படித்தான். தேவையென்றாலும் இல்லாவிட்டாலும் இன்னொருவரைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இன்னொருவரைப் பற்றி அக்கறையே காட்டமாட்டார்கள். எங்கு போகிறீர்கள் என்று கேட்பது இருக்கட்டும், உடம்பு சரியில்லையா என்று கேட்பதெல்லாம்கூட பெரிய உரிமைமீறலாக நினைப்பார்கள்”

“இவன் ஏதோ விளம்பர நிறுவனத்தில்தானே வேலைசெய்கிறான்?” என்றார் பிரபானந்தர்.

“ஆமாம், புகைப்படம் எடுப்பான் என்கிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர் “வயது முப்பத்தாறு ஆகிறது. திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது. நல்ல திறமையான ஆள் என்கிறார்கள்… இந்தியாவுக்கு வந்து நாலைந்து ஆண்டுகள் இருக்கும்”

நான் அதில் ஏதும் தலையிட விரும்பவில்லை, வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

“அவர்கள் அங்கே எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று சிந்திக்கக்கூட முடியவில்லை. சாதனா இல்லாத தனிமை என்பது ஒருவகை நோய்” என்றார் பிரபானந்தர். “எங்கே போயிருப்பான் அப்படி?”

“ஏதாவது பெண்ணுடன் போயிருப்பான். அவர்களுக்குத்தான் அங்கே காம்பிங், டிரெக்கிங் என்று என்னென்னவோ உண்டே”என்றார் அர்ஜுனன் நாயர்

பிரபானந்தர் சலிப்புடன் “இங்கே இப்படி காத்திருப்பதில் அர்த்தமில்லை. இப்போதே இரண்டு நாட்களாகிவிட்டது. செய்தி அறிந்து கிளம்பி வருவதாக இருந்தாலும் டிக்கெட் கிடைத்து, விமானம் ஏறி, நடுவே ஊர்மாறி வந்துசேர ஒருவாரமாகும்… வாழ்க்கையே சாவுக்கான காத்திருப்பு. செத்தபிறகும் காத்திருப்பதென்றால் பெரிய அபத்தம்” என்றார்.

“ஆனால் அவர் தனக்கு முறையாக இறுதிச்சடங்குகள் செய்யப்படவேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் மகனே செய்யவேண்டுமென்று விரும்பினார். உயில்கூட எழுதியிருக்கிறார்” என்று நான் சொன்னேன்.

“அதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள்”என்றார் பிரபானந்தர் “ஒரு வேதாந்திக்கு சடங்குகள் எல்லாம் குறியீடுகள் மட்டுமே என்று தெரியும். பஞ்சபூதங்களாலானது உடல். மிருண்மய மனோஞ்யம். ஆத்மா அந்த ரதத்தில் ரதன். அவனுடைய வழி வேறு. ரதம் உடைந்தபின் அக்கணமே ரதன் தாவிவிடுகிறான்…” அவர் கைகளை நீட்டி சோம்பல் முறித்தபின் “சடங்கு வேண்டும் என்றால் அதற்குரிய மறுவழிகளைப் பார்க்கலாம். சாஸ்திரப்படி மகனாக எவர் வேண்டுமென்றாலும் நின்று சடங்குகளைச் செய்யலாம்”

”ஆனால் அவர் ஆசைப்பட்டார்…”

”மகன்தான் சடங்குகள் செய்யவேண்டுமென்று சொன்னாரா?”என்று பிரபானந்தர் கேட்டார்

”நான் சொன்னேனே, பலமுறை சொல்லியிருக்கிறார். கடைசியாக எழுதியும் வைத்திருக்கிறார்”

“அதைத்தான் சொன்னேன், வெறும் செண்டிமெண்ட்” என்று பிரபானந்தர் எழுந்துகொண்டார். “சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கவிதை உண்டே. பஞ்சபூதங்களென் காத்ரம்… நல்ல வரிகள்” கொட்டாவி விட்டு “நான் கொஞ்சம் படுக்கவேண்டும்”

காவிமேலாடையை சுழற்றி சுற்றியபடி அவர் உள்ளே செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்

“சாமியார்கள் பிறப்பு, சாவு, கல்யாணம் எல்லா சடங்குகளிலும் அபத்தமாக தெரிகிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர்

“அவன் வந்து இறுதிச்சடங்குகள் செய்யவில்லை என்றால் அவர் ஏமாந்துதான் போவார்”

“அவர்தான் போய்விட்டாரே”

“போகவில்லை என்பதுதானே நம் நம்பிக்கை? நமக்கு என்ன தெரியும்?”

“இங்கே அலைகிறாரா என்ன?”

“அந்த உடலருகே இருப்பார் என்று சொல்வார்கள்”

“சரிதான்”என்றார் அர்ஜுனன் நாயர் “கடைசிக்காலத்தில் அவர் எழுதிய கதைகள் எல்லாமே இந்தவகையான நம்பிக்கைகள் கொண்டவை. எஸ்.வினோதகிருஷ்ணன் அவற்றை மெட்டஃபிசிக்கல் ரியலிசம் என எழுதியிருக்கிறார். ஆனால் அவை அவருக்கு புனைவுகள் அல்ல, அனுபவ உண்மைகள்…”

நான் புன்னகைசெய்தேன்.

“ஆனால் ஒருகணக்கில் அவர் சொல்வது சரிதான். இது ஒரு சாதாரண மனிதன் என்றால் எத்தனை நாள் வேண்டுமென்றாலும் காத்திருக்கலாம். பிரச்சினை இல்லை. இப்போது மொத்த கேரளமும் காத்திருக்கிறது. நான்குநாட்களாக ஊடகங்களில் பெரிய செய்தியே இதுதான். மறைந்தவர் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர். நாடறிந்த கார்ட்டூனிஸ்ட். அத்தனை பேரின் காத்திருப்பும் ஒன்றாகச் சேரும்போது மலைபோல எடைமிக்கதாக ஆகிவிடுகிறது” என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.

“அதற்கென்ன செய்வது? நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். அவருடைய ஆசை என்ன என்று இப்போது ஊருக்கே தெரியும்”

“ஆமாம், பார்ப்போம். எப்படியும் இன்று வந்துவிடுவான்”

“மகனுடன் அவருக்கு தொடர்பே இல்லையா?” என்றேன்.

அர்ஜுனன் நாயர் திரும்பி கே.வி.ரமாவைப் பார்த்துவிட்டு குரல் தழைய, “பெரிதாக தொடர்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். போனில் பேசியதாக தெரியவில்லை. கடிதங்களும் போடுவதில்லை. ஒருமுறை அவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக ஆனபோது ஃபோனில் அழைத்தோம். பதில் இல்லை….”

கே.வி.ஜயானன் கடைசி ஆறாண்டுகளை போதானந்த மடத்தில்தான் கழித்தார். அவருக்கு என ஒரு குடில் இருந்தது. அதில் தன் பூனையுடன் தனியாக இருந்தார். அவருக்கு பார்க்கின்சன் நோய் இருந்தது. ஆகவே கூடவே ஒரு வேலையாளும் துணையிருந்தார். அறுபது வயதான குஞ்ஞப்பன். ஆனால் குஞ்ஞப்பனுக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

”நல்ல ராயல்டி வருமானம் உண்டு. அதையெல்லாம் சட்டப்படி மகனுக்குத்தான் எழுதிவைத்திருக்கிறார்”என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.

சற்றுநேரம் மீண்டும் அமைதி நிலவியது. இப்படி அவ்வப்போது உருவாகும் அமைதிகள்தான் பெரிய எடைகொண்டவை. அவற்றை வெல்லத்தான் பேசிக்கொண்டிருந்தோம். அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தாலும் பிரபானந்தர் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது என்று தோன்றியது.

வாசற்கதவருகே ஓர் அசைவை கண்டதும் உண்மையில் ஆறுதல்தான் தோன்றியது. தோளில் காமிராவுடன் வந்தவன் பத்திரிகையாளன் என்று தெரிந்தது. பத்திரிகைக்கரானா என்ற எண்ணம் வந்ததுமே நல்லவேளை டிவிக்காரன் இல்லை என்ற நிம்மதியும் உருவாகியது

கருப்பான, குள்ளமான இளைஞன். அருகே வந்து வெளியே தயங்கி நின்றான். அர்ஜுனன் நாயர் “ம்?” என்றார்

“நான் ஜன்மபூமி இதழின் நிருபர் திவாகரன். ஒரு சின்ன பேட்டிக்காக வந்தேன்”

“யாரிடம்?”

”அப்படி இல்லை… பொதுவாக” என அவன் தயங்கி என்னை பார்த்தான்.

“இங்கே நடப்பதைத்தான் டிவியில் காட்டிக்கொண்டே இருக்கிறார்களே”

“ஆமாம். அதனால்தான் கொஞ்சம் ஆழமாக ஒரு ஃபீச்சர் மாதிரி ஏதாவது எடுத்துத் தரச்சொன்னார்கள். நான் அரசியல் நிருபர். இலக்கியம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை”என்றான்.

“பேட்டி கொடுக்கும் சூழல் இல்லை…நாளைக்குப் பார்க்கலாம்”என்றார் அர்ஜுனன் நாயர்.

“அது கவிஞர் கே.வி.ரமா தானே? மறைந்த எழுத்தாளர் கே.வி.ஜயானனின் தங்கைதானே? நான் ஃபோட்டோக்களில் பார்த்திருக்கிறேன்” என்றான். “ஹலோ மேடம் என் பெயர் திவாகரன். ஜன்மபூமி நிருபர். எனக்கு ஒரு ஐந்துநிமிடம் பேட்டி வேண்டும்… ஐந்தே நிமிடம்போதும்”

கே.வி.ரமா கோபமாக ஏதோ சொல்லப்போகிறார் என நான் நினைத்த கணம் அவர் அசைவுகொண்டு கையசைத்து அவனை அருகே அழைத்தார். அவன் அருகே வந்தான்.

“என்ன?”என்றார்.

“ஒரு சின்ன பேட்டி… நாலே நாலு கேள்விகள்”

“கேள்”

“டீச்சர் இப்போது கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்…”என்று நான் ஊடே புக அவர் பரவாயில்லை என்று கைகாட்டினார். பேசவிரும்புகிறார் என்று தெரிந்தது. அவர் பேசிக்கேட்டே நீண்டநேரம் ஆகிறதென்று எண்ணிக்கொண்டேன்.

“மேடம், நான் இலக்கியத்துக்கு புதியவன். நான் சேகரித்த தகவல்களில் இருந்து கேட்கிறேன். ஒரு தங்கையாக நீங்கள் கே.வி.ஜயானன் அவர்களிடம் நெருக்கமாக இருந்தீர்கள். உங்களுக்கும் இலக்கிய ஆர்வம் இருந்தது. அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

தடித்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் தூக்கிவிட்டுக்கொண்டு கே.வி.ரமா சொன்னார், “தாயில்லாக் குழந்தை… ஒருவகையான அனாதை. உணர்வுரீதியாக அலைபாய்ந்து கொண்டே இருந்தார். அவருக்கு அடைக்கலம் தேவைப்பட்டது. எங்காவது ஒண்டிக்கொள்ளவும், எதையாவது பிடித்துக்கொள்ளவும் தவித்துக்கொண்டே இருந்தார்”

“ஓ”என்றான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்று தெரிந்தது. இவன் எதையும் உருப்படியாக எழுதமாட்டான் என்று புரிந்துகொண்டேன். அது நல்லதுதான். எதைப்பற்றியும் எச்சரிக்கை அடையவேண்டியதில்லை. எனக்குப் புன்னகை வந்தது.

“அவரை நீங்கள்தான் போதானந்தர் மடத்துக்குக் கொண்டுவந்தீர்கள் இல்லையா? நீங்கள் முதலிலேயே இங்கே வந்துவீட்டீர்கள்தானே?” என்றான் திவாகரன்.

“ஆமாம், அவருக்கு தேவை ஒரு தந்தை. போதானந்தரை அவருக்கு தந்தையாகத்தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு குருவும் தெய்வமும் தேவையில்லை. அவர் தேடியதெல்லாம் தந்தையை மட்டும்தான்”

அவன் முற்றாகவே குழம்பிப்போய் என்னைப் பார்த்தான். ஆனால் கே.வி.ரமா தொடர்ந்து பேச ஆரம்பித்தார்

“எங்கள் அப்பா மலபார் ஸ்பெஷல் போலீஸில் உயரதிகாரி. கம்பீரமானவர், கண்டிப்பானவர். கிழக்குவாதுக்கல் அச்சுதன் வைத்தியன் வேலாயுதன் என்றால் அந்தக்கால பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அனைவருக்கும் தெரியும். பல முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்தவர். ஆகவே நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட இடங்களுக்கு அவரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் என்றால் மலபார் முதல் விசாகப்பட்டினம் வரை. அப்பா பெரும்பாலும் தமிழ்நாட்டிலும் பாலக்காட்டிலும்தான் வேலைபார்த்தார்”

“நாங்கள் இளமையில் பதிமூன்று ஆண்டுகள் பாலக்காட்டில்தான் வாழ்ந்தோம்.பாலக்காடு அருகே ஒரு சிறிய ஊர்.விஜயசிருங்கநல்லூர். எங்கள் வீட்டைச்சுற்றி மலையடுக்குகள் சூழ்ந்து நின்றிருக்கும். அமைதியான மலைகள். எதற்காகவோ முடிவில்லாமல் காத்திருப்பவை போன்ற மலைகள். அந்த மலைகள் எங்கள் வாழ்க்கையில் மிகமிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. அண்ணா அந்த மலைகளை கனவில் பார்த்தபடியே இருந்தார். கடைசிநாட்களில் அவர் வரைந்த எல்லா ஓவியங்களிலும் அலையலையாக மலைகள்தான் இருந்தன”

கே.வி.ரமா கண்களைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி சொல்லிக்கொண்டே சென்றார். திவாகரன் தன் ரெக்கார்டரை இயக்கிவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கே.வி.ரமாவே ஓர் ஒலிக் கருவியாக ஆகிவிட்டதுபோல குரல் சீராக எழுந்தது.

அப்பா எங்களை தொட்டு கொஞ்சி பேசிய நினைவே இல்லை. அவர் வீட்டுக்கே வருவதில்லை. பெரும்பாலும் பயணங்கள். பாலக்காட்டின் மலைப்பகுதிகளில் அன்றைக்கு நாடோடித் திருடர்கள் மிகுதி. கொங்குநாட்டிலிருந்து கணவாய் வழியாக வரும் சரக்குவண்டிகளில் கொள்ளையடிப்பவர்கள். அன்று கொங்குநாட்டில்தான் எல்லா மில்களும் இருந்தன. துணி முழுக்கமுழுக்க அங்கிருந்துதான் வரவேண்டும். கொள்ளைக்காரர்களைப் பிடிக்கச்சென்று ஆங்காங்கே காம்ப் அமைப்பார். அம்மாவும் நாங்களும் உறவினர்களுடனும் வேலைக்காரர்களுடன் தனியாக இருந்தோம். அம்மா இறந்தபின் அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். என்னைவிட எட்டுவயது மூத்தவர் எங்கள் சித்தி. சித்தியும் பெரும்பாலும் அப்பாவுடன் காம்புகளுக்குச் செல்வார்.

அண்ணா குறைப்பிறவியாகப் பிறந்தார். ஏழுமாதத்தில். அவர் ஒரு உள்ளங்கைக்குள் வைக்கும் அளவே இருந்தார் என்பார்கள். அவரை கோயம்புத்தூரில் ஒரு வெள்ளைக்கார டாக்டர்தான் காப்பாற்றினார். ஆனால் அவருடைய நரம்புகள் சரியாக அமையவில்லை. உடம்பின் அசைவுகளில் ஒருமை கூடவே இல்லை. இளமைக்காலம் முழுக்கவே அவர் நோயுற்றிருந்தார். மூட்டுகளின் வீக்கமும் வலியும் உண்டு. அடிக்கடி வலிப்பு வந்து விழுந்து விடுவார்.அவரை பதினான்கு வயதுவரை பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அவருக்கு வீட்டிலேயே ஆங்கிலமும் பொதுப்பாடமும் சொல்லிக்கொடுத்தார்கள். பதினைந்து வயதில் இ.எஸ்.எஸ்.எல்.சி எழுதி பள்ளிக்குச் சென்றார். அவர் பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். அவர் அக்காலத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ இலக்கியத்தில் தங்கப்பதக்கம் வாங்கினார்.

ஆனால் அவர் எப்போதும் பதறிக்கொண்டே இருந்தார். எப்போதாவது அவர் கைகளை தொட்டால் அவர் நடுங்கிக்கொண்டே இருப்பது தெரியும். அவருடைய உள்ளங்கைகள் ஈரமாகவே இருக்கும். உதடுகள் வெளுத்திருக்கும். சிறுவயதிலேயே தடிமனான கண்ணாடி போட்டுவிட்டார். கண்கள் நீருக்குள் மிதந்து அலைவதுபோல தெரியும். உரக்க ஓசை எழுந்தால் அண்ணாவின் உடல் துள்ளிவிழும். எதிர்பாராமல் எதையாவது அவரிடம் சொன்னாலோ, அவர் சொல்லமுயன்றாலோ, வலிப்பு வந்துவிடும். அவரை அவர் பார்க்காதபோது நாம் தொடவே கூடாது. உணர்ச்சிகரமாக ஏதாவது பேசினால் வாய் கோணலாகி, கழுத்து இழுபட்டு திக்கல் வரும்.அண்ணா அணைந்து அணைந்து எரியும் ஒரு தீச்சுடர் போலத்தான் எப்போதும் எனக்குத் தோன்றினார்.

ஆனால் அவர் வாசித்துக்கொண்டே இருந்தார். ஒருநாளில் பத்துப்பன்னிரண்டு மணிநேரம் வாசித்தார். இலக்கியம் ,தத்துவம் ,கலை ,அரசியல், வரலாறு. கணிதமும் அறிவியலும் அவருக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அல்லது அவருக்கு அவை பிடிபடவே இல்லை. பெரும்பாலான நேரம் படித்துக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய கண்கள் கண்ணாடி வழியாக தனியாகப் பிரிந்து வந்து நிற்கும். மேஜைவிளக்கு மட்டும் எரிய இரவில் அவர் படித்துக்கொண்டிருக்கையில் அவர் மறைய , அவருடைய கண்கள் மட்டும் சுடர்கொண்டிருப்பதுபோல தோன்றும். அவர் தூங்கும்போது அவர் மேஜைமேல் புத்தகங்களுக்கு மீதாக அவருடைய தடித்த கண்ணாடியின் சில்லுகளில் அவருடைய விழிமணிகள் இருக்கும். அவை அப்போதும் வாசித்துக்கொண்டிருக்கும். அல்லது திகைத்து விழித்துக்கொண்டிருக்கும். இரவின் இருளில் அவை அவருடைய மேஜைமேல் தூங்காமல் மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அவர் பேசுவதில்லை. அவருக்கு அன்றாடப்பேச்சுக்களில் ஆர்வமே இல்லை. பேச ஆரம்பித்தால் வெறிகொண்டு பேசுவார். பேசிப்பேசி இருமல் வந்து, மூச்சிளைப்புடன் படுப்பதுவரை பேசித்தள்ளுவார். ஆனால் பேச்சு உளறல் அல்ல. அண்ணாவின் மகத்தான பல நூல்கள் அப்படி பேச்சாக காற்றில் கரைந்துவிட்டன என்று எனக்குத் தோன்றியதுண்டு. அண்ணா அப்போது எங்கோ பிறந்துவிட்டிருந்த அவருடைய எதிர்கால வாசகர்களுக்காகப் பேசிக்கொண்டிருந்தார் என்று இப்போது தோன்றுகிறது.

வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறைகூவப்பட்டபோது அண்ணாவுக்கு பதிமூன்று வயது. அண்ணா அரசியலை ஆவேசமாகத் தழுவிக்கொண்டது அப்போதுதான். ஒவ்வொருநாளும் வானொலியிலும் நாளிதழ்களிலும் செய்திகளுக்காக அவர் தவித்தார். செய்திகளுடன் சேர்ந்து அவரும் எரிந்தார். உடல் துள்ளிவிழ, திக்கித்திக்கி “சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்” என்று அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். அவர் சொன்னது எந்த சுதந்திரம் என்று இன்றுவரை பிடிகிடைக்கவில்லை.

அண்ணா பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் நாடே எரிந்துகொண்டிருந்தது. பள்ளியில் பெரும்பாலும் போராட்டமும் அடைப்பும்தான். மாணவர்கள் சாலைகளில் இறங்கி சிறிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர். அண்ணா பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிளுடன் பள்ளிக்கு காரில் சென்று திரும்ப கொண்டுவரப்படுபவர். அவரால் எங்கும் செல்லமுடியாது. அவரால் பள்ளிக்குச் சென்ற சில ஆண்டுகளில் சகமாணவர்களுடன் நெருங்கமுடியவில்லை. அவர் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் முரட்டுத்தனமான சுதந்திரம் அவரை அச்சுறுத்தியது.

அவர் பள்ளியில் ஓர் அன்னியராக, ஏளனப்பொருளாகவே இருந்தார். பள்ளியில் அவருக்கு ஆந்தை என்று பட்டப்பெயர் இருந்தது. பகலில் வந்த ஆந்தைபோல வகுப்பில் அமர்ந்திருப்பார். பின்னாளில் அவர் ஆந்தை என்றபெயரில் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகளிலும் ஆந்தை வந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் அவர்களுடைய போராட்டங்களிலும் களியாட்டங்களிலும் மானசீகமாக உடனிருந்தார். பள்ளியில்தான் அவர் தன்னுடைய அறிவே தன் வலிமை என்று உணர்ந்திருக்கவேண்டும். அவருடைய சகமாணவர்களை விட அவர் மிகமிக மேலே இருந்தார்.

அண்ணா கல்லூரிக்குச் சென்றதும் சட்டென்று மாறினார். மெட்ரிக்குலேஷனில் அவர் பெற்ற தங்கப்பதக்கம்தான் அவரை மாற்றியது. அவர் ஒரு மாணவர் தலைவராக ஆனார். ஆனால் அப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி புதிதாக வந்த முதலாளிகளாலும் நிலக்கிழார்களாலும் நிரம்பியது. அவர்கள் அதன் முகங்களாக தோன்றலாயினர். அத்தனை அதிகாரப்பதவிகளிலும் அவர்களே அமர்ந்தனர். இளைஞர்களிடம் அவநம்பிக்கை உருவானது. வடக்கே நிகழ்ந்த மதக்கலவரங்கள் அவர்களை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பயனற்றவை என்று எண்ணச்செய்தன.

அன்று உருவான நாளிதழ்களின் பெருக்கம் அனைவரையும் வாசிக்கச் செய்து கம்யூனிஸ்டுக் கொள்கைகளை நோக்கி தள்ளியது. அண்ணா நீண்ட தடித்த ஜிப்பா அணிய ஆரம்பித்தார். சுருண்ட அடர்ந்த தலைமுடியும் மென்மையான மீசையும் அவருடைய முகமாக ஆயின. கடைசிவரை அவரிடமிருந்த அந்த தோற்றம் அப்போது உருவாயிற்று. அந்த தோற்றத்தில் ரவீந்திரநாத் டாகூரின் செல்வாக்கு உண்டு. அண்ணா மேடையேறி கைசுருட்டி உயர்த்தி அழுத்தமாகப் பேசுவதை நான் கேட்டேன். அது அவர்தானா என்ற பிரமிப்பை அடைந்தேன். அவரால் ஆவேசமாகப் பேசமுடியாது. ஆனால் நையாண்டியாகப் பேசமுடியும். மிகச்சரியான சொற்கள் வழியாக மனங்களை ஊடுருவ முடியும். அண்ணா மிகப்புகழ்பெற்ற பேச்சாளராக இருந்தார் என்று சொன்னால் அவருடைய தீவிர ரசிகர்கள்கூட இன்று நம்பமாட்டார்கள்.

அண்ணாவின் மெலிந்த தோற்றமே அவருக்கு கம்யூனிசச் சூழலில் ஏற்பை உருவாக்கியது. அவர் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையிலேயே ஒரு கல்லூரியில் உடனடியாக ஆசிரியராக பணியாற்றலானார். அது வரை அவருடைய கம்யூனிச ஈடுபாடு அப்பாவுக்கு தெரியாது. வேலைக்குச் சென்றபின் அண்ணா அப்பாவை முற்றாகவே நிராகரித்தார். தொடர்பையே துண்டித்துக்கொண்டார். அவருடன் தொடர்பிலிருந்தது நான் மட்டுமே. நான் அப்போது கல்லூரி மாணவி.

அப்பாவுக்கு அண்ணாவைப் பிடிக்காது. மகனை அவர் ஒரு பொருட்டாக காட்டிக்கொண்டதே இல்லை. நோயுற்ற மகன்கள் அப்பாவுக்கு இரண்டு எதிர் உச்சங்களை அளிக்கிறார்கள். ஒன்று, அவர்கள் மகன்கள்மேல் பெரும் பித்துகொண்டு இரவுபகலாக பேணுகிறார்கள். அல்லது வெறுத்து ஒதுக்குகிறார்கள். அப்பா ஆணவமும் நிமிர்வும்கொண்டவர். அவருடைய மகன் அப்படி இருப்பது அவரை எவரோ கேலி செய்வதுபோல. அப்பா அண்ணாவைக் கண்டாலே முகம் சுளிப்பார். சுளிப்பதல்ல அது, அறியாமலேயே அந்தச் சுளிப்பு வந்துவிடும். அப்பா அண்ணாவை தொட்டதே இல்லை, ஒரு சொல் அன்பாகப்பேசியதில்லை.

அண்ணா ஆரம்பத்திலெல்லாம் அப்பாவுக்காக ஏங்கினார். அப்பா வீட்டுக்கு வரும் நாட்களை எண்ணி எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அப்பா வீட்டுக்கு வந்தால் மறுநாளே அவர் போனால் போதுமென்று ஆகிவிடும். அப்பா வீட்டை அப்படியே முழுமையாகக் கையில் எடுத்துக்கொள்வார். அவருடைய நெடி வீடெங்கும் நிறைந்திருக்கும். அப்பா பேசுபவர் அல்ல, அதிலும் வீட்டில் அவர் ஓசையே இடுவதில்லை. ஆனால் அவரை நம்மால் எங்கிருந்தாலும் கேட்கமுடியும்.

சிறுவயதில் அண்ணா அப்பாவை வதைப்பதனூடாக மட்டுமே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தார். அப்பா வரும்போதெல்லாம் அண்ணாவுக்கு வலிப்பு வரும். வாயோரம் நுரை எழ விழுந்து துடிப்பார். போர்வையில் இட்டு தூக்கி காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்வோம். ஆனால் அப்பா அருகே வந்து அண்ணாவை தொட்டுப்பார்ப்பதுகூட இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட வரமாட்டார். இப்போது ஞாபகம் வருகிறது, அப்பாவைச் சந்திக்க எவராவது முக்கியமானவர் வீட்டுக்கு வந்தால், சின்னம்மாவும் அப்பாவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தால் அண்ணாவுக்கு வலிப்பு வரும்.

வளர்ந்தபின் அண்ணா அப்பாவை முழுமையாக நிராகரிக்கவும் மறக்கவும் கற்றுக்கொண்டார். ஊரைவிட்டுச் சென்றபின் அவர் அப்பாவுக்கு ஒரு கடிதம்கூட போட்டதில்லை. உண்மையிலேயே ஒரே ஒரு கடிதம், ஒருவரி குறிப்புகூட எழுதியதில்லை. அண்ணா ஊரில்  அப்பா இருப்பதையே அறியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அது அவர் அப்பாவை வதைக்க கண்டறிந்த வழி. அது நன்றாகவே வேலைசெய்தது.

அண்ணாவால் புறக்கணிக்கப்பட்ட அப்பா அண்ணா நினைவாகவே இருந்தார். ஆனால் அண்ணாவைப் பற்றி ஒரு சொல் கேட்கவில்லை. அதனாலேயே அண்ணா அவருக்குள் கான்சர் போல வளர்ந்தார். உண்மை. அப்பாவுக்குள் வளர்ந்த  அண்ணா என்ற நோய்தான் அவரைக் கொன்றது. கடைசிக்காலத்தில் தன்னந்தனிமையில் முற்றிலும் சொல்லின்றி அவர் வாழ்ந்தார். வெற்றிலை அவருடைய வாயை பூட்டியிருந்தது. அவருடைய உள்ளத்தின்மேல் புகையிலைப் போதையின் புகை படர்ந்திருந்தது.

1948 ல் ரணதிவே தீஸிஸின் போதும், முதல் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியின்போதும் அண்ணா முழுமூச்சாக கம்யூனிஸ்டுக் கட்சியில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை கட்சி மேடையில் பேச்சின் நடுவிலேயே வலிப்பு வந்து விழுந்துவிட்டார். அந்நாட்களில் அவருடைய உடல் நலிவுற்றிருந்தது. அவரால் அந்தக் காலகட்டத்தின் வேகத்தை தாங்கவே முடியவில்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தது அந்தக் காலகட்டத்தில்தான் என நினைக்கிறேன். அவரை கைதுசெய்ய சென்னை மாகாண அரசில் வாரண்ட் வந்தது. அப்பா தந்திரமாக அவரை மலபாருக்கு கொண்டுவந்து தப்பவைத்தார்.

அப்பாவின் தயவால்தான் சிறைசெல்லாமல் தப்பினோம் என்பது அண்ணாவுக்கு தெரியும். ஆனால் தெரியாதவர் போலவே கடைசிவரை காட்டிக்கொண்டார். சிறை சென்றிருந்தால் அவர் செத்திருப்பார். அப்போது அவருக்கு அனேகமாக தினமும் வலிப்பு வந்துகொண்டிருந்தது. ஆனால் வலிப்புதான் அவருடைய படைப்புத்தன்மைக்கு அடிப்படை என்று அவர் சொல்லுவதுண்டு. அவருக்குள் இருந்த சிறுவனை அழியாமல் பாதுகாத்தது அந்த நோய்தான். “தஸ்தயேவ்ஸ்கிக்கும் வலிப்புநோய் உண்டு. வலிப்பு நோய் என்பது மூளையை நாம் சவுக்காலடித்து சுண்டிவிடுவது. அம்மிக்கல்லால் மாமரத்தை அடித்து சருகுகளையும் வாடிய மாம்பிஞ்சுகளையும் உதிரவைப்பது போன்றது. ஒவ்வொரு வலிப்புக்குப் பின்னரும் நாம் புதிதாகப் பிறக்கிறோம்…” என்று அண்ணா சொல்வார்

கட்சி ஆயுதப்போராட்டத்தை கைவிட்டபோது அண்ணா ஏமாற்றமடைந்தார். சென்னையில் இன்னொரு கல்லூரியில் ஆசிரியரானார். அக்காலத்தில் ஓர் ஆசிரியராக அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். அவருக்கு இலக்கியம் கற்பிப்பது பிடித்திருந்தது. அவர் ஐரோப்பிய இலக்கியவாதிகளை ஆழ்ந்து பயின்ற நாட்கள் அவை. அவர் மாப்பசானின், அலக்ஸாண்டர் குப்ரினின், வில்லியம் சரோயனின் ரசிகர். ஆனால் பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, அவருக்கு அமெரிக்க சாகச நாவல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக போர்சாகசங்கள். அலிஸ்டெர் மக்லீன் போன்ற புகழ்பெற்றவர்கள் மட்டுமல்ல, கார்னிலியஸ் ரயான் போன்ற யாரென்றே தெரியாதவர்களையெல்லாம் தேடித்தேடி வாசிப்பார்

1956ல் கம்யூனிஸ்டுக் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தபோது அண்ணா மீண்டும் பெரும் கிளர்ச்சியை அடைந்தார். கம்யூனிச கேரளத்தைப் பார்ப்பதற்காக ரயிலில் மலபாருக்கு வந்ததையும், பாலக்காட்டு எல்லையில் முதல் செங்கொடியைக் கண்டு கண்ணீர் மல்கியதையும் அவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்  எழுதியிருக்கிறார்.

’ஒரு குருதித்துளியின் நினைவு’ என்ற அந்த கட்டுரையை அவர் கண்ணீர் சிந்தியபடித்தான் எழுதியிருப்பார். ஏனென்றால் அப்போது சோவியத் ருஷ்யா உடைந்துகொண்டிருந்தது. 1988ல் கிளாஸ்நோஸ்டும் பெரிஸ்ட்ராய்க்காவும் உச்சத்திலிருந்தன. அண்ணா சோவியத் ருஷ்யா உடையும் என்பதை கணித்துவிட்டிருந்தார். அரசியல்நோக்கராக எழுதிக்கொண்டிருந்த அவருக்கு சர்வதேச இதழாளர்களுடனும் டெல்லியின் உயர்வட்ட அதிகாரிகளுடனும் நல்ல தொடர்பு இருந்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிசக் கனவு அண்ணாவிலிருந்து விலகி முப்பதாண்டுகளாகியிருந்தன.அப்போது அவர் கம்யூனிச எதிர்ப்பாளர் என்றே அறியப்பட்டிருந்தார். ஆனாலும் சோவியத் ருஷ்யாவின் உடைவு அவரை நோயுறச் செய்தது. அவர் வலிப்புவந்து விழுந்து நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் நீண்டகாலம் சிகிழ்ச்சையில் இருந்தது அப்போதுதான். அவருடைய இயல்பான உடலியக்கம் பெரும்பாலும் இல்லாமலாயிற்று. குச்சி இல்லாமல் நடக்க முடியாது. பேனாவால் எழுத முடியாது. சுட்டுவிரலால் தட்டித்தட்டி டைப் செய்வார். ஆனால் பிரஷ் எடுத்தால் வரைய முடியும். அது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணா கம்யூனிசத்திலிருந்து வெளியேறியபின் உண்மையில் எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாரா? கேரளத்தில் இ.எம்.எஸ் முதல் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த விதமும், அது விமோசன சமரம் என்ற பேரில் பிற்போக்காளர்களால் வீழ்த்தப்பட்டதும், அதைத் தொடர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியின் உட்பூசல்களும் அண்ணாவை ஏமாற்றமடையச் செய்தன.1964 ல் கட்சி உடைந்தபோது அண்ணா ஏற்கனவே கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்றிருந்தார். ஏனென்றால் அவர் சோவியத் ருஷ்யாவில் நடந்த ஒடுக்குமுறைகளைப் பற்றியும், சோவியத் ருஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.