தீபம்- போகன் சங்கர்




இயற்கைப்பொருட்களின்மேல் மனிதன் தன் உடலையும் அர்த்தங்களையும் ஏற்றத் தொடங்கியபோது மொழி பிறந்தது. உணர்வுகளை ஏற்றத்தொடங்கியபோது கவிதை பிறந்தது. இரண்டும் ஒரு கண இடைவெளியில் பிறந்தன. எது முதலில் என்று சொல்லமுடியாது– நித்யாவின் உரையில் ஒரு வரி.


தொல்கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் முதன்மையான அழகியலென்பது மகிழ்ச்சி துயரம் எழுச்சி நிறைவு என்னும் மானுட உணர்வுகளனைத்தையும் இயற்கைமேல் ஏற்றுவதுதான் என்று படுகிறது. எமர்சன் அவருடைய கட்டுரை ஒன்றில் மானுட மொழி என்பதே இயற்கையின் பதிலீடு வடிவம்தான் என்கிறார். ஆகவேதான் உள்ளம் ’ஒளிர்கிறது’, நினைவு ‘இருள்கிறது’, சிந்தனை ’ஓடுகிறது’, ’படிப்படியாக’ நிகழ்கின்றன நம் எண்ணங்கள்.


சில தருணங்களிலேனும் கவிதை என்பது திரும்பத்திரும்பச் சொல்லுவதன் கலை என்று தோன்றுகிறது. சிறந்த கவிதை என்பது பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுதான். பலமுறை. பலநூறுமுறை, பல்லாயிரம் முறை. அவ்வப்போது கவிஞர்கள் புதிதாகச் சொல்ல முயல்கிறார்கள். அவை வேறுபாட்டால் முரண்பாட்டால் மெல்லிய சுவை கொண்டிருக்கின்றன. எனக்கு அவை ஒவ்வாச்சுவையெனவே அமைகின்றன


என் கவிதையை மீண்டும் இப்படி வகுத்துக்கொள்கிறேன். ஆயிரம் முறை சொல்லப்பட்டபின்னரும் புதியதாகச் சொல்லப்படுவது. சொல்லச்சொல்ல மேலும் புதியதாக ஆகும் ஒன்றின் மொழிவடிவம்.







கற்பிக்கப்பட்ட உணர்வேதான்.
தீபம்,வாழத் துடிக்கும்
ஒரு உயிர் போல
நமக்குத் தோன்றுவது.
நம்மைப் போல என்றும்
நமக்குத் தோன்றுவது.


புயலில் படபடக்கும் தீபம்.
இருளில் தனியாய் நடுங்கும் தீபம்.
இவ்விதம்
எரிவதில் வாழ்வதில் சோர்ந்து
அவ்வப்போது சலிக்கும் தீபம்.
சலித்துச்
சடசடத்து சிடுசிடுத்து எரிந்தாலும்
மறுபடியும் முனைந்து
பழைய புன்னகையுடன்
பழைய அமைதியுடன்
மீண்டும் மீண்டும்
பிரகாசிக்க முயலும்
எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையுள்ள
நாய்க்குட்டி போன்ற முகம்கொண்ட
இந்த
குழந்தைத்தனமான தீபம்.




போகன் சங்கர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2021 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.