குறளுரை -கடிதங்கள்-2

 


maxresdefault


 


வணக்கம் அய்யா,


நான், நீங்கள் உரையாடிய “குறளினிது” நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்றவன், நீங்கள் ஒவ்வொருநாளும் வழங்கிய இலக்கிய உரை மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாக இருந்தது பொதுவாக எழுத்தாளர்களுக்கு, பேச்சாளர்கள் போல் பேசுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் உங்கள் உரையாடல் சராசரியாக 2 மணி நேரம் என்னை கட்டி போட்டது. உங்கள் உரையாடலானது தி ஹிந்து வில் அப்துல் கலாம் அய்யா எழுதிய என் வாழ்வில் திருக்குறள் என்ற கட்டுரையை நினைவூட்டியது. உங்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கும் எனது நன்றிகள்


வணக்கத்துடன்


திருமலைராஜ்


***


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


திருக்குறள் உரையில் நீங்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைப்பற்றிச் சொன்னீர்கள். அவர்களின் தனிப்பெரும் சாதனை குறளை ஒரு மதச்சார்பற்ற நூலாக ஆக்கி அதை மக்களிடையே கொண்டு சென்றதுதான் என்றீர்கள். ஆனால் மரபை அதிலிருந்து விலக்கியதன் வழியாக அவர்கள் அதை ஒற்றைப்படையான வாசிப்புக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றீர்கள். திராவிட இயக்கத்தின் பங்களிப்பென்பது சிற்பங்கள் மேல் மணல்வீச்சு போல என்று சொன்னீர்கள். சிற்பங்களை மணல்வீச்சு மொண்ணையாக்கியது போல திராவிட இயக்கம் குறளை மொண்ணையாக ஆக்கிவிட்டது என்றீர்கள்.


அய்யா, எந்த ஒரு நூலும் பலகோணங்களில் பலரால் படிக்கப்பட்டாகவேண்டும். பல்லாயிரம்பேர் படிக்கும் போதுதான் அதற்கு பலவகையிலான வாசிப்பு வரும். அதன் வழியாகவே அது துலங்கிவரும். திராவிட இயக்கம் குறளைப் பிரபலப்படுத்தினதினால்தான் நீங்களேகூட வந்து பேசுகிறீர்கள். நீங்கள் நாலடியார் பற்றியோ ஆசாரக்கோவை பற்றியோ ஆத்திச்சூடி பற்றியோ ஏன் பேசவில்லை என்று நினைத்தால் இது புரியும்.


சிவக்குமார் செல்லையா


***


திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


கோவையில் திருக்குறள் பற்றி தாங்கள் மூன்று நாட்கள் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டேன். உரை மிகவும் ஆழமாகவும் விரிந்த பார்வை கொண்டதாகவும் இருந்தது. இந்த உரையின் விழைவாக என்னுள் எழுந்த சில ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.


திருக்குறள் எழுதப்பட்ட காலம் சங்ககாலம் எனில், சமணமதத்தைச் சேர்த்த திருவள்ளுவர், வைதிக மதத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளதால் சமணமதமும், வைதிக மதமும், ஒரு சேர சங்க காலத்தில் பின்பற்றப்பட்டது அதில் வைதிக மதத்தின் நெறிகளையே மக்கள் பெரும்பாலும் பின்பற்றினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? .


மேலும் தங்கள் உரையில் திருக்குறள், பண்பாடு சற்றே நெகிழ்வாக இருந்த காலக்கட்டத்தில் மக்களை நெறிப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் என்கிறீர்கள், ஆனால் அதற்கு முன்பு நீங்களே திருக்குறள் பல காலம் சமுதாயத்தில் நடந்த விவாதத்தின் முடிவில் உருவான செவ்வியல் படைப்பு திருக்குறள் என்கிறீர்கள், அப்படி என்றால் பண்பாடும் கலாச்சாரமும் உச்சநிலையை அடைந்த காலகட்டத்தில், அத்தகைய விவாதங்கள் நடக்க சாத்தியமுள்ள காலகட்டத்தில் தானே திருக்குறள் எழுதப்பட்டிருக்கவேண்டும்? இரண்டும் முரண்பட்டதாக உள்ளதே? தெளிவுபடுத்தவும்..


ராஜேஷ்


கோவை.


***


அன்புள்ள ராஜேஷ்


ஒரு உரை என்பது பலவகையான திறப்புகளை அளிக்கும். கூடவே பல கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பும். அவற்றை நாமே குறளில் இருந்தும் பிறநூல்களில் இருந்தும் தேடி எடுத்து தெளிவு செய்துகொள்வதே முறை. ஒரு உரையை அல்லது கட்டுரையை எதிர்கொள்ளவேண்டிய முறை அது.


சங்ககாலத்தின் இறுதிமுதல் தமிழகத்தில் இருந்த மதச்சூழ்நிலையை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கோவலன் மணிவண்ணன் கோட்டம், இந்திரன் கோயிலையும் அருகர் கோயிலையும் வணங்கிவிட்டுத்தான் நகர்நீங்குகிறான். சிலப்பதிகாரத்திலேயே ஆய்ச்சியர் குரவையில் விஷ்ணு பாடப்படுகிறார். கவுந்தி அருகர்நெறியைப் புகழ மாங்காட்டுமறையவன் விஷ்ணுவை புகழ்கிறான். இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையைச் சொன்ன சீத்தலைசாத்தனார் பௌத்தர். மூன்று மதங்களும் பூசலின்றி ஒன்றாக இருந்ததையும் ஒருமதத்தவர் மற்றமத தெய்வங்களை இயல்பாக வழிபட்டதையும் காண்கிறோம்.


சங்ககாலத்தின் இறுதியில் தொடங்கிய அறவிவாதமே குறளாக முழுமை அடைந்தது.


ஜெ


***


ஜெ


குறள் குறித்த விவாதங்களைப் பார்த்தேன். திருக்குறளை ஒரு மகத்தான கவிதைநூலாக வாசிக்கவேண்டும்., அதை ஒரு ஞானநூலாக அறியவேண்டும், ஆனால் என்றுமே வழிகாட்டும் நீதிநூலாக மதநூலாக நிறுத்திவிடக்கூடாது. அதைத்தான் விரிவாகச் சொன்னீர்கள். முதல்நாள் உரை மிகச்செறிவானது. பல புதிய மின்னல்கள். குறள் மதச்சார்பற்ற நூலாக நவீன காலகட்டத்தில் ஏன் வாசிக்கப்பட்டது என்பதற்கு சைவநூல்களின் எழுச்சியும் ஒரு காரணம் என்று நீங்கள் சொன்னதை மிக வியப்புடன் நினைத்துப்பார்க்கிறேன். குறளை உரிமைகொண்டாட முயல்பவர்கள் சொல்விளக்கம் கொடுத்து அதை தூய்மையான நூலாகக் காட்டமுயல்பவர்கள் அனைவரையும் விலக்கி வாசிப்பது எப்படி என்று விளக்கிய அந்த முதல் உரைதான் நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறப்பு.


மதுசூதனன்


***


ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண


குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist


https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2017 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.