Jeyamohan's Blog, page 67
July 21, 2025
டாலஸில் ஒரு சந்திப்பு
அன்புள்ள ஜெ,
சென்ற பூன் கூடுகைக்கு டாலஸ், டெக்ஸாசில் இருந்து நான், மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் கலந்துகொண்டோம். அனைவருமே பல பத்தாண்டுகளாக உங்கள் வாசகர்கள். இதற்கு முன் நீங்கள் 2022 இல் டாலஸ் வந்தபோது நாங்கள் சந்தித்து இருந்தாலும், பூன்கூடுகை நட்பை இன்னும் வலுவாக்கியது. அதன்பின் அட்லாண்டா நண்பர் சிஜோ நவம்பர் இறுதியில் இங்கு வந்தபோது நண்பர்கள் மீண்டும் சந்தித்தோம். நட்புக்கூடுகையை ஏன் இலக்கியகூடுகையாக மாற்றி தொடர்ந்து சந்திக்ககூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொடர்ந்து டிசம்பரில் நாங்கள் நால்வரும் நூலகத்தில் சந்தித்து இமைக்கணத்தில் வரும் சிகண்டி பகுதி பற்றி உரையாடினோம். முதல் கூடுகை என்றாலும், செந்தில் பாடி தொடங்கி வைக்க அனைவரும் தீவிரமாக பேச தயாரித்து வந்து இருந்தோம். முதல்முறையே இமைக்கணத்தின் தத்துவகட்டுமானம், உபநிடத முறையில் அமைந்து இருப்பது, இமைக்கணத்தின் விதைகள் முதற்கனலில் அமைந்திருப்பது, அதில் வரும் வராஹி படிமத்தை தொடர்ந்தால் 45000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட இந்தோனேசிய குகை ஓவியம் முதல் சுமேரிய நாகரிகத்தில் கொபக்லீடேபே கோவிலில் உள்ள வாரகம் சிற்பம் (வேளாண்மை தொடங்குவதற்கு முன் முதல் கற்காலம்) மற்றும் தமிழக ஶ்ரீ முஷ்ணம் பூவாரகன் என்று மிகத்தீவிரமாக இருந்தது. முடிவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை சந்திப்பது என்று முடிவு செய்துகொண்டோம். கூடுகை முடிந்தபின் ஸ்டார்பக்ஸ் காஃபி உடன் மேலும் இலக்கிய பேச்சு இரண்டு மணிநேரம் நீடித்தது. பின்னர் இமைக்கணத்தில் பீஷ்மர், கர்ணன், விதுரர் என்று ஒரு ஒரு பகுதியாக பிரித்து படித்து கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து சந்திக்கும்போது எங்களுக்கு இமைக்கணத்தின் தத்துவ அடர்த்தியை தவறாக விளங்கி கொள்கிறோமோ, இன்னும் முதிர்ச்சி வேண்டுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே ஒரு முறை இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் என்று விஷ்ணுபுர நண்பர் நிர்மல் எழுதிய கதைகள் பற்றி ஒருமுறை விவாதித்தோம். அதுவும் நன்றாகவே அமைந்தது, அதைப் பற்றி அவரிடமும் பகிர்ந்து கொண்டோம்.
மீண்டும் இமைக்கணத்திற்குத் திரும்பி மேலும் கூடுகைகள் ஒருங்கிணைத்தோம். மேலும் இரு நண்பர்கள் வெங்கட் மற்றும் சரவணன் இணைந்து கொண்டனர். திரௌபதி பகுதி வரும்போது இமைக்கணம் திரௌபதி பகுதியில் கேதுமாலன் என்றொரு கதை இருந்தது. அழகை, முழுமையை விரும்பி ஏற்று பின் துறந்து செல்லும் கதை. கலந்து உரையாடியபோது மூர்த்தி கேதுமாலம் என்பது இன்றைய ஈரான் பகுதியாக இருக்கலாம். பழைய காலத்தில் புவியை ஏழு தீவுகளாக வகுத்து அதில் ஜம்புத்வீப பகுதியில் நாம் இருப்பதைச் சொன்னார்.
மேலதிகமாக தேடும்போது, இந்த கேதுமாலன் கதை விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது. கேதுமாலம் நவகண்டங்களுள் ஒன்று. சுவாயம்புவ மனுவின் மகன் பிரியவிரதனுக்கு பத்து புத்திரர்களும், இரண்டு புத்திரிகளும் பிறந்தனர். பிரியவிரதன் உலகை ஜம்புத்வீபம், பிளக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று ஏழு த்வீபங்களாகப் பிரித்து ஏழு புத்திரர்களுக்கும் பங்கிட்டுத் தந்தான்.
ஜம்புத்வீபம் பகுதியை பெற்ற அக்னிதரன் தன் நிலப்பகுதியை நாபி, கிம்புருஷன், ஹரி, இளவிரதன், ரம்யன், ஹிரன்வனன், குரு, பத்ரஷ்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.
இந்த ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாகப் பிரிக்கப்பட்டது, அவற்றில் ஒன்று பாரத வர்ஷம். மற்ற எட்டு வர்ஷங்கள் கேதுமூல வர்ஷம், ஹரி வர்ஷம், இலாவிருத வர்ஷம், குரு வர்ஷம், ஹிரண்யக வர்ஷம், ரம்யக வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பத்ராஸ்வ வர்ஷம். நாபியின் மகன் ரிஷபன் (சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர்). ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
கோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் (இன்றைய ஹாசன் மாவட்டம்) நகரை தலைநகராகக் கொண்ட தென்பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கினார் ரிஷபதேவர்.
உலகை வென்ற பரதன், தன் தம்பியின் நாட்டை வெல்லாததல் அவர் கையில் வைத்திருந்த அபூர்வ சக்தி படைத்த சக்ராயுதம் சுழலாமல் நின்று விடுகிறது. பின்பு சகோதரர்களுக்கிடையே போர் நடைபெறுகிறது. இதில் பாகுபலி வெற்றிவாகை சூடுகிறார். ஆனால் பாகுபலிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரவில்லை. பாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் பாரதவர்ஷம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று. இந்த நிரையில் வந்த 22 வது தீர்த்தங்கரர் கிருஷ்ணனின் சித்தப்பா நேமிநாதர். 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். கேதுமாலன் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவருக்கு சித்தப்பா.இந்த முதல்கட்ட துப்பறியும் வேலை தவிர, அந்த பகுதி ஒன்றின் உண்மை மதிப்பு, அழகு, முழுமை தேடல், அதன் பின்னடைவு, அதற்கு தீர்வு என அனைத்தையும் முன்வைக்கிறது. இது மீண்டும் எங்களுக்கு தயக்கத்தை உருவாக்கியது.
இதனிடையில் சென்ற பூன் தத்துவமுகாமில் நீங்கள் அளித்த புறவய சட்டகத்தை மருத்துவத்துக்கு போட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆவலில் சொல்வனத்தில் ஒரு மருத்துவக் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கி இருந்தேன். அதில் வரும் சித்த மருத்துவப்பகுதிக்காக தேடியபோது புதுமைப்பித்தன் நாசகார கும்பல் கதைக்கு சென்று சேர்ந்தேன். அந்த கதை என்னை மிகவும் பாதித்தது. எனவே புதுமைப்பித்தன் படிக்கலாமா என்று கேட்டேன். நண்பர்களும் முழு மனதாக ஒத்துக்கொண்டார்கள்.
இதனிடையில் ஆஸ்டின் சௌந்தர் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு கலந்து கொள்ளமுடியுமா என்று ஆஸ்டினில் இருந்து நண்பர் ஸ்கந்தா கேட்டார். டாலஸ் நண்பர்கள் ஆஸ்டின் சென்று கலந்துகொண்டோம். நண்பர் மூர்த்தி இது குறித்து உங்களுக்கு எழுதி இருந்தார்.
நேரில் சந்தித்தபோது சௌந்தர் அவர்கள் எங்கள் கூடுகையில் கலந்துக்கொள்ள ஆவலாக உள்ளதாக சொன்னார். அடுத்தமுறை அவரும், அவர் மனைவி ராதாவும் ஆஸ்டினில் இருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து வந்து கலந்துகொண்டனர். அன்னபூர்ணா என்ற புதுநண்பரும் இணைந்துகொண்டார். துன்பக்கேணி, கயிற்றரவு, கபாடபுரம் போன்ற கதைகள் விவாதித்தோம். அதன் பின் ஒன்றாக உணவருந்தச் சென்றோம். கூடுகை நன்றாக இருந்ததாக சௌந்தர் பின்னர் செய்தியும் அனுப்பினார்.
அடுத்த கூடுகை உங்கள் பிறந்தநாள் மற்றும் புதுமைப்பித்தன் பிறந்தநாள் சிறப்பாக நாசகாரகும்பல், மகாமாசானம், சிற்பியின் நரகம், காஞ்சனை கதையும், உங்களின் கிரீட்டிங்ஸ் கதையும் பேசினோம்.பாலாஜி மனைவி ராதாவும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
அடுத்து ஒரு நாவல் பற்றி பேசலாம் என்று பாலாஜி சொல்லி, அ முத்துலிங்கம் அவர்களின் “கடவுள் தொடங்கிய இடம்” பற்றி பேசினோம். இதற்கு ஆஸ்டின் நகரத்தில் இருந்து 3 மணிநேரம் பயணம் செய்து பாலா மற்றும் அவர் மனைவி கவிதா, கிரி, ஆஸ்டின் சௌந்தர் மற்றும் அவர் மனைவி ராதா ஆகியோர் வந்திருந்தார்கள். அட்லான்டாவில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து சிஜோ எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்வுக்குப் பின் ஆஸ்டின் நண்பர்கள் மாதம் ஒருமுறை வந்து கலந்துகொள்வதாக வாக்களித்துப் பிரிந்தனர். பிறகு அ. முத்துலிங்கம் அவர்களின் 12 சிறுகதைகள் மூன்று கூடுகையிலாக கலந்துரையாடினோம்.
மீண்டும் ஆஸ்டின் நண்பர்களுடன் சேர்ந்து மத்தகம் குறுநாவல் வாசிப்பு கூட்டம் சென்ற சனிக்கிழமை நடந்தது. இந்த முறை 5 மணி நேரப் பயண தூரத்தில் இருந்து சான் அண்டனியோ கோபியும் கலந்துகொண்டார்.
ஒருநாள் பயணம் செய்து எலுமிச்சைசாதம் கட்டிவந்து பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து இலக்கியக்கூடுகையில் கலந்து கொள்வது எல்லாம் உங்கள் மேல்கொண்ட தீரா அன்பினால்தான் சாத்தியமாகிறது. ஆஸ்டின், சான் அன்டோனியோ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
மத்தகம் உரையாடலில் குறுநாவல் வடிவம், அதை ஒட்டி அளிக்கும் வாசக இடைவெளி, என்னைப்போலவே முதல் மூன்று அத்தியாயங்களை மட்டும் அடிக்கடி படித்துக்கொள்ளும் நண்பர்கள், கதையில் ஒரு சிறுவரியாக வரும் பாகனுக்கு பையன்களை பிடிக்கும் என்ற குறிப்பு நுட்பம், கதைக்கு வெளியே கேரள வரலாறு மற்றும் குறுநாவல் அளிக்கும் காலஅளவில் ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுதல் என்று தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது.
முதல் கூடுகைக்குப் பின் கடந்த 8 மாதங்களில் ஏற்பட்ட மாற்றம், திரும்பி பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.சென்ற பூன் முகாமில் ஒருநாள் காலை காபியின் போது நீங்கள் பறவை பார்க்க உலகெங்குமிருந்து கேரளா வருபவர்கள் பற்றி, ஒரு பறவை பார்ப்பதற்கு நாள்கணக்கில் காத்து இருப்பார்கள் என்று சொன்னீர்கள். நான் அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்கள் என்னவாக உருமாறுகிறார்கள், அது வெறும் ஆர்வம் மட்டுமா என்று கேட்டேன். நீங்கள் அது தெரியாது, அவர்களாக வந்து சொன்னால்தான் உண்டு. வேண்டும் என்றால் நீங்கள் அதைப்போல ஒன்றை தீவிரமாக செய்து கண்டு அடையுங்கள் என்று சொன்னீர்கள். அதன் ஒரு துளி என்றே இந்த கூடுகை ஒருங்கிணைத்தலை உணர்கிறேன்.
நண்பர்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவையும், அடுத்த கூடுகைக்கான எதிர்பார்ப்பும் இருப்பதாக ஒவ்வொரு முறையும் உணர்கிறோம். சொல்லவும் செய்கிறோம். கலந்துகொண்ட, இனி கலந்துகொள்ளப்போகும் அத்துணை நண்பர்களுக்கும் நன்றியும், அன்பும்.
எல்லாவற்றிற்கும் உங்களுக்கு தீரா அன்பும், நன்றியும் ஜெ!
அன்புடன்,
பிரதீப் பாரதி, டாலஸ்.
அகப்பாலை
மருபூமி வாங்க
அன்புள்ள்ள ஜெ
அஜிதனின் மருபூமி சிறுகதைத் தொகுதியை இப்போதுதான் வாசித்தேன். நான் முன்னரே அஜிதனின் சிறுகதைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்பது என் மதிப்பீடு. சாவு பற்றிய ஒரு அற்புதமான காவியம்போல் இருந்தது. பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய சலிப்பும், ஒருவகையான நிறைவும் கொண்டபின்னர்தான் சாவு பற்றி நினைப்பார்கள். நாவல்களும் அப்படித்தான் பேசுவது வழக்கம். கள்ளமில்லாத குழந்தைப்பருவம் சாவை வெவ்வேறு புள்ளிகளில் எதிர்கொள்ளும் தருணங்களை ஆழமான கவித்துவத்துடன் சொன்ன கதை அது.
இந்த தொகுதியில் போர்க்ரோஸ்ட், மாரிட்ஜானின் உடல் ஆகியவையும் அழகான கதைகள். மாரிட்ஜானின் உடல் கதையிலுள்ள நுட்பமான கவித்துவத்தை பலமுறை வாசித்து ரசித்தேன். பொதுவாக இளம் படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் நேரடியான, உணர்ச்சிகரமான, வலுவான கதைகளையே எழுதுவது வழக்கம். அதுதான் எளிதில் வாசகர்களிடம் சென்று சேரும். அத்துடன் அவர்களின் உணர்ச்சிநிலைகளும் அப்படிப்பட்டவை. கொஞ்சம் கலைத்திறன் குறைவான இளம் கதையாசிரியர்கள் அரசியல் கருத்துக்களையும் சமூகக்கருத்துக்களையும் கதையாக்குவார்கள். இளம்படைப்பாளிகள் கவித்துவத்தை நம்பியே கதைகளை எழுதுவதும், அக்கதைகள் கவித்துவவெற்றிகளை அடைவதும் மிகமிக அரிதானவை. அதற்கு தன் கலைமேல் நம்பிக்கையும், இலக்கியவாசிப்பும், பயிற்சியும் தேவை. அஜிதனின் எல்லா கதைகளுமே கவித்துவமானவை. ஒரு குழந்தையிறப்புப் பாடல்கூட கவித்துவமானது.
ஆனால் இந்தத் தொகுதியின் அற்புதமான படைப்பு மருபூமிதான். பாலைநிலம் என்னும் அனுபவம் ஒரு பெரிய சிம்பனி போல தொடங்கி வலுத்து உச்சம் அடைந்து அப்படியே பொழிந்து அடங்குகிறது. பாலைநிலத்தை நடந்து கடப்பவர் தனக்குள் உள்ள பாலை ஒன்றைத்தான் கடந்துசெல்கிறார். அந்த அகப்பாலையின் வெம்மைமீதுதான் மழை பொழிகிறது. அந்தக்கதையின் உருவகங்களை படிக்கப்படிக்க வியப்புதான். அழகான நஞ்சுக் கனிகள். துணைவரும் ஓணான். தனிமையில் வந்து சூழும் பிரமைகள். ஒவ்வொரு வரியிலும் அழகும் நுட்பமும் கொண்ட இதற்கிணையான கதை உங்கள் படைப்புகளிலேயே ஒன்றிரண்டுதான்.
அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.
எம்.பாஸ்கர்
பொருட்படுத்தவேண்டியவை
இந்த வசைகளை நீங்கள் பொருட்படுத்தாமல் செயலே வாழ்வு என்று இருப்பதும் அவர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்த கும்பலைப் பார்த்து பரிதாபமே வருகிறது. வாழ்க்கை முழுக்க இந்த பொசுங்கலிலேயே முடிந்துவிடும் இவர்களுக்கு என நினைக்கிறேன்.
பொருட்படுத்தவேண்டியவை
Some scholars used to say that reading is unnecessary in this era because today’s modern communication methods have improved a lot. You are also using modern communication methods to share your ideas.
Reading is outdated!அஞ்சலி . வி.எஸ். அச்சுதானந்தன்
அஞ்சலி. என் இளமை நினைவுகளின் நாயகன். தலைவன் என்றால் அரசன் அல்ல, தியாகி என்று காட்டி என்னை வழக்கமான தமிழ் மாயைகளில் இருந்து காத்தவன். எளிமையும் நேர்மையும் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும்போதும் இயல்வதே என்பதை காட்டியவன். என் வீர நாயகனை இருமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அமைந்தது நல்லூழ்.
July 20, 2025
மேலைக்கலை பற்றி ஒரு விவாதம்
இப்போது ஆஸ்திரியாவின் வியன்னாவில் இருக்கிறேன். இன்று ஆஸ்திரிய அருங்காட்சியகத்தில் மேலை ஓவியங்களின் பெருந்தொகுப்பைப் பார்த்தேன். எத்தனை வகைபேதங்கள். எத்தனை காட்சிக்கொந்தளிப்புகள். ஆயிரமாண்டுக்கால ஓவியத்தொகுப்பு. இவற்றில் இருந்துதான் சினிமா உருவாகி வந்துள்ளது. நவீன ‘டிசைன்கள்’ எல்லாமே உருவாகி வந்துள்ளன. நவீன கட்டிடக்கலை, நவீன மென்பொருள் வடிவமைப்புக்கலை எல்லாமே இவற்றில் இருந்துதான். நாம் அவற்றை அறிந்துள்ளோமா? அறிமுகமாவது நமக்கு உண்டா? ஏ.வி.மணிகண்டன் ஓவியக்கலை பற்றி உரையாடுகிறார்.
நிகழ்ந்த வாழ்வு
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன், நான் பத்மநாபபுரத்தில் தங்கியிருந்து, தக்கலை தொலைபேசி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, என் அண்ணாவின் ஆணையால் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் வீடுகட்ட ஆரம்பித்தேன். அருண்மொழியின் பேரில் நிலம் இருந்தமையால் அவள்பேரிலேயே கடன் வாங்கினேன். என் பெயரால் கூட்டுறவுக்கடன். மேலும் பல கடன்கள். ஒரு கட்டத்தில் அருண்மொழி கவரிங் நகையுடன் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து கையில் வாங்கியது ஆயிரத்தி ஐநூறு ரூபாய். மொத்தத்தில் வீட்டுச்செலவுக்கே பணமில்லா நிலை.
அப்போதுதான் பாஷாபோஷிணியில் எழுதும்படி அழைப்பு. என் நண்பர் கே.ஸி.நாராயணன் அப்போது பாஷாபோஷிணி ஆசிரியர். எனக்கு மலையாளம் எழுதுவது கடினம். சமாளிக்கலாம், ஆனால் என்ன எழுதுவது? ஏற்கனவே மலையாளத்தில் கட்டுரை, குறுங்கட்டுரை வடிவங்களில் ஏராளமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். ஓ.வி.விஜயன் எழுதிய அரசியல் குறுங்கட்டுரைகள் மிகப்புகழ்பெற்றவை (ஒரு செந்தூரப்பொட்டின் நினைவாக என்னும் தொகுப்பு) மாதவிக்குட்டி எழுதிய இரண்டு தன்வரலாறுகள் ( பால்யகால நினைவுகள், நீர் மாதுளம் பூத்தகாலம்) மலையாளத்தின் ‘கிளாஸிக்’ எனப்பட்டவை. பயணக்கட்டுரைகளில் ஆஷா மேனன் பெரிய கவனத்தைப் பெற்றிருந்தார். எம்.பி.நாராயணபிள்ளையின் அங்கதக்கட்டுரைகளும் புகழ்பெற்றவை.
நான் எழுத எனக்கென இருந்தது என் வாழ்க்கைதான் என்று எண்ணினேன். அந்த வாழ்க்கை எவருக்குமில்லை. அத்துடன் என் நிலம், தமிழகமும் அல்லாத கேரளமும் அல்லாத தென்திருவிதாங்கூர், தனித்துவம் கொண்டது. தனக்கான பெரும் பண்பாட்டு மரபு உடையது. அதை எழுதலாமென்று துணிந்தேன். என் நடை மலையாளத்தின் பொதுவான நடையாக இருக்கலாகாது என உறுதிகொண்டேன். என் ஆசிரியரின் ஆசிரியர் எம்.கோவிந்தன். அவர் முன்னெடுத்த ‘நாட்டுமலையாள’ இயக்கம் மேல் எனக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. சம்ஸ்கிருதத்தை கூடுமானவரை தவிர்த்து மக்களின் பேச்சுமொழியருகே வரும் உரைநடையில் எழுதுவது அது. அவ்வாறு எனக்கான தனிநடை உருவானது. ஆனால் அது வட்டார வழக்கு அல்ல. நவீனக்கவித்துவத்தின் செறிவுகொண்ட நடை அது.
என் தொடர் பெரும்புகழ் பெற்றது. அந்த நடையின் தனித்துவம் பெரும்பாலும் அனைவராலும் புகழப்பட்டது. மாத்ருபூமி பதிப்பகம் அக்கட்டுரைகளை கல்பற்றா நாராயணனின் அற்புதமான முன்னுரையுடன் உறவிடங்கள் என்னும் பெயருடன் வெளியிட்டது. தொடர்ச்சியாக இன்றுவரை அச்சிலிருக்கும், புகழ்பெற்ற நூல் அது. அந்நூலை சங்கீதா புதியேடத்து Of Men Women and witches என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அது Juggernaut பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
அந்நூலிலுள்ள பல கட்டுரைகளை தமிழில் பின்னர் நான் மீண்டும் எழுதினேன். பல கட்டுரைகள் முழுக்க மலையாளத்தன்மை கொண்டவை, ஆகவே மொழியாக்கம் செய்யப்படவில்லை. தமிழில் என் தன்வரலாற்றுக்கட்டுரைகளை மேலும் தொடர்ச்சியாக எழுதினேன். அவை என் இணையதளமான www.jeyamohan.in தளத்தில் வெளிவந்தன. அவற்றின் தொகுப்பே நிகழ்தல் என்னும் நூல். முதற்பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. மேலும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் அதன் புதியபதிப்பை வெளியிடுகிறது.
இந்நூல் அனுபவக்கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் அனுபவங்களின் நேரடிப்பதிவு அல்ல, கட்டுரைகளும் அல்ல. கதைகளின் வடிவம் இவற்றுக்குண்டு. உத்வேகம் மிக்க வாசிப்புத்தன்மை கொண்ட ஆக்கங்கள் இவை. புனைவுச்சாயல் கொண்டவை. நிகழ்வுகளை தொகுத்து அவற்றுக்கு சிறுகதையின் வடிவத்தை அளிப்பதில் புனைவம்சம் பங்களிப்பாற்றுகிறது.
இந்நூலை வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கும், பின்னர் வெளியிட்ட நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகங்களுக்கும், இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
ஜெயமோகன்
எர்ணாகுளம்
ஏப்ரல் 10, 2025
நிகழ்தல் வாங்ககே.பனையன்
கே. பனையன் முதல் தலைமுறை கூத்துக் கலைஞர். ஆரம்பத்தில் நாடகம் கற்றுக் கொண்டு ஆடினார். எம்.ஆர்.முனுசாமி, எஸ்.லோகநாதன் ஆகியோர் நாடகம் கற்றுக் கொடுத்தனர். அதன்பின் பி.முனுசாமி கூத்து கற்றுக் கொடுத்தார். முட்டவாக்கம் எம்.கே.கோபாலகிருஷ்ணன், முனுசாமி வழங்கிய ‘வீடும் வயலும்’ நிகழ்ச்சியில் இருபந்தியைந்து ஆண்டுகள் வானொலியில் கூத்தாடினார்.
கே.பனையன் – தமிழ் விக்கி
வீழ்த்தப்படுபவர்களின் கதை
ஒருவன் தான் விரும்பும் வாழ்க்கைக்கு மாறாக, வேறு ஒரு வாழ்க்கையை வாழ சூழ்நிலை ஏற்படும்போது அந்த சூழல் ஏற்படுத்தும் ஒடுக்குமுறைகள் அவனை தொடர்ந்து போராடச்செய்து, அவன் விரும்பாத வாழ்க்கையில் அவனை வெற்றி பெறச்செய்கிறது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதி சன்னதி, கடைவீதியின் பின்னனியில் விரைவுப் புனைவாக(Thriller) உருவாக்கப்பட்டதே ஜெயமோகனின் “படுகளம்” நாவல்.
படுகளம் நாவலை வாசித்து முடித்தவுடன் அதில் வரும் சம்பவங்களை கற்பனையில் அசைபோட்டு, விமர்சனம் எழுத முனைந்த போது, பெரும் தொடக்க இடர்பாடு ஏற்பட்டது. அது என்னவெனில் 256 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் நாயகனை ஏலே, மாப்ளே, அண்ணா, தம்பி, முதலாளி, நீங்க என்றே விளிக்கப்படுகிறதே ஒழிய எங்கும் நாயகனின் தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்படவில்லை. நாயகனை தவிர்த்து அனைத்து முக்கிய மற்றும் சிறு கதாபாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. விமர்சனம் எழுதும்போது வில்லன் காசிலிங்கம் என்று முன்வைக்கும் போது நாயகனை முன்வைக்க சாமானியன் என்ற பொதுப் பெயரை பயன்படுத்தியுள்ளேன்.
சாமானியன் ஒருவன் தன்னையும் தன் குடும்பத்தையும் சமூகத்தில் கௌரவமான தளத்தில் பொருத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு, முன்னேற்றத்தின் முதல் படியை தொடுகிறான். இம்முனேற்றத்திற்கு காசிலிங்கம் என்ற பண பலமும் அதிகார பலமும் கொண்ட முக்கிய புள்ளியிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. பாதிக்கப்பட்ட சாமானியன் காசிலிகத்தின் அச்சுறுத்தலை தவிர்க சமூகத்தில் உள்ள அதிகார அமைப்புக்கலான காவல் நிலையம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் என்று அனைத்திலும் முறையிடுகிறான். சாமானியனுக்கு ஏமாற்றமும் அவமானமும் இயலாமையும் மட்டுமே மிஞ்சுகிறது.
எல்லா அதிகார அமைப்புகளும் சாமானியனுக்கானது அல்ல. அதிகார அமைப்புகள் அதைவிட அதிகாரம் படைத்தவர்களுக்கானது என்பதை சாமானியன் உணருகிறான். காசிலிங்கத்தின் பணபலம், அதிகார பலம், அகங்காரம் இவை எவற்றையும் மீதம் வைக்காமல் சாமானியன் தனது ராஜதந்திர நகர்வுகளில் படிப்படியாக எப்படி நிர்மூலமாக்குகிறான் என்பதை நாவலில் சுவாரசியமான சம்பவங்களை கொண்ட பக்கங்களாக உருவாக்கியுள்ளார் ஜெயமோகன்.
படை வலிமையும் ராஜதந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படும்போதே இலக்கை அடைய முடியும் என்பதை குருஷேத்திர யுத்தம் கற்பிப்பதை போல் இந்த நாவலில் சாமானியன் தனது புத்திகூர்மையையும் வலிமையும் பயன்படுத்தி ஒவ்வொரு அதிகார அமைப்பையும் தனது கட்டுப்பாட்டில் செயல்படுத்தி, தனது பகையை கதிகலங்க வைக்கிறான்.
ஒருவன் தன்னை தகவமைத்துக் கொள்ள வன்முறையை நாடும் போது அவன், வன்முறை பாதையை தேர்ந்தெடுத்ததற்கான தர்க்க நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறான். இப்படி வன்முறை வழியை தேர்ந்தெடுத்தவன் எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வை கொண்டு அலைவான். ஏனெனில் அவனை கொல்வதற்கான தர்க்க நியாயங்களை எதிரிகள் கற்பித்துக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற வன்முறையின் உளவியலை நாவல் தெளிவாக புலப்படுத்துகிறது.
சாதுவாக இருப்பவன் மிரண்டால் என்னவாகும் என்பதை, யதார்த்தத்தை மீறினாலும், பொருந்தக்கூடிய சம்பவங்களுடன் நாவல் படைக்கப்பட்டிருப்பதால் சுவாரசியம் சற்றும் குறையாமல் வாசிக்க முடிகிறது. மேலும் கதைக் காலம் சமகாலத்தை சேர்ந்ததாகவும் மொழிநடை எளிதாகவும் இருப்பதால் தீவிர வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் மிக எளிதாக வாசித்து தீவிர வாசிப்பை சென்றடைய இந்த நாவல் பொருத்தமானதாக அமையும்.
–வ.லட்சுமணசாமி,
அன்புள்ள ஜெ
ஆலம், படுகளம் இரண்டு நூல்களையும் வாசித்தேன். இரண்டுமே ஆற்றல்மிக்கவர்களால் அழிக்கப்பட்ட சாமானியர்களின் எதிர்வினை என்ற அளவில் எடுத்துக்கொள்ளத்தக்கவை. சாமானியர்களிடமுள்ள ‘ஹீரோயிஸம்’ வெளிப்படும் தருணங்கள் அவை. உங்கள் எழுத்துக்களில் உள்ள நிதானமான விரிவான மனஓட்டங்கள் இல்லாமல் கதைகள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஆனால் ஆலம் நாவலில் வாத்தியாருக்கும் அவர் மகனுக்குமான உறவு சீனியர் வக்கீலுக்கும் அவர் உதவியாளருக்குமான உறவு, வீரலட்சுமி குடும்பத்தின் சித்தரிப்பு ஆகியவை ஒரு நல்ல எழுத்தாளரால் மட்டுமே எழுதப்படத்தக்கவை. அவற்றை திரில்லர் எழுத்தாளர்கள் எழுத முடியாது. படுகளம் நாவலில் அம்மாவுக்கும் கதாநாயகனுக்குமான உரையாடலாகட்டும், வக்கீலும் கதாநாயகனும் குடிக்கும் காட்சியாகட்டும் அதேபோல பெரிய கலைஞர்கள் மட்டும் எழுதும் இடங்கள். அதனால்தான் பரபரப்பான நாவல் என்பதை தாண்டி இவை இலக்கியமாகின்றன.
ஜே.கிருஷ்ணகுமார்
வெள்ளிமலையின் வெண்ணிலா நாட்கள்
Young people, including my boys, believe that anything can be written using AI, and that is what is ‘modern.’ If your neighbor writes the same thing, when you ask him what it means, he doesn’t understand. “You are all old people.”
சிறு தோழியர் குழாமுண்டு குவைத்தில், உங்கள் காணொளிகளை பற்றி விவாதிக்கவம் சிலாகிக்கவும். unified wisdom அறிவிப்புகளை பார்க்கும் போதெல்லாம் தவிப்பாக தான் இருக்கும், கிட்டாத மாமணி, எட்டாத எழில் நிலவோ அவையென.. உள்ளுர உயிரூர ஆசைப்பட்டதை நல்லூழ் இழுத்து வந்தேத்தித்தந்தது. ஜூலை மாத வகுப்பிற்கு ஏப்ரல் மாதமே பதிந்துகொண்டேன், என் விடுமுறைக்குள் அமைந்து கிடைக்கும்,எந்த வகுப்பெனினும் நன்றெனத்தான் நான் நினைத்தேன்.
வெள்ளிமலையின் வெண்ணிலா நாட்கள்July 19, 2025
ஓர் ஒளிர்விண்மீன்
எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் உலகம் முழுக்கவே எழுதப்படுகின்றன. ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சனைப்பற்றி அவரது மாணவர் பாஸ்வெல் எழுதிய வாழ்க்கை வரலாறு அவ்வகையான ஆளுமைச்சித்திரங்களில் ஒரு முன்னுதாரணமான படைப்பு. தமிழிலக்கியத்தில் அந்த வகைமையில் செவ்வியல்படைப்பு என்பது உ.வே.சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு. எந்நிலையிலும் தமிழிலக்கியத்தின் ஒரு சாதனைப்படைப்பு அது.
எதற்காக எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படவேண்டும்? இலக்கியம் மாமனிதர்களின் வாழ்க்கையை எழுதிக்கொண்டே இருக்கிறது. காந்தியின் வாழ்க்கைவரலாறுகள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. வெற்றியாளர்களின் வாழ்க்கையையும் எழுதலாம். அரிதாக பெருநிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. இந்த வகையான வாழ்க்கைச்சரித்திரங்களில் விடுபடும் ஓர் அம்சத்தை நிரப்பும்பொருட்டு எந்தவகையான தனியாளுமையும் இல்லாத சாமானியர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. அவை பிரதிநிதித்துவம் கொண்டவை. அவர்கள் வரலாற்றுப் பெருக்கின் ‘சாம்பிள்’ துளிகள்.
ஆனால் எழுத்தாளர்களின் வாழ்க்கை பெரும்பாலும் மிகச்சிறியது. சாகசங்களும் அரிய நிகழ்வுகளும் கொண்ட வாழ்க்கை செவ்வியல் காலகட்டத்துப் படைப்பாளிகளுக்கே உள்ளது. எழுத்தாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் முன்னுதாரணமாக அமைந்த டாக்டர் ஜான்சனின் வாழ்க்கை மிகமிகத் தட்டையானது– பாஸ்வெல்லின் பேரன்பால்தான் அந்நூல் செவ்வியல்படைப்பாக ஆகிறது. எனில் ஏன் எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படவேண்டும்?
இலக்கியம் என்பதன் ஊடகமே இலக்கியவாதிதான். வெளிப்பாட்டை நிகழ்த்தும் ஊடகத்தை அறிந்தாலொழிய வெளிப்படுவதை புரிந்துகொள்ள முடியாது. ஆகவே எழுத்தாளர்களின் வாழ்க்கை பதிவாக வேண்டியுள்ளது. ஓர் எழுத்தாளரின் சரியான ஆளுமைச்சித்திரம் அவருடைய வாழ்க்கையை மட்டும் காட்டுவதில்லை, அவருடைய வாழ்க்கைப் பார்வையைக் காட்டுகிறது, அவருடைய படைப்பு உருவாகும் களத்தைக் காட்டுகிறது. அந்நூலை எழுதியவர் இன்னொரு படைப்பாளி என்றால் அந்த எழுத்தாளரின் படைப்புள்ளம் செயல்படும் விதமும் பதிவாகிவிட்டிருக்கும். அது எந்த இலக்கியவாசகனுக்கும் முக்கியமான அறிதலே.
அதற்கும் அப்பால் ஒன்றுண்டு. இலக்கியம் என்பது, இலக்கியத்தை உள்ளடக்கிக்கொண்ட அறிவியக்கம் என்பது, ஒரு மாபெரும் பெருக்கு. காட்டில் வீசும் காற்றுபோல. அதை நாம் மரங்களின் அசைவாகவே காணமுடியும். இலக்கியத்தையும் அறிவியக்கத்தையும் எழுத்தாளர்கள் வழியாக, அறிஞர்கள் வழியாக மட்டுமே நம்மால் அறியமுடியும். ஆகவேதான் எழுத்தாளர்களின் ஆளுமைச்சித்திரம் பதிவாகவேண்டியது அவசியமாகிறது. எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு, நினைவுக்குறிப்பு சரியாக எழுதப்பட்டால் அக்காலகட்டத்தின் அறிவியக்கச் சித்திரம் அதில் இருக்கும். உ.வெ.சாமிநாதையரின் வாழ்க்கை வரலாறுகளில் அது உள்ளது. இந்நூலிலும் சரி, நான் கோவை ஞானி பற்றி எழுதிய ஞானி என்னும் நூலிலும் சரி, அந்த ஆளுமை அக்கால அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இங்கே நிகழும் அரசியல், பொருளியல், கேளிக்கை எதுவுமே நிரந்தர மதிப்பு கொண்டவை அல்ல. அவற்றுக்கு அழிவிலாத்தொடர்ச்சி இல்லை. அவை அன்றாடத்தின் பகுதிகளே. மானுடம் இப்புவியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறிவுத்திரட்டல் மட்டுமே உண்மையான மானுடத் தொடர்ச்சி. மானுடம் என்பது அது மட்டுமே. அந்த அறிவுத்திரட்டின் ஒரு முகமே மதம், இன்னொரு முகமே வரலாறு. இலக்கியம், அறிவியல், தத்துவம் எல்லாமே அந்த அறிவுத்திரட்டின் உறுப்புகள் மட்டுமே. பிற அனைத்துமே அந்தந்த காலகட்டத்துடன் நின்றுவிடுபவை. அவை அறிவியக்கத்தால் திரட்டப்பட்டு மானுட அறிவுக்குவையில் சேர்ந்தாலொழிய அவற்றுக்கு தொடர்ச்சி இல்லை, காலம் கடந்த இருப்பும் இல்லை.
அறிவியக்கத்தின் அறிவுத்தொகுப்பு சிந்தனைகளிலும் படைப்புகளிலும் உள்ளது. நூல்கள் அவற்றின் பதிவுகள். ஆனால் அறிவியக்கத்தை அதன்பொருட்டு வாழ்ந்த அறிஞர்களின் வாழ்க்கையை தொகுத்து நோக்குவதன் வழியாக மட்டுமே உணரமுடியும். ஆகவேதான் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன.
வாழ்க்கையின் நேர்ப்பதிவு என்பது நவீன இலக்கியத்தின் வழிமுறை. அது உருவான பின்னரே வாழ்க்கை வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே இலக்கியவாதிகளின் வாழ்க்கைகள் தொன்மங்களாக வரலாற்றில் நிறுவப்பட்டன. சக்கரவர்த்திகள்கூட மறைந்துவிட்டனர், இலக்கியவாதிகள் கதைகளின் நாயகர்களாக நிலைகொள்கின்றனர். அவர்களால் பாடப்பட்டதனால் சக்கரவர்த்திகள் நீடிக்கின்றனர்.
தமிழில் நவீன இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாறுகள் மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. பாரதியின் வாழ்க்கையை யதுகிரி அம்மாள், வ.ரா, செல்லம்மாள் பாரதி, கனகலிங்கம் ஆகியோர் சுருக்கமாக எழுதியுள்ளனர். அவை நினைவுக்குறிப்புகளே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை ரகுநாதனால் எழுதப்பட்டுள்ளது. மௌனி, கு.பரா, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என நம் இலக்கியப் பேராளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள் எழுதப்படவே இல்லை.
நவீனத் தமிழிலக்கியத்தில் நல்ல வாழ்க்கைச் சித்திரங்களை எழுதி முன்னுதாரணமாக அமைந்தவர் சுந்தர ராமசாமி. அவர் ஜீவா பற்றி எழுதிய காற்றில் கலந்த பேரோசை, க.நா.சு பற்றி எழுதிய நட்பும் மதிப்பும் ஆகியவை மிக முக்கியமான படைப்புகள். பின்பு சி.சு.செல்லப்பா, க.நா.சு, ஜி.நாகராஜன், பிரமிள். கிருஷ்ணன் நம்பி ஆகியோரைப்பற்றிய அழகிய, கூரிய நினைவுச்சித்திரங்களை அவர் நினைவோடை என்னும் சிறுநூல்தொடராக எழுதினார். தமிழின் மிக முக்கியமான இலக்கியத் தொகை அது.
தமிழில் ஏன் நினைவுநூல்கள் எழுதப்படுவதில்லை என்பதற்கான காரணமும் அவற்றை சுந்தர ராமசாமி எழுதியபோது நிகழ்ந்தது . அவர் எவரைப்பற்றியும் பொய்யோ அவதூறோ எழுதவில்லை. அனைவர் பற்றியும் மதிப்பு தவறாமலேயே எழுதியிருக்கிறார். சிறு எதிர்விமர்சனங்கள் கொண்ட நூல்கள் பிரமிள், சி.சு.செல்லப்பா பற்றி மட்டுமே. ஆனால் அத்தனை நூல்களைப் பற்றியும் கசப்புகள் உருவாக்கப்பட்டன. ஜி.நாகராஜன், கிருஷ்ணன்நம்பி போன்றவர்களின் உறவினர்கள் சீற்றம்கொண்டனர். பிரமிள் பக்தர்கள் வசைபாடினர்.
ஏனென்றால் இங்கே நாம் மறைந்த எவர் பற்றியும் ஒரு தெய்வப்பிம்பம் மட்டுமே கட்டமைத்துக் கொள்கிறோம். அதற்கு ஒரு மாறாத ‘டெம்ப்ளேட்’ நம்மிடமுள்ளது. அதைக்கடந்து எவர் என்ன சொன்னாலும் அது அவமரியாதை, அவதூறு எனக் கொள்கிறோம். எளிய உண்மைகளைக் கூட அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறோம். ஆழமான பழங்குடிமனம் கொண்ட ஒரு சமூகத்தின் எதிர்வினை இது. தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவர் பற்றியும் நேர்மையான, நடுநிலையான ஒரு வாழ்க்கைவரலாறு இன்றுவரை எழுதப்பட்டதில்லை– எழுதவும் இந்நூற்றாண்டில் இயலாது. எழுத்தாளர்கள் சார்ந்து உருவாகும் எதிர்ப்பும் காழ்ப்பும் சிறியவை, வன்முறையற்றவை என்பதனாலேயே எழுதுவது சாத்தியமாகிறது
சுந்தர ராமசாமி பற்றிய இந்நினைவுநூல் அவர் மறைந்ததுமே ஓர் உணர்ச்சிப்பெருக்கில் என்னால் எழுதப்பட்டது. அப்போது கரைபுரண்டு எழுந்த நினைவுகள். அந்நினைவுகளைத் தொகுக்கும் விதத்தில் கற்பனை செயல்பட்டது. எந்த நினைவுநூலையும் போலவே நினைவுகூர்பவனுக்கும் எழுதப்படுபவருக்குமான உறவும் உரையாடலுமே இதிலும் உள்ளது. நான் அவரை அவருடன் நிகழ்த்திக்கொண்ட உரையாடல் வழியாகவே அறிந்தேன், நினைவுகூர்கிறேன், அவையே இந்நூலில் முதன்மையாக உள்ளன. இந்நூல் அவரைப்பற்றியது. கூடவே அவரை, அவர் வழியாக தமிழிலக்கியத்தை, அவர் வழியாகக் காந்தியை கண்டடைந்த இளம் எழுத்தாளனாகிய என்னைப் பற்றியதும்கூட.
இந்நூலின் இலக்கியப்பெறுமதி இதிலுள்ள நுணுக்கமான ஆளுமைச்சித்திரம் வழியாக உருவாகிறது. சுந்தர ராமசாமியின் வாழ்க்கையின் அன்றாடச்சித்தரிப்பு , அவருடைய ஆளுமையின் காட்சி சிறுசிறு செய்திகளினூடாக திரண்டு வருகிறது. அவருடைய சிறு சிறு ரசனைகள், எளிய அன்றாட உணர்வுகள் பதிவாகியுள்ளன. பெரும் பற்றுடன் அவரைக் கண்ட இளைஞனின் கண்களால் பதிவுசெய்யப்பட்டவை அவை. ஆசிரியனைக் காணும் மாணவனின் விழிகள் அவை. அவற்றிலேயே அந்தப்பெரும் பிரியம் திகழமுடியும். இன்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலிலும் அவரை நினைவுகூர்ந்தபடியே இருக்கும் ஒருவனின் உள்ளம் வழியாக அவர் எழுந்து வருகிறார்.
அத்துடன் இந்நூல் அவருடைய உரையாடல் முறைமையை, அவருடைய படைப்புள்ளம் செயல்படும் விதத்தை, அவருடைய உணர்வுகள் அலைபாயும் விதத்தை வாசகனுக்குக் காட்டுகிறது. இந்நூல் முழுக்க வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் சுரா எந்நிலையிலும் மாறாத சிரிப்பும் கேலியும் கொண்டவர். சட்டென்று கவித்துவம் நோக்கி எழும் உள்ளம் கொண்டவர். எழுத்தாளனாகப் பேசிக்கொண்டே சென்று ஒரு கணத்தில் சிந்தனையாளனாக விரிபவர். தன்னியல்பாக உருவாகியிருக்கும் அந்தச் சித்திரம் ஒரு ஆவணப்பதிவு அல்ல. ஆவணப்பதிவர்கள் அதை எழுதமுடியாது. வெறும் அணுக்கர்களும் அதை எழுதிவிடமுடியாது. அவருடன் அந்த உச்சங்களுக்கு தானுமெழுந்த, அவருக்கு நிகரான இன்னொரு படைப்பாளியே அதை எழுதமுடியும். தமிழில் இந்நூலிலுள்ள அத்தகைய தருணங்களுக்கு நிகராக வேறெந்த நூலிலும் எவர் பற்றியும் எழுதப்பட்டதில்லை. அதை எழுதவே கற்பனை தேவையாகிறது – உண்மையை துலக்கும் கற்பனை. அதை பதிவுசெய்தமையாலேயே இந்நூல் பேரிலக்கியம்.
சுரா மறைந்தபின்னர் பலர் அஞ்சலி எழுதினர். அந்த அஞ்சலிகளிலெல்லாம் இரண்டு வரைவுகளே இருந்தன. ஒன்று சம்பிரதாயமான அஞ்சலி. அவையே பெரும்பகுதி. இன்னொன்று, தன்னைப்பற்றி எழுதி தன்னை சுந்தர ராமசாமி எப்படி மதித்தார், எப்படிப் பாராட்டினார் என்ற பதிவு. அதை எழுத்தாளர்கள் எழுதினர். அவை எவற்றுக்கும் இன்று எந்த மதிப்பும் இல்லை, உணர்ச்சிமதிப்போ தகவல்மதிப்போ. அவர்கள் சுராவை கவனித்ததே இல்லையா என்ற பெருந்திகைப்பையே நான் அடைந்தேன். அவருடைய ஒரு சொல்கூடவா அவர்களின் நினைவில் இல்லை? அவர்கள் தங்களையன்றி எவரையுமே பொருட்படுத்துவதே இல்லையா?
ஆனால் ஆச்சரியமாக இந்நூல் பற்றித்தான் பொருமல்கள், கசப்புகள், தாக்குதல்கள் எழுந்து வந்தன. இது சுந்தர ராமசாமியை அவமதிக்கிறது என்று சொன்னவர்களும் உண்டு. நான் என்னை முன்னிறுத்துகிறேன் என்றவர்களும் பலர். அவ்வாற்ய் சொன்ன பலர் சிறிய எழுத்தாளர்கள். சிலர் வெறும் சாதியவாதிகள். குடும்பச்சூழலில் ஒர் அன்பானவர் என்று மட்டுமே அவரைக் கண்டவர்களுக்கும் அப்படி தோன்றலாம். இந்நூலில் அவர் உள்ளம் படைப்பூக்கத்துடன் நாகபடம் என எழும் கணங்களை அவர்களால் உணரமுடியாது.
இன்று இந்நூலைப்பற்றி அவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலக்கியவாசகர் எவரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். சுந்தர ராமசாமியுடன் இணைத்து நிறுவிக்கொள்ளும் தேவைகொண்டதல்ல என் ஆளுமை என வாசிப்போர் அறிவர். இந்நூல் சுராவை எப்படி வரலாற்றின் முன் நிறுத்துகிறது என அவர்கள் வாசிக்கமுடியும். அப்படி அவரைப்பற்றி ஒரு படைப்பூக்கச் சித்திரத்தை அளிக்கும் வேறொரு நூல் எழுதப்பட்டதில்லை என எவரும் காணமுடியும். இது அவரை சிரிப்பவராக, சிறியவற்றில் அழகை அறிபவராக, கவிஞராக, சிந்தனையாளராக, காந்தியை உள்வாங்கிய மார்க்ஸிய இலட்சியவாதியாக முன்னிறுத்துகிறது.
இது சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி அல்ல. இது ஒரு கடமைநிறைவேற்றமோ நன்றிக்கடனோ அல்ல. இது நான் எழுதும் எந்நூலையும்போல அறிவியக்கத்திற்கு என் கொடை மட்டுமே. ஞானி பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் இதுபோலவே . தமிழ் அறிவியக்கம் அவர்களின் வழியாகவே வளர்ந்து வந்தது. இந்நூல் அளிப்பது அதன் சித்திரத்தை. எனக்கு சுரா அறிவியக்கத்தின் ஒளிரும் புள்ளிகளில் ஒன்று மட்டுமே.
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சுரா நினைவின் நதியில் நூலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை)
தொடர்புக்கு : vishnupurampublications@gmail.comPhone 9080283887)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


