Jeyamohan's Blog, page 65
July 24, 2025
இந்திய இறையுருவகங்கள்
ஒரு மாபெரும் மரம். அதை தந்தைமரம் என ஆப்ரிக்காவில் வழிபடுகிறார்கள். இந்தியாவில் அது நேரடியாகவே தெய்வமாக ஆகிவிட்டது. எப்படி நம் தெய்வ வடிவங்கள் உருவாகின்றன? நம் உளவியல்தான் என்ன?
கோவை சொல்முகம் சந்திப்பு- ஜூலை
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 68வது இலக்கிய கூடுகை 27 ஜூலை, ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 49
நூல் – மாமலர்
அத்தியாயம் 1 முதல் 12 வரை
அமர்வு 2:
நாவல் – ‘கொல்லப்படுவதில்லை‘
– மைத்ரேயி தேவி
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 27-ஜூலை-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
இருளை அளையும் கைகள்..
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நான் சமீபத்தில் உங்கள் மத்தகம் குறு நாவலை டல்லாஸ் கூடுகைக்காக படித்தேன். நான் கூடுகையில் பகிர்ந்த அனுபவத்தை உங்களிடம் பகிரவே எழுதுகிறேன்.
பொதுவாக ஒரு கதை படிக்கும் போது judgemental ஆக இருக்க கூடாது என்று நினைத்தாலும், என்னை அறியாமல் யார் MGR யார் நம்பியார் என்று மனம் படமிடுகிறது. அதுவும் கதை சொல்லிக்கு MGR கிரீடம் கொடுத்துவிடுவேன். மத்தகத்தில் பரமனுக்கும் அதைத்தான் கொடுத்தன். பாதி கதையில் பரமன், அருணாச்சலம் அண்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டு, என் தலையிலும் போட்டு விட்டான். அய்யய்யோ இவன் MGR இல்லை நம்பியார், இவ்வளவு நேரம் நம்பியார் தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதிலிருந்து மீண்டு, இப்போது யாருக்கு MGR கிரீடம் கொடுப்பது என்று யோசித்து, சரி கேசவன் தான் இப்போது MGR என்று நியமித்து விட்டேன். அத்தியாயம் நாலையும், ஐந்தையும் விறுவிறுப்புடன் படித்தேன். எப்படியும் MGR கிரீடம் அணிந்த கேசவன் தன்னை நிலை நாட்டுவான் என்று நம்பினேன். வழக்கமான படங்களில் வருவது போல் கேசவன் இறந்தாவது தன்னை நிலை நாட்டுவான் என்று நினைத்தேன். ஆனால் கேசவன் இறக்கவில்லை, பணிந்து விட்டான். முடிவில் நம்பியார் வென்று விட்டார்.
மத்தகத்தை இரவில் படித்துக் கொண்டிருந்தேன். கதை முடிந்த பின் தூக்கம் வரவில்லை, கதையில் நடந்த சம்பவங்களை கோர்த்து மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது தான் எனக்கு விளங்கியது கதையில் ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் கண்ணாடியை என் பக்கம் திருப்பி வைத்திருக்கிறீர்கள் என்று. கண்ணாடியில் நானே என்னை நம்பியாராக பார்த்து மிரண்டு விட்டேன்.
நீங்கள் கண்ணாடியை என் பக்கம் மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் பக்கம் திருப்பி வைத்து விட்டீர்கள் என்று தெரிந்தது. இது ஒரு யானை கதை என்பதை தாண்டி பல மடிப்புகள் இருப்பது தெரிந்தது. அதற்குப் பின் மனதில் கேள்விகள் வெள்ளம் போல் பொங்க தொடங்கின. பலவீனத்தை தன் வசதிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளும் நம்பியாராக நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி இருக்கிறோமா என்று கேள்வி எழுந்தது. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்பியாருக்கு அடிபணிகிறோமா என்ற கேள்வியும் எழுந்தது. பொதுவாக இது போன்ற கடினமான தத்துவ கேள்விகளுக்கு மனதே ஒரு பதிலை ரெடியாக வைத்திருக்கும். “வாழ்க்கை என்றால் அப்படித்தான் எல்லாவற்றிற்கும் நீ பொறுப்பாளி அல்ல” என்று சொல்லும்.
ஏனோ இம்முறை அது வாயே திறக்கவில்லை.
பரீட்சைக்கு போய்விட்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் சோகமாக இருப்பேன். மத்தகம் படித்து என் மனம் வைத்த பரீட்சையில் எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை. சோகமாக இருக்கிறேனா? புரியவில்லை. கேள்விகள் சலனத்தை தந்தாலும், அது கேட்கப்பட்டதால் ஒரு இன்பம். விசித்திரமான உணர்வு.
நன்றி,
அன்னபூர்ணா
உங்களுடைய ஐந்து நெருப்பு தொகுப்பை இப்போதுதான் வாசித்தேன். அதில் உள்ள குற்றம் சம்பந்தமான கதைகள் திகைப்பை உருவாக்குகின்றன. நீங்கள் குற்றத்தின் உளவியலுக்குள் செல்லும் இந்தக் கதைகளை எழுதினீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் நான் புனைவுக்களியாட்டுக் கதைகள் அனைத்தையும் வாசித்தவன். இவற்றில் பல கதைகள் அப்போதுதான் வெளிவந்துள்ளன. ஆனால் அப்போது கவனிக்கவில்லை. ஏழாவது போன்ற ஒரு கதையை அப்போதே வாசித்தேன். ஆனால் அது ஏதோ இறையியல் நுட்பம் கொண்டது என்று அப்போது விட்டுவிட்டேன். அன்றைய பாஸிடிட்டிவ் வைப் கொண்ட நிலையில் அக்கதை நோக்கி மனம் செல்லவில்லை. இப்போது வாசிக்கும்போது அந்தக்கதை பயப்படுத்துகிறது. மனிதமனத்தின் குற்றத்தின் ஆழத்தைச் சொல்லும் அந்தக்கதைபோன்ற ஒன்றை நான் குறைவாகவே உலக இலக்கியத்திலும் வாசித்துள்ளேன்.
கி.ராஜகோபால்
அன்புள்ள நண்பர்களுக்கு,
என் படைப்புலகம் இருள்நோக்கியது அல்ல. ‘அதோமுகம்’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்கள், கீழ்நோக்கிய விசை. அது என்னிடம் இல்லை. இயல்பாகவே இல்லை, காரணம் நான் என் வாழ்க்கையின் கடுந்துயர், அலைச்சல்கள் வழியாக உருவாகி வந்தவன் என்பதே. என் ஒளியை நானே கண்டுகொண்டு அதைச்சார்ந்தே முன்னகர்ந்துள்ளேன். அந்த ஒளியையே எல்லா ஆக்கங்களும் சென்று தொடுகின்றன. சாதாரண நிலையில் வெறும் பதற்றம் மட்டுமே கொண்ட நடுத்தரவர்க்க எழுத்தாளர்களே முற்றான எதிர்மறை மனநிலை நோக்கிச் செல்வார்கள். மிக அசாதாரணமான வரலாற்றுச் சூழலில் சிக்கிக்கொண்டவர்களும் அப்படி இருட்டை நோக்கிய பார்வை கொண்டிருக்கலாம், போர் மற்றும் பேரழிவுச்சூழலில் சிக்கிக்கொண்டவர்கள் உதாரணமாக.
ஆனால் அந்த ஒளி என்பது கற்பனாவாதம் சார்ந்தது அல்ல. நான் எங்கும் கற்று ஏற்றுக்கொண்டது அல்ல. என் சுயபாவனையும் அல்ல. அப்படி இருக்கலாகாது என்பதை நான் ஒரு தன்னெறியாகவே வைத்துள்ளேன். ஆகவே எப்போதும் என் நம்பிக்கைகளை, என் பாதையை குரூரமாக மறுபரிசீலனை செய்பவனாகவே இருந்து வந்துள்ளேன். ஒருபோதும் ஒற்றைப்படையான பார்வையை நோக்கி செல்லக்கூடாது என எப்போதும் முயல்கிறேன். என் தெளிவும், ஒளியும் நான் கொள்ளும் அகப்போரின் விளைவாகத் திரள்பவையாகவே இருந்தாகவேண்டும் என நினைக்கிறேன். அப்படித்தான் எப்போதும் அவை உள்ளன.
ஆகவே எப்போதுமே இருளைநோக்கியுள்ள கதைகளும் என் படைப்புலகில் உள்ளன. அவற்றை மட்டும் எடுத்து ஒருவர் தொகுப்பார் என்றால் முற்றிலும் இருட்டை நோக்கிய பார்வைகொண்ட, சொல்லப்போனால் கொடூரமான கதைகளை மட்டுமே கொண்ட பெருந்தொகுதியை உருவாக்கமுடியும். தமிழில் எழுதப்பட்ட வலுவான எதிர்மறைக்கதைகளின் ஒரு தொகுப்பிலேயே அவைதான் பெரும்பாலான இடத்தை நிரப்பியிருக்கும். அவற்றை மட்டுமே கொண்டு என்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.
முற்றிலும் நேர்நிலைகொண்ட நூலான அறம் தொகுதியிலேயே கூட தாயார்பாதம் மிக எதிர்நிலையை சித்தரிக்கும் நாவல். அண்மையில் ஒரு வங்க வாசகர் அவர் வாசித்ததிலேயே துயரம் மிக்க கதை அது, மீட்பில்லாத துயரம் அது, ஏனென்றால் எதிர்வினைகூட இல்லாதவர் அந்த பெண் என்று எழுதியிருந்தார். ஒளியை தன்னுள் செலுத்திச்சுருட்டிக்கொள்ளும் கருந்துளை அந்த கதாபாத்திரம் என சொன்னார். அந்தக் கதைகளின் மொத்தக் கட்டுமானத்தில், தனக்கான ஒரு விகிதத்தில், அக்கதை அமைந்துள்ளது என்பதனால் அது வாசகர்களுக்கு அப்படி தெரியவில்லை.
அதேபோல என் புனைவுலகம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே இதுவரை இருந்துள்ளது. தர்க்கத்தை மீறி எழுதுபவர்களால் மட்டுமே இத்தனைபெரிய புனைவுலகை உருவாக்கவும் முடியும். அவை தன்னிச்சையான அகவெளிப்பாடுகள். ஆனால் என்னால் முடிந்தவரை தர்க்கபூர்வமாக எல்லாவற்றையும் அணுகவே எப்போதும் முயல்கிறேன். தர்க்கத்தின் உச்சியில் இருந்தே அதர்க்கம் இயல்பாக உருவாகிவரவேண்டும் என நினைக்கிறேன். வடிவத்தின் தர்க்கம், பொதுப்புத்தியின் தர்க்கம், தத்துவார்த்தமான தர்க்கம் என்னும் மூன்று எதிர்விசைகளுக்கு நிகர்நிற்கவேண்டிய ஒன்றே புனைவின் பித்துநிலை என்பதே என் புரிதல்அந்த முரணியக்கமே என் புனைவுலகின் இயல்பை உருவாக்குகிறது.
மத்தகம், ஊமைச்செந்நாய், பனி போன்ற கதைகள் அந்த முரணியக்கம் பதிவான படைப்புகள். நன்மை- தீமை என்னும் எளிமையான இரட்டைத்தன்மைகளால் அவை இயங்கவில்லை. மனம் கொள்ளும் இருநிலை, அவற்றின் முரணியக்கமே அவற்றை இயக்கும் விசையாக உள்ளது.
ஜெ
கே. நல்லதம்பி
மொழிபெயர்ப்பாளர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். மொழிபெயர்ப்பிற்கான கேந்திய சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.
கே. நல்லதம்பி – தமிழ் விக்கி
மீண்ட அமைதி
Giordano, Luca; The Devil Tempting Christ to Turn Stones into Bread; National Trust, Hatchlands; http://www.artuk.org/artworks/the-dev...
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
அன்பார்ந்த ஆசிரியருக்கு
“கடல்” படித்து முடித்ததும் எழுதுகிறேன். ஓயாத கடல் அலைகள் போல நான் சொல்ல விழைவன எல்லாம் ஆர்ப்பரித்து என்னை ஆழ்கடலின் மேல் பேரலையின் விளிம்பில் ஒரு நிமிடம் நிற்க வைத்து தூக்கி கீழே அழுத்தும் விசையை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
நீங்கள் கடல் நாவல் வெளியீடுக் குறித்து உங்கள் இணையதளத்தில் எழுதி இருந்தீர்கள். பத்தாண்டுகளுக்கு பின் வாசித்த பொழுதும் உங்களை கொந்தளிக்க செய்ததாகவும் கண்ணீருடன் அகவிம்மலுடன் நீங்கள் தத்தளித்த தருணங்கள் என்று எழுதி இருந்தீர்கள். சாதாரணமாக இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி உங்கள் படைப்பினைப் பற்றி நீங்கள் எழுதும் வழக்கம் இல்லாத பொழுது இந்த பகிர்தல் வியப்பூட்டியது . உடனே கடல் நூலை வாங்கி படித்துவிட்டு எழுதுகிறேன். பல இடங்களில் நீங்கள் கூறி இருந்தது போல் படிக்க முடியாதபடி கண்ணீர் மறைத்தது. மனதில் படிந்தது முதலில் சோகம் பின் அமைதி. மற்றவர்களைப் போல் இலக்கியத்தை மட்டும் வியந்து நான் எழுத முடியவில்லை. என்னை தாக்கிய உணர்வுகளை எழுத முயல்கிறேன்.
நான் உங்களது அணுக்க வாசகியானது “சிலுவையின் பெயரால்” நூல் வழியாக. முதல் பதிப்பின் முன்னுரையில் எழுதி இருப்பீர்கள். “கிறிஸ்துவின் சொற்களை அந்தரங்கத்தில் உணர்ந்திருக்கிறேன். கருணையை மட்டும்செய்தியாகிக் கொண்ட மாபெரும் ஞான குருவை நான் காண்கிறேன். என்னுடைய கிறிஸ்து மதங்களால் எனக்கு அளிக்கப்பட்டவர் அல்ல.” நான் நினைவுகளில் கூட கோர்வையாக சிந்திக்காது ஆனால் என்னுள் எழும் எண்ண ஓட்டங்களை கூறும் உண்மை வாக்கு அது. தனியாக உழன்ற குழந்தைப் பருவத்தில் யாருமே என்னை நேசிக்கவில்லை, யாருக்குமே நான் பொருட்டு இல்லை, மென்டல்லி ரிட்டார்டு(mentally retrded) ஸ்டுப்பிட் பர்சன்(stupid person) என்று சொல்லப்பட்டு சிறுவயதில் குமறி குமறி தனியாக அழும்பொழுது கர்த்தரைக் காண்பித்துக் கொடுத்தார் எஸ்தர் டீச்சர். ஊரும் நாடும் எதுவாக இருந்தாலும் பேராலயங்களில் நான் கண்டது, ” நான் இருக்கேன் ” என்று தோளை தடவும் முள் கிரீடம் அணிந்த தேவதூதன்தான். கடல் படிக்கும் பொழுது அவன் தரிசனம் ஒளிர்ந்தது என் மனதில்.
தற்பெருமை பேசுவதாக இருந்தாலும் ஒரு சின்ன நிகழ்வு. என் வாழ்க்கையில். இங்கிலாந்தில் உள்ள ஜான் இன்னெஸ் என்னும் நிலையத்தில் ஆராய்ச்சி செய்த பொழுது, ஒரு கடினமான கேள்விக்கு நுழைவுவாசலாக என் பரிசோதனை முடிவு அமைந்த பொழுது பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடினர். என்னுடைய வழிநடத்தும் முனைவர் யாரை நினைத்துக் கொண்டீர்கள் என்று வேடிக்கையாக கேட்டார். ஏதோ இறைவன் பெயரையோ அல்லது அம்மா அப்பாவையோ சொல்வேன் என்று எதிர்பார்த்திருப்பார். நான் மூணாங்கிளாஸ் எஸ்தர் டீச்சர் என்று சொல்லி விம்மி அழுதேன். ” இப்படி இருக்கியே பாப்பா. ஒரு மனக்கணக்கு புரியாமல் முழிக்கிறியே நாளைக்கு என்ன செய்வாயோ,” என்று கண்ணீர் மல்க சிலுவைக் குறியிட்டு ஜெபிக்கும் எஸ்தர் டீச்சர். ‘நிஜமாகவே நான் வளர்ந்து விட்டேன்,” என்று வான்வரை கூவி இறைவனுக்கு நன்றி கூறிய தருணம். உங்கள் சாம் போல் எத்தனை பேருக்காக எஸ்தர் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்.
திருவனந்தபுரத்தில் வேட்டுக்காடு ஆலயத்திற்கு போய் இருக்கிறீர்களா? இன்று இணையத்தில் கண்ட பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 1977-78ல் நான் செல்லும் பொழுது வெறும் வெட்டவெளி. பெரிய ஆலமரம். அந்த மணல் வெளியில் நம்பிக்கையுடன் நோயாளிகள். கிறிஸ்துராஜாவின் கம்பீரமான சிலை. ஒரு பெரிய சிலுவையை தூக்கிக்கொண்டு, ” யேசுவே யேசுவே சரியான பாதையை காட்டுங்கள்” என்று மனதில் எஸ்தர் டீச்சர் தந்த கனிவையும்ம் கிறிஸ்துராஜன் கருணையையும் உள்வாங்க முடிந்தது. வர்ணங்கள் உரிந்து கொண்டிருந்த சிலை.விண்ணுலகத்தில் இருந்து நமக்காக எழுந்த தேவன் என்று நம்ப வைக்கும் நெகிழ்வுகள். கதையில் இறக்கவிருக்கும் குழந்தையை காப்பாற்றும் இடத்தைப் படிக்கும் பொழுது நம்பிக்கையோடு அங்கே மண்ணில் கிடக்கும் நோயாளிகளின் நினைவு வந்தது
இந்தக் கட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஆனால் திறமையுடன் கையாண்டிருப்பீர்கள். ட்ரான்ஸ் படத்தில் இது போல் ஒரு சம்பவத்தை காட்சிப்படுத்திருப்பார்கள்.அற்புதம் வேண்டும் விசுவாசிகளுக்கு சவாலாக அமையும். அதில் குழந்தை பிழைக்காது .ஆனால் உங்கள் கதையில் அற்புதம் நிகழ்கிறது. அற்புதம் என்று கருத வேண்டாம் என்று உடலியல் காரணம் காட்டினாலும், மின்னல் வந்ததும் ஒரு அற்புதம் தானே . இதன் ஓட்டத்திலேயே இந்த நிகழ்ச்சியை பொறாமையினால் கொச்சைப்படுத்தலும் நடக்கிறது என்று ஒரு கோடி காட்டுகிறீர்கள் .இப்படி வித விதமாக கொண்டு போக வேண்டும் என்று யோசித்து எழுதுவீர்களா? அல்லது அது எழுதும் பொழுதே தன்னால் நடப்பதா?
நாகர்கோயில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள எல்லா தேவாலயங்களின் பின்புறம், நிரம்பி இருக்கும் கீச்சான்களின் சிரிப்பு, விளையாட்டு, வயதுக்கு மீறிய தெனாவட்டு பேச்சு,அளவில் பொருந்தாத தொள தொள அழுக்குச்சட்டை, பசி, அவமானம் வன்புணர்வு- நான் கண்டு மருகிய சமூகத்தை இந்நாவலின் முதல் அத்தியாயங்களில் படிக்கும் பொழுது மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த கையறு நிலையில் உயிரின் ஆழித்துடிப்பு ஒன்றுதான், இறப்பின் விளிம்பு வரை வந்து தோமாவை காக்கிறது . இந்த கீச்சான்களுக்கு நான் என்ன செய்ய முடியும், அவ்வப்பொழுது அளிக்கும் பொருள் உதவி அல்லாது நான் என்ன செய்ய முடியும் என்கிற அயர்ச்சியில் இருந்து விடுவித்தன உங்கள் சொற்கள் . நம்பி வேண்டுவதுதான். கீச்சான்களை கிரிமினல் ஆக்குவதை தடுங்கள் கடவுளே என்று காலை பிடித்து வேண்டிக் கொள்ளும் விசுவாசியாக ஆவதுதான் ஒரே வழி அமைதி பெற. .
நாவலை படிக்கும் பொழுது கடற்கரையிலே இருந்தது போல உணர்வு. அலைகளின் ஆர்ப்பரிப்பு, கரையை வந்து தொட்ட பிறகு சத்தமே இல்லாமல் மண்ணை எடுத்துக் கொண்டு பின்வாங்கும் கடல். படிக்கும் பொழுது செம்மீன் திரைப்படத்தின் ” மானச மைனே வரு” இசைத்துக் கொண்டே இருந்தது. மறக்க முடியாத வர்ணனைகள்.’ பிரம்மாண்டமான வலுக்கன் யானை மத்தகம் போல எழுந்தது” என்ன சித்திரம்! ஒரு நிமிடம் நானும் அந்த வலுக்கன் அலையில் ஏறி ஏழு கடலையும் கண்ட உணர்வு. வானம் முழுக்க நட்சத்திரங்கள் விரிவதையும், நூறாயிரம் மீனின் கண்களைப் போல அவை மினுங்குவதையும் படிக்கும் பொழுது Yenn Martel அவர்களுடைய Life of Pi நினைவு வராமல் போனால் அதிசயம்தான் .
புத்தகம் முடித்துவிட்டு நான் விசுவாசியா அவிசுவாசியா என்று ஆழ்மனதை தோண்டி பார்த்தேன்.சாமும் பெர்கமான்ஸும் ஒருவரின் இரு வடிவங்கள் தானே. நாம் எல்லோருமே இந்த இருநிலையிலூசலாடி கொண்டிருக்கிறோமா?. நாவலில் சாம் சொல்வதாக நீங்களே அதற்கு விடையை காட்டுகிறீர்கள். சாம் பெர்கமானிடம் சொல்கிறார் , “ .உங்களுக்குள்ளே ஆழத்திலே ஒரு கேலி சிரிப்பு இருக்கிறது அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு மீட்பு இல்லை. ஆனால் அவனுக்குள்ள அடியாழத்தில் இருக்கிறது ஓர் அழுகை. அது அவனை வெளியே கொண்டு வரும்.” துல்லியமாக இப்படி உங்களால்தான் எழுத முடியும். படித்தவுடன் தோன்றியது என் மனதில் எந்த கேலி சிரிப்பும் இல்லை ,நான் விசுவாசிதான் என்று. அப்படி தெள்ளத்தெளிவாக எழுதிய நீங்கள் அவிசுவாசியை கடத்தல்காரனாக காட்ட வேண்டிய தேவை என்ன என்று ஒருநெருடல். வேறொரு கோணத்திலும் இந்த உள்ள போராட்டத்தை எழுதி இருக்க முடியும் என்று தோன்றியது.
கடல் திரைப்படத்தை முன்பு நான் பார்த்ததில்லை. நாவலைப் படித்த பிறகு உடனே பார்த்தேன் நீங்கள் முன்னுரையில் கூறியிருந்தது போல திரைக் காட்சிகளாக ஒரு உளப் போராட்டத்தை காண்பிப்பது கடினம் சில காட்சிகள் உள்ளத்தை தொட்டன. குழந்தை பிறப்பு காட்சியில் இயேசுவே மீண்டும் கண்ட மகிழ்ச்சி பாடல் பின்னணியோடு வந்த காட்சி பேராலயத்தில் நின்று வணங்கும் உணர்வைத் தந்தது
ஏதோ சில காரணங்களால் அவிசுவாசியாக மரத்து கொண்டு இருந்த என்னை மீட்டெடுத்த இந்த நாவலுக்காக நன்றி
மதன் கார்க்கியின் வரிகளுடன்.
” கண்ணீரைத் தேக்கும் என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால் பூப்பூத்திடாதோ?
எமை நாளும் ஆளும் உருவை…
பூவின் மேலே வண்ணம் நீ தானே
வேரின் கீழே ஜீவன் நீதானே
நீயே எமதன்னமாக…
அன்பின் வாசலே “
என்னும் நம்பிக்கையுடன்
மாலதி கோவை
21-07-25
ஆசாரவாதம் என்னும் வைரஸ்
ஆசாரவாதத்தை முற்றாகத் தவிர்த்து தனக்கென ஞானம் சார்ந்த ஒரு பயணத்தை வைக்காதவர் தத்துவம் அல்லது தரிசனம் பற்றி எந்த உரையாடலை நிகழ்த்துவதற்கான எந்த தகுதியும் அற்றவர் என்றுதான் எப்போதும் எனக்கே ஆணையிட்டு சொல்லிக்கொள்கிறேன்.
Yes, we know life has many problems and toiling. But still we are living; no one is committing suicide. So we have some hope and dreams in life always with us. I want to read works balanced with that positive element.
Realism and hopeJuly 23, 2025
கடல், அகக்கடல்
அன்புள்ள ஜெ,
கடல் நாவல் முக்கால்வாசி படித்துவிட்டேன். முழுக்கப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று இருந்தேன். ஆனால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது தஞ்சையில் வேளாங்கண்ணி அருகே ஒரு சிறிய ஊரில். கடலோரம் நன்கு அறிமுகம்தான். கிறிஸ்தவப் பள்ளியில்தான் படித்தேன். கிறிஸ்தவம் மேல் ஈடுபாடும் உண்டு. ஆகவே இந்நாவலை உடனே வாங்கினேன். வாங்கியதுமே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
என் ஆன்மாவை இதுபோல கொந்தளிக்கவைத்த நாவல் என்றால் டாஸ்டாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்தான். இந்நாவலில் உள்ள அந்த துன்பமும் அதிலிருந்து மீட்சி அடையும் தருணங்களும் மிகமிக ஆழமானவை. அவற்றை வாசிக்கையில் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. அறைக்குள் இருந்தும் வாசிக்கமுடியவில்லை. பெங்களூரில் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து வாசித்தேன். ஒரு கட்டத்தில் தனிமையில் அமர்ந்தும் வாசிக்க முடியவில்லை. ஆகவே காபி ஹஃவுஸ்களில் அமர்ந்து வாசித்தேன். எவரிடமாவது பேசியாகவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்நாவலைப் பற்றிப் பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள், இலக்கியம் அறிந்தவர்கள் எவருமில்லை. ஆகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
துன்பங்கள், கைவிடப்படுதல் ஆகியவற்றின் உச்சங்கள் உள்ளன இந்நாவலில். அதிலிருந்து அப்படியே குற்றங்களின் மறு எல்லை. குற்றங்களில் ஈடுபடும் உள்ளம் மனிதர்களை வேவுபார்த்துக்கொண்டே இருக்கிறது. அதிலுள்ள அந்த மூர்க்கமும் தீவிரமும் இன்னொரு பக்கம் என்னை பதறச்செய்தன. மூழ்கிச் சாகப்போகிறவன் கைக்குச் சிக்குவதைப் பிடிப்பதுபோல தாமஸின் தவிப்பை உணரமுடிந்தது. இந்நாவலில் உள்ள எந்த அனுபவமும் என்னுடையவை அல்ல. நான் சொகுசாகவே வாழ்ந்தவன், வாழ்பவன். ஆனால் இது என் ஆன்மாவின் கதை என்றும் தோன்றியது.
இந்நாவலை ஒரு சினிமாவுக்காக எப்படி எழுதினீர்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் ஒரு பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படத்துக்காக இப்படி ஒரு கதையை எழுதியது என்பது மிகப்பெரிய அத்துமீறல். இதிலுள்ளது ஓர் ஆத்மாவின் கதறல். இன்னொரு ஆத்மாவின் முடிவற்ற பிரார்த்தனை. அந்த இரண்டு குரல்களும் இணைந்து உருவாகும் ஒரு அற்புதமான காஸ்பல் இசை. அதை எப்படி சினிமாவில் கொண்டு வர முடியும். இது ஒரு பெரிய முழக்கம் போல ஒலிக்கிறது. ஒரு பெரிய சர்ச்சில் ஆர்கன் முழங்குவதுபோல. நாவல் முழுக்க அந்த கதறலும் பிரார்த்தனையும் வார்த்தைகளாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மகத்தான விஷுவல்கள் உள்ளன. ஆனால் இது மொழிக்கலை. இதை சினிமாவாக எழுதலாம் என எப்படி முடிவெடுத்தீர்கள்?
அதைவிட, உங்கள் படைப்புகளிலேயே நான் மகத்தானது என்று கருதும் இப்படைப்பை எப்படி ஏறத்தாழ பத்தாண்டுகள் அப்படியே விட்டுவிட்டீர்கள்? பிரசுரிக்க நினைக்கவே இல்லை. இது மின்னஞ்சலில் இருந்தமையால் கண்டுபிடித்து வெளியிடுவதாகச் சொன்னீர்கள். அதாவது உங்களிடம் பிரதிகூட இருக்கவில்லை. அது அழிந்துவிட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நினைக்கவே பதற்றமாக இருக்கிறது. ஏன் அந்த அலட்சியம்? இதை நீங்கள் பொருட்படுத்தவே இல்லையா?
கண்ணன் பார்த்தசாரதி
அன்புள்ள கண்ணன்,
ஒரு நாவலை நான் எழுத முடிவெடுப்பதில்லை – எழுத ஆரம்பித்துவிடுகிறேன். அதற்கு ஏதாவது ஒரு காரணம் அமைந்துவிடுகிறது. பல சமயம் காற்று வந்து மரத்தை உலுக்குவதுபோல. இந்நாவலை எழுதுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட இந்த நாவலை எழுதும் எண்ணமே என்னிடமிருக்கவில்லை. ஆனால் பல நாட்களாக ஐரோப்பிய ஓவியங்களை கேட்டுக்கொண்டும், காஸ்பல் இசை கேட்டுக்கொண்டும் இருந்தேன். இந்நாவலுக்கு அடிப்படையான அந்த நிகழ்வு, அந்த டேப்ரிகார்டர் காட்சி, நினைவில் எழுந்தது. தாமஸை பார்த்துவிட்டேன், எழுத ஆரம்பித்தேன்.
எழுதத் தொடங்கியபோது இந்நாவாலை எப்படி சினிமாவாக ஆக்குவது என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் எதையும் எண்ணிப்பார்க்கவில்லை. என் எண்ணமெல்லாம் இந்நாவல் உருவாக்கும் அகநெருக்கடிகளின் அடுத்தடுத்த கணங்களாகவே இருந்தது. எழுதியதுமே நான் அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டேன், வழக்கம்போல. பொருட்படுத்தாமல் இல்லை, எழுதுவதுடன் என் ஆர்வம் முடிந்துவிடுகிறது, நான் என் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டுவிட்டேன். இதை வெளியிடும் எண்ணம் இருக்கவில்லை. சொல்லப்போனால் மறந்தே விட்டேன். மின்னஞ்சலில் தற்செயலாக கிடைத்தது. முழுமையாக இருந்தது. ஆகவே நூலாக்கலாம் என்று தோன்றியது.
சினிமாவாக இது எப்படி நிகழமுடியும் என்று கேட்டீர்கள். இதிலுள்ள முதன்மைப்புள்ளிகள் என சிலவற்றைச் சொல்லலாம். ஒன்று, தாமஸின் அன்னை சாகும் இடம். இரண்டு, அவன் தன் தந்தையை தேடிச்செல்வது. மூன்று, அவனை சாம் கண்டடைவது, நான்கு அந்த இரண்டு தேவாலயக் காட்சிகள், ஐந்து தாமஸ் பியாவிடம் பாவமன்னிப்பு கோருமிடம். எண்ணிப்பாருங்கள், இந்த இடங்கள் எல்லாமே நாவலில் இருக்கும் அதே வீச்சுடன், ஆனால் முழுக்கமுழுக்க காட்சிவடிவமாக சினிமாவில் இருந்தன இல்லையா? அதிலுள்ள ‘எல்லா’ உணர்ச்சிகளும் திரையில் இல்லை. அது சாத்தியமும் இல்லை. சினிமா மினிமலிஸ்ட் கலை. காட்சிக் கலை. காட்சியாக அது அந்த உணர்வுகளை வலுவாகவே நிறுவியது என நினைக்கிறேன்.
கடல் சினிமாவின் பிரச்சினை அது மிகச்சுருக்கமாக ஆகிவிட்டது என்பதே. அந்தப்பாடல்களை முழுமையாக உள்ளே கொண்டுவந்தமையால் கதைக்கான நேரம் மிகக்குறைவாக ஆகிவிட்டது. ஆகவே கடல் உருவாக்கிய நீண்டகாலம், அகன்ற வாழ்க்கைச்சித்திரங்கள் படத்தில் வெட்டிச்சுருக்கப்பட்டு அது தாவிச்செல்லுவதாக ஆகிவிட்டது. உதாரணமாக செலினா சம்பந்தமான காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தன, அவை சினிமாவில் இல்லை. அது நம் சினிமாவுக்குரிய சிக்கல். ஆனால் அந்நாவலை சினிமாவாக கனவுகாணமுடிந்ததே ஒரு சாதனைதான். இந்நாவல் உருவாக்கும் தொடர்ச்சியை கண்டபின் சினிமாவை இன்னொருமுறை பாருங்கள். அது விரியத்தொடங்கும்.
ஜெ
குறிஞ்சி பிரபா
தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், உதவி இயக்குனர்.குறிஞ்சி பிரபா ‘பிசாசு 2’ படத்தில் மிஷ்கினுடன் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். தெகிடி, சரபம், கூட்டாளி, ஸ்டார் ஆகிய படங்களில் பாடலாசிரியராக இருந்தார். யாழினி சேனல், கண்மணி தொலைக்காட்சித் தொடருக்கான பாடல்களின் ஆசிரியர்.
குறிஞ்சி பிரபா – தமிழ் விக்கி
சு.ரா – கடிதம்
அன்புள்ள ஜெ,
20 ஆண்டுகளுக்கு முன், 2005-ல் சுரா இறந்தபோது உங்களின் நினைவின் நதியை படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வுகளை, இன்று ”ஓர் ஒளிர்விண்மீன்” படித்தபோதும் உணர்ந்தேன். கண்களில் நீர் தளும்பிக்கொண்டே இருந்தது.
1998-ல், காஞ்சீபுரம் இலக்கிய வட்ட நிகழ்வு ஒன்றில் சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தேன். அப்போதே அவரது காற்றில் கலந்த பேரோசை, விரிவும், ஆழமும் தேடி, புளிய மரத்தின் கதை போன்ற நூல்கள் எனக்கு பைபிள்களாக இருந்தன. அடுத்த மாதம் நம் நிகழுவுக்கு சுரா வருகிறார் என்று அப்பா இலக்கிய வட்டம் நாராயணன் சொல்லியதிலிருந்து இனம்புரியாத மகிழ்ச்சியிலிருந்தேன். அவரை முதன்முதலாக சந்தித்த தருணத்தை நினைவு கூர்கிறேன். அன்று அவரை காஞ்சீபுர இலக்கியவட்ட நண்பர்கள் அமுதகீதன், தரும இரத்தினகுமார் ஆகீயோர் காலச்சுவட்டில் அப்போது வந்துகொண்டிருந்த தினமலர் விளம்பரங்களை வைத்து சாதிய + வணிக நோக்க எண்ணம் கொண்டவர் என்று தீவிரமாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் அக்கூட்டங்களில் கலந்துகொண்ட காலங்களில் பிற எழுத்தாளர்கள் எவரையும் விட (சாரு நிவேதிதா உட்பட) அவர் மீது வன்மம் கொண்டு தாக்கியதாகவே உணர்ந்தேன். அதை அப்பா காஞ்சிபுரம் நாராயணன் அவர்களிடம் பகிரவும் செய்தேன்.
ஆனால், சுரா அவரது உரையில் இவை எவற்றையும் பொருட்படுத்தி பதில் சொல்லவேயில்லை. அவருக்கும், காஞ்சிபுரத்திற்கும் உள்ள உறவை, ஒரு வணிகராக அவர் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிய காலங்களை நினைவு கூர்ந்து சிலவற்றை கூறினார். அவர்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கு அவர் அங்கேயே பதிலுரைத்திருக்கவேண்டும் என்று அந்த இளம் வயதில் எனக்கு தோன்றியது. அவரை மதிய உணவு இடைவேளையில் பூக்கடை சத்திர PTVS வன்னியர் உயர் நிலைப்பள்ளி (அப்போது பெரும்பாலான இலக்கியவட்ட கூட்டங்கள் அங்குதான் நடக்கும்) பெஞ்ச் ஒன்றில் தனியாக அமர்ந்திருக்கும்போது தயங்கித்தயங்கி சந்தித்தேன். விரிவும் ஆழமும் தேடி நூலட்டையில் ஓவியர் ஆதிமூலம் வரைந்திருந்த தாடி வைத்த கோட்டோவியம் சுரா தான் என்பதை ஊகித்திருந்தேன். ஆனால் அன்று அவர் மழித்த முகத்துடன் வந்திருந்தார், அதனால் சற்று துணுக்குறல் ஏற்பட்டது. அவரிடம் என்ன பேசினேன் என்று ஞாபகமில்லை. ஏனெனில், நான் பேசியது ஓரிரு வார்த்தைகளுக்குள்தானிருக்கும். ஆனால், அவரிடம் அவரது காற்றில் கலந்த பேரோசை நூலில் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதற்கு முன்புவரை அவரிடம் கையெழுத்து வாங்கலாமா, வேண்டாமா என்று ஒரு பெரும் விவாதம் என்னுள் நடந்துகொண்டிருந்தது (அப்போதைய ”பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே” – மனநிலை). பின்னர் என். ராம், புக்கர் பரிசுபெற்ற அருந்ததி ராயிடம் வரிசையில் நின்று கையெழுத்து வாங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு ஒருவாறாக என்னை சமாதானம் செய்துகொண்டு சுராவிடம் கையெழுத்து வாங்கினேன்.
பின்னர் ஒருமுறை 2003-ல் நாகர்கோவில் சென்று அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். மூன்று மணி நேரங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்; தவறு நான் அவரிடம் என்னவெல்லாமோ (தமிழ் படங்களில் தமிழ் கலாச்சாரம் இல்லை – தேவர் மகன் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் – நீங்கள் கமல்ஹாசனை சந்தித்தது உண்மையா என்ற ரீதியில்…) பேசிக்கொண்டிருந்தேன். அன்று நான் பணகுடி திரும்பும்வரை என் வாழ்நாழிலேயே அதுவரை இல்லாத மகிழ்ச்சியுடனிருந்தேன். வீட்டிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்ததும் அப்படி என்னதான் அவ்வளவு நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என்று சற்று எரிச்சலுடன் அப்பா கேட்டதும் ஞாபகமிருக்கிறது. ஆனால், நினைவின் நதியில் படித்தபின்பு, அது சுராவின் உயரிய குணங்களில் ஒன்றான கணவான் தன்மை என்று புரிந்தபின்பு, நான் ஒரு சாமானியன் என்று உணர்ந்ததும் சற்று துணுக்குற்றேன்.
அவரையும், கமல் ஹாசனையும் 2004’ல் நடக்கவிருந்த எனது திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். வருகிறேன் என்று சொன்னார். ஆனால் எங்களது திருமணத்தின்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். பின்னர் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் அவரிடம் பவானியை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போதே என்னிடம் ஒரு கையடக்க டிஜிட்டல் கேமரா இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொள்வாரோ என்ற தயக்கத்தால் அவரிடம் கேட்காமலேயே வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது சில மாதங்களில் அவர் மறைந்தபின்புதான் எனக்கு உரைத்தது. சலபதி இறுதி அஞ்சலிக்கு நாகர்கோவில் வருகிறீர்களா என அழைத்தார். நான் எனது அப்பா என்ன சொல்வாரோ என்ற தயக்கத்தால் போகவில்லை. என் அப்பா, சுராவின் (குழைந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு முந்தைய) ”எஸ் ஆர் எஸ்” ஸே தான்.
நினைவின் நதியில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கிளிஷே). ஆனால் அப்போதைய ’பதிவர்கள் உலகில்’ உங்களை சுராவின் சாவில் புகழ் வெளிச்சம் தேடுபவராகவே பலரும் அவதூறு செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் புத்தகம் என்னைப் பொறுத்த அளவில் அப்போதைய உங்களின் நூல்களில் உச்சம். அதன் முன்னுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் – ”இது நானறிந்த சுந்தர ராமசாமி, வேறு பல சுந்தர ராமசாமிக்கள் இருக்கலாம்” (என் நினைவில் இருந்து எழுதுகிறேன்).
சுந்தர ராமசாமியை நான் இன்னும் அணுக்கமாக உணர்ந்தது அந்தப் புத்தகத்தினால் தான். அதில் வரும் சில வரிகள் நானும் அப்படித்தானே என உணர்ந்த இடங்கள் – உதாரணமாக அசம்பு ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்க சுரா பேரம் பேசும் இடம். கூடைக்காரிகள் குறித்த அவரது அவதானிப்பு, சுதர்சன் ஜவுளிக்கடையில் சேலை வாங்கவரும் அடித்தளத்திலிருந்து அப்போதுதான் மேலேறி வந்துகொண்டிருக்கும் மக்களின்மேல் அவருக்கிருந்த பெருமிதம் என்று அதில் விவரிக்கப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் எனை அவர்பால் மேலும் ஈர்த்தன. உண்மையிலேயே அவரை அணுகியறிந்து, அவர்மேல் பெருங்காதல் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுதமுடியும் என்பதை உணர்ந்து உங்கள் மேல் நான் மேலும் ஈர்க்கப்பட்டேன். அந்தப்புத்தகம் உங்களையும் நான் மேலும் புரிந்துகொள்ள எனக்கு திருப்புமுனையாக இருந்திருக்கலாம் என இப்போது இதை எழுதும்போது உணர்கிறேன். (ஆம் நீங்கள் சுரா மரணத்தினால் ஆதாயம் அடைந்திருக்கிறீர்கள், ஹிஹி… – இதை எழுதும்போது இன்றைய செயற்கை நுண்ணறிவு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளுமோ என்ற எண்ணமும் மேலெழுகிறது).
காந்தி குறித்த அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் கவித்துவத்தின் உச்சம். இவ்வாறு பல தருணங்கள் நினைவில் நதியிலுண்டு. ஒருமுறை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து யுவனும் நினைவின் நதியில் தனக்கு பிடித்திருந்தது என்று சொன்னார். உண்மையில் சுரா இறந்தபின்பு அவர் குடும்பத்தினர் வெளியிட்ட நினைவுகூறல் புத்தகத்தைவிட நினைவின் நதியில் மூலம்தான் நான் சுராவை ஒரு சாமானியனாக, எழுத்தாளானாக, சிந்தைனையாளராக முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. அவரை இன்னும் காதலிக்க வைக்கவைத்தது. இன்று அது நிறுவவும்பட்டிருக்கிறது.
விஷ்ணுபுரம் வெளியீடாக வரும் நினைவின் நதியில் நூலை உங்கள் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
சுரா நினைவின் நதியில் மறுபதிப்பு வெளிவந்த நாட்களில் ஒருமுறை இணையத்தில் சுந்தரசாமியுடன் ‘ஒட்டிக்கொண்டு’ நான் புகழ்பெற நினைத்து எழுதிய நூல் அது என்னும் வசையை ஒருவர் எழுதியிருந்தார். அரங்கசாமி அதைப்பற்றிப் பேசும்போது சொன்னார். ‘சுராவோட இணைந்து உங்களுக்கு புகழோ அடையாளமோ வரவேண்டியதில்லைன்னு தெரியாத ஒருவர் இலக்கியவாசகரே அல்ல, அவர் என்ன நினைச்சா என்ன?’.
ஓர் எழுத்தாளரைப் பற்றிய நினைவை எழுத ஒருவகையான உணர்ச்சிவேகம் தேவை. அவருடன் இருக்கையில் அவரை பெருங்காதலுடன் தொடர்ச்சியாகக் கவனிப்பது அந்த உணர்ச்சிகரத்தால்தான். பின்னர் நினைவுகூர்வதும் அதனால்தான். சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்ட பல அஞ்சலிகளைக் கண்டபோது அவர்களின் வாழ்க்கையில் அவரும் ஒருவர் என்பதற்கப்பால் எந்த இடமும் அவர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று தெரிந்தது.
எனக்கு அப்படி அல்ல. அன்றுமின்றும் அவர்மேல் இருப்பது ஒரு கொந்தளிப்பான உணர்வுநிலைதான். அதே உணர்வுநிலைதான் வயக்கவீட்டு பாகுலேயன்பிள்ளை பற்றியும் உள்ளது. அன்பும், அன்பின் விளைவான தீவிரமான கோபங்களும், அணுக்கமும் விலக்கமும் எல்லாம் கலந்த ஒன்று.
சு.ரா மறைந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டிருக்கிறது. நான் இன்றும் எல்லா உரையாடல்களிலும் ஏற்றோ மறுத்தோ அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் தோன்றாத தனிப்பட்ட உரையாடல்களே இல்லை. ‘இப்ப நீங்க மட்டும்தான் அவரைப் பத்தி ஓயாம பேசிட்டிருக்கீங்க’ என்று அண்மையில் அரங்கசாமி சொன்னார். ‘அவர் என் சொற்களில் மட்டும்தான் சிரஞ்சீவியாக இருக்கமுடியும்’ என்று நான் சொன்னேன். ‘காலந்தோறும் அப்டித்தான் வழக்கம்’
ஜெ
சு.ரா. நினைவின் நதியில் வாங்கசு.ரா- கடிதம்
அன்புள்ள ஜெ,
20 ஆண்டுகளுக்கு முன், 2005-ல் சுரா இறந்தபோது உங்களின் நினைவின் நதியை படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வுகளை, இன்று ”ஓர் ஒளிர்விண்மீன்” படித்தபோதும் உணர்ந்தேன். கண்களில் நீர் தளும்பிக்கொண்டே இருந்தது.
1998-ல், காஞ்சீபுரம் இலக்கிய வட்ட நிகழ்வு ஒன்றில் சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தேன். அப்போதே அவரது காற்றில் கலந்த பேரோசை, விரிவும், ஆழமும் தேடி, புளிய மரத்தின் கதை போன்ற நூல்கள் எனக்கு பைபிள்களாக இருந்தன. அடுத்த மாதம் நம் நிகழுவுக்கு சுரா வருகிறார் என்று அப்பா இலக்கிய வட்டம் நாராயணன் சொல்லியதிலிருந்து இனம்புரியாத மகிழ்ச்சியிலிருந்தேன். அவரை முதன்முதலாக சந்தித்த தருணத்தை நினைவு கூர்கிறேன். அன்று அவரை காஞ்சீபுர இலக்கியவட்ட நண்பர்கள் அமுதகீதன், தரும இரத்தினகுமார் ஆகீயோர் காலச்சுவட்டில் அப்போது வந்துகொண்டிருந்த தினமலர் விளம்பரங்களை வைத்து சாதிய + வணிக நோக்க எண்ணம் கொண்டவர் என்று தீவிரமாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் அக்கூட்டங்களில் கலந்துகொண்ட காலங்களில் பிற எழுத்தாளர்கள் எவரையும் விட (சாரு நிவேதிதா உட்பட) அவர் மீது வன்மம் கொண்டு தாக்கியதாகவே உணர்ந்தேன். அதை அப்பா காஞ்சிபுரம் நாராயணன் அவர்களிடம் பகிரவும் செய்தேன்.
ஆனால், சுரா அவரது உரையில் இவை எவற்றையும் பொருட்படுத்தி பதில் சொல்லவேயில்லை. அவருக்கும், காஞ்சிபுரத்திற்கும் உள்ள உறவை, ஒரு வணிகராக அவர் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிய காலங்களை நினைவு கூர்ந்து சிலவற்றை கூறினார். அவர்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கு அவர் அங்கேயே பதிலுரைத்திருக்கவேண்டும் என்று அந்த இளம் வயதில் எனக்கு தோன்றியது. அவரை மதிய உணவு இடைவேளையில் பூக்கடை சத்திர PTVS வன்னியர் உயர் நிலைப்பள்ளி (அப்போது பெரும்பாலான இலக்கியவட்ட கூட்டங்கள் அங்குதான் நடக்கும்) பெஞ்ச் ஒன்றில் தனியாக அமர்ந்திருக்கும்போது தயங்கித்தயங்கி சந்தித்தேன். விரிவும் ஆழமும் தேடி நூலட்டையில் ஓவியர் ஆதிமூலம் வரைந்திருந்த தாடி வைத்த கோட்டோவியம் சுரா தான் என்பதை ஊகித்திருந்தேன். ஆனால் அன்று அவர் மழித்த முகத்துடன் வந்திருந்தார், அதனால் சற்று துணுக்குறல் ஏற்பட்டது. அவரிடம் என்ன பேசினேன் என்று ஞாபகமில்லை. ஏனெனில், நான் பேசியது ஓரிரு வார்த்தைகளுக்குள்தானிருக்கும். ஆனால், அவரிடம் அவரது காற்றில் கலந்த பேரோசை நூலில் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதற்கு முன்புவரை அவரிடம் கையெழுத்து வாங்கலாமா, வேண்டாமா என்று ஒரு பெரும் விவாதம் என்னுள் நடந்துகொண்டிருந்தது (அப்போதைய ”பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே” – மனநிலை). பின்னர் என். ராம், புக்கர் பரிசுபெற்ற அருந்ததி ராயிடம் வரிசையில் நின்று கையெழுத்து வாங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு ஒருவாறாக என்னை சமாதானம் செய்துகொண்டு சுராவிடம் கையெழுத்து வாங்கினேன்.
பின்னர் ஒருமுறை 2003-ல் நாகர்கோவில் சென்று அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். மூன்று மணி நேரங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்; தவறு நான் அவரிடம் என்னவெல்லாமோ (தமிழ் படங்களில் தமிழ் கலாச்சாரம் இல்லை – தேவர் மகன் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் – நீங்கள் கமல்ஹாசனை சந்தித்தது உண்மையா என்ற ரீதியில்…) பேசிக்கொண்டிருந்தேன். அன்று நான் பணகுடி திரும்பும்வரை என் வாழ்நாழிலேயே அதுவரை இல்லாத மகிழ்ச்சியுடனிருந்தேன். வீட்டிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்ததும் அப்படி என்னதான் அவ்வளவு நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என்று சற்று எரிச்சலுடன் அப்பா கேட்டதும் ஞாபகமிருக்கிறது. ஆனால், நினைவின் நதியில் படித்தபின்பு, அது சுராவின் உயரிய குணங்களில் ஒன்றான கணவான் தன்மை என்று புரிந்தபின்பு, நான் ஒரு சாமானியன் என்று உணர்ந்ததும் சற்று துணுக்குற்றேன்.
அவரையும், கமல் ஹாசனையும் 2004’ல் நடக்கவிருந்த எனது திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். வருகிறேன் என்று சொன்னார். ஆனால் எங்களது திருமணத்தின்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். பின்னர் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் அவரிடம் பவானியை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போதே என்னிடம் ஒரு கையடக்க டிஜிட்டல் கேமரா இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொள்வாரோ என்ற தயக்கத்தால் அவரிடம் கேட்காமலேயே வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது சில மாதங்களில் அவர் மறைந்தபின்புதான் எனக்கு உரைத்தது. சலபதி இறுதி அஞ்சலிக்கு நாகர்கோவில் வருகிறீர்களா என அழைத்தார். நான் எனது அப்பா என்ன சொல்வாரோ என்ற தயக்கத்தால் போகவில்லை. என் அப்பா, சுராவின் (குழைந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு முந்தைய) ”எஸ் ஆர் எஸ்” ஸே தான்.
நினைவின் நதியில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கிளிஷே). ஆனால் அப்போதைய ’பதிவர்கள் உலகில்’ உங்களை சுராவின் சாவில் புகழ் வெளிச்சம் தேடுபவராகவே பலரும் அவதூறு செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் புத்தகம் என்னைப் பொறுத்த அளவில் அப்போதைய உங்களின் நூல்களில் உச்சம். அதன் முன்னுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் – ”இது நானறிந்த சுந்தர ராமசாமி, வேறு பல சுந்தர ராமசாமிக்கள் இருக்கலாம்” (என் நினைவில் இருந்து எழுதுகிறேன்).
சுந்தர ராமசாமியை நான் இன்னும் அணுக்கமாக உணர்ந்தது அந்தப் புத்தகத்தினால் தான். அதில் வரும் சில வரிகள் நானும் அப்படித்தானே என உணர்ந்த இடங்கள் – உதாரணமாக அசம்பு ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்க சுரா பேரம் பேசும் இடம். கூடைக்காரிகள் குறித்த அவரது அவதானிப்பு, சுதர்சன் ஜவுளிக்கடையில் சேலை வாங்கவரும் அடித்தளத்திலிருந்து அப்போதுதான் மேலேறி வந்துகொண்டிருக்கும் மக்களின்மேல் அவருக்கிருந்த பெருமிதம் என்று அதில் விவரிக்கப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் எனை அவர்பால் மேலும் ஈர்த்தன. உண்மையிலேயே அவரை அணுகியறிந்து, அவர்மேல் பெருங்காதல் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுதமுடியும் என்பதை உணர்ந்து உங்கள் மேல் நான் மேலும் ஈர்க்கப்பட்டேன். அந்தப்புத்தகம் உங்களையும் நான் மேலும் புரிந்துகொள்ள எனக்கு திருப்புமுனையாக இருந்திருக்கலாம் என இப்போது இதை எழுதும்போது உணர்கிறேன். (ஆம் நீங்கள் சுரா மரணத்தினால் ஆதாயம் அடைந்திருக்கிறீர்கள், ஹிஹி… – இதை எழுதும்போது இன்றைய செயற்கை நுண்ணறிவு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளுமோ என்ற எண்ணமும் மேலெழுகிறது).
காந்தி குறித்த அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் கவித்துவத்தின் உச்சம். இவ்வாறு பல தருணங்கள் நினைவில் நதியிலுண்டு. ஒருமுறை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து யுவனும் நினைவின் நதியில் தனக்கு பிடித்திருந்தது என்று சொன்னார். உண்மையில் சுரா இறந்தபின்பு அவர் குடும்பத்தினர் வெளியிட்ட நினைவுகூறல் புத்தகத்தைவிட நினைவின் நதியில் மூலம்தான் நான் சுராவை ஒரு சாமானியனாக, எழுத்தாளானாக, சிந்தைனையாளராக முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. அவரை இன்னும் காதலிக்க வைக்கவைத்தது. இன்று அது நிறுவவும்பட்டிருக்கிறது.
விஷ்ணுபுரம் வெளியீடாக வரும் நினைவின் நதியில் நூலை உங்கள் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
சுரா நினைவின் நதியில் மறுபதிப்பு வெளிவந்த நாட்களில் ஒருமுறை இணையத்தில் சுந்தரசாமியுடன் ‘ஒட்டிக்கொண்டு’ நான் புகழ்பெற நினைத்து எழுதிய நூல் அது என்னும் வசையை ஒருவர் எழுதியிருந்தார். அரங்கசாமி அதைப்பற்றிப் பேசும்போது சொன்னார். ‘சுராவோட இணைந்து உங்களுக்கு புகழோ அடையாளமோ வரவேண்டியதில்லைன்னு தெரியாத ஒருவர் இலக்கியவாசகரே அல்ல, அவர் என்ன நினைச்சா என்ன?’.
ஓர் எழுத்தாளரைப் பற்றிய நினைவை எழுத ஒருவகையான உணர்ச்சிவேகம் தேவை. அவருடன் இருக்கையில் அவரை பெருங்காதலுடன் தொடர்ச்சியாகக் கவனிப்பது அந்த உணர்ச்சிகரத்தால்தான். பின்னர் நினைவுகூர்வதும் அதனால்தான். சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்ட பல அஞ்சலிகளைக் கண்டபோது அவர்களின் வாழ்க்கையில் அவரும் ஒருவர் என்பதற்கப்பால் எந்த இடமும் அவர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று தெரிந்தது.
எனக்கு அப்படி அல்ல. அன்றுமின்றும் அவர்மேல் இருப்பது ஒரு கொந்தளிப்பான உணர்வுநிலைதான். அதே உணர்வுநிலைதான் வயக்கவீட்டு பாகுலேயன்பிள்ளை பற்றியும் உள்ளது. அன்பும், அன்பின் விளைவான தீவிரமான கோபங்களும், அணுக்கமும் விலக்கமும் எல்லாம் கலந்த ஒன்று.
சு.ரா மறைந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டிருக்கிறது. நான் இன்றும் எல்லா உரையாடல்களிலும் ஏற்றோ மறுத்தோ அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் தோன்றாத தனிப்பட்ட உரையாடல்களே இல்லை. ‘இப்ப நீங்க மட்டும்தான் அவரைப் பத்தி ஓயாம பேசிட்டிருக்கீங்க’ என்று அண்மையில் அரங்கசாமி சொன்னார். ‘அவர் என் சொற்களில் மட்டும்தான் சிரஞ்சீவியாக இருக்கமுடியும்’ என்று நான் சொன்னேன். ‘காலந்தோறும் அப்டித்தான் வழக்கம்’
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


