Jeyamohan's Blog, page 64

July 26, 2025

ஆர். பாலசரஸ்வதி

பாலசரஸ்வதி 1930-கள் முதல் 1960-கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1936-ல் சி. புல்லையாவின் இயக்கத்தில் உருவான சதி அனுசூயா, பக்த துருவா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நடிகையாகப் பாடி நடித்தார். இயக்குநர் கே. சுப்பிரமணியம் தனது தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அழைத்தார். பக்த குசேலா, பாலயோகினி, திருநீலகண்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆர். பாலசரஸ்வதி ஆர். பாலசரஸ்வதி ஆர். பாலசரஸ்வதி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 11:34

வெண்முரசு, இரண்டு வாசிப்பு எல்லைகள்

அன்புள்ள ஜெ

அண்மையில் வெண்முரசு நூல்களை என் வீட்டுக்காக வாங்கினேன். அதில் ஒரு சுவாரசியத்தைக் காணமுடிந்தது. என் தங்கை அதில் முதல் மூன்று நாவல்களை வாசித்தாள். என் அம்மா இப்போது எட்டாவது நாவலில் இருக்கிறார். என் அம்மாவின் வாசிப்பு ஆழமானதாக இருந்தது. நாவலின் நுட்பமான உறவுகள், குறியீடுகள் எல்லாமே அம்மாவுக்குப் புரிந்தது. அம்மா எட்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்டவர். கல்கி , சாண்டில்யன் படித்திருக்கிறார். 

ஆனால் என் தங்கை எம்.பி.ஏ பட்டதாரி. பாலகுமாரனின் உடையார், சு.வெங்கடேசனின் வேள்பாரி எல்லாம் வாசித்தவள். அவளுக்கு வெண்முரசு நாவல்கள் வாசிப்புச் சுவாரசியம் கொண்டவையாக இருந்தன. ஆனால் அவள் கதையை மட்டும்தான் வாசித்தாள். கதை எங்கே வேகமாக இருக்கிறது , எங்கே தேங்குகிறது என்று மட்டும்தான் அவளால் சொல்லமுடிந்தது. 

வெண்முரசில் ஆங்காங்கே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையம்கொண்டு கதை செல்லும்போது ‘சுத்திச் சுத்தி வருது’ என்று தங்கை சொன்னாள். மழைப்பாடல் நாவலில் குந்தி, காந்தாரி இருவரின் திருமணநிகழ்வுகள் சொல்லப்படும் இடத்தில் ‘ரொம்ப வர்ணனைகள்’ என்று சொன்னாள். இந்திரநீலம் நாவலில் சியமந்தக மணி பற்றிய பகுதிகளை ‘ஒண்ணையே சொல்லிட்டு இருக்காப்ல’ என்று சொன்னாள்.

நான் என் அம்மா  என்ன சொல்கிறார் என்று அவரிடம் இதைப்பற்றி கேட்டேன். குந்தி மழைபெய்துகொண்டே இருக்கும் ஊரைச் சேர்ந்தவள், காந்தாரி மழை இல்லாத ஊரைச் சேர்ந்தவள். ஆகவேதான் நிலம் அப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது என்று சொன்னதோடு எங்கள் குடும்பத்திலேயே தஞ்சாவூர் மருமகள்களுக்கும் கோயில்பட்டி மருமகள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றும் சொன்னார்கள். அந்த வேறுபாடுதான் மொத்த கதையின் சாரம் என்றும் சொன்னார்கள்.

சியமந்தகம் பற்றி கேட்டேன். அது இந்த உலக இன்பங்கள் மற்றும் பொருட்கள மீதான பற்று. அதற்கு எதிரான பற்றுதான் கண்ணன் மீதுள்ளது. ஒவ்வொருவரும் அதற்கும் இதற்கும் நடுவே அலைமோதுகிறார்கள். அலைமோதாத நிலைத்த தன்மை காளிந்தியிடம் மட்டும்தான் உள்ளது என்று சொன்னார்கள். எங்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினையின்போது ஒரு வைரமோதிரம் எப்படி பெரிய மனக்கசப்பை உண்டு பண்ணியது என்றும், ஒவ்வொருவரின் உண்மையான தன்மையை வெளிக்காட்டியது என்றும் சொன்னார்கள்.

இரண்டு வாசிப்பையும் ஒப்பிட்டால் எனக்கு நாம் கதைகளை நிறைய வாசிக்க வாசிக்க உண்மையான ரசனை இல்லாமலாகிவிடுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஜே.ஆர்.சந்திரமௌலி.

அன்புள்ள சந்திரமௌலி,

வெண்முரசுத் தொகுதிகளை இப்போது அதிகம் வாங்குபவர்கள் இளைஞர்கள், தங்கள் பெற்றோருக்காக. அவர்களுக்கு அளிக்கத்தக்க ஒரு நல்ல பரிசாக அவை உள்ளன. பலர் முதியோர் இல்லங்களுக்குக் கூட வாங்கி அளித்துள்ளனர். முதியவர்களில் கொஞ்சம் வாசிப்பவர்கள் எளிதாக அதற்குள் நுழைந்துள்ளனர். வாழ்க்கையில் வாசித்த ஒரே நூல் வெண்முரசுதான் என்பவர்களும் பலர் உள்ளனர்.

முதியவர்களுக்கு இரண்டு சாதகமான அம்சங்கள் உள்ளன. ஒன்று, அவர்களுக்கு ஏற்கனவே மகாபாரதம் கொஞ்சம் தெரியும். அது ஒரு தொன்மையான கதை என்றும், அன்றைய வாழ்க்கை அது என்றும் புரியும். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள், குந்தி ஐந்துபேரிடம் பிள்ளை பெற்றாள், ராதை கிருஷ்ணனின் அத்தைமுறை என்றெல்லாம் சொன்னால் கலாச்சார அதிர்ச்சியெல்லாம அடையமாட்டார்கள். இரண்டு, அவர்களுக்கு இலக்கியம் , வாசிப்பு சார்ந்த எதிர்மறைப் பயிற்சியும் முன்முடிவுகளும் இல்லை. ஆகவே இலக்கியத்தை வாழ்க்கையுடன் இயல்பாக இணைத்துக்கொண்டு வாசிப்பார்கள்.

ஆனால் தமிழ் வணிக எழுத்தை வாசித்துப் பழகியவர்கள், சீரியல்களில் ஊறியவர்களுக்கு எதிர்மறைப் பயிற்சி உண்டு. அவர்களுக்கு ‘கதை’ முக்கியம். அது அவர்கள் ஏற்கனவே ரசித்த கதைகளின் சாயலுடன் இருக்கவேண்டும். இல்லையேல் ஏமாற்றம் அடைவார்கள். விவாதங்கள், வர்ணனைகள், எண்ணங்கள் எல்லாமே ‘கதைக்கு தேவையற்றவை’ என்றுதான் நினைப்பார்கள். புனைவுத்தருணங்கள், உணர்வுகள், உறவுகள் ஆகியவற்றை எல்லாம் அவர்கள் ஏற்கனவே அறிந்தவற்றைக்கொண்டு மட்டுமே மதிப்பிடுவார்கள்.

இத்தகைய எதிர்மறைப் பயிற்சி கொண்ட வாசகர்கள் அவர்களுடைய நிலையை விட்டு சற்றும் முன்னகர மாட்டார்கள். வாசிப்பினூடாக வளர்ச்சி என்பதே இருக்காது. எந்த பெரும்படைப்பையும் தங்கள் சொந்த அளவுகோலைக்கொண்டு அலட்சியமாக மதிப்பிடுவார்கள். சாதாரண வணிக சினிமாச் சந்தர்ப்பங்களை எந்த விவாதங்களிலும் இழுப்பதை, எந்த புனைவுத்தருணத்துடனும் ஒப்பிடுவதை இவர்களிடம் காணலாம். அதன் வழியாக எல்லாவற்றையும் கொஞ்சம் கேலிக்கூத்தாகவும் ஆக்கிவிடுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் தங்களை வாசகர் என்றல்ல, நுகர்வோர் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். வணிகநுகர்வில் நுகர்வோர்தான் முதன்மையானவர்கள், எல்லாமே நுகர்வோரின் ரசனைக்காகவே படைக்கப்படுகின்றன, ஆகவே நுகர்வோரின் கருத்தே முக்கியம். இலக்கியம் நுகர்பொருள் அல்ல, அது ஒருவகைக் கல்வி, மாணவன் அந்த நூலைநோக்கி எந்த அளவுக்கு நகர்கிறான் என்பதே முக்கியம், முன்னேறிவராத மாணவன் தன்னை தோற்கடித்துக்கொள்கிறான். அதை அவர்கள் உணர்வதில்லை.

இந்த எதிர்மறைப் பயிற்சியை அத்தனை எளிதில் கடக்கமுடியாது. ஏனென்றால் தாங்கள் ‘நிறையப் படித்தவர்கள்’ என இவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இவர்களைப்போலவே சிந்திக்கும் ஒரு பெரிய கூட்டமும் இவர்களுக்கு இருக்கும். ஆகவே இவர்கள் தாங்களே ஏதேனும் ஒரு அகமாற்றத்தை அடைந்து, முன்னகர்ந்தால்தான் உண்டு.

கடந்த நூறாண்டுகளாகவே இலக்கியம் போராடிக்கொண்டிருப்பது இந்த வணிகஎழுத்தின் வாசகர்களுடன்தான். புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் , ராஜமார்த்தாண்டன் என தலைமுறை தலைமுறையாக விமர்சகர்கள் போராடியதும் இவர்களுடன்தான்.

இன்று சமூகவலைத்தளங்கள் வந்தபின் அந்த போர் இன்னும் சிக்கலாகிவிட்டிருக்கிறது. ஒன்றுமே தெரியாத கும்பல், வெட்டி வம்புகளாகவே இலக்கியத்தை அணுகும் கூட்டம் உள்ளே வந்து சகட்டுமேனிக்கு உளறி பொதுவெளியில் எதையுமே பேசமுடியாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. ஆயினும் எதிர்பார்ப்புடன்  தொடர் உரையாடல் ஒன்றை நிகழ்த்துவது மட்டுமே நம்மால் செய்யத்தக்கது.சிலர் மேலே வரக்கூடும். அவ்வாறு வந்த சிலர் அளிக்கும் நம்பிக்கையே நமக்கு ஊக்கமளிக்கவேண்டும்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 11:31

ஆங்கிலத் தன்வரலாறு, இரண்டு எதிர்வினைகள்

 

To buy the book

Dear J,

        Read the book “Of men women and witches”. Splendid translation. Sangeetha has captured the tone of reminiscence and comprehension that you have used in the articles perfectly well. I had read some of the articles from this series that are in your website in Tamil. This English translation invokes the same emotions as your articles in Tamil did.

         They are a glimpse into the yesteryear world of the generations past. The text invokes vivid images of the land; a beautiful one filled with mysteries and mundane all rolled into one. One gets to understand the slow transition that happens as colonialism and monarchy give way to democracy. The women from the matriarchal society also happen to lose their land in the process.

         The men in the book are few and they mostly come across as people who wear their anger or innocence as shield to hide their true selves. The women on the other hand are many and they leave an everlasting impression on one.

         The choices that  they make in their lives are varied, one chooses power and remains in control of her destiny as long as she is healthy, one chooses to repress her aspirations for the greater good of her children, one chooses the extreme step of ending her life, one chooses to be kept, some die horrible deaths as captives, humiliated, one chooses to find solace in books amidst her day-to-day drudgery and some choose to beg, defeated by fate.

          These were probably the women who have shaped your idea of the feminine until you met the women you fell in love with. You are blessed with what a man could ask for in his life in women, a loving mother, a loving sister and a wife who fell in love with you and whom you love. This book comes across as an ode to all these women.

          The men in the book refuse to acknowledge the fact that all they crave for is validation from their women. This results in a constant friction in their households. Neither end up being fulfilled, the undertone of failed marital relationships is prominent in the book.

        On the other hand, are the lives of women who are coveted by men. The idea of yakshis, the spirit of women who die a wrongful death, seems to have been very prevalent at that time. Real or imagined, they did manage to invoke terror in the men of the region.   They were the reigning deities of the forest. When the forests turned into estates which in itself is as act of covetousness, they turned into mere stones. Maybe they joined forces with Mother nature, together they seemed to be unleashing extreme events that reduce man-made materialistic symbols to dust. One can take it as the wrath of yakshis, trying to reclaim their forest, depending on whichever side of science one happens to be on.

        At the end of the book, one is left pondering about men, women and witches and the land they lived on.

From,

Priya,

Bangalore.

The book talks about the most beautiful land of Tamil Nadu, which is Kanyakumari, aka Nanjilnadu. It starts with Jeyamohan’s childhood, his relationship with his father and mother, and about their relationship. Women coexisting with strangers is one thing, but Jeyamohan’s mother had to transition from a matriarchal system to a patriarchal one as well.

Of Men, Women and Witches Review
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 11:31

அஜிதனின் உரையாடல்கள்

மேலைத்தத்துவம் பற்றிய அஜிதனின் உரையாடல்களை இணையத்தில் கண்டேன். மிக விரிவாக ஜெர்மன் தத்துவத்தை முதன்மையாக வைத்துப் பேசுகிறார். நான் வெவ்வேறு வகைகளில் இந்தப்பெயர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும்கூட ஜெர்மானிய தத்துவம் எப்படி நவீன ஐரோப்பியத் தத்துவத்துக்கே அடிப்படையாக அமைந்தது என்பதை அறிந்திருக்கவில்லை.

அஜிதனின் உரையாடல்கள்

 

It is interesting to listen to your explanation about the difference between the two ways of education that prevailed in our country. One is traditionalist, like giving a sermon. The method of education in that way of teaching is not so important; the personality of the teacher is more important.

The guru and the teacher
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2025 11:30

July 25, 2025

நான் எழுதும் அரசியல்

அன்புள்ள ஜெ,

நீங்கள் எழுதிய இரண்டு அரசியல் படைப்புகள் என்று பின்தொடரும் நிழலின் குரல், வெள்ளையானை என்ற இரண்டு நாவல்களையும் சொல்லமுடியும். (வெள்ளையானை இப்போது ஆங்கிலத்தில் வரவுள்ளது என அறிகிறேன். பின்தொடரும் நிழலின் குரல் நாவலும் அவ்வாறு வெளிவரும் என நம்புகிறேன்)

உங்கள் அரசியலை விரிவாக முன்வைத்து இந்நாவலில் எழுதியிருக்கிறீர்கள். பின்தொடரும் நிழலின் குரல் மார்க்சிய எதிர்ப்பு நாவல் என்று சொன்னார்கள். நான் இப்போதுதான் வாசித்தேன். அதில் எங்கே மார்க்ஸிய எதிர்ப்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மார்க்சிய இலட்சியவாதம்தான் அதில் திரும்பத் திரும்ப தூக்கிப்பிடிக்கப்படுகிறது. அதிகார அரசியலால் அது எப்படி ‘கரெப்ட்’ ஆகிறது என்று நாவல் சொல்கிறது. அதை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நேர்மையான கம்யூனிஸ்டுகள் போராடுவதும் அந்நாவலில் உள்ளது. மிகமிக எதிர்மறையாகப் பார்த்தாலும்கூட தொழிலாளர்களுக்கு ஒரு பேரம்பேசும் சக்தியை மார்க்ஸியமே உருவாக்கித் தந்தது, எந்நிலையிலும் அதை மீறமுடியாது என்றுதான் நாவல் காட்டுகிறது.

மார்க்ஸியத்தின் அமைப்பு சார்ந்த இறுக்கம் எவ்வளவோ நல்ல இலட்சியவாதிகளைக் காவுகொண்டிருக்கிறது. மாமனிதர்கள் மனம் வெதும்பி விலகியிருக்கிறார்கள். அதை அந்நாவல் பேசுவதனால்தான் உண்மையில் இங்கே மார்க்ஸியக் கட்சிக்காரர்கள் அந்நாவல்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். 2007ல் இந்நாவலை வாசிக்கும்படி கோவை ஞானி ஐயா என்னிடம் சொன்னார். ஆனால் என்னால் இப்போதுதான் முழுமையாக வாசிக்கமுடிந்தது.

அதே வேகத்துடன் வெள்ளையானையை வாசித்தேன். இது நேரடியான நாவலென்பதனால் நான் வேகமாக வாசித்து முடித்தேன். இந்நாவல் இரண்டு தொன்மங்களை உடைக்கிறது.

ஒன்று, இந்து மதம் என்னும் கட்டமைப்புக்குள் தலித்துக்கள் பஞ்சகாலத்தில் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லி அந்த சமயத்தில் இங்கே இருந்த மத அமைப்புகள் எப்படிச் செயல்பட்டன என்று காட்டுகிறது. அந்த பஞ்சகாலத்தில் அரசுக்கு உடந்தையாக இருந்து, ரத்தம்குடித்தவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்குப் பெரும்கோடீஸ்வரர்களாக தொழில் செய்கிறார்கள்.

இரண்டு, பிரிட்டிஷ் ஆட்சி தலித்துக்களுக்குச் சாதகமானது என்பதும் பொய்தான். பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே தலித்துக்களைச் சாகவிட்டது. உலகமெங்கும் அடிமைகளாகக் கொண்டுசென்றது. அந்த பஞ்சங்களில் தலித் சமூகம் அழியவில்லை என்றால் அவர்கள் 50 சதவீதம் வரை மக்கள்தொகை இருந்திருப்பார்கள். இன்றைய ஜனநாயகத்தில் அவர்களிடமே அதிகாரமும் இருந்திருக்கும். அதை நீங்கள் சொல்லிக் கேட்கும்போது பெரும் திகைப்பே உருவாகிறது.

ஆழமான சிந்தனைகளை உருவாக்கிய இரண்டு நாவல்கள்.

ஜே.ஆர்.கோவிந்தராஜ்

அன்புள்ள கோவிந்தராஜ்,

இங்கே நம் சூழலில் அரசியல் என்பது ‘கட்சியரசியல்’ என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உங்கள் அரசியல் என்ன என்று கேட்டால் அதன்பொருள் நீங்கள் என்ன கட்சி என்பதே. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த அரசியல் தரப்பையும் ஏற்றுக்கொண்டவனும் அல்ல. ஓர் எழுத்தாளன் அப்படி ஒரு கட்சியை, ஒரு தரப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதையே எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி பி.கே.பாலகிருஷ்ணன் என அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் கற்றிருக்கிறேன். கட்சியரசியல் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில், அல்லது சுயநலத்தின் அடிப்படையில் ஒரு திரள் உருவாகி அது அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதும், கைப்பற்றி ஆட்சி செலுத்துவதும்தான். அப்படி ஒரு திரளின் குரலாக ஒலிப்பவன் இலக்கியவாதி அல்ல.

கட்சியரசியல் என்பதற்கு அப்பால் ஓர் அரசியல் இருக்க முடியும். அதைக் கட்சியரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் தங்கள் தரப்பினராகவோ அல்லது எதிரியாகவோதான் இருக்க முடியும். காழ்ப்பு, திரிப்பு, ஏளனம், அவதூறு, வசை ஆகியவற்றினூடாக எதிரியையும்; முடிவில்லாத சப்பைக்கட்டுகள் வழியாக தன் தரப்பையும் அவர்கள் எதிர்கொள்வார்கள். இச்சூழலில் நான் சொல்லும் அரசியலை எந்த அரசியல்கட்சியாளரும் தங்கள் எதிரித்தரப்பு என்றே முத்திரையடிப்பார்கள்.

இலக்கியவாதியின் அரசியல் என்பது அவனுக்கு மட்டுமான ஒன்று என நான் நினைக்கிறேன். அவன் தனக்கான அறத்தை, தனக்கான உலகச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறான். அதற்காகவே அவன் எழுதுகிறான். ஏற்கனவே இருக்கும் அரசியலை அவன் சொல்லவில்லை, அவனுக்கான ஒன்றை மட்டும் சொன்னால்தான் அவன் எழுத்தாளன். அந்த அரசியலையே தன் படைப்புகளினூடாக தொடர்ச்சியாக் விரிவாக்கிக் கொண்டிருக்கிறான். என் படைப்புகளிலுள்ள அரசியல் அவ்வாறு எனக்கான அறத்தில் இருந்து உருக் கொண்டது. அதைத்தான் என் புனைவுகளுக்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறேன். அவை அறுதியான முடிவுகளோ உறுதியான நிலைபாடுகளோ அல்ல. ஏனென்றால் நான் நம்பிக்கையின் வழியில் செல்லவில்லை, என்னுடையது தேடலும் அதன் விளைவான தத்தளிப்பும் சில கண்டடைதல்களும் கொண்டது.

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ளது அந்த அரசியல்தான். அது இடதுசாரி அரசியல் அல்ல, வலதுசாரி அரசியலும் அல்ல. அது அடிப்படையில் மானுட மீட்பைத்தான் கனவுகாண்கிறது. அக்கனவை எந்த தரப்பில் இருந்து எவர் கண்டாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உணர்ச்சிகரமாக இணைந்துள்ளது. மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தை அந்நாவல் பெரும் தாகத்துடன் ஏற்றுக் கொண்டாடுவதை வாசகன் காணமுடியும்.கூடவே  அதுமானுடத்துயரம் அனைத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டு தன் துயரமாக உணர்கிறது. அதற்குக் காரணமான ஒடுக்குமுறைகள், அழிவுகள் அனைத்துக்கும் எதிராகச் சீற்றம் கொள்கிறது. ஆகவே மார்க்ஸியத்தின் பெயரால் ருஷ்யாவில் நிகழ்ந்த வன்முறைகளை எழுதுகிறது. மார்க்ஸியக் கொள்கைகளிலுள்ள ஜனநாயகமின்மையை சுட்டிக்காட்டுகிறது. கருத்தியல் நம்பிக்கை எங்கே மானுட விழுமியங்களுக்கே எதிராகச் செல்கிறது என்பதைப் பேசுகிறது.

அந்த சுதந்திரமான அறம் , அந்த தனியறத்தின் அரசியல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர்கள் எப்போதும் தங்கள் எதிர்த்தரப்பு செய்யும் ஒடுக்குமுறைகளை, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவார்கள். கொந்தளிப்பார்கள். ஆனால் அதே ஒடுக்குமுறையும், அதே அநீதியும் தன் தரப்பால் செய்யப்பட்டால் நியாயப்படுத்துவார்கள், ஆதரிப்பார்கள். அதில் வெட்கமே இருப்பதில்லை. பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்கும் ஓர் இடதுசாரி அதில் கூறப்பட்டுள்ள மாபெரும் மானுட அழிவை பொருட்டாக நினைப்பதில்லை, ஏனென்றால் அதைச் செய்தவர் அவருடைய தலைவரான ஸ்டாலின். அந்நூலை அவர் இடதுசாரிகளுக்கு எதிராகவே நினைப்பார். அந்நாவலை மார்க்ஸிய எதிர்ப்பு என கொண்டாடும் ஒரு வலதுசாரி அந்நாவல்  காட்டும் மாபெரும் சுரண்டல்களை கண்டும் காணாமல் சென்றுவிடுவார்.

அதேபோல வெள்ளையானை நாவலை வாசிக்கும் ஓர் இந்து மதவாதி அந்நூல் காட்டும் இந்தியச் சித்திரத்தில் பலகோடிப்பேர் பஞ்சத்தில் செத்தழிந்தபோது இந்திய மத அமைப்புகள் திரும்பியே பார்க்காமலிருந்தனர் என்னும் உண்மையை வெறுப்பார். பழியை முழுக்கமுழுக்க பிரிட்டிஷார் மேல் போடவேண்டும் என்று நினைப்பார். அந்நாவலை தங்களுக்கு எதிரான ஒன்றாக முத்திரையடிப்பார். அரசியல்வாதிகள் இந்நாவல்கள் ஒன்றுடனொன்று இணைந்து ஒரே அரசியல்தரப்பாக ஆகவேண்டும் என நினைப்பார்கள், அவ்வாறு ஆகின்றன என்று காட்டவும் முயல்வார்கள். ஆனால் ஒரு வைரத்தின் பட்டைகளை திருப்பித்திருப்பிப் பார்ப்பதுபோல ஒரே உண்மையின் முற்றிலும் வேறுபட்ட பல பக்கங்களைப் பார்ப்பவை இந்நாவல்கள் என்பதே சரியானது.

இலக்கியத்தின் அரசியல் என்பது இந்த அரசியல்கும்பல்களின் ஒற்றைப்பக்கச் சார்புள்ள மூர்க்கமான அறவுணர்வுக்கு அப்பாக் எழுந்து எல்லா திசையிலும் அறத்தை, விடுதலையை முன்வைப்பதேயாகும். அதைத்தான் அவ்விரு நாவல்களும் செய்கின்றன. அந்த அடிப்படை உணர்வை அடைபவர்களுக்குரியவை அவை – எந்த இலக்கியமும் அவர்களுக்குரியது மட்டுமே. தன்னை ஏதேனும் ஒரு தாப்புடன் இணைத்துக்கொண்டு வாசிப்பவர்களுக்கு உரியவை அல்ல. அந்நாவல்களை அரசியல் தரப்புகள் சார்ந்து சத்தம்போடுபவர்களும் வாசிக்கலாம், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அந்த மனசாட்சியுடன் அந்நாவல்கள் பேசும். அவர்கள் ஒளித்துவைத்தாலும் அவர்களுக்குள் அந்த அறத்தின் குரல் வளரும். அவ்வாறு அந்நாவல்களால் பாதிப்படைந்த எத்தனையோ பேரை நான் கண்டதுண்டு.

இலக்கியத்துக்கு அப்பால் என் ‘நடைமுறை அரசியல்’ என்ன? அதை நான் சிற்றலகு அரசியல் (மைக்ரோ பாலிடிக்ஸ்) என்று சொல்வேன். கட்சிசாராமல், அதிகாரம் நோக்கிச் செல்லமுயலாமல், சமூகத்தின் கருத்துநிலையை ஆக்கபூர்வமாக மாற்றமுயலும் அரசியல் அது. அதில் அதிகாரம் இல்லை என்பதனாலேயே அது தீங்கை இழைக்க முடியாது. சமூகம் நோக்கிய ஓர் உரையாடல்தான் அது. சமூகம் தனக்கான கொள்கைகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறது. சேவை, பிரச்சாரம் மூலம் சமூகத்தை நோக்கி செயல்படுவது அது. சமூகம் அதை ஏற்கலாம், ஏற்றால் சமூகம் முன்னகரும். ஏற்காமலும் போகலாம், ஏற்கவில்லை என்றால் எந்த அழிவும் உருவாவதில்லை.

இந்த சிற்றலகு அரசியல்தான் இதுவரையிலான இந்தியச் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. கல்வி மறுமலர்ச்சி, சூழியல் உணர்வு முதல் பலநூறு ஜனநாயக உரிமைகள் வரை நாம் அடைந்துள்ள எல்லாவகையான மாற்றங்களும், வளர்ச்சிகளும் அதனால் உருவாக்கப்பட்டவைதான். ஒரு சமூகத்தின் பிரக்ஞ்ஞை மாறிவிட்டதென்றால் உண்மையான மாற்றம் நிகழ்ந்தே தீரும். அரசு மக்கள் அடிப்படையில் விரும்புவனவற்றைச் செய்தேயாகவேண்டும்.

ஒரு தெரு சுத்தமாக இருந்தாகவேண்டும் என அங்கே வாழும் மக்கள் உண்மையில் உறுதியாக எண்ணினால் அத்தெரு சுத்தமாகும். அரசு மக்களுக்குப் பணியும். ஆகவே தூய்மையை உருவாக்க தூய்மை தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கினால் போதும். அரசதிகாரத்தைக் கைப்பற்றி அங்கே தூய்மையை கொண்டுவருவதென்பது ஒரு மாயை. தூய்மை தேவை எனும் எண்ணம் உருவாகாமல் இருக்கையில் அரசு என்ன செய்தாலும் அந்த தெருவை தூய்மையாக வைக்கவும் முடியாது. எண்ணங்களை மாற்ற போராடுவதுதான் நுண்ணலகு அரசியல். அது பல தளங்களில் செயல்படுகிறது.

 

அந்த எல்லா நுண்ணலகு அரசியல் செயல்பாடுகளுடனும் நாற்பதாண்டுகளாக உடனிருந்துள்ளேன்.  அவ்வரசியலை செய்பவர்களை தொடர்ச்சியாக முன்வைத்தும் வருகிறேன். அந்த அரசியலின் ஒரு பகுதியாகவே நான் நேரடியாக அரசியல் கருத்துக்களை எழுதுகிறேன். காந்தியைப் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களுமே அந்தக் கோணத்தில் அவரை அணுகுபவை.

ஆகவே தேர்தலரசியலை முற்றாகவே தவிர்ப்பது என் வழி. தேர்தல் நெருங்கும்போது முழுமையாகவே அமைதியாகிவிடுவேன். கட்சிவிவாதங்களில் கருத்தே சொல்வதில்லை. தேர்தலை ஒட்டி நான் எழுதியது ஒரே தருணத்தில்தான். ஆனால் அப்போதுகூட ஜனநாயகம் என்றால் என்ன என்று மட்டுமே எழுதினேன். ஜனநாயகச் சோதனைச்சாலையில் என்னும் நூலாக அக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:35

கே. செல்வம்

கே. செல்வம் விழுப்புரம் மாவட்டம் பனைமலை அஞ்சல் வெள்ளையம்பட்டு என்ற ஊரில் கண்ணாயிரத்திற்கு மகனாக 1959-ல் பிறந்தார். அப்பா கூத்துக் கலைஞர். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத நாட்களில் விவசாயம் பார்ப்பார்.

கே. செல்வம் கே. செல்வம் கே. செல்வம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:33

வாசகனின் எதிர்பார்ப்பு

அன்புள்ள ஜெ

நான் உங்களுடைய எழுதும் கலை போன்ற நூல்களை வாசித்திருக்கிறேன். நான் எழுதுபவன் அல்ல. ஆனால் அவை எனக்கு வாசிப்பைக் கற்றுத்தந்தன. ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, ஒரு நாவல் எப்படி இருக்கும் என்றும் அவற்றின் வடிவங்கள் எப்படிப் பட்டவை என்றும் அவற்றின் வழியாகவே அறிந்தேன். எழுதுபவர்களுக்கு அவை மேலும் உதவியானவையாக இருக்கும் என்னும் எண்ணமும் உருவாகியது. ஆனால் அண்மைக்காலகட்டத்தில் இளம் படைப்பாளிகளின் கதைகளை வாசிக்கையில் இந்தவகையான ஒரு வடிவ உணர்வும் புரிதலும் அவர்களுக்கு இல்லையோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இங்கே இத்தனை நூல்கள் இருக்கையில் இவர்கள் இதையெல்லாம் படிப்பதுகூட இல்லையா?

அ. சரவணக்குமார்.

அன்புள்ள சரவணக்குமார்,

தமிழிலக்கியம் இன்றைக்கு ஒரு சிறு சிக்கலைச் சந்திக்கிறது. முன்பு வணிகஎழுத்து– இலக்கியம் என்னும் இரண்டு வகைமாதிரிகள் இருந்தன. இன்றைக்கு வணிக எழுத்துக்கான வாசிப்பு – வெளியீடு மிகவும் குறைந்துவிட்டது. காரணம் அந்த இடத்தை காணொளி ஊடகம் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே எழுதுபவர்கள் எல்லாருமே இணைய இதழ்களில் எழுதுகிறார்கள். இணைய இதழ்களுக்கும் ஏராளமான விஷயங்கள் வெளியிடுவதற்கு தேவையாகின்றன. ஆகவே எல்லாமே வெளியாகிவிடுகின்றன. 

ஆகவே இன்றைய வாசகனுக்கு இலக்கியம் என தனியாக கிடைப்பதில்லை, மொத்தமாக கதைகளும் குறிப்புகளும் கவிதைகளும் கிடைக்கின்றன. எவை இலக்கியம், எவை இலக்கியமல்ல என்று அவனேதான் முடிவுசெய்யவேண்டியுள்ளது.

இன்று எழுதுபவர்களில் மிகச்சிலர் தவிர பிறர் ஆனந்தவிகடன் – குமுதம் இதழ்களுக்குரிய எழுத்தாளர்கள். அவற்றைச் சார்ந்து உருவாகி வந்தவர்கள். அவற்றில் வெளியான கதைகளை மட்டுமே அறிந்தவர்கள். அது இயல்பு, எப்போதுமே அந்த விகிதம் அப்படித்தான். 

இந்த எழுத்தாளர்கள் நவீனத்தமிழிலக்கியம் என எதையுமே படித்திருக்க மாட்டார்கள். இலக்கியவடிவம் இதுவரை எப்படி வளர்ந்து வந்தது என்றும், அதன்  இலக்கணங்கள் என்ன என்றும் , புதிய சாத்தியங்கள் என்னென்ன என்றும் தெரிந்திருக்காது. அந்த ஆர்வமும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் எழுதும் எழுத்துக்களுக்கு அதற்கான தேவை இல்லை.

அவர்கள் இலக்கிய வடிவங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் ஓர் ஐந்தாண்டுக்காலம் தொடர்வாசிப்பு இருந்தாலே வடிவம், மொழி ஆகியவற்றில் தேர்ச்சி வந்துவிடும். இவர்களுக்கு அதெல்லாம் இருப்பதில்லை. இங்கே வடிவத்தை கற்பிக்கும் நூல்கள் உள்ளன. இலக்கிய அரங்குகள் நிகழ்கின்றன.  இவர்கள் எவற்றிலும் பங்கெடுக்க மாட்டார்கள்.

ஆகவே உங்களைப்போல தொடர்வாசிப்பும் இலக்கியப்பயிற்சியும் கொண்ட வாசகர்கள் அந்த எழுத்துக்களை தவிர்த்துவிடவேண்டும். இலக்கிய எழுத்துக்களுடன் இணைந்து அவை இணைய இதழ்களில் வெளியாகின்றன என்பதனால், சில இலக்கியவாதிகள் அவற்றை  சிபாரிசு செய்கிறார்கள் என்பதனால் அவற்றை இலக்கியம் என கொள்ளவேண்டியதில்லை. 

ஓரளவு இலக்கியவாசிப்பு உள்ள படைப்பாளிகள் கொஞ்சம் மொழிநேர்த்தியும் வடிவம் சார்ந்த புரிதலும் கொண்டு எழுதினாலும் அவர்களுக்கு பரந்துபட்ட பண்பாட்டு ஆர்வம் இல்லை என்பதனால் ஆழமாக எதையும் எழுத முடிவதில்லை. எழுதத் தொடங்கியதுமே எழுதித்தீர்ந்துவிடுகிறது. திரும்பத் திரும்ப காமம், அரசியல் இரண்டையும் எழுதுகிறார்கள். 

நாங்கள் ஐரோப்பிய இசை, நவீனக்கலை, நவீன தத்துவம் என நடத்தும் வகுப்புகளில் வாசகர்கள் பெருவாரியாகக் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள் கலந்துகொள்வதில்லை, அக்கறை இல்லை. அவர்களுக்கு பேசத்தான் ஆர்வமே ஒழிய கற்பதில் இல்லை. விளைவு வாசகர்கள் முன்னால் சென்றுவிடுகிறார்கள், எழுத்தாளர்களை திரும்பிப்பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள். உங்களைப்போன்றவர்களின் குரலை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

ஆனால் இலக்கியத்துக்கு ஒரு நெறி உண்டு. வாசகர்களின் எதிர்பார்ப்பு இலக்கியத்தின் தரத்தை உயர்த்தும். ஆகவே இலக்கியம் வளரவேண்டும் என விரும்பும் விமர்சகர்கள் இலக்கியவாசிப்பின் தரத்தை மேம்படுத்தவே முயல்வார்கள். இன்று ஒரு சிறுவட்டத்திற்குள்ளாயினும் தீவிர வாசிப்பு திரண்டு  வருகிறது, அதற்கான அடுத்த தலைமுறை எழுத்தும் உருவாகி வரும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:31

மழை, முகில், இரவு…

அன்புள்ள ஜெ

அண்மையில் நான் வாசித்த உங்கள் நாவல் கதாநாயகி. வெண்முரசு முடித்தபின் உங்கள் எழுத்தில் எனக்குப் புதியதாக என்ன இருக்கமுடியும் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. வெண்முரசு முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகியது. மூன்றாண்டும் வெண்முரசிலேயே ஆழ்ந்து கிடந்தேன். அந்த பெரிய அனுபவத்துக்குச் சமானமாக ஏதும் இனி இல்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் கதாநாயகி என் எண்ணத்தை புரட்டிப்போட்டது. தமிழின் பொதுவான வாசகர்கள் அந்நாவலை ஒரு திரில்லர் நாவலாக படித்துவிடுவார்கள். கதைச்சுருக்கம் எழுதும் விமர்சகர்களுக்கும் பிடிகிடைக்காது. அந்நாவல் இத்தனை அடுக்குகள் கொண்டது என்பதை சொன்னாலும்கூட பலருக்கு புரிய வாய்ப்பில்லை.

நான் என் 17 வயது முதல் பிரிட்டிஷ் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். ஏனென்றால் நான் ஆங்கில இலக்கியம் படித்தேன். 18 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பலர் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள். தமிழில் அவர்களைப் பற்றி நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். குறிப்பாக மேரி கெரெலி. அந்தவகையில் இந்நாவலில் ஃபேனி பெர்னி பற்றி சொல்கிறீர்கள். அசல்வரிகள், அசல்வரிகள் போலவே நீங்கள் எழுதிய வரிகள், ஒரு சமகாலப் பேய்க்கதை, அதற்குள் பிரிட்டிஷ் ராஜ் காலகட்டம், அதற்குள் பழைய லண்டன், அதற்குள் ரோமாபுரி காலகட்டம் என சென்றுகொண்டே இருக்கும் இந்நாவலை நான் முழுமையாக வாசித்து முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒரு சுருள்பாதைபோல இழுத்துச் சென்று சரித்திரம் முழுக்க நிறைந்திருக்கும் பெண்களின் கண்ணீரைக் காட்டுகிறது.

த. கிருஷ்ணகுமார்.

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நாவலை வாசித்தேன். நீங்கள் எழுதிய நாவல்தானா என்ற சந்தேகம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. அத்தனை எளிய நடை. நேரடியான கதை. அறிவார்ந்த விவாதங்கள் ஏதுமில்லை. உருவகங்கள் ஏதுமில்லை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு கவித்துவம் இருந்துகொண்டே இருந்தது. உங்கள் கதைகளில் ஓர் அமர்வில் வாசித்து முடிக்கவேண்டிய நாவல் இது. நாவல் முடிந்தபின்னரும் அந்த ஆ மப்பு ஈ மப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

முதலில் ஓர் உணர்ச்சிகரமான காதல்கதை என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் உலக இலக்கியத்தின் மகத்தான காதல்கதைகள் எல்லாமே புதியகளத்தில் சொல்லப்பட்ட தொன்மையான கதைகள்தான். கதைநாயகன் கதைநாயகியைச் சந்திக்கிறான். பிரிகிறான். அதே கதைதான். ஆனால் அந்த முகில்கள் இணைவதும் பிரிவதும் அற்புதமான ஒரு படிமம். இணையும்போது இரண்டும் ஒன்று. பிரிந்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது வானத்தின் விதி. அந்த சினிமாப்பின்புலம், அதற்குள் நிகழும் காதலின் ஒவ்வொரு உணர்வும் சினிமாப்பின்பலத்தில் உருவகமாகி கதையை ஒரு நீண்ட கவிதையாக ஆக்கிவிடுகிறது.

மகேஷ் ஆனந்த்

அன்புள்ள ஜெ,இரவு நாவலை மீண்டும் வாசித்தேன். இந்த தளத்தில் தொடராக வந்தபோதே வாசித்திருந்தேன். இப்போது மீண்டும் வாசித்தேன். அப்போது இரவில் வாழ்தல் என்னும் அந்த கருத்து அளித்த கிளர்ச்சியும், நீலிமா என்னும் யக்ஷியும்தான் கவர்ந்தன. இன்று வாசிக்கையில் அதிலுள்ள உணர்ச்சிகரமான நுட்பங்கள் மனதைக் கிளரச்செய்கின்றன. குறிப்பாக மேனனின் கனவில் கமலா வரும் காட்சி. கனவுக் காட்சிகளிலுள்ள clairvoyance அம்சம் போன்றவை. மலையாள இலக்கியக் கலாச்சரா உலகை அறியுந்தோறும் இந்நாவல் மேலும் ஒளிகொண்டபடியே செல்கிறது. இரவில்தான் யக்ஷி வாழமுடியும். யக்ஷியுடன் வாழ அனைவராலும் இயலாது. அந்த வாழ்க்கை கூரிய வாளை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவதுபோல. (உங்கள் உவமைதான்) ஆனால் அந்த மகத்தான அனுபவத்தை அடைந்தவன் அதன் பின் வெளிறிய பகல்களை விரும்பவே மாட்டான்.கிருஷ்ணராஜ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:31

Against ritualism…

I have always taken a strong stance against ritualism. I see ritualism as a rust that envelops philosophical thought and spirituality, a virus that infects every living thing. We can say that ritualism possesses both of these characteristics. That substance forms the rust by reacting with the sulfur or oxygen in the air.

Against ritualism…

அத்வைத தரப்பை சேர்ந்த நீங்கள் அதை அனுசரிப்பதில் பழுது இல்லை. அதேநேரம் ஆகமத்தரப்பினரான சைவசித்தாந்த மரபை பெரிதும் பின்பற்றும் தமிழகத்தில் இதற்கான தேவை என்ன? இந்துக்களே ஆயினும் தங்கள் மரபிலில்லாத வியாசரை வழிபட்டு போற்ற வேண்டிய தேவை தமிழ்ச்சமூகத்திற்கு ஏன்?

குருபூர்ணிமாவும் தமிழகமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:30

இந்திய ஆலயக்கலை அறிமுகம்

ஜெயக்குமார் நடத்தும் இந்திய ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இன்று உலகம் நோக்கி விரியத்தொடங்கியுள்ளன. அண்மையில் ஆஸ்திரியாவிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்தியச் சிற்பக்கலை- கட்டிடக்கலையை அறிமுகம் செய்யும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய மிகப்பெரிய அகத்தொடக்கங்களாக அமையும் தன்மை கொண்டவை.  நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் மாபெரும் நூல்கள். நமக்கு அவற்றின் மொழி தெரியாது. சட்டென்று அவை நம்முடன் உரையாடத் தொடங்கிவிடும் அனுபவத்தை நாம் அடைகிறோம். அதன் பின் நாம் வாழ்நாளெல்லாம் வாசிக்கலாம்

நாள் ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31

ஆலயங்களை அறிதல் அவசியமா? ஆலயக்கலை- கனவுகள், திட்டங்கள்: ஜெயக்குமார் ஆலயக்கலை, கடிதம் ஆலயஞானம் அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவை 

ஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.

நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.

ஆகஸ்ட் 8,9 மற்றும் 10

programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் வகுப்புகள்

 

Jemooவாசிப்பு வகுப்புகள்

நவீன நூல்களை வாசிப்பதற்கான அடிப்படைகளைக் கற்பிக்கும் வகுப்புகள் 3 முன்னர் நிகழ்ந்துள்ளன. மீண்டும் தேவையா என்னும் எண்ணம் இருந்தது. நேரமும் இல்லை. 25 பேர் முன்னரே பணம் கட்டி, வகுப்பை அவர்களே முடிவு செய்து எழுதியமையால் மீண்டும் நிகழ்கின்றன. மேலும் சிலர் சேர்ந்துகொள்ள முடியும்.

இது கட்டுரை நூல்களை வாசிப்பதற்கும், உள்வாங்கிக்கொள்வதற்குமான பயிற்சி மட்டும்தான்.

நாள் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.