Jeyamohan's Blog, page 59
August 4, 2025
கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி
ஒவ்வொரு இலக்கிய வாசகனும் தனக்கான கவிஞனை கண்டடையும் தருணம் ஒன்று நிகழும். ஒவ்வொரு வாசகனும் தனது வாழ்க்கை பார்வை, கேள்விகளை ஒட்டி ஒரு உடைப்பு போல அந்த கவிஞனின் கவிதை வழியாக அத்தருணத்தை அடைவான். அப்படி தேவதேவனை நான் என்னுடைய கவியாக உணர்ந்த தருணம் இந்த கவிதை வழியாக நிகழ்ந்தது.
அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!
தீவிரமான அழுத்தமும், அலைக்கழிதலும் இருந்த காலகட்டத்தில் காடு நாவல் என்னை அதிலிருந்து விடுவித்தது. அதற்கு பிறகு எதேச்சையாகவே இந்த கவிதையை படித்தேன். அந்த நாவலை படித்து முடித்ததும் அடைந்த மன எழுச்சியை இந்த கவிதை வழியாகவும் அடைந்தேன். என்னுடைய அழுத்தத்தையும், அலைக்கழிதலையும் சிறிதாக்கி, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்றாக்கியது இந்த கவிதை. ‘ரிஷி அல்லாதவன் கவியும்’ அல்ல என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது என்பது புரிந்தது. அப்படித்தான் தேவதேவனை என்னுடய கவி என கண்டுகொண்டேன்.
அதற்கு பிறகு அவரை பல முறை சந்தித்துள்ளேன். ஆனால் அருகில் இருப்பதற்கே தயக்கமாக இருக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் நீரின் மெல்லிய நலுங்கல் நினைவுக்கு வரும். அவர் ஒரு புத்த பிக்ஷூ என்றும் தோன்றும். தன்னறம் வெளியிட்ட அவரது கவிதை புத்தக வெளியீட்டில் பேச கீழப்பூங்குயில்குடி சமண தளத்திற்கு வந்திறங்கினார். ஊர் பெயரை கேட்டார். அப்போ மேலப்பூங்குயில்குடினு ஒரு ஊரும் பக்கத்துலயே இருக்க வேண்டுமே என்றார். தமிழர்களின் வாழ்க்கை இயற்கை மட்டுமே சார்ந்து தான் இருந்திருக்கிறது, இப்போ தான் மாறிவிட்டது என்றார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூட்டிச் சென்றால் இந்த சிலைகளெல்லாம் எதற்கு? தேவையேயில்லை என்றார். காவிய முகாம் ‘இலியட்’ அமர்வில் போர்களெல்லாம் ‘Waste of energy’ என்றார். நீலி இதழில் வெளி வந்த புதிய ஏற்பாடு கவிதையில் பெண் பால் மட்டுமே உலகில் இருக்க வேண்டும் என்கிறார்.
நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள் ‘Every poet has a philosopher. Devadevan’s philosopher is Thoreau’ என்று. அவரை அங்கிருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் அவருடைய அருகாமையை மனம் பயந்தது.
கவிஞர் வேணு வேட்ராயனுடன் இருக்கும் வாய்ப்பு ‘இஸ்லாமிய தத்துவ முகாம்’-ல் கலந்து கொண்ட போது ஏற்பட்டது. நிஷா மன்சூர் அவர்கள் வர சிறது தாமதமானதால் வேணு கவிதை குறித்து சிறிய உரையாற்றினார். அப்போதே He is also my poet என்று தோன்றியது. சூஃபி–களின் பாடல்களும், இசையும், தத்துவமும் வேணுவின் இருப்பும், கவிதை குறித்த உரையாடலும் அந்த மூன்று நாட்களை ஆழமான மனப்பதிவாக்கியது. அதற்கு பிறகும் கவிதை பரிமாற்றம், விவாதம் என வேணுவுடனான தொடர்பு தொடர்ந்தது. அவரது ‘அலகில் அலகு’ கவிதை தொகுப்பை வாசித்தேன். இவரும் என்னுடைய கவி தான் என்று உறுதியானது. காந்தி கிராமில் நடத்தப்பட்ட சர்வதோயா நாள் விழாவில் குக்கூ உங்களுக்கு அளித்த விருது நிகழ்வில் நானும், வேணுவும் கலந்து கொண்டோம். அப்போது அங்கு பௌத்த பிக்குகளின் அமைதிக்கான ஊர்வலம் தொடங்கியது. அதில் ஒரு தாளக்கருவியால் ஒரே போன்ற ஓசையை பிக்குகள் ஏழுப்பினர். நான் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தேன். வேணு என்னை அழைத்து, கையால் தட்டி அதன் தாள சப்தத்தை எழுப்பி கவனிக்க சொன்னார். நான் அங்கே ஊன்றிப் பார்த்தது பொருள் கருவியை. ஆனால் கவிஞர் அருவ சத்தத்தை என்னிடம் கவனிக்க சொன்னார். பின்பு மதிய உணவு சாப்பிடுகையில் பரிமாறிய பெண்ணிடம் பிரியாணி இல்லையா என்று விளையாட்டாக கேட்டார், அந்த பெண் புன்சிரிப்புடன் ஏதோ பதில் சொன்னார். எதிரே இருந்த காந்தியர் அதை கேட்டு கொந்தளிப்புடனும், எரிச்சலுடனும் கடுமையாக பேசினார். வேணு வெளியே வந்து வயிறு குழுங்க சிரித்துவிட்டு ‘Even if it is a Gandhian Ideology, Ideology still makes a man rigid’ என்றார். அவர் ‘தவளை’ என்ற கவிதையை எழுத உந்திய ஒரு பயங்கரமான அரசியல் நிகழ்வு. ஆனால் அந்த கவிதை வெளிப்பட்டிருத்த விதம் என்னை ஆச்சரியபடுத்தியது. அது கவிதை, கவிஞர்கள் குறித்து தீவிரமாக யோசிக்க வைத்தது.
தேவதேவனின் ஒரு வரி ‘நீ கவிதை எழுத வேண்டும் என்றால், முதலில் கவிஞனாக இரு’ அந்த வரியின் ஆழத்தை வேணுவே எனக்கு உணர்த்தினார். ‘Being poet is a state’- கவிதை எழுதுவது வேறு, கவிஞனாகவே இருத்தல் வேறு என்று அப்போது தான் புரிந்தது. கவிஞனுடன் இருத்தல் என்பதை ஒரு இலக்கிய வாசகன் தவரவே விடக் கூடாது என்பதை உணர்ந்திருந்தேன்.
இந்நிலையில் வேணு ‘தேவதேனுடன் இருத்தல்’ என்ற ஒரு நாள் நிகழ்வை கடந்த 6-ம் தேதி பாலாஜியின் குழந்தைகள் பள்ளி, ஓசூரில் ஒருங்கினைத்தார். அதில் இருபது பேர் கலந்து கொண்டோம். தேவதேவன் எழுதிய ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பையும், கவிதைகளையும் கட்டாயமாக படித்து வர அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தேவதேவன் உற்சாகமாக இருந்தார். கவிதையின் மதம் கட்டுரைகளிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என்றார். கேள்விகளுக்கு ஆழமான பதில்களை அளித்தார். இடையிடையே குழந்தைகள் வழி தவறி விழிப்பது போல நின்றுவிடுவார். பல வேளைகளில் அப்படியெல்லாமா எழுதியிருக்கேன், எனக்கே ஞாபகமில்லையே என்று சிரிக்க வைத்தார். தேவதேவன் உள்ளுணர்வாலேயே இயங்குகிறவர், அவருடைய தர்க்கத்தின் எல்லை சிறியது. அதனாலேயே அவரது பேச்சில் சில சமயங்களில் தொடர்ச்சி இல்லை, இல்லாதது போல் தோன்றச் செய்தது. ஆனால் அதை நம் தர்க்க மனம் நிராகரிக்க விடாமல் ஊன்றி கவனித்து தொடர்ச்சியை நாமே உருவாக்கினால் அவை அபாரமான ஆழமும், உள்ளொளியும் கொண்டவை என்பது புரிந்தது. இது சாத்தியப்பட்டது அந்த நிகழ்வு அவருக்காக, அவரையும், அவருடைய கவிதையையும் அறிய, உணர விரும்பும் பங்கேற்பாளர்களால் மட்டுமே ஆனது என்பதால் தான் என்று தோன்றுகிறது.
பெரும்பாலும் நானற்ற தன்மையை, இன்மையை, இயற்கை என்ற தூய ஆற்றலை, இந்த கணத்தில் முழுமையாக இருப்பது குறித்தே பேசினார். அடையாளம் என்பதே வன்முறை என்றார். கவிதை என்பது கலை அல்ல. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உன்னதங்களுமே கவிதையாக இருக்கும் போது கவிதை எப்படி கலை மட்டும் ஆகும். யோகியரையும், ஞானியரையும் நிராகரித்தார். பண்பாடு என்று நம் ரத்தத்தில் உரைந்திருக்கும் தொடர் பதிவுகளை நீக்கி எந்த பிடியிலும் சிக்காமல் இங்கு திகழ வேண்டும் என்றார். பண்பாடு, மதங்கள், தேசங்கள் என மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிவையே உருவாக்கியுள்ளன அதனால் அனைத்தையுமே கைவிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கவிதை ஒரு மதமாகும் போதே இந்த உலகம் உன்னதமாகும் என்றார்.
அனைத்துமே நம்மை சீண்டுபவை, நம்பமுடியாதவை. ஆனால் அவை இயற்கை மீதும், மானுடம் மீதும் அந்த கவிஞன் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால் கோடிட்டு காட்டப்படும்போது அவை மகத்தானவை ஆகிறது. அவரது தாள் பனிந்து, சிறமேற்று எடுத்து செல்லப் பட வேண்டிய கனவாக நம்மில் மாற்றப்படுகிறது. வேதக் கவிதைகளிலிருந்தே கலாச்சாரமும், பண்பாடும், மதங்களும் தோண்றியது. ஆதியில் வார்த்தை இருந்தது. கவிதைகளே மானுட பண்பாட்டின் அடிப்படை எனும்போது, கவிஞனே அதன் கர்த்தாவாகிறான். அவனது கனவான அடையாளங்கள், முரண்கள், தத்துவங்கள், மதங்கள், தேசங்கள், சுரண்டல்கள், போர்கள் அற்ற உலகம் ‘கவிதையின் மதத்தால்’ சாத்தியம் என்றால் அதில் நாமும் இனைய வேண்டியதுதான். உங்கள் பார்வைக்கு நேர் எதிரான பார்வைகள் பல இருந்தன.
வெண்முரசில் ஜனமேஜயன் ஆனையிட்டு வைசம்பாயனர் நடத்தும் ‘சர்ப்பசத்ர’ வேள்வியை போன்றது கவி தேவதேவனின் கனவு. இப்புவியில் காணக்கூடிய மகத்தான கனவு அதுவே. அந்த யாகத்திற்கு அழைத்து வரப்படும் காவிகர்த்தனான வியாசர் நீங்கள். இந்த எதிர் பார்வைகள் கவிக்கும்–காவியகர்த்தனுக்குமான பார்வைகள். அந்த கவியும்–காவியகர்த்தனும் அதை அறிவார்கள். தர்க்கமற்ற தூய உள்ளுணர்விலிருந்து எழுந்த வரும் கனவும், அனைத்து தர்க்கங்களை கொண்டு மேலெலும் உள்ளுணர்வும் என அவை எப்போதும் இங்கு இருப்பவை. ஒன்றை ஒன்று பின்னித் தழுவும் பாம்புகள். அதை அறியும் தோறும் ஆழம் கொள்ளும் நம் சித்தம்.
இப்போது ஒன்றை உணர்கிறேன். நாராயண குருகுலத்திற்கு சுவாமி வியாச பிரசாத் அவர்களை சந்திக்க அடிக்கடி செல்கிறேன். அவருடன் அமரும் சில வேளைகளில் நான் அபரிவிதமான உணர்வையும், அதே வேளையில் அற்ப்பமான புழுவாகவும் உணர்வதுண்டு. துறவிகள் மலை போன்றவர்கள். நாம் சிறு புல். நான் அந்த உணர்வை அடையவே திரும்ப திரும்ப அவரிடம் செல்கிறேன் என்று தோன்றுகிறது.
இந்த நிகழ்வில் கவி தேவதேவனுடைய இருப்பு என்னை அபரிவிதமாகவும், அதே வேளையில் அற்பமாகவும் உணரச் செய்தது.
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
மண்ணில் ஞானம் தேடி அலையும் ஒருவனுக்கு தத்துவவாதிகள், பேரறிஞர்கள், அறிவியலாளர்களின் அருகமைதலைவிட ரிஷி என்றான கவியுடன் உடனிருத்தலே மெய்மை பயக்கும் என்றெண்ணுகிறேன்.
தேவதேவன் அருகில் நான் என்ற ஆணவத்தையும், சதா அலைகழிக்கும் காம, க்ரோத, மோகத்தையும், அறிவின் சுமையையும் கழட்டாமல் அமையவே முடியாது. அவ்வாறு அமையும்போது நாம் அடைவதென்பது
“ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு”
பணிவன்புடன ,
வேலாயுதம் பெரியசாமி
இலக்கியத்தைச் செயலாக்குதல்

Readforte watsup தளத்தில் இல் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு புத்தகத்தை பற்றி ஒரு மணி நேரம் பேசுவேன். சுதந்திர தாகம், எனது இந்தியா, கேள்வி குறி இப்படி. அந்த வகையில் ஜூலை மாதம் 5ஆம் தேதி தங்களின் ஆக சிறந்த படைப்பான வெண்முரசு தொகுதியில் ஒன்றான சொல்வளர்காடு என்ற புத்தகத்தை பத்தி பேசலாம் என்று நினைக்கிறன்.
செயலாக்குதல்
I visited Egypt last year and saw the magnificent temples there. While discussing the temples of Egypt, my guide mentioned that there are many temples in India still in use for worship, and he expressed a desire to visit those temples to observe the rituals himself.
About temples…August 3, 2025
பீத்தோவன், மேதையின் தனிமை
பீதோவன் வியன்னாவில் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே அவர் எழுதிய ஒரு கடிதம் இருந்தது. தன்னை மானுடவிரோதி என்றும் எரிச்சலூட்டுபவர் என்றும் சொல்லவேண்டாம் என்னும் மன்றாட்டு கொண்ட அக்கடிதம் ஒரு மானுட ஆவணம். அதில் அவருடைய கலைமேல் அன்றைய சமூகத்தின் பொதுப்புத்தி வைத்த விமர்சனங்களை எண்ணி வருந்துகிறார். தன் கலையை முழுமையாக வெளிப்படுத்தாமல் சாகக்கூடாது என்பதனாலேயே உயிர்வாழ்வதாகச் சொல்கிறார்.
பீதோவன் அல்லத்து மேலையிசை குறித்து என் அறிவு எல்லைக்குட்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போதுதான் அவர் இசைகேட்கமுடியாமலாகி, தன் கைத்தடியை பல்லால் கடித்து இசையைக் கேட்டார் என்னும் செய்தியை ஆசிரியர் சொன்னபோது அவர் பெயரை கேட்டறிந்தேன். அதன்பின் அவரைப் பற்றி வாசித்து அறிந்திருக்கிறேனே ஒழிய இசையை நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஓர் அகவைக்கு மேல் மேலையிசை போன்ற ஒன்றுக்குள் நுழைவது கடினம், அதற்கான பொறுமையும் உள்ளமும் அமைவதில்லை. உரிய காலத்தில் உள்ளே நுழைபவர்கள் நல்லூழ் கொண்டவர்கள்.
சைதன்யா மேலையிசை, மேலை இலக்கியம், மேலைத் தத்துவம் மூன்றிலும் வாசிப்பு கொண்டவள் என்னும் முறையில் அவளுடைய கருத்தைக் கேட்டேன். இந்த தலைமுறையினர் பொதுவாக பாப் இசை மட்டும்தான் கேட்கிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என் கண்ணுக்குப் படுவதும் பாப் இசைதான். ஐரோப்பியச் செவ்வியல் இசையை, இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், வெறும் ரசிகரான ஒருவர் எப்படி அணுகுகிறார் என்று அறிவதே நோக்கம்.
அந்தத் தூக்கம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் காந்தியின் சத்தியசோதனை நூலை வாசித்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நடத்திய ஒரு பேச்சுப்போட்டியில் வென்று பரிசாக அதைப் பெற்றேன். பெரும் கொந்தளிப்புடன் நான் வாசித்த அந்நூல் இன்று வரை என்னை மிகத்தீவிரமாகப் பாதித்திருப்பதை நான் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.
அவ்வாறு நான் காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் ஒன்று, என் உடலை தொடர்ச்சியாக அவதானிப்பது. உடல்நலமே நம் வாழ்க்கையின் எல்லா செயல்களுக்கும் அடிப்படையானது என்பது காந்தி திரும்பத் திரும்பச் சொல்வது. சாவை அல்ல, படுத்துவிடுவதை அல்ல, உடல்நிலை அளிக்கும் சோர்வாலோ சலிப்பாலோ நம் செயல்களை முழுவீச்சுடன் செய்து நிறைவடைய முடியாமல் ஆவதையே காந்தி அஞ்சுகிறார். எனக்கு அந்த அச்சத்தை அவர் அளித்தார்.
ஆகவே என் உணவு, தூக்கம், கழிவகற்றல் ஆகியவற்றைப் பற்றிய தொடர்கவனமும் அவை சார்ந்த அவதானிப்புகளும் எனக்கு உண்டு. அவை சார்ந்த மருத்துவ- அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்வேன். ஆனால் பலர் இன்று செய்வதுபோல பதற்றத்தை வளர்த்துக்கொள்வதற்காக உடல்நலச் செய்திகளை மிகையான ஆர்வத்துடன் பயில்வதில்லை. (பலர் என்று இங்கே குறிப்பிடுவது அருண்மொழியை அல்ல)
உண்மையில் உடல்நலச் செய்திகளை தெரிந்துகொள்வது எளிது. கடைப்பிடிப்பதே கடினம். நான் எனக்கான நெறிகளை முழுமையாகவே கடைப்பிடிக்க முயல்வேன். ஆகவே என் எடையை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்கிறேன். உணவுப்பழக்கங்களில் சஞ்சலங்கள் இல்லை. தூக்கம் உட்பட எல்லா ஒழுங்குகளும் எனக்கு முக்கியம். என் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே உடல்நலம் சார்ந்த என்னுடைய அக்கறைகள் அனைத்துக்கும் அடிப்படை.
எடையைப் போலவே இப்போது தூக்கத்தையும் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. இயற்கையான தூக்கம் எனக்கு எப்போதும் உண்டு, ஒருநாளுக்கு எட்டு மணிநேரம். காரணம், இரவில் மிதமான உணவும் சீரான உடற்பயிற்சியும். ஆனால் இப்போது தூக்கம் சிக்கலாகும் அகவை. இந்த காலகட்டத்தில்தான் பலர் தூக்கமிழப்புக்கு ஆளாகிறார்கள். மாத்திரைகள் சாப்பிடத் தொடங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள் – ரத்த அழுத்தத்திற்காவது. கணிசமானவர்கள் குடிக்கிறார்கள்.
என் தூக்கத்தில் சிக்கல் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே சென்ற சில மாதங்களாக தூக்கத்தின் வழிமுறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒன்பதரை மணிக்கே படுக்கை. பலசமயம் அரைமணிநேரமாவது படுக்கையில் இருக்க நேர்கிறது. முன்பு அப்படி இல்லை. படுத்த ஐந்தாம் நிமிடமே தூங்கிவிடுவேன். இப்போது மனமும் உடலும் அடங்கவேண்டியிருக்கிறது. விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நடை. பகலில் பதினைந்து நிமிடம் மட்டும் மதியத்தூக்கம். இப்போதெல்லாம் ஏழுமணிநேரம்தான் தூக்கம், அதில் ஆறுமணிநேரம்தான் ஆழ்ந்த தூக்கம்.
காவியம் என் தூக்கத்தின் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துவிட்டது. கடும் முயற்சியால் தூக்கத்தை மீண்டும் சீரமைத்துக்கொண்டேன். உடனே ஐரோப்பியப் பயணம். அது ஒரு பதற்றத்தை அளித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒன்று கவனிக்கிறேன், பயணங்களில் நல்ல செறிவான தூக்கம் அமைகிறது. காரணம் காலைமுதல் தொடர்ந்து அலைந்துகொண்டே இருப்பது. மூளைக்குள்ளும் தகவல்கள் சென்றுகொண்டே இருப்பது. நம் உடலும் உள்ளமும் தூக்கத்துக்காக ஏங்குகின்றன. இந்த ஐரோப்பியப் பயணத்தில் படுத்ததுமே தூக்கம்தான். விழித்ததுமே கிளம்பவும் வேண்டியிருந்தது.
ஆனால் வெள்ளிமலை போன்ற மலைப்பகுதிகளில் மட்டும் ஒன்பது மணிநேரம் வரை தூங்கிவிடுகிறேன். ஏனென்றால் அங்கே எப்படியோ பகலிலேயே உள்ளம் முழுமையாக அடங்கிவிட்டிருக்கிறது. அங்கே பொதுவாக ஆக்ஸிஜனும் கூடுதல், ஒரு சதவீதம் வரை, அதுவே மிகப்பெரிய அளவு என்கிறார்கள். அங்கே காடு இருக்கிறது, வண்டிகள் மிகமிகக்குறைவாகவே வருகின்றன. ஆக்ஸிஜனை அதிகமாக எடுத்துக்கொள்பவை வண்டிகள். ஒவ்வொன்றும் ஒரு சூளை. சென்னை போன்ற நகரில் எத்தனை லட்சம் சூளைகள் எரிந்துகொண்டிருக்கின்றன!
ஓஷோ: மரபும் மீறலும்-8
ஓஷோவும் சிந்தனை மரபுகளும்
நண்பர் கே.வி.அரங்கசாமி ஓஷோ பற்றி முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக இணையத்தில் ஒருவர் எழுதிய கட்டுரையை என்னிடம் காண்பித்தார். அது ‘டேய் முட்டாளே’ என்று வழக்கம்போல ஆரம்பிக்கிறது. ‘ஓஷோவை ஒழுங்காக படித்துப்பார், குர்ஜீஃப்பை படித்துப்பார், ஓஷோ நீ நினைப்பதுபோல் அல்ல’ என்று அந்த ஆசாமி பேசிச்செல்கிறார். முக்கியமாக காமம் பற்றி நான் சொன்ன விஷயம் அவரை சீண்டியிருக்கிறது. ‘ஓஷோ காமத்தை முன்வைக்கவில்லை, அவர் எந்த பெண்ணிடமும் உறவுகொள்ளவில்லை. அவர் அவர்களிடம் மானச லீலைதான் ஆடினார். இதை புரிந்துகொள்வதற்கு உனக்கு பக்குவம் போதாது’ என்றெல்லாம் பேசியிருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று இது வேறு ஒருவரைப்பற்றி சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனைப் பற்றியும் இதேதான் சொல்வார்கள். கிட்டத்தட்ட எல்லோரையும் பற்றியும் இதே வகையில்தான் சொல்லப்படும். முருகனைப்பற்றியும் இவ்வாறு சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு பிள்ளை இல்லை என்பதால் முருகன் வள்ளி தெய்வானையோடு மானச லீலைதான் ஆடினார் என்றுகூட சொல்வார்கள்.
ஓஷோ எனும் தொன்மம்
ஓஷோ பற்றி இன்று எல்லாவகையான புராணங்களும் உருவாகிவிட்டன. அவரைப் பற்றிப் பேசுபவர்கள் அவர் மீதான நம்பிக்கையை மட்டுமே முன்வைக்கிறார்கள். அவை எல்லாமே அவரை ஒரு வகையான அவதாரபுருஷராகக் காட்டுபவை. அவரைப் பற்றிப் பேச தங்களுக்கு மட்டுமே தகுதியுண்டு என எண்ணுபவர்கள், அவரைகளை எவரேனும் விமர்சனம் செய்தால் வசைபாடிக் கொந்தளிப்பவர்கள் பெருகியுள்ளனர். பெரும்பாலான கதைகள் வழக்கமானவை.
இது கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம்போல ஒருவகையான புராண இயந்திரம். அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு ஆன்மீக ஞானி என்றாலும் அவர் இறந்து சில ஆண்டுகளுக்குள் அந்த புராண இயந்திரத்திற்குள் செலுத்தப்பட்டு ஒரு சுற்றுசுற்றி வெளியேவந்து விழுவார்கள். ஓஷோ வெள்ளெலும்பை பெண்ணாக்கிய கதை, ஒயினை கையால் தொட்டு தண்ணீராக மாற்றிய கதை (ஏனெனில் இவர் திருப்பிதான் செய்வார் என்பதால் !) போன்ற கதைகளை உருவாக்கி விடுவார்கள். இந்த புராண இயந்திரத்திற்கு ஒரு முறைமை உண்டு. அதை மாற்ற முடியாது.
நான் ஒரு எழுத்தாளன் என்பது எனக்கு ஒரு சாதகமான அம்சம். ஆன்மீக ஞானிகளைப் போல என்னை அவ்வாறு புராண இயந்திரத்திற்குள் போடமுடியாது. குறைந்தபட்சம் ‘இவர் வேறுமாதிரி ஆள்’ என்று சொல்வதற்குச் சான்றுகளாக எனது படைப்புகளாவது இருக்கும். ஞானிகளை நாம் அவர்களின் பக்தர்கள் வழியாகவும், அவர்களை விளக்கும் பிரசங்கிகள் வழியாகவும், அவர்களின் போலியான நகல்கள் வழியாகவும்தான் அறிமுகம் செய்துகொள்கிறோம். ஆகவே ஞானிகளை ஞானமிருந்தால் மட்டுமே நம்மால் அறியமுடியும் என்பதே இன்றைய நிலை.
புராணமாக்குதல், தன்வயமாக்குதல்தான் ஓர் ஆன்மீக ஞானியை நாம் வழக்கமாக உள்ளிழுத்துக்கொள்ளும் முறையாக உள்ளது. நமக்கு என்ன பிடிக்குமோ, ஏற்கெனவே நாம் எதை நம்பிக்கொண்டிருக்கிறோமோ, ஒரு ஞானி எப்படி இருப்பார் என்று எப்படிப்பட்ட வரையறையை வைத்திருக்கிறோமோ அதை கையில் வைத்துக்கொண்டு பொறுமையின்றி காத்துக்கொண்டிருப்போம். ‘ரொம்பநாளா இருக்கிறானே, சரி எழுபத்தஞ்சு வயசாச்சு இப்போ போயிடுவான்னு நினைக்கிறேன். அப்பாடா போயிட்டான்’ என்று அவனை எடுத்து அந்த இயந்திரத்திற்குள் போட்டு வெளியே தள்ளுவோம். சூளையில் இருந்து வெளிவரும் செங்கல்போல அவர்கள் ஒரே வார்ப்பாக வெளிவருவார்கள். எல்லா செங்கலிலும் சில எழுத்துகள் இருப்பதுபோல, ‘இந்தியன் ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற அச்சில் ஒரே மாதிரி ஆட்களாக அவர்களை அடித்து வெளியே தள்ளுவோம். ஓஷோவைப்பற்றிய இத்தகைய உரையை ஆற்றவேண்டியிருப்பது அத்தகைய புராண இயந்திரத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கவே. அவர் இதுபோன்ற சூளைச்செங்கல் அல்ல, அவர் வேறு என்று சொல்வதற்காகத்தான்.
எழுபதுகளுக்கு முன்னால் பிறந்த என்னைப்போன்ற ஆட்களுக்கு தெரியும், நம்முடைய அப்பாக்கள் வேறுமாதிரி ஆட்கள் என்று. நம் அப்பாக்கள் நம்மிடம் ஜோக் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு பாலுணர்வு உண்டா என்பதே சந்தேகமாக இருக்கும். அவர்கள் சிரிப்பதை நாம் பார்க்கமுடியாது. பெரும்பாலும் வீட்டிற்குள் அவர்கள் குரலை கேட்கவே முடியாது. என் அப்பா வீட்டிற்குள் பெரும்பாலும் பேசுவதே கிடையாது. வெளியேதான் அவரது குரலை கேட்கமுடியும். ஆனால் ஓஷோ நம்மிடம் பேசி சிரிக்கவந்த ஒரு அப்பா. நமது ஞானிகளின் படங்களை பார்த்தால், ஏதோ உருக்கநிலையில் கண்ணீரோடு இருப்பதுபோல இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி இருந்தவர்கள் அல்ல. ஓஷோ ஓர் உரையில் சொல்கிறார், ‘அழுதுகொண்டிருக்கும் ஒரு அப்பாவி இளைஞனுடைய படம்தான் ரோமாபுரி சக்கரவர்த்திக்கு தேவைப்பட்டது. அதைத்தான் ஏசுவாக உருவகித்து வைத்திருக்கிறார். அந்த ஆள் இப்படி இருந்திருக்க மாட்டார், சிரித்துக்கொண்டுதான் இருந்திருப்பார். ஏனெனில் அவர் ஞானி’. ஆனால் நமக்கு எல்லா ஞானிகளும் சிரிக்காமல் சீரியஸாக இருக்கவேண்டும். நம்முடன் சிரித்து விளையாடவந்த ஒரு ஞானி என்று ஓஷோவை சொல்லலாம்.
முன்னர் சபாநாயகர் ஒருவர் இருந்தார். அவருடைய ஆங்கிலம் பற்றிய நகைச்சுவைகள் உண்டு. அவர் ஒருமுறை பாராளுமன்றத்தில் சொன்னார், ‘Prime minister has every rights to appoint and disappoint ministers’ என்று. அதேபோல ‘We have every rights to use and abuse Osho’ என்று சொல்லலாம். அதுதான் நாம் அவரிடம் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். அது அடிக்கடி நமக்கு கிடைக்கக்கூடிய சுதந்திரம் அல்ல.
மீண்டும் ஓஷோத்தனமான நகைச்சுவை ஒன்று சொல்லலாம். ஒரு விடுதியில் ஒருவன் அறையெடுத்து தங்குகிறான். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த அறைக்குள் மூன்று பெண்கள் வந்து அவனுடன் உறவுகொள்கின்றனர். அவனுக்கு என்னதென்று குழப்பமாக இருந்தாலும் சந்தோஷப்படுகிறான், சரி ஏதோ தவறாக வந்துவிட்டார்கள் போல என்று. வெளியே வந்து அறைக்கு பணம் செலுத்தும்போது அங்குள்ளவர் ‘நீங்கள் 3A தானே, உங்களுக்கு கட்டணம் கிடையாது. நாங்கள் உங்களுக்கு ஐம்பது டாலர் தருவோம்’ என்றார். அவனும் அதை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஒருவாரம் கழித்து மீண்டும் அதே அறையில் தங்குகிறான். அப்போதும் அதுபோலவே நடக்கிறது. ஐம்பது டாலர் பணத்தை பெற்றுக்கொண்டு செல்கிறான். இது அவன் நண்பர்கள் வட்டாரத்தில் பரவலாகிறது. அதன்பின் பலர் அந்த 3A அறையை கேட்டுவாங்கி தங்கி, ஐம்பது டாலர் வாங்கிச்செல்கிறார்கள். அதன்பின் டிரம்ப் காதுக்கு அவ்விஷயம் செல்கிறது. அவர் அதை பரிசீலித்து பார்ப்பதற்கு அதே அறையில் சென்று தங்குகிறார். அதே விஷயங்கள் நடக்கின்றன. வெளியே வந்த அவரிடம் ஆயிரம் டாலர்கள் கொடுக்கிறார்கள். ‘வழக்கமாக ஐம்பது டாலர்தானே கொடுப்பீர்கள்’ என்று கேட்கிறார் டிரம்ப். அதற்கு அவர்கள், ‘ஆமாங்க, ஆனா அமெரிக்க அதிபரின் ப்ளூ ஃபிலிம் அபூர்வமானது இல்லையா !’ என்றனர்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் பிறந்த மண்ணில், இப்படி இளைஞர்களிடம் சிரித்துப்பேசவும் விளையாடாவும் செய்யக்கூடிய ஒரு ஞானி, நாம் வீசக்கூடிய பந்துகளை எதிர்கொள்ள மறுமுனையில் மட்டையுடன் நிற்கக்கூடிய ஒருவர் மிக அபூர்வமானவர் என்பதை சொல்லவே. அவரை புரிந்துகொள்வதற்கு நமக்கு அவ்வளவு சிரமங்கள் உள்ளன. எனவே, புரிந்துகொள்வதை விட எளிது, ஏற்கெனவே இருக்கும் வார்ப்பாக அவரை மாற்றிக்கொள்வதுதானே. அதைத்தான் நாம் என்றுமே செய்துகொண்டிருக்கிறோம்.
நம் அப்பாக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சிடுசிடுப்பான அப்பா, ஊதாரி அப்பா, அன்பான அப்பா என்பதாக பலவிதம். ஆனால் எல்லா அப்பாக்களும் இறந்து பதினாறு நாட்கள் கழித்து ஒரே அப்பாதான். ஒரேமாதிரி புகைப்படம், ஒரேமாதிரி மாலை, ஒரேமாதிரி கதை. ‘எங்கப்பா இப்படித்தான் இருப்பார்’ என்று அத்தனைபேரும் ஒரே கதையைத்தான் சொல்வார்கள். ‘உங்கள் அப்பாவுக்கென்று தனியாக சில குணங்கள் இருந்திருக்குமல்லவா?’ என்று நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் சொன்னதில்லை. எல்லா அப்பாக்களும் ‘அப்பா’ எனும் டெம்ப்ளேட்டில் பொருத்தப்பட்டுவிடுவார்கள். இதைத்தான் நாம் நமது ஞானிகளுக்கும் செய்கிறோம். ஓஷோ மறைந்து முப்பதாண்டுகளுக்கு பிறகு அவரை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
ஓஷோவும் இந்தியப் பொதுமக்களும்.
இங்கு இரண்டு நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன். ஓஷோ புனேவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. அவர் இந்திரா காந்தியை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார். Below the belt என்று சொல்வார்களே, அந்த அளவுக்கான விமர்சனம். அதன் பிறகு மொராஜி தேசாய் பிரதமரானார். ஆனால் மொராஜி தேசாயின் சிறுநீர் பற்றித்தான் ஓஷோ அதிகமாக பேசியிருப்பதாக சொல்கிறார்கள். அவர் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எதிரி. அவர்கள் அவரை திருப்பி எதிர்த்தார்கள். பாரதீய ஜனசங்கம் அவரை கடுமையாக எதிர்த்தது. அவரைப்பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் வந்தன. அவர் ஆசிரமத்தில் போதைப்பொருள் புழங்குகிறது, பாலுறவு களியாட்டங்கள் நடைபெறுகின்றன என்பதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருந்தன. இவ்வளவு செய்திகள் வந்தபோதிலும் இந்தியாவில் மக்கள் மத்தியில் அவரைப்பற்றி அவ்வளவு எதிர்மறையாக எதுவுமே நடைபெறவில்லை.
ஓர் இதழாளர் மனமுடைந்து எழுதுகிறார், ‘இவர் தன்னை சாமியார் என்று மட்டும் சொல்லிக்கொள்ளாமல் இருந்திருந்தால் நடப்பதே வேறு. இவரை அடித்தே கொன்றிருப்பார்கள்’ என்று. சாமியார் என்ற வார்த்தைதான் அவரை இதுவரை காப்பாற்றி கொண்டுவந்திருக்கிறது,இந்தியாவில் சாமியார்களை எதுவும் செய்யமுடியாது என்கிறார் அந்த இதழாளர்.. அது உண்மையும்கூட. துறவி, தத்துவ ஞானி என்கிற விஷயம் அவர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தையும் அனுமதியையும் அளிக்கிறது. இந்திய மக்களுக்கு ஓஷோவை புரிந்ததா என்றால் புரியவில்லை. அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் வைத்து ஓஷோ போன்ற ஒருவரை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மதித்தார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஆனால் அவருடைய சுதந்திரத்தை, வழிவிட்டு விலகிச்செல்லுவதற்கான அவருடைய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
புனேவில் ஒரு கூடைக்கார பெண்ணிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியெடுக்கிறார். ‘ஓஷோ இப்படியெல்லாம் செய்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறார். அந்தப்பெண் ஒரே வார்த்தையில் ‘அவர் சாமியார்’ என்று பதில் சொல்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும், ‘அது உண்மைதான். இருப்பினும் அவர் இப்படியெல்லாம் செய்கிறாரே…’ என்றார். அந்தப்பெண் மீண்டும், ‘இல்லங்க, அவர் சாமியார்தானே’ என்கிறார். அதுதான் இந்தியாவின் பதில். அவரைப்போன்றவர்கள் நாம் இங்கு வகுத்து வைத்திருக்கும் வழக்கமான சட்டகத்திற்கு வெளியே இருக்கக்கூடியவர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே நான் என்னுடைய நிபந்தனைகளுடன் அங்கு செல்லமாட்டேன் என சாமானியன் சொல்கிறான்.
நெடுநாட்களுக்கு முன்னர் குருநித்யாவின் மாணவர் பிரபுதத்தா அவர்களிடம் கேட்டேன், ‘அமெரிக்கா மாதிரி இங்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வரப்போகிறது. ஓர் அடையாள அட்டை எடுத்தாகவேண்டும் என்று அரசாங்கம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அதற்கு அவர் ‘சிறை செல்வேன். ஆனால் அட்டை வாங்கமாட்டேன்’ என்றார். அந்தச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் தொடர்ந்தும் அளித்தாகவேண்டும். இந்த பொதுச் சமூகத்தின் அத்தனை நிபந்தனைகளுக்கும் ஒரு ஞானி, அல்லது கலைஞன் கட்டுப்பட்டு இருந்தான் என்றால், இந்த பொதுச் சமூகத்தின் கண்களுக்கு எது தெரிகிறதோ அதுதான் அவன் கண்களுக்கும் தெரியும். பொதுச் சமூகம் நம்புவதை மட்டும்தான் அவனால் சொல்லமுடியயம். இங்கிருந்து அனைத்தையும் விட்டுவிட்டு ‘அங்கு’ செல்வதுதான் துறவேவொழிய, இங்கிருந்து வீடு, துணி, சோறு அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கு செல்வதல்ல துறவு. இங்கிருக்கக்கூடிய சௌகரியங்களை மட்டுமல்ல, அடையாளங்கள், மரியாதைகள், நெறிகள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் துறந்துதான் அங்கு செல்கிறார்கள்.
துறவறம் மேற்கொள்பவர் உயிரோடு இருக்கும் தங்கள் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்துவிட்டுத்தான் போகவேண்டும். இரிக்கப் பிண்டம் என்று அதை சொல்வார்கள். இருக்கும்போதே அளிக்கப்படும் பிண்டம் அது. இப்படி எனது குடும்பத்தில் ஒருவர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது பேசும்போது எளிதாக இருக்கும். ஆனால் அம்மா உயிருடன் இருக்க, தன் முப்பத்தாறு வயதில் ஒருவர் அம்மாவுக்கு இறுதிக்கடன் செய்வதை பார்ப்பது கடினமான விஷயம். அந்த அம்மாவின் முகம் என் நினைவில் உள்ளது. அதையெல்லாம் ஏன் செய்யவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது பல ஆண்டுகளாக இங்குள்ளது. ஆனாலும் சாமானியர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் மரபின் மீதான அச்சத்தாலும் ஏற்பாலும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அனுமதித்திருக்கிறார்கள்.
நான் தொடர்ந்து இதுபோன்ற ஆட்களைச் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட துறவிபோன்ற ஒரு நிலையில் அலைந்து கொண்டிருக்கும்போது ஓஷோ போன்று குறைந்தது இரண்டு பேரை பார்த்த நினைவுண்டு. ஒருவர் என்னிடம் சொன்னார், ‘எனக்கு பிச்சையெடுப்பது பிடிக்காது, எவரிடமும் எதையும் வேண்டுவது பிடிக்காது. முக்கியமாக அவர்களிடமிருந்து எனக்கு மோசமான அதிர்வுகள் வருகின்றன. உலகியலாளன் எனக்கு ஒரு லௌகீக முகத்தை காட்டுகிறான். அது எனக்கு நேரவிரயம். உணவுக்காக அரைமணிநேரம், ஒருமணி நேரத்தை எல்லாம் என்னால் செலவழிக்க முடியாது’. நான் கேட்டேன், ‘அப்படியென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அவர் ‘நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு திருட்டை செய்வேன். அந்த பணத்தை வைத்து சாப்பிட்டுக்கொள்வேன்’ என்றார். எனக்கு சற்று பதற்றமாகியது. ஏதேனும் குறியீட்டுரீதியாக பேசுகிறாரா என்ற சந்தேகத்துடன் ‘திருட்டுங்களா ?’ என்றேன். ‘திருட்டேதான்’ என்றார்.
அ.லெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தர் வரலாறு என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வு வருகிறது. விவேகானந்தர் துறவியாகி இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருக்கும்போது காசிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பத்து துறவிகள் சென்று தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் ஊருக்குள் சென்று பத்து துறவிகள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு உணவு தரும்படியும் கேட்கிறார். ஊர்க்காரர்கள் உணவுதர மறுத்துவிடுகின்றனர். அதனால் விவேகானந்தர் உட்பட அனைத்து துறவிகளும் கையில் தடிகளுடன் ஊருக்குள் சென்று வீட்டுக்கதவுகளை தட்டி மிரட்டி உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். அதைப்பற்றி விவேகானந்தர் சொல்லும்போது, ‘இது சரியா அல்லது தவறா என்பதல்ல. சரி, தவறுகளுக்கு அப்பாற்பட்ட வேறொன்று உள்ளது, அதுதான்’ என்கிறார். இதற்குமேல், இந்த உலகின் விதிகளை கொண்டு அவர்களை மதிப்பிட முடியாது. இது இங்கே பல ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது.
ஏன் சாமானியர்களுக்கு ஓஷோ மீது ஒவ்வாமை இருந்தாலும் காழ்ப்பு வரவில்லை ? ஏன் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒருவரை எப்படியோ ஏற்றுக்கொள்கிறார்கள் ? ஏனெனில் இதேபோன்ற ஒருவர் அவர் தெருவிலும் இருப்பார். ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறான ஒருவர் இருக்கிறார். ஏதேதோ செய்திருக்கிறார்கள். மாந்திரீகச் சடங்குகள், பலிபூஜைகள் செய்திருக்கிறார்கள், நிர்வாண பூஜைகள் செய்திருக்கிறார்கள். நான் நடைப்பயிற்சி செல்லும் வழியில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஆறேழு சமாதிகள் உள்ளன. எல்லாமே துறவிகளின் சமாதிகள். அங்கு வந்த ஒரு விவசாயியிடம் அதுபற்றி கேட்டேன். அதில் இருந்த ஒரு சாமியார் பெண்களை வைத்து நிர்வாண பூஜைகளெல்லாம் செய்திருக்கிறார் எனவும், அதை தான் சிறுவயதில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். அவருக்கு அதற்குமேல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஞானி என பக்தியுடன் சொன்னார். ஊருக்குள் உட்கார்ந்து இதை செய்யக்கூடியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர் இன்று ஆலமரத்தடியில் சமாதியாய் இருக்கிறார். யாரோ இரண்டுபேர் ஆண்டுக்கு ஒருமுறை வந்து தீபம் ஏற்றி மாலையிட்டுவிட்டு செல்கிறார்கள்.இந்தியாவில் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு சித்தருடைய சமாதியாவது இருக்கும் என்று ஜெயகாந்தன் சொல்வார். அத்தனைபேரையும் நமது சமுதாயம் ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அவர்கள்மீது பகைமையை உண்டாக்கிக்கொள்ளவில்லை.
இங்கு ஓஷோவின் நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது. சர்தார்ஜி ஒருவர் ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார். எதிரில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருக்கிறார். அவர் ஒரு டப்பாவை திறந்து அதில் இருக்கும் பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைக்கிறார். சர்தார்ஜிக்கு அதன் நாற்றம் தாங்கமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பெரியவர் கழிவறைக்கு சென்றபோது, சர்தார்ஜி அந்த டப்பாவில் மீதமுள்ள ஒன்பது சுருட்டுகளையும் எடுத்து தனது ஆசனவாயில் செருகிவிட்டு வைத்தார். அந்த பெரியவர் திரும்பிவந்து ஒரு சுருட்டை எடுத்து முகர்ந்து பார்த்தார். அது நாற்றமடித்ததால் தூக்கி வெளியே வீசிவிட்டார். இன்னொன்றை எடுத்தார். அதுவும் நாற்றமடித்தது. இப்படியாக ஒன்பது சுருட்டுகளையும் தூக்கி வீசிவிட்டு, இன்னொரு டப்பாவை எடுத்தார். அதில் இருந்த பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைத்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சர்தார்ஜி, அந்த பெரியவர் மீண்டும் கழிவறைக்கு சென்றவுடன் அத்தனை சுருட்டுகளையும் எடுத்து முன்புபோலவே செய்துவிட்டு திருப்பி வைத்துவிட்டார். அந்த பெரியவர் திரும்பிவந்து அந்த ஒன்பது சுருட்டுகளையும் முகர்ந்துவிட்டு தூக்கி வெளியே போட்டுவிட்டார். அரைமணிநேரம் கழித்து சர்தார்ஜி பெரியவரிடம் ‘சுருட்டு இருக்குங்களா ?’ என்று கேட்கிறார். ‘அந்த பழக்கமே விட்டுப்போச்சுங்க’ என்கிறார் பெரியவர். சர்தார்ஜி ‘எனக்கு பழகிடுச்சுயா…’ என்றார்.
ஓஷோவும் மேலைநாடுகளும்
இந்திய சமுதாயத்திற்கு நெடுங்காலமாக பழகிப்போனவர்கள் நம் ஞானிகள். ஓஷோ போன்றவர்கள் நமக்கு பழகினவர்கள்தான். ஆனால் அமெரிக்கர்களுக்கு அப்படியல்ல. எண்பதுகளில் ஓஷோ அமெரிக்கா செல்கிறார். ஓரிகோனில் பிரம்மாண்டமான ஓஷோ கம்யூனை உருவாக்கினார். மிகச்சில ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த அமெரிக்காவும் அவருக்கு எதிராக திரும்பியது. அவர்களால் ஓஷோவை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவரை அவர்கள் வேட்டையாடினர், சிறையிலடைத்தனர், நாடுகடத்தினர். அமெரிக்கா தன்னை சுதந்திர சிந்தனை கொண்ட சமூகம் என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால் அது அன்று செய்த அந்த நடவடிக்கை சார்ந்து குற்றவுணர்வும் தாழ்வுணர்வும் அவர்களுக்கு உண்டு. நாம் ஒரு தவறான விஷயத்தை செய்துவிட்டால் நாமே அதை நியாயப்படுத்தி பேசத்தொடங்குவோம். இன்று ஓஷோவை பற்றி நாம் பேசுவதைவிட அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் எதிர்மறையாக. காரணம் அந்த குற்றவுணர்வுதான்.
ஓஷோவை ஒரு வில்லனாக, தீய சக்தியாக, ஒருவகையான நவீன சாத்தானாக சித்தரிக்கக்கூடிய குறைந்தது மூன்று சினிமாக்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். நானே ஒரு சினிமா பார்த்திருக்கிறேன். அதில் ஓஷோ போன்று ஒருவர் வருவார். அங்கு கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்குவார்கள், மைக்கில் ஆணைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நெற்றியில் சாத்தானின் அடையாளத்தை போட்டிருப்பார்கள். அனைவரையும் சித்திரவதை செய்வார்கள். அத்தகைய ஒரு படம். பரிதாபமாகத்தான் இருந்தது. ஏனெனில் ‘சாத்தான் வழிபாட்டாளர்’ என்பது அவர்களுக்கு தெரிந்த ஒரு டெம்ப்ளேட். அந்த டெம்ப்ளேட் அவர்களுக்கு ஆயிரமாண்டுகளாக உள்ளது. அதை ஓஷோவின்மீது போடுகிறார்கள். குறைந்தது இரண்டு அல்லது மூன்று சினிமாத்தொடர்கள் இருக்கின்றன. சமீபத்தில்கூட ஒரு சீரியல் வந்தது. பலரும் அதை பார்த்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து ஒன்று வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும், வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
அவர்கள் ஓஷோவைப் பற்றின அத்தகைய சித்திரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். ஏனெனில் ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்வதற்கான தத்துவார்த்தமான கருவி அவர்களிடம் இல்லை. ஆயிரமாண்டுகளாக அவர்களுடைய பண்பாட்டில் அது இல்லை. முன்காலத்தில் அங்கும் அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் டையோஜெனிஸ் (Diogenes) ஒரு குழாய்க்குள் வாழ்ந்திருக்கிறார். அந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அலெக்ஸாண்டர் அவரிடம் சென்று ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டபோது, ‘அந்த வண்டியை கொஞ்சம் நகர்த்திவை, நிழலடிக்கிறது’ என்றாராம். நாஸ்டிக் மரபுகள் (Gnosticism) இருந்திருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்ள உதவவில்லை. ஓஷோ அங்கு சென்று ஒரு குகையில் பட்டினி கிடந்திருந்தால் அவரை கிறிஸ்தவ புனிதர்களில் ஒருவராக சேர்த்திருப்பார்கள். ஆனால் ஐநூறு வைரங்கள் பதிக்கப்பட்ட நெற்றிப்பட்டை அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் ஒருவரை எப்படி புரிந்துகொள்வது, எங்குசென்று சேர்ப்பது ?
இந்த உரைக்காக நான் தயார் செய்துகொண்டிருந்தபோது, ஓஷோவின்மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகள், வழக்குகளை புரட்டிப்பார்த்தேன். ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களை வைத்து நீங்கள் ஆவணப்படத்தில் உள்ள சித்திரத்தை நம்பமுடியாது. ஏனெனில் ஒரு குற்றம்கூட ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கொலை, கட்டாய உழைப்பு, அடிதடி உள்ளிட்ட பல வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. எதுவுமே ஜூரி முன்னிலையில்கூட பதிவு செய்யப்படவில்லை. அவரை அழைத்து மிரட்டினார்கள், சிறையில் வைத்தார்கள், பின்பு வெளியே அனுப்பினார்கள். அவருடைய மொத்த சொத்தும் தேசியமயமானது. அவர்மீது வைக்கப்பட்ட உச்சகட்ட குற்றச்சாட்டே, அந்த குறிப்பிட்ட கிராமத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்கொள்ள முயன்றார் என்பதே.
இதேபோல இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் வந்து ஆசிரமம் அமைத்து சட்டப்பூர்வமாக சேவையாற்றிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர்மீது அதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஒரு குற்றம்கூட நிரூபிக்கப்படாத நிலையிலும் அவரை இந்தியாவை விட்டு துரத்தினால், இதே அமெரிக்கா நம்மைப்பற்றி என்ன சொல்லும் ? நாம் அவ்வாறு செய்தது கிடையாது. ஆனால் நாம் காட்டுமிராண்டிகளாகவும் அவர்கள் நவீன சிந்தனையின் முகங்களாகவும் அறியப்படுகிறார்கள்.
அமெரிக்கா சென்றுவந்த ஒருவருக்குத்தான் இந்த வேறுபாடு தெரியும். ஆனால் அங்கு குடியேறியவனுக்கு அது தெரியாது. ஏனெனில் அவன் அங்கு இரந்துண்டு ஏற்று வாழக்கூடிய இடத்தில் இருப்பவன். அமெரிக்கர்களை விட மிகப்பெரிய தேசபக்தர்கள் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள்தான். நான் பார்த்தவரைக்கும் இந்த அளவு தேசபக்தி உடைய மக்களே உலகில் கிடையாது. சிங்கப்பூரிலும் அப்படித்தான். சிங்கப்பூர் தேசிய தினத்தன்று, அங்கிருக்கக்கூடிய இந்தியர்கள் தேசபக்தியில் உருகி, தேசியக்கொடியை சட்டையாக அணிந்துகொண்டும், அதை கையில் வைத்து ஆட்டிக்கொண்டும் இருப்பார்கள். இதில் பத்தில் ஒரு பங்காவது இந்தியாவில் இருக்கும்போது இருந்திருந்தால் நாம் இன்று இப்படி இருந்திருக்கமாட்டோம் .அதனால் அத்தகையவர்களுக்கு அது தெரியாது. ஆனால் அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும், அமெரிக்கா ஒரு ஜனநாயக தேசமல்ல, அது அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ தேசம் என்று. அது அளிக்கும் சில சலுகைகள் உள்ளன. ஆனால் அந்த சலுகைகளுக்கு அப்பால் யாரும் எதுவும் பேசமுடியாது.
ஓஷோ அந்த எல்லைக்கோட்டை தாண்டிச்சென்றார். அவருடைய தவறு என்பது, அது ஒரு ஜனநாயக தேசம் என்று சொல்லி அவரை அழைத்து சென்றவர்களை நம்பி அங்கு சென்றதுதான். தனது கருத்துகளை முன்வைக்க இங்கே இடமில்லை என்றும், தனக்கு இங்கே எதிர்ப்பு இருப்பதாகவும், இன்னும் நவீனமான, அடுத்தகட்டத்தில் இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் தான் பேசமுடியும் என்றும், எனவே அங்கு சென்று ஒரு கம்யூனை உருவாக்குவதாகவும் சொல்லித்தான் அங்கு சென்றார். அங்கே அவமதிக்கப்பட்டு மீண்டும் திரும்பிவந்தார். ‘இதுதான் எனது நிலம். எல்லா மீறல்களுக்கும் இடமளிக்கும் நாடு. இங்கிருந்து அல்லாமல் வேறு எங்கிருந்தும் எதையும் என்னால் சொல்லமுடியாது’ என்று இங்கு வந்து சொன்னார்.
ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி ஒருவர் ரயிலில் இருந்து இறங்க முற்படுகிறார். அப்போது சிலர் கீழே இருந்து ரயிலில் ஏற முற்படுகிறார்கள். நம்பூதிரி, ‘கொஞ்சம் இருங்க, நான் இறங்கிக்கிறேன்’ என்றார். கீழே இருந்தவர்கள் ‘நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ஏறிக்கிறோம்’ என்றனர். அப்போது நம்பூதிரி சொன்னார், ‘நீங்க வேற வண்டியில ஏறமுடியும். ஆனா நான் இதுல இருந்துதான் இறங்க முடியும்’. ஓஷோ போன்ற ஒருவர் இங்கிருந்து தவிர வேறு எங்கிருந்தும் பேசமுடியாது.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
எ.சுப்பராயலு- தமிழ்விக்கி சிறப்பு விருந்தினர்
எ. சுப்பராயலு தற்போதுள்ள வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். எ. சுப்பராயலு பி.டி. சீனிவாச ஐயங்கார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகிய முக்கிய வரலாற்றாசிரியர்களின் நிறையில் வருபவர். சோழர் கால வரலாறு குறித்து எ. சுப்பராயலு செய்து வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியமானவை.
எ.சுப்பராயலு ஈரோட்டில் ஆகஸ்ட் 15- 16 தேதிகளில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுகிறார்
எ.சுப்பராயலு
எ.சுப்பராயலு – தமிழ் விக்கி
தத்துவமும் இலக்கியமும்
நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.
தத்துவமும் இலக்கியமும்
The place and the mood had a dreamy effect on me. Yes, we have to explore the depth of our spirituality and culture only in the rock art of cavemen, not with the articulated religions.
August 2, 2025
அஞ்சலி, எம்.கே.சானு
எம்.கே.சானு இன்னும் மூன்று ஆண்டுகளில் நூறு அகவையைத் தொட்டிருப்பார். 2018 ல் அவருடைய 90 ஆவது அகவை நிறைவை எர்ணாகுளத்தில் கொண்டாடவேண்டும் என்று திரைக்கதை எழுத்தாளர் ஜான் பால் முயற்சி எடுத்தார். மூன்று முறை நாள் குறிக்கப்பட்டாலும் சானு அவர்களின் உடல்நிலைக்குறைவால் அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. 2022 ல் ஜான் பால் மறைந்தார்.
போளச்சன் என அழைக்கப்பட்ட ஜான் பால் எனக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்.நான் சந்திக்க நேர்ந்த மனிதர்களிலேயே இனியவர், ஒரு வகையில் தெய்வீகமானவர். அவர் கடைசிக்காலத்தில் சானு மாஸ்டருக்கு அணுக்கமானவராக திகழ்ந்தார். போளச்சன் அப்படி பலருக்கு அணுக்கமானவர். பலநூறு பேருக்கு. சானு மாஸ்டரிடம் ஒரு முறை ஃபோனை கொடுத்து என்னை பேசச்சொன்னார். நான் ஒரு சில சொற்கள் பேசினேன்.
ஜான் பாலிடம் என்னை அவ்விழாவில் பேசவைக்கவேண்டும் என விரும்பிச் சொன்னவர் எம்.கே.சானு மாஸ்டர். எனக்கு நெருக்கமாக இருந்த நால்வர் அவருக்கும் அணுக்கமானவர்கள். அந்நால்வருமே என் ஆசிரியர்கள். சானு மாஸ்டர் குரு நித்ய சைதன்ய யதியின் தோழர். எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பப் பணிக்கர் ஆகியோருக்கும் அணுக்க நண்பர். நித்ய சைதன்ய யதிக்கு சானு மாஸ்டர் எழுதிய கடிதங்களை நான் படித்திருக்கிறேன்.
எம். கே. சானு 17 அக்டோபர் 1928ல் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்லூரி ஆசிரியராக ஆனார். 1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ அவருடைய முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.
எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார்.
நான் 1987 ல் ஐயப்பப் பணிக்கரின் இல்லத்தில் சானு மாஸ்டரைச் சந்தித்தேன். ஒரு சில சொற்கள் அறிமுகம். அவர்கள் பேசிக்கொண்டனர், நான் கேட்டுக்கொண்டு நின்றேன். 1988ல் பி.கே.பாலகிருஷ்ணன் இல்லத்தில் அடுத்த சந்திப்பு. அப்போதும் மரியாதையான விலக்கம்தான்.
என் ஆசிரியர்கள் அனைவருமே சானு மாஸ்டர் பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன். அவர் இலக்கியவிமர்சனம்,இலக்கிய ஆய்வுகள் என பல எழுதியிருந்தபோதிலும் அவருடைய முதன்மை நூல்களாகக் கருதப்படுபவை அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள்தான் நாராரயண குரு, சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.கோவிந்தன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல்படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
நான் எம்.கே.சானு மாஸ்டரின் நான்கு மேடையுரைகளைக் கேட்டிருக்கிறேன். நான்குமே 1985 முதல் 1988 வரை கண்ணனூரில். கேரளம் கண்ட மாபெரும் மேடைப்பேச்சாளர்களில் ஒருவர் அவர். தமிழகத்தின் மேடைப்பேச்சாளர்களில் எவருடனும் உடனே ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அவருடையது மேடையில் ’நிகழ்த்தப்படும்’ ஒன்று அல்ல. அவர் மேடையில் சிந்திப்பவர். மேடையில் ஒரு பேரறிஞன் தன் சிந்தனையின்மேல் ஏறி மேலே மேலே சென்றுகொண்டே இருப்பதே மாபெரும் சொற்பொழிவு.
கேரளத்தில் சானு மாஸ்டரின் தலைமுறையின் முதன்மைச் சொற்பொழிவாளர்கள் மூவரில் எம்.என்.விஜயன், சுகுமார் அழிக்கோடு ஆகியோர் எஞ்சியவர்கள். மூவரின் உரைகளுமே மகத்தான அறிவுநிகழ்வுகள். சரியான மேடையுரை என்பது ஏதோ ஒரு கணத்தில் அந்த உரையை நாமே நிகழ்த்துவதுபோல உணரச்செய்வது என நான் அறிந்தது அவர்களிடம்தான். எம்.என்.விஜயனின் உரை மிகமெல்ல ஒலிப்பது. மிக நிதானமான குரல். ஒவ்வொரு சொற்றொடரும் கவித்துவமானவை, முன்பு இல்லாமல் அப்போது உருவாகி வருபவை. ஒரு சொற்றொடர்கூட வீணற்ற அந்த உரை ஒருவகையான நினைவோட்டமும்கூட. படிமங்களாலானது. விஜயனின் பாணியில்தான் இன்று கல்பற்றா நாராயணன் உரையாற்றுகிறார்.
அழிகோடின் உரை ஓர் அருவி. அணிச்சொற்றொடர்கள், கதைகள், மேற்கோள்கள், கவிதைகள், நையாண்டிகள் என பெருகிச்செல்லும் அந்த உரை ஒருபோதும் திரும்ப நிகழ்வதில்லை. அவருடைய நினைவுத்தொகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக அவை அவையினர் முன் பொழிகின்றன.
எம்.கே.சானுவின் உரை மிகச்செறிவான கட்டமைப்பு கொண்டது. அவர் எழுதிய ஒரு சிறு நூலை நினைவுபிசகாமல் திரும்பச் சொல்வதுபோல தோன்றும். மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் இயல்புக்கு அது ஒத்துவருகிறது. அத்துடன் நான் நினைவுகூர்கையில் சானு மாஸ்டரின் உரைகள்தான் தெளிவாகவும் முழுமையாகவும் மீண்டு வருகின்றன.
எனக்கு சானு மாஸ்டரை நன்றாகத் தெரியுமென்றாலும் அவருக்கு என்னைத் தெரிந்தது ஜான் பால் 2014 ல் ஏற்பாடு செய்திருந்த பி.கே.பாலகிருஷ்ணன் நினைவுப் பேருரையை ஆற்றும் பொருட்டு நான் எர்ணாகுளம் சென்றிருந்தபோது. சங்ஙம்புழா பார்க்கில் நிகழ்ந்த அவ்விழாவுக்கு சானு மாஸ்டர் பார்வையாளராக வந்தார். அவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த அரங்கில் இருந்த அறுபது கடந்த பெரும்பாலானவர்களுக்கு அவர் ஆசிரியர், எஞ்சிய பலருக்கு அவர் ஆசிரியர்களின் ஆசிரியர். ஒவ்வொருவராக கால்தொட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
நான் முதலில் பேசினேன். அவர் அமர்ந்திருந்த மேடையில் பேசுவதென்பது எளிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் நான் என் தன்னம்பிக்கையை ஒரு தவம் என ஈட்டிக்கொண்டவன், நித்ய சைதன்ய யதியின் மாணவன் என்னும் வகையில். என் பேச்சு சிறப்பான ஒன்று என அனைவரும் பாராட்டினர். எனக்கும் நிறைவளித்த ஒன்று அது.
அடுத்து சானு பேசினார். அவர் காரிலிருந்து இறங்கும்போது தள்ளாடிக் கொண்டிருந்தார். இருவர் கைத்தாங்கலாகத்தான் மேடைக்குக் கொண்டுவந்தார்கள். அமர்ந்திருக்கையிலும் தலையும் கைகளும் ஆடிக்கொண்டிருந்தன. அவரை ஒருவர் தூக்கித்தான் மைக் அருகே கொண்டுவந்தனர். அவர் மேடையில் நின்றதும் சட்டென்று உடல் நிமிர்ந்தது. தலை உறுதிகொண்டது. “தியாகங்களால்தான் கருத்துக்கள் நிலைகொள்கின்றன, தர்க்கங்களால் அல்ல” என்ற முதல் வரி கணீரென ஒலித்தது. அங்கே இன்னொருவர் வந்து நின்று பேசுவதுபோல. காலாதீதமான ஒருவர். உடலெனும் பருப்பொருளுக்கு அப்பாற்பட்டவர். அந்த மெய்சிலிர்ப்பை பலமுறை நண்பர்களிடையே சொல்லியிருக்கிறேன்.
தெளிவாக வரையப்பட்ட வரைபடத்தின் மேல் நுணுக்கமாக, முழுமையாக ஒரு கட்டிடம் எழுவதுபோல சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்தது. ஒரு சொல் வீணாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட காற்றுவெளியில் விரிந்திருந்த ஒரு நூலை துல்லியமான உச்சரிப்புடன் வாசிப்பது போலிருந்தது. மூச்சின் ஒலிகூட இல்லை. சொல்லுக்காக தயங்கவில்லை. பேச்சாளர்கள் எவரும் தவிர்க்கமுடியாத நிரப்புச் சொற்கள்கூட இல்லை.
பேச்சு முடிந்து மீண்டும் கைத்தாங்கலாக வந்து அமர்ந்தார். விழா முடிந்ததும் நான் சென்று கால்தொட்டு வணங்கினேன். என் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். “நல்ல பேச்சு” என்றபின் அருகே நின்ற மூத்த இதழாளரிடம் “இவன் பேச்சு நல்லது. அதை பெரிதாகக் கொடுத்தால்போதும்” என்று ஆணையிட்டார். அவ்வாறுதான் நாளிதழ்களில் என் பேச்சு முதன்மையாக வெளிவந்தது.
அவருடைய இயல்பிலேயே அந்த ஆணையிடும் நிமிர்வு இருந்தது. அவர் வாழ்நாள் முழுக்க ஆசிரியர் என்பதனால் அறிவதிகாரமாகவே அதை அடைந்திருந்தார். ஒருமுறை கேரளத்தில் ஒரு கல்லூரியின் ஆசிரியர் பணிக்கான நேர்முகம் நடைபெற்றது. நாராயணகுருவின் மரபில் வந்தவர்களின் நிறுவனம் அது. அன்று தற்செயலாக அங்கே வந்திருந்த சானு அவ்வறைக்குள் வந்து அமர்ந்தார்.அவர்கள் ஏற்கனவே அவர்களின் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு வேலையை உறுதி செய்திருந்தனர். நேர்முகம் கண் துடைப்புதான். அனைவருக்கும் அது தெரியும்.
நேர்முகத்துக்கு நானறிந்த ஒரு பெண் சென்றிருந்தார். அவர் குரு நித்யாவின் ஒரு நூலை மொழியாக்கம் செய்தவர். தன் தகுதிச்சான்றிதழுடன் அவர் அந்நூலையும் எடுத்து வைத்தார். சானு அந்த நூலை எடுத்துப் புரட்டினார். “இந்த பெண் போதும்…இவளை நியமித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். வேறு வழியே இல்லை, அந்தப்பெண் அங்கே ஆசிரியராக ஆனார்.
எம்.கே.சானு பற்றி பி.கே. பாலகிருஷ்ணன் ஒரு நிகழ்வைச் சொன்னார். சானு இருந்த ஒரு நட்புக்கூடலில் ஒரு பேராசிரியர் நாராயணகுரு பற்றி பிழையான தகவல்களுடன் அவதூறுகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சாதி வெறிதான் அடிப்படை. ஆனால் அவர் ஒரு வரலாற்றாசிரியர், ஆகவே மிகையான நிமிர்வும் தன்னம்பிக்கையும் இருந்தது. சானு புன்னகையுடன், ஒரு சிறு எதிர்ப்புகூட சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அன்புடன் வணங்கி விடைபெற்று எழுந்து சென்றார்.
அவர் சென்றபின் பி.கே.பாலகிருஷ்ணன் அந்தப் பேராசிரியரிடம் சொன்னார், ’நீங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான ஆதாரங்களுடன் பெரிய நூலையே சானு எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு சொல்கூட உங்களுக்கு அவர் பதில் சொல்லவில்லை. எண்ணிப்பாருங்கள், ஒரு சொல் மறுப்பு சொல்லக்கூட அவர் உங்களைப் பொருட்படுத்தவில்லை என்றால் என்ன பொருள்?”
அந்தப் பேராசிரியர் கடுமையாகப் புண்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து பாலகிருஷ்ணனிடம் வந்து சொன்னார். “என்னால் தூங்கவே முடியவில்லை… அவர் என்னை வசைபாடியிருந்தால்கூட பரவாயில்லை. ஒரு குழந்தையின் பேச்சைக் கேட்பதுபோல என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முகம் நினைவில் இருக்கிறது. அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசாமல் இருக்கவில்லை, அவர் என்னை உண்மையாகவே பொருட்படுத்தவில்லை”
மேலும் ஒரு மாதம் கழித்து அதே பேராசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் சானு மாஸ்டரைச் சந்தித்தார். சானுவுக்கு அந்தப் பேராசிரியரின் முகம் மட்டும் நினைவில் இருந்தது. அவர் பேசியவை நினைவில் இல்லை. பேராசிரியரே அவற்றை நினைவுபடுத்த முயன்றார், அப்போதும் சானு நினைவுகூரவில்லை. மிக விரிவாக தான் பேசியதை பேராசிரியரே சானுவிடம் சொன்னார். “என்னை நீங்கள் பொருட்படுத்தவில்லையா?” என்றார்.
“அதெல்லாம் இல்லை, நீங்கள் சொன்னது உங்களுக்குத் தெரிந்தது. அறிவு என்பதும் ஓர் எல்லைதான். நீங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்புண்டே” என்று சானு மென்மையாகச் சொன்னார். பேராசிரியர் சீற்றம் ,ஏமாற்றம் ஆகியவற்றால் கண்கள் கலங்கும் அளவுக்குப் போய்விட்டார் என்றார் பாலகிருஷ்ணன். (ஆனால் அவர் மனம் மாறவெல்லாம் இல்லை.)
சானு மாஸ்டரின் குணம் அத்தகையது. எந்நிலையிலும் மாறாத நிலைகொண்ட ஆழம். புன்னகை. மெல்லிய உடலுடன் அவர் நடந்து வருகையில் மிகமிகமிக எடைகொண்டவை அக்காலடிகள் என்று தோன்றும். எத்தனையோ மாணவர்களின் எண்ண்ங்களில் பதிந்த காலடிகள். என்னுடைய சிந்தனையிலும்தான்.
ஓஷோ: மரபும் மீறலும்-7
இரண்டாவது காலகட்டம்
ஓஷோ ஓர் மாற்று யோகப் பயிற்சியாளராக உருவாகிவந்த அந்த காலகட்டம் இயல்பாகவே ஒரு மாற்று ஆன்மீகத்தை தேடிய ஒன்று. அதன் பின்னணியை சற்று விரிவாக சொல்லவேண்டியுள்ளது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் எனது இளமைப்பருவத்தை கழித்திருக்கிறேன். என்னைவிட மூத்தவர்கள் அதைப்பற்றி பேசமுடியும். என்னைவிட வயது குறைந்தவர்களுக்கு அந்த காலகட்டம் தெரியாது. அன்று சில திரைப்படங்கள்கூட அக்காலகட்டத்தை வெளிப்படுத்துவனகாவ வந்திருந்தன. ஓர் அடையாளத்துக்காக அதை ஹிப்பி (Hippie) யுகம் என்று சொல்லலாம். ஏற்கெனவே சொன்ன புரட்சிகள் நடந்துகொண்டிருந்த அதே காலகட்டம்தான் ஹிப்பி யுகமும். எப்போது தென்னமெரிக்காவில் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் வந்தார்களோ அதே காலகட்டத்தில்தான் ஹிப்பி யுகம் அமெரிக்காவில் எழுந்தது.
ஹிப்பி யுகம்
ஹிப்பி யுகத்துக்கு ஒரு பின்னணி உண்டு. உலகப்போர்கள் முடிந்து அதற்கு பின்னால் பிறந்தவர்களுடைய இருபது வயது நிகழ்ந்த காலகட்டம். அவர்கள் எதை நம்பி வாழ்ந்தார்களோ அந்த நம்பிக்கை தகர்ந்த காலகட்டம். மனிதர்கள் மண்ணின்மீது வாழவில்லை. அவர்கள் பெற்றோர்கள் உருவாக்கிக்கொடுக்கும் நம்பிக்கைகளின் மீதுதான் வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கை தகரும்போது அவர்கள் உடைந்து சிதறக்கூடியவர்களாக மாறுகிறார்கள். ஒரு காலகட்டம் முழுக்கவே உடைந்து சிதறிய தருணம் என்று ஹிப்பி யுகத்தை சொல்லலாம். அந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட கிறிஸ்தவம் சார்ந்த விழுமியங்கள் அனைத்துமே பொய்யென்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட நியூரம்பெர்க் விசாரணைகள் (Nuremberg trials) காட்டின.
அந்த விசாரணைகள் காட்டிய உண்மை என்னவென்றால், ஜெர்மனியில் அத்தனை லட்சம் மனிதர்களை கொண்டுவந்து பட்டியல்போட்டு அட்டவணையிட்டு பிரித்து, பற்களை பிடுங்கி கால்சியத்திற்கு அளித்து, தோலை உரித்து செருப்பு தயாரிக்க அனுப்பி, முடியைக்கொண்டு ஆடைகள் பின்னியவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதே. அப்படியென்றால் கிறிஸ்தவம் சொல்லும் மானுட அன்பு, தியாகம், பாவம், பாவமீட்பு போன்றவைகளுக்கு என்னதான் அர்த்தம் என்ற கேள்விதான் ஹிப்பி யுகத்தின் அடிப்படை.
ரால்ஃப் ஹொஷூத் என்ற நாடக ஆசிரியர் எழுதிய ‘தி டெபுடி’ என்ற நாடகம் உள்ளது (The Deputy – a Christian tragedy, Rolf Hochhuth). அது போப் பன்னிரண்டாம் பயஸ் பற்றிய நாடகம். அந்த நாடகத்தின் கதை இதுதான்: ஹிட்லருடைய ராணுவம் யூதர்களை பிடித்து வதைமுகாம்களுக்கு கொண்டுசெல்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு நிருபர் கண்டடைகிறார். அங்கு கொண்டுசெல்லப்பட்ட யூதர்களில் முக்கால்வாசிப்பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். கொண்டு செல்கிறவர்கள் கத்தோலிக்கர்கள். இவர் போப்பாண்டவரை சென்று சந்தித்து அந்த வதை முகாம்களுக்கு எதிராக ஓர் அறிக்கை வெளியிடும்படியும், அது கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்றும் கேட்கிறார். ஆனால் போப் அதை தவிர்த்துக்கொண்டே சென்று கடைசியில் ‘எல்லோரும் போரிடாமல் அமைதியாக வாழவேண்டும்’ என்று ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடுகிறார். அதோடு அந்த நாடகம் முடிந்துவிடுகிறது.
என்ன காரணம் என்றால் போப்புக்கு ஜெர்மானிய தொழிற்சாலைகளில் மிகப்பெரிய முதலீடு இருந்தது. கட்டாய உழைப்பு வழியாக அவை அதிகமாக லாபமீட்டிக்கொண்டிருந்தன. ஆகவே அதற்கு எதிராக அறிக்கை வெளியிட அவர் தயாராக இல்லை. இன்று அந்த நாடகத்தை நினைப்பவர்கள் மிகக்குறைவு. ஆனால் அன்றைக்கு அது மிகப்பெரிய அலைகளை உண்டாக்கியது. அன்பு, கருணை, பாசம், மனிதாபிமானம் போன்று எதையெதை நம்பி வாழ்ந்தார்களோ அவையெல்லாம் அடிபட்டுக்கொண்டிருந்தன. பைபிளில் எவ்வளவோ மேற்கோள்கள் உள்ளன. அவையெல்லாம் உண்மைதான். ஆனால் யதார்த்தத்தில் அவை அங்கு இல்லை.
ஹிப்பி என்பவன் யார் ? அமெரிக்க, ஐரோப்பியச் சூழலில் ஒரு மதிக்கத்தக்க மனிதர் என்று நீங்கள் யாரை சொல்வீர்களோ, அத்தகையவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக்கொண்ட ஒருவன். அவருக்கு வீடு உள்ளதென்றால் எனக்கு வீடு வேண்டாம், அவர் தினமும் பல் துலக்குகிறார் என்றால் நான் வாழ்நாளில் எப்போதும் பல்துலக்க மாட்டேன், அவர் குளிப்பானென்றால் நான் குளிக்கமாட்டேன், அவர் ஒயின் குடிப்பானென்றால் நான் கஞ்சா அடிப்பேன் என்பதாக ஒவ்வொன்றிலும் பொது சமூகத்துக்கு எதிராக தங்களை மாற்றிக்கொண்டவர்கள் ஹிப்பிகள்.
மாற்று ஆன்மிகத்தேடல்
அத்தகைய அமைதியிழந்த தலைமுறை அன்று உலகம் முழுக்க இருந்தது. நாம் வாழ்ந்த சிறிய ஊர்களிலும் அவ்வாறான ஆட்களை நாம் பார்க்கமுடியும். தங்களை மனிதர் என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். உலகமெங்கும் அற்று அலைந்த ஒரு தலைமுறை. ஆன்மீக வறுமையடைந்த ஒரு தலைமுறை. அந்த தலைமுறை, சொல்லப்பட்ட, வகுக்கப்பட்ட, முன்வைக்கப்பட்ட ஆன்மீகத்திற்கு எதிரான இன்னொரு ஆன்மீகத்தை நோக்கி தேடிச்சென்றது. அந்த தேடலில் அவர்கள் கண்டடைந்த சில ஆளுமைகள் இருந்தனர். அவ்வாறுதான் இன்று அதிகமாக பேசப்படும் குர்ஜீஃப் முன்வரிசைக்கு வருகிறார். அவ்வாறுதான் கஸ்டனெடா எழுதிய டான் யுவான் எனும் கதாபாத்திரம் (The Teachings of Don Juan: A Yaqui Way of Knowledge, Carlos Castaneda) ஒரு குருவாக மாறி முன்வைக்கப்படுகிறது. அதேபோல ஜென் பௌத்தம் மீது ஒரு கவனம் உருவாகிறது. உலகில் உள்ள கிறிஸ்தவம் அல்லாத ஆன்மீகங்கள் என்னென்ன என்பதில் ஒரு ஆர்வம் உண்டாகிறது. அந்த ஆர்வம்தான் உலகம் முழுக்க நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் மாற்று ஆன்மீகத்தின் அடிப்படை.
தண்ணீர் கீழே விழுந்து எல்லா திசைகளுக்கும் பரவுவதுபோல சாத்தியமான எல்லா திசைக்கும் அந்த மாற்று ஆன்மிகம் பரவியது. அந்த நவீன ஆன்மீகத்தின் தேடல் எங்கெல்லாம் சென்றதென்றால், அமெரிக்க இசைக்கலைஞரான பாப் மார்லி எத்தியோப்பியாவின் பழைய வூடு கலாச்சாரம்தான் (Voodoo) தனக்கான ஆன்மிகம் என்று கண்டுபிடித்து அங்கே சென்றார். எத்தியோப்பியாவின் சக்கரவர்த்தி ஹேலி சலாசி (Haile Selassie) தான் கடவுளின் அவதாரம் என்று சொந்னார். அது ஒரு அபத்தம் என்றாலும், இன்னொருவகை ஆன்மீகத்துக்கான தேடல் எனலாம்.
இவ்வாறு ஒரு புதிய விவாதம் உருவாகி வந்தது. இன்னொரு ஆன்மிகம் எது என்னும் கேள்வியை முன்வைத்தது அது. அந்த புதிய விவாதத்தில் சென்று இணைந்த ஞானிகளில் ஒருவர் ஓஷோ. இவர் அங்கு செல்லவில்லை. அவர்கள் இங்கு தேடி வந்தனர். நாம் அறிந்த ஒன்று உண்டு. எந்த ஞானியும் தானாக எதையும் சொல்வதில்லை. எந்த ஒரு ஞானியின் சொல்லும் நாம் அதை வாங்கிய கலத்தின் வடிவில்தான் நமக்கு கிடைக்கும். கேட்ட கேள்விக்கான பதிலாகத்தான் அவர் நம்மை வந்தடைவார். அந்த காலகட்டம் ஓஷோவிடம் தனக்கான கேள்வியை கேட்டது. அதற்கு அவர் விளக்கமளித்தார். அன்று ஹிப்பி யுகத்தின் ஒரு பகுதி இந்தியா நோக்கி திரும்பியது. ஹிப்பி யுகத்தின் இசையாக அறியப்பட்ட பீட்டில்ஸ் பாடகர்கள் (The Beatles) இந்தியா வந்து மகேஷ் யோகியின் மாணவர்களாயினர். அவ்வாறு பலரும் இந்தியாவிற்கு வந்து அலைந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் அவர்களுக்கு பதில் சொல்வதற்கான, அவர்களுடைய கேள்விகளை எதிர்கொள்வதற்கான தகுதி கொண்டவர்களாக இருந்தவர்கள், அவர்களிடம் பேசுவதற்கான அறிவார்ந்த கருவிகளை கொண்டிருந்தவர்கள் நவீன குருமார்கள் மட்டுமே. சரி, அவர்கள் சங்கராச்சாரியர் மடத்திற்கு வந்திருந்தால் என்ன சொல்லப்பட்டிருக்கும்? மிலேச்சர்களுக்கு உள்ளே இடமில்லை என்றுதானே. அவர்கள் ஒரு வைணவ மடத்திற்கு சென்றிருந்தால், ‘அந்தப்பக்கம் தள்ளி நில்’ என்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்கள். அங்கு ரங்கநாதசுவாமி போன்ற ஒருவர் எழுந்து வந்தார். வைணவத்தில் இருந்து பிரபுபாத சுவாமி போன்று ஒருவர் எழுந்துவந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) என்ற இயக்கத்தை உருவாக்கினார். மகரிஷி மகேஷ்யோகி உருவாகி வந்தார். அவர்களின் மரபில் வந்த பல அறிஞர்கள், ஞானிகள் இன்று இருக்கிறார்கள்.
ஓஷோவின் மூன்று குரல்கள்.
அவ்வாறுதான் ஓஷோ மாற்று ஆன்மிகம் பற்றி பேசத்தொடங்கினார். அவர் மூன்று குரல்களைக் கொண்டவராக, மூன்று வழிகளை இணைத்துக்கொண்டு பேசுபவராகத் திகழ்ந்தார். அதில் முதன்மையானது இலக்கியம். ஜே.டி.சாலிங்கர் எழுதிய The Catcher in the Rye என்ற நாவல் ஹிப்பிகளின் பைபிள் போன்று இருந்தது. ஹிப்பிகளில் ஒருவன் பீட்டில்ஸ் பாடகனான ஜான் லென்னானை (John Lennon) சுட்டுக்கொன்ற பிறகு அங்கேயே அமர்ந்து அந்த நாவலை படித்துக்கொண்டிருந்த நிகழ்வு உண்டு. அவன் இன்றும் சிறையில் இருக்கிறான். ஜான் லென்னான் தனது குரலை இழந்துவிடக்கூடாது, அந்த உச்சத்திலேயே இறந்துவிட வேண்டும் என்பதற்காக இவன் சுட்டிருக்கிறான். சரியான முடிவுதான் ! பலர் அதை செய்வார்கள் என்றால் கலை சற்று வாழும்.
நிகாஸ் கசந்த்சாகீஸின் சோர்பா எனும் கிரேக்கன் என்ற நாவலால் பல ஹிப்பிக்கள் தங்களுக்கு சோர்பா என்றே பெயர் வைத்துக்கொண்டனர். அந்த நாவலில் வரும் சோர்பா என்ற கதாபாத்திரம் ஒரு கொண்டாட்டவாதி (Hedonist) என்று சொல்வர். அன்றன்றைக்கு வாழக்கூடியவன், நாளை என்பது இல்லாதவன். அனுபவங்கள் வழியாக சென்று கொண்டிருப்பவன். அந்த அனுபவங்களிலிருந்து நினைவுகளைக்கூட திரட்டிக்கொள்ளாதவன். அந்த நாவல் படமாக வந்திருக்கிறது. அதில் ஆண்டனி க்வின் (Anthony Quinn) சோர்பாவாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் இறுதியில் அவர் ஒரு நடனமாடுவார். அது ஒரு விடுதலையின் நடனம். பயிற்சி இல்லாத, ஆனால் அழகான நடனம். சுதந்திரம் என்னும் அழகு கொண்டது அது முக்கியமான ஒரு அடையாளமாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டது. இப்போதும் சுவாரசியமாக இருக்கும் ஒரு படம்.
ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தா (Siddhartha, Hermann Hesse) அக்காலகட்டத்தின் குரலாக கொண்டாடப்பட்ட ஒரு நாவல். அதில் வரும் சித்தார்த்தன் கிட்டத்தட்ட புத்தர் போன்ற ஒரு கதாபாத்திரம். தன் இல்லத்தை விட்டு நீங்கி பல்வேறு ஞான பரிசோதனைகள் வழியாக செல்கிறான். தாசிகளிடம் சென்று வாழ்கிறான். கடும் யோகப்பயிற்சிகளை மேற்கொள்கிறான். இறுதியில் கங்கையில் ஒரு படகோட்டியாக, எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த பதில்களையும் கண்டடையாமல், நட்சத்திரங்கள் மேல் படகை ஓட்டிச்செல்பவனாக வாழ்ந்து முடிகிறான். அவன் இறக்கும்போது அவன் வாயில் ஒரு சொல்கூட எஞ்சவில்லை. அவருடைய ஸ்டெப்பி ஓநாய் (Steppenwolf ) என்ற மற்றொரு நாவல். பிரம்மாண்டமான தனிமையில், ஸ்டெப்பி புல்வெளியில் வாழக்கூடிய மிருகம். அதுபோன்ற தனிமையில் வாழக்கூடிய ஒரு மனிதனைப் பற்றிய படைப்பு அது. இந்த நூல்களெல்லாம் அன்று அவ்வளவு பேசப்பட்டன. இந்த நூல்களை தொட்டுக்கொண்டு இந்திய ஆன்மீகத்தை பேசக்கூடியவராக ஓஷோ எழுந்து வருகிறார்.
அன்று பெரிய அளவில் ஹிப்பிகளால் பேசப்படக்கூடிய ஒன்றாக இருந்தது ஜென் பௌத்தம், குர்ஜீஃப் முன்வைத்த மாற்று ஆன்மிகச் சிந்தனைகள் போன்றவை. அவர்கள் எதையெல்லாம் படித்துவிட்டு வந்து சந்தேகம் கேட்கிறார்களோ அதை ஏற்கெனவே படித்துவிட்டு பேசும் ஒருவராக ஓஷோ இருந்தார். சிந்தித்துப் பார்த்தால் அன்றைக்கு ஒரு ஹிப்பி இந்தியா வந்து வேறு யாரிடம் அதையெல்லாம் கேட்டிருக்க முடியும் ? வேறு எந்த ஆன்மீக ஞானியிடம் சோர்பா என்ற கிரேக்கனை பற்றி கேட்க முடியும்? சரி, இன்றைக்கு அப்படி எவரிடம் கேட்கமுடியும்? இன்றைய குருமார்களில் நூல்களைச் சொல்பவர்களே மிகக்குறைவு.
இன்று ஓஷோ வழிவந்த ஒருவர் தனக்கு சோர்பா என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். நான் அவரிடம் அதுபற்றி கேட்டேன். அது ஓஷோவின் பெயர்களில் ஒன்று என்று சொன்னார். ‘இல்லை, இது ஒரு நாவலின் கதாபாத்திரம். அந்த நாவல் சினிமாவாகக்கூட வந்திருக்கிறது’ என்றேன். ஆனால் அதுபற்றி அவருக்கு ஆர்வம் இல்லை. ஓஷோ உருவாக்கிய பல பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. ஆனால் அது அந்த காலகட்டத்தை எதிர்கொண்டு அவர் பேசிய விடைகளால் ஆனது.
அதன்பிறகு ஹிப்பி இயக்கத்தின் வீழ்ச்சி நடந்தது. அதுபற்றி பிறகு விரிவாக பேசுகிறேன். ஒரு ஹிப்பியிடம் ஓஷோ அதை சுட்டிக்காட்டுகிறார். ‘நீ எல்லாவற்றையும் துறந்து இங்கு உட்கார்ந்திருக்கிறாய். ஆனால் உயர்தரமான இசைக்கான உனது தேடல் உன்னை தொழில்நுட்பத்திற்கு அருகில் கொண்டுசெல்கிறது. அந்த தொழில்நுட்பம் உன்னை வீழ்த்தும். எதிர்காலத்தில் உனது கேள்விகள் இங்குதான் இருக்கும். ஆனால் நீ அந்த கேள்விகளை விடுத்து தொழில்நுட்பத்திற்குப் பின்னால் செல்வாய்’ என்றார். அதற்குப்பின் அதுதான் நடந்தது. அன்று இந்தியாவுக்கு வந்து ஓஷோவை சந்தித்து, அவரால் தாக்கமடைந்து மேலும் பலவாறாக அலைந்த ஒரு ஹிப்பி இருந்தான். அவன் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி முடியெல்லாம் வெட்டி, கோட்சூட் அணிந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை உருவாக்கினான். அவன் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இன்றைக்கு, தொழில்நுட்பம் அந்த கேள்விகளை அப்படியே மறைத்துவிட்டது. கேள்விகளுக்கு பதில் சொல்வதைவிட எளிதானது, அந்த கேள்விகளின் மீது தண்ணீரை விட்டு கழுவிவிடுவது. அதைத்தான் தொழில்நுட்பம் செய்திருக்கிறது. இன்று அந்த கேள்விகள் எவரிடமும் கிடையாது. அவை சிந்தனையாளர்களிடம் மட்டுமே எஞ்சிவிட்டன. அந்த கேள்விகளை இன்றும் தொடரக்கூடியவர்களுக்கு அளிக்கப்பட பதில்களால் ஆனவை ஓஷோவின் உரைகள். ஒரு கட்டத்தில் அத்தகைய கேள்விகளுக்கான பதில்களை விட்டுவிட்டு ஓஷோ திட்டவட்டமான நூல்வடிவ உரைகளை உருவாக்கத் தொடங்குகிறார். தம்மபதம், கீதை போன்ற உரைகள் உருவாயின.
ஒரு பதில்
இன்று திரும்பிப் பார்க்கும்போது அன்று ஓஷோ சொன்ன பதில்களைவிட கேள்வி கேட்டவனைத்தான் என்னால் மிக அருகில் எனப் பார்க்க முடிகிறது. ஒரு பெண்மணி ஓஷோவிடம் ‘மகிழ்ச்சி என்பது என்ன, மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?’ என்று கேட்கிறாள். ஓஷோ அவளிடம், ‘நீ எப்போது கடைசியாக மகிழ்ச்சியாக இருந்தாய் ?’ என்று கேட்கிறார். அதற்கு அவள், தான் நண்பர்களுடன் ஆல்ப்ஸ் மலையில் ஏறியதாகவும் அப்போது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சொல்கிறாள். ‘அதற்குப்பின் மீண்டும் எப்போது மலையேறினாய்?’ என்று ஓஷோ கேட்கிறார். அவள், ‘அதற்குப்பின் மலையேறவில்லை, நீண்டகாலமாயிற்று’ என்கிறாள். பல்வேறு வேலைச்சுமைகள் இருந்மையால் மலை ஏறவில்லை என்று காரணம் சொல்கிறாள். ஓஷோ, ‘அப்படியென்றால் இங்கே பிரச்சனை உனக்கு மகிழ்ச்சியில்லை என்பது அல்ல. மகிழ்ச்சியாய் இருப்பதற்கு உனக்கு நேரமில்லை, நீ மகிழ்ச்சியை தேடிப்போகவில்லை என்பதுதான். உனக்கு எது வேண்டுமோ அதை நீ தேடிச் செல்லமாட்டாய். மகிழ்ச்சியை யாரேனும் உன் வீட்டிற்கு வந்து அதை உனக்கு பொட்டலமாக தரவேண்டும் என்று நினைக்கிறாய். நீ மகிழ்ச்சிக்காக எதையும் செய்யவில்லை’ என்கிறார்.
மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி என்கிறார் ஓஷோ. ஒரு சைக்கிளை ரிப்பேர் செய்வதற்குக்கூட பயிற்சி தேவைப்படும்போது, ஏன் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கிறார். மகிழ்ச்சியாக இருப்பது மனிதர்களுடைய தேவை மட்டுமல்ல, கடமையும்கூட என்கிறார். அதற்காகத்தான் மனிதர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அதைமட்டும் செய்யமாட்டார்கள். அப்படியென்றால் மனிதர்களுக்கு என்ன வேண்டும் ? அவர்களுக்கு வெற்றி வேண்டும், ஆணவநிறைவு வேண்டும், செத்துப்போன பிறகு நான்குபேர் அவர்களைப்பற்றி பேசவேண்டும். அவற்றையெல்லாம் நாடிச்சென்றால் மனிதர்கள் மகிழ்ச்சியை விட்டுவிடுவார்கள். ‘மகிழ்ச்சியை நீ வேறு பலவற்றின் பொருட்டு விட்டுவிடுவாய். அதன்பின் கீழைநாட்டு குரு ஒருவரிடம் வந்து, மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று கேட்பாய்’ என்று ஓஷோ பதிலளிக்கிறார்.
விளிம்பின் குரல்
ஓஷோ விளிம்புநிலை மனிதர்களுடைய குரலாக ஒலிக்கிறார். அவரைப் புரிந்துகொள்ள அது மிகவும் முக்கியமானது. அவர் காந்தியத்தின் மீதும் மார்க்சியத்தின் மீதும் வைக்கக்கூடிய இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, அவர்கள் ‘இதுதான் பாதை’ என்று வகுக்கும்போதே அந்தப் பாதையில் இல்லாதவர்களை வெளியே தள்ளி, அவர்களை புறநடையாளர்களாக (Outsiders) ஆக்கிவிடுகிறார்கள் என்பதுதான். புறநடையாளர்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் மையச் சிந்தனைப் போக்குகளின் வேலை என்கிறார் ஓஷோ. மார்க்சியத்தை பார்த்தால் எவ்வளவு வெறுப்பு நிறைந்த சொற்களை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். குலாக்குகள் (Kulak), லும்பன்கள் (Philistine), திரிபுவாதிகள் (Revisionist), ஃபாசிஸ்ட்டுகள் (Fascist) போன்று. இவை எல்லாமே என்னைக் குறித்தும் சொல்லப்பட்டன. காந்தியவாதிகளும் அவர்கள் அல்லாதவர்களை வெறுக்கும் சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஓஷோ ‘இதைப் போன்று மையப்போக்கிற்கு வெளியே விடப்பட்ட ஆட்களை பற்றி மட்டுமே நான் பேசுவேன், நான் அவர்களுக்கான ஆள்’ என்றே சொல்கிறார்.
1969 ல் பாட்னாவில் நடைபெற்ற ஒரு பெரிய அனைத்து மத மாநாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் மாபெரும் ஒரு முட்டாள்தனத்தை செய்தார். அது அன்று புகழ்பெற்றிருந்த பகவான் ரஜ்னீஷை பேச அழைத்ததுதான் அந்தப் பிழை. அந்த மேடையில் ஓஷோ ‘நீ சொல்லக்கூடிய இந்துமதம் என்பதில் எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. அதில் பெண்களுக்கு சம இடம் இல்லை, தலித்துகள் உள்ளே வர இடமில்லை’ என்பதாக தொடர்ந்து பேசிச்சென்றார். ஒரு கட்டத்திற்கு மேல் புரி சங்கராச்சாரியர் எழுந்து கடுமையாக ஆட்சேபிக்த்தார். எனவே ஓஷோவின் பேச்சு நிறுத்தப்பட்டு அவர் பாதியில் வெளியேறினார். முதன்முறையாக அவர் அப்போதுதான் பெரிய செய்தியில் அடிபட்டார் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய குரல் ஓஷோவிடம் இருந்துகொண்டே இருந்தது. அதுதான் அன்றிருந்த துயரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை அவரிடம் தேடிவரச்செய்தது. அப்படி வந்தவர்களில் கோடீஸ்வரர்களின் குழந்தைகள் உண்டு. அவர்கள்தான் ஆசிரமத்தை உருவாக்கி அவரை வெற்றிகரமான ‘கார்ப்பரேட் குரு’வாக மாற்றினார்கள்.
துன்புற்ற அன்னியர் ஏன் இந்தியா வந்தனர் என்பது முக்கியமான கேள்வி. சமீபத்தில் நான் படித்ததில், ஹிப்பிக்கள் இந்தியா வரக்காரணம் கஞ்சா விலைமலிவாக கிடைப்பதுதான் என்று எழுதப்பட்டிருந்தது. வேறு எந்தவொரு சிந்தனை முறையையும் விட மிக மோசமான முறையில் அவதூறு செய்யப்பட்ட சிந்தனைமுறை என்பது ஹிப்பிக்களின் சிந்தனைமுறைதான். எனக்கு அதன்மீது பெரிய மரியாதை உண்டு. ஏனெனில் எனது ஆசிரியர் நித்ய சைதன்ய யதி நெடுநாட்கள் ஹிப்பிக்களிடையே பணியாற்றியவர். நடராஜகுரு அவரை அவர்களிடம் அனுப்பினார். ஹிப்பிக்கள் ஒரு முக்கியமான மாற்று உலக சக்தி. அவர்கள் அழிந்தது, அல்லது நவீனத் தொழில்நுட்பத்தால் அழிக்கப்பட்டது என்பது உலகின் தார்மீகத்தின்மேல் விழுந்த ஒரு பெரிய அடி.
ஹிப்பிகள் மலிவுவிலைக் கஞ்சாவிற்காக இந்தியா வந்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் அன்று அவர்களிடம் ஏன் இந்தியா வருகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் சொன்ன பதில் பன்முகத்தன்மைக்காக (for pluralism) என்பதுதான். ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி, ‘இது மட்டும் உண்மை, இதுவன்றி மற்றவையெல்லாம் பொய்’ என்று சொல்லும் பார்வைதான் உலகப்போர்களையும் பேரழிவையும் உருவாக்கியதாக அவர்கள் நினைத்தார்கள்.
ஓஷோ ஒரு ஹிப்பியிடம் கேட்கிறார் ‘சரிக்கு எதிர்நிலை என்ன?’ என்று. அதற்கு அவன் ‘தவறு’ என்கிறான். ‘இல்லை, சரிக்கு எதிர்நிலை மற்றொரு சரி’ என்கிறார் ஓஷோ. இதை சொல்லக்கூடிய ஒருவரை தேடித்தான் அவன் வந்திருக்கிறான். இந்தியாவின் மீதான அவனுடைய கவர்ச்சியே இங்குள்ள பல்லிறைத்தன்மைதான் (Pantheism) என்கிறான். ஒரு ஹிப்பி சொல்கிறான், ‘ஓர் ஆலயத்தில், கடவுள் வழிபாட்டில், பத்துப்பதினைந்து கடவுள்கள் வரிசையாய் இருப்பதைப்போல அழகிய காட்சி வேறெதுவும் கிடையாது. ஒற்றை கடவுளை நம்பி உருவான அழிவுகளுக்கு எதிரானது இது’ என்று.
இந்த காட்சிகள்தான் அவர்களை ஐரோப்பாவிற்கு திரும்பிச்சென்று இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை அங்கு முற்றாக அழிக்கப்பட்ட பேகன் மதங்களை தோண்டியெடுக்கச் செய்தது. கெல்டிக் (Celtic), நார்டிக் (Nordic) தொன்மங்களை ஒவ்வொன்றாக மீட்டெடுத்தனர். அவை நூல்களாக வெளிவந்தன. அந்த தொன்மங்களெல்லாம் கத்தோலிக்க மதம் மேலெழுந்து வந்தபோது அழிக்கப்பட்டவை. சூனியக்காரி ஒழிப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட அறுநூறாண்டுகள் தொடர்ந்து நடந்தது அந்த பேகன்மத அழிப்புதான்.
பேகன் மதம் (Paganism) என்றால் என்ன? இந்துமதம் என்று நீங்கள் எதை இன்று சொல்கிறீர்களோ கிட்டத்தட்ட அதுபோன்ற ஒன்று, ஐரோப்பாவில் இருந்தது. இந்துமதத்தின் எந்தவொரு தெய்வத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு சமானமான ஒரு பேகன் தெய்வம் இருக்கும். இடிமின்னல்களின் தெய்வம், மழையின் தெய்வம் என்று பல தெய்வ உருவகங்கள் அங்கும் உண்டு. எல் என்ற சிரிப்புக்கு உரிய கடவுள் உண்டு. அந்த மதம் முற்றாக அழிக்கப்பட்டது. ஐரோப்பிய இளந்தலைமுறை அதைத்தேடிச் சென்றது. தன் காலடியை தோண்டி அந்த மதத்தை வெளியே எடுத்தது. துயரம் என்னவென்றால் ஹிப்பிக்களின் காலத்திற்கு பிறகு அவற்றை தொழில்நுட்பம் கையிலெடுத்துக்கொண்டது. அவர்கள் அதை சினிமாவாக எடுத்து இன்று நமக்கு பொழுதுபோக்கு நாவலாகவும், சினிமாவாகவும், கணிப்பொறி விளையாட்டாகவும் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று உலகளாவிய கேளிக்கையாக மாறியிருப்பது அன்று ஹிப்பிகள் தோண்டியெடுத்த அந்த மாற்றுக் கலாச்சாரம்தான்.
தோர் (Thor) என்ற சினிமா பார்க்கிறோம். அது ஒரு பேகன் தெய்வம். இன்று ஹாலிவுட்டில் வரும் பெரும்பாலான படங்கள் பேகன் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்டவைதான். The Lord of the Rings நாவலின் சாரம் என்பது அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். ஹாரி பாட்டர் கதையின் தொன்மத்தை எடுத்துப்பாருங்கள். லண்டனில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட மின்தூக்கி வழியாக கீழே சென்றால் புதையுண்டிருக்கக்கூடிய இன்னொரு உலகம், பேகன் உலகம் வருகிறது. அத்தகைய பேகனிய கலாச்சாரத்தை, பன்மைத்தன்மையை தேடித்தான் அன்று ஹிப்பிகள் இந்தியா வந்தனர்.
ஓஷோ கண்டடைந்த வழிக்கு நிகரானது வைக்கம் முகமது பஷீர் கண்டடைந்தது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் பஷீரிடம் ஆசிரியர் கேட்கிறார், ‘ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் எவ்வளவு’ என்று. குட்டி பஷீர் எழுந்து தன்னம்பிக்கையுடன் ‘இன்னும் பெரிய ஒன்று’ என்கிறார். ஏனெனில் இரண்டு ஆறுகள் சேர்ந்து இன்னும் பெரிய ஆறு ஓடுவதை அவர் கண்ணால் கண்டிருக்கிறார். கண்கூடான உண்மையை மறுக்கமுடியாது. ‘இரண்டு’ என்று சொல்லும்படி ஆசிரியர் அடிக்கிறார். சொல்லமுடியாது என்று மறுக்கிறார் பஷீர். வயதான பின்பு பஷீர் கண்டடைகிறார், ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மட்டுமல்ல, ஆயிரம் ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்றுதான் என்று. அந்த ஒன்றே அனைத்தும். அத்தகைய பன்மைத்தன்மையை தேடியே ஹிப்பிகள் இந்தியா வந்தனர். அவர்களிடம் பேசக்கூடிய ஒரு ஞானியாக ஓஷோ இருந்திருக்கிறார்.
மூன்றாவது காலகட்டம்
மாற்று ஆன்மீகத்தை பேசிவருகையில் ஓரு கட்டத்தில், தான் ஒரு அறிவுத்தரப்பை, ஒரு விவாத தரப்பைதான் உருவாக்குகிறோம் என்று ஓஷோ கண்டடைந்தார். நீங்கள் கருத்துகளை சொல்லச்சொல்ல அது கருத்தியலாகத்தான் (Ideology) மாறும். பேசப்பேச பேச்சுதான் பெருகும். தனது டைனமிக் தியானம் பற்றி ‘I invest this to ponder upon my thoughts’ என்கிறார். தான் சொன்னவற்றை அறிந்து கொள்வதற்காக அல்ல, உணர்ந்து கொள்வதற்காகத்தான் டைனமிக் தியானம் என்பதை உருவாக்கினார்.
ஓஷோ எனும் அடையாளம்
அதற்கு அடுத்த கட்டமாகத்தான் அவர் தன்னை ஓஷோவாக, ஒரு ஆசிரியனாக முன்னிறுத்துவது. அவர் தன்னை ஓஷோவாக அறிவித்துக்கொண்டது பற்றி எனக்கு சிறு சந்தேகம் இருந்தது. அன்று அதைப்பற்றி எதிர்மறையாகவும் ஏளனத்துடனும் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்தேன். ஆனால் இன்று திரும்பிப்பார்க்கும் போது அது சரிதானோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. ஏனெனில் ஒரு ஆசிரியன் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தன்னை ஓர் அடையாளமாக, ஒரு வாழும் படிமமாக ஆக்கிக்கொண்டால் மட்டும்தான் அந்த ஞானம் நிலைகொள்ளும். அவனுக்குப்பின் அந்த அடையாளம் காலந்தோறும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும். அது புத்தராக இருந்தாலும் சரி, ஓஷோவாக இருந்தாலும் சரி.
அவ்வாறு மாற்றிக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் ?இந்தியாவில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த ஞானிகள் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும். ஜே.கே. ஓஷோவை ‘ஒரு கிரிமினல்’ என்று சொன்னார். அவர் ஓர் அமைப்பை உருவாக்கக்கூடிய எண்ணம் கொண்டிருந்தார். அதற்கு தகுதியானவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டார். இன்று காலம் கடந்து திரும்பிப்பார்க்கும்போது ஜே.கே.வின் அமைப்பு என்னவாக இருக்கிறது ? அந்த அமைப்பினால் ஜே.கே.வின் சிந்தனைகளை உலகம் முழுக்க கொண்டுசெல்ல முடியவில்லை. அது தேங்கிப்போன ஓர் அமைப்பாக, தியோசஃபிகல் சொசைட்டி என்ற கருங்கல் பாறை போன்ற இன்னொரு குட்டிப்பாறையாக இருக்கிறது.
ஏனெனில் ஜே.கே. மறைந்ததுமே அவருடன் இருந்த அனைவரும் இரண்டாம்நிலை ஜே.கே.வாக மாறிவிட்டனர். இன்று மூன்று நான்கு பெண்கள் ஜே.கே. சொன்னதை திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய தகுதி என்ன என்று கேட்டால், தாங்கள் நீண்ட நாட்களாக அவருடைய பேச்சை கேட்டிருப்பதாகவும், அதனால் தங்களாலும் அவ்வாறு பேசமுடியும் என்பார்கள். ஆனால் ஜே.கே சொன்ன அத்தனைச் சிந்தனைகளையும் திரித்து, நீர்த்துப்போகச் செய்து, வெறும் அலங்காரச்ச்சொற்றொடர்களாக ஆக்கிவிட்டார்கள் அவர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அழகிய வரிகள் இன்று அவற்றின் நகல்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. ஜே.கேயின் சிந்தனை இன்று நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறையிலுள்ள போன்சாய் மரங்கள் போல உள்ளது.
ஓர் ஆசிரியன் என்பவன் தான் வாழும் காலகட்டத்திற்கு அப்பால் உள்ளவன். தன்னை எதிர்காலம் நோக்கி எறிந்துகொள்பவன். எதிர்காலத்திற்காக அவன் தன்னை உருவாக்கிக் கொள்ளவேண்டும். கருத்துக்களை அல்ல, படிமங்களையே எதிர்காலத்திற்காகக் கொடுத்துச் செல்லமுடியும். கருத்துக்கள் அவற்றின் திரிபுபட்ட வடிவங்களையே உருவாக்கும். ஏனென்றால் கருத்துக்கள் கருத்துக்களையே சந்திக்கின்றன. படிமங்களே ஆழுள்ளத்தைச் சந்திக்கின்றன. கனவுகளுக்குள் ஊடுரூவுகின்றன, உணர்ச்சிகளாகின்றன, கலையாகவும் மலர்கின்றன. ஆகவே படிமங்களையே ஞானிகள் அளித்துச் செல்கிறார்கள். படிமங்களாகவே அவர்கள் மாறிவிடுகிறார்கள். ஓஷோ அப்படிப்பட்ட ஒரு படிமம். ஓஷோ அணிந்துகொண்டிருக்கும் அந்த குல்லாவை எல்லோரும் அணிந்துகொள்ள முடியாது. அது அவர் தலைக்குதான் பொருந்தும். அதை அவரே சொல்லிவிட்டு செல்லவேண்டியிருந்தது. ஆகவேதான் அந்த ஓஷோ என்ற பெயர். அது சரிதான் என்ற எண்ணம் இன்றைக்கு எனக்கு உள்ளது.
(மேலும் )
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
தமிழ்விக்கி தூரன் விழா விருந்தினர்:ஆறுமுக சீதாராமன்
தமிழக நாணயவியல் ஆய்வில் தி. தேசிகாச்சாரியார் போன்ற முன்னோடிகள், அடுத்த தலைமுறையில் இரா. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆய்வாளர்களுக்குப் பின் சமகாலத்தைய முதன்மை ஆய்வாளராக ஆறுமுக சீதாராமன் கருதப்படுகிறார். தொல்லியல் மதிப்பு கொண்ட நாணயங்களைச் சேகரிப்பது, அவற்றை பிற வரலாற்றுச் செய்திகளுடன் இணைத்து வரலாற்றை விரித்து எழுதுவது ஆகிய தளங்களில் தொடர்பணி ஆற்றிவருகிறார்.பொ.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால நாணயத்தை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.
ஆறுமுக சீதாராமன் ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் வாசகர்களிடம் உரையாடுகிறார்.
ஆறுமுக சீதாராமன்
ஆறுமுக சீதாராமன் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

