Jeyamohan's Blog, page 58
August 6, 2025
சென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம் நடத்துகிறேன்
ஒரு நாவல் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் சென்னை அடையாறில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் நிகழ்கிறது. நான் பயிற்சியை அளிக்கிறேன்.
சென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம்
Chennai-based women’s publishing house Manasa Publishers has announced a novel competition exclusively for women. Those who have already written novels can also participate.
How to write your debut novel?For contact https://www.manasapublications.com/manasalitprize
August 5, 2025
உரு,அரு,உருவரு – கட்டண உரை வெளியீடு
நான் ‘உரு அரு உருவரு’ என்னும் தலைப்பில் பிப்ரவரி 2, 2025 அன்று சேலத்தில் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்.
மாத்து
நகைச்சுவை
கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார்.
“முதுகிலேங்க” என்றேன்.
“சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?”
நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது
”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச் சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்”
“பிறவு?”என்றேன்.
“எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருக்காரே?” என் முகத்தைப் பார்த்துவிட்டு நிறைவுடன் “கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்தில போட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்”
“எப்பவுமேயா?”என்றேன்.
“மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”.
“நடக்கிறதப் பாத்தா?”என்றேன்.
“இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்” என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி, “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்”
நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன்.
“ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசி பாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்”
“வலிக்குமோ?”
“பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்”
”ஆச்சரியம்தான்” என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார்.
“மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்”
“பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?”
“எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன்.
“சொன்னாங்க”என்றேன்.
“ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க”
“ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது? ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?”
“கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ”
“டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன். “சிலருக்கு ஃபினாயில்கூட வேண்டியிருக்கும்…”
“பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?”
“மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க”
“இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது”
“நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–”
“இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க”
“தன்னோட மலத்தையா?”
“அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…”
“ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே”
“அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை”
“நிர்மலம்னு சொல்லுங்க”
“அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க”
“நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?”
“கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது”
“அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?”
அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறு வருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன், நம்மளப் பாத்தா அப்டியே ஒரு ஜம்பு…”
எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?”
“ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?”
“இன்னும் இல்லீங்க” என்றார்.
ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன்.
“ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் ஆஸ்கார்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு”
“அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?”
“இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?”
”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே”
“அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம இவரு நம்மளைக் குணப்படுத்திட்டே இருப்பார்”
“அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே”
“இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க”
எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்…
“வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர்
“ஓகோ”
“ஹோமியோ வேற மாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—”
“அப்றம்…?”
“அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது”
நான் பெருமூச்சுவிட்டேன்
“கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது”
“எப்ப கலக்கினார்?”
“அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…”
“வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன்
“சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்”
“பயங்கரமா இருக்கு” என்றேன்
“இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்”
“என்ன பண்ணுவாங்க?”
“எனிமா குடுக்கிறதுதான்”
“எல்லா நோய்க்குமா?”என்றேன்
“ஆமா, பின்ன?”
“வயித்துப்போக்குக்கு?”என்றேன்.
“அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்”
நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?”
“செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்”
நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன்
“அறை மருத்துவம்சார்”
“ரூம்லயா?”
“இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க”
“பல்வலியா?”
“எப்டி கண்டுபிடிச்சீங்க?”
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015
ஓஷோ: மரபும் மீறலும்-10
இந்திய மெய்யியல் மரபுக்கும் ஓஷோவுக்குமான தொடர்புதத்துவார்த்தமாக ஓஷோவின் இந்திய சிந்தனைப் பின்னணி, அவருடைய முன்தொடர்ச்சி என்னவாக இருக்கும்? ஓஷோவை எந்தெந்த இந்திய சிந்தனைமரபுகளுடன் இணைத்து யோசிக்கலாம்? ஒவ்வொன்றாகச் சொல்லிப்பார்க்கிறேன். ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்காக.
1. வேதங்களின் பூதவாதம்
வேதங்களை ஆராய்ந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் அதிலிருந்த கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுத்திருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்ய ஆய்வாளராகிய ஷெர்பாட்ஸ்கி (Fyodor Shcherbatskoy) மிக முக்கியமானவர். நான் பல இடங்களில் அவரை மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுக்கிறார். வேதங்கள் என்பவை நீங்கள் நினைப்பதுபோல ஒற்றைக்கருத்து வெளிப்பாடு கொண்டவை அல்ல. அவை வேர்ப்பிடிப்புகள் போல. மண்ணை அகற்றி வேரைப் பார்த்தோமென்றால் நூற்றுக்கணக்கான மரங்களின் வேர்கள் இணைந்து ஒற்றை படலமாக இருக்கும். அதுபோல பின்னாளில் இந்தியாவில் உருவாகிவந்த அனைத்து சிந்தனைகளுக்குமான அடிப்படைகள் வேதத்தில் உள்ளன. இந்தியாவின் வேதமறுப்பு சிந்தனைகளின் அடிப்படைகள்கூட வேதங்களில்தான் உள்ளன.
வேதங்களிலுள்ள பிருஹஸ்பதி ரிஷி அத்தகைய வைதிக மறுப்பு மற்றும் உலகியல்வாதச் சிந்தனைகளின் முன்னோடியாகச் சொல்லப்படுகிறார். அசுரகுரு சுக்ரர் அவருடைய மாணவராகச் சொல்லப்படுகிறார். அஜித கேசகம்பளர், கணாதர், தீஷணன் போன்ற பல்வேறு பூதவாத, ஜடவாத ரிஷிகளின் பெயர்கள் வேதங்களில் இருந்து எடுத்து சொல்லப்படுகின்றன. அவர்கள் உலகியல்வாத சிந்தனைகளை முன்வைப்பவர்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த தொடர்ச்சி உள்ளது. அவர்களில் இருந்து ஓஷோவுக்கான தொலைவு என்பது நான்கைந்து ‘இன்ச்’கள் தான். நம் காலகட்டத்தில் அவ்வாறு ஒருவர் இருந்திருக்கிறார், அவ்வளவுதான். எல்லா ஊர்களிலும் எல்லா காலகட்டத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார். அந்த தொடர்ச்சி அறுபட்டு போய்விடவில்லை.
2. சார்வாகம்
வேதங்களுக்குப் பிறகு ஒரு பெரிய தரிசனமாக சார்வாகம் இருந்திருக்கிறது. பின்னாளில் பக்தி காலகட்டம் மேலோங்கி வரும்போது சார்வாக தரிசனத்தின் நூல்கள், அவர்களுடைய மரபுகள் அற்றுப்போய்விட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சார்வாகம் எத்தகைய வரலாற்று பாத்திரத்தை ஆற்றியதோ அதை சமணமும் பௌத்தமும் ஆற்றத்தொடங்கியபோது சார்வாகத்தின் இடம் சிறிது சிறிதாக குறைந்துபோனது என்பதுதான் மேலும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். அது மறுக்கப்படவில்லை, கரைந்தழிந்தது. அல்லது வேறொன்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. ஆனால் சார்வாகம் மகாபாரத காலம் வரைக்கும் மிக வலுவான ஒரு தத்துவத் தரப்பாக இருந்திருக்கிறது.
இன்றைக்கு அவர்களுடைய சிந்தனைகளை அறிஞர்கள் தொகுத்துள்ளனர். குறிப்பாக வங்க மார்க்சிய அறிஞரான தேவிபிரசாத் சட்டோபாத்யாய (Debiprasad Chattopadhyaya) முக்கியமானவர். அவருடைய ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்ற நூல் கரிச்சான் குஞ்சு அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்திருக்கிறது. அந்த நூலில் சார்வாக சிந்தனைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அளிக்கிறார். பழைய நூல்களில் சுபக்கம், பரபக்கம் என்று உண்டு. ஒரு சிந்தனை தரப்பு தன்னைப்பற்றி (சுபக்கத்தை) சொல்வதற்கு முன் தன்னை மறுக்கும் தரப்புகள் (பரபக்கம்) பற்றி சொல்லும். சார்வாகம் அழிந்தாலும் அதை எதிர்த்த தரப்புகள் தங்கள் எதிர்த்தரப்பைச் சுருக்கி அளித்துள்ளவற்றில் இருந்து சார்வாகத்தை மீட்டுக்கொள்ளலாம். வேதாந்த நூல்களில் பரபக்கமாக எங்கெல்லாம் சார்வாகம் சொல்லப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் தொகுத்து வழங்குகிறார் தேவிப்பிரசாத்.
அதேசமயம் தேவிபிரசாத்துக்கு முன்னாலேயே சார்வாகர்களை பற்றிய குறிப்பை உருவாக்கியவர் எம்.என்.ராய் (Manabendra Nath Roy). அவர் Radical Humanist இயக்கத்தின் நிறுவனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாக்களில் ஒருவர். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் எழுதிய Materialism: An Outline of the History of Scientific Thought என்ற நூலில் இந்திய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் பற்றி பேசும்போது சார்வாகர்களை பற்றிய ஒரு குறிப்பை அளிக்கிறார். அது மிகமுக்கியமான ஒரு தொடக்கம். ஏனெனில் அன்று இந்திய சிந்தனை என்றாலே மொத்தமாகவே ஆன்மிகம்தான் என்னும் எண்ணமே இருந்தது. இங்கிருந்த நாத்திகவாதச் சிந்தனைகள் வெளித்தெரியவில்லை.
அதன்பின் இந்திய தத்துவங்களை மிக விரிவாக எழுதியவர் எஸ்.என்.தாஸ்குப்தா (A History of Indian Philosophy, Surendranath Dasgupta). அவர் இந்த நாத்திகவாத, ‘ஒழுக்கம் கடந்த’ சிந்தனைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றிய ஒரு சிறு அடிக்குறிப்பை இங்கு சொல்லவேண்டியுள்ளது. இந்த ஒழுக்கம் கடந்த சிந்தனைகள் பற்றி எழுதும்போதெல்லாம் ஒருவித தார்மீக கோபத்துடன்தான் தாஸ்குப்தா எழுதுகிறார். ‘என்ன இது, ஒழுக்கமில்லாமல் இருக்கே’ என்பதாக ஒருவித அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் வாழ்வின் கடைசிக்காலத்தில் அவருடைய தட்டச்சருடன் உறவு ஏற்பட்டு, தன் மனைவியை விட்டுப்பிரிந்து சேரியில் சென்று தங்கி, அங்கு பிரச்சனை செய்து சாலையில் நின்றதை அவர் மகள் மைத்ரேயி தேவி ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். கொல்லப்படுவதில்லை என்றபேரில் தமிழில் வெளிவந்துள்ளது. எனக்கு தாஸ்குப்தாவின் புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும். ‘அறுபது வயதுவரை அப்படி இருந்துவிட்டு அதற்குமேல் இப்படி ஆகியிருக்கிறாய். அப்படியெனில் உனக்கு என்ன பிரச்சனை ?’ என்ற கேள்வியை புன்னகையுடன் எழுப்பிக்கொள்கிறேன். ஒழுக்கவாதிகளுக்கெல்லாம் பெரிய பிரச்சினை என்பது சலிப்புதான் போல.
சார்வாக தரிசனத்தின் அடிப்படை என்ன ? அவர்களுடைய தரிசனத்தை புரிந்துகொள்ள முக்கியமாக மூன்று விஷயங்களை சொல்லலாம்.
இன்பமே புருஷார்த்தம்
பொதுவாக, நான்கு புருஷார்த்தங்கள் (மானுடவாழ்வின் நோக்கங்கள்) சொல்லப்படுகின்றன. அவை தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோக்ஷம் (வீடு). திருக்குறள் இதில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்றை மட்டும்தான் சொல்கிறது. ஆனால் இந்து, பௌத்த, சமண மரபில் நான்கு பால்கள் உள்ளன. அதில் சார்வாகர்களின் தரப்பு இது. ‘இன்பம் மட்டும்தான் உண்மையான புருஷார்த்தம், இன்பத்தை அடையும்பொருட்டு தேவைப்படுவதே பொருள், இன்பத்தை சரியாக பகிர்ந்துகொள்ளும்பொருட்டு இருப்பதே அறம், சரியான முழுமையான இன்பத்தை அடைந்தவனுடைய நிறைநிலைதான் வீடுபேறு’
இங்கு காமம் என்று சொல்லப்படுவது வெறும் பாலியல் இன்பம் மட்டுமல்ல. பொதுவாக உலகியல் இன்பங்கள் அனைத்துமே காமங்கள்தான். அதாவது இவ்வுலகில், இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள். உண்ணுதல், குடித்தல், மகிழ்தல், மைந்தர்களோடும், நண்பர்கள் உறவுகளோடும் இருத்தல், சிறந்த அறிவார்ந்த இன்பங்களை அனுபவித்தல் அனைத்துமே இங்குள்ள இன்பங்களே. வேறு எங்கோ சென்று அனுபவிக்கும்பொருட்டு வாக்களிக்கப்பட்ட இன்பங்கள் அல்ல. இதை சொல்லும் ஒரு தத்துவ தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது.
புலனறிவே பிரமாணம்
நம் மரபில் பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி எனும் மூன்று பிரமாணங்கள் உண்டு. பிரத்யக்ஷம் என்பது புலன்களால் பருவடிவ உலகை நேரடியாக அறிவது. அவ்வாறு அறிந்தவற்றிலிருந்து நாம் செய்யக்கூடியது ஊகம் எனும் அனுமானம். மூன்றாவதான சுருதி என்பது ‘சொல்லப்பட்டது’ என்ற பொருளுடையது. சுருதி என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்சொல்வார்கள். வைதிகம் சார்ந்த எல்லா மதங்களுக்கும் வேதம்தான் சுருதி. முன்னறிவு என்பது வேதம்தான்.
ஆனால் சார்வாகர்களை பொறுத்தவரை சுருதி என்பது வேதமோ அல்லது முன்னால் சொல்லிவைக்கப்பட்ட எந்தவொரு நூலோ அல்ல. நமக்கு முன்னாலேயே தெரிந்த ஞானம்தான் (முன்னறிவு) சுருதி. நான் முதன்முறையாக கடலை பார்க்கிறேன். ஏற்கெனவே நான் ஏரியை பார்த்திருக்கிறேன். எனவே இந்தக்கடல் என்பது ஏரியைவிட பலமடங்கு பெரியது என்று புரிந்துகொள்கிறேன். இங்கு ஏரியைப்பற்றிய முன்னறிவே சுருதி. கடல் என்பது பிரத்யக்ஷம். எனவே சார்வாகர்களை பொறுத்த அளவில் மூலநூல், முன்னூல் என்று ஒன்று கிடையாது. கண்முன் உள்ளவற்றைப் பற்றிய புலனறிதலே அறிதல்கள் அனைத்துக்கும் அடிப்படை.
இன்று இந்தியாவிலோ, உலக அளவிலோ சிந்திக்கக்கூடிய மக்களிடையே மிகச்சிலருக்கு, கிட்டத்தட்ட ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும்தான் மூலநூல் (canon) என்று ஒன்று இல்லாமல் இருக்கிறது. அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் சுருதி என்பது பைபிள்தான். இஸ்லாமியர்களுக்கு சுருதி குரான். மார்க்சியர்களுக்கு மூலதனம். இவ்வாறு எந்தவொரு நூலும் இல்லாத, முன்னனுபவத்தை மட்டுமே முன்னறிதலாக எண்ணும் ஒரு சிந்தனை தரப்பு சார்வாகம். அப்படிப்பார்த்தால் சார்வாகர்களுடன் ஒத்துப்போகக்கூடிய சிந்தனையாளர்கள் உலக அளவிலேயே பத்துலட்சம் பேருக்குள் இருப்பதற்குத்தான் வாய்ப்புள்ளது. ‘சற்று முன் கிடைத்த அறிவைத்தான் சுருதியாக எடுத்துக்கொள்வேனேயன்றி, எழுதப்பட்ட எந்தவொரு நூலையும் அல்ல’ என்று சொல்லி காலூன்றி நிற்கக்கூடிய திராணி உடையவர்கள் குறைவுதான்.
தர்க்கம்
சார்வாகர்களுக்கு முக்கியமானதாக இருப்பது தர்க்கம். தான் அறிந்த ஒன்றை அனைவருக்குமான அறிதலாக மாற்றுவதற்குத்தான் அவர்கள் தர்க்கத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்குமேல் தர்க்கத்திற்கு இடமில்லை என்கிறார்கள். ஆகவே அவர்களை தார்க்கிகர்கள் என்றும் சொல்வார்கள். பழைய தமிழ் நூல்களில் தார்க்கிக மதம் என்றுதான் சார்வாகம் குறிப்பிடப்படுகிறது.
மணிமேகலையில் ‘சமயக்கணக்கர் திறம்கேட்ட காதை’ என்றொரு பகுதி உள்ளது. மணிமேகலை வெவ்வேறு சமயத்தவர்களிடம் சென்று உரையாடக்கூடிய பகுதி. அதில் சார்வாகர்கள் பூதவாதிகள் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். பூதம் என்றால் பருப்பொருள்கள் (பௌதிகம்). பருப்பொருள்வாதி / பொருள்முதல்வாதி (Materialist) என்பது அதன் பொருள். அக்காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர்களின் இருப்பு உள்ளது.
அந்த மரபில் இருந்து நாம் ஒரு கோட்டை எளிதாக ஓஷோவை நோக்கி இழுக்கமுடியும். ஓஷோ ஒரு நவீனகாலச் சார்வாகர் என்று சொல்லிவிடமுடியும். பின்பு எப்படி தமிழுக்கு, இந்திய மரபுக்கு ஓஷோ அன்னியமானவராக இருக்கமுடியும் ? தத்துவார்த்தமாக அவருடைய முன்தொடர்ச்சி அதுதான். நான் இங்கு சொல்லவருவது, ஓஷோவின் சிந்தனை நமக்கு ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே அதெல்லாம் இங்கு உண்டு என்பது அயல்ல. அப்படி எல்லா சிந்தனைகளையும் பழமையில் கொண்டுசென்று சேர்ப்பது எனக்கு உகந்ததும் அல்ல. ஓஷோ புதியவர்தான். அவரைப் போன்ற ஒருவர் முன்பு இருந்தது கிடையாதுதான். ஆனால் அதேவேளை, நான் முன்பு சொன்னதுபோல தத்துவத்தில் எதுவும் முற்றிலும் புதியது அல்ல. அவ்வாறு முற்றிலும் புதிதாக இருப்பதென்பது சாத்தியமற்றதும்கூட. தத்துவத்தில் எல்லாமே திருப்பி நிகழக்கூடியதுதான். இன்னும் நூறாண்டுகள் கழித்து ஓஷோவை போல இன்னொருவர் வருவார். அவரும் அன்று புதியவராகத்தான் இருப்பார். அதேவேளை, அன்றும் வேறொருவர் வந்து ‘இல்லைங்க, முன்னால் ஓஷோ என்று ஒருவர் இருந்தார். அவரிலிருந்து இவருக்கு ஒரு கோடு இழுக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டும் இருப்பார்.
தமிழகமும் சார்வாகமும்
சார்வாகம் தமிழகத்தில் இருந்ததா? தமிழிலக்கியத்தை எடுத்துப்பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியுடன் மதுரை செல்கிறான். பெரும் செல்வத்தை அழித்த குற்றவுணர்வுடன் செல்கிறான். ஐம்புலன் ஒறுத்த சமணத்துறவியான கவுந்தியடிகள் உடன் செல்கிறார். அப்போது அவர்கள் எவ்வளவு குற்றவுணர்வை உண்டாக்கியிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சமணமதம் என்பதே மனிதர்களிடம் குற்றவுணர்வை உண்டாக்கும்பொருட்டு இறைவனால் அனுப்பப்பட்டது என்கிறார் ஓஷோ. அவர்களுடைய கருவியே குற்றவுணர்வுதான். எனவே ‘நானெல்லாம் மனிதனே அல்ல’ என்ற உணர்வுடன்தான் கோவலன் சென்றிருப்பான்.
நூலின் அந்த இடத்தில் புறஞ்சேரி இறுத்த காதை என்ற பகுதி வருகிறது. அங்கு கோவலன் ஒரு மக்கட்குழுவை பார்க்கிறான். இளங்கோ அவர்களை ”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர்” என்கிறார். இசையோடு இணைந்த பாடலுக்கு வரி என்று பெயர். கானல் வரி, வேட்டுவ வரி போல. மறைநூல் வழுக்கத்து என்றால் வேதங்களை ஓதாமை. அதாவது வேதங்களை ஓதாத, இசைப்பாடல்களை பாடக்கூடிய, முப்புரி நூலணிந்த மனிதர்கள் வாழக்கூடிய சேரி என்கிறார் இளங்கோ. உரையாசிரியர்கள் அவர்களை ‘வேளாப் பார்ப்பனர்’ என்று குறிப்பிடுகின்றனர். அதாவது வேள்வித்தொழில் செய்யாத பிராமணர்கள். புறநானூற்றிலும் இவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.
அவர்களுடைய வாழ்க்கைமுறை என்பது இசை, குடி, இன்பம் போன்றவையே. இன்பமே புருஷார்த்தம் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஏன் நகருக்கு வெளியே புறஞ்சேரியில் வாழ்ந்தார்கள் ? அரசன் ஏன் அவர்களை பேணினான் ? அரசன் அளிக்காமல் அந்தணர்கள் வாழமுடியாது. அப்படியெனில் இவர்கள் அரசனுக்கு தேவையாய் இருந்திருக்கின்றனர். எப்படி மூன்று அக்னிகளை வளர்த்து வாழும் அந்தணர்கள் அரசனுக்கு தேவையோ அதுபோலவே வேளாப் பார்ப்பனரும் அவனுக்கு தேவையே. ஏனெனில் அது வேறொரு வழி. வைதிகர்கள் சென்றடைய முடியாத ஓர் இடத்திற்கு இவர்களால் செல்லமுடியும்.
அந்த பகுதியை பற்றி விவாதிக்கும்போது மார்க்சிய அறிஞர் கா. சிவத்தம்பி, பழைய காலங்களில் வேதியியல், வானியல் உட்பட பல உலகியல் ஞானங்களை உருவாக்கக்கூடியவர்களாக இந்த வேளா பார்ப்பனர்கள் இருந்திருக்கலாம், ஆகவே அரசன் அவர்கள் புரந்திருக்கலாம், வேதங்களுக்கு அப்பாற்பட்ட மெய்ஞானங்களை நோக்கி இவர்கள் சென்றிருக்கலாம் என்கிறார். அன்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் போன்றவற்றை பிற்காலத்தில் வேள்விப் பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளும் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்கிறார். ஆகவே இதை செய்யக்கூடிய ஒரு சமூகம் அன்று இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
கோவலன் அவர்களை பார்க்க உள்ளே செல்கிறான். யாழ் ஒன்று கிடைக்கிறது. ஆடிய கால், பாடிய வாய் சும்மா இருக்காதல்லவா. அதை வாசித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிடுகிறான். அதுவரைக்கும் இருந்த குற்றவுணர்வெல்லாம் போய்விட்டது. அதன்பின் மிகமுயன்று அவனை அங்கிருந்து அழைத்து செல்கின்றனர். சிலம்பை படிக்கும்போது, ஒருவேளை அவன் அங்கேயே இருந்திருந்தால் சாகாமல் இருந்திருப்பானோ என்ற எண்ணம் எழாமலில்லை.
இவ்வகையான புறஞ்சேரிகளை மகாபாரதத்திலும் பார்க்கமுடிகிறது. யுதிஷ்டிரனின் முடிசூட்டு நிகழ்வில் ஒரு சார்வாகன் உள்ளே வருகிறான். அந்த இடத்தில் சார்வாகர்களை பற்றி சொல்லும்போது விழவுகளில் மட்டும் நகருக்குள் வரக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்ற காலங்களில் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய சோலைகள், சுடுகாடுகளில் இவர்கள் வாழ்கின்றனர். விழாக்களில் அவர்களை மறுக்கமுடியாது. அவர்கள் ஊருக்குள் வந்தாக வேண்டும். நான் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறேன். அதில் சார்வாகனை பற்றிய மகாபாரதச் சந்தர்ப்பத்தை விரிவாக எழுதியிருக்கிறேன். மகாபாரதத்தில் அந்த சார்வாகன் எலித்தோல் கோவணம் அணிந்து, உடலில் சாம்பல் பூசி, கையில் தண்டத்துடன் வருகிறான். இவனை யார் உள்ளே விட்டது என்று ஒருவர் கேட்கும்போது, ‘நான் இல்லையேல் உனது சபை பூரணமடையாது’ என்று அரசனிடம் சொல்கிறான்.
அதன்பின் யுதிஷ்டிரன் கைநிறைய பொன்னை அள்ளி அனைவருக்கும் கொடுக்கிறான். அந்தணர்களுக்கும் ரிஷிகளுக்கும் இரவலர்களுக்கும் கொடுத்து தனது கருவூலத்தை காலிசெய்தால்தான் ராஜசூயத்தை செய்யமுடியும். ஆகவே அந்த சார்வாகனுக்கும் பொன்னை அளிக்கிறான். அவன் அதை முகர்ந்துபார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். அதில் இரத்தமணம் வீசுகிறது என்று சொல்லி வேறு பொன் கேட்கிறான். மீண்டும் அவ்வாறே முகர்ந்து பார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். இதைக்கண்டு அனைவரும் கோபப்படுகிறார்கள். யுதிஷ்டிரன் என்ன வேண்டும் உனக்கு என்று கேட்க “உன் களஞ்சியத்தில் ரத்தக்கறை படியாத நாணயம் உண்டா?” என்று கேட்கிறான்.
அதிகாரத்தின் முற்றத்தில் வந்து நின்றுகொண்டு சார்வாகன் அந்த கேள்வியை கேட்கிறான். அதனால் பிராமணர்கள் அவனை எரித்துக் கொன்றுவிடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது. அவர்களுக்குள் மிகப்பெரிய தத்துவ மோதல்கள் நடந்திருக்கின்றன. அது என்றும் அழியாத மரபு. உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கலாம், எனக்கு இன்னொன்று இருக்கலாம். நான் ஓஷோ கம்யூனில் சென்று உட்காரமாட்டேன். நான் நித்யசைதன்ய யதியின் வழிவந்த அத்வைதி. ஆனால் அந்தப்பக்கம் அதுவும் இருக்கவேண்டும் என்பது எனது அவசியங்களில் ஒன்று. அதனுடைய இருப்பை, தொடர்ச்சியை நான் மறுப்பேனென்றால் நான் என்னையே மறுத்துக்கொள்வதாகவே அர்த்தம்.
ஓஷோவின் முன்தொடர்ச்சி என்று நான் சொல்லக்கூடியது ஒருவகையில் வேதத்தில் தொடங்குவதுதான். அது என்றுமிருக்கும் தரப்பு. ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார், ‘நீங்கள் துறவியா?’ என்று. ‘ஆம், துறவிதான்’ என்கிறார் ஓஷோ. ‘துறவிக்கு எதற்கு வைரங்கள் பதித்த பட்டை’ என்று அவர் கேட்கிறார். ‘ஏன், துறவிகள் அப்படி போடக்கூடாதா’ என்று திரும்பிக்கேட்கிறார் ஓஷோ. அவர் ‘போடக்கூடாது’ என்கிறார். அதற்கு ஓஷோ, ‘நீ அப்படி சொல்கிறாய் அல்லவா, அதனால்தான் போட்டிருக்கிறேன்’ என்றார். சுருக்கமாக சொன்னால் எலித்தோல் கோவணம் அணிந்து சுடுகாட்டில் தங்கி, கையில் யோகதண்டத்தை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் அவையில் நுழைந்த அந்த சார்வாகன்தான், உலகியேயே விலைமதிப்புமிக்க வைரங்கள் பதித்த பட்டையை நெற்றியில் அணிந்துகொண்டு, பட்டு ஆடைகளுடனும் நூறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடனும் உள்ளே வருகிறார். உண்மையில் அந்த வேறுபாடு அவ்வளவு பெரிதல்ல.
இருபதாம் நூற்றாண்டுக்கு அவர் அவ்வளவு புதியவரா என்று கேட்டால் அதற்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கேரளாவில் சித்தாசிரமம் என்ற ஆசிரமம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஒருவர் பின்பு சித்தராகி சிவானந்த சித்தயோகி என்று அறியப்பட்டார். அவர் நிறுவிய கம்யூன் கேரளாவில் சித்தாசிரமம் என்ற பெயரில் தலைச்சேரிக்கும் வடகரைக்கும் நடுவில் உள்ளது. அதன் ஒரு கிளை சேலத்தில் இருந்தது. தற்போது உள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய காலகட்டத்தில் இருந்தே அந்த கம்யூன் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நான் மூன்றுமுறை அங்கு சென்றிருக்கிறேன். அந்த ஆசிரமம் மிகப்பெரிய வேலியிடப்பட்ட வளாகம். அதற்குள் அதன் உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். அங்கு பொதுவான ஓரிடத்தில் ஆண், பெண் இருவருக்கும் வெள்ளாடைகள் வைத்திருபார்கள். வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது அதை அணிந்துகொண்டு வரலாம். ஆனால் உள்ளே முழுமையான நிர்வாணத்தில்தான் இருப்பார்கள். அங்கு ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் உறவுச்சிக்கல்களும் கிடையாது.
அங்கு பிறக்கும் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதில் மற்றொரு கம்யூனுக்கு அனுப்பப்படும். அவர்களுக்கு உறவுமுறை என ஏதும் இருக்காது. அவர்கள் தனிமனிதர்கள், அவ்வளவுதான்.நீங்கள் நினைத்தே பார்க்கமுடியாத ஒருவகையான உறவு நிகழக்கூடிய இடம் அது. அதை ஒரு நாவலாக எழுதினால் அதை தணிக்கை செய்வார்கள். சினிமாவாக அதை எடுக்கமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இங்கு உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் அங்கே சென்று பார்க்கலாம். முக்கியமாக ஆயுர்வேத மருந்துகள் செய்வதில் அவர்கள் நிபுணர்கள். அந்த மருந்துகளுக்கு பெரும் மதிப்பு இருப்பதால் அவர்கள் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் உள்ளனர். அந்த ஆசிரமத்திற்கு எதிராக அங்கே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன.
அந்த பிரச்சனைகளை செய்தவர்கள் யார் ? அந்த ஆசிரமவாசிகளின் அவ்வகையான ஒழுக்கமின்மை நெறிகள் அல்லது மாற்று ஒழுக்க நெறிகளை பார்த்து புண்பட்டு அவர்களுக்கு எதிராக பிரச்சனை செய்தவர்கள் எந்த தரப்பினர் ? சாரவாத இந்துக்கள் கலாட்டா செய்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். நாயர்களோ நம்பூதிரிகளோ ஐயர்களோ சென்று பிரச்சனை செய்திருப்பார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. ஏனெனில் அந்த மரபுவாதிகளின் பார்வையில் அவர்கள் சித்தர்கள், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .அது சாமானிய அனைவருக்கும் தெரியும். அங்கே பலமுறை பிரச்சனை செய்தவர்கள் மார்க்சிஸ்டுகள்.
ஏனெனில், நான் ஏற்கெனவே சொன்னதுபோல மார்க்சிஸ்டுகளும் ஒரு வகையான செங்கல்சூளை வைத்திருப்பவர்களே. ஒவ்வொரு குடிமகனையும் ஒரேமாதிரியான செங்கலாக அடித்து வெளியே தள்ளுவதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தரப்பு பலமுறை அந்த ஆசிரமத்திற்குமேல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. அப்போதெல்லாம் அந்த தாக்குதலுக்கு எதிராக கருத்து சொல்லி அதை கட்டுப்படுத்த முயன்றவர்கள் இந்திய தத்துவம் பயின்ற மார்க்சிய சிந்தனையாளராகிய கே.தாமோதரன், இந்திய சிந்தனைகளில் அறிமுகம் கொண்ட ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்றவர்களே. அவர்கள் சொன்னார்கள், ‘இல்லப்பா, அது வேறு. இவர்கள் வேதகாலத்தில் இருந்து இருக்கிறார்கள். எப்போதுமே இருப்பார்கள். இந்தியா என்று ஒரு தேசம் இருக்கும்வரை இப்படி சிலர் இருப்பார்கள்’ என்று.
அந்த நீண்ட மரபில் நாம் ஓஷோவை வைத்து பார்க்கவேண்டும். ஓஷோவை எப்படி இந்தியாவின் அனைத்துச் சிந்தனை மரபுகளோடும் தொடர்புபடுத்தி பார்ப்பது என்பதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். ஒரு பொருள் காட்டில் விழுந்தால், நான்கைந்து ஆண்டுகளுக்கு பின் பார்க்கும்போது அங்குள்ள அத்தனை வேர்களும் அந்த பொருளை சுற்றிவளைத்து பிடித்திருக்கும். அதுபோல இந்த சிந்தனை முறை என்பது ஒரு காடு. இந்த காட்டில் ஒரு பொதுப்பொருள் விழும்போது அத்தனை வேர்களும் வந்து அதை கவ்விப்பிடிக்கின்றன. உள்வாங்குகின்றன, அதன் சாராம்சத்தை எடுத்துக்கொள்கின்றன.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் பற்றிய தமிழ்விக்கி பதிவு. ஒரு முழுமையான நூல் அளவுக்கே கூடுமானவரை எல்லா செய்திகளும் தொகுத்து அளிக்கப்பட்டது. இணையக் கலைக்களஞ்சியத்தின் சிறப்பு அதை பிழைநீக்கி மேம்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பதுதான். இன்னும்கூட இது மேம்படலாம். இதில் பணியாற்றியவர்களுக்கு நன்றி.
இன்றைய செயற்கை நுண்ணறிவு என்னும் தகவல்திருட்டுக் காலகட்டத்தில் இந்த உழைப்பை மிக எளிதாக மென்பொருட்கள் திருடி தங்களுடைய பதிலாக நம் வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு அளிக்கும். அந்த ஆய்வாளர்கள் அதை அங்கே இங்கே பட்டி தட்டி உருமாற்றி தங்கள் ஆய்வுத்தரப்பாக முன்வைப்பார்கள். பரவாயில்லை, இந்த தகவலும் கருத்தும் சென்றடைவதே முக்கியம் என இதற்காக உழைக்கும் பெயர் வெளிவராத நண்பர்களிடம் சொன்னேன்.
இப்பதிவுக்கான ஆய்வுகளைச் செய்கையில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பெரும் பணி கண்முன் வந்து நின்றது. கிட்டத்தட்ட எல்லா தரவுகளும் அவரால் தொகுக்கப்பட்டவை, அல்லது கண்டறியப்பட்டவை, அல்லது உறுதிசெய்யப்பட்டவை. பெரும் கலைஞர்கள் தங்களுக்கான வாழ்நாள் ஆய்வாளர்களை காலப்போக்கில் கண்டடைகிறார்கள். புதுமைப்பித்தன் வாசகர்கள் அனைவரும் எப்படியோ ஆ.இரா.வேங்கடாசலபதிக்குக் கடன்பட்டுள்ளனர். புதுமைப்பித்தன் வழிவந்தவன் என்னும் முறையில் நானும்.
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் – தமிழ் விக்கி
வாசகன் என்னும் ஆணவம்
தமிழ்ச் சமூகத்தில் சொல்லி சொல்லி நமக்கெல்லாம் உருவேற்றப்பட்ட ஒன்று ‘பணிவுதான் உயர்ந்த பண்பு’ என்பது. எவ்வளவு பணிவை பாவ்லா செய்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நல்லவர்கள் என்று பரவலாக நம்பப்படுவோம். ஆகவே சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் கூட சிந்தனையையும் எழுத்தையும் கீழ்மைப்படுத்திப் பேசி தங்கள் பணிவைக் காட்டிக்கொள்ளும் ஒரு சூழல் உலகத்தில் வேறெங்குமின்றி தமிழகத்தில் மட்டுமே உருவாகி வந்திருக்கிறது.
வாசகன் என்னும் ஆணவம்
The Vedantic discourses today are generally very old-fashioned and an expression of pedantry. I am interested to know Vedanta as a living thought, as a cosmic vision, with a modern intellectual base and logic.
Articles on VedantaAugust 4, 2025
பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வு
பெங்களூர் புக்பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா வரும் ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது. நான் மூன்றுநாட்களிலும் கலந்துகொள்கிறேன். எனக்கு மூன்று நிகழ்வுகள் உள்ளன.
8 ஆகஸ்ட் 11- 1150 வரை ஜெயந்த் காய்கினி, கே.ஆர்.மீரா, தமிழவன், சி.மிருணாளினி பங்கெடுக்கும் அமர்வு. ஒருங்கிணைப்பு சுசித்ரா
8 ஆகஸ்ட் 1600- 1630 முகாமுகி அரங்கு . நேருக்குநேர் உரையாடல்.
என்னுடைய வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (குமார் .எஸ் ) வெளியிடப்படுகிறது. 10- ஆகஸ்ட் 2025 காலை 11 மணிக்கு. அனாவரணா அரங்கு.
நண்பர்களை அழைக்கிறேன்
புக்பிரம்மா இணையப்பக்கம்தமிழுடன் இசை!
பெரியசாமி தூரன் தமிழிசை முன்னோடிகளில் ஒருவர். அவர் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழும் விழாவில் வழக்கம்போல நாதஸ்வர இசை நிகழ்வு உள்ளது. தூரனின் தமிழிசைப் பங்களிப்பைப் போற்றும் முகமாக தொடர்ச்சியாக தமிழ்ப்பண்பாட்டின் முதன்மையான இசைக்கருவியான நாதஸ்வரத்தை முன்வைத்து வருகிறோம்.
இந்த ஆண்டு
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாஆகியோரின் இசைநிகழ்வு நடைபெறுகிறது.
பொதுவாக நாம் மரபிசை நிகழ்வுகளில் மிகக்குறைவாகவே கலந்துகொள்கிறோம். புதிய தலைமுறையினருக்கு மரபிசை அறிமுகமும் மிகக்குறைவு. இன்றைய போட்டிமிக்க படிப்புமுறை அந்தவகையான கலைப்பயிற்சிகளுக்கு உகந்ததாக இல்லை. ஓர் அகவைக்குப் பின்னரே நமக்கு கலை- இலக்கிய நாட்டம் உருவாகிறது. அந்தவகையினரை முன்னில்கண்டுதான் இந்நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மரபிசை அறிமுகம் அல்லது இசைநிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் இல்லாமல் நாதஸ்வர இசையைக் கேட்பது கடினம். நமக்கு நாதஸ்வர இசை வெறும் மங்கல இசை என்ற எண்ணமும் உள்ளது. திருமணம் போன்ற விழாக்களில் நாதஸ்வர இசையை வெறும் சூழலோசையாகவே நாம் கேட்கிறோம்- உண்மையில் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். பலசமயம் திருமண நிகழ்வுகளில் எளிய சினிமாப்பாடல்களே இசைக்கப்படுகின்றன. அத்துடன் அவை மிகுந்த ஓசையுடன் இருப்பதனால் நம்மால் அமர்ந்து கேட்க முடிவதுமில்லை.
இந்த விழாவில் நாதஸ்வரம் மங்கலச் சூழலுக்கான இசையாக முன்வைக்கப்படவில்லை. இங்கே நிகழவிருப்பது ஓர் இசையரங்கு. அவையினர் முன் இரண்டு மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்த்தப்படும். ஒலிப்பெருக்கி ஏதுமின்றி அவையினரின் செவிகளுக்கு உகந்த முறையில் அமையும். தூரன் அவர்களின் கீர்த்தனைகளும், இசைவிரிவாக்கமும் நிகழ்த்தப்படும்.
இந்நிகழ்வை இசையறிமுகமும், இசைநிகழ்வு அனுபவமும் இல்லாதவர்கள் ரசிப்பது எப்படி? அதற்குத்தான் வாசிக்கப்படும் பாடல்களை முன்னரே அறிமுகம் செய்கிறோம். இந்தப் பாடல்களை முன்னரே சிலமுறை கேட்டால் நம் செவிக்கு அவை பழகிவிடுகின்றன. கருவியிசையைப் பொறுத்தவரை அந்தப் பாடல் நமக்கு தெரியும் என்றால் கருவியின் இசையொலி பாடலின் சொற்களாக நம் செவிகளுக்குக் கேட்கத் தொடங்கும். அது ஓர் அரிய அனுபவம். நம்மால் மிக எளிதாக இசைக்குள் செல்லமுடியும்.
தமிழகத்தின் முதன்மையடையாளங்களில் ஒன்று நாதஸ்வர இசை. நாதஸ்வரக் கலைஞர்களை அறிந்துவைத்திருப்பது, முக்கியமானவர்களை உரியமுறையில் கௌரவிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த இசையை கேட்கும்படி நம் செவிகளைப் பழக்குவது. நம் வழித்தோன்றல்களுக்கு அறிமுகம் செய்வது. இல்லையேல் இன்னொரு தலைமுறைக்குள் நாம் இந்த மாபெரும் மரபை, நமக்கு மட்டுமே உரிய தனி அழகியலை இழந்துவிடுவோம். இந்நிகழ்வு சில இளம் நண்பர்களுக்காவது செவிகள் திறக்கவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது.
இசைக்குள் நுழைவது மிக எளிது. அடிப்படையான சில தயாரிப்புகளைச் செய்துவிட்டு செவிகளை ஒப்படைத்து அரங்கில் அமர்ந்திருந்தாலே போதும். நாம் உள்ளே நுழைந்துவிடுவோம். நம் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உலகம் நமக்காக உருவாகத் தொடங்கிவிடும். இசையின் வழியாக நாம் பண்பாட்டின் எல்லா நுண்ணிய பக்கங்களுக்குள்ளும் நம்மையறியாமலேயே நுழைந்துவிடுவோம். நாதஸ்வர இசைதான் நம் ஆலயக்கோபுரங்கள், நம்மைச்சூழ்ந்திருக்கும் மலைகள், நம் நிலம், நம் ஆறுகள்.
நல்வரவு
ஜெ
வணக்கம் ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2025 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம். இசை குழுவினர் குறித்த தகவல்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
– யோகேஸ்வரன் ராமநாதன் (இசை ஒருங்கிணைப்பாளர்)
நிகழ்வுமுறை :
அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
ஆ) : இவ்வருடத்திற்கான பாடல் பட்டியல் கடந்த இருவருடங்களில் இசைக்கப்படாத புது பாடல்களை கொண்டது.
[பார்க்க
இ): கீர்த்தனைகளின் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கான யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்.
ஈ): ராக ஆலாபனை : முதன்மை ராக ஆலாபனை ”தோடி” ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்.
உ): ராகமாலிகை : ராகமாலிகையில் வாசிக்கப்பட இருக்கும் ராகங்கள்: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[ தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song ]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[ Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song ]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]
10.ராகமாலிகா: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
Attachments area
Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari
ஓஷோ: மரபும் மீறலும்-9
என் மகள் சைதன்யா சிறு குழந்தையாக இருந்தபோது எல்லா குழந்தைகளையும் போலவே அவளும் ஒரு ஞானியாக இருந்தாள். அதைப்பற்றி ஜெ.சைதன்யாவின் சிந்தனைமரபு என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். இரண்டு வயதுக்குள்ளாக அவள் சொன்ன மெய்ஞானக் கருத்துகள் அடங்கிய ஒரு நூல் அது. அவள் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனல் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் பார்ப்பதற்கு பன்றி போல் ஒரு விலங்கு வந்தது. அவள் என்னிடம், ‘பாத்தியா பன்னி’ என்றாள். ‘ஆமா’ என்றேன். ஆனால் அதற்கு தும்பிக்கை இருந்தது. தனது தும்பிக்கையை கொண்டு எதையோ பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டு, ‘அது பன்னியில்ல, யானை’ என்றாள். ‘ஆமா பாப்பா’ என்றேன். பின்பு அது பின்னால் திரும்பி ஓசையிட்டது. அதை பார்த்துவிட்டு, ‘அது யானை இல்ல’ என்று சொல்லி சில வினாடிகள் கழித்து ‘அது ரொம்ப கெட்டது’ என்றாள். அடையாளப்படுத்தவே முடியாத ஒரு விலங்கு இருக்குமென்றால் அது கெட்டதாகத்தானே இருக்கும். நமக்கு அது யார் என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?
இத்தகைய ‘கெட்டது’ என்ற அடையாளப்படுத்தல்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மீது எப்போதும் உண்டு. எது வழக்கமில்லாததோ, எது வகுத்துக்கொள்ள முடியாததோ அது கெட்டது. அதற்காகவே ஒழுக்கம் சார்ந்த வகைப்படுத்தல்கள். நித்யா ஓர் உரையில் சொல்கிறார், ”Amorality என்பது சிந்தனையின் ஒரு விதியாக உள்ளது”. அது பாலியல் மட்டுமல்ல, எல்லாவிதமான ஒழுக்கங்களுக்கும் அப்பாற்பட்ட தன்மை. சில சிந்தனையாளர்கள் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது ஒழுக்க குற்றச்சாட்டுகள்தான் முதலில் வரும். எனக்கு தெரிந்து உலக சிந்தனையாளர்களில் மிகத்தீவிரமாக ஒழுக்கத்தை முன்வைத்தவர்கள் டால்ஸ்டாயும் காந்தியும்தான். ஆனால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்கள் மிகப்பெரிய ஒழுக்க குற்றச்சாட்டுகளை சந்திக்க நேர்ந்தது. அவர்களைப் பற்றிப் பேச அவர்கள் ஒழுக்கவாதிகள் என எழுதி, அதை கோடிட்டு அடித்துவிட்டுத்தான் மேலே செல்லவேண்டும்.
ஏன் வகுத்துக்கொள்ளவேண்டும்?
ஓஷோவை வரையறுக்கும்போது அடுத்த கேள்வி எழுகிறது. அதை ஒரு முன் நிபந்தனையாக சொல்லிவிட்டுதான் மேற்கொண்டு பேசவேண்டும். ஓஷோ போன்ற ஒருவரை தத்துவப்படுத்தத்தான் வேண்டுமா என்பதே அந்த கேள்வி. தத்துவத்தில் அடிக்கோடிட்டு சொல்லவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதுபோல வெட்டிவிட்டு பேசவேண்டிய சில விஷயங்களும் உண்டு. கோவிட் கிருமியை பலமிழக்கச்செய்து தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதைப்போல. தத்துவக்கல்வி உடையவர்கள் இவ்விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். தத்துவ குருகுலங்களில் இந்த விஷயம் பேசப்படும். வெளிமேடைகளில் பெரும்பாலும் ஓங்கிச்சொல்லும் விஷயங்கள்தான் பேசப்படும்.
ஓஷோவை இன்னின்ன தத்துவ சிந்தனைகள் வழியாக அணுகமுடியும், அவருக்கு இன்னின்ன தத்துவ பின்னணி இருக்கிறது, அவரை இன்னின்ன தத்துவ முறைகளுடன் உரையாட வைக்கமுடியும் என்று இங்கு சொல்லும்போதே அவரை தத்துவத்திற்கு வெளியே வைத்தும் பார்க்கவேண்டும், தத்துவத்துடன் அவரை நிறுத்திவிடக்கூடாது என்ற நிபந்தனையையும் அதனுடன் சேர்த்துக்கொள்வேன். அதுதான் ரத்துசெய்து பயன்படுத்துவது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஓஷோ வாழ்நாள் முழுக்க இத்தகைய தத்துவப்படுத்தல்களுக்கு எதிராக இருந்தவர் என்பதாலேயே. அத்தகையவரையே நாம் மீண்டும் தத்துவப்படுத்தக் கூடாது.
இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகப்பெரிய சிலைஉடைப்பாளர் (Iconoclast) ஓஷோ தான். ஆனால் அவருக்குத்தான் நாம் இன்று அதிகமாக படங்களை வைத்திருக்கிறோம். ஏனெனில் அத்தகையவர்களுக்குத்தான் நாம் முதலில் சிலையே வைப்போம். நாராயணகுரு இலங்கைக்கு சென்றுவந்த மாணவர்களிடம் கேட்கிறார், ‘அங்கு புத்தருக்கு சிலைகள் உள்ளனவா’ என்று. ‘புத்தருக்குத்தான் சிலைகள் உள்ளன. ஏராளமான மிகப்பெரிய சிலைகள் அவருக்குத்தான் உள்ளன’ என்றனர் மாணவர்கள். நாராயணகுரு ‘அது அப்படித்தான் வரும். ஏனெனில் அவர்தான் வரலாற்றில் முதன்முறையாக சிலை வைக்கக்கூடாது என்று சொன்னவர்’ என்றார். ஓஷோவுக்கும் நாம் இன்று அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவேதான் தத்துவப்படுத்தும் போதே அதை ரத்துசெய்யவும் வேண்டும் என்கிறேன்.
ஓஷோ பாணியில் ஒரு நகைச்சுவை சொல்லலாம். நான் காசியில் சாமியாராக திரிந்த காலத்தில் என்னுடன் கர்நாடகாவை சேர்ந்த இன்னொருவர் இருந்தார். அவர் தமிழ் பேசுவார். அவர் என்னிடம் ஓடிவந்து ‘மலையாளத்து சாமீ, வாங்க. ஹடயோகி ஒருவன் வந்திருக்கிறான். அனைவரும் சென்று பார்க்கிறார்கள். நாமும் போய் பார்க்கலாம்’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘அவன் ஆண்குறியில் மூன்று செங்கல்களை கட்டி தொங்கவிட்டிருக்கிறான்’ என்றார். நான் சொன்னேன் ‘அந்த உறுப்புக்கு படைப்பூக்கம் மிக்க, மகிழ்ச்சியான பல வேலைகள் உள்ளன. செங்கலை கட்டி தொங்கவிடுவதற்காக அது உருவாக்கப்படவில்லை’.
ஓஷோவின் மெய்ஞானம் என்பது இத்தகைய தத்துவச் செங்கல்களை கட்டி தொங்கவிடுவது அல்ல. அது கவிதை மாதிரி. கவிதையை, இலக்கியத்தை ஓரளவுக்குமேல் தத்துவப்படுத்தினால், அல்லது ஓரளவுக்குமேல் கோட்பாடாக்கினால், அது அதை கொன்று பிணக்கூறாய்வு செய்வதைப்போல ஆகிவிடும். நான் இலக்கிய விமர்சனம் எழுதும்போது முதலிலேயே அந்த விமர்சனத்தை மேலே கோடுபோட்டு ரத்து செய்துவிட்டுத்தான் எழுதுவேன். ஒரு கதையை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துபார்க்கும்போது, ‘இதை ஆராயலாம். ஆனால் அதற்கு அப்பால்தான் கவிதை இருக்கும். இது அறுதியானது அல்ல’ என்று சொல்லி அதை ரத்து செய்துதான் பயன்படுத்துகிறேன். ஓஷோவை நான் தத்துவார்த்தமாக வகுத்துவிட்டதாக நீங்கள் எண்ணாமல் இருக்கும்பொருட்டே இதை முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன்.
எப்படி வகுத்துக்கொள்ளவேண்டும்?
ஓஷோவை நாம் வகுத்துக்கொள்ளும்போது இந்திய மரபில் அவரை எங்கு பொருத்துவது என்பது முக்கியமான கேள்வி. நாம் மீண்டும் மீண்டும் அவரை மேற்கோள்களாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்திய மரபு என்பது எப்படிப்பார்த்தாலும் ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக நமக்கு எழுத்துவடிவிலான தத்துவ சிந்தனைகள் கையில் கிடைக்கின்றன. இந்த தத்துவ சிந்தனைகளின் எந்தெந்த முனைகள் ஓஷோவை வந்து தொடும், எவையெவை தொடாது ? நீண்ட பருந்து பார்வையில் இத்தகைய சித்திரத்தை அளிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய சிந்தனை முறைமைகளில் எதனெதனுடன் அவருக்கு உடன்பாடு இருக்கும், எதனெதனுடன் அவருக்கு முரண்பாடு இருக்கும்? எப்படி அவரை இந்தியாவின் பிரம்மாண்டமான மரபில் வைத்து புரிந்துகொள்வது? மறுப்பதென்றால் எப்படி மறுப்பது? நான் இந்த உரையில் மறுக்கத்தான் போகிறேன். ஆனால் எப்படி மறுக்கிறேன் என்பதை சொல்ல இத்தனையையும் சொல்லவேண்டியுள்ளது.
ஏன் அவரை அப்படிச் சிந்தனைமரபில் பொருத்திப்பார்க்கவேண்டும்? என்னைப் பொறுத்தவரை சிந்தனையில் முற்றிலும் புதியதாக ஒன்று நிகழ முடியாது. எல்லா சிந்தனைகளும் வளர்ச்சிகளும் தொடர்ச்சிகளும்தான். ஓஷோ முளைத்த அந்த வேரைத் தெரிந்துகொள்வது ஓஷோவை ஆழ்ந்து தெரிந்துகொள்வதுதான். அத்துடன் ஓஷோ ஏன் அந்த ஏற்பை அடைந்தார், ஏன் இன்றும் ஏற்கப்படுகிறார், ஏன் அவர் மறுக்கப்பட்டார் என்று புரிந்துகொள்ளவும் அவரைச் சிந்தனை மரபில் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
ஒரு வசதிக்காக அவரை ரிஷி என்று சொல்லலாம். அது மிக பொதுவான ஒரு சொல். மகாபாரதத்திலோ புராணத் தொகுதிகளிலோ ரிஷி என்ற சொல் மிக நெகிழ்வான பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். துறவி என்ற பொருளில் அல்ல. மணமாகி குடும்பமாக இருக்கும் ரிஷிகள் இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு குழந்தைகள் இருக்கின்றன. பல ரிஷிகளுக்கு பல்வேறு பாலுறவுகளும் இருந்திருக்கின்றன. பல ரிஷிகளில் இருந்து மன்னர் குலங்கள் உருவாகியிருக்கின்றன. அதுபோல துறவு பூண்ட ரிஷிகளும் உள்ளனர். இவர்களை பற்றிய கதைகளைத்தான் நாம் கேட்டு வளர்ந்திருக்கிறோம்.துர்வாசர் என்று ஒரு ரிஷி இருக்கிறார். கோபம்தான் அவரது அடையாளமாக சொல்லப்படுகிறது. அவருக்கு பிறந்த குழந்தைகள் உள்ளன. அவை எதுவும் அவர் மணவுறவில் பெற்றுக்கொண்ட குழந்தைகள் அல்ல. குந்திக்கு பிறந்த கர்ணனைப்போல. நமக்கு ரிஷி என்பவர் அறிஞரோ யோகியோ கவிஞரோ எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர் அல்ல. அவ்வளவுதான்.
உதாரணமாக தீர்க்கதமஸ் என்பவருடைய கதை உள்ளது. அவருடைய கதை விந்தையானது. அசுரகுலத்தின் ரிஷிகளில் ஒருவர் பிருஹஸ்பதி. அவர் நாஸ்திக ஞானிகளில் ஒருவர். அவருடைய சகோதரர் உதத்யர். அந்த உதத்யருடைய மனைவி மமதா. உதத்யரால் மமதா கருவுற்றிருந்தார். அந்தவேளையில் அவளுடன் உறவுகொள்கிறார் பிருஹஸ்பதி. உள்ளே கருவடிவில் இருக்கும் தீர்க்கதமஸ் தனது காலால் பிருஹஸ்பதியின் விந்துவை தடுத்து வெளியே தள்ளுகிறான். எனவே பிருஹஸ்பதி கோபித்து ‘நீ குருடனாவாய்’ என்று சபித்தார். பிறவியிலேயே குருடாக தீர்க்கதமஸ் வெளியே வருகிறார். குருடாக இருந்ததாலேயே அதிக ஒலிக்கூர்மையுடன் இருந்ததால் மிக இளம் வயதிலேயே வேதங்களை கற்றுத்தேர்ந்து வேதஞானம் உடையவராக ஆனார்.
அதேசமயம் தீர்க்கதமஸ் காமமே வடிவானவராக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்ணை மணம்செய்து வைக்கிறார்கள். ஆனால் அவர் அங்கிருக்கும் அனைத்து பெண்களிடமும் பிரகாச மைதுனம் என்ற வழிமுறையில் ஒளிவடிவாக சென்று உறவுகொள்கிறார். இது தெரிந்தவுடன் அவருடைய மனைவி அவரை ஒரு படகில் வைத்து கங்கையில் விட்டுவிடுகிறாள். கங்கை வழியாக சென்றுகொண்டிருந்த அவரை அசுர மன்னனான பலி என்பவன் காப்பாற்றுகிறான். பலியின் மனைவி சுதேஷ்ணையுடன் அவர் உறவுகொள்கிறார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்களில் இருந்து அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், புண்ட்ரம் என்ற ஐந்து நாடுகள் உண்டாகின்றன. அந்நாடுகளின் மன்னர் குடி அவரில் இருந்து பிறப்பதால் அவர் ஒரு பிரஜாபதி.
இப்படியொரு ரிஷி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறார். எனக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருக்கும்போது இந்தக்கதையை என் பாட்டியிடம் இருந்து கேட்டிருக்கிறேன். மகாபாரதத்தை வீடுகளிலும் கோயில்களிலும் படிக்கிறார்கள். அங்கும் இந்த கதையை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் பாரதம் படிப்பது மிகக்குறைவு. ஆனால் வடக்கில் அதிகம் படிக்கிறார்கள். அங்கு பாராயணம் என்பது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதி. இக்கதைகளை படித்து வந்தவருக்கு ஓஷோ எப்படி அந்நியமானவராக தெரிவார் ? அவர் இன்னொரு வகையான தீர்க்கதமஸ் போல, அவ்வளவுதானே. இந்த நீண்ட மரபில் அவர் எங்கும் அந்நியமானவராகவோ தவறானவராகவோ தென்படவில்லை. அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவ்வாறு புரிந்துகொள்ள முடியாதவை எவ்வளவோ உள்ளன.
மீண்டும் இங்கு ஒரு நம்பூதிரி நகைச்சுவை சொல்லலாம். இரண்டு நம்பூதிரிகள் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு பதில் தெரியவில்லை என்றால் மற்றொருவர் அவருக்கு ஒருபணம் தரவேண்டும் என்பது போட்டி. இருவருக்குமே ஒன்றும் தெரியாது. இருவருமே ஒருவருக்கொருவர் பணம் கொடுத்துக்கொள்கின்றனர். அப்போது ஒருவர் சொன்னார், ‘எனக்கு தெரியாதது எல்லாவற்றுக்கும் நான் உனக்கு பணம் தரவேண்டும் என்றால் இந்த உலகத்தையே தரவேண்டியிருக்குமே’ என்று.
ஒரு சாமானியனுக்கு தனக்கு தெரிந்ததை கொண்டு மொத்த உலகையும் மதிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. ‘எனக்கு தெரியாதது இருக்கும்ங்க. எனக்கு ரிஷிகளை பற்றி, துறவிகளை பற்றி தெரியாது. மாற்று ஆன்மிகம் பேசுபவர்களின் ஒழுக்கம் பற்றி தெரியாது. தெரியாதவொன்று இருந்துவிட்டு போகட்டும். அதுபற்றி எனக்கு கருத்து கிடையாது’ என்பார்கள். ஆனால் நாளிதழ்கள் படிக்கக்கூடிய நடுத்தரவகை ஆட்களிடம் எந்தவொன்றை பற்றி கேட்டாலும் கருத்து சொல்வார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி பட்ஜெட் போடவேண்டும் என்பது பற்றி கருத்து சொல்வார். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பத்தாவது ஃபெயில் என்று சொல்ல தயங்கமாட்டார். ஆனால் படிப்பற்ற ஒரு சாமானியனிடம் கேட்டால் ‘நமக்கு அதெல்லாம் தெரியிறதில்லீங்க. நமக்கு தெரிந்ததைத்தான் சொல்வேன்’ என்பார். அந்த சாமானியர்தான் ஓஷோவை ஏற்றுக்கொண்டவராக இங்கே இருந்தார். அவரை இங்கே இருந்த எத்தனையோ வகை ரிஷிகளில் ஒருவர் என்று முதலில் எடுத்துக்கொள்ளலாம்.
மிக எளிமையாக அவரை இப்படி வகுத்துக்கொண்டு மேலே செல்லலாம். வழிபாடும், நிராகரிப்பும் இல்லாமல் அவரை அணுக அது உதவும். எளிய ஒழுக்கவியல் அதிர்ச்சிகள், அறவியல் எடைபோடல்கள் இல்லாமல் அவரை புரிந்துகொள்ள இதுவே அடிப்படையான வழிமுறை.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
அ.கி. கோபாலன்
பதிப்பாசிரியர், இதழியலாளர், நாடகக்கலைஞர். காதம்பரி மாத இதழை அ.கி.ஜெயராமனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி புக் ஸ்டால், தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர். தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

