Jeyamohan's Blog, page 54
August 12, 2025
கடல், ஒரு காணொளி
கடல் திரைப்படமாக வந்து பத்தாண்டுகளுக்குப் பின் நாவல் வடிவம் வெளியாகியுள்ளது. அதன் தீவிரத்தை வாசித்துணர்ந்தவர்களின் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த உளப்பதிவு. பாவம்- மீட்பு என்னும் இரு எல்லைகளுக்கு இடையே ஆடும் ஓர் ஆத்மாவின் அகக்கடல் அது. அதை உணர்ந்து பேசியிருக்கிறார்.
Organizing – A letter
I have been watching your videos and reading your articles for more than a year, and I am so impressed by the way you present Vedantic ideas and issues of contemporary life. But what impressed me more is your success in organizing many people all over the world and getting things done
உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப் பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்August 11, 2025
எகிப்திலிருந்து கற்றவை
எகிப்தின் மக்களையும் பண்பாட்டையும் பற்றிய சிறு உரை இது. ஒரு பயணியாக எகிப்துக்குச் சென்று, ஏற்கனவே நூல்கள் மற்றும் பயணக்குறிப்புகளுடன் இணைத்துக்கொண்டு அங்குள்ள வாழ்க்கையைப் பற்றிய அவதானிப்புகளை அடைவதுதான் இது. இந்த அவதானிப்புகள் பலசமயம் மிகக்கச்சிதமானவையாக, எதிர்காலத்தைக்கூட ஊகிக்கக்கூடியதாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் நாம் ஒரு வருகையாளராக ‘பற்றற்ற’ நிலையில் அந்நிலத்தையும் வாழ்க்கையையும் பார்க்கிறோம். எகிப்து பலவகையிலும் நமக்கு அணுக்கமானது. அங்கே நான் கண்டவை எல்லாமே இந்தியாவுக்கான பாடங்களும்கூடத்தான்
சென்னையில் இளம்பெண்களுக்கான நாவல் பயிற்சி முகாம்
சைதன்யாவும் அவள் தோழி கிருபா கிருஷ்ணனும் தொடங்கியிருக்கும் பெண்ணெழுத்துக்கான ஆங்கிலப் பதிப்பகமான Manasa Publications P Ltd சார்பாக ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளனர். 25 வயதுக்குக் குறைவான பெண்கள், மாணவிகளுக்காக ஒரு போட்டி. பிற பெண்களுக்கான இன்னொரு போட்டி. விருது ரூ 1 லட்சம். நூல்களை மானசா பதிப்பகம் வெளியிடும்.
அதன்பொருட்டு ஒரு நாவல் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் சென்னை அடையாறில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் நிகழ்கிறது. நான் பயிற்சியை அளிக்கிறேன்.
இது எழுத எண்ணுபவர்கள் எழுதும் முறை, கருவை விரித்தெடுக்கும் முறை, நாவலை இறுதியாகத் தொகுத்துக்கொள்ளும் முறை ஆகியவற்றை எப்படி செய்வது என்பதற்கான பயிற்சி. காலை முதல் மாலை வரை ஒருநாள் பயிற்சி.
25 வயதுக்குக் குறைவான Young Adult களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 30. பிறருக்கான வகுப்பு ஆகஸ்ட் 31. முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். நபர் ஒருவருக்கு உணவுக்கான செலவு ரூ 300 கட்டவேண்டியிருக்கும்.
எழுத ஆர்வமுள்ள மாணவிகளை குறிப்பாக வரவேற்கிறோம்.
மேலதிகத் தகவல்களுக்கு connect@manasapublications.com. 7904952722
புக் பிரம்மா இலக்கிய விழா
நேருக்குநேர்இந்த ஆண்டு புக்பிரம்மா விழாவுக்கு என் குடும்பத்தில் இருந்து மூன்றுபேர் வந்திருந்தோம். மானசா பதிப்பகத்துக்காகச் சைதன்யா. அஜிதனுக்கு ஓர் அரங்கு இருந்தது. நான் மூன்று அரங்குகளில் பேசினேன். அஜிதன், அவன் மனைவி தன்யா, சைதன்யா ஆகியோர் சென்னையில் இருந்து ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி ஆகியோருடன் பெங்களூர் வந்தனர். கிருபாலட்சுமி பதிப்பாளர்களுக்கான ஓர் அரங்கின் தொகுப்பாளர்.
நான் நாகர்கோயிலில் இருந்து ஆகஸ்ட் ஏழாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்றேன். என் ரயில் ஒன்பதரை மணிக்குத்தான் பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா நிலையத்திற்குச் செல்லும். என் முதல் அரங்கு முதல்நாள் முதல் அரங்கு, மைய அரங்கும்கூட. பதினொரு மணிக்குச் சென்று சேர்வது கடினம். ஆகவே ஆர்.எம்.சதீஷ்குமார் (பெங்களூர் விஷ்ணுபுரம் வட்டம்) ஓசூருக்கு வந்தார். நான் காலை ஏழு மணிக்கே ஓசூரில் இறங்கி அவருடன் இணைந்துகொண்டேன். காரில் ஒன்பது மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடந்த புனித யோவான் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அவர்களின் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில்தான் அனைவருக்கும் தங்குமிடம்.
தொடக்க அரங்கு புக்கர் விருது பெற்ற பானு முஷ்டக்கை கௌரவிக்கும் நோக்கம் கொண்டது. பானு முஷ்டக் புக்கர் பெறுவதற்குக் காரணம் ஜூரிகளில் ஒருவராக இருந்த கொரிய எழுத்தாளர் இலக்கியம் என்பது ஒரு களச்செயல்பாடாக மட்டுமே இருக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராக இருந்ததும், பானு முஷ்டக்கை ஒரு நேரடிக் களச்செயல்பாட்டாளராக தொடர்ச்சியாக முன்வைத்ததும்தான் . இஸ்லாமியப் பெண் + களச்செயல்பாட்டாளர் என்பது இன்று ஓர் உலகளாவிய ‘ஃபார்முலா’.
பானு முஷ்டக் ஒரு வழக்கறிஞர்தான். கேட்ட அனுபவங்களை நேரடியாகக் கதையாக்கியவர். அக்கதைகள் கன்னடத்தில் தட்டையான மொழி கொண்ட அனுபவப்பதிவுகளாகவே பார்க்கப்பட்டன என்றனர். அவற்றை தீபா பஸ்தி நவீன ஆங்கிலப் புனைவுமொழியில் மொழியாக்கம் செய்து முன்வைத்தார். புக்கர் வரை சென்றமைக்கு அந்த மொழியாக்கமே முதன்மைக் காரணம் என்னும் பேச்சு கன்னடச்சூழலில் எழுந்தது. மொழிபெயர்ப்பாளர் தொடர்ச்சியாக வேறு அரங்குகளில் புகழப்பட்டார்.
பானு முஷ்டக் அதனால் கடுமையாகச் சீண்டப்பட்டிருக்கிறார் என தெரிந்தது. மேடையில் மொழிபெயர்ப்பாளருக்கு எதிராக வெடித்தார். மொழிபெயர்ப்பாளர் தன்னை ஓர் ‘இணை எழுத்தாளர்’ என கருதக்கூடாது, அவரோ மற்றவர்களோ அப்படிச் சொல்வது காப்புரிமைச் சட்டப்படி குற்றம், வழக்கு தொடுப்பேன் என்றெல்லாம் குமுறினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதறிவிட்டார். நல்லவேளையாக தீபா பஸதி மேடையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த அரங்கில் முழுமையாகவே அமைதியாக இருந்தார். ஆகவே முதல்மேடையில் ரசாபாசமான விவாதம் நிகழவில்லை. தீபாவின் அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது.
என் அரங்கில் தமிழின் சார்பில் நானும் தமிழவனும் கலந்துகொண்டோம். சுசித்ரா ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார். கன்னடத்தில் இருந்து ஜெயந்த் காய்கினி, தெலுங்கில் இருந்து மிருணாளினி, மலையாளத்தில் இருந்து கே.ஆர்.மீரா. இந்திய இலக்கியத்தின் பன்மொழிச்சூழல் குறித்த விவாதம். புக்பிரம்மா அமைப்பின் மைய நோக்கம் மொழிகளுக்கிடையேயான உரையாடல்தான்.
கிரீஷ் காசரவள்ளிகூடுதலாக நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். ஒன்று, பன்மொழிச்சூழல் எழுத்தாளர் தன் மொழியை இன்னொரு மொழியினூடாகப் பார்க்க வழிசெய்கிறது. ஆகவே தேய்வழக்குகளை தவிர்க்கமுடிகிறது. மொழிக்கலவை அழகியல்ரீதியாக ஒரு புதிய மொழிப்பிராந்தியத்தை, அதன் வேடிக்கையை உருவாக்க உதவுகிறது.
பொதுவாக இந்த வகை மேடைகள் எழுத்தாளர்களை ‘ஷோகேஸ்’ செய்வதுதானே ஒழிய தீவிர விவாதங்கள் நிகழமுடியாது. ஆகவே உறுதியாகச் சில விஷயங்களை மேலதிகச் சிந்தனைக்காக சொல்லிவைப்பதே சிறப்பானது. நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். தூய்மை, தெளிவு என்னும் இரண்டு விஷயங்களும் இலக்கியத்துக்கு எதிரானவை. கலப்பு, மயக்கம் என்னும் இரண்டு விஷயங்களே மேலான இலக்கியத்தை உருவாக்குகின்றன. நான் தொடர்ந்து பேசிவரும் கருத்துக்கள்தான் அவை.
ஜெயந்த் காய்கினி உணர்ச்சிகரமாக தன் பன்மொழித்தன்மையைப் பேசினார். (அவர் கொங்கிணியை தாய்மொழியாகக் கொண்டவர், கன்னடத்தில் எழுதுபவர். பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு கன்னடப் பாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார். அவரை கன்னட அசோகமித்திரன் என்று சொல்லமுடியும். மென்மையான கேலி கொண்ட அடக்கமான கதைகளை எழுதியவர்)
தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்கள் தியடோர் பாஸ்கரன், சுகுமாரன், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், மருதன், சுனில் கிருஷ்ணன், க.மோகனரங்கன், எதிர்வு சிவக்குமார், கமலாலயன், குணா கந்தசாமி, அ.ராமசாமி,சல்மா, ரம்யா (நீலி இணைய இதழ்), எல்.சுபத்ரா, லாவண்யா சுந்தரராஜன், அகரமுதல்வன், லட்சுமி சரவணக்குமார், மயிலன் சின்னப்பன், இமையம், அரிசங்கர்,எம்.கோபாலகிருஷ்ணன், செந்தில் ஜெகந்நாதன், லட்சுமிஹர், நித்யா எஸ், சித்ரா பாலசுப்ரமணியம், பச்சையப்பன், என்.சொக்கன், சுப்ரமணி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெள்ளே யெனுகு வெளியீடுஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலுச்சாமி (பாரதிபுத்திரன்), திருமூலர் முருகன், எம்.ஏழுமலை, கே.பி.அம்பிகாபதி, ஆர்.காமராசு, கிருங்கை சேதுபதி, பெரியசாமி ராஜா, என்.ரத்னகுமார், பக்தவத்ஸலபாரதி ஆகியோரும் வெவ்வேறு பண்பாட்டு ஆய்வு அமர்வுகளில் கலந்துகொண்டார்கள். நான் பாலுச்சாமியை இதுவரை நேரில் சந்தித்ததில்லை, இப்போதுதான் பார்த்தேன்.
அஜிதனுக்கு இது முதல் இலக்கிய விழாவின் அரங்கு. முதன்மையான பேரரங்கில் பால் சகரியா(மலையாளம்), எச்.எஸ்.சிவப்பிரகாஷ் (கன்னடம்), வோல்கா (தெலுங்கு) மூத்த எழுத்தாளர்களுடன் கலந்துகொண்டான். குரலில் பணிவும் கொஞ்சம் நடுக்கமும் இருந்தாலும் விரிவான பார்வையுடன், சுருக்கமான சொற்களில் தன் கருத்தை முன்வைத்தான். அரங்கில் தன்னியல்பான கைத்தட்டல் எழுந்தது. இந்திய அரங்கில் அத்தகைய இளம் குரல்கள் அரிதாகவே எழுகின்றன. அதிலும் இலக்கியவாதியாக எழும் குரல்கள் மேலும் குறைவு.
பன்றிவேட்டை வெளியீடுஇந்த விழாவில் நான் கண்ட ஒன்று, தமிழ்விக்கியின் பங்கு. இன்று கூகிள் தமிழ்விக்கி பதிவுகளை 90 சதவீதம் சரியாக மொழியாக்கம் செய்து காட்டிவிடுகிறது. வேற்று மொழி எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்களை விரிவாக தமிழ்விக்கி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டார்கள். அத்தகைய விரிவான பதிவு பலமொழிகளில் நவீன எழுத்தாளர்களுக்கு இல்லை. தமிழ்விக்கி நாங்கள் நடத்தும் கலைக்களஞ்சியம் என்றே தெரியாமல் என்னிடம் பலர் அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர். பங்ளாபீடியா போல அது தமிழக அரசு நடத்துவது என்று இரண்டுபேர் சொன்னார்கள்.
சரி, ஒருவர் தனக்கான ஒரு இணையப்பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாமே? அல்லது விக்கிபீடியா பக்கம் இருக்கலாமே? என்ன பிரச்சினை என்றால் அவை எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். வெறும் தகவல்களுடன். பல சமயம் கல்வியாளர்கள் மிகப்பெரிய தன்வரலாற்றுக் குறிப்பை வைத்திருப்பார்கள். எல்லாமே ஒரே போல புகழ்மொழிகளுடன், வெவ்வேறு பட்டங்கள் மற்றும் சிறப்புகளுடன் இருக்கும். செயற்கைநுண்ணறிவை கேட்டால் அனைவரைப்பற்றியும் ஒரே போன்ற புகழ்மொழியைத்தான் சொல்லும், காரணம் இந்த பதிவுகள்.
ஓர் இலக்கிய விழாவின் அமைப்பாளருக்குத் தேவை ஒருவரின் உண்மையான இடம் என்ன, அவருடைய சரியான பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிய மதிப்பீடு. பலசமயம் அதை தனிப்பட்ட முறையில் விசாரித்தே அறிகிறார்கள். இந்தியச் சூழலில் அதுவும் கடினமானது. அமைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவரிடம் புதியவர்களை பரிந்துரைக்கக் கேட்பார்கள். அந்த பரிந்துரைப்பவர் ஒரு சிறுவட்டத்திற்குள் இருந்து பரிந்துரைக்கத் தொடங்குவார். அவர் ஓர் அதிகாரமாக ஆவார். அவரை நம்பி அழைக்கவேண்டியதுதான்.
தமிழ்விக்கி எந்த கருத்தியல் பாரபட்சமும் இல்லாமல் ஒருவர் செயல்படும் களத்தில் அவருடைய பங்களிப்பு என்ன, அவர் இடம் அவருடைய தரப்பில் என்ன என்று சொல்லி தரவுகளை அளிக்கிறது. ஓர் ஆசிரியர்குழுவால் சேகரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட தரவுகளும் ,பரிந்துரைகளும்தான் அவை. தமிழ்விக்கி மேல் தமிழில் பலருக்கு உள்ள சீற்றமும் அது அந்த மதிப்பீட்டையும் அளிக்கிறது என்பதே.
இந்த விழாவை ஒட்டியும் சிறு விவாதம், மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக விழாவுக்கு அழைக்கப்பட்டதை அவமதிப்பாக எண்ணி அவர் எழுதியிருந்ததை நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விழாவின் விருந்தினர் பட்டியல் எத்தனை விரிவானது என்று எவரும் பார்க்கமுடியும், அதில் அரசியலோ முன்முடிவுகளோ இருக்க வாய்ப்பில்லை என உணரவும் முடியும். ஆனால் இத்தனை பெரிய ஒரு பட்டியலில் கொஞ்சம் இயந்திரத்தன்மையும் வந்துவிடும்.
மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக மட்டும் அழைக்கப்பட்டது பிழைதான். ஆனால் இத்தகைய பிழைகள் இன்றி எந்த விழாவையும் நடத்தமுடியாது. விஷ்ணுபுரம் விழாக்கள் சிறியவை, ஆகவே கூடுமானவரை பிழைகள் இல்லை. பெரிய விழாக்களில் பல அடுக்குகளாக பலர் பணியாற்றுவார்கள். அனைவரும் தகுதியானவர்கள் என சொல்லமுடியாது. அனைவரையும் முழுமையாக ஒருங்கிணைப்பதும் இயல்வதில்லை. இதையே தமிழக அரசின் விழாக்கள் பற்றியும் சொல்வேன்.
நாங்கள் விழாக்களை நடத்துபவர்கள், ஆகவே எந்தெந்த விததில் எல்லாம் பிழை நிகழும் என எண்ணி எண்ணி திருத்திக்கொண்டே இருப்போம். விஷ்ணுபுரம் விழாக்கள் மிகக்கச்சிதமானவை, ஆனால் எல்லா ஆண்டும் ஏதேனும் பிழையும் நிகழ்ந்திருக்கும். எத்தனை கவனமாக இருந்தாலும் ஏதோ ஒன்று நிகழும். இத்தகைய விழாக்கள் எவையாயினும் அவற்றுக்குப் பின்னாலுள்ள நல்லெண்ணம், அவற்றின் விளைவாக நிகழும் இலக்கிய மாற்றம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு அணுகுவதே முறையானது.
இப்பிழை எப்படி நிகழ்கிறது? எவரை அழைக்கலாம் என்னும் கேள்வியை அமைப்பாளர்கள் பலரிடம் கேட்பதுண்டு. பெயர்கள் மட்டுமே அளிக்கப்படும். புக்பிரம்மா விழாவில் நாலைந்துபே பெயர்களை பரிந்துரை செய்தனர் என அறிந்தேன். மனுஷ்யபுத்திரன் கவிஞர், பதிப்பாளர் என அதில் இருந்திருக்கும். நிகழ்வுப்பட்டியல் தயாரிப்பவர் பதிப்பாளர் அரங்குக்கு ஆள்தேவை என்றால் சட்டென்று மனுஷ்யபுத்திரன் பெயரை சேர்த்துவிடுவார். இது இயந்திரத்தனமாக நிகழ்வது.
மனுஷ்யபுத்திரன் எத்தகைய பெருங்கவிஞர் என அந்த அயல்மொழியினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் விரிவாகத் தேடினாலோ, எவரிடமாவது கேட்டிருந்தாலோ தெரிந்திருக்கும். நான் எந்த அரங்கிலும் தமிழின் பெருங்கவிஞர் என அவரைச் சொல்வதுண்டு. ஆனால் விழா அமைப்பாளர்கள் கிட்டத்தட்ட நாநூறு விருந்தினரையும் அப்படி விரிவாகத் தேட வாய்ப்பில்லை.அதனால் நிகழும் பிழை இது.
தமிழ்விக்கியின் இடம் அங்கேதான். இந்த பட்டியல் தயாரிக்கப்படும்போது மனுஷ்யபுத்திரனுக்கு தமிழ்விக்கி பதிவு இல்லை. அவர் தமிழ்விக்கி பற்றி கடுமையான எதிர்மனநிலையில் இருந்தார். ஆகவே அவர் பற்றிய தரவுகள் கிடைக்கவில்லை. பின்னர் வெவ்வேறு இடங்களில் சேகரித்தே அவர் பற்றிய பதிவு போடப்பட்டது. இன்று அவர் எவர் என எவருக்கும் அப்பதிவு காட்டிவிடும் (See மனுஷ்ய புத்திரன்)
இந்த அரங்குகளில் தீவிர விவாதம் நிகழமுடியாது என்பதை பங்கேற்பவர் அறியலாம். இவை இலக்கியவிழாக்கள்தான். தமிழ் எழுத்தாளர்கள் பிறமொழி எழுத்தாளர்களுடன் அறிமுகம் கொள்ள, உரையாட இது ஒரு வாய்ப்பு. தமிழ் எழுத்தாளர்களை இந்திய மொழிச்சூழலில் முன்வைப்பதற்கான வாய்ப்பு. அடிப்படையான சில கருத்துக்களை முன்வைக்கலாம். கூடுமானவரை சுருக்கமாக அவற்றை முன்வைக்கவேண்டும். ஒருவருக்கு கூட்டு அரங்கில் கிடைப்பது அதிகபட்சம் பத்து நிமிடங்களே.
இத்தகைய அரங்குகளில் பொதுவாக கடுமையான எதிர்விமர்சனங்களுக்கு இடமில்லை. ஏனென்றால் அவற்றை விவாதித்து நிறுவ வாய்ப்பில்லை. கூடுமானவரை தமிழில் என்ன நிகழ்கிறது என சொல்லவேண்டும். எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லவேண்டும். திரும்பத் திரும்ப அப்படி உச்சரிக்கப்படும் பெயர்களே நிலைகொள்கின்றன. “Presenting the trend and names’ என்பதே இங்கே நாம் செய்யவேண்டியது. சென்ற ஆண்டு தொடக்கநிகழ்வில் நான் ஏழுநிமிடங்களில் முழுமையாகவே அதை அளித்தேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு பொதுவாக இத்தகைய விழா அரங்குகள் பழக்கமில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
லட்சுமி சரவணக்குமாரின் பன்றிவேட்டை நாவலின் வெளியீட்டுவிழா அங்கே அரங்கில் (மீண்டும்) நிகழ்ந்தது. நூலை நான் வெளியிட்டு ஒரு சில சொற்களில் அவரை அறிமுகம் செய்தேன். அகரமுதல்வனும் , லட்சுமி சரவணக்குமாரும் பேசினார்கள். வெவ்வேறு அரங்குகளில் தமிழிலக்கியம் குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தன. அதையொட்டிய வெளிவிவாதங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. நண்பர்களை ஆங்காங்கே சந்தித்துக்கொண்டே இருந்தோம்.
நான் ஓரிரு மலையாளம், தெலுங்கு அரங்குகளில் அமர்ந்திருந்தேன். பதஞ்சலி சாஸ்திரி எழுதிய ஒரு சிறுகதையின் நாடகவடிவத்தைப் பார்த்தேன்.மூன்று இசைநிகழ்வுகள், ஒரு கதகளி நிகழ்வை பார்த்தேன். கூடுமானவரை தெலுங்கு, கன்னட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் பேசவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அண்மையில் என் படைப்புகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதனால் அறிமுகமும் உரையாடலும் எளிதாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட தென்னிந்தியாவெங்கும் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்படுகிறேன் என நினைக்கிறேன்.
இந்த அறிமுகங்கள் இருமுகம் கொண்டவை. நானும் அவர்களை அறிமுகம் செய்துகொள்கிறேன். என்னுடைய பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தெலுங்கு இலக்கியச் சூழலைப் பற்றிய என் எண்ணம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் இலக்கியம் என்பது தீவிரமானதாக இல்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் இன்று தென்னிந்தியாவிலேயே தெலுங்கு மொழியில்தான் இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.
என் வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (எஸ்.குமார்) தெள்ள ஏனிகு அரங்கில் வெளியிடப்பட்டது. நான், அவினேனி பாஸ்கர், எஸ்.குமார் ஆகியோர் பேசினோம். நான் சாயா புக்ஸில் அமர்ந்து தெலுங்கு வாசகர்களைச் சந்தித்து, நூல்களில் கையெழுத்திட்டு கொடுத்தேன். ‘நீங்கள் இன்று கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு எழுத்தாளர்’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இந்த ஆண்டுக்கான புக்பிரம்மா விருது மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவுக்கு வழங்கப்பட்டது. முதல்நாள் எங்களுடன் அமர்வில் இருக்கையிலேயே அதைச் சொல்லிவிட்டனர். கே.ஆர்.மீரா தமிழில் அவருடைய நாவல்கள் வழியாக பரவலாக அறியப்பட்டவர்.
தேவதேவன் பார்வையாளராக வந்திருந்தார். என் அறையில் என்னுடன் மூன்றுநாட்கள் தங்கினார். இந்த விழாவில் பெரும்பகுதி உரையாடல் தெலுங்கு எழுத்தாளர்கள், வாசகர்களுடன் நிகழ்ந்தது.(நான் செல்போன் பார்த்துக்கொண்டு செல்கையில் அஜிதன் முன்னால் வந்து ‘நமஸ்காரண்டி’ என்றான். நான் நமஸ்காரம் என பேச ஆரம்பித்து, திடுக்கிட்டு, பின் சிரித்துவிட்டேன்.) ஒன்பதாம்தேதி இரவு மழை ஓய்ந்தபின் ஓர் காலியான அரங்கில் ஒரு நீண்ட உரையாடல். பத்தாம் தேதி இரவில் பிரசாத் சூரி உள்ளிட்ட நான்கு இளம் தெலுங்கு எழுத்தாளர்கள் அறைக்கு வந்தனர். இரவு ஒரு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.
எந்த விழாவையும்போல அரட்டைகள், டீக்கடைப்பேச்சுக்கள், திரும்பத் திரும்ப தெரிந்தவர்களைச் சந்திக்கும் சிரிப்புகள் என மூன்றுநாட்கள் கொண்டாட்டமான மனநிலை. மூன்றாம் நாள் பிரிதலில் சோர்வு. ஆனால் உடனே உற்சாகம், இன்னும் நான்கு நாட்களில் ஈரோட்டில் தூரன் விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கவிருக்கிறேன்.
தமிழ்விக்கி- தூரன் விழா சென்ற ஆண்டு
தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு தமிழுடன் இசை!
தமிழ் விக்கி தூரன் விழா சென்ற ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ந்தது. சுவடியியல் ஆய்வாளர் கோவை மணி அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விழா நினைவுகளில் நிறைவும் பெருமிதமும் உருவாகும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் இரு மடங்கு வளர்ச்சி என்பது பெரும் பொறுப்பும் கூட. பணம், அமைப்பு வல்லமை எல்லாமே தேவையாகிறது. ஈரோடு நண்பர்கள் ஒரு மாதம் முழுக்க பணியாற்றவேண்டியிருக்கிறது.
2024ல் விருந்தினராக வந்தவர் வேதாசலம் அவர்கள். அவருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு அவர் நடத்திய வாசகர் சந்திப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. சுவடிஎழுத்துக்களை வாசிப்பதைப் பற்றி கோவை மணி அவர்கள் நடத்திய வகுப்பு அரங்கு நிறைந்து ‘மறுஎல்லை தெரியாதபடி’ அமைந்திருந்தது. சட்டென்று நாம் அறியாத புதிய ஓர் உலகுக்கு நம்மைக் கொண்டுசென்ற நிகழ்வு அது.
மூன்றாண்டுகள் ஈரோட்டில் இந்த விழா நிகழ்ந்துவிட்டது. அரங்கு நிறைந்து, தமிழகத்தின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாக நிகழ்கிறது. ஆனால் தூரன் பிறந்து வாழ்ந்த ஊரான ஈரோட்டில் இருந்து வந்து கலந்து கொள்பவர்கள் மிகச்சிலர். பங்கேற்கும் இருநூற்றைம்பதுபேரில் ஈரோட்டினர் அதிகபட்சம் இருபதுபேர். பல காரணங்களைச் சொல்வார்கள், நிகழ்விடம் தூரம் என்பது அதில் ஒரு காரணம். ஈரோட்டில் இருப்பவர்கள் அதைச் சொல்கிறார்கள். ஆனால் விழாவுக்கு பெங்களூர், சென்னையில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள்.
ஈரோட்டில் நிகழும் வெட்டியான பட்டிமன்றங்களுக்குப் பெருந்திரளாக மக்கள் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓர் அறிவார்ந்த அவைக்கு ஏன் கூட்டம் வருவதில்லை என்பதற்கான காரணம் அதுவே. அந்தவகையான அறிவுதேவையற்ற கேளிக்கைகளுக்குப் பழகியவர்களால் ஓர் அறிவார்ந்த அவையில் அமர்ந்திருக்கும் பொறுமையை அடையமுடியாது.
சென்றமுறை பல புதிய தங்குமிடங்களை முன்னரே ஏற்பாடு செய்திருந்தோம். ஆயினும் கூட்டம் கூடுதலாக ஆகிவிட்டமையால் கடைசிநேரத்தில் தங்குமிடம் தேடி அலையவேண்டியிருந்தது. நெருக்கடிதான். ஆனால் அத்தனை இளைய முகங்களை, அறிவுத்தேடல் கொண்டவர்களை மட்டும், அவையில் பார்ப்பதென்பது மிக அரிய அனுபவம். நிறைவூட்டும் ஒரு கண்டடைதல்.
நிகழ்த்திக்காட்டுதலின் நிமிர்வு -யோகேஸ்வரன் ராமநாதன் தமிழ்விக்கி தூரன் விழா, கடிதம் அழைக்கப்பட்டவர்கள்,தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்- டெய்ஸி தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு
சிட்டி
சிட்டியின் இலக்கிய இடம் மூன்று வகைகளில் வரையறைசெய்யப்படலாம்.தமிழின் நவீன இலக்கியப்பரப்பில் தொடக்ககால நையாண்டி எழுத்துக்களை உருவாக்கியவர்.தமிழ் பயண இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றின் இணையாசிரியர்.தமிழின் முதன்மையான இலக்கிய வரலாற்றுநூல்களின் இணையாசிரியர்.
சிட்டி – தமிழ் விக்கி
ஓஷோ: மரபும் மீறலும்-16
ஓஷோ மீதான எனது விமர்சனம்
நண்பர்களே , ஓஷோ பற்றிய என் உரையை அவரை அவருடைய காலச்சூழலில் வைத்து வரலாற்றுபூர்வமாக புரிந்துகொள்ளுதல், அவருடைய பரிணாமத்தை வகுத்துக்கொள்ளுதல், அவருக்கு இந்திய சிந்தனை மரபிலுள்ள தொடர்ச்சியையும் முரண்பாட்டையும் விளங்கிக்கொள்ளுதல், அவர் கூறிய அடிப்படைச் சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளுதல் ஆகிய தளங்களில் நிகழ்த்தினேன். அதன் இறுதியாக ஓஷோ மீதான என் எதிர்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
ஓஷோ மீதான இந்த விமர்சனத்தை நான் எந்த தகுதியில் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். முதலிலேயே அதுபற்றி சொல்லியிருந்தேன். ஓர் எழுத்தாளனாக, ஒரு தத்துவ ஞானியின் மாணவனாக, ஓர் ஆன்மீகப் பயிற்சியாளனாக இந்த விமர்சனங்களை நான் என்னுடைய அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். இதை நீங்கள் பரிசீலிக்கலாம். மறுக்கவும் செய்யலாம். இதை உங்களுக்கு உபதேசம் செய்யவில்லை. நான் உபதேசங்கள் செய்வதில்லை. இவை ஒரு விவாதத்தின் ஒரு தரப்பு மட்டுமே.
ஓஷோவின் மரபு மறுப்புவாதத்தின் சிக்கல்
ஓஷோவிடம் நாம் பார்க்கும் முக்கியமான அம்சம் அவருடைய மரபு மறுப்பு / கடந்தகால மறுப்பு. இந்த விஷயத்தை இளைஞர்களாகிய நீங்கள் எளிதாகக் கையில் எடுக்கும்போது மிகப்பெரிய அபாயத்தை சந்திக்கிறீர்கள். ஆசாரவாதத்தையும் மரபையும் ஒன்றென நினைத்துக்கொள்ளக்கூடிய மனமயக்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆசாரவாதம் வேறு, மரபு வேறு. எல்லாமே மரபில் உள்ளது, அதை அப்படியே கண்மூடித்தனமாக, எந்திரத்தனமாக செய்யவேண்டியது மட்டும்தான் நமது ஒரே வேலை என்று சொல்வது ஆசாரவாதம். ஆசாரவாதிகள் எல்லா மதத்திலும் என்றும் இருப்பார்கள். சொல்லப்போனால் ஆசாரமே என்றும் மதமாக பொதுச்சூழலில் அறியப்படுகிறது. மத அமைப்புகள் எல்லாமே ஆசாரங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்.
ஆனால் மரபு என்பது ஆசாரம் மட்டுமல்ல. மரபு என்பது நெடுங்காலமாக தொகுக்கப்பட்ட உள்ளுணர்வுகளின் மிகப்பெரிய கட்டமைப்பு. அந்த உள்ளுணர்வுகள் இங்கே பலவகையான குறியீடுகளாக (உருவங்களாக / வடிவங்களாக), நடைமுறைகளாக (சடங்குகளாக), வரையறைகளாக (நூல்களாக) தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஓஷோவின் பேச்சைக்கேட்டு ஒருவன் மரபை முற்றாக துறப்பான் என்றால் அவன் பேரிழப்பையே சந்திக்கிறான். ஐம்பது வயதில் அந்த இழப்பை உணர்ந்தபின்பு திரும்பிச்செல்வது மிகமிக கடினம். உதாரணமாக நமது ஆலயங்கள், அதன் சிற்பங்கள், அதன் நடைமுறைகள் யாவும் ஓஷோவால் மறுக்கப்படக்கூடிய அளவுக்கு சிறியவை அல்ல. நம் பக்திமரபு ஓஷோ சொல்வதைப்போல அத்தனை எளியதோ தட்டையானதோ அல்ல.
அவற்றை எல்லாம் மறுக்கலாமா என்று கேட்டால், மறுக்கலாம். ஆனால் நீங்கள், உங்கள் சிறிய அறிவைக்கொண்டு மறுக்கக்கூடாது. வெறும் இளமைத்துடுக்கால் மறுக்கக்கூடாது. அதே அளவு உள்ளுணர்வின் ஆழத்திற்கு சென்று ஒருவித காலமின்மையை தன்னுள் உணர்ந்த ஒரு ஞானியால் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள் என்றால் அவரை நம்பி நீங்கள் மரபை மறுக்கலாம். அந்த படகை நம்பி நீங்கள் கடலில் இறங்கலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய போலியான அறிவுஜீவித்தனத்தை, எளிய தர்க்கபுத்தியை வைத்துக்கொண்டு மரபை மறுப்பீர்கள் என்றால் நீங்கள் இன்னொரு திராவிடர் கழகக்காரனாகத்தான் மாறுவீர்கள். அது இறுதியில் கீழ்மையான எதிர்மறைத் தன்மைகளிடம்தான் சென்று முடியும். அவ்வாறு பலரையும் நான் பார்த்திருக்கிறேன். பரிதாபத்திற்குரிய எளிய மனிதர்கள் அவர்கள்.
நீங்கள் இணையத்தில் ஓஷோ என்று தேடினால் ஓஷோவை படித்தவர்களிலேயே அத்தகைய முட்டாள்களின் வரிசை வந்துகொண்டே இருக்கும். நான் ‘முட்டாள்களின் மடாதிபதி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ‘ஓஷோவை எவனொருவன் மடாதிபதி ஆக்குகிறானோ அவன் முட்டாளாகத்தான் இருப்பான். தன்னைத்தானே உடைத்துக் கொள்வதற்கான சுத்தியலாக அவரை பயன்படுத்துபவன் அவரை கடந்து செல்கிறான்’ என்பது அக்கட்டுரையின் சாரம். ஆனால் இங்கே ஓஷோ பற்றிப் பேசியவர்கள் பலர் புண்பட்டனர். தங்களை முட்டாள் என்று சொல்லிவிட்டார் ஜெயமோகன் என கொதித்து என்னை வசைபாடினர். ஓஷோ இதைப்போன்ற எத்தனையோ எதிர்ப்பொருள் சொற்றொடர்களைக் கையாண்டிருக்கிறார். அப்படியென்றால் ஓஷோவில் இவர்கள் எதைத்தான் படித்தனர்?
ஓர் ஓஷோயிஸ்ட் தன்னை இன்னொருவர் முட்டாள் என்று சொன்னால்கூட புண்படுவாரா என்ன? ஓஷோவே தன்னை அப்படிச் சொல்லிக்கொண்டவர். ஓஷோவை அப்படிச் சொல்லியிருந்தால் சிரித்துக்கொண்டிருப்பார் இல்லையா? தன் தரப்பை, தன் குருநாதரை, தன் நம்பிக்கையை ஒருவர் விமர்சித்தால் சீற்றம் கொள்பவர் யார்? அவர் வெறும் மதவாதி அல்லவா?. ஓஷோவை ஒரு மதநிறுவனத் தலைவராக காண்பவர்தான் ஓஷோ விமர்சிக்கப்பட்டால் கொதிப்பவர். விமர்சிப்பவரை வசைபாடுபவர் உண்மையில் ஓஷோவை அவமதிக்கிறார். ஓஷோ என்ன சொன்னாலும் பயனில்லை, மதவெறியே மக்களின் இயல்பு என்பதையே அவர் காட்டுகிறார்.பரிதாபம்தான்.
நான் பல ஓஷோயிஸ்டுகளை பார்த்திருக்கிறேன். பழைய மலையாளப் படத்தில் அடூர் பாசி ஒரு வசனம் பேசுவார். ‘யாரை பார்த்து அடக்கமில்லாதவன்னு சொன்னே, நான் யார் தெரியுமா ? ஊர்ல யார்ட்ட வேணாலும் கேட்டுப்பாரு. எண்ணப்பத்தி அடக்கமான ஆள்னுதான் சொல்வாங்க. இன்னைக்கு வரைக்கும் ஒருத்தனும் என் முன்னால் நின்று அடக்கமில்லாதவன்னு சொன்னதில்லை. அப்படி சொன்ன எவனையும் நான் விட்டதில்ல’. இந்த அளவுக்கு அடக்கத்துடனும், தன்னிலை அழிந்தவர்களாகவும் தான் ஓஷோயிஸ்டுகள் இருக்கிறார்கள். ஓஷோவின் ‘நிபந்தனையற்ற அன்பு’தான் பிரபஞ்ச உண்மை, அதை மறுத்தால் உன் தாயை வசைபாடுவேன் என்னும் நிலைபாடு கொண்டிருக்கிறார்கள் நம் ஓஷோயிஸ்டுகள் பலர்.
மரபு எனக்கு அளித்த உறைந்தநிலையை உடைப்பதற்கான மாபெரும் சுத்தியல் ஓஷோ. ஆனால் என்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் உடைத்துவிட்டு நான் மட்டும் எஞ்சி இருந்தேனென்றால் அதைப்போல முட்டாள்தனம் எதுவும் கிடையாது. நிராகரிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு வலுவான ஆசிரியர் இருக்கவேண்டும். இல்லையெனில் உங்களுக்குள் உங்களை அறியாமலேயே நம் மரபால் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரிய செல்வத்தை நீங்கள் இழக்கிறீர்கள். நம் முன்னோர் ஈட்டியது அது, அது காலத்தின் துருவும் களிம்பும் தூசியும் கலந்துதான் கிடைக்கிறது. அதை அப்படியே தூக்கி வீசிவிடமுடியாது.
முத்துச்சிப்பியை பற்றி ஒரு அழகான வரி உண்டு. ‘கோடி சிப்பிகளில் ஒன்றில்தான் முத்து இருக்கும். ஆனால் அத்தனை சிப்பிகளுக்கும் முத்தை உருவாக்கும் சாத்தியக்கூறு இருக்கும்’. ஒரு மனிதன் இந்தியாவில் பிறந்து தமிழ் மொழியை கற்று வளரும்போதே அடிப்படையான உருவகங்கள் அவனிடம் வந்துவிடுகின்றன. ஒரு சிற்பத்தை பார்க்கும்போது, அறிவார்ந்து அது என்னவென்று தெரியாதபோதும் கூட உணர்வுரீதியாக அவனால் அதை அடையமுடியும். அதுபோல சில சொற்கள் அவனுக்குள் அகத்திறப்புகளை அளிக்கமுடியும். அவன் எப்போது வேண்டுமென்றாலும் மெய்ஞானத்தின் பயணத்தை தன்னையறியாமலேயே தொடங்கிவிடக்கூடும். அப்படி சுய அனுபவத்தின் ஒரு துளியால் தீண்டப்பட்டு, ஒரு சொல்லால் திறக்கப்பட்டு பெரும் மாற்றங்களை அடைந்து தங்கள் அகப்பயணங்களை தொடங்கியவர்கள் பலரை எனக்கே தெரியும்.
ஜெயகாந்தன் ஓர் உரையில், தமிழ்மொழி இயல்பாகவே வேதாந்தம் நோக்கிச்செல்லும்தன்மை கொண்டது என்றார். ‘மனிதன் தோன்றினான், மறைந்தான்’ என்ற வரியை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால் அற்புதமான ஒரு வேதாந்த கருத்து அதில் உள்ளது. மனிதன் கண்முன்னால் தோன்றுகிறான், கண்முன்னால் மறைகிறான், அவ்வளவுதான். அவன் உருவாவதில்லை, அழிவதில்லை .இப்படி நூற்றுக்கணக்கான சொற்கள் வழியாக, உருவகங்கள் வழியாக நமக்கு வரக்கூடிய ஒரு மரபை, ஓஷோ போன்ற ஒரு சமகால ஞானி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொருவருக்குச் சொன்ன பதில்களைக் கொண்டு ஒரேயடியாக மறுப்போம் என்றால் நாம் இழப்பையே சந்திக்கிறோம்.
ஓஷோவின் ‘இன்று‘வாதத்தை இன்றைக்கு பயன்படுத்துவதின் சிக்கல்.
ஓஷோ பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ‘கடந்தகாலம்’ என்பது அவ்வளவு பிரம்மாண்டமான சுமையாக இருந்தது. ‘இன்று’ என்பது ஒரு இடுங்கிய பாதையாக இருந்தது. அந்த பாதையை வெட்டி பெரிதாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இன்றைக்குள்ள ‘இன்று’ அப்படியல்ல. ‘இன்று’ இல்லாமல் தேங்கியிருந்த அக்கால இளைஞர்களை நோக்கி நவீனத்தொழில்நுட்பம் சொல்லியது ‘உனக்கு இன்றுதானே வேண்டும், இந்தா வைத்துக்கொள்’ என்று. இன்றைக்குள்ள ‘இன்று’ என்பது பத்து திசைகளிலும் திறந்துகிடக்கும் பிரம்மாண்டம். இன்று தொழில்நுட்பம் நம்மிடம் சொல்கிறது. ‘உனக்கு நேற்று இல்லை. நாளை இல்லை. இன்று மட்டும்தான் உள்ளது. அதை நான் உருவாக்கி அளிக்கிறேன். நீ எனக்குள் இரு. என்னை மட்டும் சார்ந்திரு. என்னை மட்டும் அறிந்திரு’
இன்றைக்கு நீங்கள் இங்கே இருந்துகொண்டு உலகின் அத்தனை மனிதர்களிடமும் பேசமுடியும். நான் 1982இல் ஒரு திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படம் பார்ப்பதற்காக காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்யவேண்டி இருந்தது. பூனாவுக்கும் கல்கத்தாவுக்கும் செல்லவேண்டியிருந்தது. ஒரு நல்ல உரையை கேட்பதற்காக மும்பைக்கு டிக்கெட் எடுத்து சென்றிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு எல்லாமே விரல் தொடுகையில் உங்கள் முன்னால் உள்ளது. எல்லா இசையும், எல்லா சினிமாவும் உங்களுக்கு கிடைக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு சதுர கிலோமீட்டர் அகலத்திற்குப் பரப்புவதுபோல இன்றைய ‘இன்று’ உங்களை சிதறடித்து பரப்புகிறது.
இன்றைய சூழலில் ‘இன்றிலிருத்தல்’ என்றால் உங்களை நீங்களே நூறாக, ஆயிரமாக சிதறடித்து வீணாகிப்போவதில்தான் சென்று முடியும். நேற்றும் நாளையும் இல்லாமல் இருத்தல் என்றால் வரலாறும் பண்பாடும் தன்னடையாளமும் ஒன்றும் இல்லாத வெறும் நுகர்வுயிரி ஆக மாறுவதில்தான் சென்று முடியும். இன்ஸ்டாவிலும் ரீல்ஸிலும் வாழும் இளைய தலைமுறை இன்றில் மட்டும்தான் இருக்கிறது. அதற்கு நேற்று இல்லை, நாளை இல்லை. ஓஷோ சொன்ன அந்த ‘இன்று’ அல்ல இன்றைய ‘இன்று’. அது பிரபஞ்சம் அளிக்கும் நிகழ்காலம். தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கக்கூடிய இன்றைய ‘இன்று’ முற்றிலும் வேறுபட்டது. இது உலகளாவிய பெருவணிகம் அளிக்கும் நிகழ்காலம்.
இன்று நீங்கள் உங்களது விருப்பம், உங்கள் பாதை போன்றவைகளை துல்லியமாக வரையறுத்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் இன்று உங்களை வரையறுத்துக்கொள்ளவில்லை என்றால் காற்றில் திறந்து வைக்கப்பட்ட கற்பூரம் போல இல்லாமலாகிப் போவீர்கள். நீங்கள் ‘நோ’ சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பம் உங்கள் முன் கொண்டுவந்து குவிப்பவற்றில் எவையெல்லாம் தேவையில்லை என நீங்கள் உறுதியுடன் முடிவெடுத்தாகவேண்டும். இல்லையேல் உங்களுக்கு உரியவற்றை நீங்கள் அடையமுடியாது. தொழில்நுட்பம் தான் விரும்பியதை உங்களுக்குள் திணித்து உங்களை அதன் அடிமையாக ஆக்கிவிடும். இன்று உங்களைச் சூழ்ந்திருப்பவர்களைப் பாருங்கள், வெறும் தொழில்நுட்ப அடிமைகள் அவர்கள். நவீனத் தொழில்நுட்பம் என்னும் மாபெரும் இயந்திரத்தின் சிறிய உறுப்புகள், கூடவே அதன் இரைகள்.
இன்றைய காலத்தில் ஓஷோவின் வரிகள் தவறாக அர்த்தப்படுத்தப்படக்கூடும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஓஷோவின் வரிகளில் உள்ள ‘என்றுமுள்ள’ அம்சத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே நேரடியாக பொருள்கொள்ளக் கூடாது. இன்று ஒருவர் ‘ஹெடோனிஸம்’ என்று சொல்லப்படுவதை அப்படியே பொருள்கொண்டால் தொழில்நுட்பம் அளிக்கும் செயற்கையான புலன் இன்பங்களில் விழுந்து, அதற்கு அடிமையாக ஆவார். நிகாஸ் கஸண்ட்ஸகீஸ் சொன்னதோ, ஓஷோ சொன்னதோ அது அல்ல.
இன்றைக்கு உள்ள பிரச்சனை, நாம் நம்மை புதிதாக வரையறுத்துக் கொள்வதல்ல; மறுவரையறை செய்துகொள்வதே. நீங்கள் ஒரு ரிலையன்ஸ் வாடிக்கையாளர், ஒரு கூகிள் பயனர், ஒரு அமேசான் உறுப்பினர் என்பது போன்ற ஆயிரக்கணக்கான அடையாளங்கள் உங்களுக்கு உள்ளன. அதற்கு அப்பால் ஒரு அடையாளத்தை நீங்கள் வரையறுக்க முடியாது. அப்படி நீங்கள் வரையறுத்த உடனேயே அது கூகுளுக்கு தெரிந்துவிடும். உடனே அந்த அடையாளத்துக்கான விளம்பரத்தை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடும். ஒரு கதைக்காக இந்திய மதுபானங்களில் விலையுயர்ந்தது எது என்று கூகுளில் தேடினேன். கடந்த ஐந்து நாட்களாக எனது டைம்லைனில் மதுபான விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ஐயா, நான் குடிப்பது கிடையாது என்று கூகுளுக்கு எப்படி சொல்லமுடியும் ? இவ்வளவு பிரம்மாண்டமான எந்திரம் என் முன்னால் நின்றுகொண்டு என்னை வரையறுக்கும்போது அதற்கு ‘நோ’ சொல்வதுதான் இன்று எனது கடமையாக உள்ளது.
இது ஓஷோவுடைய காலமல்ல, வேறொரு காலம். இந்தக் காலத்திற்கு உரிய ஆன்மிகம் என்பது வேறு. இந்த காலத்தில் நீங்கள் எதை வரையறுத்துக் கொண்டாலும், அங்கு நீங்க்ள் செல்லும்போது ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்குச் சென்றபோது அங்கே ஒரு நாயர் டீக்கடை இருந்தது என்று சொல்வது போன்று அங்கு ஏற்கெனவே கூகுள் உட்கார்ந்திருக்கும். நீங்கள், ‘நான் இதிலெல்லாம் இல்லைங்க. நான் மாடர்ன் டெக்னாலஜிக்கு எதிரானவன். என்னை நான் வரையறுத்துக்கொண்டு ஒரு குடிலில் தன்னந்தனியாக வாழ விரும்புகிறேன்’ என்று சொன்னாலும், உடனடியாக ஒரு கூகுள் விளம்பரம் வரும், ‘தன்னந்தனி குடில்கள், இமயமலை சாரலில், வாடகை ரூ.1000’ என்று. ஆகையால் இன்றைக்கு உங்களுடைய ஆன்மீகத்தை கண்டடைவது ஓஷோவிலிருந்து செல்லக்கூடிய பயணம் அல்ல.ஓஷோ அதற்கு உதவுவார், ஆனால் ஓஷோ மட்டும் போதாது.
ஓஷோவின் இலக்கு மறுப்புவாதம் சரியானதல்ல
ஓஷோ அகப்பயணத்தின் வழியைப் பற்றிப் பேசுபவர். இலக்கு / நோக்கம் என்பது இல்லை என்று சொல்கிறார். நானும் அவ்வாறு கருதிய காலமுண்டு. ஆனால் இன்று அப்படியல்ல. செல்லும் வழி எந்த அளவுக்கு மகிழ்ச்சியானது, நிறைவூட்டுவது என்பது வேறு. ஆனால் மனிதப்பிறவி என்பதற்கு இலக்கு என்று ஒன்று உண்டு. இந்த அம்பு சென்று தைக்கவேண்டிய ஒரு புள்ளி உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.
எந்தவொரு பயிற்சியிலும் அது எதன்பொருட்டு என்ற கேள்வி வருகிறது. பயிற்சியின் பொருட்டான பயிற்சி, பயிற்சியின் மகிழ்ச்சிக்கான பயிற்சி என்று ஒன்று இருக்கமுடியாது. முக்தி, மோக்ஷம், வீடுபேறு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அவையெல்லாம் உங்களுடைய வரையறை. ஆனால் அதற்கப்பால் ஒன்றுண்டு. இலக்கை நாம் அறியாமலிருக்கலாம். உணர்ந்தாலும் முழுக்க புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நாம் மிகச்சிறியவர்கள், நம் வாழ்க்கை துளியினும் துளி. ஆகவே நம் அறிதலும் சிறிது. நாம் அறியமுடியாதென்பதனால் அது இல்லை என்பது சரி அல்ல. நாம் அறியாததனால் அது அறியத்தேவையற்றது என்பதும் சரியல்ல.
இயற்கையில் ஒரு சாதாரண விஷயத்தை பார்க்கும்போதும் நாம் சிலவற்றை உணரமுடியும். நான் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தபோது பிரம்மாண்டமான சிதல்புற்றுகளை பார்க்கநேர்ந்தது. என் வாழ்க்கையில் அது ஒரு ஞானதரிசனம். ஆகவேதான் அதை மீண்டும் மீண்டும் உரைகளில் சொல்கிறேன். அந்த புற்றுகள் சாலமோன் காலத்தில் இருந்து இருப்பவை. அவை மண்ணுக்கடியில் மூன்று நான்கு பனைமர உயரத்திற்கும், மண்ணுக்கு மேலே ஒரு பனைமர உயரத்திற்கும் உள்ளவை. மேலே இருப்பவை சாளரங்கள் மட்டும்தான். அவை உள்ளே காற்றும் நீரும் செல்வதற்கான வாயில்கள். நியூயார்க் நகரத்தை மனிதர்களின் அளவோடு ஒப்பிட்டால் அது எவ்வளவு பெரிதோ, அதேபோல அந்தப் புற்றுகளை அந்த சிதல்களோடு ஒப்பிட்டால் அந்த புற்றுகள் நியூயார்க்கைவிட ஆயிரம் மடங்கு பெரியவை. அதன் பொறியியலை இன்றுவரை மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்தப்பகுதியில் அந்த புற்றுகளை ஆராய்வதற்கான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அங்கு ஒரு வெள்ளையர் எங்களிடம் அதுபற்றி விளக்கினார்.உள்ளே காற்று செல்வதற்கான வழிகள், வெளியேறுவதற்கான வழிகள், காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகள், போக்குவரத்து நெரிசலற்ற சாலைகள், தனித்தனியான அறைகள், உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான வழிகள் அப்புற்றுக்குள் இருப்பதாக தெரிவித்தார். அதாவது அது மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மாபெரும் நகரம். அதை ஏன் ஆராய்கிறார்கள் என்றால் என்றாவது ஒருநாள் நாம் விண்வெளியில் மிதக்கும் நகரங்களை அமைப்போமென்றால் அதை இந்த சிதல்புற்று வடிவில்தான் அமைக்கவேண்டியிருக்கும் என்பதால்தான்.
ஆனால் அதில் இருக்கும் ஒரு கரையானுடைய வாழ்க்கை என்பது சில வாரங்கள்தான். அதனுடைய உருவ அளவே மிகச்சிறியதுதான். அப்படியெனில் அந்த பிரம்மாண்டமான புற்றின் பொறியியல் எதில் உள்ளது ? அது அந்த ஒரு கரையானிடம் உள்ளதா ? சொல்லமுடியாது. அதன் மூளைக்குள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதன் மூளை மிகச்சிறியது. அந்த கூட்டத்தில் ஒரு சிதல் பிறந்து வெளியே வந்து சில மண்துகள்களை எடுத்து உள்ளே சென்று வைக்கிறது. சில உணவுகளை கொண்டுசெல்கிறது. அதன்பிறகு இறந்துவிடுகிறது. ஆனால் அது அந்த பிரம்மாண்டமான புற்றை கட்டிக்கொண்டிருப்பது அதற்கு தெரியாது.
அதுபோல நாம் நமது வாழ்வில் எதை கட்டிக்கொண்டிருக்கிறோம் ? நோக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது. நீங்கள் எந்த அளவுக்கு உயிரியல் செய்திகளைப் பார்க்கிறீர்களோ அந்த அளவுக்கு உயிர்களுக்கான நோக்கம் தெளிந்து வருவதைப் பார்க்கலாம். இங்குள்ள வாழ்க்கை பொருளற்றது அல்ல. எப்படியாவது மகிழ்ச்சியாக இருந்து கடந்து சென்றுவிடவேண்டிய ஒன்றல்ல நம் வாழ்க்கை. நாம் எய்த வேண்டிய சில உண்டு. நாம் செய்தேயாகவேண்டிய சில உண்டு. அது உங்களுக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அது உள்ளுணர்வாக தெரியும். அந்த உள்ளுணர்வுக்கு மேல் மற்றவைகளை ஏற்றிவைத்து மறைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் சொந்த மாயை. ஆனால் உள்ளுணர்வால் ஒருவனுக்கு தெரியும், அவன் வந்தது எதற்காக, செய்யவேண்டியது என்ன என்று. அதை செய்வதற்குத்தான் வாழ்க்கை. வாழ்க்கையின் நோக்கம் என்பது அதுதான். அது பிரபஞ்சம், இயற்கை நமக்கு இடுவது. நாம் பிறக்கையிலேயே உடன் வருவது.
இதை கண்டடைந்த பிறகுதான் நான் ஓஷோவை கடந்தகால ஆசிரியன் என்ற இடத்திற்கு கொண்டுசென்றேன். என்னுடைய பணி என்னவோ அதை ஆற்றிமுடித்து இங்கிருந்து செல்வேன். நிகழ் கணத்தில் இருத்தல், ஹெடோனிஸம் என்றெல்லாம் எளிய உலகியல் இன்பங்களில் வாழ்வது வீண் என உணர்கிறேன். அவை இன்பங்கள் அல்ல. அவை நிறைவு அளிப்பதில்லை. செயல்நிறைவே எனக்கான முழுமையான இருப்பை அளிக்கிறது. செயல்வழியாகவே மெய்யான இன்பம் நிகழ்கிறது. இலக்கை எய்துதல் என ஒன்று உள்ளது. அது எனக்கான செயலை நான் முழுமைப்படுத்திக்கொள்வதே. ஆகவேதான் இத்தனை ஆயிராம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
ஆனால் இந்த பிரம்மாண்டமான மானுட சிந்தனை வெளியில் எனது எழுத்துக்கள் கூட குமிழியே. கங்கையில் ஒரு குமிழியைப்போல. அருகில் இருக்கும் இன்னொரு குமிழிதான் டால்ஸ்டாய். மற்றொரு குமிழி ஐன்ஸ்ட்டின். ஆனால் இந்த ஒட்டுமொத்தம் என்பது மிக பிரம்மாண்டமானது. அதை அறிவியக்கம் என்கிறேன். நாம் ஒட்டுமொத்தமாக மானுடம், அந்த அறிவியக்கத்தின் நோக்கம் என்ன என்று நம்மால் சொல்லிவிட முடியாது. மானுடம் ஒட்டுமொத்தமாக சிந்தனைசெய்தாலும் அறிந்துவிட முடியாது. நாம் இதை ஆற்றிவிட்டு செல்வோம். நம்மால் இயல்வது இது என்பதனால் இதைச் செய்கிறோம். என்னால் இயல்வது இது என்பதனால், இதைச் செய்வதே என் மகிழ்வும் நிறைவும் என்பதனால் நான் இதைச் செய்கிறேன். இதுவே விடுதலை. சும்மா இருப்பது அல்ல. நேற்றும் நாளையும் இன்றி இருப்பது அல்ல. பொறுப்பேற்றுக்கொள்ளாமல் இருப்பது அல்ல.
இவ்வாறு வாழ்வின் நோக்கம் பற்றிய நமது தன்னுணர்வு அளிக்கக்கூடிய நிறைவை, அதை எய்தபின்பு அடையக்கூடிய விடுதலையை நீங்கள் ஓஷோவில் தேடமுடியாது. அதுவே ஓஷோவின் எல்லை.
நன்றி.
எல்லாவற்றைப்பற்றியும் ஏதாவது சொல்கிறேனா?
நீங்கள் சொல்லும் எவற்றுக்கும் ஆதாரங்கள், ஆய்வுமுடிவுகள் இல்லாமல் மனதில் பட்டதையே சொல்கிறீர்கள். அறிவியல்சார்ந்து இந்தவகையான கருத்துக்களுக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?
In this video, I have talked about why a new writer should write a novel, how to write it, what to do, and what not to do. Writing a novel
August 10, 2025
சரஸ்வதி யாமம்
சரஸ்வதி என்னும் ராகத்தில் அமைந்த பாடல் இது என்று சொல்லப்படுகிறது. எம்.கே.அர்ஜுனனின் இசையமைப்பில் 1976 ல் வெளிவந்த அனாவரணம் என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல். வயலார் ராமவர்மா எழுதியது. ஏசுதாஸ் பாடியது.
ஏசுதாஸின் குரல் கம்பீரம் அடையத்தொடங்கும்போது வந்த பாடல். (கம்பீரம் எனும்போது தமிழ்ச்செவிகளுக்கு தோன்றும் அந்தக் கம்பீரம் அல்ல. இது ஓர் இனிய மணியோசை)
இந்தப்பாடல் எனக்கு நீண்டகாலமாகவே பிடித்தமான ஒன்று. கொஞ்சம் ஊக்கப்படுத்திக்கொள்ள நான் கேட்பது. இந்தப் பாடலின் வரிகள் அந்த படத்துடன் இணைந்தவை. நிகழ்காலத்தில் சோர்ந்துகிடக்கும் கேரளத்தின் மேல் சூரியன் எழுகிறது என்றும், அதைநோக்கி பாடுவதாகவும் எழுதப்பட்டது
சரஸ்வதி யாமம் கழிஞ்ஞு
உஷஸின் சஹஸ்ர தளங்கள் விரிஞ்ஞு
வெண்கொற்ற குட சூடும் மலயுடே மடியில்
வெளிச்சம் சிறகடிச்சு உணர்ந்நு
அக்னி கிரீடம் சூடி அஸ்வாரூடனாயி
காலம் அங்கம் ஜயிச்சு வந்த தறவாட்டில்
இதுவழி தேரில் வரும் உஷஸே
இவிடுத்தே அஸ்திமாடம் ஸ்பந்திக்குமோ?
முத்து உடவாள் முனையாலே
நெற்றியில் குங்குமம் சார்த்தி
கைரளி கச்ச முறுக்கி நிந்ந களரிகளில்
நிறகதிர் வாரித்தூகும் உஷஸே
இனியும் ஒரு அங்கத்தினு பால்யமுண்டோ?
சரஸ்வதி யாமம் கடந்தது
காலையின் ஆயிரம் இதழ்கள் விரிந்தன.
வெண்கொற்றக்குடை சூடும்
மலையின் முடியில்
வெளிச்சம் சிறகடித்து எழுந்தது.
அக்கினி கிரீடம் சூடி, அஸ்வத்தின் மேல் ஏறி
காலம் களம் வென்றுவந்த தாய்நிலத்தில்
இவ்வழியாக தேரில் வரும்
உன்னைக்கண்டு
இங்குள்ள கல்லறை அதிர்வுகொள்ளுமோ?
முத்துபதித்த உடைவாள் முனையால்
நெற்றியில் குங்குமம் தீட்டி
கேரளம் கச்சை இறுக்கி நின்ற போர்க்களங்களில்
நிறைகதிர் அள்ளிச் சொரியும் புலரியே
இன்னும் ஒரு ஒற்றைப்போருக்கு
இளமையுள்ளதா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

