Jeyamohan's Blog, page 51

August 17, 2025

கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும்

திரு ஜெயமோகன்,

தமிழக மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் உங்களுக்குப் பெரும்பங்குண்டு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசியலின்மை பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசியலற்றவர் என்று உங்களை முன்வைக்கிறீர்கள். மக்களை அரசியல்படுத்த அறிஞர்களும் களச்செயல்பாட்டாளர்களும் கடுமையாகப் போராடிவரும் சூழலில் நீங்கள் அதற்கு எதிரான எதிர்மறைச்சக்தியாக நிலைகொள்கிறீர்கள். 

அரசியல் சார்புநிலை என்பது ஒரு கீழ்நிலை அல்ல. அது ஒரு தெளிவு. நாம் எவர் என்றும் நமக்கு என்னவேண்டும் என்றும் அடையும் புரிதல் அது. அரசியல் அற்றவர்கள் என உண்மையில் எவருமே இருக்கமுடியாது. அரசியலை ஒளித்து வைத்துக்கொண்டு அரசியல் இல்லாதவர்களாக நடிக்கிறார்கள் பலர். நீங்களும் அத்தகையவர்தான். 

அரசியல் நிலைப்பாடுதான் ஒருவனின் அடையாளம். அவன் சிந்திப்பவன் என்பதற்கான சான்று அதுதான். பசப்புகளை விட்டுவிட்டு உங்கள் அரசியலை முன்வையுங்கள்.

செல்வ. அரங்கராசன்.

அன்புள்ள செல்வ அரங்கராசன்,

உங்கள் கடிதம் நம் இடதுசாரிகள் வழக்கமாக மேடையில் பேசும் வசனங்கள் மட்டுமே கொண்டது. ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்று அவர்கள் சொல்வது மக்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதைத்தான். சேராதவர்கள் எதிரிகள். இது எல்லா அரசியல்கட்சியினரும் இன்று கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு. அவர்களின் ஏமாற்றம் புரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி பணம் செலவழித்து, இத்தனை ஊடகவல்லமையுடன் பிரச்சாரம் செய்தும் மக்களில் கணிசமானவர்கள் அவர்களுடன் சேராமலிருக்கக் கண்டு அடையும் சீற்றம் அது.

அரசியல்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. அது காற்றுக்கு எதிராக கம்பு சுற்றுதல். அரசியல்தரப்பினருக்குக் கேட்கும் செவி இல்லை. ஆனால் உங்கள் கருத்தை நம்பும் சிலரும் என் சூழலில் இருக்கிறார்கள் என்பதனால் அவர்களுக்காக ஒரு பதில்.

அரசியல் என்பது ஜனநாயகத்தின் ஒரு பிரிக்கமுடியாத செயல்பாடு. ஜனநாயகத்தில் நாம் வாழ்வதனால் நாம் அரசியலை அறியவும், அரசியல் சார்ந்த முடிவுகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் வாக்களிக்கவேண்டும். நம் வரிப்பணத்தை நமக்காகச் செலவழிக்கும் பொறுப்பை நாம் சிலருக்கு அளிக்கிறோம். அவர்கள் எவர் என நாம் முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் செய்வதைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றால் பிறரை தேர்வுசெய்யவேண்டும்.இதுதான் ஜனநாயகத்தில் நாம் கொள்ளவேண்டிய அரசியல். இதை ‘ஜனநாயக அரசியல்’ என்று சொல்கிறேன்.

இந்த அரசியல் ஒவ்வொருவருக்கும் தேவை.நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்படாமலிருப்பதும் சரி, நாட்டில் என்ன நிகழ வேண்டும் என சிந்தித்து முடிவெடுக்காமல் பொறுப்பின்றி வாக்களிப்பதும் சரி ,மிகப்பிழையானவை. மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஜனநாயக அரசியலுக்குள் இல்லை என்பது உண்மை. அவர்களுக்கு இந்த அரசியலை புரியவைப்பதையே ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்னும் சொல்வழியாக குறிப்பிடுகிறார்கள். மக்களை ஜனநாயகப்படுத்துதல் என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கட்சியரசியல். ஏதேனும் ஒரு கட்சி சொல்வதை முழுக்க நம்புவது, கண்மூடித்தனமாக அதற்கு ஆதரவளிப்பது, உணர்ச்சிகரமான கட்சிவழிபாடு அல்லது தலைமை வழிபாடு, தன் சொந்த அடையாளமாகவே ஏதேனும் ஒரு கட்சிச்சார்பை கொண்டிருப்பது என்பதெல்லாம் அரசியல் அடிமைத்தனம் மட்டுமே. அது உண்மையில் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது.

இப்படிச் சொல்கிறேன். ஒரு வாக்காளனாகவும், குடிமகனாகவும் நின்று ஜனநாயகத்தில் தன் கடமையை ஆற்றுபவனே உண்மையில் அரசியல்படுத்தப்பட்டவன். ஏதேனும் ஒரு தரப்புக்கு மூளையை அடகு வைத்துவிட்டவன் உண்மையில் அரசியல்நீக்கம் செய்யப்பட்ட அடிமை மட்டுமே. அவன் உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானவன்.

இன்றைய சூழலைப் பாருங்கள். தூய்மைப்பணியாளர்கள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டு, அவர்களின் ஏற்கனவே குறைவான ஊதியமும் முக்கால் பங்காக குறைக்கப்பட்டபோது அவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். அவர்களை போலீஸ் நடவடிக்கை வழியாக அப்புறப்படுத்தியது தமிழக அரசு. அவர்களை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. அவர் கூலி படம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு திமுக அனுதாபி அதை நியாயப்படுத்தவேண்டும். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர் என்றால் பேசாமல் இருந்துவிடவேண்டும்.

ஆனால் திமுகவை குற்றம்சாட்டி குமுறும் பாரதிய ஜனதாக்கட்சியினர் அவர்களின் தலைவரான இந்திய பிரதமர் இதே போன்றுதான் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொண்டார் என்பதையும், அப்போது இவர்கள் அவரை நியாயப்படுத்தினார் என்பதையும் மறந்துவிடவேண்டும். இன்று திமுகவை அதிமுக விமர்சிக்கிறது. ஆனால் ஆட்சியில் இருந்தபோது அதிமுக இதையே செய்தது. அன்று இன்றைய முதல்வர் கொந்தளித்து நியாயம் கேட்டார்.

கட்சியடிமைகளுக்கு மக்கள் நலன், நாட்டு நலன் முக்கியமே அல்ல. அவர்கள் கட்சிக்கு விசுவாசமானவர்கள், கட்சி மக்களுக்கு தீங்குசெய்தால் அவர்கள் கட்சியுடன் இணைந்து மக்களை அழிக்கவே முற்படுவார்கள். ஆகவேதான் கட்சியடிமைகள் மக்கள்விரோதிகள் என்று சொல்கிறேன். ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் முழுநேர விசுவாசியாக இருக்கலாகாது என்கிறேன்.

கட்சிவிசுவாசிகளின் சார்பு நிலைகள் ஒழுக்கரீதியாகக்கூட மிகமிக ஓரம்சார்ந்தவை. என் நண்பர் கோணங்கி மேல் அவருடைய முன்னாள் நண்பர்கள் இருவர் முகநூலில் ஒரு பாலியல்குற்றச்சாட்டைச் சொன்னார்கள். கோணங்கியை  முகநூலில் வசைபாடித் தள்ளினர். அவருடைய  நண்பர்கள்கூட வசைபாடினார்கள். நான் அவரை அறிவேன் என்பதனால் அவரை ஆதரித்தேன். என்னையும் வசைபாடினர். சில சிற்றிதழ்கள் எங்களை வசைபாட தனி இதழ்கூட வெளியிட்டனர்.

அண்மையில் இடதுசாரியினருக்கு அணுக்கமானவராக இருந்த முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார். அவர் ஒரு சிந்தனையாளரோ, படிப்பாளியோகூட அல்ல, இடதுசாரிக் கட்சிக்கு விசுவாசமானவர், அவ்வளவுதான். அவர் சாவை இடதுசாரிகள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வசந்திதேவியின் மகன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வசந்திதேவி பற்றிய மிகக்மிகக் கடுமையன ஒழுக்கக் குற்றச்சாட்டுகள் அதிலிருந்தன. அவர் உண்மையான வாசிப்போ, புரிதலோ கொண்டவர் அல்ல என்பதையும் அவர் மகன் எழுதினார். அவர் ஓர் அமெரிக்கக் குடிமகன். ஓர் அஞ்சலியில்கூட உண்மையைச் சொல்வது அவர்களின் மரபு. இங்கே அது பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால் ஒரேயொரு இடதுசாரிகூட அதில் எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆழ்ந்த மௌனம்தான்.

அரசியல்சார்பு உருவாக்கும் மனநிலை இதுதான். அறநிலைபாடு இருக்காது. பொதுப்புத்திப் புரிதலும் இருக்காது. கட்சிநிலைபாடு மட்டுமே இருக்கும். ஒருவன் ஒரு கட்சிநிலைபாட்டை எடுத்தான் என்றால் தன் சுயசிந்தனையை அழித்துக்கொள்ளவேண்டும், தனக்காகச் சிந்திக்கும் பொறுப்பை கட்சிக்கு அளித்தாக வேண்டும்.அது சிந்தனை ரீதியான சாவு. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவாளன் அல்ல. நிரந்தரமாக எதையும் ஆதரிப்பவனும் அல்ல. ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அப்படி நிரந்தரமான கட்சிச் சார்பு இல்லாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் நிலைபாடு எடுக்கக்கூடியவர்களாக எஞ்சும்வரைத்தான் அங்கே உண்மையான ஜனநாயகம் திகமும். ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்சியரசியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மிகுதியாக இல்லாமலாகும்போது ஜனநாயகம் அழியும்.

உலகத்தில் எங்கே மெய்யான ஜனநாயகம் உள்ளதோ அங்கெல்லாம் ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களே மிகுதி. ஏதேனும் தரப்பை மூர்க்கமாக எடுக்கும் கட்சியரசியல் நம்பிக்கைகொண்டவர்கள் பெருகும் நாடுகளில் மிக விரைவாக ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் வரும். ஏனென்றால் கட்சியரசியலாளர்கள் தங்கள் கட்சியோ அரசோ என்ன செய்தாலும் அதை ஆதரிப்பார்கள். அக்கட்சியை, அத்தலைவரை சர்வாதிகாரம் நோக்கி தள்ளுவார்கள். இதற்கும் உலக அளவில் பல உதாரணங்கள் உண்டு.

எனக்கு அரசியலுண்டு, அது கட்சி அரசியல் அல்ல. ஏனென்றால் அரசு மேலிருந்து கீழ்நோக்கி அதிகாரத்தைச் செலுத்துகிறது. அந்த கீழிறங்கும் அதிகாரம் வழியாக எந்த உண்மையான மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது என நான் நினைக்கிறேன். ஆகவே அரசைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட கட்சியரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எந்தக் கட்சியானாலும் சரி, அது என்னென்ன கொள்கைகளை சொல்லிக்கொண்டாலும் சரி, அதிகாரத்தை நோக்கிச் செல்லுந்தோறும் பல சமரசங்களைச் செய்துகொண்டே இருக்கும். அதிகாரத்தை அடையும்போது சமூகத்திலுள்ள வெவ்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியாகவே அது இருக்கும். இன்று அதானியை எதிர்க்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அதானியுடன் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்பதே யதார்த்தம். நேற்று அதிமுகவை எதிர்த்த திமுக இன்று அந்த அதிகார சக்திகளுடன் தான் கூட்டுவைத்துள்ளது.

அதேபோல ஆட்சிக்கு வந்து அரசாகச் செயல்படும்போது எந்தக் கட்சியும் அதிகாரத்தின் தரப்பாகவே இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளை அப்படித்தான் கையாளும். அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் துப்புரவுப்பணியாளர்களை இப்படித்தான் கையாளமுடியும்.

நான் நம்பும் அரசியலென்பது கீழ்மட்டத்தில் செயல்படும் அரசியல். மக்களின் கருத்தை மாற்றுவதற்கான அரசியல். நுண்ணலகு அரசியல் என்று அதைச் சொல்கிறேன். அதற்கு அதிகார நோக்கம் கிடையாது. ஆட்சியை பிடிக்க முயலவில்லை. ஆகவே சமரசம் செய்வதில்லை. தான் நம்பும் கருத்தை மக்களிடம் கொண்டுசென்றபடியே இருக்கிறது அது.

மக்களின் கருத்து மாறும்போது அது ஓர் மக்கள்சக்தியாக மாறி அரசாங்கத்தை கட்டுப்படுத்தும். அரசு மக்களுக்கு அவர்கள் கோருவதைச் செய்தே ஆகவேண்டும். கீழிருந்து மேலே செல்லும் மாற்றம் இது. இதையே நான் நம்புகிறேன். சென்ற நூறாண்டுகளில் இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் இப்படி நுண்ணலகு அரசியலால் உருவானவை மட்டும்தான்.

காந்தி முன்வைத்த அரசியல் இதுவே.இது விறுவிறுப்பானது அல்ல. இதில் வெறுப்பும் காழ்ப்பும் கொக்கரிப்பும் இல்லை. இது கண்ணுக்கே தெரியாதது. ஆனால் இதில் ஆன்மாவை அடகுவைக்கும் கீழ்மை இல்லை. நம்பி ஏமாறும் கசப்பும் இல்லை. துளியளவு பங்களிப்பாற்றினாலும் அந்த அளவுக்கு நிறைவு அமையும்.

ஆனால் கட்சியரசியலை சார்ந்து தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் பலவீனர்களும், மனச்சோர்வு நோயாளிகளும் இதில் செயல்பட முடியாது. இலட்சியவாத உறுதிகொண்ட, செயலாற்றும் விசைகொண்ட, ஆற்றல்மிக்கவர்களே இதை கடைப்பிடிக்கமுடியும்.

ஜெ

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:35

சே. கல்பனா

சே.கல்பனா கல்வித்துறை சார்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சே.கல்பனா சே.கல்பனா சே.கல்பனா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:33

நிழல்களின் ஆடல், கடிதம்

அன்பு ஆசிரியருக்கு,

அன்பின்பாலும் தங்கள் படைப்புகள் என்னுள் ஏற்படுத்தும் எண்ண இடறல்களாலும் அவற்றைப்பற்றி உரையாடவும் தெளிவு பெறவும் பல முறை முயன்றும் எனது நினைவுக் குறைகளாலும் வாசிப்பு தடைகளாலும் கடிதமாக மின்னஞ்சலாக மாறாமல் அப்படியே விட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்குமான இழுவைத்தன்மை ரப்பரைபோல ஒரு எல்லையில் விடுபட்டுத்தானே ஆக வேண்டும். இந்த முறை காவியமும் நீலநிழலும் அந்தத்தடையை உடையச் செய்திருக்கிறது. 

காவியம் படிக்க ஆரம்பிக்கும்போது என் பால்ய நினைவுகள் அந்த நிழலைப் போல பீடித்தாட்டியது. விக்கிரமாதித்ததனும் வேதாளமும் அதன் கதைகளும் விடாது ஆட்டும் முருங்கை மரமும் அதை தன் தோளில் தூக்கிச் செல்லும் அம்புலிமாமாவின் புகைப்படங்களும் நாவலுக்குள் செல்லவிடாமல் தடுத்தபடியே இருந்தது. ஆரம்ப அத்தியாயங்களின்போது ஒருமுறை இருமுறை மும்முறை என முயன்றபடிதான் என்னை நான் அதில் ஈடுபடுத்திக்கொண்டேன். குணாட்யர் உள்ளே வந்தபின் முயற்சி எளிதாகியது. நாவல் கூறும் தத்துவ விசாரங்கள் மனம் புரிந்து ஏற்றாலும் அவற்றை தெளிவான வார்த்தைகளாக வரையறுக்க நம் பிற வாசகர்களைப் போல இயலவில்லை. இனி பின்னாளில் நமக்கு வந்தால் வரம். வராவிடில் சாபம் என்று ஏற்பேன். 

காவிய நிழல்களின் பிடியிலிருந்து விலகி இருளுக்குள் செல்ல மனம் தவித்தது. அதற்குள்ளாக நீலநிழல் என்னை பிடித்தாட் கொண்டுவிட்டது. வைரவேல் நாயக்கரும் அவர்தம் மீசையும் அதை அவர் வருடும் விதமும் என்னுள் இல்லாத மீசையை என்னுள்இருப்பாக்கி வெறுமனவும்  நீவச் செய்தது இரத்தத்தின் பிசுபிசுப்பை கைகளில் உணர்ந்தபடிதான் இந்த குறுநாவலை முடித்தேன். தன்நிழலுடன் அவர் ஆடும்  பலவித ரூப ஆட்டங்களே நம்மையும் அதில் ஒருவராக்கி விளையாட வைத்து விட்டது. ஒருவரின் இரக்கமற்ற தன்மையையே பிரதானமாக்கி அததற்கான நியாயங்களைக் கற்பித்து வாசிக்கும் வாசகர்களையும் ஏற்கச் செய்வது ஆசிரியரின் திறன். ஒரு பிரமிப்பூட்டும் திரையனுபவமாக ஆவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் இக்குறுநாவல் கொண்டிருக்கிறது. 

 அறம் படித்தவர்கள் கண்டிப்பாக திகைக்கத்தான் நேரிடும். அதன் பாத்திரங்களுக்கு முழு நேரெதிரான  பாத்திரங்களாக வைரவேல் நாயக்கரும் வெள்ளையனும் வருகிறார்கள். அதிலிருந்த கருணையும் அன்பும் இரக்கமும் இதில் அறவேனும் இல்லை. ஆனால் நிழல் வருவதால் நம்மால் விடுபட இயலாமல் போகிறது. இருவேறு படைப்புகளை ஒப்பிட மனம் விழையவில்லை. இருப்பினும் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்த இதுதான் வழி. மிக்க நன்றி ஆசானுக்கு என் நினைவிலிருந்து மீளா அரியபடைப்புகள் 

எப்படியோ கடிதத்தை முடித்துவிட்டேன். மனமே இப்போதுதான் வில்லிலிருந்து விடுபட்ட அம்பின் சுதந்திரத்துடன் இருக்கிறது. 

ராமசாமி பிரீதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:31

மைத்ரி -அந்திமழை மதிப்புரை

உத்தராகாண்ட் மாநிலத்தில் இமய மலைகளின் சரிவில் கர்வால் நிலப்பகுதியில் நடக்கும் கதை இது. 

மூன்று நாட்களில் நிகழும் காதல் கதை. பயணம், காதல் இரண்டுமே உற்சாகம் தருபவை. இவை இரண்டும் இணைந்துவிட்டால் எழுகின்ற உணர்ச்சிப்பெருக்கை சொல்லவும் கூடுமோ? இளம் எழுத்தாளர் அஜிதன் விளையாடி இருக்கிறார். 

ருத்ரபிரயாக்கிலிருந்து சோன்பிரயாக் வரை பேருந்தில் செல்லும் வழியில் மைத்ரி என்ற பெண்ணை சந்திக்கிறான் ஹரன்.

அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் உறவின் போக்கினை மிக அழகான மொழியில் சித்திரித்து, பெண்மையின் மாபெரும் ஆளுமைக்கு முன்னால் ஆண் ஒன்றுமே இல்லாத கூடு மட்டுமே என உணர வைத்துச் செல்லும் நாவல் இது.

மந்தாகினி நதிக்கரையில் இது நடப்பதும் இமயத்தின் சரிவில் வளர்ந்திருக்கும் தேவதாரு மரக்காடுகளின் வழியாக வளர்ந்து செல்வதும் இந்த எளிய காதல் கதைக்கு பல்வேறு ஆழமான அடுக்குகளைத் தருகின்றன. கர்வால் நிலப்பகுதியின் பண்பாட்டுச் சித்திரங்களை தமிழில் இந்த அளவுக்கு அழகாக எந்த நாவலும் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை. 

ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தை நமக்குக் கடத்துவதன்மூலம் இந்நாவல் முக்கியமானதொன்றாக மாறுகிறது. அதே சமயம் ஆணுக்குப் பெண் எதிர்பார்ப்பின்றி எதையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள், அந்த விரிந்து உயர்ந்த மலைகளைப்போல, வானுயர்ந்த தேவதாரு மரங்களைப் போல, ஓடிக்கொண்டேயிருக்கும் மந்தாகினி நதியைப்போல என்று உணர்த்துவதன்மூலம் மைத்ரி, ஹரனுக்குள் ஒரு பிரளயத்தை உருவாக்கச் செய்கிறாள். அவன் அடைவது ஒரு பிரிவுத் துயர் என்பதைத் தாண்டி, வேறொரு வாழ்வியல் அனுபவம்.

செம்மறி ஆடுகளுக்கு இயற்கையான குழந்தை முகம் உண்டு என்பதுபோன்ற திடீரென முளைத்து, கைபிடித்து நிற்க வைக்கும் வரிகளும் இந்நாவலில் சிறப்பியல்பு.

– மதிமலர்

(அந்தி மழை)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:31

விபாசனாவின் வழி

பல சுமைகளுடனும், துயரங்களுடனும் பயணித்து இப்போது சமுதாயத்தில் வீடு, வாசல், மகனுக்கு ஒரு வேலை என நிம்மதி அடைந்தாலும் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் பயம், பதட்டம் இருந்தது. நானும் ஒரு அரசு வேலையில் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாமல், மனதில் நிறைய கேள்விகள் இருந்தன. 

விபாசனாவின் வழி- கடிதம்

Understanding Western literature and art requires a thorough introduction to Western music. Unfortunately here the individuals talking about Western music are musicians who only know the technicalities of that music.

Music, philosophy, and literature
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:30

August 16, 2025

வரலாறும் குடிமைச்சமூகமும்

இந்தியாவில் நமக்குள்ள பெரிய பிரச்சினையே நமக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது என்பதுதான். அதை மறக்கவும் முடியாது, முழுக்க தெரிந்துகொள்ளவும் முடியாது. அதைப் பயன்படுத்தி எவர் எந்த வெறியைக் கிளப்பினாலும் அது பற்றிக்கொண்டுவிடுகிறது…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:36

வரலாற்றை கற்றல்

வரலாற்றைத் தெரிந்துகொள்வது எப்படி என பல கடிதங்கள். அவற்றிலுள்ள ஒரு மனநிலை என்பது இதுதான். ‘சரியான’ வரலாற்றைச் சொல்லும் ‘சரியான’ நூல்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்றையோ இரண்டையோ வாசித்தால் ‘சரியான’ வரலாற்று புரிதல் அமைந்துவிடும் என்று எண்ணுகிறார்கள். 

அப்படி ஒரு ‘சரியான’ வரலாறு இல்லை. ‘சரியான’ வரலாற்று நூலும் இல்லை. நாம் முழுக்க நம்பி அப்படியே ஏற்கத்தக்க வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது

வரலாறு என்பது ஒரு பெரிய விவாதக்களம். அது எப்போதுமே பலவகையான பார்வைகளும், முடிவுகளும் கொண்டதாகவே இருக்கமுடியும். ஒரு வரலாற்று மாணவன் எந்த ஒரு விஷயத்திலும் ‘முற்றறுதியான’ முடிவை கொள்ளவே முடியாது. அதை உணர்ந்தவனே உண்மையில் வரலாற்றை கற்கிறான்.

ஆகவே வரலாற்றில் ‘ஐயத்திற்கு இடமற்ற’ முடிவுகளைச் சொல்லும் எவரையும் அவன் வரலாற்றாசிரியனாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் அரசியல்வாதிகள் அல்லது பண்பாட்டு அடிப்படைவாதிகள். அவர்கள் வரலாற்றில் ஏதேனும் ஒரு கருத்தை நிறுவி, அதைக்கொண்டு சில அடையாளங்களை உருவாக்கி, அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி மக்களை திரட்டி அதிகாரத்தை அடைய முயல்கிறார்கள். அதிகாரத்துக்கான வழி என்பது ‘தம்மவரை’ தொகுப்பதும் அவர்களுக்கு ‘பிறரை’ சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்குவதும்தான். அதற்குத்தான் எங்கும் வரலாறு அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு நம்மிடம் இருக்கவேண்டும். சென்றகாலம் என்பது நம்மால் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு பெரியது. கோடானுகோடி மனிதர்கள், கோடானுகோடி நிகழ்வுகள். அவற்றில் அனைத்தையும் நாம் அறியமுடியாது. நாம் அனைத்தையும் அறிய முயல்வதும் இல்லை. நாம் நம் ஆர்வத்துக்குரிய சிலவற்றையே அறிய முயல்கிறோம். அவ்வாறு அறிந்தவற்றை தொகுத்து ஒரு தொடர்ச்சியான ‘கதையை’ உருவாக்கிக்கொள்கிறோம். அதுதான் வரலாறு.

அதாவது வரலாறு என்பது ‘நிகழ்ந்தது’ அல்ல. நிகழ்ந்தவற்றில் இருந்து நாம் உருவாக்கிக்கொண்ட ஒன்றுதான். நாம் ஏன் அவ்வாறு ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே கேள்வி. அவற்றை அறிவதனால் இன்று, இப்போது நமக்கு என்ன பயன் என்பதே முக்கியம்.

நாம் ஏன் வரலாற்றை அறிய முயல்கிறோம்? நாம் வாழும் வாழ்க்கைக்கு அறிவுசார்ந்த தொடர்ச்சி என்பது ஏதும் இல்லை. விலங்குகளின் வாழ்க்கையை அவை அறிவுசார்ந்து தொகுத்துக்கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு இருப்பது உயிரியல் தொடர்ச்சி மட்டும்தான். நமக்கும் அது மட்டும்தான் தொடர்ச்சி. அறிவார்ந்த தொடர்ச்சி என்பது நாமே உருவாக்கிக்கொண்டது.

மனிதர்கள் அறிவார்ந்து யோசிக்க, சிந்தனைகளை ஏதேனும் வகையில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்து ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அதாவது புதிய கற்காலத்தில் அது தொடங்கியிருக்கலாம். அதில் இருந்தே வரலாறு என்பது தொடங்குகிறது என்று சொல்லலாம். அவர்கள் தங்கள் நினைவுகளை தங்கள் வாரிசுகளிடம் அளித்திருக்கலாம். ஓவியங்களாகவும் அடையாளங்களாகவும் பதிவுசெய்திருக்கலாம். அவ்வாறுதான் மனிதர்களுக்கு மட்டும் அறிவார்ந்த ஒரு தொடர்ச்சி உருவானது. அதையே பண்பாடு என்று சொல்கிறோம். பண்பாட்டின் நினைவுகளையே வரலாறு என்கிறோம்.

ஏன் அது தேவைப்பட்டது? நாம் கூடி வாழ ஆரம்பித்தோம். அதற்கு நமக்கு பொது அடையாளங்கள் தேவைப்பட்டன. குடும்பம், வம்சம், இனக்குழு, கிராமம் போன்ற அடையாளங்கள். அந்த அடையாளங்களை நிலைநிறுத்தவேண்டும் என்றால் அதற்கு வரலாறு தேவை. இங்கேதான் நாம் நீண்டகாலமாக வாழ்கிறோம், இவர்களெல்லாம் நம் ஆட்கள், நாம் இப்படியெல்லாம் வாழ்கிறோம் என நாமே வரையறுக்கவேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான் ‘நாம்’ என்னும் அடையாளம் உருவாகிறது. அதற்காகவே வரலாறு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொன்மையான வரலாறு என்பது ‘பிறப்புத்தொடர்ச்சி வரலாறு’ அல்லது ‘வம்ச வரலாறு’ (Genealogical history) மட்டும்தான். அதுவே வளர்ந்து நாடுகளின் வரலாறு ஆக மாறியது. அரசர்களின் வரலாறுகளாக ஆகியது. நூறாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட வரலாறு என்பதே ஆட்சியாளர்களின் வரலாறுதான். மதவரலாறு அதன்பின் உருவானது. அதன் பின்னர்தான் மக்களின் வரலாறு, பண்பாடுகளின் வரலாறுகள் எழுதப்பட்டன. பொருளியல் வரலாறு, கலைவரலாறு, சிந்தனை வரலாறு, இலக்கிய வரலாறு என வெவ்வேறுவகை வரலாறுகள் அதன்பின் உருவாகி வந்தன. இன்று பொருட்களின் வரலாறு, தொழில்நுட்பத்தின் வரலாறு என்றெல்லாம் நுண்வரலாறுகள் உருவாகியுள்ளன.

வரலாற்றை உருவாக்கும் பார்வைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. முதலில் வரலாறு குடும்ப, இனக்குழு, அடையாளங்களை வரையறை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் வட்டார அடையாளம், இன அடையாளம், மொழி அடையாளம் ஆகியவற்றை வரையறை செய்யும்பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் தேசம், அரசு ஆகியவற்றை கட்டமைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இன்றைய வரலாறு மானுடம் என்னும் உலகளாவிய பொதுத்தன்மையை உருவாக்கும் பொருட்டே எழுதப்படுகிறது.

இன்று எழுதப்படும் சிறந்த வரலாறு என்பது மானுடகுலத்தின் வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பையும் முன்வைப்பதாகவே இருக்கமுடியும். மானுடகுலத்தின் கலை, இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற ஒவ்வொன்றும் எப்படி வளர்ந்து வந்துள்ளது என்று ஆராய்ந்து நிறுவுவதாகவே அது அமையமுடியும்.

இன்றைய வரலாறு இரண்டு. தொகைவரலாறு (Macro History) நுண் வரலாறு (Micro History). நுண்வரலாறு என்பது வரலாற்றின் ஒரு சிறிய அலகை பற்றி மட்டும் எழுதுவது. உதாரணமாக, ஒரு சிற்றூரின் வரலாற்றை எழுதுவது, அல்லது கலப்பை போன்ற ஒரு பொருளின் வரலாற்றை எழுதுவது நுண்வரலாறு. தொகை வரலாறு என்பது உலகளாவ மானுடகுலத்தின் வரலாற்றை எழுதுவது. நுண்வரலாறுகளை தொகுத்து ஒட்டுமொத்தமாக எழுதுவது.

ஒரு நுண்வரலாறு தொகைவரலாற்றில் சரியாக சென்று அமையவேண்டும். தர்க்கபூர்வமாகச் சரியாக இருக்கவேண்டும். தொகைவரலாறு என்பது எல்லா நுண்வரலாறுகளையும் கருத்தில்கொண்டிருக்கவேண்டும்.

ஆகவே வரலாறு என்பது ‘எழுதிவைக்கப்பட்ட ஒன்று’ அல்ல. எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. அதை எப்படி எழுதுகிறார்கள் என்பதையே ஒரு வாசகன் கவனிக்கவேண்டும். எந்த நோக்கத்துடனும் எழுதப்படுவது வரலாறு அல்ல. அது மதப்பெருமைக்கோ, தேசியப்பெருமைக்கோ, பண்பாட்டுப்பெருமைக்கோ எழுதப்படுவது அல்ல. வரலாறு வரலாறாகவே நிலைகொள்வது. அதன் தரவுகள் புறவயமானவையா, அதன் முறைமை சர்வதேசத்தன்மைகொண்டதா என்பதையே அவன் கருத்தில்கொள்ளவேண்டும். வரலாறு என்பது விவாதங்களால் நிலைநிறுத்தப்படுவது. ஆகவே தன்முனைப்போ, மிகையுணர்ச்சியோ இல்லாமல் நிதானமாக விவாதிப்பவர் மட்டுமே வரலாற்றாசிரியர் என கொள்ளத்தக்கவர். வசைகளின் மொழியில் பேசுபவர் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதி மட்டுமே.

வரலாறு எந்நிலையிலும் விவாதமாகவே நீடிக்கும். அந்த விவாதத்தில் நாம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே வரலாற்று வாசகனின் நிலை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:35

செ.து.சஞ்சீவி

கவிஞர்களும் கலைஞர்களும் எந்த அக்கறையுமின்றி புறக்கணிக்கப்படும் தமிழ்ச்சூழலில் அரிதாக ஒரு கவிஞனின் ஆளுமையால் கவரப்பட்டு தன் வாழ்க்கையையே அக்கவிஞனுக்காக அளித்தவர்களும் இருக்கிறார்கள். கம்பதாசனின் கவிதைகளை பதிப்பித்த சிலோன் விஜயேந்திரன் அப்படிப்பட்ட ஒருவர். மறைந்த தமிழ் ஒளியின் கவிதைகளை பதிப்பிப்பதற்காகவே வாழ்ந்த செ.து. சஞ்சீவி இன்னொருவர்.

செ.து.சஞ்சீவி செ.து.சஞ்சீவி செ.து.சஞ்சீவி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:33

தமிழ்விக்கி- தூரன் விழா, நிறைவின் களைப்புடன் சில படங்கள்

இன்று தமிழ்விக்கி தூரன் விருது விழா நிறைவு. 15 காலை நான் ஈரோட்டில் வந்து இறங்கியபோது தொடங்கிய விழா மனநிலை இன்று விருதுவிழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுச்சென்றபின் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் படுக்கையறைக்கு வந்தபோது களைப்புடன் நிறைவுக்கு வந்தது. உண்மையில் விருதளிப்பு நிகழ்வின்போதே களைத்திருந்தேன். இந்த முறை சென்ற ஆண்டைவிட வருகையாளர் மிகுதி. ஆகவே ஊக்கமும், பேச்சும் மிகுதி. தீவிரம் களைப்பையும் கொண்டுவந்துவிடுகிறது.

இன்று எதையும் எழுத முடியவில்லை. நாளையும் இங்கேதான் இருக்கவிருக்கிறேன். ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டலில் நிகழும் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய- சிந்தனைப் பயிற்சி வகுப்புகளின் நிறைவுக்கான உரை மற்றும் சான்றிதழ் வழங்குதல். நாளை ஏதேனும் எழுத முடியுமென நினைக்கிறேன். மோகன் தனிஷ்க் எடுத்த ‘நல்ல’ புகைப்படங்களுடன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:31

வேதாந்தம் என்னும் மழை

இந்து மதத்தின் உள்முரண்பாடுகள் அல்லது உள் விவாதங்கள் உருவாக்கும் நுட்பமான தத்துவ மாறுபாடுகளை வேதாந்தம் எனும் ஒற்றைத் தரிசனத்தை முன்வைப்பதனூடாக நான் மறுதலித்து விடுகிறேன் என்ற ஒரு குற்றச்சாட்டு ஒவ்வொரு முறை வேதாந்தத்தைப் பற்றி நான் சொல்லும்போதும் உருவாகி வருவதுண்டு. தொடர்ந்து அது குறித்த விளக்கங்களை அளித்து வருகிறேன்.

வேதாந்தம் என்னும் மழை

If you are using AI to learn and improve your GK and linguistic skills, it is actually helpful. There are effective training methods to teach our students to use AI for education.

AI and education.

https://www.manasapublications.com/manasalitprize

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.