Jeyamohan's Blog, page 49
August 20, 2025
அஞ்சலி: திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்- மு. இளங்கோவன்
வணக்கம் ஜெ.
நேற்று(19.08.2025), திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தவத்திரு “கயிலை மாமுனிவர்” முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் பரிபூரணம் அடைந்தார்கள்.
நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது(1987-1992) மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்களின் திருக்கையால் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். பெரும்பான்மையான பரிசுகளை முதலாண்டில் நான் வாங்கியதால் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் விழாக்களில் மொத்தமாக அறிவிக்கச்செய்து, அனைத்துப் பரிசுகளையும் ஒரே தவணையில் எனக்குக் கொடுத்து, மகிழ்ச்சியடைவார்கள்.
நான் எழுதிய மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலினை அவர்களுக்கு அந்நாளில் படையல் செய்தேன்(1990). அவர்களின் திருக்கை வழக்கமாக ஐந்நூறு ரூபாய் பரிசாக வழங்குமாறு அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
படிப்பு முடிந்து, பணிக்குச் சென்ற பிறகும் திருப்பனந்தாள் செல்லும்பொழுது அவர்களைக் கண்டு வணங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அவர்களின் அருளாட்சிக்காலத்தில் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அவற்றின் தொகை மிகுதியாக இருக்கும்.
எம் அருகமைந்த ஊர்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொடையாக வழங்குவதுடன், அக் குடமுழுக்கு விழாக்களைத் தலைமையேற்று நடத்துவதில் ஆர்வம் காட்டியவர்கள். சைவ சமய நூல்களைக் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பதற்கு வழிகண்டவர்கள். சமய மாநாடுகளுக்குப் பெரும்பொருள் நல்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள். காசிக்குச் செல்லும் அன்பர்கள் காசித்திருமடத்தில் தங்கி, வழிபாடு செய்வதற்கு உதவுவார்கள். யாரும் எளிதில் அணுகி வணங்கி மகிழலாம்.
தவத்திரு கயிலை மாமுனிவர் அவர்களின் உரையை ஒருமுறை ஆவணப்படுத்தி வைத்திருந்தேன். காசித்திருமடம் குறித்தும், அதன் ஆதிமுதல்வர் குமரகுருபர சுவாமிகள் குறித்தும் எங்கள் அடிகளார் எடுத்துரைக்கும் உரையைத் தாங்கள் கேட்டு மகிழ்வதுடன் தங்கள் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
ஈரோட்டின் இசைப்பொழிவு
தமிழ்விக்கி –தூரன் விருது விழா இன்று ஓர் இசைநிகழ்வாகவும் அறியப்படுகிறது. தமிழுக்குரிய இசைக்கருவியான நாதஸ்வரத்தில் பெரியசாமித்தூரனின் கீர்த்தனைகளை வாசிக்க தமிழகத்தின் முதன்மையான இசைக்கலைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். இசைக்கலைஞர்களைத் தேர்வுசெய்வதிலும் இசையறிந்தவர்களின் குழு ஒன்று யோகேஸ்வரன் ராமநாதனின் வழிகாட்டுதலில் செயல்படுகிறது.
இந்த ஆண்டு இசைக்கப்பட்ட பாடல்களின் பதிவுகள் இவை. இப்பாடல்களை வாய்ப்பாட்டாகக் கேட்கவிரும்பும் நண்பர்களுக்காக அவையும் அளிக்கப்பட்டுள்ளன. இவை நாதஸ்வர இசையை ரசிப்பதற்கு பொதுவான ரசிகர்களுக்கு உதவலாம். நாதஸ்வரத்தை ரசிக்க நாம் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். அது இந்திய தத்துவம், இந்திய ஆலயக்கலை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகச் சொல்லத்தக்கது.
இந்த நீண்ட பதிவில் 16 ஆகஸ்ட் 2025 அன்று நிகழ்ந்த இசைநிகழ்வின் காணொலிப் பதிவு தனித்தனிப் பாடலாகவே உள்ளது. இப்பாடல்களை வேறு கலைஞர்கள் வாய்ப்பாட்டாகப் பாடிய காணொலிகள் உள்ளன. அதன்பின் இறுதி இணைப்பாக சென்ற ஆண்டுகளில் தமிழ்விக்கி- பெரியசாமித் தூரன் விருதுவிழாவில் நிகழ்ந்த இசைநிகழ்வுகளின் காணொலிப் பதிவுகளின் இணைப்புகள் உள்ளன. நண்பர்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.
ஜெ
———————————————————————————————
2025 ஆண்டு இசை நிகழ்வின் ஸ்ருதி டிவி பதிவுகள்
———————————————————————————————
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
https://www.youtube.com/watch?v=ezvsxvqQLLE
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=5mWZGTt2Zm0
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=lUWlcb73wu8
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
https://www.youtube.com/watch?v=SzJdCm5mjf0
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=Sw60PviuVRY
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
https://www.youtube.com/watch?v=vFLwp8EigQQ
6.a) : பீத்தோவனப்பிரியா
பீத்தோவனின் ”ஃபர் எலிஸ்” பகுதி இசையை கர்நாடக சங்கீத ராக-தாள கட்டமைப்புக்குள் கலப்பிசையாக மாற்றம் செய்து , அந்த ராகத்துக்கு “பீத்தோவனப்பிரியா” என்று பெயர் சூட்டி, ரூபக தாளத்தில் கீர்த்தனையாக வாசித்தல்
https://youtu.be/FrVMEcsBUE0
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
https://www.youtube.com/watch?v=79djCe45iNc
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=1891m0CaxEk
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
https://www.youtube.com/watch?v=_Yz9vqqy0v8
******************************************************************
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
[Appa Unai Maravene]
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]







Preview YouTube video காவடிசிந்து : தெய்வ குழந்தை | பெரியசாமி தூரன் பாடல்
நாதஸ்வரம் – தவில் இசை |



Preview YouTube video MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran

Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari

Preview YouTube video TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran

Preview YouTube video Appa Unai Maravene

Preview YouTube video Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran




————————————————————————————-
2025 – பாடல் பட்டியல் : தமிழுடன் இசை | எழுத்தாளர் ஜெயமோகன்
2024 – பாடல் பட்டியல் : தூரன் விருது- இசை நிகழ்வு
2023 – பாடல் பட்டியல் : தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசை நிகழ்வு
————————————————————————————-
2025 – இசைக் கலைஞர்கள் அறிமுகம் : தமிழுடன் இசை | எழுத்தாளர் ஜெயமோகன்
2024 – இசைக் கலைஞர்கள் அறிமுகம்: தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
2023 – இசைக் கலைஞர்கள் அறிமுகம்: தூரன் விருது- இசை நிகழ்வு | எழுத்தாளர் ஜெயமோகன்
————————————————————————————-
2024 – இசை நிகழ்வின் ஒளிப்பதிவு : https://youtu.be/cJf4wCbMr7Y?si=uJoFFoSVM4Q71d_D
2023 – இசை நிகழ்வின் ஒளிப்பதிவு : தமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை
————————————————————————————-
த. நா. சேனாபதி
தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
த. நா. சேனாபதி – தமிழ் விக்கி
நெகிழ்வும் மகிழ்வும்- கடிதங்கள்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களது சிறுகதை தொகுப்பில் இருந்த ‘ஆமை‘ என்ற சிறுகதையை படித்தேன். பனை எப்படி ஒரு உயிரை, குடும்பத்து வாழ்வை காத்தது என்பதை அக்கால சமூக, வரலாற்று பின்னணியில் எழுதி இருந்தது வியப்பு.
கொரம்பைக்கான நன்றியை அனக்கன் நினைவுகூர்ந்து சொல்வதாக கதை நகர்கிறது.அன்றைய சமூக பிரச்னைகளிலும் பனை பங்காற்றியுள்ளது. அனக்கன், பனையை அழியாமல் காப்பவர்களுக்கு நன்கொடை தருவதை அன்றைக்கான நினைவுகூரல் என கொள்ளலாம். பனை மரத்தோடு பிரித்துப் பார்க்க முடியாத வாழ்வை கொரம்பையில் குடும்பம் உருவாக்கிக் கொள்கிறது. சாதி மேலாதிக்க சூழலில் வறியவர்கள் பலரும் அப்படியான வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, அனக்கன் பனையை ஓரிடத்தில் அனைத்தும் கொடுக்கும் அம்மா என்கிறார்.இக்கதை கூறப்படும்போது, நன்கொடை ஆட்களோடு குடும்ப பார்வையாளர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் அனக்கனின் மகன், அடுத்து அவரது பேத்தி. அவர்களது முன்னோரின் உயிர், மானம் காத்த பனை பற்றிய கதை இருவரது மனதையும் பாதிக்கிறது. கதை நிறைவடையும்போது பேத்தி கண்ணீரோடு அமர்ந்திருப்பார். அவரளவு இல்லை. ஆனால், உணர்வுரீதியாக மனதில் பாரமான ஒன்றை உணர முடிந்தது.
நன்றி!
அரசு கார்த்திக்
அன்புள்ள ஜெ
ஆனையில்லா தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒருவாரத்தில் தொடர்ச்சியாக வாசித்தேன். அபாரமான வாசிப்பனுபவம். சிரிப்பும் கொண்டாட்டமும் நெகிழ்வுமான கதைகள். நினைவுகளாலான உலகம் என்றும் தோன்றியது. இல்லை இன்றும் வாழும் ஓர் உலகம் என்றும் தோன்றியது. அந்த குரங்குகள், யானைகள், நாய்கள்… மனிதர்களுடன் பிணைந்த உலகம்.
நன்றி
ராஜ் கண்ணன்
கவிதைகள் இதழ், ஆகஸ்ட்.
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சுகுமாரன் 50 விழாவில் கவிஞர் இசை ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் ‘சுகுமாரனின் பிந்தைய கவிதைகள்’ இடம்பெற்றுள்ளது. கவிஞர் ஆனந்த்குமாரின் சமீபத்திய தொகுப்பான ‘பிளம்கேக்’ பற்றி மதார் எழுதியுள்ளார். சபரிநாதனின் ‘து.ஆ’ தொகுப்பு குறித்து சொர்ணவேல் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு’ என்ற கட்டுரையும், ச.துரையின் சில சமீபத்திய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
கவிதைகள் இதழ்What makes Vedanta challenging to learn?
What makes Vedanta challenging to learn? It’s not hard to learn, but we think it is because the general discourse is in a language with many Vedantic technical terms.
What makes Vedanta challenging to learn?
இந்திய தத்துவம் பற்றிய அறிமுகம் கொண்ட எவருக்கும் தெரியும் ஒன்று உண்டு, இந்திய தத்துவம் உலகியல் சார்ந்தது அல்ல. அது பிரபஞ்சம் பிரம்மம் பற்றித்தான் அடிப்படையாகப் பேசுகிறது.
இந்திய தத்துவத்தை ஏன் கற்கவேண்டும்?இணையச்சந்திப்பு- ம.நவீன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். இந்தக் காலாண்டிற்கான க.நா.சு உரையாடல் அரங்கிற்கு, எழுத்தாளர் ம. நவீன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாடத் தயாராகியுள்ளோம். மலேசியாவில் வாழும் படைப்பாளியாக மலேசியா நவீன், பேய்ச்சியின் கர்த்தாவாக பேய்ச்சி நவீன், வல்லினம் இதழ் ஆசிரியராக மதிக்கப்படும் இதழியலாளர், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆதலின், வாசகர்கள் ஒருவரை அழைத்துப் பலரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை கேட்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிடுவதில்லை என காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025, மாலை 7:00 மணி IST / காலை 8:30 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
7:00 PM IST / 8:30 AM CST : வாழ்த்துப்பா
7:05 PM IST / 8:35 AM CST :அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
7:10 PM IST / 8:40 AM CST :சிகண்டி நாவலை முன்வைத்து சிறப்பு உரை – மலர்விழி மணியம் 7:20 PM IST/ 8:50 AM CST :சிறுகதைகளை முன்வைத்து சிறப்பு உரை – ஜெகதீஸ் குமார்
7:30 PM IST / 9:00 AM CST : கேள்வி பதில் நேரம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com / contact@vishnupuramusa.org
August 19, 2025
தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி)
ஆகஸ்ட் 16 காலை ஆறுமணிக்கு எழுந்து நண்பர்களுடன் டீ குடிக்க நடந்து சென்றேன். மண்டபத்திலேயே டீ இருந்தது, ஆனால் டீயை நடந்து சென்று குடித்து பழகிவிட்டிருக்கிறேன். பேசிக்கொண்டே வந்து சிறிது நேரம் விவாதம் நீண்டபோது காலைச்சாப்பாடு வந்துவிட்டது. குளித்துவிட்டு வந்தேன்.
மொத்தம் நான்கு தங்குமிடங்கள். ராஜ்மகால் மண்டபம், இன்னொரு திருமணமண்டபம், இரண்டு ஈரோட்டு தங்கும் விடுதிகள். நான் எப்போதும் ராஜ்மகாலில்தான் தங்குவது வழக்கம். மண்டபத்தில் இருந்து பங்கேற்பாளர்கள் வர ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே மண்டபம் முழக்கமிடத்தொடங்கியது.
ஒன்பதரை மணிக்கு முதல் அமர்வு. மூத்த தொல்லியலாளர் வசந்த் ஷிண்டேகலந்துகொண்ட அரங்கை நீலி இணைய இதழ் ஆசிரியை ரம்யா ஒருங்கிணைத்தார். ஷிண்டேயை தேவதேவன் கௌரவித்தார். ஹிண்டேஇருபது நிமிட உரைக்குப்பின் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஷிண்டே தன் உரையில் எப்படி இந்தியா முழுக்க தொல்லியல் தடங்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு விரிந்துள்ளன என விவரித்தார். வரலாற்றில் பொற்காலமோ இருண்டகாலமோ இல்லை என்னும் வெ.வேதாசலத்தின் கூற்றை ஆதரித்து இந்து மறுமலர்ச்சி நிகழ்ந்தமையால் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் குப்தர்காலகட்டம் எப்படி வேறொரு கோணத்தில் பின்தங்கியதாகவும் இருந்தது என்றார். இலக்கியப்பதிவுகளின்படியே அவ்வாறு ஊகிக்கப்படுகிறது, அவை அரச சபை புலவர்களின் பதிவுகள். மக்களின் வாழ்க்கை, வணிகம் ஆகியவற்றின் கோணத்தில் வேறொரு சித்திரம் வரக்கூடும் என்றார்.
ஆறுமுக சீதாராமன் அரங்குவரலாற்றுக்கு முந்தைய நகரநாகரீகம் ஹரப்பாவில் கண்டடையப்பட்டமையால் அது சிந்துவெளி நாகரீகம் என அழைக்கப்பட்டது. இன்று கட்ச் பகுதியிலும், பிகார் வரைக்கும்கூட அந்நாகரீகத்தின் தடங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஷிண்டே சொன்னார். அவருடைய ஆய்வேடுகளில் இருந்தும்கூட விரிவான வினாக்கள் கேட்கப்பட்டன.
மூத்த ஆய்வாளரான சுப்பராயலு அரங்கை தாமரைக்கண்ணன் (குருகு பண்பாட்டு இணைய இதழ்) ஒருங்கிணைத்தார். சுப்ரபாரதி மணியன் அவரை கௌரவித்தார். சுப்பராயலு முதிய வயதில் அத்தனைதூரம் பயணம் செய்து வந்து அவருக்குக் கீழே பணியாற்றியவரான வேதாசலத்தை கௌரவித்தது நிறைவளிக்கும் செயல்.
தொல்லியலாய்வு நிகழும் விதம் பற்றியும், அதன் நெறிகள் பற்றியும் பேசினார். தொல்லியலாய்வுச் செய்திகள் முழுமையான அறிக்கையாக வந்தபின்னரே மக்களிடம் அளிக்கப்படவேண்டும், அதுவும் முறையான அறிக்கையாக. உடனுக்குடன் செய்திகளை அளிக்கத் தொடங்கினால் ஆய்வே தடம் மாறிவிடக்கூடும் என்றார். தமிழகத் தொல்லியலாய்வு குறித்து விரிவான சித்திரத்தை அளித்தார். சோழர் கால கோட்டம் கூற்றம் முதலியவை கிராமஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை நிலவுடைமையாளர்களின் கூட்டமைப்புகளே என்றார்.
ஒரு பொது வாசகனுக்கு இந்த தொல்லியலாளர்களின் ஒட்டுமொத்தமான அணுகுமுறை வியப்பும் கொஞ்சம் சோர்வும் ஊட்டுவதாக இருந்திருக்கக்கூடும்.வரலாறு சார்ந்து பொதுவாசகர்கள் கொண்டிருக்கும் எந்த பரபரப்பையும், கிளர்ச்சியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எளிய கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. பெருமிதங்களை மறுத்தார்கள். தரவுகள், அத்தரவுகளைச் சேகரிக்கும் முறைமை ஆகியவற்றை மட்டுமே வலியுறுத்தினார்கள். நீண்ட ஆய்வின் விளைவாக தாங்கள் வந்தடைந்த முடிவுக்கு மாறாக ஒரு கருத்து சுட்டிக்காட்டப்பட்டால் தங்கள் கருத்தை உணர்ச்சிகரமாகப் பாதுகாக்கவில்லை. அந்த கோணத்திலும் பார்க்கலாம், தரவுகள் தேவை என்றே பதில் சொன்னார்கள்.
மதிய உணவுக்குப்பின் இசை நிகழ்வு. மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நாதஸ்வர இசை. அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவா ஆகியோரின் தவில். அவையில் இருந்த ஓரிருவர் முன்னர் ஒரு நாதஸ்வர இசைநிகழ்வை கேட்டிருக்கக்கூடும். ஏனென்றால் இன்று தமிழகத்தில் சென்னையில் அதிகமானவர்கள் வராத ஒரு நிகழ்வைத் தவிர்த்தால் எங்குமே நாதஸ்வர இசைநிகழ்ச்சி நடைபெறுவதில்லை. கோயில்களில் நடைபெற்று வந்த இசைநிகழ்வுகள் வருகையாளர் இல்லாமல் நின்றுவிட்டன. நாதஸ்வரம் மங்கல இசையாக, ஒரு பின்னணி இசையாக மட்டுமே நிகழ்கிறது. அதை எவரும் அமர்ந்து கேட்பதில்லை.
ஆனால் இரண்டுமணிநேர இசைநிகழ்வில் அனைவரும் அசையாமல் இசையில் லயித்து அமர்ந்திருந்தார்கள். பலருக்கு அது வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் இசையனுபவத்தின் தொடக்கம் என தோன்றும். ஏனென்றால் நாதஸ்வரம் வெறும் இசை அல்ல. நம் தெய்வங்களுடன், நம் ஆலயங்களுடன், நம் மலைகளுடன், நம் ஆறுகளுடன் இணைந்தது அது. நம் மலைமுடிகள் ஒலியாகுமென்றால், நம் கோபுரங்கள் இசையாகுமென்றால் அதுதான் நாதஸ்வரம்.
மிகச்சிறந்த லயமும் சுதியுமாக அரங்கை நிறைத்தது நாதஸ்வர இசை. ஒருவகையில் அது காலமே அற்றது என்று தோன்றியது. அங்கே அமர்ந்திருக்கையில் இசை எங்கோ நிகழ்வதுபோலிருக்கவில்லை. இசை நம்மைச்சுற்றி சுழித்து அலைகொள்ள நாம் அதற்குள் இருப்பதாகத் தோன்றியது. நாதஸ்வரத்திற்கு மட்டுமே இந்தியாவில் அந்த அனுபவத்தை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அண்மையில் வியன்னாவில் ஒரு மாபெரும் தேவாலயத்தில் ஆர்கன் இசை பொங்கி பெருகி என்னை அள்ளிச்செல்வதுபோல உணர்ந்தேன் . அதுபோன்ற அனுபவம் இது.
இரட்டை நாதஸ்வரத்தை விழிமூடி அமர்ந்தே கேட்கவேண்டும். அவையிரண்டும் ஒரே வாத்திய இசையாக இணைந்து கேட்கும். அது அறுபடாத ஒரே நீட்சியாக, ஒரே சுழற்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பாடல் முழுக்க ஒரே மூச்சில், ஒரே ஒலியாக நிகழ்வதாகத் தோன்றும். இரு நாதஸ்வரக் கலைஞர்கள் நடுவே ஒத்திசைவு இருக்கவேண்டும். மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நடுவே அத்தகைய மிகச்சிறந்த ஒத்திசைவு இருந்தது.
தூரனின் அமரத்துவம் வாய்ந்த வரிகள். ‘தொட்டுத் தொட்டு பேசவரான் கண்ணன்’ என்னும் வரிகளைக் கேட்டுவிட்டு வந்தவர்களுக்கு நாதஸ்வரம் அதன் தேவர்களுக்குரிய குரலில் அச்சொற்களைப் பேசுவதைக் கேட்கும் அனுபவம் அமைந்திருக்கும். அந்தக் கொஞ்சலை கேட்கும் பரவசம் அமைந்திருக்கும். மானுடமொழியிலமைந்த வரிகள், மானுடமல்லாத ஏதோ ஒரு குரலால் அவை பாடப்பட்டன.
பின்னர் பேசிக்கொண்டிருந்தோம். நான் சொன்னேன். மிகச்சிறந்த கற்பனை கொண்ட கலைஞர்கள் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் இருவரும். உருவாகி வரும் மேதைகள் என்றே சொல்லலாம்.. நாதஸ்வரம் அவர்கள் கையில் இருப்பது தெரியாமல் இருந்தது. அவர்களும் நாதஸ்வரமும் இரண்டாகவே இல்லை. அவர்களின் அகம்சென்ற இடங்களுக்கு இசை சென்றது. ‘நல்ல கலைஞன், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பானவர் அல்ல’ என்று ஒரு கூற்றே இல்லை. குளிரும் தீ போல அது இல்லாத ஒரு சாத்தியம்.
தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தே கலைஞன் தொடங்குகிறான். மயிலை எம்.கார்த்திகேயன் நாதஸ்வரத்தை கையாளும் விதத்தில் இருந்த தேர்ச்சி பெரும்தாகத்துடன் தன் கலைச்சாதனத்தைக் கண்டுகொண்ட கலைஞனுக்குரியது. நாதஸ்வரத்தில் மிக எளிதாக அபஸ்வரத்துளிகள் வரும். மூச்சுக்காக சம்பந்தமே இல்லாத இடத்தில் ஸ்வரம் துண்டுபோடப்படும். அந்த ஒரு குறைகூட இல்லாத முழுமையான ரீங்காரமாக இருந்தது அவர்களின் இசை. மலை ஒன்று வண்டாகி சுழன்றுபறப்பதன் ரீங்காரம் போல.
பீத்தோவனின் சிம்பனி ஒன்றின் தொடக்கத்தை வாசித்தார்கள். அதன்பின் அதை ஒரு கர்நாடக சங்கீத ராகமாக ஆக்கி விரித்து வாசித்துக் காட்டினார்கள். நாதஸ்வரத்தில் மேலையிசையின் நீண்ட நோட்டுகளைக் கேட்பது இனிய அனுபவமாக இருந்தது. சர்ச் ஆர்கனை நினைவூட்டவும் செய்தது. இசைக்கலைஞர்களை மீனாக்ஷி ரவீந்திரன், பத்மாவதி, அருண்மொழி நங்கை ஆகியோர் கௌரவித்தனர்.
மாலை ஆறரை மணிக்கு விருதளிப்பு நிகழ்வு. எங்கள் விழாக்களில் விருது நிகழ்வு இறுதியாக அமைகையில் ஒரு நிறைவான சோர்வு உருவாவதுண்டு. கோவையில் விருதுநிகழ்வுக்காக மட்டும் வரும் புதிய கூட்டம் அந்தச் சோர்வை ஈடுசெய்யும். ஈரோட்டில் அத்தகைய கூட்டம் குறைவு. ஒன்றரைநாட்கள் நீண்ட விவாதங்களின் இறுதியாக மீண்டும் உரைகள்.
அரங்கில் காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சுரேஷ்குமார் வரைந்த வெ.வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. வேதாசலத்துக்கான பாராட்டுப் பத்திரத்தை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஈரோடு சார்பில் ஏ.எஸ்.கிருஷ்ணன் வாசித்து அளித்தார். வசந்த் ஷிண்டேயை ரா.செந்தில்குமார் கௌரவித்தார்.வேதாசலத்தை ஜா.ராஜகோபாலன் கௌரவித்தார்.சுப்பராயலுவை தேவதேவன் கௌரவித்தார்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் தொகுத்த வேதாசலத்தைப் பற்றிய வெ.வேதாசலம் மதிப்பீடுகள் வாசிப்புகள் என்னும் நூல் சுப்பராயலுவால் வெளியிடப்பட்டது. சொ. தர்மன் பெற்றுக்கொண்டார். வெ.வேதாசலத்தின் பேட்டி, அவரைப்பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் இது. தமிழ்விக்கியின் பங்களிப்புக்கான விருது அமெரிக்க வாசகரும் நண்பருமான ஜெயஶ்ரீக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் மதுசூதனன் சம்பத் விருதைப் பெற்றுக்கொண்டார். காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்ட நண்பர் பிரகாஷ் வரைந்த வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
நான் களைத்திருந்தேன். மேடையேறுவதற்கு சற்றுமுன்புதான் வரலாறுக்கும் இலக்கியத்துக்குமான உறவு, வரலாற்றின் வெவ்வேறு அடுக்குகள் என நண்பர்களுடன் தேநீர்க்கூட விவாதம். அங்கே பெருங்கூட்டம் ஆதலால் கத்தவேண்டியிருந்தது. குரல் தழைய தொடங்குகிறது என்று தெரிந்தாலும் நிறுத்த முடியவில்லை. ஆகவே மேடையில் என் குரல் உடைந்துவிட்டிருந்தது.
விருதுவிழாவுக்குப் பின் ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்லத் தொடங்கினார்கள். இந்நிகழ்வின் இயல்பான இறுதிப்பகுதி. ஒரு சிம்பனியின் முடிவுபோல. களைப்பும் வெறுமையும் நிறைவுமாக இரவுக்குள் சென்றுகொண்டே இருத்தல். நான் தூங்கும்போது இரவு ஒரு மணி கடந்துவிட்டிருந்தது.
மறுநாள் ஈரோட்டிலேயே இருந்தேன். இன்னொரு சிறு நிகழ்வு. கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கான நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கினேன். அதன்பின் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக அறிதல் பற்றி ஒரு வகுப்பை நடத்தினேன்.
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் ஒரு சடங்கு, பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும். நண்பர் பிரபுதான் இந்த விழாவுக்கான உழைப்பில் பெரும்பகுதியைச் செய்வது வழக்கம். அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினேன். ஈஸ்வர மூர்த்தி பனம்பழம் கொண்டுவந்திருந்தார். அவற்றை சுட்டு நண்பர்களுடன் சாப்பிட்டோம். தென்னைப்பதநீர் ஒரு நண்பர் கொண்டுவந்திருந்தார். அதை குடித்தோம்.
இரவு ஒன்பது மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில். சிவசங்கரும் குடும்பமும் அந்த ரயிலில்தான் வந்தனர். யோகேஸ்வரன் வந்து ரயிலேற்றிவிட்டார். நான்குநாட்களின் களைப்பு. படுத்து கண்விழித்தால் நாகர்கோயிலில் ரயில் நின்றுகொண்டிருந்தது. மொத்த ரயிலிலும் என்னைத்தவிர எவருமில்லை.
(நிறைவு)
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்
கா. அப்பாத்துரை
கா.அப்பாத்துரை இதழியலாளர், பொதுஅறிவுச் செய்திகளை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர். இந்திய மொழியின் இலக்கியங்களை தொடக்ககாலத்திலேயே 0தமிழில் அறிமுகம் செய்தவர். திராவிட இயக்கத்தின் தொடக்க காலகட்டத்தில் அவ்வியக்கக் கருத்துக்களையும் வரலாற்றுப்பார்வையையும் பொது வாசகர்களுக்காக எழுதியவர். தமிழக வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக இதழியல் பாணியில் எழுதிய வரலாற்றெழுத்தாளர். அப்பாத்துரை எழுதிய ‘தென்னாட்டு போர்க்களங்கள்’ என்னும் நூல் வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக தொகுத்து எழுதிய நூல் என்னும் வகையில் குறிப்பிடத்தக்கது.
கா. அப்பாத்துரை – தமிழ் விக்கி
கட்சியடிமைகள், கடிதம்
அன்புள்ள ஜெ,
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை படித்தேன். வசந்திதேவி பற்றிய அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை, (மகனிடமே பாலியல் உறவுக்கு முயன்றார் என்றுகூட) அவர் மகனே சொன்னபோது இணையமே வெடிக்கும் என நினைத்தேன். ஒன்றுமே நிகழவில்லை. அப்படியே அமுக்கிவிட்டார்கள். இந்த யோக்கியர்கள் எவரையெல்லாம் எப்படியெல்லாம் வறுத்து எடுத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். உ.ரா.வரதராஜன் அவருடைய மகள் போல ஒரு பெண்ணுக்கு படிப்புக்கு உதவிசெய்ததை கட்சிக்குள் கொச்சையாக்கி, அவரை விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். அவர் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுக்கு அறம் என ஒன்றும் இல்லை. வெறும் அடிமைகள். இவர்களின் ஆயுதம் குரூரமான வம்புகள்தான். ஆனால் அந்த வெறியை தலைமை சுட்டிக்காட்டும் எதிரிகள்மேல்தான் ஏவுவார்கள்.
ஆ. முருகேசன்
அன்புள்ள ஜெமோ
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை வாசித்தேன். திமுக ஜெயித்த சென்ற தேர்தலின்போது தமிழ் எழுத்தாளர்கள் பலர் திமுகக்காரர்களை விட திமுகவாகச் செயல்பட்டார்கள். அவர்களில் பலருக்கு திமுக சில சில்லறைகளை வீசியது. கனவு இல்லம் போன்று சில ஏக்கங்கள் எல்லாருக்கும் இருந்தன. ஆகவே ஒரே ஜால்ரா சத்தம். அண்மையிலே கார்ல் மார்க்ஸ் கணபதி என்ற திமுக ஆதரவாளர் ஸ்டாலினை கொஞ்சம் விமர்சனம் செய்துவிட்டார். இணைய உபி ராணுவம் கிளம்பி அவரை அவதூறால் குளிப்பாட்டிவிட்டார்கள். நீங்கள் அடைந்த வசைகளெல்லாம் அதற்கு முன் ஒன்றுமே இல்லை. அதை உங்கள் நண்பர் இளங்கோவன் முத்தையாவும் (இவரும் திமுகதான) புலம்பி எழுதியிருந்தார். ஏற்கனவே உங்கள் நண்பர் சரவணக் கார்த்திகேயனும் திமுகவை ஆதரித்து அதன் பின் வசை வாங்கினார். கட்சி ஆதரவு என்பது கட்சி அடிமையாக மட்டும்தான் இருக்கமுடியும். அதை இன்றைக்காவது சிலர் உணர்ந்தால் சரி.
ஜெ.ஆர்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

நாதஸ்வரம் – தவில் இசை | Mangala Isai | Nadaswaram Thavil Live Concert 
நாதஸ்வரம் – தவில் இசை | Mangala Isai | Nadaswaram Thavil Live Concert 
