Jeyamohan's Blog, page 47

August 23, 2025

சி.எம்.ஆகூர்

சி.எம்.ஆகூர் எழுதிய ‘திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903-ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. நான்கு பகுதிகள் கொண்ட இப்பெரிய நூல் தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் கருதப்படுகிறது.

சி.எம்.ஆகூர் சி.எம்.ஆகூர் சி.எம்.ஆகூர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:32

தூரன் விழா- கடிதம்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

 

அன்பின் ஜெ,https://m.youtube.com/playlist?list=PLp0BjDE_P97gzJWXaoLfauD0vZqk-Dlto

திருப்பூரில்,அறம் அறக்கட்டளை விழாவில் சுதந்திரம் என்றால் என்ன? என்னும் தலைப்பினால் தாங்கள் ஆற்றிய உரை பத்து ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். நான் கேட்ட உரைகளில் மகத்தான ஒன்று. தற்போது நீங்கள் ஆற்றும் உரைகள் எல்லாம் உங்கள் தத்துவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்களுக்கும் தங்கள் கனவுகளை தொடர்பவர்களுக்குமானது. இதனை கேட்பவர்கள் ‘ஒன்னுமே புரியல‘ என்பர்கள். இவையெல்லாம் நீணட கனவுகளும் தொடர் வாசிப்பும் உள்ள்வர்களுக்கானது. இன்று விக்கிதூரன் விழாவில் அனைத்து நிகழ்வுகளும் அந்த உரையின் தரிசன தொடர்ச்சியாகவே காணமுடிகிறது. வெற்று பெருமிதத்தின் மேல் நிற்பவர்களுக்கு உண்மையான பெருமிதம் என்ன என்று முகத்தில் அறைந்தாற்ப்போல் முன்வைப்பது. இந்த உரை எளியஆனால் பல திறப்புகளை அளித்த மகத்தான உரை. எளிய புரிதல்களையும், ஆரம்ப கட்ட வாசகனுக்கு நம் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிய அதன் வாசல்களை திறந்துவிடும் திறவுகோல். தூரன் விருது விழா அமர்வுகள் எல்லாவற்றிற்குமான தொடக்கப்புள்ளி. இந்த உரையில் பேசப்பட்ட பாறை ஓவியங்கள், பெருங்கற்கால நாகரிகம், கரிக்கியூர் ஓவியங்கள், நீலி இன்றைய தூரன் விழாவின் அங்கங்களாகிவிட்டன. 

நான் இந்த உரையை வர்தா புயல் காலத்திலும், மழை வெள்ளம் புகுந்த காலத்திலும் அலுவகத்தில் தங்கி வேளை செய்தபோதுபலருக்கு காண்பித்து உரையாடியிருக்கிறேன்(அலுவலக கணிணியில்). கேட்ட அனைவரும் இந்த உரைக்கு எதிராக பேசியதில்லை. தூரன் விழாவில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் நமது வரலாற்றை, பண்பாட்டை அறிய உதவுகிறது. இவ்வுரையு ஒவ்வொரு பள்ளியிலும் இவ்வுரையை சுதந்திரதினத்தில் காண்பிக்க வேண்டும். இன்று எம்.கே. சானுவின் அஞ்சலி குறிப்பை வாசித்தேன். உங்கள் உரைகள் ஏன் அவ்வளவு செரிவானதாக இருக்கிறது என்று. ” மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன்“. நாங்கள் அனைவரும் நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள் அனைவரையும் உங்களில் காண்கிறோம்.

இப்போதெல்லாம் எல்லா விழாக்களிலும்கேரளாவின் சண்ட மேளம் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. கோவில் திருவிழாக்களிலெல்லாம் சண்ட மேளமும் தவிலும் சேர்ந்தே இசைக்கப்படுவது கடும் ஒவ்வாமையை அளிக்கிறது. நான் அங்கிருந்து ஓடிவிடுவேன். அதனை ராஜ மேளம் என்பார்கள்.  நீங்கள்தான் எழுத வேண்டும் எது சரியென்று. 

எனக்கு எப்போதும் நாதஸ்வர இசை மனது நெருக்கமானது. நான் பிறந்து வளர்ந்தது வால்பாறையில்.  ஊரில் பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் நிகழும். மாரியம்மனுக்கு உகந்ததென்று கரகாட்டம் நான்கு நாட்களும் நடக்கும்தவில், நாதஸ்வரம்இசைப்பவர்கள் உடன் இருப்பார்கள். ஆட்டம் நன்றாக இல்லாவிட்டாலும், நாதஸ்வரம் நன்றாக அமைந்தால் இசைக்கச் சொல்லி ரசிப்பார்கள். சுடலை அங்கு பிரதான தெய்வம். சக்தி வரவழைக்க தவில், நாதஸ்வரம் வேண்டும்.  குறிப்பாக ஒத்தையடி வேண்டும், சாமியே கேட்கும் ‘அடியப்பா‘ என்று. ஒருமுறை வந்த தவில் இசைக்கலைஞருக்கு ஒத்தையடி தெரியவில்லை. எங்களூர்காரர் கணபதி தவிலை வாங்கி அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் எவருமே முறையாக இசை பயின்றவர் அல்லர். 

இப்போதுதூரன் விழாவில் இசை பயின்ற கலைஞர்கள் வாசிக்கும் இசை நிகழ்வு அலாதியானது. முன்பே வாசிக்கப்படும் பாடல்களை பகிர்ந்து அவற்றை கேட்டுவிட்டு வரச்செய்து இசைப்பதென்பது இந்த நிகழ்வை முழுமையாக்குகிறது. கடந்த ஆண்டு அந்த சிறுவன் நாதஸ்வரத்தை வாசிக்கையில் அரங்கமே ஒருவித உணர்ச்சி நிலைக்கு சென்றது. குறிப்பாக எழுத்தாளர் சுசித்ரா இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்கே சென்றுவிடுபவர் போல அமரவே இல்லை ‘இசை கற்றவர்‘. .நீங்களும் சரண்யாவும் பின்னால் அமர்ந்து ஒவ்வொரு பாடலையும் விளக்கி ரசித்துக்கொண்டிருந்தீர்கள். நான் நமக்கு ஒன்னும் தெரியாது என நண்பரிடம் நொந்து கொண்டேன். நீங்கள் அருண்மொழி அக்காவிடம் இருந்து இசை ரசனையை கற்றுக்கொண்டீர்கள் என்று தளத்தில் வாசித்தது நினைவு(?). அதற்கான பயிற்சியையும் முழுமையறிவு (மரபிசைப் பயிற்சி) அளிக்கத் தொடங்கி இருப்பது என்போன்ற அரைகுறைகளுக்கு ஒரு நல்லவாய்ப்பு.  

உங்கள் தளத்தில் நாதஸ்வரம், தவில் குறித்த கட்டுரைகளை வாசிக்கும்போது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வீட்டு திருமணவிழாவில் நீங்கள் தவில் இசை குறித்து எழுதியிருந்தீர்கள்,அதற்கு எதிர்வினையாக திரு.கோலப்பன் அவர்கள் சொல்வனத்தில்எழுதியிருந்ததை வாசித்தேன் அபாரபான கட்டுரை. அதன் இறுதியில் ‘ கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் அடக்கும் வித்தைத் தெரிந்தவர்களை தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள் என்று எழுதியிருந்தார். அத்தகைய இசையை தூரன் விழாவில் கேட்க முடியும்

கடந்த ஆண்டு தூரன் விழா உரையில் இந்த விழாவிற்கு புதிய ஏழுத்தாளர்கள் பலர் வந்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள். இங்கே பெற்றுக்கொள்வதற்கு பெரிய மனத்தடை அவர்களுக்கு உள்ளது. மகத்தான கனவுகளை முன் வைத்து அவற்றில் வெற்றியும் காணும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இவர்களுக்கு பிரம்மிப்பை உண்டாக்குகிறது. அதன் பொருட்டே இதனை தவிர்க்கிறார்கள். பிரம்மாண்டங்களைக் காணும்போதெல்லாம் அவை இடிந்துவிழவேண்டும் என்று மனிதன் நினைக்கிறான் என்று தஷ்தாயெவெஷ்கி எழுதினார்.  கடந்த ஆண்டு விழா முடிந்தவுடன் கடிதம் எழுத நினைத்தேன், அப்போதே முடிவு செய்தேன், அடுத்த அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று. இந்த ஆண்டு மேலும் அதிகமான நண்பர்கள் வரவேண்டும். இந்த விழா சிறக்க வேண்டும். 

நான் ஒவ்வொரு விழாவிலும்(விஷ்ணுபுரம் கோவை, தூரன் ஈரோடு)  உங்கள் கைகளை மட்டுமே கவனித்துக்கொண்டிருப்பேன். சச்சினை விடவும் அதிகம் கடிக்கப்பட்ட நகங்களை கொண்ட(இந்த குறிப்பிற்காக மன்னிக்கவும்). அவை கெத்தேல் சாகிப்பின் கரடிக்கரங்கள் என பேருரு கொள்ளும். விருது வழங்கும்போது உங்கள் மெலிந்த கரங்களை தட்டிக்கொண்டு பெருமிதமாக நிற்பதை கண்டு கண்கள் கலங்க பார்த்திருக்கிறேன். நேற்று உளக்குவிப்பு தியான முகாம் சென்று திரும்பியிருக்கிறேன். பயணம் முழுவதும் நீங்கள் அளிப்பவை பற்றியே பேச்சு. இறுதியாக அந்தியூர் மணியிடம் கைகுலுக்கிவிட்டு, ஒரு பத்து நாள் தானே ஈரோட்டில் சந்திப்போம் என கூறி விடை பெற்றேன் கண்டிப்பாக என்றார்..

நன்றி

ராஜன்

திருப்பூர்

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:31

கம்பராமாயண இசை நிகழ்வு, பதிவு

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் கம்பராமாயண இசைக்கச்சேரி ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை சிறப்பாக நடந்தது. கம்பராமாயணம் என்றாலே சிறப்புதான் அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த 12 பாடல்கள் இந்த கச்சேரியில் பாடப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பழனி ஜோதி அவர்கள் தமிழ் மரபின் உண்மையான பெருமிதங்கள் எவை என எடுத்துக் கூறினார். மலையின் சிகரம் போல் நம் பண்பாட்டின் உச்சமாக கம்பராமாயணம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறி ரசிகர்களைக் கச்சேரியின் மனநிலைக்குள் கொண்டு வந்தார்.

“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்” என்ற கடவுள் வாழ்த்துப் பாடலோடு கச்சேரி துவங்கியது.

“வன்மையில்லை ஒர் வறுமை இன்மையால்” பாடலின் நடுவில் ஒர் இடத்தில் இசையை நிறுத்தி ப்ரியா கிருஷ் குரலை மட்டுமே கொண்டு அனைவரையும் இன்மைக்கு அருகில் கொண்டு சென்று மெய்மறக்க வைத்தார். “தோள் கண்டார் தோளே கண்டார்” பாடலில் ப்ரியா கிருஷ் அரங்கத்தைத் தன்வசப்படுத்தினார். அனைவருமே மிதிலை சென்று ராமனின் எழிலை ரசித்தோம். மொத்த அரங்கமுமே இந்த பாடலுக்குச் சரணடைந்தது.

“எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்று வழி” என்ற இந்த பாடலில் இத்தனை அழகு உள்ளதா என்று கேட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அத்தனை அழகையும் ப்ரியா கிருஷும் குழுவும் வெளிப்படுத்தினார்கள்.

கம்பன் உவமைகளை மழையெனப் பொழிந்த “கடலோ மழையோ முழு நீலக் கல்லோ” என்ற பாடலில் மிருதங்கமும் கஞ்சிராவும் இணைந்து இசை மழையாகவே பொழிந்தார்கள். மொத்த அரங்கையுமே தாளம் போட வைத்தார்கள்.

“குழைக்கின்ற கவரி இன்றி கொற்றவன்வெண் குடையும் இன்றி” என்ற இந்தப் பாடலில் காப்பியத் தலைவனான இராமனுக்குமே விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பதையும், கோசலையின் உணர்வுகளையும் மிக அருமையாக பழனி ஜோதி எடுத்துக் கூறினார்.

“வெடிக்கின்றன, திசையாவையும்“

“கடல் வற்றி, மலை உக்கன“

“புரிந்து ஓடின, பொரிந்து ஓடின“

“நீர் ஒத்தன, நெருப்பு ஒத்தன“

என்ற நான்கு பாடல்களின் மூலம் போர்க்களத்தை கண்முன்னே நிறுத்தி விட்டார்கள் நம் இசைக் குழுவினர். அரங்கத்தின் வெப்பநிலையே சற்று உயரம் அளவிற்கு இசையை அமைத்திருந்தார்கள்.

“போர் மகளை, கலைமகளை, புகழ்மகளை” என்ற இந்த பாடலின் இசையும், குரலும் மரணத்தைப் பற்றிய உணர்வுகளை விவரிக்கும் விதத்தில் இருந்தது. இராவணன் இறந்த காட்சியை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தது. அதன் வெளிப்பாடாக அரங்கத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விழிகளிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்“

என்ற அழகான பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கம்பனின் அற்புதமான பாடல் வரிகளாலும், ராலே ராஜனின் மிகச்சிறந்த இசையாலும், ப்ரியா கிருஷின் இனிமையான குரலாலும் கம்பராமாயண காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றார்கள். உமா மகேஷின் வயலின் நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சாய் சங்கர் கணேஷின் பியானோ வாசிப்போ உன்னதம். ராஜு பாலனின் மிருதங்கம் அற்புதம். ஸ்கந்த நாராயணனின் கஞ்சிரா சிறப்பு சேர்த்தது. பழனி ஜோதியின் மிக அருமையான விளக்கத்தால் என்னைப் போல் கர்நாடக இசைக்கு புதியவர்களாலும் ஆழமாக ரசிக்க முடிந்ததோடு தொடர்ந்து கச்சேரியோடு பயணிக்க முடிந்தது. கம்பனின் பாடலில் உள்ள கம்பீரத்தை ராலே ராஜன் தன் இசையால் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கம்பனின் வரிகளில் இருந்த மகிழ்ச்சி, சிறப்பு, இழப்பு, துக்கம், அழகியல், மேன்மை ஆகியவற்றை அதன் அர்த்தங்களோடு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.

உணர்வுபூர்வமான இசையால் பாடலின் வழியாக ரசிகர்களின் உணர்வுகளை இந்த இசைக்கச்சேரி தொட்டது. கால இடைவெளி கடந்து கம்பனின் காவியத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற அனுபவம் சுகமானது. குழந்தைகளாலும் முழு நேரமும் இசையை ரசிக்க முடிந்தது. கம்பனின் காவியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரின் இந்த மிகச் சிறப்பான நிகழ்வு எல்லைகளை தாண்டி தொடர்ந்து பயணிக்கட்டும்..

நன்றி!

ராதா பாலாஜி

டாலஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:31

சங்கரரும் சம்பவரும்

20 வருடங்களுக்கு முன்பு சிக்கிம் மடாலத்தில்  பத்ம சம்பவரின் சித்திரத்தை பார்த்ததுமே, காலில் விழத் தோன்றியது.  அவரின்  மதமோ சாதனைகளோ அறிவுரைகளை ஒன்றுமே தெரியாது.

சங்கரரும் சம்பவரும்

 

I was listening to your small speech on the importance of learning sculpture and literature at Bhakti Marga. I too had that doubt for a long time, whether learning makes us intellectual and thus diminishes our bhakti.

Bhakti and learning
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:30

August 22, 2025

நூலகம்- அறிவும் அதிகாரமும்

இந்தியர்களாகிய நமக்கு நம்மிடம் மிகப்பெரிய அறிவுச்சேகரிப்பு இருக்கிறது என்றும், வேறெங்கும் இதெல்லாம் இல்லை என்றும் ஒரு மிதப்பு உண்டு. நம்முடைய பெருமிதம் பெரும்பாலும் பொய்யாக உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்தின்போது நமக்கிருந்த தாழ்வுணர்ச்சியை போக்க கொஞ்சம் பெருக்கிச் சொன்னார்கள். அதை இன்றும் நம்பினால் நாம் அறிவிலிகளாக ஆவோம். உலகின் மிகப்பெரிய, மிகப்பழைய நூலகங்களில் ஒன்றின் முன் நிற்கையில் அந்த பணிவும், மானுடன் என்ற வகையில் பெருமிதமும் உருவாகியது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:36

விக்டோரியா அறியாதது…

போலந்தைச் சேர்ந்த ’விளாகர்’ (காட்சிப்பதிவர்?) ஆன விக்டோரியா என்பவர் இந்தியாவுக்கு ஒரு ‘சோலோ டிரிப்’ வந்துவிட்டு இன்ஸ்டாவில் தொடர் பதிவுகள் போட்டிருந்தார். அதை மலையாள கௌமுதி இதழ் எடுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தது. வெவ்வேறு படங்களுக்குக் கீழே விக்டோரியா சுருக்கமான குறிப்புகளை எழுதியிருந்தார்.

விக்டோரியாவுக்கு இந்தியாவிலுள்ள பேருந்து,ரயில் பயணங்கள் வசதியானவையாக தோன்றின. இந்தியாவில் இமைய மலையடிவாரங்களும் தெற்கே உள்ள பசுமைமாறாக் காடுகளும் பிடித்திருந்தன. உணவில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் ‘ஒருபோதும் இந்தியாவில் ஒரு தனிநபர் பயணத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தார்.

அவருடைய முதல் ஒவ்வாமை இங்கே ஆட்டோ, டாக்சி ஓட்டுபவர்கள் மற்றும் வழிகாட்டிகளின் நடத்தை. அவர்கள் மொய்த்துக்கொண்டார்கள், மிரட்டினார்கள், வசைபாடினார்கள். பெரும்பாலும் வழிப்பறி மனநிலையிலேயே இருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. பிச்சைக்காரர்களும் வசைபாடினார்கள். தனியாக வந்த பெண் என தெரிந்ததும் பாலியல் மீறலிலும் ஈடுபட்டார்கள்.

அதைவிட விக்டோரியாவை கசப்படையச் செய்தது, இங்குள்ள அசுத்தம். அத்தனை நீர்நிலைகளும் குப்பைமலைகளுடன், கெட்டுப்போய் நாற்றமடிக்கும் நீருடன் இருந்தன. மேலும் மேலும் குப்பைகளைக் கொண்டுசென்று நீர்நிலைகளில் கொட்டிக்கொண்டிருந்தார்கள். நடுச்சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. படித்தவர்கள் கூட குப்பைகளை கண்டபடி வீசினார்கள். சாக்கடைகள் அடைத்து சாலைகளிலெங்கும் அதன் நாற்றம். அதைப்பற்றி கவலையே படாமால் அதன்மேல் நடந்தார்கள்.

இந்தியா இரண்டு பகுதிகளாலானது என்று விக்டோரியா சொன்னார். உயர்குடிகள் வாழும் ஓர் உலகம் உண்டு. அங்கே அழுக்கும் சீரழிவும் ஏதுமில்லை. தூய்மையானது, ஆடம்பரமானது. இன்னொன்று குப்பைமலைகள் நடுவே அமைந்தது. முதல் உலகம் மிகச்செலவேறியது என்றார்.

அதைப்பற்றி விக்டோரியாவின் குறிப்புக்கு மக்கள் ஆற்றிய எதிர்வினை பற்றித்தான் எனக்கு அக்கறை. எதிர்வினைகள் இரண்டுவகை. ஒன்று அவரை வசைபாடுவது. இரண்டு அவருக்கு ஆலோசனை சொல்வது. வசைபாடுபவர்கள் அவர் ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை முன்வைக்கிறார் என்றனர். ஆலோசனை சொல்பவர்கள் ‘இந்தியப் பண்பாடு தொன்மையானது. ஐரோப்பியர் உடைகளை அணிய தொடங்கு முன்னரே வேதங்கள் எழுதப்பட்டுவிட்டன’ என்றனர். ‘இந்தியாவில் மாபெரும் கலைச்செல்வங்கள் உள்ளன. அவற்றைப் பாருங்கள்’ என்றனர். ‘இந்திய மக்கள் நல்லவர்கள், விருந்தோம்புபவர்கள்’ என்றனர். ‘இந்தியாவில் பாலியல் ஒழுக்கம் உண்டு. ஐரோப்பா போல அல்ல’ என்றனர். இப்படி பல.

நமக்கே உரிய இரண்டு தொழில்நுட்பங்களை விக்டோரியா புரிந்துகொள்ளவில்லை. அந்த எதிர்வினைகள் அந்த இரண்டு தொழில்நுட்பத்தின் சொல்வடிவங்கள் மட்டுமே. ஒன்று திரைத்தொழில்நுட்பம். இதை சுவர்த்தொழில்நுட்பம் என்றும் சொல்வார்கள். அதாவது சாக்கடை, குப்பை, அழுக்கு ஆகியவற்றை ஆள்வோர், விருந்தினர் கண்ணுக்குப் படாமல் திரையோ, சுவரோ கட்டி மறைப்பது. டெல்லியில் மோடிஜியும் இங்கே ஸ்டாலினப்பாவும் அதைச் செய்கிறார்கள் என நாமறிந்ததே.

இரண்டாவது தொழில்நுட்பம் செண்ட் தொழில்நுட்பம் என அறியப்பட்டாலும் நடைமுறையில் அது பிளீச்சிங் பவுடர் தொழில்நுட்பமே. அதன்படி மேற்படி இடங்களின் மேல் பிளீச்சிங் பவுடரை கொட்டுவது. பிளீச்சிங் பவுடராலேயே ஒரு கோடு வரைந்து அதற்கு அப்பால் ‘நாகரீகத்திற்குள்’ வராது என அறிவித்துவிடுவது. ஒரு விஐபி வருகிறார் என்றால் வழியெல்லாம் பிளீச்சிங் பௌடர் வட்டங்கள் இருக்கும். முன்பு கோடு போட்டனர்க். அது செலவேறியது என்று இப்போது கூடையில் பிளீச்சிங் பௌடரை போட்டு வைத்து வைத்து எடுக்கிறோம். அந்த பிளீச்சிங் பௌடரிலும் கலப்படம், பெரும்பகுதி சுண்ணாம்புத்தூள்தான். இதன் வழியாக நாம் நம் கலாச்சாரத்தையே பிளீச்சிங் செய்து வருகிறோம்.

போலந்துக்காரர்கள் இப்படி இந்தியாவுக்கு அடிக்கடி வருவது நல்லது அல்ல. பாருக்குள்ளே நல்ல நமது நாடுதான் உலகிலேயே திறந்தவெளிக் கழிப்பிடம் உடைய ஒரே நிலம். சால்மனெல்லாவின் சரணாலயம். போலந்துக்காரிகளின் கால்கள் வழியாக சால்மனெல்லா அங்கே சென்று குளிருக்கும் தாக்குப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் வம்பு. இதைத்தான் நம் மகாகவி  ’வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!’ என்று பாடியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:35

எஸ்.சுரேஷ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

எஸ்.சுரேஷ் எஸ்.சுரேஷ் எஸ்.சுரேஷ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:32

தமிழ்விக்கி- தூரன் விருது, கடிதங்கள்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

 

அன்புள்ள ஜெ,

வேதாசலம் அவர்கள் தன் உரையில் ஒரு விஷயம் போகிறபோக்கில் சொன்னார். இந்த விருதை ஏற்கக்கூடாது என்று அவரிடம் எவரோ சொன்னார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராம் ரமேஷை விஷ்ணுபுரம் விருதுக்கு அழைத்தபோதும் சிலர் தடுத்தார்கள் என்று அவரே மேடையில் சொன்னார். பூமணிக்கு விருது வழங்கியபோது அதை ஏற்கவேண்டாம் என்று அவரிடம் சொன்னார்கள் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள்.

தமிழ்விக்கிக்கு வந்த இடையூறுகளையும், அதைக் கடந்து அது நிலைகொண்டதையும் பற்றி எழுதியிருந்தீர்கள்.தமிழ்விக்கியின் பணிகள், விஷ்ணுபுரம் அமைப்பின் பணிகள் மிக வெளிப்படையாக உள்ளன. இந்த பெரும்பணிகளை இன்று வேறு எவருமே செய்வதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் ஏன் இதை தடுக்கவேண்டும் என நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. மிகுந்த பெருந்தன்மையுடன் தடுப்பவர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். 

இன்றைக்கும் இணையத்தில் கசப்புகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுடன் இணைந்து செயல்படும் அனைவரையும் அடிமைகள், அறிவிலாத கூட்டம் என்றெல்லாம் இழிவுசெய்கிறார்கள். அதன்வழியாக அவர்கள் உங்களிடமிருந்து விலகிச்சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத் திட்டமிட்டு அந்தவகையான ஏளனத்தைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இந்த வகையான வசைகளைக் கொட்டும்கும்பலை பார்த்தால் இவர்களெல்லாம் யார் என்ற திகைப்பு உருவாகிறது. ஒரு நல்ல படைப்பை எழுதியவர்கூட அக்கும்பலில் இல்லை. வெறும் வீணர்கூட்டம். ஆனால் இந்த வீணர்கூட்டத்தை எதிர்த்து, கடந்துதான் இங்கே எல்லா நல்ல செயல்களும் நடைபெற்றுள்ளன என்றும் நினைக்கிறேன். 

சாந்தகுமார் ஜி

அன்புள்ள ஜெ,

சென்ற சில ஆண்டுகளாக தமிழ்விக்கி, தூரன் விருது, விஷ்ணுபுரம் விருது ஆகியவை பற்றி இருந்து வந்த எரிச்சல்கள் அடங்கிவிட்டன என்று தெரிகிறது. யாராவது சிலர் எதையாவது சொல்லி பொருமிக்கொண்டே இருப்பதுதான் வழக்கம். இப்போது என் பார்வைக்கு ஒன்றும் வரவில்லை. கண்கூடாக இந்த அமைப்பும் செயல்பாடுகளும் வளர்ந்துவிட்டன. சாதனைகள் கண்முன் நின்றிருக்கின்றன. இனி புலம்பிப்பயனில்லை என நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் இப்போது இந்த விருது செய்திகளை அப்படியே கண்டும் காணாமலும் போய்விடுவதைத்தான் பார்க்கமுடிகிறது. ஆழமான அமைதியே காணக்கிடைக்கிறது. அதுவே வெற்றிக்கான அடையாளம்தான்.

கே.ராஜேஸ்வர்.

 

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:31

An extraordinary start

நம் குழந்தைகளின் அகவுலகம் கட்டுரை வாசித்தேன். நம் குழந்தைகளின் அகவுலகை தீர்மானிப்பது ஆசிரியர்களோ.கல்வி நிறுவனங்களோ அல்ல.மாறாக பெற்றோர்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில் பணத்தை கட்டிக்கொண்டு என் குழந்தைக்கு தேவையான கல்வியை கொடு என்பதுதான் இன்று நடக்கிறது. இடையில் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி சம்பந்தமான மென் பொருட்களை உருவாக்கி அதை கல்வி முதலாளிகளிடம் சந்தைப்படுத்தி வருகிறது. குழந்தைகளின் அகம், கடிதம்

 

The class on Wagner in Tamil Nadu is likely the first of its kind, and I am surprised that nearly 25 people have paid to attend it. It truly challenges the long-standing apathy of Tamil intellectuals.

An extraordinary start

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:30

August 21, 2025

இந்து முல்லாக்களும் வைரமுத்துவும்

ஶ்ரீரங்கம் ஜீயர் ஒருவர் வைரமுத்துவை வெளியே நடமாட அனுமதிக்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். (ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை)இவர் இந்துமதத்தின் தலைவர் அல்ல. இந்து நம்பிக்கையாளர்களின் பொதுவான பிரதிநிதி கூட அல்ல.

தமிழ்நாட்டில் வைணவப்பிராமணர்கள் (ஐயங்கார்கள்) ஒரு மிகச்சிறுபான்மை. அவர்களில் வடகலை, தென்கலை என இரு பிரிவு, அவற்றுக்குள் பல பிரிவுகள். அவற்றில் ஒரு பிரிவின் ஜீயர் இவர். ஒரு சாதிக்குறுங்குழு தலைவர், அவ்வளவுதான். இவருடைய மடத்துக்கு இவருடைய சாதியினர் தவிர வேறு எவர் சென்றாலும் இழிவுபடவேண்டியிருக்கும்.

அதிகம்போனால் ஆயிரம்பேர் இவருடைய மடத்தில் நம்பிக்கையாளர்களாக இருக்கலாம். இவர் இந்த வன்முறைப்பேச்சை எழுப்பியிருக்கிறார். இதற்குப் பின்னாலுள்ள எண்ணம் என்ன? மத்தியில் தங்களுக்குச் சாதகமான ஓர் அரசு உள்ளது என்னும் எண்ணமே முதலில். தமிழகத்தில் ஓர் அரசியல்கட்சி தனக்கு உதவிக்கு வரும் என்னும் நம்பிக்கை அடுத்து. அந்த அரசியல்கட்சி உருவாக்கும் பிரச்சாரத்துடன் இணைந்து தன் கீழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிக்கலாகாது’ என நான் திரும்பத் திரும்ப பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஏனென்றால் வட இந்தியாவில் அவர்கள் உருவாகி ஆற்றல்பெற்றுள்ளனர். கேரளத்திலும் கர்நாடகத்திலும் அவர்கள் ஓங்கியுள்ளனர். தமிழகத்திலும் அவர்கள் நிலைகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஜீயர் ஒரு வெறிகொண்ட இந்துப் பழமைவாதியின் குரலாக ஒலிக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்புகூட இவர் இப்படிப் பேசியிருக்க மாட்டார். பேசினால் அதற்கு இந்த இடம் அமைந்திருக்காது.

இந்த இந்துமுல்லாக்கள் சுதந்திர சிந்தனைக்கு எதிரானவர்கள். முன்னோக்கிய எந்த வளர்ச்சிக்கும் எதிரானவர்கள். இவர்களை மீறித்தான் நாம் இன்று அடைந்துள்ள சமூகசுதந்திரம், பொருளியல் வளர்ச்சி, ஆன்மிக மலர்ச்சி ஆகியவற்றை அடைந்திருக்கிறோம். இவர்கள் மீண்டும் நம்மை இருளுக்குள் மூழ்கடிக்க விரும்புகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கு எளிமையான மதப்பற்றால், அரசியல்நோக்கால் ஆதரவளித்த நாடுகள் அதன் மிகப்பெரிய விலையை அளித்துக்கொண்டிருக்கின்றன. அவை மதப்போரால் அழிந்து இடிபாடுகளாகக் கிடக்கின்றன. நாம் இப்போதுதான் மூன்றுவேளைச் சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளோம். இந்த வெறியர்களிடம் ஏதேனும் அதிகாரம் அளிக்கப்பட்டால் நம்மை அந்நிலைக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள்.

ஏனென்றால் இவர்களால் வெறியை மட்டுமே பரப்ப முடியும். இன்று வைரமுத்து மீது வன்முறையை ஏவும் இவர்கள் ஏதேனும் அதிகாரம் கிடைத்தால் அடுத்து வைணவத்திலேயே தங்கள் எதிர்க்குழுமேலும் அதே வன்முறையை ஏவுவார்கள். இன்று கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளும் இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்து நம்மையும் அழிப்பார்கள். எண்ணிப்பாருங்கள் இந்த வெறிக்கும்பல் நாளை இதே கொலைவெறியுடன் சைவர்களை தாக்கமாட்டார்களா? இங்கே சைவமும் வைணவமும் ஒன்றையொன்று மறுத்தும் விவாதித்தும்தானே வளர்ந்தன?

இந்த வெறி அடிப்படையில் இந்து மெய்ஞானத்துக்கு எதிரானது. இந்து ஞானம் மேல் நம்பிக்கை கொண்ட எவரும் இந்த வெறியை அருவருத்து ஒதுக்கியாகவேண்டும். இந்து மெய்யியல் என்பது எந்நிலையிலும் ஒற்றைப்படையான நம்பிக்கையாக, ஆசாரமாக இருந்ததில்லை. அது வெவ்வேறு கொள்கைகள் ஒன்றுடனொன்று முரண்பட்டு விவாதிப்பதன் வழியாக வளர்ந்தது. அந்த விவாதம் இந்தவகையான வெறியர்களால் அழிக்கப்படும் என்றால் இந்து மதம் அழியும். உறுதியான இந்துவாக, அத்வைதியாக, இந்தக் கீழ்மையை கண்டிக்கிறேன்.

எண்ணிப்பாருங்கள், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிராமண கதாகாலட்சேபக்காரர் பிராமண மேட்டிமைவெறியுடன் பேசினார்.அனைத்து பிற தமிழ் இந்துக்களையும் இழிவுசெய்தார். அன்று இந்த இந்துமுல்லாக்கள் எங்கே சென்றனர்? அதை இவர்கள் மௌனத்தால் ஆதரித்தனர். இன்று கிளம்பி வருகிறார்கள். அன்று அந்த சாதிவெறியர் மேல் எவரும் இந்த வன்முறைக்கூச்சலை எழுப்பவில்லை. அப்படியென்றால் உண்மையில் இங்கே வெறியர்கள் எவர்? எதை வளரவிடுகிறோம்?

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம் 

இந்துமதமும் தரப்படுத்தலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.