Jeyamohan's Blog, page 1695

January 1, 2017

என் சிறுகதைகள் ஒலிவடிவாக

என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக


 


சோற்றுக்கணக்கு


 



கோட்டி



 


ஓலைச்சிலுவை



ஊமைச்செந்நாய்



உலகம் யாவையும்


 


 



தாயார் பாதம்



யானைடாக்டர்


 



 


பெருவலி



மத்துறு தயிர்



 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2017 10:31

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75

[ 24 ]


காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன?” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா?” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு?” என்றாள். அவன் தலையை அசைத்தபடி புரண்டு அமர்ந்து அவள் திறந்துவைத்திருந்த சாளரத்தினூடாக வெளியே வெண்ணிற வானம் தெரிவதை நோக்கினான்.


அவள் “நீங்கள் கிளம்பலாம். இன்னும் சற்றுநேரத்தில் எங்கள் ஊர் துயிலெழுந்துவிடும்” என்றாள். ஆடையணிந்து மென்மயிர் மேலுடையின் தோல்நாடாவை கட்டாமல் விட்டிருந்தாள். இருகைகளையும் தூக்கி கூந்தலை அள்ளிச் சுழற்றி முடிந்தபடி “இப்போது பனிமேல் ஒளி படர்ந்திருக்கிறது. வெண்திரை. எவரும் பாராமல் கிளம்பிச் சென்றுவிடமுடியும்” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் அவன் அந்தச் சாளரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த அறை நீருக்குள் இருப்பதுபோல நெளிந்துகொண்டிருந்தது. காலையொளி சாளரத்தில் எழுந்தபின்னரும் பறவைகளின் ஒலியே இல்லாமலிருப்பது விந்தையாக இருந்தது.


“கிளம்புங்கள்” என்றாள். அர்ஜுனன் “உன் தந்தையும் தமையன்களும் எழட்டும்… அதன்பொருட்டே காத்திருக்கிறேன்” என்றான். ஒரு கணம் அவள் விழிகள் நிலைத்தன. பின்னர் புன்னகையுடன் “நன்று” என்றாள். அர்ஜுனன் “அவர்கள் எவரும் இறந்துவிடமாட்டார்கள்” என்றான்.  “தெரியும்” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். அர்ஜுனன் “வேறென்ன தெரியும்?” என்றான். “நீங்கள் வெல்வீர்கள்” என்றாள். “எப்படி?” என்று கேட்டபடி அவன் கைகளை தலைக்குமேல் கோத்துக்கொண்டான். “நீங்கள் எப்போதும் வெல்பவர்.”


அர்ஜுனனின் விழிகள் சுருங்கின. அவள் “உங்கள் நடத்தையிலிருக்கும் நிமிர்வு அதைத்தான் காட்டுகிறது. சிலருக்கு ஊழ் அவ்வாறு அமைகிறது, அவர்கள் வெற்றியன்றி எதையும் அடைவதே இல்லை” என்றாள். அவனை அவள் அறிந்துகொள்ளவில்லை என உணர்ந்ததும் அவனுக்கு ஒளிந்திருக்கும் உவகை ஒன்று ஏற்பட்டது. “நேற்று நான் இங்கிருந்து கிளம்பிச்சென்றேன்” என்றான். அவள் “என்னை விட்டுவிட்டா?” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “என்னிடம் கிளம்பிச்செல்லும்படி அறிவுறுத்தினார் வணிகர்தலைவர். செல்லும் வழியில் சிலர் என்னை அச்சுறுத்தினர். அவர்களை வென்றுவிட்டு திரும்பிவந்தேன். ஏனென்றால் அச்சுறுத்தலுக்குப் பணிவது என் இயல்பல்ல.”


“என் தமையனாகத்தான் இருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “அவர் இன்னமும் வீடுதிரும்பவில்லை.” அர்ஜுனன் “அஞ்சவேண்டியதில்லை, அப்பாதையில் முதல் நடமாட்டம் தொடங்கும்போது விடுவிக்கப்படுவார். குளிருக்கான ஆடைகளும் அவர்கள் உடலில் இருந்தன” என்றான். அவள் கண்களின் முனையிலிருந்த மெல்லிய நகைப்பு அவனை புன்னகைக்க வைத்தது. “உனக்கு அவரை நான் வென்றது உவகையூட்டுகிறதுபோலும்” என்றான். “இல்லை என்று சொல்வேன் என நினைக்கிறீர்களா?” என்றாள். அவன் நகைத்தான்.


“உண்மையிலேயே பிடித்திருக்கிறது. ஆண்மான்கள் கொம்புகோப்பதை பெண்மான்கள் நின்று  விரும்பி நோக்குவதை கண்டிருக்கிறேன்” என்றாள் அவள். வெளியே குரல்கள் கேட்கத்தொடங்கின. “நன்று, முதற்புலரியிலேயே வணிகர்கள் அவ்வழி சென்றுவிட்டார்கள்” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். தன் ஆடையை அணிந்துகொண்டு வில்லை வலத்தோளிலிட்டு அம்புத்தூளியை இடத்தோளிலிட்டபடி கதவைத்திறந்து வெளியே சென்றான். அங்கிருந்த இரண்டு முதியபெண்கள் அலறியபடி எழுந்துகொண்டனர். அறைகள் தோலுறையிடப்பட்டவை என்பதனால் ஒலி வெளியே வருவதில்லை என எண்ணிக்கொண்டான். முகப்புக் கதவைத்திறந்து திண்ணையில் இறங்கினான்.


பெண்களின் அலறலோசை கேட்டு எழுந்து திரும்பியவர்கள் உள்ளிருந்து அவன் வருவதை கண்டார்கள். கூச்சல்களுடன் பலர் வேல்களைத் தூக்க அர்ஜுனன் அவர்களை நோக்கி விழிகளை திருப்பவில்லை, ஆனால் அவன் உடல்விழிகள் அவர்களை நோக்கிவிட்டன. முந்தையநாள் அவனிடம் தோல்வியடைந்த முதன்மை வீரன் கையசைத்து அவர்களை தடுத்தான். அர்ஜுனன் நிமிர்ந்த தலையும் இயல்பான நடையுமாக திண்ணை முனையில் சென்றுநின்றான். உரத்த குரலில் “குலத்தோரே, மூத்தவர்களே, நான் இந்த இல்லத்துப் பெண்ணை காந்தர்வமுறைப்படி மணம்கொண்டிருக்கிறேன். ஷத்ரிய குலத்தவனாகிய என் பெயர் அர்ஜுனன். அஸ்தினபுரியின் குருகுலத்து அரசனாகிய பாண்டுவின் மைந்தன்” என்றான்.


அங்கு நின்றிருந்த முதியவர்கள் வியப்பொலி எழுப்பினர். சிலர் அவனைப் பார்க்கும்பொருட்டு முண்டியடித்து முன்னால் வந்தனர். அறைகூவும் குரலில் அர்ஜுனன் சொன்னான் “செவிகூருங்கள்! நீங்கள் திரளாக என்னைத் தாக்கினால் அஸ்தினபுரியின் அரசர் படைகொண்டுவந்து உங்கள் குடிகளை முற்றாக அழிப்பது முறை என்றாகிறது. நீங்கள் இங்கு அமைத்திருக்கும் இந்தப் பாறைக்காவல் எல்லாம் என் தமையன் படைகொண்டுவந்தால் ஒரு பொருட்டே அல்ல என்று உணருங்கள்.” ஒவ்வொரு முகத்தையாக நோக்கியபடி “இல்லையேல் எனக்கு நிகரான ஒரு வீரன் எழுந்து வந்து என்னுடன் போர்புரியட்டும்” என்றான்.


அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இல்லை, உங்களில் இருவர் என்னிடம் போரிடட்டும்.” அவர்களை நோக்கியபடி அவன் மீண்டும் சொன்னான் “அன்றி ஐவர் போரிடட்டும்.” மெல்லிய நகையமைந்த இதழ்களுடன் மீண்டும் நோக்கியபின் “உங்கள் வீரர் பதின்மர் ஒரே காலத்தில் என்னிடம் போரிடலாம். என் அறைகூவல் இது” என்றான். இளைஞன் ஒருவன் கைகளைத் தூக்கியபடி ஏதோ சொல்ல முன்னால் வந்தான். முதியவர் ஒருவர் அவனைத் தடுத்து “நீர் மாவில்லவராகிய பார்த்தன் என்றால் இங்குள்ள நூறுபேர்கூட உம்முடன் நிகர்நின்று போரிட இயலாது. எங்கள் இளையோரை நீர் கொல்லாமல் விட்டமைக்காக நன்றி சொல்கிறோம்” என்றார்.


கைகளைக் கூப்பியபடி அவர் அவனருகே வந்தார். “உங்கள் மூத்தவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் அரண்களெல்லாம் மானுடர்களுக்கு. காற்றின் மைந்தனுக்கல்ல. நாங்கள் எளியவர்கள், எங்கள் தனிநெறிகளுடன் இங்கு வாழ்கிறோம். அந்நெறிகளைப் பேணும்பொருட்டே மண்ணில் வாழும் மானுடர்களிடமிருந்து எங்களை முற்றிலும் அகற்றிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் முன்பு அம்மானுடரால் அகற்றப்பட்டவர்கள் நாங்கள். சிப்பியில் பிறந்தவர்கள் சிறகு பெற்றது இங்குதான். எங்கள் வாழ்க்கை இங்கு சிறுகச்சிறுக தழைத்துச் செறிந்துள்ளது. சிலந்திவலையை அறுத்துச்செல்லும் கருவண்டுபோல நீங்கள் உட்புகுந்திருக்கிறீர்கள்.  இது முறையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்க!” என்றார்.


“மூத்தவரே, உங்கள் குலமுறைமைகளையும் அறநெறிகளையும் இறையாணைகளையும் நான் போற்றுவேன். ஆனால் பெண்ணின் கருப்பைக்குமேல் எந்த நெறியும் முற்றாணை கொண்டதல்ல” என்று அர்ஜுனன் சொன்னான். “பெண்ணின் விழைவு என்பது நீர்தேடி மண்ணுக்குள் செல்லும் வேர்போன்றது. அறியவொண்ணாதது. தன் வேட்கையையே விசையெனக் கொண்டு புதுவழி தேர்வது. கிளைகளை வெட்டலாம். அடிமரத்துக்கு கற்சுற்றமைக்கலாம். வேர்களை எவரும் மட்டுப்படுத்துவதில்லை. கட்டற்ற வேர்களே செழித்த மரத்தின் வல்லமை என்பதை உணருங்கள்.”


“உங்கள் பெண்ணைக் கவர நான் இங்கு வரவில்லை. ஆனால் என்னை தடுக்கும்பொருட்டு உங்கள் இளையோர் வந்து சூழ்ந்தபோது அவர்களின் அச்சத்தைக் கண்டேன். அவர்களை எளிதில் வெல்லமுடிந்தபோது அவர்களின் ஆற்றலின்மையைக் கண்டேன். உங்கள் மகளிர் இன்னமும் சிறைப்பட்டிருப்பார்களென்றால் உங்கள் குலம் பாறைமேல் மரமென வேரொடுங்கி தேம்பி அழியும் என்று எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “இவள் உங்கள் குலத்தின் அரசி. இவள் கருவில் உங்கள் குடிவழிகள் பாடிப்பரவும் மாவீரர்கள் எழுவார்கள்” என உள்ளே சுட்டிக்காட்டி சொன்னான்.


அங்கே நிகழ்வதை நோக்கி ஊரிலிருந்து ஒவ்வொருவராக வந்து கூடத்தொடங்கினர். குலத்தலைவரை அழைத்துவர சிலர் ஓடினர். “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றார்கள் சிலர். முதியவர் ஒருவர் அவர்களை கைதூக்கி அமைதிப்படுத்திவிட்டு அர்ஜுனனிடம் “நாங்கள் எங்களை கின்னரர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், ஷத்ரியரே” என்று உரைத்தார். “எங்களை இங்கு வாழச்செய்தவர்கள் அவர்கள். நீங்கள் மீறியது எங்கள் நெறிகளை அல்ல, அவர்களின் ஆணைகளை. உங்களை தண்டிக்கவேண்டியவர்கள் அவர்கள். நீங்கள் போரிடவேண்டியதும் அவர்களுடன்தான்.”


உடனே “ஆம், ஆம்” என்று குரல்கள் எழுந்தன. “கின்னரர்கள் வரட்டும்… அவர்கள் முடிவு சொல்லட்டும்” என்றனர் சிலர். குலத்தலைவர் “அவர்கள் இனிமேல் வரப்போவதில்லை என நாம் அறிவோம்” என்று கைகாட்டி அவர்களை அடக்கினார். “நாம் இவர்களை நம் பூசகமன்றுக்குக் கொண்டுசெல்வோம். நம் தெய்வங்களுடன் உரையாடுபவர் நமது முதுபூசகர் மட்டுமே. அவர் சொல்லட்டும்.” “ஆம், அதுவே முறை” என்று குரல்கள் எழுந்தன. “அவர் அனைத்துமறிவார். அவர்மேல் எழும் தெய்வங்களின் ஆணை வரட்டும்.”


நான்கு வேல்வீரர்களுடன் குலத்தலைவர் விரைந்து வந்தார். இருவர் ஓடிச்சென்று அவரிடம் நடந்தவற்றைச் சொன்னபடி உடன் வந்தனர்.  வந்ததுமே கைதூக்கி உரத்தகுரலில் “வீரரே, எங்களுடன் பூசகமன்றுக்கு வருக!” என்றார் குலத்தலைவர். “அவளும் வரட்டும்… அவள் ஊழையும் கின்னரரே முடிவு செய்யட்டும்” என்றாள் ஒரு முதுமகள். குலத்தலைவர் “மற்ற வணிகர்கள் அனைவரும் உடனே கூடாரங்களைக் கலைத்து மலையிறங்கட்டும்… நான் ஆணையிட்டேன் என உரை. நம் அரண்கள் பூசனையிட்டு மூடப்படட்டும். கின்னரர் நமக்கிடும் ஆணையை தலைசூடுவோம்” என்றார். நான்கு வீரர்கள் அவருக்குத் தலைவணங்கி ஈட்டிகளுடன் கிளம்பிச்சென்றார்கள்.


அர்ஜுனன் திரும்பி இல்லவாயிலை நோக்க அங்கே பார்வதி கவரிமானின் மென்மயிர்ப்பீலியை தலையணியாகச் சூடி வந்து நின்றிருப்பதைக் கண்டான். அவள் அவன் விழிகளை சந்தித்ததும் புன்னகை செய்தான். அத்தகைய தருணங்களில் பெண்களில் எழும் உறுதியை அவன் பலமுறை அறிந்திருந்தாலும் எப்போதும் எழும் அவ்வியப்பையும் அடைந்தான். அவர்கள் ஆண்களை நம்பியிருப்பதாக தோற்றமளிக்கிறார்கள். ஆனால் அந்தத் துணிவு ஆண்களைச் சார்ந்து உருவாவது அல்ல. எங்கிருந்து அது எழுகிறது என அவன் மீண்டும் தன்னிடமே கேட்டுக்கொண்டான்.


அத்தனை தோற்றநிமிர்வுக்கும் அடியில் அவன் சற்று அஞ்சிக்கொண்டிருந்தான். எதை அஞ்சுகிறோம் என்றே அறியாமலுமிருந்தான். அக்கணம் அவளுடைய அப்புன்னகையைத்தான் பற்றுறுதியாகக் கொண்டிருந்தான். எல்லா தருணங்களிலும் பெண்களின் துணிவை பற்றிக்கொண்டே என் எல்லைகளை கடந்திருக்கிறேன். எல்லைகளைக் கடக்கும்பொருட்டே அவர்களிடம் செல்கிறேன்.


[ 25 ]


முதுபாணன் ஒருவன் கைமுழவை முழக்கி அவர்களை பூசனைமன்றுக்கு இட்டுச்செல்லவிருப்பதை ஊருக்கு அறிவித்தான். அவர்கள் கைகளைத் தூக்கி குரலெழுப்பி அதை ஆதரித்தனர். “செல்க!” என்றார் குலத்தலைவர். அவர்கள் இருவரையும் நடுவே செல்லவிட்டு கின்னரஜன்யர் முன்னும்பின்னும் நிரைவகுத்தனர். முதலில் பாணன் சிறுமுழவை மீட்டியபடி சென்றான்.


அந்த மலைச்சரிவில் அத்தனை இல்லங்கள் இருப்பதை அர்ஜுனன் அப்போதுதான் உணர்ந்தான். தேனடைபோல பாறைகளைக் குடைந்து ஒன்றுக்குமேல் ஒன்றென குகையில்லங்களை அமைத்திருந்தனர். கற்களை அடுக்கி உள்ளே தோற்சுவரமைத்த உயரமற்ற இல்லங்கள் சரிவில் ஒன்றுக்குமேல் ஒன்றென எழுந்திருந்தன. தேனீக்கள்போல அவற்றிலிருந்து மக்கள் இறங்கி வந்து ரீங்கரித்தபடி அவர்களை சூழ்ந்தனர்.


அர்ஜுனன் அப்பெண்களின் விழிகளை நோக்கினான். அவை அவனை நோக்கியபின் அவளைச் சென்று சந்தித்து மீண்டன. கிளர்ச்சியும் ஆவலும் பதற்றமும் கொண்ட விழிகள். ஆனால் அவையனைத்திலுமே ஒரு களிப்பும் இருப்பதை சற்றுகழித்தே அவன் உணர்ந்தான். அவளை திரும்பிப்பார்க்கவேண்டுமென விழைந்து அதை கட்டுப்படுத்திக்கொண்டான். அவள் விழிகளின் களிப்பைத்தான் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அவளுடன் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கண்முன் எழுந்த பலநூறு ஆடிகளில் அவள்தான் பெருகிச் சூழ்ந்திருக்கிறாள்.


அவள் முகம் அப்போது மலர்ந்திருக்கும் என அவன் உய்த்து அறிந்தான். அவள் உடலெங்கும் நடனமென ஒரு துள்ளல் இருப்பதை அணிகளின் ஓசையே காட்டியது. வென்றவளின் ஊரணிக்கோலம் என நடந்துகொண்டிருப்பாள். அவள் கால்கள் நிலம்படுகின்றனவா? அவள் விழிகளுக்கு முன் மானுடர் எப்படி தெரிகிறார்கள்?


அப்போது தோன்றியது அந்தத் துணிவு எங்கிருந்து வருகிறதென்று. ஆண்கள் இழப்பதற்கே அஞ்சுகிறார்கள். நிலத்தை, மரபை, குலத்தை, குடியை, பெயரை, இல்லத்தை. திரும்பிவரும் வழியை உறுதி செய்துகொள்ளாமல் செல்வது எப்போதுமே அவர்களுக்கு இயல்வதல்ல. பெண்கள் கூட்டுப்புழு சிறகு பெற்றதுபோல பெற்றவையும் கொண்டவையும் பூண்டவையுமான அனைத்திலிருந்தும் பறந்தெழுபவர்கள். திரும்பி நோக்காமல் சென்றுவிடும் வல்லமை கொண்டவர்கள். மலையிறங்கும் ஆறுகள். அவர்கள் சென்றடையும் இடம் மட்டுமே சித்தமென எஞ்சுகையில் இழப்பென ஏதுமில்லை.


அந்த எண்ணம் எழுந்ததுமே அவன் இயல்புநிலையை அடைந்தான். அதுவரை இருந்த சிறிய பதற்றம் முழுமையாக விலகியது. ஒரு புதிய எண்ணம் எழுவதைப்போல இன்பமளிப்பது வேறேதுமில்லை. அது தன் கணு ஒன்று முளைப்பதைக் காணும் மரக்கிளையின் இன்பம்போலும். அவனுடைய நடை எளிதாகியது. விழிகளை ஓட்டி அச்சூழலை நோக்கியபடி நடந்தான். அவன் இயல்படைந்ததை அவளும் உணர்ந்ததை அவள் அணியோசை சற்று நிலைத்ததிலிருந்து அவன் உணர்ந்தான். விழிபடும் உணர்வை தோல் எப்படி அடைகிறது என்பது தீராவிந்தை என்று தோன்றியது.


எண்ணியிராத கணத்தில் அவனை ஓர் உணர்வு ஆட்கொண்டது, அப்பெண்ணுடன் அவன் அப்படி முன்னரும் நடந்திருப்பதாக. எங்கே எங்கே என தவித்தலைந்த உள்ளம் பின்பு உணர்ந்தது அவளை அவன் நன்கறிந்திருந்தான் என. ஒரே பெண். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை, சுபகை… வெவ்வேறு உருவம்கொண்டெழுந்து ஆட்கொள்கிறார்கள். அவர்கள் என்றுமிருப்பவர்கள்.


எங்கோ சென்றலைந்த சித்தம் இயல்பாக நீண்டு தொட்ட ஓர் முனை அவனை சிலிர்க்கச்செய்தது. அவள் பெயர் பார்வதி என அவன் நினைத்துக்கொண்டான். மலைமகள். நிலமகளும் அலைமகளும் என்றானவள். திருமகளும் சொல்மகளும் அனல்மகளுமென உரு நிறைந்தவள். அவளை திரும்பி நோக்கினான். அவள் நிமிர்ந்த தலையுடன் புன்னகை நிலைத்த முகத்துடன் நடந்துகொண்டிருந்தாள். ஏதோ களிமயக்கிலென கண்கள் சிவந்திருந்தன.


அவர்கள் பூசனைமன்றுக்குச் சென்றுசேர்ந்தபோது பெருந்திரள் உடனிருந்தது. நான்கு ஊர்களுக்கு நடுவே இருந்த பெரிய பாறைச்சரிவு ஒன்றில் இருந்தது மேலே கூரையில்லாத இறைப்பதிட்டை. அணுகுந்தோறும் நீர்வரிகள் சூடி காட்டெருது என நின்றிருந்த மையப்பாறை தெளிவுகொண்டது. ஆயிரம்பேர் நிற்பதற்கு ஏற்ற பெரிய பாறைப்பரப்பின் நடுவே ஆளுயரத்தில் நின்ற அதன்மேல் புடைப்புச்சிற்பமாக ஏழு கின்னரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பலிபீடமாக போடப்பட்டிருந்த தட்டைக்கல் மேல்  மலர்களும் காலையில் படைத்த அன்னமும் இருந்தன. அவற்றை சிறுகுருவிகள் எழுந்தமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன. முழவோசையில் அவை எழுந்து வளைந்து மிக அப்பாலென நின்றிருந்த தேவதாரு மரத்தின் இலைத்தழைப்பை அடைந்து புகுந்து மறைந்தன.


இறைபீடத்தின் அருகே கற்பாளங்களை அடுக்கிக் கட்டிய சிறிய இல்லமொன்றிருந்தது. அதனுள் இருந்து முதுபூசகர் எழுந்து வந்து அவர்களை நோக்கிநின்றார். அவர்கள் அருகணைந்ததும் அவர் கைகளை விரித்துக்காட்ட தொடர்ந்து வந்த அனைவரும் அகன்று நின்று பெரிய வட்டமொன்றை சமைத்தனர். குலத்தலைவரும் குடிமூத்தார் எழுவரும் மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகே சென்றனர். முழவோசை நின்றது. அதுவரை இருந்த அகஒழுங்கை அவ்வமைதி சிதறடிக்க மரம் முறிந்து விழுந்ததும் வானில் தவிக்கும் பறவைகளென நிலையழிந்தன எண்ணங்கள்.


பூசகர் வெண்ணிற மென்மயிர் ஆடை அணிந்து தலையில் வெண்கவரிமானின் பனிக்குச்ச வாலை இறகுபோல் அணிந்திருந்தார். கந்தக மஞ்சளோடிய சுண்ணத்தாலானதுபோன்ற முகம். உலர்ந்த சேற்றுக்குழிபோல் விரிசல்கள் சூழ்ந்த விழிப்பள்ளத்திற்குள் கண்மணிகள் மங்கிய சிப்பி போலிருந்தன. ஒன்றன்மேல் ஒன்றென அணிந்த மயிர்த்தோலாடைக்குள் அவர் உடல் வெறும் எலும்பாலானதுபோல் தோன்றியது. மெல்லிய நடுக்கம் ஒன்று அவர் உடலில் ஓடிக்கொண்டிருந்தது. சிவந்த கீறல்போன்ற உதடுகள் உள்ளடங்கியிருந்தன. “வருக!” என அவர் சொன்னபோது பற்கள் கூழாங்கற்கள்போல் தெரிந்தன.


அவர் கைகாட்டி அவர்கள் இருவரையும் பலிபீடத்தருகே போடப்பட்டிருந்த கல்மணைகளில் அமரும்படி சொன்னார். அர்ஜுனன் அமர்ந்தபின்னர்தான் ஏழு கின்னரர்களின் காலடியில் மல்லாந்துகிடந்த ஊர்ணநாபனை கண்டான். அது அவன் சிலைதானா என மீண்டும் கூர்ந்து நோக்கினான். எட்டு கைகளும் பெருவயிற்றின்மேல் புடைத்த விழிகளும் பற்கள் செறிந்த வாயுமாக கிடந்த ஊர்ணநாபனின் அனைத்து விரல்களிலிருந்தும் எழுந்த சரடுகளை கின்னரர் பற்றிக்கொண்டிருப்பதை மெல்லிய கோடுகளாக செதுக்கியிருந்தனர். அவன் ஆணுறுப்பு வேர்போல மண்ணில் ஆழ்ந்திறங்கியிருந்தது.


பூசகர் அவனை நடுங்கும் தலையுடன் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பி குலத்தலைவரையும் பிறரையும் விலகிச்செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபின் விலகிச்சென்றனர். அவனை சற்றுநேரம் நோக்கியபின் பூசகர் மெல்ல முனகினார். பின்னர் “நீர் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரான அர்ஜுனன் என அறிந்தேன்” என்றார். “ஆம்” என்று அவன் சொன்னான். “நீர் என் குடிப்பெண்ணை மணந்ததை முதுதந்தையாக நான் ஏற்கிறேன்” என்று அவர் சொன்னார். “இக்குடி பெருகவேண்டுமென்றால் இது மண்ணுக்கு இறங்கியாகவேண்டும். வேலிகளை உடைத்து இதன் வேர்கள் செல்லவேண்டும்…”


அவர் குரல் முனகல்போல ஒலித்தது. “ஏனென்றால் மேலே செல்ல இடமில்லை. மேலே அவர்கள் இருக்கிறார்கள். கின்னரர்கள். அவர்களின் வாழ்க்கை வேறு. அவர்கள் விழைவதை எல்லாம் வானமே அளிக்கும். அவர்களுக்கு மண்ணே தேவையில்லை.” அர்ஜுனன் அவர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உடலின் அனைத்து நரம்புகளும் விசையழிந்து தளர்ந்திருப்பதை உணரமுடிந்தது. “ஆனால் நாங்கள் இங்கு எங்கள் வாழ்க்கையை வாழவில்லை. கட்டுண்டிருக்கிறோம். நாங்கள் அடிமைகள். அவர்களால் வளர்க்கப்படும் விலங்குகள். எங்கள் உடல்களை அவர்கள் ஆளவில்லை. எண்ணங்களில் நிறைந்திருக்கிறார்கள்.”


அவருடைய விழிகள் ஒளிகொண்டபடியே வருவதை தன் உளமயக்கா என அவன் ஐயத்துடன் நோக்கினான். “அவர்கள் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் ஒப்பாமல் இங்கு எதுவும் நிகழமுடியாது.” அவர்தான் பேசுகிறாரா என அர்ஜுனன் ஐயுற்றான். அவருடைய விழிகள் நிலைகுத்தி நின்றன. இமைகள் அசையவில்லை. “அவர்களை வென்றுவருக… அவர்களை வென்றுவருக! இளவரசே, இக்குலத்தை விடுதலைசெய்க!” என்று அவர் சொன்னார். அவர் குரல் அவ்வுடலில் இருந்து எழவில்லை. சொற்களை அறியாமல் சிறிய இதழ்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. காற்றில் ஏதோ பசையை அளாவுவதுபோல அவர் விரல்கள் அசைந்தன.


அர்ஜுனன் “அவர்களின் படைகளேதும் இங்கில்லையே! ஆண்டுக்கு ஒருமுறைகூட அவர்கள் இங்கு வருவதுமில்லை” என்றான். “ஆம், அவர்கள் எவ்வகையிலும் இங்கில்லை. இளையவரே, இங்கு ஆண்டுதோறும் பொருட்களுடன் இறங்கி வருபவர்களும் அவர்களல்ல” என்றார் பூசகர். “அவர்கள் மேலே இருக்கிறார்கள். நாம் அவர்களை நோக்கவும் முடியாது.” அவர் இல்லை இல்லை என்பதுபோல தலையை அசைத்தார். “அவர்களின் படைக்கலங்களை நாங்கள் அறிந்ததில்லை. அவர்களின் ஒரு சொல்லையேனும் நாங்கள் கேட்டதில்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்தையும் அவர்கள் ஆள்கிறார்கள். இங்குள்ள மரங்களையும் பாறைகளையும்கூட கையாள்வது அவர்களே.”


அர்ஜுனன் அவ்விரல்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை எதையோ நெய்கின்றன. “ஏனென்றால் அவர்கள் எங்கள் கனவுகளுக்குள் புகுந்திருக்கிறார்கள். இவையனைத்தையும் சமைக்கும் கனவை எங்களுக்குள் அவர்களே அமைக்கிறார்கள். கனவுவழியாக எதையும் மீறிச்செல்லலாம். இளையவரே, கனவை மீறிச்செல்வது எளிதல்ல மானுடனுக்கு… கனவுகளை அடிபணியச் செய்தவன் கருவுக்குள் நோய்கொண்ட குழவி… கனவுகளே மீறல். கனவுகளே கடத்தல். கனவுகளே ஆக்கல். இளையவரே, கனவுகளும் பிறருடையதென்றானவன் அடிமையென்றறியாமல் அடிமையென்றிருக்கும் இழிசினன்.”


அவர் விரல்களைவிட்டு அவன் விழிகள் முகத்துக்குச் சென்று இயல்பாக மீண்டபோது அவை மெல்லிய சிலந்திவலைச் சரடை பின்னிக்கொண்டிருப்பதை கண்டான். விழிகளை பலமுறை இமைத்து அதை நோக்குமயல் என தள்ளமுயன்றான். ஆனால் மேலும் மேலும் அவை தெளிவடைந்தன. அச்சரடுகள் தரையில் படர்ந்து நீண்டு பனிவெண்மைக்குள் புகுந்து மறைந்தன. அவர் குரல் எழுந்தது. பெரும்பன்றியின் உறுமல்போன்ற ஆழமும் கார்வையும் கொண்ட ஒலி. “இங்கு காத்திருக்கிறேன். இந்த மண்ணின் அடியில்” என்றார் அவர். “சென்று வென்றுவருக… அவர்களை வென்று வருக!”


“நீங்கள் யார்?” என்றான் அர்ஜுனன். அவ்வினாவுடன் இயல்பாக அவன் விழிதிரும்பி ஊர்ணநாபனை நோக்கியது. “அடியிலிருப்பவன். தோற்கடிக்கப்பட்டவன்” என்று அவர் சொன்னார். “என் சரடுகள் அறுபடுவதில்லை…” அவர் முன்னும்பின்னும் உடலை ஊசலாட்டினார். கைகள் மேலே தூக்கி விரிந்தபோது அந்தச் சரடுகள் ஒளியாலானவை என தெரிந்தன. “செல்க… மலையேறிச் செல்க… வென்று மீள்க…” அர்ஜுனன் சித்தம் உறைந்திருக்க அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீ வெல்வாய்… நீ வென்றாகவேண்டும்!”


அவன் அப்போதுதான் அவள் இருப்பை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது அவள் துயிலில் என விழிசொக்கி அவர் உடலின் ஆட்டத்திற்கிணைய மெல்ல ஆடிக்கொண்டிருப்பதை கண்டான். அவள் அவருடன் அச்சரடுகளால் பிணைக்கப்பட்டிருந்தவள் போலிருந்தாள். அப்படி எண்ணியதுமே அவன் அச்சரடுகளை பார்த்துவிட்டான். “ஆம்” என்று அவன் சொன்னான். “நான் சென்று வெல்கிறேன்.” அவர் தலை சொடுக்கிச் சொடுக்கி திரும்பியது. காற்றில் துழாவிய கைகள் எதையோ வனைந்தன. கலைத்து மீண்டும் அமைத்தன. “ஆம் ஆம் ஆம்” என்றார். “நீ வென்று வருவாய்… நீ வென்று வந்தாகவேண்டும்!”


மெல்ல அவர் வலப்பக்கமாக சரிந்து விழுந்தார். கால்கள் மெல்ல உதைத்துக்கொண்டு அமைந்தன. அவன் பெருமூச்சுடன் உடலை இயல்பாக்கிக்கொண்டான். அருகே பார்வதியும் பக்கவாட்டில் சரிந்து விழுந்திருந்தாள். அவன் அவளைப்பற்றி சற்று உலுக்கினான். அவள் விழித்துக்கொண்டு “என்ன?” என்றபின் பூசகரை நோக்கி திகைப்புடன் “என்ன ஆயிற்று?” என்றாள். “விழித்துக்கொள்வார்” என்றான். “என்ன சொன்னார்?” என்றாள். “நான் இன்று காலை கண்ட கனவை விளக்கினார்” என்றான் அர்ஜுனன்.


அவள் விளங்காமையுடன் நோக்கினாள். “நீ ஒரு பெருஞ்சிலந்தியாக பதினாறு கைகள் விரித்திருந்தாய். உன் கையிலிருந்து எழுந்த ஒளிச்சரடுகளில் நான் சிக்கியிருந்தேன். நீ வெறிகொண்டு நடனமிட நானும் அச்சரடுகளால் ஆட்டுவிக்கப்பட்டு ஆடிக்கொண்டிருந்தேன்” என்றான் அர்ஜுனன். அவள் அவன் சொற்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. திரும்பி பூசகரை நோக்கி “என்ன சொன்னார்?” என்றாள். “நீ காலையில் இட்ட ஆணையைத்தான்” என்றான் அர்ஜுனன். “என்ன?” என்று அவள் அவனிடம் திரும்பி கேட்டாள். அவன் “நான் இன்றே கிளம்புகிறேன்” என்றான்.



வெண்முரசு விவாதங்கள்


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2017 10:30

December 31, 2016

புத்தாண்டில்…

2


 


அன்புடன் ஆசிரியருக்கு


 


இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு விஷ்ணுபுரம் கொற்றவை ஆகிய நாவல்களை மீள் வாசிப்பு செய்ததுடன் பின் தொடரும் நிழலின் குரல் வெள்ளையானை காடு போன்ற உங்களுடைய மற்ற பெரிய நாவல்களையும் ரப்பர்ஏழாம் உலகம், கன்னியாகுமரி உலோகம் இரவு, கன்னி நிலம், அறம் தொகுப்பு இணையத்தில் கிடைக்கும் மற்ற சிறுகதைத் தொகுப்புகள் சிலுவையின் பெயரால், முன் சுவடுகள், புல்வெளி தேசம் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என பெரும் புனைவுகளில் இருந்து அபுனைவுகள் வரை நீண்டது. மேலு‌ம் காண்டீபம் வரை வெண்முரசை மீண்டும் வாசித்தேன்.


 


எதை வாசிக்கலாம் என யார் கேட்டாலும் அவர்களிடம் முதலில் பரிந்துரைக்கும் நூலாக நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. மேலும் தலைகீழ் விகிதங்களையும் பொன்னியின் செல்வனையும் பள்ளியில் படிக்கும் போது ஒரே நேரத்தில் வாசித்தேன். இரு படைப்புகளுமே என்னை கவர்ந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை உணர முடிந்தது. அவ்வேறுபாடு என்ன என்பதை புறவயமாக பிறருக்கும் எடுத்துக் கூறும் வகையில் விளக்கிய நூல் நாவல் கோட்பாடு.


 


இவ்வாண்டில் அறிமுகம் செய்து கொண்ட இரு பெரும் படைப்பாளிகள் அசோகமித்திரனும் டால்ஸ்டாயும். தண்ணீர்,  கரைந்த நிழல்கள், இன்று என அவர் படைப்புகளை கால வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஒரு படைப்பாளியின் பரிணாம வளர்ச்சியை கண் முன்னே காண முடிந்தது. டால்ஸ்டாயின் நாயகர்கள் வழியே அவரின் பரிணாம வளர்ச்சியை காண முடிந்தது. போரும் வாழ்வும் (மொழிபெயர்ப்பு டி.எஸ்.சொக்கலிங்கம்) அன்னா கரீனினா(மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) புத்துயிர்ப்பு(மொழிபெயர்ப்பு:கிருஷ்ண்ணையா) என அவருடைய பெருநாவல்களையும்  தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் (மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) எனும் நூலையும் வாசித்தேன்.


 


கல்லூரியிலேயே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை வாசித்திருக்கிறேன். அவருடைய பிற நாவல்களான ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகியவற்றை இவ்வருடம் வாசித்தேன். பிந்தையதே எனக்கு அணுக்கமாக இருந்தது.


 


தமிழின் முன்னோடி படைப்பாளிகள் சிலரையும் இவ்வாண்டு வாசிக்க முடிந்தது. க.நா.சுவின் பொய்த்தேவு ல.சா.ராவின் புத்ர பா.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி ஆ.மாதவனின் புணலும் மணலும் ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தன் சிறுகதைகள் என நவீன தமிழ் இலக்கியத்துக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.


 


அம்மையால் ஊட்டி சந்திப்புக்கு வர முடியாமலாகி பின்னர் கொல்லிமலை சந்திப்பில் கலந்து கொண்டது சிறந்த அனுபவம். மேலு‌ம் சங்கரர் உரை காந்தியம் தோற்கும் இடங்கள் சிங்கப்பூர் பயணம் என உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் jeyamohan.in வழியே ஏறக்குறைய அருகிருந்து காண முடிந்தது.


 


அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல விஷ்ணுபுரம் விருது விழாவின் இரு நாட்கள். குறைந்த நாட்களிலேயே வண்ணதாசனை வெகு நெருக்கமாக உணர முடிந்தது. இரா.முருகன் பவா செல்லதுரை என நிகழ்ச்சியில் பங்கேற்ற படைப்பாளிகளை வாசிக்கவும் விஷ்ணுபுரம் விருது விழா களம் அமைத்தது. கொல்லிமலை மற்றும் கோயம்புத்தூர் சந்திப்புகள் வழியே ஜினுராஜ்,சிவா,சசிகுமார்,ஷாகுல், சுஷில், விஷ்ணு பிரகாஷ், கமலகண்ணன், பிரபு, மகேஷ் (சிலர் விடுபட்டிருக்கலாம்) என பல நண்பர்கள் அறிமுகமாயினர்.  என் அலுவலக சூழலிலும் கிறிஸ்டி, மணிகண்டன் என சில இலக்கிய வாசகர்கள் இவ்வாண்டு அறிமுகமாயினர்.


 


வெய்யோனில் தீர்க்கதமஸின் மறு ஆக்கம் குறித்து என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டதுடன் என்னுடைய இவ்வாண்டு தொடங்கியது. உக்கிரசிரவஸ் சௌதி குறித்த  சொற்களுடன் இவ்வாண்டு நிறைவுற்றிருக்கிறது. நினைவில் நிறுத்தக் கூடிய மிகச் சிறந்த ஆண்டாக இதனை மாற்றிய உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.


 


புத்தாண்டு வாழ்த்துக்களுடன்


 


அன்புடன்


சுரேஷ் பிரதீப்


 


அன்புள்ள சுரேஷ்


 


புத்தாண்டு நினைவின் மிகச்சிறந்த அம்சம் சென்ற ஆண்டை நிறைவுடன் நினைத்துப்பார்ப்பதுதான். நான் அப்படி நிறைவுடன் எண்ணிக்கொள்ளாத புத்தாண்டு ஏதும் சென்ற இருபத்தைந்தாண்டுக்காலத்தில் கடந்துசென்றதில்லை. ஆனால் நான் புத்தாண்டில் சூளுரைகள் எதையும் எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் வெறுமே ஆசைப்பட்டு செய்யாமல் விடுபவை என ஏதுமில்லை எனக்கு.


 


2016 கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்து நான் ஆற்றிய  சங்கரர் உரையுடன் ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே ஒரு தீவிரமனநிலையை அது உருவாக்கியது. அப்துல் ஷுகூர் கண்ணூர் அருகே பெடயங்கூரில் தன் டீக்கடையில் நடத்திவரும் இலக்கியச் சந்திப்புக்கு நண்பர்களுடன் சென்றது முதற்பயணமாகவும் உற்சாகமான தொடக்கம்


 


சென்ற ஆண்டில் முக்கியமாக இளையவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. ஈரோடு, கொல்லிமலை, கோவை, ஊட்டி சந்திப்புகள் மிகமுக்கியமானவை. எனக்கு முற்றிலும் புதிய மிக இளையவயதினரான வாசகர்களை அவை அறிமுகம் செய்துவைத்தன. இந்தவருட விஷ்ணுபுரம் விழா இத்தனை சிறப்பாக நிகழ இந்த இளையவாசகர்களின் வரவு மிக முக்கியமானது. எங்கள் ஓய்வுவிடுதியான ஈரட்டியில் நிகழ்ந்த நண்பர் சந்திப்பு ஓரு சிரிப்புவிழாவாக அமைந்தது.


 


அதன்பின் பயணங்கள். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்பிடி சமவெளிப்பயணம். அதன்பின்  பெரிதும் சிறிதுமாக பல பயணங்கள். ஆண்டு முடிவில் கேதார்நாத் பயணம். டிசம்பரிலேயே காகதீய பேரரசின் நிலங்கள் வழியாக ஒரு நீண்டபயணம் ,கிருஷ்னை நதிக்கரை வரை.  இவ்வருடம் மட்டும் இருபத்தைந்துநாட்கள் இமையமலையில் இருந்திருக்கிறேன்


 


சென்ற ஆண்டில் கணிசமான பொழுதுகள் வெளிநாடுகளில் கழிந்தன. ஜூனில் ஓர் ஐரோப்பியப் பயணம் வாய்த்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரோம், சுவுஸ், ஜெர்மனி வழியாக வந்த பயணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு. அதை ஒரு புனைவுக்காக சேமித்திருக்கிறேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சதீஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, கிரிதரன் ராஜகோபாலன், சிறில் போன்றவர்களுடன் சிலநாட்கள். கனவுபோலிருக்கின்றன இன்று அவை.


 


அதன்பின் இரண்டுமாதம் சிங்கப்பூர். இளமையிலேயே ஓர் ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற கனவு இருந்தது. அதை நிறைவுசெய்துகொண்டேன். பாகுலேயன்பிள்ளை ஜெயமோகன் என என் அப்பாவின் பெயருடன் இணைந்த என் பெயர் பொறிக்கப்பட்ட அந்த அலுவலக அறை நான் என்றும் நிறைவுடன் நினைவுகூர்வது. சிங்கப்பூரில் வாசகர் சந்திப்பு நிகழ்ந்ததும் மலேசியா சென்றதும் மகிழ்வான நினைவுகள்.


 


வழக்கம்போல ஒவ்வொருநாளும் வெண்முரசு. சென்ற ஆண்டு வெண்முரசின் உச்சங்கள் என நான் நினைக்கும் நாவல்கள் எழுந்தப்பட்டன.  பன்னிருபடைக்களம், சொல்வளர்காடு, கிராதம் ஆகியவை நான் எழுதியவற்றிலேயே செறிவான ஆக்கங்கள்.  கூடவே சிறுகதைகள். இரு தொடர்களையும் ஊடாக எழுதியிருக்கிறேன். குங்குமத்தில் முகங்களின் தேசம். ஜன்னல் இதழில் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் இரண்டுமே இவ்வாண்டில் நிறைவுற்றன. சுட்டிவிகடனில் வெள்ளிநிலம் தொடங்கியிருக்கிறது.


 


சினிமாவுக்காக எழுதியது, பயணம்செய்தது வேறு. அதுவும் இவ்வாண்டு நிறைவுதருவதாகவே இருந்தது. எந்திரன்2 வருமாண்டின் உற்சாகமான அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.மேலும் மூன்று சினிமாக்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சினிமாப்பயணங்களாக மட்டும் பத்துமுறை வெளியூர். இறுதியாக மும்பையில் எந்திரன் முதற்தோற்ற வெளியீடு.


 


இறுதியாக விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிறைந்தது 2016. இதுவரை நிகழ்ந்தாவற்றிலேயே சிறந்த விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவே. சென்ற ஆண்டு முழுக்க வழக்கம்போல நண்பர்களுடனேயே இருந்திருக்கிறேன். நண்பர்கள் சூழ இருப்பதைப்போல நான் கொண்டாடும் தருணங்கள் வேறில்லை


 


சென்ற ஆண்டின் துயரம் குமரகுருபரனின் மறைவு. இக்கசப்பையும் அளிக்காமல் வாழ்க்கையை நிறைவுசெய்வதில்லை காலம்.தவிர்க்கத்தவிர்க்கத் ஏக்கம் நிறைக்கும் நினைவாக குமரகுருபரன் நின்றிருக்கிறார் என்னுள்


 


வருமாண்டும் உற்சாகமாகவே தொடங்கவிருக்கிறது. ஜனவரி14 முதல் மூன்றுநாள்  கோவையில் திருக்க்குறள் குறித்து ஓரு தொடர்உரை ஆற்றுகிறேன். ஜனவரி இறுதியில் சிலநாள் துபாயில். பிப்ரவரியில் இளையவாசகர் சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம். மார்ச்சில் மலேசியா செல்வதாக உள்ளேன். ஒரு இலக்கியச் சந்திப்பு. இங்கிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் ஊட்டி இலக்கிய முகாம். இவ்வருடம் ஜூனில் சிரபுஞ்சியில் மழைபார்க்கச் செல்லவேண்டுமென திட்டம். கண்டிப்பாக மேலும் ஓர் இமையப்பயணம்


 


இப்பிறப்பை நிறைவுறச்செய்ய ஒரு வாழ்க்கை போதாது என்னும் உணர்வே இருபத்தைந்தாண்டுக்காலமாக என்னை இயக்கும் விசை.என்னையே பலவாகப்பிரித்துக்கொள்கிறேன். படைப்பாளி, பயணி, சினிமாக்காரன், குடும்பத்தவன்,தனியன் என. எல்லா வகையிலும் இந்த ஆண்டை பெருகிநிறைத்திருக்கிறேன். நன்று தொடர்க


 


ஜெ


 


பிகு


 


எழுதி முடித்ததும் எனக்கே சந்தோஷமாக ஆகி  என்னை நானே பாராட்டிக்கொள்ளும்பொருட்டு கீழே போய்  பாசிப்பருப்புப் பாயசம் செய்து மொத்தத்தையும் நானே குடித்துமுடித்தேன். வீட்டில் யாருமில்லை


பழைய கட்டுரைகள்


 


அதுநீயே 2010


வியாசனின் பாதங்களில் 2014


புத்தாண்டுச் சூளுரை 2015


வரும் ஆண்டும் 2016


புத்தாண்டும் உறுதிமொழியும்


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:33

புத்தாண்டில்…

2


 


அன்புடன் ஆசிரியருக்கு


 


இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு விஷ்ணுபுரம் கொற்றவை ஆகிய நாவல்களை மீள் வாசிப்பு செய்ததுடன் பின் தொடரும் நிழலின் குரல் வெள்ளையானை காடு போன்ற உங்களுடைய மற்ற பெரிய நாவல்களையும் ரப்பர்,  ஏழாம் உலகம், கன்னியாகுமரி உலோகம் இரவு, கன்னி நிலம், அறம் தொகுப்பு இணையத்தில் கிடைக்கும் மற்ற சிறுகதைத் தொகுப்புகள் சிலுவையின் பெயரால், முன் சுவடுகள், புல்வெளி தேசம் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என பெரும் புனைவுகளில் இருந்து அபுனைவுகள் வரை நீண்டது. மேலு‌ம் காண்டீபம் வரை வெண்முரசை மீண்டும் வாசித்தேன்.


 


எதை வாசிக்கலாம் என யார் கேட்டாலும் அவர்களிடம் முதலில் பரிந்துரைக்கும் நூலாக நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. மேலும் தலைகீழ் விகிதங்களையும் பொன்னியின் செல்வனையும் பள்ளியில் படிக்கும் போது ஒரே நேரத்தில் வாசித்தேன். இரு படைப்புகளுமே என்னை கவர்ந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை உணர முடிந்தது. அவ்வேறுபாடு என்ன என்பதை புறவயமாக பிறருக்கும் எடுத்துக் கூறும் வகையில் விளக்கிய நூல் நாவல் கோட்பாடு.


 


இவ்வாண்டில் அறிமுகம் செய்து கொண்ட இரு பெரும் படைப்பாளிகள் அசோகமித்திரனும் டால்ஸ்டாயும். தண்ணீர்,  கரைந்த நிழல்கள், இன்று என அவர் படைப்புகளை கால வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஒரு படைப்பாளியின் பரிணாம வளர்ச்சியை கண் முன்னே காண முடிந்தது. டால்ஸ்டாயின் நாயகர்கள் வழியே அவரின் பரிணாம வளர்ச்சியை காண முடிந்தது. போரும் வாழ்வும் (மொழிபெயர்ப்பு டி.எஸ்.சொக்கலிங்கம்) அன்னா கரீனினா(மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) புத்துயிர்ப்பு(மொழிபெயர்ப்பு:கிருஷ்ண்ணையா) என அவருடைய பெருநாவல்களையும்  தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் (மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) எனும் நூலையும் வாசித்தேன்.


 


கல்லூரியிலேயே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை வாசித்திருக்கிறேன். அவருடைய பிற நாவல்களான ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகியவற்றை இவ்வருடம் வாசித்தேன். பிந்தையதே எனக்கு அணுக்கமாக இருந்தது.


 


தமிழின் முன்னோடி படைப்பாளிகள் சிலரையும் இவ்வாண்டு வாசிக்க முடிந்தது. க.நா.சுவின் பொய்த்தேவு ல.சா.ராவின் புத்ர பா.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி ஆ.மாதவனின் புணலும் மணலும் ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தன் சிறுகதைகள் என நவீன தமிழ் இலக்கியத்துக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.


 


அம்மையால் ஊட்டி சந்திப்புக்கு வர முடியாமலாகி பின்னர் கொல்லிமலை சந்திப்பில் கலந்து கொண்டது சிறந்த அனுபவம். மேலு‌ம் சங்கரர் உரை காந்தியம் தோற்கும் இடங்கள் சிங்கப்பூர் பயணம் என உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் jeyamohan.in வழியே ஏறக்குறைய அருகிருந்து காண முடிந்தது.


 


அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல விஷ்ணுபுரம் விருது விழாவின் இரு நாட்கள். குறைந்த நாட்களிலேயே வண்ணதாசனை வெகு நெருக்கமாக உணர முடிந்தது. இரா.முருகன் பவா செல்லதுரை என நிகழ்ச்சியில் பங்கேற்ற படைப்பாளிகளை வாசிக்கவும் விஷ்ணுபுரம் விருது விழா களம் அமைத்தது. கொல்லிமலை மற்றும் கோயம்புத்தூர் சந்திப்புகள் வழியே ஜினுராஜ்,சிவா,சசிகுமார்,ஷாகுல், சுஷில், விஷ்ணு பிரகாஷ், கமலகண்ணன், பிரபு, மகேஷ் (சிலர் விடுபட்டிருக்கலாம்) என பல நண்பர்கள் அறிமுகமாயினர்.  என் அலுவலக சூழலிலும் கிறிஸ்டி, மணிகண்டன் என சில இலக்கிய வாசகர்கள் இவ்வாண்டு அறிமுகமாயினர்.


 


வெய்யோனில் தீர்க்கதமஸின் மறு ஆக்கம் குறித்து என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டதுடன் என்னுடைய இவ்வாண்டு தொடங்கியது. உக்கிரசிரவஸ் சௌதி குறித்த  சொற்களுடன் இவ்வாண்டு நிறைவுற்றிருக்கிறது. நினைவில் நிறுத்தக் கூடிய மிகச் சிறந்த ஆண்டாக இதனை மாற்றிய உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.


 


புத்தாண்டு வாழ்த்துக்களுடன்


 


அன்புடன்


சுரேஷ் பிரதீப்


 


அன்புள்ள சுரேஷ்


 


புத்தாண்டு நினைவின் மிகச்சிறந்த அம்சம் சென்ற ஆண்டை நிறைவுடன் நினைத்துப்பார்ப்பதுதான். நான் அப்படி நிறைவுடன் எண்ணிக்கொள்ளாத புத்தாண்டு ஏதும் சென்ற இருபத்தைந்தாண்டுக்காலத்தில் கடந்துசென்றதில்லை. ஆனால் நான் புத்தாண்டில் சூளுரைகள் எதையும் எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் வெறுமே ஆசைப்பட்டு செய்யாமல் விடுபவை என ஏதுமில்லை எனக்கு.


 


2016 கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்து நான் ஆற்றிய  சங்கரர் உரையுடன் ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே ஒரு தீவிரமனநிலையை அது உருவாக்கியது. அப்துல் ஷுகூர் கண்ணூர் அருகே பெடயங்கூரில் தன் டீக்கடையில் நடத்திவரும் இலக்கியச் சந்திப்புக்கு நண்பர்களுடன் சென்றது முதற்பயணமாகவும் உற்சாகமான தொடக்கம்


 


சென்ற ஆண்டில் முக்கியமாக இளையவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. ஈரோடு, கொல்லிமலை, கோவை, ஊட்டி சந்திப்புகள் மிகமுக்கியமானவை. எனக்கு முற்றிலும் புதிய மிக இளையவயதினரான வாசகர்களை அவை அறிமுகம் செய்துவைத்தன. இந்தவருட விஷ்ணுபுரம் விழா இத்தனை சிறப்பாக நிகழ இந்த இளையவாசகர்களின் வரவு மிக முக்கியமானது. எங்கள் ஓய்வுவிடுதியான ஈரட்டியில் நிகழ்ந்த நண்பர் சந்திப்பு ஓரு சிரிப்புவிழாவாக அமைந்தது.


 


அதன்பின் பயணங்கள். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்பிடி சமவெளிப்பயணம். அதன்பின்  பெரிதும் சிறிதுமாக பல பயணங்கள். ஆண்டு முடிவில் கேதார்நாத் பயணம். டிசம்பரிலேயே காகதீய பேரரசின் நிலங்கள் வழியாக ஒரு நீண்டபயணம் ,கிருஷ்னை நதிக்கரை வரை.  இவ்வருடம் மட்டும் இருபத்தைந்துநாட்கள் இமையமலையில் இருந்திருக்கிறேன்


 


சென்ற ஆண்டில் கணிசமான பொழுதுகள் வெளிநாடுகளில் கழிந்தன. ஜூனில் ஓர் ஐரோப்பியப் பயணம் வாய்த்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரோம், சுவுஸ், ஜெர்மனி வழியாக வந்த பயணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு. அதை ஒரு புனைவுக்காக சேமித்திருக்கிறேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சதீஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, கிரிதரன் ராஜகோபாலன், சிறில் போன்றவர்களுடன் சிலநாட்கள். கனவுபோலிருக்கின்றன இன்று அவை.


 


அதன்பின் இரண்டுமாதம் சிங்கப்பூர். இளமையிலேயே ஓர் ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற கனவு இருந்தது. அதை நிறைவுசெய்துகொண்டேன். பாகுலேயன்பிள்ளை ஜெயமோகன் என என் அப்பாவின் பெயருடன் இணைந்த என் பெயர் பொறிக்கப்பட்ட அந்த அலுவலக அறை நான் என்றும் நிறைவுடன் நினைவுகூர்வது. சிங்கப்பூரில் வாசகர் சந்திப்பு நிகழ்ந்ததும் மலேசியா சென்றதும் மகிழ்வான நினைவுகள்.


 


வழக்கம்போல ஒவ்வொருநாளும் வெண்முரசு. சென்ற ஆண்டு வெண்முரசின் உச்சங்கள் என நான் நினைக்கும் நாவல்கள் எழுந்தப்பட்டன.  பன்னிருபடைக்களம், சொல்வளர்காடு, கிராதம் ஆகியவை நான் எழுதியவற்றிலேயே செறிவான ஆக்கங்கள்.  கூடவே சிறுகதைகள். இரு தொடர்களையும் ஊடாக எழுதியிருக்கிறேன். குங்குமத்தில் முகங்களின் தேசம். ஜன்னல் இதழில் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் இரண்டுமே இவ்வாண்டில் நிறைவுற்றன. சுட்டிவிகடனில் வெள்ளிநிலம் தொடங்கியிருக்கிறது.


 


சினிமாவுக்காக எழுதியது, பயணம்செய்தது வேறு. அதுவும் இவ்வாண்டு நிறைவுதருவதாகவே இருந்தது. எந்திரன்2 வருமாண்டின் உற்சாகமான அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.மேலும் மூன்று சினிமாக்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சினிமாப்பயணங்களாக மட்டும் பத்துமுறை வெளியூர். இறுதியாக மும்பையில் எந்திரன் முதற்தோற்ற வெளியீடு.


 


இறுதியாக விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிறைந்தது 2016. இதுவரை நிகழ்ந்தாவற்றிலேயே சிறந்த விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவே. சென்ற ஆண்டு முழுக்க வழக்கம்போல நண்பர்களுடனேயே இருந்திருக்கிறேன். நண்பர்கள் சூழ இருப்பதைப்போல நான் கொண்டாடும் தருணங்கள் வேறில்லை


 


சென்ற ஆண்டின் துயரம் குமரகுருபரனின் மறைவு. இக்கசப்பையும் அளிக்காமல் வாழ்க்கையை நிறைவுசெய்வதில்லை காலம்.தவிர்க்கத்தவிர்க்கத் ஏக்கம் நிறைக்கும் நினைவாக குமரகுருபரன் நின்றிருக்கிறார் என்னுள்


 


வருமாண்டும் உற்சாகமாகவே தொடங்கவிருக்கிறது. ஜனவரி14 முதல் மூன்றுநாள்  கோவையில் திருக்க்குறள் குறித்து ஓரு தொடர்உரை ஆற்றுகிறேன். ஜனவரி இறுதியில் சிலநாள் துபாயில். பிப்ரவரியில் இளையவாசகர் சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம். மார்ச்சில் மலேசியா செல்வதாக உள்ளேன். ஒரு இலக்கியச் சந்திப்பு. இங்கிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் ஊட்டி இலக்கிய முகாம். இவ்வருடம் ஜூனில் சிரபுஞ்சியில் மழைபார்க்கச் செல்லவேண்டுமென திட்டம். கண்டிப்பாக மேலும் ஓர் இமையப்பயணம்


 


இப்பிறப்பை நிறைவுறச்செய்ய ஒரு வாழ்க்கை போதாது என்னும் உணர்வே இருபத்தைந்தாண்டுக்காலமாக என்னை இயக்கும் விசை.என்னையே பலவாகப்பிரித்துக்கொள்கிறேன். படைப்பாளி, பயணி, சினிமாக்காரன், குடும்பத்தவன்,தனியன் என. எல்லா வகையிலும் இந்த ஆண்டை பெருகிநிறைத்திருக்கிறேன். நன்று தொடர்க


 


ஜெ


 


பிகு


 


எழுதி முடித்ததும் எனக்கே சந்தோஷமாக ஆகி  என்னை நானே பாராட்டிக்கொள்ளும்பொருட்டு கீழே போய்  பாசிப்பருப்புப் பாயசம் செய்து மொத்தத்தையும் நானே குடித்துமுடித்தேன். வீட்டில் யாருமில்லை


பழைய கட்டுரைகள்


 


அதுநீயே 2010


வியாசனின் பாதங்களில் 2014


புத்தாண்டுச் சூளுரை 2015


வரும் ஆண்டும் 2016


புத்தாண்டும் உறுதிமொழியும்


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:33

ஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்

reception


ஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம்.


குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே  அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம்


குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் பார்த்திருப்பார்கள். அவை அவ்வப்போது ஆபத்தையும் விளைவிக்கின்றன அவற்றை உயிர்வேலியால் தடுக்கமுடியவில்லை. ஆகவே ஒரு முட்கம்பிவேலி அமைக்கத் திட்டமிருக்கிறார்கள்.


அதன்பொருட்டு ஒரு நிதிவசூலை சுவாமி வியாசப்பிரசாத் மேற்கொண்டுவருகிறார். குருகுல நெறிகளின்படி ஒரு குறிப்பிட்ட நோக்குடன் மட்டுமே நிதி வசூல்செய்யப்படும். நிரந்தர நிதி அமைக்கப்படாது. ஆகவே எப்போதுமே அன்றாட நிதியில்தான் குருகுலம் செயல்படும்


நிதியுதவி அளிக்கவிரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். வருமானவரி விலக்கு உண்டு. என் தனிப்பட்ட விண்ணப்பமாகவும் இதைக்கொள்க


 


ஜெ


 


 


Cheques are to be drawn in favor of Narayana Gurukulam


Postal Address:


Swamy Vyasaprasad


Narayana Gurukulam


Fern Hill PO


Nigiris District


Tamilnadu India


 


Bank Transfers can be made to the following account


AC Name: Narayana Gurukulam


Ac No: 10834912288


IFS Code: SBIN 0000891


State Bank of India Branch Udhagamandalam


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:32

ஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்

reception


ஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம்.


குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே  அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம்


குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் பார்த்திருப்பார்கள். அவை அவ்வப்போது ஆபத்தையும் விளைவிக்கின்றன அவற்றை உயிர்வேலியால் தடுக்கமுடியவில்லை. ஆகவே ஒரு முட்கம்பிவேலி அமைக்கத் திட்டமிருக்கிறார்கள்.


அதன்பொருட்டு ஒரு நிதிவசூலை சுவாமி வியாசப்பிரசாத் மேற்கொண்டுவருகிறார். குருகுல நெறிகளின்படி ஒரு குறிப்பிட்ட நோக்குடன் மட்டுமே நிதி வசூல்செய்யப்படும். நிரந்தர நிதி அமைக்கப்படாது. ஆகவே எப்போதுமே அன்றாட நிதியில்தான் குருகுலம் செயல்படும்


நிதியுதவி அளிக்கவிரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். வருமானவரி விலக்கு உண்டு. என் தனிப்பட்ட விண்ணப்பமாகவும் இதைக்கொள்க


 


ஜெ


 


 


Cheques are to be drawn in favor of Narayana Gurukulam


Postal Address:


Swamy Vyasaprasad


Narayana Gurukulam


Fern Hill PO


Nigiris District


Tamilnadu India


 


Bank Transfers can be made to the following account


AC Name: Narayana Gurukulam


Ac No: 10834912288


IFS Code: SBIN 0000891


State Bank of India Branch Udhagamandalam


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:32

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74

[ 22 ]


பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர்.


கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய கற்கள். ஆனால் அவற்றை மதிப்பற்றவை என்று சொல்லி விலக்கினால் அவர்கள் அதைப்போன்றவைதான் என எண்ணி அருமணிகளையும் வீசிவிடக்கூடும் என்பதனால் எல்லா கற்களையும் ஒரே விலைக்கு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் வணிகர். அவர்களின் ஈட்டல்கள் அருமணிகளில் மட்டுமே இருந்தன. ஒரு அருமணி நூறு எளியகற்களுக்கான இழப்பை ஈடுசெய்தது.


அருமணிகள் கிடைத்ததும் அவற்றை பாலில் இட்டு பால்நிறம் மாறுவதைக்கொண்டும், சிறுபேழைக்குள் இட்டு மூடி துளைவழியாக நோக்கி உள்ளே ஒளி எஞ்சுவதைக்கொண்டும் ஒளியோட்டத்தை மதிப்பிட்டனர். சிறிய மரப்பெட்டிக்குள் அவற்றை வைத்து ஊசித்துளைவழியாகச் செல்லும் ஒற்றை ஒளிக்கீற்றை அதன்மேல் வீழ்த்தி பிறிதொரு துளைமேல் விழிகளை அழுத்திவைத்து நோக்கி அவற்றின் உள்நீரோட்டத்தை கணித்தனர். பூனைக்கண்போல எருமையின் உள்விழிபோல பனித்துளிபோல அனல்பொறிபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்  வண்ணங்கள் கொண்ட மணிகள்.


மலையேறிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பீதர்குழுக்கள் அனைத்துக்குமே அருமணிகள் வாய்த்தன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே தெய்வவிழிகளைப்போன்ற மணிகள் அமைந்தன. “அருமணியின் மதிப்பு என்பது அதைப்போன்ற பிறிதொன்றில்லை என்பதனால் உருவாவதே. தெய்வத்தன்மை என்பது பிறிதொன்றிலாமை மட்டுமே” என்று பாணன் சொன்னான். “அரியசொல்போல” என்று முதியபீதர் சேர்த்துக்கொண்டார். “சொல்வதற்குரிய தருணத்தில் சொல்வதற்குரிய முறையில் சொல்லப்பட்ட சொல் முடிவின்மையை ஒளியென தன்னுள் சுருட்டிக்கொண்டது. அது கூழாங்கற்கள் நடுவே அருமணி.”


சிறந்த கல் கிடைத்த பீதர்குழு அதை அறிவிக்கும்பொருட்டு தங்கள் சிறுகடைக்குமேல் அனலுமிழும் முதலைநாகத்தின் கொடி ஒன்றை பறக்கவிட்டது. அதைக்கண்டதும் வணிகக்குழுக்களில் பாராட்டொலிகள் எழுந்தன. சிறுவணிகர்கள் வந்து அந்த அருமணிகொண்டவனிடம் தங்களுக்கு அவன் அன்றைய உணவையும் குடியையும் அளிக்கவேண்டும் என கோரினர். அவனைச் சூழ்ந்துநின்று அவன் குலத்தையும் வணிகக்குழுவையும் வாழ்த்தி கூவினர். பாணர் அந்த அருமணியைப்பற்றி அப்போதே கவிதை புனையத்தொடங்கினர். அதன் கதைகளை அவர்கள் காற்றினூடாக மொழியில் அள்ளி எடுத்து வைத்தனர்.


உச்சிப்பொழுது கடந்ததுமே மலைகளின்மேல் முகில்திரை சரிந்து இருண்டு மூடியது. குளிர்ந்த ஊசிகள் போன்ற நீர்த்துளிகள் காற்றில் வந்து அறைந்தன. கடைகளை மூடிவிட்டு தோல்கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை வைத்துக்கொண்டு சூழ்ந்தமர்ந்து கிழங்குகளையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி தேறல் அருந்தினர். அதன்பின் அருமணிகளைப்பற்றியே பேசினர். அப்படியே விழுந்து துயின்று கனவுகண்டு எழுந்தமர்ந்து உளறி உடல்நடுங்கினர். “அருமணிகளுக்குக் காவலாக இரு தேவர்கள் உள்ளனர். பகற்காவலன் விழித்திருக்கையில் நமக்கு இனிய எண்ணங்களை அளிக்கிறான். இரவுக்காவலன் துயிலில்வந்து கொடுந்தோற்றம் காட்டி அச்சுறுத்துகிறான்” என்றனர் பாணர்.


அருமணிகளை கடல்வரை கொண்டுசென்று சேர்ப்பது பெரும்பாடு. அவர்களிடம் அருமணி இருக்குமென்பதை அனைவரும் அறிந்திருப்பர். வில்லவர்கள் சூழ சென்றாலும்கூட வழியெங்கிலும் கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சரளமரத்தின் சிறுகொட்டையில் துளையிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அகற்றிவிட்டு அதில் அருமணிகளை இட்டு பசையிட்டு ஒட்டி பணியாட்களைக்கொண்டு விழுங்கச்செய்வார்கள். ஒவ்வொருநாளும் அவன் மலத்திலிருந்து அதை திரும்ப எடுத்து கழுவி இன்னொரு கொட்டைக்குள் இட்டு மீண்டும் விழுங்கச்செய்வார்கள்.


அருமணி எந்த ஏவலனின் குடலுக்குள் இருக்கிறதென அவ்வணிகக்குழுவிலேயே பிற ஏவலருக்கு தெரிந்திருக்காது. பிறரிடம் சொல்லாமலிருப்பதே அந்த ஏவலனின் உயிருக்கும் உறுதியளிப்பதென்பதனால் அவனும் பகிர்ந்துகொள்வதில்லை. வணிகக்குழுக்களைத் தாக்கும் கொள்ளையர் அவர்கள் அனைவரையும் கொன்று அத்தனைபேர் வயிற்றையும் கிழித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பெருவாய் என வயிறு திறந்து கிடக்கும் பிணங்களை அவர்களனைவருமே செல்லும் வழிகளில் கண்டிருந்தனர்.


அவ்விதை எவ்விதமேனும் திறந்தால் தன் உடலுறுப்புகளை வைரக்கூர் வெட்டிச்செல்லுமென்றும் குருதிவார விழுந்து இறக்கவேண்டியிருக்குமென்றும் அதை விழுங்கியவன் அறிந்திருப்பான். தன்னை பாம்பு உறையும் புற்று என்றும் வாளிடப்பட்ட உறை என்றும் உணர்வான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை காணமுடியும். அவன் சொல்லடங்கி தனித்திருப்பான். தன் உடலை எடைகொண்டதைப்போல கொண்டுசெல்வான். தன்னை ஓர் அரும்பொருளென ஒருகணமும் நச்சுத்துளியென மறுகணமும் உணர்ந்துகொண்டிருப்பான். கனவுகண்டு எழுந்தமர்வான். நடுங்கி அதிர்ந்து மெல்ல அமைந்தபின் இருளுக்குள் நெஞ்சைத்தொட்டு புன்னகை செய்வான்.


தன் உடலில் இருந்து அருமணி வெளியே சென்ற முதற்கணம் ஆறுதலடைவான். சற்றுநேரத்திலேயே தனிமைகொண்டு பதைக்கத் தொடங்குவான். அதை மீண்டும் விழுங்கும்வரை தன்மேல் சூழும் பொருளின்மையை அவனால் தாளமுடிவதில்லை. மீண்டும் அது தன் வயிற்றை அடைந்ததும் முகத்தில் நிறைவு தெரிய நீள்மூச்சுவிட்டு அமைவான். “சுடர் ஏற்றப்படும்போதே அகல். திரியணைந்தபின் அகலில் குடியேறும் மூத்தவளின் வெறுமை” என்று அதை ஒரு பாணன் சொன்னான்.


அருமணி சுமப்பவர்களை முத்துச்சிப்பிகள் என்றழைத்தனர். சூக்திகர்களுக்கு வணிகக்குழுக்களில் பெருமதிப்பிருந்தது. மணியை கையளித்ததும் அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ஆனால் கைநிறையப்பெற்ற பொற்காசுகளை பொருளற்ற ஓடுகளாகவே அவர்களால் காணமுடியும். அந்த ஆண்டுமுழுக்க அவர்கள் தாங்கள் சூக்திகர்களாக இருந்தோம் என்பதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அருமணி தங்களுக்குள் இருந்தபோது உயர்ந்த எண்ணங்களுக்கு ஆளானதாகவும் தெய்வங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் சொல்வார்கள். நாளடைவில் அதை அவர்களே நம்பத் தொடங்குவார்கள். உயர்ந்த எண்ணங்களால் உள்ளம்நிறையப்பெற்று மேலெழுவார்கள். ஓர் அருமணி இருந்த இடத்தை நிரப்ப எத்தனை அரியவை தேவை என எண்ணி வியப்பார்கள்.


ஆனால் கின்னரஜன்யர்களுக்கு அவை பொருளற்றவை என்றே தோன்றின. கின்னரர்களிடமிருந்து அவற்றைப்பெற்று சிறிய குலுக்கைகளில்போட்டு கூரைமேல் கட்டிவைத்தனர். அவை நஞ்சு என்றும் குழவியர் கையில் கிடைக்கலாகாதென்றும் அவர்கள் எண்ணியமையால் எப்போதும் இல்லங்களின் முகப்பில் உத்தரங்கள் எழுந்துசந்தித்த கூம்பின் உச்சியில் கணுமூங்கில் சாற்றிவைத்து ஏறிச்சென்று எடுக்கும் உயரத்திலேயே வைத்திருந்தனர். அவற்றை அவர்களுக்குள் எவரும் திருடுவதில்லை என்பதனால் கண்காணிப்பு இருப்பதுமில்லை. அர்ஜுனன் ஊரினூடாக தோளில் காவடியில் நீர்க்குடுவைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு அனல் அளித்த பெண் திண்ணையிலிருந்து எட்டிநோக்கி கைதட்டி அழைத்து “குறிமரமே, ஒருகணம் இங்கு வருக!” என்றாள்.


அவன் அருகே  சென்றபோது அவள் பாறைமுகடுவளைவில் மலைத்தேன்கூடு என தொங்கிய உறியை சுட்டிக்காட்டி “அந்தக் குலுக்கையை எடுத்துத்தர இயலுமா?” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க!” என்றான்.


KIRATHAM_EPI_74


அவள் “எப்படி அத்தனை கூர்மையாக எறியமுடிந்தது?” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி?” என அவள் மீண்டும் கேட்டாள். “படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.” அவன் திரும்பிச்செல்ல முயன்றபோது அவள் அக்குலுக்கையை தரையில் கொட்டினாள். அதில் ஒளிவிடும் மலரிதழ்கள்போல நீலமும் பச்சையும் சிவப்பும் நீர்மையுமாக வண்ணம் மின்னும் அருமணிகள் பரவின. அவள் அவற்றிலிருந்து கைப்பிடி அள்ளி “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.


“எனக்கா?” என்றான். “நான் செய்தது சிறிய பணி, இளையவளே.” அவள் கன்னங்கள் குழியச் சிரித்து “இவற்றின்பொருட்டு அல்லவா இத்தனை மலையேறி வருகிறீர்கள். உங்களுக்கு அளிக்கவேண்டுமென நினைத்தேன்” என்றாள். “நன்று, நான் இதை ஏற்கப்போவதில்லை. எனக்கு பொருட்களில் நாட்டமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பொருளுக்கில்லை என்றால் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள். “ஓர் இடத்திற்கு நான் செல்வது முந்தைய இடத்திலிருந்து விலகும்பொருட்டு மட்டுமே” என்றான் அர்ஜுனன்.


அவள் ஒருகணம் கழித்து சிரித்து “மிகச்சரியான சொற்களை எடுக்கிறீர்கள்” என்றாள். மீண்டும் சிரித்து “எண்ணவே வியப்பாக இருக்கிறது, இப்படியன்றி வேறு எப்படியும் இதை சொல்லிவிடமுடியாது” என்றாள். அர்ஜுனன் “நான் சொல்வலன் என்று சொல்லமாட்டேன். ஆனால் எந்தப் படைக்கலத்தையும் முழுதுறக் கற்பவன் சித்தமும் சொல்லும் கூர்கொள்ளப்பெறுகிறான்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். அவனிடம் பேசமட்டுமே அவள் விழைகிறாள் என்பதை விழிகள் காட்டின. முகம் அவன் காதல்மொழி சொல்லக்கேட்பவள்போல மலர்ந்திருந்தது. கண்களில் சிரிப்பென தவிப்பென ஓர் ஒளி அலையடித்தது.


“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” ஏன் அதை அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என அவன் வியந்தான். அறியா மலைமகள். அவளிடம் ஏன் மதிப்பை ஈட்ட விழைகிறேன்? இல்லை, இத்தருணத்தை திசைதிருப்ப விரும்புகிறேன். இச்சொற்கள் வழியாக இப்போது இருவர் நடுவே நுரைகொண்டெழும் விழைவை மூடிப்போர்த்திவிட முனைகிறேன்.


“ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “வெண்ணை திரட்டுகையில் கலங்கி நுரைகொள்வது உள்ளம். திரண்டுவருவது உள்ளறிந்த ஒரு மெய்.” அவன் அவளை வியப்புடன் நோக்கினான். அவளை சற்றுமுன் எளிய மலைமகள் என அவன் கருதியதை எண்ணிக்கொண்டான். அப்படியல்ல என்று அவன் உள்ளூர அறிவான். இல்லையென்றால் அவன் அவள் முன் தன் திறனை காட்டியிருக்கமாட்டான். கணுமுளைமேல் ஏறி அக்குலுக்கையை எடுத்தளித்தபின் விலகிச்சென்றிருப்பான். அவள் அவனை அழைத்த குரலின் முதல்துளியிலேயே அவளை அறிந்திருக்கமாட்டான்.


“நன்று” என அவன் முழுமையாக தன்னை பின்னிழுத்துக்கொண்டான். “படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்.” அவன் தலைவணங்கி தன் காவடியை தோளிலேற்றிக்கொண்டான். அவள் மேலும் பேசவிழைபவள்போல அவனுக்குப் பின்னால் வந்தாள். அவள் கைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடுவதைக் கண்டதும் அவன் நெஞ்சு மீட்டப்பட்டது. விழிகளை விலக்கி “வருகிறேன்” என்றான்.


“இந்தக் கற்களை இவர்கள் எதற்காக பெற்றுச்செல்கிறார்கள்?” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்?” என்றாள். “இவை அணிகலன்கள்” என்றான். அவள் “எங்கள் பாணர் பிறிதொன்று சொன்னார். இவை தெய்வங்களின் விழிகள். இவற்றை அவர்கள் நெற்றியில் சூடும்போது பிறிதொரு நோக்கு கொள்கிறார்கள்” என்றாள். அர்ஜுனன் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றான். அவள் மேலும் தொடர்ந்தபடி “அவர்கள் அதன்பின் கின்னரரை காணமுடியும். அவர்களிடம் பேசமுடியும்” என்றாள்.


“ஏன், இந்த அருமணிகள் உங்களுக்கும் விழியாகலாமே?” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே? எங்களுக்கு இவ்விழிகள் தேவையில்லை. எங்கள் விழிகள் இந்தக் கற்களைவிட அரியவை.” அவன் அறியாமல் அவளுடைய பச்சைநிறக் கண்களை நோக்கியபின் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்களுக்கும் இவ்விழிகள் தேவையில்லை. நான் உங்கள் விழிகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை மற்றவர்களின் விழிகளைப்போன்றவை அல்ல. அவை பச்சைநீல வண்ணம் கொண்டிருக்கவில்லை. கன்னங்கரிய மணிக்கல் போலிருக்கின்றன. அவற்றின் ஒளி ஆழமானது.”


அவன் மெல்லிய திணறலொன்றை அடைந்தான். அவளை தவிர்த்துச்செல்ல விரும்பினான். அவள் மேலும் உடன்வந்தபடி “உங்கள் உடலெங்கும் இருக்கும் வடுக்களும் விழிகளைப்போல ஒளிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் நோக்கு இருக்கிறது. நீங்கள் திரும்பிச்செல்லும்போதும் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் விரைந்து காலடிகளை எடுத்துவைத்தான். அவள் அவனுடன் வந்தபடி “விண்ணவர்க்கரசன் உடலெங்கும் விழிகொண்டவன் என்கிறார்கள். அவரை எண்ணாமல் உங்களை நோக்கமுடியவில்லை” என்றாள். அவன் எவரேனும் நோக்குகிறார்களா என விழியோட்டினான். எங்கும் முகங்கள், ஆனால் எவையும் நோக்கவில்லை.


“கண்ணோட்டமில்லா கண்கள் புண்கள் என்கின்றனர். புண்கள் கண்களாகுமென்றால் நீங்கள் கனிந்திருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் “புண்களினூடாக மானுடரை நோக்க கற்றுக்கொண்டேன்” என்றான். “ஆம், அப்படித்தான் நானும் எண்ணினேன்” என அவள் உவகையுடன் மெல்ல குதித்தபடி சொன்னாள். அவள் அணிந்திருந்த கல்மணிமாலைகள் கூடவே ஒலித்து பிறிதொரு சிரிப்பொலியெனக் கேட்டன.


“நீங்கள் என் குடில் வழியாகச் செல்வதை நோக்குவேன். உங்கள் விழிகளெல்லாம் என்னை நோக்குவதைக் காண்பேன்” என்றாள். பின்னர் சிரித்தபடி “இங்குள்ள அத்தனை பெண்களும் உங்களைத்தான் நோக்குகிறார்கள் என்று அறிவீர்களா?” என்றாள். “பெண்களை நான் கடந்துவந்துவிட்டேன், இளையவளே” என்றபின் அர்ஜுனன் தன் கூடாரம் நோக்கி சென்றான். அவள் அங்கேயே நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்நோக்கை அவன் தன் உடலால் கண்டான். மலைமகள்களுக்கு அச்சமும் நாணமும் மடமும் பயிற்றுவிக்கப்படவில்லை. அவையில்லாத இடத்தில் வெற்றுடல்போல் வெறும்வேட்கையே எழுந்து நின்றது. ஆனால் அது உளவிலக்களிக்கவில்லை. தூயதென இயல்பானதெனத் தோன்றியது. அதன்முன் அணிச்சொற்களும் முறைமைகளும் பொருந்தா ஆடைகளெனப்பட்டன.


[   23 ]


அர்ஜுனன் கூடாரத்திற்குள் வேட்டையாடிக் கொணர்ந்த பறவைகளை சிறகு களைந்துகொண்டிருந்தபோது முதியபீதர் உள்ளே வந்தார். சிறகுபோன்ற கைகள் கொண்ட ஆடையை அணைத்துக்கொண்டு அவனருகே அமர்ந்தார். அவன் அப்போதுதான் அவரைக்கண்டு வணங்கினான். அவர் அவனை சுருங்கிய கண்களால் நோக்கி “நீங்கள் பேசிக்கொண்டு வருவதை கண்டேன்” என்றார். அவர் சொல்வதென்ன என அவன் உடனே புரிந்துகொண்டான். பேசாமல் தலையசைத்தான்.


“நான் உன்னிடம் எச்சரித்தேன்” என்றார் அவர். “நான் அத்துமீறவில்லை” என்றான் அவன். “எல்லைகள் மீறப்பட்டுவிட்டன. அதை நெடுந்தொலைவிலேயே எவரும் காணமுடியும்” என்றார். “ஆண்கள்கூட மறைத்துக்கொள்ளமுடியும். பெண்களின் உடல் அனைத்தையும் காட்டுவது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இல்லை, இம்முறை தெளிவாகவே நீ யார் என அவளுக்குக் காட்டினாய்” என்று அவர் சொன்னார். அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன்றி வேறல்ல அது.”


“இங்கு எவரும் நீ யாரென அறிந்திருக்கவில்லை, நான் அறிவேன். மும்முறை நான் கங்கையினூடாக பயணம்செய்திருக்கிறேன்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “ஏன் இக்கோலத்தில் இருக்கிறாய் என நான் அறியேன். ஆனால் நீ எங்கும் உன்னை ஒளித்துக்கொள்ள முடியாது. விண்ணவனாகிய உன் தந்தையின் பெருவிழைவை உடல் முழுக்க கொண்டவன் நீ. உன் விழிகளைக் கண்ட பெண்கள் அக்கணமே அனல்கொள்வார்கள்” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லும் இன்றியே அந்தப் பெண் அதை அறிந்துகொண்டிருப்பாள் என நான் உணர்ந்தேன்.”


“ஆம், அவள் கூரியவள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, அக்குலத்திலேயே கூரியவள்தான் உன்னை நோக்கி வருவாள். வான்நாரைகளில் விசைமிக்கதே முதலில் பறக்கும்” என்று அவர் சொன்னார். “அவளில் எழுவது இக்குடியின் எல்லைகளை மீறவிரும்பும் ஒன்று. அது அவள் குருதியில் நுரைக்கிறது. அது மிகமெல்லிய விழைவாக தன்னை வெளிப்படுத்தினால் இனிய நகையாகவும் அழகிய சொல்லாகவும் எழலாம். ஆனால் உள்ளே இருப்பது காலப்பெருக்கை நிகழ்த்தும் விசை. அதையே ஆற்றலன்னை என வழிபடுகின்றனர். அவளுக்கு கை ஆயிரம். நா பல்லாயிரம். விழி பலப்பல ஆயிரம். பெருங்கடல் அலை என வந்து உன்னை அவள் இழுத்துச் சுருட்டிச் சென்றுவிடுவாள்.”


அர்ஜுனன் “ஆம், அவளுடைய விழைவை நான் உணர்கிறேன்” என்றான். “பெண்கள் அனைவரிலும் விழைவு இருக்கும். ஆனால் அவை அஞ்சி கட்டுக்குள் நின்றிருக்கும். அவர்களில் ஆற்றல்மிக்கவளே பெருவிழைவை அடைவாள். அவளை அக்கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடுக்கவும் முடியாது” என்றார் பீதர். “மீறத்துணிபவள் மீறும் தகுதிகொண்டவள் என்பதை ஒவ்வொருமுறையும் காண்கிறேன், இளைய பாண்டவனே.”


அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நான் அதை விரும்பவில்லை” என்றான். “நாங்களும் விரும்பவில்லை” என்றார் அவர். “நீ அதை வென்றுசெல்லக்கூடும். அதைப்போன்ற பலவற்றைக் கண்டவனாக இருப்பாய். ஆனால் நாங்கள் இங்கே நெடுங்காலமாக அமைத்துள்ள இந்த வணிகவலை அறுபடும். மீண்டும் அதை நெய்து சீரமைக்க நெடுங்காலமாகும்.” அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க! கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு!” என்றார். “அவ்வண்ணமே” என்று அர்ஜுனன் எழுந்து தன் வில்லம்பை எடுத்துக்கொண்டான்.


அவன் கடைக்குச் சென்று தன் முதன்மை வணிகரிடம் ஏனென்று விளக்காமல் முதுபீதரின் ஆணையை மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். தன் பொதியைக்கூட எடுத்துக்கொள்ளாமல் மலைப்பாறைகளின் அரணைக் கடந்து அப்பால் சென்றான். அவன் கிளம்பிச் செல்வதை வேறு எவரிடமும் சொல்லவில்லை. மூடுபனி எழத்தொடங்கியிருந்த பிற்பகல். கடைகளை மூடி பொருட்களை எடுத்து தொகுத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.  கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை கொண்டுவைத்துக்கொண்டிருந்தனர் சிலர். அவன் பனித்திரைக்குள் மறைந்தபோது எவரும் நோக்கவில்லை. உருளைக்கற்கள் பரவிய சேற்றுச்சாலையில் அவன் தன் முன் தெரிந்த சில சில எட்டுகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.


சாலை வளைவு ஒன்றைக் கடக்கையில் மிகமெல்லிய ஓசையிலேயே அவன் படைக்கலங்களை கேட்டுவிட்டான். உடல் அசைவற்று நிற்க இடக்கைமட்டும் வில்லை தூக்கியது. “அசையாதே” என ஓர் ஒலி பனிக்கு அப்பால் கேட்டது. பட்டுத்திரையில் ஓவியமென கின்னரஜன்யன் ஒருவன் எழுந்துவந்தான். அவன் விழிகளை அவன் சந்தித்தபின்னரே அவனை மானுடனாக எண்ண முடிந்தது. மேலும் நால்வர் சித்திரமெனத் தோன்றி சிலையென முப்புடைப்பு கொண்டனர். முன்னால் வந்தவன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் “மானுடனே, உன்னை முன்னரே எச்சரித்திருக்கவேண்டும். இங்கு வரும் எவரும் அறிந்தபின்னரே வருவார்கள் என எண்ணியிருந்தோம். பிழையாயிற்று” என்றான்.


அர்ஜுனனின் கண்களையே பிறர் நோக்கி நின்றனர். அவர்களின் கைகளில் கூர்முனை கொண்ட வேல்கள் பாயக்காத்து நின்றிருக்கும் நாகங்களென நீண்டு அசைவற்று நின்றன. “எங்கள் குலமகளிடம் நீ பேசிக்கொண்டிருப்பதை பலர் நோக்கினர். உன்னவர் பலர் வியந்துமிருப்பர். உன் பிணம் இங்கு கிடப்பது அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலென அமையும்” என்றபடி அவன் தன் வேலை தூக்கினான்.


அர்ஜுனனின் விழிகள் வலப்புறம் அசைய அவ்வசைவால் ஈர்க்கப்பட்டு அவன் தோழர்களின் நோக்கு வலப்புறமாக ஒருகணம் சென்று மீள்வதற்குள் அவன் வேல் முனையைப்பற்றி அதை பின்னால் உந்தி அவ்வீரர்தலைவனின் தோளுக்கு கீழிருந்த நரம்புமுடிச்சைத் தாக்கினான். அவன் வலிப்பு கொண்டு கீழே விழுவதை நோக்கி பிறர் கண்கள் சென்று மீள்வதற்குள் அவர்களின் உயிர்நாண் இணைவுகளில் அவன் வேல் முனை பதிந்து மீண்டது. ஈரப்பொதி மண்ணில் பதியும் ஓசையுடன் அவர்கள் விழுந்தனர்.


வலிப்பு கொண்டு வாய்நுரை வழிய கைகால்கள் மண்ணிலிழுபட கிடந்தவர்களை அவர்களின் ஆடைகளாலேயே கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று ஒரு மரத்தடியில் நீண்டுநின்றிருந்த பாறைக்கு அடியில் கிடத்தினான். அவர்களின் தலைவன் நினைவுமீண்டு “உன்னை விடமாட்டோம். உன் தலையை எங்கள் தெய்வங்களுக்கு முன் படைப்போம்” என்றான். பிறரும் நினைவுமீண்டனர். அவர்களின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நின்றான். பின்னர் திரும்பி ஊர் நோக்கி சென்றான்.


அவர்கள் திகைத்து அவன் செல்வதை நோக்கிக்கிடந்தனர். தலைவன் கட்டுகளை அவிழ்த்து எழும்பொருட்டு உடலை உந்தி திமிறினான். அவன் எழக்கூடுமென்ற ஐயமே இல்லாதவனாக திரும்பி நோக்காமல் அர்ஜுனன் நடந்தான். அவன் முன் பாதை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது. அவன் காலடியோசை அதில்பட்டு அவன்மேலேயே வந்து பெய்தது. ஊர் எல்லைக்குள் அவன் நுழைந்தபோது தோல்கூடாரங்கள் அந்திமுகில்கள் என உள்ளே எரிந்த அனல் தெரிய சிவந்திருந்தன. வெளியே எவருமிருக்கவில்லை.


அவன் அவள் இல்லத்தை அடைந்து சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் வில்லின் நாணில் ஒரு கல்லைவைத்து அவள் மூடிய சாளரத்தின் கதவின் மேல் எய்தான். மூன்றுமுறை எய்தபோது அக்கதவு திறந்தது. புதரிலிருந்து மலர்க்கழி ஒன்றை அவன் ஒடித்து வைத்திருந்தான். அவள் மார்பில் அந்த மலர்க்கணை சென்று விழுந்தது. திகைத்து பின்னடைந்து அதை எடுத்து நோக்கியபின்  கதவைத் திறந்தபடி சற்றுநேரம்  காத்திருந்தாள். பின்னர் கதவு மூடியது.


பின்கட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ஜுனன் இல்லத்தின் பின்பக்கம் சென்று அவள் வெளியே வந்து சுற்றிலும் பார்ப்பதை கண்டான். பனியிலிருந்து எழுந்து அவள் முன் சென்று நின்றான்.  அவள் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள். கன்னங்களில் குழிவிழ  சிரித்தாள். செந்நிற ஒளியுடன் அவளுக்குப் பின்னால் திறந்திருந்த கதவு அவ்வில்லமும் சிரிப்பதைப்போல தோன்றவைத்தது.


அவன் அருகே சென்றபோது நாணம் கொள்ளவோ விழிகளை விலக்கிக்கொள்ளவோ செய்யவில்லை. அவன் அவளை அணுகி இடையை வளைத்து அவளைப் பற்றி தன் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டு அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி முத்தமிட்டான். அவளை உண்ணவிழைபவன்போல அவளில் புகுந்து திளைப்பவன்போல அவளுடனான தொலைவை தவழ்ந்து தவழ்ந்து கடப்பவன் போல.


அவள் விடுவித்துக்கொண்டு “உள்ளே வருக!” என்றாள். “யார் இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன?” என்று அவள் அவன் காதில் அனல்படிந்த குரலில் சொன்னாள். உள்ளே அனல்சட்டியின் செவ்வொளி பரவியிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் பதிக்கப்பட்டிருந்த மென்மயிர்த் தோல்பரப்பு அவ்வொளியில் அனல்போலத் தெரிந்தது. அவள் அவனை தன் உடலால் வளைத்து கவ்விக்கொண்டாள். காமம் கொதித்த அவள் மூச்சை அவன் செவிகள் உணர்ந்தன. அவள் உருகும் மணத்தை மூக்கு அறிந்தது. மென்மயிர்த்தோல் பரப்பிய மஞ்சத்தில் அவளுடன் அவன் அமர்ந்தான். உடல்களால் ஒருவரை ஒருவர் இறுதிக்கணத்திலென பற்றிக்கொண்டனர்.


பின்னர் நெடுநேரமென உணர்ந்து விழிப்புகொண்டு எழுந்தபோதுதான் அவன் அவள் பெயரை கேட்டான். “பார்வதி” என்று அவள் மறுமொழி சொன்னாள். அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை நோக்கினான். அதிலிருந்த அனல் அணைந்து கனிவு நிறைந்திருந்தது. “நான் யார் என நீ கேட்கவில்லை” என்றான். “பெயரையும் குலத்தையும்  மட்டும்தானே இனி அறியவேண்டியுள்ளது?” என்றாள் அவள்.


வெண்முரசு விவாதங்கள்


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:30

December 30, 2016

பணமில்லாப் பொருளாதாரம் – பாலா

.untitled


சென்னை நுங்கம்பாக்க நெடுஞ்சாலையில், லேண்ட்மார்க் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. உண்மையிலேயே லேண்ட்மார்க்தான். புத்தக ஆர்வலர்கள், புத்தகங்களைப் பார்வையிட்டு, திறந்து, நுகர்ந்து, புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். வார இறுதியில் அங்கே செல்வது, பலருக்குப் பெரும் பொழுதுபோக்கு. பல இயக்குநர்கள், உதவி இயக்குநர்களாக இருக்கும் போது, ஓசியில் புத்தகம் படிக்க என்றே அதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தக் கடை மரித்து, சில வருடங்களாகின்றன. இன்று சென்னையின் பல புத்தகக்கடைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சினிமா சி.டிக்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிவிட்டன. புத்தகங்கள் ஒரு மூலையில் கிடக்கின்றன.


இணையம் என்னும் பெருவழியில், பொருளாதாரப் பரிமாற்றங்கள் துவங்கியதின் பலி, சென்னை மற்றும் மும்பையின் புத்தகச் சில்லறை நிறுவனங்கள். காரணம், இணையவழிப் பரிமாற்றம், சுலபம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதும் கூட. கால மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதன் காரணமாக, மிக எளிதாக நுகர்வோர் மாறிவிட்டனர்.


இந்திய வேளாண் பொருளாதாரம், மொத்தப் பொருளாதார மதிப்பில் 14% இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 50% மக்கள் இப்பொருளாதாரத்தை நம்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 22-30 சத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். கிட்டத்தட்ட 25 சத மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எனில், 25-30 கோடி மக்கள் அதிகம் கல்வியறிவில்லாத, குறைந்த பட்ச வருமானத்துக்கு வழியில்லாதவர்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 75%.


இந்தப் பொருளாதாரம் தான் நமது முதன்மைப் பொருளாதாரம். இது பெரும்பாலும் உணவு உற்பத்தியில் இருக்கிறது. அதற்கடுத்து, சிறு தொழில்கள், கைவினைப் பொருள் பொருளாதாரம் என்னும் அடுக்கு இருக்கிறது. அதற்கடுத்தபடியாகத் தான் உற்பத்தி, கட்டுமானம், சேவை என்னும் பொருளாதாரங்கள் உள்ளன. அதிலும், கட்டுமானம் போன்ற துறைகளில் இருக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களே.


ஊரக மற்றும் சிறு தொழில்களில், பொருள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் பண மூலமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.


இந்தியப் பொருளாதாரத்தில் மொத்தத்தில் 10% மக்களே, பணமில்லாத ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். நகரப் பொருளாதாரமும், பெரும்பாலும் பணப்படிமாற்றங்களின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதே இதன் பொருள்.


எனில், இந்தப் பணமில்லாப் பரிமாற்றத்தின் தேவை என்ன? பொருளாதார நோக்கில், பணம் அல்லது இணயம், ஒரு பரிமாற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படவேண்டுமெனில், அது மிகக் குறைந்த செலவு பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.


எடுத்துக் காட்டாக, சென்னை போன்ற ஒரு மாநகரில், மின் கட்டணம் செலுத்த வேண்டுமெனில், பைக் அல்லது பஸ் பிடித்து, கட்டண அலுவலகம் சென்று பணம் கட்டுதலின் விலை மிக அதிகம். 5000 மதிப்புள்ள மின் கட்டணத்துக்கு, 2 மணி நேரமும், 20 ரூபாயும் பிடிக்கும். இதுவே வங்கி மூலம் செலுத்தும் போது, கட்டணமில்லாச் சேவை இருக்கிறது. ஒரு நகரத்தில் வசிக்கும், மத்தியமருக்கு இது பெரும் வரப்ரசாதம். அடுத்து, சிறு கடைகளில் பொருள் வாங்கும் போது, பணம் உபயோகிக்காமல், மொபைல் வழி வசதிகள் உள்ளன – இவற்றுக்கு 1-2% வரை சேவைக் கட்டணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு இலவசம். ஆனால், இவையிரண்டுக்கும் தேவை – தடையில்லா இணையச் சேவையும் அதற்கான அடிப்படைக் கட்டுமானமும்.


இதுவே ஒரு கிராமப் பகுதியில், நடக்கும் பரிமாற்றங்களைப் பார்ப்போம் – தினசரிக் கூலி கொடுத்தல், சிறு அங்காடிகளில் பொருட்களை வாங்குதல் போன்றவை இணையம் மூலம் மாற வேண்டுமெனில், என்னென்ன விஷயங்கள் மாற வேண்டும்?



அடிப்படைக் கல்வி
தடையில்லா இணையக் கட்டுமானம்

 


இரண்டையும் 100% கொண்டு வர எத்தனை காலம் தேவை?


மிக முக்கியமாக, ரூபாய் நோட்டைக் கொண்டு, பரிவர்த்தனைகள் செய்ய இன்று ஒரு ஊரக ஏழை மனிதர்/ஊரகத் தொழில் முனைவோர் இருவரும் செலவு செய்வதில்லை. நூறு ரூபாய் நோட்டு, நூறு ரூபாயின் மதிப்புக்கே மாற்றிக் கொள்ளப்படுகிறது. ரூபாய் நோட்டை அடிக்க மற்றும் மாற்ற செலவு செய்வது அரசு. இணையச் சேவைக் கட்டுமானம் ஊரக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப் போவதில்லை. பரிமாற்றத்துக்கும் பிற்காலத்தில் ஒரு குறைந்த பட்ச சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலவை ஊரக மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்னும் கேள்விக்கு ஒரு பொருளாதார ரீதியான பதில் தேவை.


இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? இந்தப் பரிமாற்றம் மிக அதிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்? 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் 3. அதை நாடெங்கும் கொண்டு சேர்த்தல், மற்றும் பாதுகாத்தல் போன்ற விஷயங்களுக்கு 1 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், மொத்த செலவு 4 ரூபாய். ஒரு 500 ரூபாய் நோட்டு, கிழிந்து மட்கும் முன்னர், குறைந்த 10 ஆயிரம் முறைகள் உபயோகிக்கப்படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். குறைந்தது 1000 முறை மாற்றலாம் என்பது எனது ஊகம். எனில், ஒரு மாற்றத்துக்கு ஆகும் செலவு, 0.5 பைசா. அதையும் அரசு செய்கிறது இப்போது.


கட்டணமின்றியோ அல்லது, சேவைக்காகும் செலவு, அந்தச் சேவையை உபயோகிப்பதால் வரும் நன்மையை விடக் குறைவாகவோ இல்லாத பட்சத்தில், எதற்காக ஒரு நுகர்வோர் இணையச் சேவையை உபயோகிக்க வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.


முதலில், ஏன் பரிமாற்றங்கள் இணையம் மூலமாக நடக்க வேண்டும்?



பணப் பரிமாற்றத்தில், வரிகள் கட்டாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே இணையப் பரிமாற்றத்தில் அவை பதியப்பட்டு, வரிகள் கட்டுவது அதிகமாகும்.

இது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வருடம் 10 லட்சம் வரை தொழில் செய்யும் குறு நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் எளிது. பத்து லட்சம் வரை தொழில் செய்யும் ஒரு குறுந்தொழில் அதிபர் அதிகபட்சமாக 25% லாபம் பார்க்கிறார் என வைத்துக் கொண்டாலும், அது 2.5 லட்சம் – மாதம் இருபதாயிரம் ரூபாய். இதை வைத்துக் கொண்டு, விற்பனை வரி கட்டுவதோ/சேவை வரி கட்டுவதோ/கணக்கு வைத்துக் கொள்வதோ பொருளாதார ரீதியாகச் சாத்தியம் இல்லை என்பதே. இங்கே, இதைக் கட்டாயப்படுத்தினால், குறுந்தொழில்கள் மரித்தே போகும். குறும் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுவனப்படுத்துதல், சாத்தியமில்லை என்பதால் இந்த விலக்கு.


இங்கேதான், கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளான தான்ஸானியா மற்றும் கென்யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் உள்ளது. இங்கே நிறுவனங்களின் பில்லிங் மெஷின்கள், அரசின் வருவாய்த் துறையோடு இணைத்திருப்பது கட்டாயம். 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும், தனது பில்லிங் மெஷினை, அரசின் வருவாய்த்துறையோடு இணைத்திருக்க வேண்டுவது கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரலாம். அந்த மெஷினை, இவ்விரு நாடுகளின் அரசுகளும் இலவசமாக வழங்குகின்றன. முதல் கட்டமாக, இதைச் செயல்படுத்தலாம். இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிப்பது மிகச் சுலபமாகும். விற்பனை வரித்துறை இதை நேரடியாகச் செய்வதை விட, பாஸ்போர்ட் துறை போல, நல்ல தனியார் துறையிடம், இச்சேவை வழங்குதலை விட்டுவிடலாம் (அதாவது பில்லிங் மிஷினை, தொழில் நிறுவனங்களோடு இணைப்பது மற்றும் செயல்படுத்துவதை மட்டும்). 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தோழில் செய்பவரின் கல்வித் தகுதியும், தொழில்நுட்பத்தை உள்வாங்கும் மனநிலையும் இருக்குமாதலின், இதை நிறைவேற்றுவது எளிது.



நேர மற்றும் பரிமாற்றுச் செலவு சேமிப்பு:
வங்கிகள் மூலமும், நிறுவனங்கள் தனது சேவைத் தளங்களின் மூலமும், பணப்பரிமாற்றங்கள் நிகழ்த்துவது, நகர மற்றும் ஊரக குடிமகன்களுக்கு மிக நன்மையளிப்பதாகும். தடையற்ற இணையச் சேவை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மளிகைக் கடைகளில் / மருந்துக் கடைகளில் மொபைல் மூலமாக பண மாற்றம் செய்வது, எந்த அளவு குடிமகன்களுக்குப் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.

50000 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் வங்கிகளில் செய்ய வேண்டுமெனில், வருமான வரி எண் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 3 லட்சத்துக்கு மேல் பரிமாறப்படும் எல்லாப் பரிமாற்றங்களும் ஏற்கனவே வங்கிகளால், வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிமாற்றங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் அரசின் கைகளில் உள்ளது. தேவையெல்லாம், கோடிக்கணக்கான அந்தத் தகவல்களைச் சலித்து, அதில் வரி ஏய்ப்புப் பரிமாற்றங்களை அடையாளம் காணுவதும், அவற்றை நூல் பிடித்து, வரி ஏய்ப்பவர்களைப் பிடிப்பதும் தான்.


இன்று வரி ஏய்ப்பவர்களைப் பிடிக்காமல் இருப்பதன் முக்கியக் காரணம் – அவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் அல்ல. அத்தகவல்களை முன்னெடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய நிறுவனத்தில் உள்ள குறைபாடுகள். விற்பனை வரி மற்றும் வருமான வரி அலுவலகங்கள் மிகப் பெரும் ஊழல் நிறுவனங்கள். இவற்றுக்கான சரியான தலைமை, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு – இம்மூன்றையும் இணைத்து, ஒரு நேர்மையான நிர்வாகத்தைத் தந்தாலே இந்தியாவின் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து விடும். இதுதான், ஊழலை ஒழிக்கும் கொள்கையை முன்வைத்திருக்கும் மோதி அரசு செய்ய வேண்டியது. இதில் விற்பனை வரி, மாநிலங்களின் அதிகாரத்தில் வருவதெனினும், ஜி.எஸ்.டிக்குப் பின், இது மத்திய அரசின் கீழும் வரும்.


இப்பரிமாற்றங்களில், இறுதி மைல் தொடர்பு என்னும் ஒரு பதம் உண்டு. நாட்டின் கஜானாவில் இருந்து, அலுவலகம் மூலமாகவோ / தொழில் மூலமாகவோ, பணம், மின் அணுப்பரிமாற்றம் மூலம் தனி நபரை அடையலாம். அங்கிருந்து, அவரும், சில பரிமாற்றங்களை, மின் அணுப்பரிமாற்றம் மூலம் செய்யலாம். ஆனாலும், தன் சொந்தச் செலவுகளுக்காக, அத்தனி நபர் இன்றும், பணத்தைத் தான் பெரும்பாலும் உபயோகிக்கிறார். தொழில்நுட்ப உலகின் தலையாய நாடான அமெரிக்காவில், இன்றும் 45% பரிமாற்றங்கள் பணம் மூலமாக நடக்கின்றன என ப்ளூம்பெர்க் என்னும் நிறுவனத்தின் புள்ளி விவரங்களை ப.சிதம்பரம் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.


எனவே செய்ய வேண்டியது பணமில்லாப் பொருளாதார நடவடிக்கைகள் அல்ல. அவை ஊழலை ஒழிக்க அதிகம் உதவாது. வலுக்கட்டாயமாக அது திணிக்கப்பட்டால், அது மேலும், பொருளாதாரத் தட்டின் கீழ் நிலையில் உள்ள, நோட்டுப் பொருளாதார மக்களையே அதிகம் பாதிக்கும். ஏற்கனவே நிகழ்ந்துள்ள பணப்பரிமாற்றம் கொணர்ந்த எதிர்மறை விளைவுகளை இது அதிகரிக்கவே செய்யும்.


இன்று தொழில்களை அதிகம் பாதிப்பவை, வருமான வரி, உள்ளூர் நுழைவு வரி, விற்பனை வரி போன்றவைகளை வசூலிப்பதில் உள்ள ஊழல். இவற்றைத் தொழில்நுட்பம் கொண்டும், மேம்பட்ட நிர்வாக முறைகள் கொண்டும் நிர்வகிக்க முற்பட வேண்டும்.


இன்று, வேளாண்மை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, வேளாண் வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான், சில ஏக்கர் திராட்சை விவசாயிகள் (ஜெயலலிதா / சுப்ரியா சூலே) போன்றவர்கள் ஏக்கருக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிகிறது. இத்திட்டம் பெரும் ஓட்டை. இவ்வாறு இரு தொழில் செய்பவர்களின் வேளாண்மை வருமானமும் வரிக்குட்படுத்தப் பட வேண்டும். நிதி மோசடி செய்பவர்களின் தண்டனைக்காலம் ஏழாண்டுகள் மட்டுமே. அவை 14 ஆண்டுகளாக மாற்றப்பட வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டம் மீண்டும் சீர்திருத்தப்பட்டு, ஊழல் குற்றச் சாட்டில் மாட்டும் அதிகாரிகள் மீது, சர்ஜிகல் ஸ்டரைக் நடத்த, சி.பி.ஐ / விஜிலன்ஸ் நிறுவனங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இன்று நாடெங்கும் நடத்தப்படும் ரெய்டுகள், அரசியல் பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும். இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அனைத்து சாத்தியங்களும், மெஜாரிட்டி அரசின் தலைவரான மோதியின் கைகளில் உள்ளன என்பதுதான் நிஜம். செய்வாரா என்பது கோடிப்பொன் பெரும் கேள்வி!


பாலா


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:34

பணமில்லாப் பொருளாதாரம் – பாலா

.untitled


சென்னை நுங்கம்பாக்க நெடுஞ்சாலையில், லேண்ட்மார்க் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. உண்மையிலேயே லேண்ட்மார்க்தான். புத்தக ஆர்வலர்கள், புத்தகங்களைப் பார்வையிட்டு, திறந்து, நுகர்ந்து, புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். வார இறுதியில் அங்கே செல்வது, பலருக்குப் பெரும் பொழுதுபோக்கு. பல இயக்குநர்கள், உதவி இயக்குநர்களாக இருக்கும் போது, ஓசியில் புத்தகம் படிக்க என்றே அதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தக் கடை மரித்து, சில வருடங்களாகின்றன. இன்று சென்னையின் பல புத்தகக்கடைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சினிமா சி.டிக்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிவிட்டன. புத்தகங்கள் ஒரு மூலையில் கிடக்கின்றன.


இணையம் என்னும் பெருவழியில், பொருளாதாரப் பரிமாற்றங்கள் துவங்கியதின் பலி, சென்னை மற்றும் மும்பையின் புத்தகச் சில்லறை நிறுவனங்கள். காரணம், இணையவழிப் பரிமாற்றம், சுலபம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதும் கூட. கால மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதன் காரணமாக, மிக எளிதாக நுகர்வோர் மாறிவிட்டனர்.


இந்திய வேளாண் பொருளாதாரம், மொத்தப் பொருளாதார மதிப்பில் 14% இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 50% மக்கள் இப்பொருளாதாரத்தை நம்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 22-30 சத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். கிட்டத்தட்ட 25 சத மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எனில், 25-30 கோடி மக்கள் அதிகம் கல்வியறிவில்லாத, குறைந்த பட்ச வருமானத்துக்கு வழியில்லாதவர்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 75%.


இந்தப் பொருளாதாரம் தான் நமது முதன்மைப் பொருளாதாரம். இது பெரும்பாலும் உணவு உற்பத்தியில் இருக்கிறது. அதற்கடுத்து, சிறு தொழில்கள், கைவினைப் பொருள் பொருளாதாரம் என்னும் அடுக்கு இருக்கிறது. அதற்கடுத்தபடியாகத் தான் உற்பத்தி, கட்டுமானம், சேவை என்னும் பொருளாதாரங்கள் உள்ளன. அதிலும், கட்டுமானம் போன்ற துறைகளில் இருக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களே.


ஊரக மற்றும் சிறு தொழில்களில், பொருள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் பண மூலமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.


இந்தியப் பொருளாதாரத்தில் மொத்தத்தில் 10% மக்களே, பணமில்லாத ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். நகரப் பொருளாதாரமும், பெரும்பாலும் பணப்படிமாற்றங்களின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதே இதன் பொருள்.


எனில், இந்தப் பணமில்லாப் பரிமாற்றத்தின் தேவை என்ன? பொருளாதார நோக்கில், பணம் அல்லது இணயம், ஒரு பரிமாற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படவேண்டுமெனில், அது மிகக் குறைந்த செலவு பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.


எடுத்துக் காட்டாக, சென்னை போன்ற ஒரு மாநகரில், மின் கட்டணம் செலுத்த வேண்டுமெனில், பைக் அல்லது பஸ் பிடித்து, கட்டண அலுவலகம் சென்று பணம் கட்டுதலின் விலை மிக அதிகம். 5000 மதிப்புள்ள மின் கட்டணத்துக்கு, 2 மணி நேரமும், 20 ரூபாயும் பிடிக்கும். இதுவே வங்கி மூலம் செலுத்தும் போது, கட்டணமில்லாச் சேவை இருக்கிறது. ஒரு நகரத்தில் வசிக்கும், மத்தியமருக்கு இது பெரும் வரப்ரசாதம். அடுத்து, சிறு கடைகளில் பொருள் வாங்கும் போது, பணம் உபயோகிக்காமல், மொபைல் வழி வசதிகள் உள்ளன – இவற்றுக்கு 1-2% வரை சேவைக் கட்டணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு இலவசம். ஆனால், இவையிரண்டுக்கும் தேவை – தடையில்லா இணையச் சேவையும் அதற்கான அடிப்படைக் கட்டுமானமும்.


இதுவே ஒரு கிராமப் பகுதியில், நடக்கும் பரிமாற்றங்களைப் பார்ப்போம் – தினசரிக் கூலி கொடுத்தல், சிறு அங்காடிகளில் பொருட்களை வாங்குதல் போன்றவை இணையம் மூலம் மாற வேண்டுமெனில், என்னென்ன விஷயங்கள் மாற வேண்டும்?



அடிப்படைக் கல்வி
தடையில்லா இணையக் கட்டுமானம்

 


இரண்டையும் 100% கொண்டு வர எத்தனை காலம் தேவை?


மிக முக்கியமாக, ரூபாய் நோட்டைக் கொண்டு, பரிவர்த்தனைகள் செய்ய இன்று ஒரு ஊரக ஏழை மனிதர்/ஊரகத் தொழில் முனைவோர் இருவரும் செலவு செய்வதில்லை. நூறு ரூபாய் நோட்டு, நூறு ரூபாயின் மதிப்புக்கே மாற்றிக் கொள்ளப்படுகிறது. ரூபாய் நோட்டை அடிக்க மற்றும் மாற்ற செலவு செய்வது அரசு. இணையச் சேவைக் கட்டுமானம் ஊரக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப் போவதில்லை. பரிமாற்றத்துக்கும் பிற்காலத்தில் ஒரு குறைந்த பட்ச சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலவை ஊரக மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்னும் கேள்விக்கு ஒரு பொருளாதார ரீதியான பதில் தேவை.


இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? இந்தப் பரிமாற்றம் மிக அதிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்? 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் 3. அதை நாடெங்கும் கொண்டு சேர்த்தல், மற்றும் பாதுகாத்தல் போன்ற விஷயங்களுக்கு 1 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், மொத்த செலவு 4 ரூபாய். ஒரு 500 ரூபாய் நோட்டு, கிழிந்து மட்கும் முன்னர், குறைந்த 10 ஆயிரம் முறைகள் உபயோகிக்கப்படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். குறைந்தது 1000 முறை மாற்றலாம் என்பது எனது ஊகம். எனில், ஒரு மாற்றத்துக்கு ஆகும் செலவு, 0.5 பைசா. அதையும் அரசு செய்கிறது இப்போது.


கட்டணமின்றியோ அல்லது, சேவைக்காகும் செலவு, அந்தச் சேவையை உபயோகிப்பதால் வரும் நன்மையை விடக் குறைவாகவோ இல்லாத பட்சத்தில், எதற்காக ஒரு நுகர்வோர் இணையச் சேவையை உபயோகிக்க வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.


முதலில், ஏன் பரிமாற்றங்கள் இணையம் மூலமாக நடக்க வேண்டும்?



பணப் பரிமாற்றத்தில், வரிகள் கட்டாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே இணையப் பரிமாற்றத்தில் அவை பதியப்பட்டு, வரிகள் கட்டுவது அதிகமாகும்.

இது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வருடம் 10 லட்சம் வரை தொழில் செய்யும் குறு நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் எளிது. பத்து லட்சம் வரை தொழில் செய்யும் ஒரு குறுந்தொழில் அதிபர் அதிகபட்சமாக 25% லாபம் பார்க்கிறார் என வைத்துக் கொண்டாலும், அது 2.5 லட்சம் – மாதம் இருபதாயிரம் ரூபாய். இதை வைத்துக் கொண்டு, விற்பனை வரி கட்டுவதோ/சேவை வரி கட்டுவதோ/கணக்கு வைத்துக் கொள்வதோ பொருளாதார ரீதியாகச் சாத்தியம் இல்லை என்பதே. இங்கே, இதைக் கட்டாயப்படுத்தினால், குறுந்தொழில்கள் மரித்தே போகும். குறும் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுவனப்படுத்துதல், சாத்தியமில்லை என்பதால் இந்த விலக்கு.


இங்கேதான், கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளான தான்ஸானியா மற்றும் கென்யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் உள்ளது. இங்கே நிறுவனங்களின் பில்லிங் மெஷின்கள், அரசின் வருவாய்த் துறையோடு இணைத்திருப்பது கட்டாயம். 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும், தனது பில்லிங் மெஷினை, அரசின் வருவாய்த்துறையோடு இணைத்திருக்க வேண்டுவது கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரலாம். அந்த மெஷினை, இவ்விரு நாடுகளின் அரசுகளும் இலவசமாக வழங்குகின்றன. முதல் கட்டமாக, இதைச் செயல்படுத்தலாம். இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிப்பது மிகச் சுலபமாகும். விற்பனை வரித்துறை இதை நேரடியாகச் செய்வதை விட, பாஸ்போர்ட் துறை போல, நல்ல தனியார் துறையிடம், இச்சேவை வழங்குதலை விட்டுவிடலாம் (அதாவது பில்லிங் மிஷினை, தொழில் நிறுவனங்களோடு இணைப்பது மற்றும் செயல்படுத்துவதை மட்டும்). 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தோழில் செய்பவரின் கல்வித் தகுதியும், தொழில்நுட்பத்தை உள்வாங்கும் மனநிலையும் இருக்குமாதலின், இதை நிறைவேற்றுவது எளிது.



நேர மற்றும் பரிமாற்றுச் செலவு சேமிப்பு:
வங்கிகள் மூலமும், நிறுவனங்கள் தனது சேவைத் தளங்களின் மூலமும், பணப்பரிமாற்றங்கள் நிகழ்த்துவது, நகர மற்றும் ஊரக குடிமகன்களுக்கு மிக நன்மையளிப்பதாகும். தடையற்ற இணையச் சேவை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மளிகைக் கடைகளில் / மருந்துக் கடைகளில் மொபைல் மூலமாக பண மாற்றம் செய்வது, எந்த அளவு குடிமகன்களுக்குப் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.

50000 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் வங்கிகளில் செய்ய வேண்டுமெனில், வருமான வரி எண் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 3 லட்சத்துக்கு மேல் பரிமாறப்படும் எல்லாப் பரிமாற்றங்களும் ஏற்கனவே வங்கிகளால், வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிமாற்றங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் அரசின் கைகளில் உள்ளது. தேவையெல்லாம், கோடிக்கணக்கான அந்தத் தகவல்களைச் சலித்து, அதில் வரி ஏய்ப்புப் பரிமாற்றங்களை அடையாளம் காணுவதும், அவற்றை நூல் பிடித்து, வரி ஏய்ப்பவர்களைப் பிடிப்பதும் தான்.


இன்று வரி ஏய்ப்பவர்களைப் பிடிக்காமல் இருப்பதன் முக்கியக் காரணம் – அவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் அல்ல. அத்தகவல்களை முன்னெடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய நிறுவனத்தில் உள்ள குறைபாடுகள். விற்பனை வரி மற்றும் வருமான வரி அலுவலகங்கள் மிகப் பெரும் ஊழல் நிறுவனங்கள். இவற்றுக்கான சரியான தலைமை, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு – இம்மூன்றையும் இணைத்து, ஒரு நேர்மையான நிர்வாகத்தைத் தந்தாலே இந்தியாவின் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து விடும். இதுதான், ஊழலை ஒழிக்கும் கொள்கையை முன்வைத்திருக்கும் மோதி அரசு செய்ய வேண்டியது. இதில் விற்பனை வரி, மாநிலங்களின் அதிகாரத்தில் வருவதெனினும், ஜி.எஸ்.டிக்குப் பின், இது மத்திய அரசின் கீழும் வரும்.


இப்பரிமாற்றங்களில், இறுதி மைல் தொடர்பு என்னும் ஒரு பதம் உண்டு. நாட்டின் கஜானாவில் இருந்து, அலுவலகம் மூலமாகவோ / தொழில் மூலமாகவோ, பணம், மின் அணுப்பரிமாற்றம் மூலம் தனி நபரை அடையலாம். அங்கிருந்து, அவரும், சில பரிமாற்றங்களை, மின் அணுப்பரிமாற்றம் மூலம் செய்யலாம். ஆனாலும், தன் சொந்தச் செலவுகளுக்காக, அத்தனி நபர் இன்றும், பணத்தைத் தான் பெரும்பாலும் உபயோகிக்கிறார். தொழில்நுட்ப உலகின் தலையாய நாடான அமெரிக்காவில், இன்றும் 45% பரிமாற்றங்கள் பணம் மூலமாக நடக்கின்றன என ப்ளூம்பெர்க் என்னும் நிறுவனத்தின் புள்ளி விவரங்களை ப.சிதம்பரம் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.


எனவே செய்ய வேண்டியது பணமில்லாப் பொருளாதார நடவடிக்கைகள் அல்ல. அவை ஊழலை ஒழிக்க அதிகம் உதவாது. வலுக்கட்டாயமாக அது திணிக்கப்பட்டால், அது மேலும், பொருளாதாரத் தட்டின் கீழ் நிலையில் உள்ள, நோட்டுப் பொருளாதார மக்களையே அதிகம் பாதிக்கும். ஏற்கனவே நிகழ்ந்துள்ள பணப்பரிமாற்றம் கொணர்ந்த எதிர்மறை விளைவுகளை இது அதிகரிக்கவே செய்யும்.


இன்று தொழில்களை அதிகம் பாதிப்பவை, வருமான வரி, உள்ளூர் நுழைவு வரி, விற்பனை வரி போன்றவைகளை வசூலிப்பதில் உள்ள ஊழல். இவற்றைத் தொழில்நுட்பம் கொண்டும், மேம்பட்ட நிர்வாக முறைகள் கொண்டும் நிர்வகிக்க முற்பட வேண்டும்.


இன்று, வேளாண்மை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, வேளாண் வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான், சில ஏக்கர் திராட்சை விவசாயிகள் (ஜெயலலிதா / சுப்ரியா சூலே) போன்றவர்கள் ஏக்கருக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிகிறது. இத்திட்டம் பெரும் ஓட்டை. இவ்வாறு இரு தொழில் செய்பவர்களின் வேளாண்மை வருமானமும் வரிக்குட்படுத்தப் பட வேண்டும். நிதி மோசடி செய்பவர்களின் தண்டனைக்காலம் ஏழாண்டுகள் மட்டுமே. அவை 14 ஆண்டுகளாக மாற்றப்பட வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டம் மீண்டும் சீர்திருத்தப்பட்டு, ஊழல் குற்றச் சாட்டில் மாட்டும் அதிகாரிகள் மீது, சர்ஜிகல் ஸ்டரைக் நடத்த, சி.பி.ஐ / விஜிலன்ஸ் நிறுவனங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இன்று நாடெங்கும் நடத்தப்படும் ரெய்டுகள், அரசியல் பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும். இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அனைத்து சாத்தியங்களும், மெஜாரிட்டி அரசின் தலைவரான மோதியின் கைகளில் உள்ளன என்பதுதான் நிஜம். செய்வாரா என்பது கோடிப்பொன் பெரும் கேள்வி!


பாலா


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:34

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்

 


IMG_8242


இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி டி.பி.ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றிப் பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே.என்.செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க இயலா சிந்தனை முக்கியத்துவம் உண்டு. சில சமயம் அது திறம்படக் கூறல் மற்றும் சிலாகித்தல் ஆக இருக்கக் கூடும், சிலசமயம் ஆச்சர்ய தகவல்களாக இருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக சிலசமயம் புது சிந்தனைகள் மற்றும் அதுகுறித்த அறிமுகங்கள்.


இந்த 2016 லும் அப்படி பலவாறாக நிகழ்ந்தது. ஒப்புநோக்க இது ஊட்டி கூடுகைகளுக்கு நிகராகவே இருந்தது. கடந்த எல்லா ஆண்டு விஷ்ணுபுர டிசம்பர் கூடுகைகளின் கிரீடம் இது தான். அடுத்த ஆண்டு கூட இந்த உயரத்தை எட்டிப் பிடிப்பது சற்று சிரமம் தான். இம்முறை சரஸ்வதி தேவியின் கூடவே அதிருஷ்ட தேவியின் ஆசியும் இருந்தது. கோவைக்கு வந்து இறங்கியபோதே “மோட்டார்” ஸ்ரீனிவசன் என சற்று மேம்பட்ட பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் “மென்டலின்” ஸ்ரீனிவசனுடன் எனது விவாதம் துவங்கிவிட்டது.


ஒரு கால கட்டத்தின் குரல் என ஒரு எழுத்தாளனையோ, கவியையோ அல்லது அக்காலகட்ட எழுத்தாளர்கள் சிலரையோ சொல்லலாகுமா, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வலிந்து வட்டம் ஒன்றை போட்டு அதற்குள் அவர்களை புகுத்திக்கொள்ளலாகாதா  அது என்பதே அவ்விவாதம். இன்றில் நின்றுகொண்டு கடந்த காலத்தை நாம் வரையறுக்கிறோம், பின்னர் எழுத்துலக சிந்தனையை வரையறுக்கிறோம், தர்க்கப் பொருத்தம் காரணமாக நாம் அதை ஒப்புக்கொள்கிறோம். இந்த வரையறை பொருத்தப்பாடு இரண்டுமே தவறாகவும் இருக்கலாம். வரலாறு சமகாலத்தேவைசார்ந்து உருவாக்கப்படும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.


நாஞ்சில் அமர்வில் அவர் கூறிய ஓர் உவமை நினைவில் நிற்கிறது. பேசாமல் செய்பவர்கள் -பலா பூக்காது ஆனால் காய்க்கும், பிரகடனப் படுத்திவிட்டு செய்பவர்கள் -மா கொத்து கொத்தாக பூக்கும் கூடவே மிகுதியாக காய்க்கும், வாய்ச்சொல் வீரர்களுக்கு – பாதிரி, பூத்துத் தள்ளும் காய்ப்பது அபூர்வம் — என மேற்கோள் காட்டியது புருவத்தை உயர்த்த வைத்தது, அராத்து பாரதியின் மொழி மாஜிக் ஏன் பின்னர் நிகழவில்லை என்னும் கேள்வியை எழுப்பினார், நாஞ்சிலும் அதை ஒப்புக்கொண்டு ‘சூதர் அவையினிலே தொண்டு மகளிர் உண்டு …….” கவிதையை அக்கணம் பாடினார், கவிதைக்கு சொற்தேர்வும், சொல் இணைவும் முக்கியம், பாரதி ஒரு யுக புருஷன் அவர்போல அரிதாகத் தான் தோன்றுவார் என்றார். ஏனோ “பாரதி மகாகவியா” என்கிற சிற்றிதழ் விவாதம் இங்கு சுட்டிக் காட்டப்படவில்லை.


இதைக் குறித்து வைத்துக் கொண்ட தேவதேவன் கடைசி அமர்வில் அதை மறுத்துப் பேசினார். கவிஞனுக்கு மனத்தால் எட்டிப் பிடிக்கும் இடம்தான் முக்கியம் அதை வெளிப்படுத்த மொழி ஒரு கருவி மட்டுமே என்கிற அவரது வாதத்தை நாஞ்சில் மீண்டும் மறுத்து அப்படி என்றால் மௌனத்தாலேயே கவிதை எழுதி வாசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே என்றார், இவ்விவாதம் இனியும் தொடரும். தேவதேவன் இதை விடமாட்டார் என எண்ணுகிறேன், அல்லது இதை அவர் மறந்து போக நாம் அனுமதிக்க கூடாது. கள்ள மௌனம் என்னும் சொல்லாட்சி, யானையின் பல்வகைப் பெயர்கள், குறித்தும் அவரது உரையாடல் நீண்டது.


பாரதி மணி கலைக்கு சேவை செய்ய யாரும் நாடகத்திற்கு வருவதில்லை எனவும், காவியத் தலைவன் படம் அறியாமையால் எடுக்கப்பட்டது எனவும் கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன் பெண் வேடம் இடும் சிறுவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவு சொல்லி மாளாது என்றார். ஒருபால் உறவு அப்போது சாதாரணம், இப்போது ஒப்பு நோக்க மிக அரிது என எண்ணவைத்தது. ஒரு பெண் வேடமிட்ட நடிகரை, சில ஜமீன்தார்கள் நாடகம் முடிந்து அதே பெண் உடையில் தமது பங்களாவுக்கு வந்து தங்களுக்கு மது பரிமாறினால் மட்டும் போதும் என ரூ.5000/- வழங்கினார்கள் எனவும் அது இன்றைய தேதியில் 10 லட்சம் பெரும் எனக் கூறினார்.


நமது நாடகங்கள் சற்று பின்தங்கித் தான் உள்ளது என்றார், ‘மைக்’கில் இருந்து விடுபடவே பல வருடமானதாகச் சொன்னார், நவீன நாடக முயற்சி தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், அதில் கோணலான பரிசோதனைகள் உள்ளன, கலை இல்லை எனவும் கூறினார். என்றாலும் நாடக இயக்கங்கள் குறித்தோ, வெவ்வேறு மொழி நாடகங்கள் குறித்தோ, நாடக முன்னோடிகள் குறித்தோ, நாடக சரித்திர மாற்றம் குறித்தோ அவரால் எதுவும் சொல்ல இயலவில்லை. மசால் வடை இடும் பக்குவம், அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவர் தந்தை கவிஞர் ஹன்ஸ்ராஜ் பச்சனிடம் பையன் என்ன செய்கிறான் எனக் கேட்டது, பின்னர் அமிதாப் அவர் என்னை உண்மையிலேயே தெரியாமல் இருந்தால் ஒரு முட்டாள் எனவும், அதைத் தெரிந்தே கேட்டிருந்தார் என்றால் என்னைவிட பெரிய நடிகர் எனவும் ஒரு பேட்டியில் கூறியது போன்றவற்றை அவர் குறிப்பிட்டது சுவாரஸ்யமாக இருந்தது.


இரா. முருகன் வருவதற்கு சற்று தாமதம் ஆன இடைவெளியில் ஜெயமோகன் மேடை ஏற்றப்பட்டார், பொதுவாக ஊட்டி விஷ்ணுபுரம் அமர்வுகளிலும்,கோவை கூடுகைகளிலும் ஜெயமோகனை பற்றியோ அவரின் படைப்புகள் பற்றியோ ஏதும் பேசுவதில்லை என்கிற எழுதப்படாத விதியை நாம் கடை பிடிக்கிறோம். வேண்டுமென்றால் அரங்கிற்கு வெளியேயோ, காலை -மாலை நடையிலோ அவரிடம் அவர் படைப்புகள் குறித்து உரையாடலாம். ஆனால் நேரமின்மை காரணமாக மாலை நடையே இல்லை, எனவே சில வாசக- வாசகிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு திடீர் உப்புமா அமர்வாக ஜெயமோகன் அமர்வு ஒரு 20 நிமிடம்.


ஏன் கண்ட கண்ட அவசியமற்ற எழுத்தாளர்களை எல்லாம் படித்து எழுதி எங்களையும் சுற்றலில் விடுகிறீர்கள் என்பது போன்று நகைக்காக சில பேசப்பட்டதே ஒழிய, வெண்முரசில் புதிய சொல்லாக்கம் என்பது தவிர்த்து பெரிதாக எதுவும் நிகழவில்லை. வேண்டுமானால் விஷ்ணுபுரம் சார்பில் தனியாக ஜெயமோகன் வாசகச் சந்திப்பை நாம் நடத்தலாம் எனத் தோன்றியது.


இரா.முருகன் சமீபத்தில் நமது நண்பர்களால் மிகுந்த ஸ்வாரஸ்யமான எழுத்தாளர் என சிலாகிக்கப் பட்டவர். jump cut எனும் வெவ்வேறு காலத்தை எழுத்தில் உறுத்தலில்லாமல் இணைக்கும் யுக்தி பற்றி பேசியது புதிது. புகை இலை விற்கும் பிராமணர்கள் பற்றி அரசூர் வம்சத்தில் வருவது, சிவகங்கையில் மலையாளம் கலந்த தமிழில் சில பாத்திரங்கள் உரையாடுவது தம்மை மீறியது எனக் கூறினார். மார்க்விஸ் தான் தமது ஆதர்ச எழுத்தாளர் எனவும், மாய எதார்த்தம் தனக்கு பிடித்தமானது எனவும் கூறினார். இவர் மறுநாள் மேடையில் எழுதி வைத்து படித்தது பின்பற்றக் கடினமாக இருந்தது.


பவாவின் அமர்வு தான் அன்றைய நாளின் ஹிட். சக்காரியாவின் தேன் என்னும் சிறுகதை, அதை கரடி எனக்கூறியிருக்க வேண்டும் என துவங்கி, ஒட்டர்களின் கதை, தாம் பாம்பு பிடிக்கும் இருளர்களுடன் சென்றது, ஜப்பான் கிழவன் கதை, அதே போல ஒரு படம் பார்த்தது, திருவண்ணாமலையில் யோகிராம் சுரத்குமாரின் இருப்பு, அவருடனான நட்பு, அவர் மகனை இழந்தபின் மனைவியுடன் யோகியின் குருகுலத்திற்குச் சென்றது, பின்பும் எந்த மாறுதலும் இல்லாமல் திரும்பியது, பல்வேறு வெகுஜனக் கூட்டங்களை நடத்தியது போன்றவை வியக்க வைத்த செய்திகள். தனது தெருவில் குடியிருக்கும் ஒருவன் தன்னை ஒரு கதை சொல்லி என உணரவேண்டும், அதே எனது சாதனை என்பதே அவரது key note.


இலக்கிய குவிஸ் பலரை வசீகரித்தாலும் அது அவ்வளவு தகுந்ததாக இல்லை. தகவலை தெரிந்து வைத்திருக்கும் சோதனையே மிகுதியாக இருந்தது. gestalt theory, catharsis போன்ற இலக்கிய கோட்பாடுகள், மாய எதார்த்தம், மீ எதார்த்தம் போன்ற இலக்கிய யுக்திகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கிய போக்குகள் குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஆக இது ஒரு இலக்கியத் தகவல் களஞ்சிய வினாடி வினா. இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது, இளம் வாசகர் பாரதி பலரின் தூக்கத்தை கெடுத்தார்.


கு சிவராமனின் அமர்வும் எதிர்பாரா தீவிரம். முடிக்க இரவு 10.30 ஆனது. ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம், மேலை நாடுகளில் எல்லாம் ஜப்பானிய, சீன பாரம்பரிய மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது அவ்வாறு இந்தியாவில் இருப்பதில்லை எனக் கூறினார். ஒரு மிட்டாயில் 45 உள்ளீடுகள் இருப்பதாகவும் அனைத்தும் ரசாயனம் எனவும் கூறினார். ‘ரெட் மீட்’ புற்று நோய்க்கு காரணமாவது பற்றியும் கூறினார். பேலியோ டயட் பற்றி கேட்டபோது ஒரு ஆய்வு முடிவு வந்து ருசுப்படுத்த 20, 30 ஆண்டுகள் பிடிக்கும், இதன் எதிர் விளைவுகள் பின்னரே தெரியும் என்றார். புற்றுநோய்க்கும் புகையிலைக்கும் ஆன தொடர்பை நிரூபிக்க 30,40 ஆண்டுகள் ஆனதாகவும், இங்கிலாந்தில் முதல் புற்றுநோய் காரணி அலசல் அமர்வில் அனைவரும் புகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மிகப் பிரபலம் எனக்கூறினார். மருந்து அரசியல் குறித்தும் விளக்கினார். மிகுந்த சமநிலையுடன் கூடிய உரையாடல் அவருடையது, கண் கொட்டாமல் அனைவரும் பங்கேற்றனர்


.


IMG_8441

கிருஷ்ணன், ராஜகோபாலன்


 


மறுநாள் நாயகன் சிவப்பிரசாத். கடந்தமுறை ஜோடி குரூஸ், இம்முறை இவர். நவீன ஜனநாயக சிந்தனைகள் நமக்கு ஆங்கிலம் வழி வந்தது, அது நம்மை விடுவித்தது. அதே ஆங்கிலம் இன்று கான்வென்டுகளாக நின்று நம்மை அடிமைப்படுத்துகிறது என்றார். கலை ஒருவகைப் பிரச்சாரம், ஆனால் ஒரு கலைஞன் பிரச்சாரத்தை மீறி எழவேண்டும், கலை இயல்பாக பிரச்சாரத்தை மீறி எழும் என்றார்.


மறுநாள் மேடையில் பேசும் போது தமிழகத்தில் அரசியல் மேடைகளில் உரத்து பேசுதலும், அடுக்கு மொழியும் அதிகம் இது பிற மொழிகளில் இல்லை, ஆனால் இதன் எதிர்வினையாக தமிழ் நவீன கவிதைகளில் இந்த உரத்துப் பேசுதல், அடுக்கு மொழிகள் இல்லை, அது அடங்கிய குரலில் நுட்பமாக பேசுகிறது என்றார். இது ஆந்திரம், கர்நாடகம், ஹிந்தியில் தலைகீழாக நிகழ்கிறது என்றார். மிக கூரிய அவதானிப்பு இது. மேலும் அமர்வில் ஒரு எழுத்தாளனின் சுதந்திரத்தை விட பொறுப்பை தான் நான் வலியுறுத்திக்கிறேன் என்றது அவரைப் போல தடாலடி கவிஞரின் வாயில் இருந்து சற்றும் எதிர்பாராதது. இவர் அசல் சிந்தனையாளராக அக்கணம் தோன்றினார்.


உணவு இடைவேளைக்கு பிறகு பஷீர் பற்றி சு வேணுகோபால் மற்றும் ஜெயமோகனின் விவாதம். பஷீருக்கு நேர்ந்த வாழ்வனுபவம் அரிது, பெரிது. ஒப்பு நோக்க அது குறைவாகவே அவர் படைப்பில் வெளிப்பட்டு இருக்கிறது என்றார் வேணுகோபால். இன்றைய வாசகனுக்கு சு.வேணுகோபாலின் உக்கிரமே உவப்பானது, பஷீரின் ஆன்மிகம் சற்று தொலைவாகவே இருக்கும். என்றாலும் ஜெயமோகனின் வாதம் அசரவைத்தது, தத்துவமற்ற ஆன்மிகம் அவருடையது என்றும் முழுமையாக உணர்ந்தபின் சிரிக்கும் சூபி பஷீர் என்றும் சொன்னார். இந்தியாவின் சிறந்த 10 எழுத்தாளர்களில் பஷீரும் ஒருவர் என்றார். ஜெயமோகன் வக்கீலுக்கு படித்து ஃபெயிலாகி இருக்க வேண்டும். ஒரு வாசகியும் ஜென்மதினம் கதை பற்றி கூறினார். சு.வேணுகோபாலுக்கு ஜெயமோகனுக்குப் பதில் சொல்ல நேரம் வாய்க்காமல் வண்ணதாசன் வந்தார்.


தன்னை கல்யாண்ஜியாக வண்ணதாசனாக அணுகுவதைவிட கல்யாணியாக அணுகுவது பிடிக்கும் என்றார். தயக்கத்துடன் ஆரம்பித்து பின்பு தோழமையுடன் அனைவருடனும் உரையாடினார், விஜயா வேலாயுதம் போர்த்திய பொன்னாடை நழுவியது, இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நழுவி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது என சாகித்ய அகாடமி பற்றி சொல்லாமல் சொன்னார். அவருக்கெனவே வந்திருந்த வாசகர்கள் நெகிழ்ந்தனர், தழுதழுத்தனர். அவரது கவிதைகள் கதைகளை அங்கேயே வாசித்துக் காட்டினர். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக அங்கு தோன்றினார். இறுதிக்கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டார், அவரின் குவைக்கோல் நிலத்தடி நீரை அறிந்துகொண்டது.


விஜயா வேலாயுதம் இறுதியில் எதிர்பாராமல் மைக்கை கைப்பற்றி கடந்தகால ஏக்கத்தை நிரவச் செய்தார், அது வயசாளிகளின் உலகம், இளைஞர்களிடையே அதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை, நித்தமும் நிகழ்காலத்தில் வாழும் வாசகர்களிடையே அதற்கு எந்தப் பொருளும் இல்லை. இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து 3 நபர்கள் அவையறியாது பேசிவிட்டனர். இதை அடுத்த கூடுகைகளில் தவிர்த்துவிடவேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள், இதை எனக்கும் நானே சொல்லிக் கொள்கிறேன்.


இறுதியாக சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், நாஞ்சில், இரா.முருகன் மற்றும் தேவதேவனின் கூட்டு அமர்வு. நாடகம் பற்றி பேச்சு வந்தது. நாடகத்திற்கு தமிழகத்தில் இன்று வரவேற்பில் என்றால் அது தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம் என ஒரு வாசகர் கேட்டார். அவரது சிபாரிசு குறும்படம் போல நவீன திரைக்கு மாறலாம் என்பது. தேவதேவன், இதை கடுமையாக மறுத்தார். நாடகம் ஒரு தூய காலை வடிவம் அது ஒருவரின் உடலில் இருந்து நேரிடையாக வெளிப்படுவது, நாம் நேரில் ஒருவரைக் காணும் அனுபவம் மகத்தானது என்றார். தான் வண்ணதாசனை சந்திக்க முயன்றதை கூறினார், அவரது கவிதைகளை படித்திருந்தாலும் அவரை சந்த்தித்தால் தான் அது முழுமை பெரும் என தனக்கு தோன்றியதாக கூறினார். நேரடி உடல் வெளிப்பாடு ஒரு தரிசனம்.


எப்படி என்று தெரியவில்லை சுப்ரபாரதி மணியன் தலைப்பை முன்னுணர்ந்தது போல ஒரு அச்சிட்ட தாளை கொண்டு வந்து அதை 15 நிமிடம் படித்து அயர்ச்சியை ஊட்டினார். பிறகு தான் தெரிந்தது “நவீன இலக்கியம் பெரிதும் வீழ்ச்சியைத் தான்பேசுகிறதா?” என்கிற அன்றைய தலைப்பிற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு தமது படைப்பையே முன்வைத்தார், இங்கு வாசிப்பில் ஒரு அரசியல் உள்ளது என்றார். நேரமின்மை காரணமாக இந்த இறுதி அமர்வு வலிந்து முடித்துவைக்கப்பட்டது, திகட்டத் திகட்ட புகட்டப் பட்ட தேனமுது இது, வாசகர்கள் 130 பேர் மேலும் மேலும் என்றனர் காலம் போதும் என திரையிட்டது நாம் விழாவிற்கு சென்றோம்.


இரண்டு நாளும் இமை சோராது, தளராது கவனித்து, கணமும் தவறவிடாது அணைத்து அமர்வுகளில் பார்வையாளராக பங்கேற்ற 60 ஐ தாண்டிய நாஞ்சில் ஒரு ஞான உபாசகனின் முன்மாதிரி. அவர் முன் பணிகிறேன்.


கிருஷ்ணன்.


 


 


வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.