Jeyamohan's Blog, page 920

September 8, 2021

பசுமைக் கொள்ளை

அண்ணா,

பாம் ஆயில் உற்பத்தி செய்ய அந்தமான் நிக்கோபார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அடர் வனப்பகுதிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

தினமணியில் இருந்து

“1993 – 94 இல் இந்தியாவின் சமையல் எண்ணெய் மொத்தத் தேவையில் 97% உள்நாட்டு உற்பத்தியாக இருந்தது போய், இப்போது உலகில் மிக அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு மாறியிருப்பதன் காரணம் என்ன? விவசாயத்துக்கான சா்வதேச வா்த்தக நிறுவன (டபி ள்யூ.டி.ஓ.) உடன்படிக்கையின்படி, சோயாபீனைத் தவிர, ஏனைய எண்ணெய்களுக்கு 300% வரை இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இறக்குமதி வரியைக் கடுமையாகக் குறைத்து, சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பதை ஊக்குவித்து, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியைக் குறைத்துவிட்டோம். இறக்குமதி வணிகா்களின் அழுத்தத்துக்கு உள்ளான ஆட்சியாளா்கள், 1994-இல் தொடங்கி இன்றுவரை நமது விவசாயிகள் எண்ணெய் வித்து பயிரிடுவதை முன்னுரிமை கொடுத்து ஊக்குவிப்பதில்லை.

“பாமாயில் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் உத்தரவாத விலை நிா்ணயம், பாரம்பரிய எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுமானால் அவா்கள் – போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் உள்பட – அதிகமான தண்ணீரை உறிஞ்சும் நெல், கரும்பு, கோதுமை சாகுபடியில் இருந்து எண்ணெய் வித்து சாகுபடிக்கு மாறக்கூடும். பாம் விவசாயத் தோட்டங்கள் போல அல்லாமல், லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு ஊக்கமளித்து மீண்டும் இந்தியா சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுவதற்கும் அது வழிகோலும்.

பன்னீர்செல்வம் ஈஸ்வரன்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

ஒற்றை வார்த்தையில் சூழியல் அராஜகம் என்று சொல்லத்தக்க ஒரு செயல்பாடு இது. மலேசியா முதலிய நாடுகள் உலகின் பசுமைச்செல்வம் என்று சொல்லத்தக்க மாபெரும் மழைக்காடுகளை மூர்க்கமாக அழித்து எண்ணைப்பனை விவசாயம் செய்து வருகின்றன. அடர்காடுகள் மேல் எண்ணையைக் கொட்டி தீவைத்து எரித்து மொட்டையாக்கித் தோட்டங்களை உண்டு பண்ணுகிறார்கள். அந்தச் சூழியல் பேரழிவை உலகம் கண்டு வருகிறது. ஆனால் ஒன்றும் சொல்லமுடியாத் நிலை. ஏனென்றால் தனியார் பெருநிறுவனங்கள் அரசுகளை கையகப்படுத்திக் கொண்டு செய்யும் சட்டபூர்வமான கொள்ளை அது.

அதையே இங்கும் செய்ய நினைக்கிறார்கள். இந்த அரசு தனியார் முதலாளிகளின் கையாளாகவே செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு அவர்கள் அள்ளிக்கொடுக்கும் நிதிக்கு வட்டியுடன் கப்பம் கட்டுவதை மட்டுமே ஆட்சி என இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் மழைக்காடுகள் தொடக்க காலத்தில் சூழியல் எண்ணங்கள் இல்லாத நிலையில் அணைக்கட்டுகளுக்காக கட்டுப்பாடில்லாமல் அழிக்கப்பட்டன. அதன் விளைவுகளை கண்டபின் எழுபதுகளில் இருந்து வனவளம் பேணுவதற்கான நடவடிக்கைகள் வந்தன. படிப்படியாக பல்வேறு சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு வழியாக நம் வனவளம் இன்று ஓரளவு பேணப்படுகிறது. ஆனாலும் சுரங்கத்தொழில் உட்பட பல காரணங்களுக்காக சூறையாடல் தொடர்கிறது. அதற்கு எதிராகவே நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ரப்பர், எண்ணைப்பனை போன்றவை சூழியல் அழிவுகள். அவை பசுமைப் பாலைவனங்கள். அவை உருவானால் பசுங்காட்டைச் சார்ந்து உருவாகியிருக்கும் சிக்கலான மாபெரும் உயிர்ச்சூழலே அழிந்துவிடும். அழிந்தவற்றை மீட்கவே முடியாது. மெல்லமெல்ல அந்த தோட்டப்பயிர்கள் லாபமில்லாமல் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்திருக்கும் காடுகளை அழித்து அதிகம் போனால் ஐம்பதாண்டுகள் சிலர் லாபம் சம்பாதிக்கலாம். குமரிமாவட்டத்தில் ரப்பர் தொழில் கண்கூடாக காட்டியிருக்கும் உண்மை இது. மகத்தான மழைக்காடுகள் அழிந்தன. இன்று ரப்பர் லாபகரமான பயிர் அல்ல. ஆகவே வெற்றுமரங்களாக தோட்டங்கள் நின்றிருக்கின்றன. காடு அழிந்து நீர்வளம் அழிந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் எண்ணை உற்பத்திக்கு பல விவசாயங்கள் உள்ளன. கங்கைச் சமவெளியில் உள்ள கடுகெண்ணை, சூரியகாந்தி போன்றவை மிக லாபகரமான எண்ணை வித்துக்கள். குறைவான நீரில் விளைபவை. எண்ணைப்பனை மழைக்காடுகளில் மட்டுமே வளர்வது. இந்தியச்சூழலில் அது லாபகரமாக வளருமா என்று நிரூபிக்கப்படவுமில்லை. நமது மரபான எண்ணை வித்துக்களை ஊக்கப்படுத்தினாலே போதும்.

இந்தத் திட்டம் பொய்யானது. இது எண்ணைப் பனைக்காக அல்ல. மழைக்காடுகளை அழிக்கும் இந்தத்திட்டம் எண்ணை வித்துக்களுக்காக அல்ல. மலேசியா  முதலிய நாடுகளில் நிறுவனங்கள் காடுகளை அழித்து, நூற்றாண்டு வளர்ச்சி கொண்ட மரங்களை வெட்டி விற்று முக்கால்பங்கு லாபத்தை அடைந்த பின்னரே எண்ணைப் பனை விவசாயத்தை தொடங்குகின்றன. எந்த துறைமுகத்திற்கும் சென்று பாருங்கள் மலேசிய மரங்கள்தான் குவிந்து கிடக்கும். நாம் கட்டும் வீடெல்லாம் மலேசிய மரத்தால்தான். இங்கும் இவர்களின் கொள்ளை நோக்கம் மரங்கள்தான்.

அப்பட்டமான சூறையாடல் மட்டும்தான் இது. இதற்கு எதிராக இந்தியாவின் குரல் எழாவிட்டால் நாம் நம் தலைமுறைகளை பலிபீடத்தில் வைக்கிறோம் என்றே பொருள். ஆனால் இங்கே மெய்யான சூறையாடல்கள் மிகத்திறமையாக ஊடகங்களாலேயே மறைக்கப்படுகின்றன.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:34

கோவை வாசகர், கடிதம்

ஒரு கோவை வாசகர்

அன்புள்ள ஜெ வணக்கம்…

ஒரு கோவை வாசகர் என்ற பதிவு வெளியான அன்றே திரு வேலுமணி அவர்களை தொடர்பு கொண்டேன். தாமதமாக பதில் அனுப்பியிருந்தார். அழைத்துப் பேசினேன் தேவையான நூல்களை தருகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன்.

விஷ்ணுபுரம் நாவல் வாசிக்க வேண்டுமென்பது நெடுநாள் விருப்பம் என்றார். சந்தித்துக் கொடுத்தேன்.

தன்னுடைய 13வது வயதில் இருந்து வாசித்து வருகிறார். தற்போது 55 வயது நடக்கிறது.  மனம் கவர்ந்த எழுத்தாளர்களுக்கு தனது மகள்களின் உதவியுடன் மின்னஞ்சல் அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

தமிழ் இந்துவில் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அண்ணா கட்டுரைகளைப் படித்துவிட்டு தொடர்புகொண்டு அவர் எழுதிய நூல்களையும் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் இமயம் அவர்களின் படைப்புகளை படித்து அவர் நூல்களையும் பெற்றிருக்கிறார்.

உங்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நீங்கள் நிறைய நூல்களையும் கருப்பட்டி கடலை மிட்டாயும் அனுப்பி  இருந்ததில் பெருமகிழ்ச்சி அவருக்கு.

வாசிக்கும் பழக்கம் உள்ள ஒருவரை சந்தித்து பேசிய அனுபவமே அவருக்கு இதுவரை இல்லை. மொழி தெரியாத அன்னிய தேசத்தில் நெடுங்காலம் வாழ நேர்ந்த ஒருவர்  தன் தாய் மொழியை பேசி கேட்ட பரவசம் அவரிடம் இருந்தது.

உங்களை நூல்கள் மூலமாக மட்டுமே அறிந்து இருக்கிறார். உங்கள் இணையதளம் பற்றிய அறிமுகமே இல்லை. அவரின் கைப்பேசியை வாங்கி உள்ளே செல்ல கற்றுக் கொடுத்தேன். இத்தனை காலம் கையிலேயே புதையலை சுமந்தலைந்திருக்கிறேனே இனி தவற விட மாட்டேன் என்றார்.

நாற்பதாண்டுகளுக்கு மேல் தனித்த வாசிப்புத்தவத்தில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். அதன் பலன்களான நல்ல மொழி சிந்தனத்திறன் அவரிடம் தெரிகிறது. எனினும் குழுவாக நண்பர்களோடு இணைந்து செயல்பட்டிருந்தால் சென்றடைந்து இருக்கவேண்டிய உயரமே வேறு நண்பர்கள் வட்டத்தின் வாசகர்கள் குழுவின் முக்கியத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கோவையில் தொடர்ந்து நடக்கும் சந்திப்புகள் நண்பர்கள் பற்றியெல்லாம் கூறினேன். நீங்கள் அடுத்து கோவை வரும்பொழுது அவசியம் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன்.

விடைபெற்று தன்னுடைய வாகனத்தில் ஏறி சிறிது நகர்ந்தவர்  வண்டியை நிறுத்தி நீங்கள் எனக்கு ஏதாவது சொத்து வாங்கிக் கொடுத்திருந்தாலும் பணம் கொடுத்து இருந்தாலும் இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டேன் என்று நெகிழ்ந்து  சென்றார்… என்னிடமும் அதே நெகிழ்ச்சி .

மு.கதிர் முருகன்

கோவை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:33

அயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு

பொதுவாக அயோத்திதாசர் பறையர் என்ற பெயரை ஏற்பதில்லை. பூர்வபௌத்தர்களை இழிவுபடுத்த பௌத்த சத்ருக்கள் சுமத்திய இழிபெயரே அது என்பது அவர் கருத்து.மேலும் அப்பெயர் இம்மக்கள் சூட்டிக் கொண்ட பெயரல்ல.மாறாக அவர்களை அழைக்க பிறரால் வழங்கப்பட்டு வரும் பெயரே அது என்பதும் அவர் கருத்தாக இருந்தது

காலத்தால் பழைமையாக்குதல் என்னும் அணுகுமுறை (அயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு): ஸ்டாலின் ராஜாங்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:32

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

ஜெமோ,

விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுகள் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளை நெருங்கி அறிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியக்கக் கொண்டாட்டம். குறிப்பாக 2018ல் விருது பெற்ற ராஜ் கௌதமன் அவர்களின் ஆக்கங்கள் பெரும் திறப்புகளை எனக்களித்தவை.

இந்த விருது பெறும் ஆளுமை ஏற்கனவே நாம் அறிந்தவராக இருக்கும் போது, நமக்கு ஏற்படும் பரவசம் நாம் சராசரிகளுக்கு மேல் என்ற ஒரு அறிவாணவத்தை உருவாக்கி விடுகிறது. இவ்வருட விருதை பெற்றுக் கொள்ளப்போகும் கவிஞர் விக்ரமாதித்தனை அவருடைய கவிதைகள் மற்றும் சினிமா வழியாக அருகிலிருப்பவராகவே உணர்கிறேன்.

அவருடைய கட்டுரைகளைப் படிப்பதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. “தமிழ்க் கவிதை மரபும் நவீனமும்” என்ற தலைப்பில் இக்கட்டுரைகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கவிஞனின் நிலையாமை

அன்புடன்

முத்து

***

அன்புள்ள ஜெயமோகன்

விக்ரமாதித்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது நிறைவளிக்கும் செய்தி. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர் .பொதுவாக விருதுகளை அளிக்கும்போது சராசரித்தன்மை அல்லது ஸ்டேண்டேட் அளவு உள்ள கவிஞர்களுக்கு தான் அதிகமாக அளிக்கப்படும். ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய நடத்தையும் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் .கவிஞர் என்று சொல்லும்போது சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் குணாதிசயங்களும் அவர்களிடம் இருக்கும்.

ஆனால் விக்ரமாதித்தன் போன்ற ஒருவர் இதற்கெல்லாம் வெளியே இருப்பவர். அவரை ஒரு கவிஞர் என்று அறிமுகம் செய்தால் சாதாரணமாக நம்ப மாட்டார்கள். அவரை ஒரு நாடோடி என்றுதான் நினைப்பார்கள். அவரால் ஒரு கவிஞனைப் போல கம்பீரமாக மேடையில் பேச முடியாது. மேடையிலே கவிதை வாசிக்வும் அவரால் முடியாது .எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எழுதிய கவிதைகளை காட்டினால் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது என்றுதான் சொல்வார்கள். அது ஏன் கவிதை என்று பலருக்கும் புரியாது.

ஆகவே அவரைப் போன்ற ஒருவரை பொதுவான அமைப்புகள் கௌரவிக்க வாய்ப்பில்லை .விஷ்ணுபுரம் போன்ற இலக்கியத்துக்காக செயல்படும் தனியான அமைப்புகள்தான் கௌரவிக்கக வேண்டும். அது நம்முடைய கடமை. அதை நீங்கள் செய்கிறீர்கள் .அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

விக்கிரமாதித்தன் அவர்களுடைய கவிதையை பற்றி நான் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். கவிதை சம்பந்தமான கூட்டங்களில் கவிதை சொல்லும் போது இது ஏன் கவிதையாகிறது என்று என்னிடம் சிலர் கேட்பது உண்டு .நான்  ‘கவிதை என்பது ஒரு சமூகத்தினுடைய கூட்டு உரையாடல்’ என்று சொல்லுவேன் .அந்த உரையாடல் தான் அந்த கவிதையை அர்த்தப்படுத்துகிறது. பத்து பேர் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது நடுவில் ஒருவர் ஒரு விஷயம் சொல்கிறார். அப்போதுதான் அதிலுள்ள பகடியோ எதிர்ப்போ அல்லது விளக்கமோ நமக்கு அர்த்தமாகிறது. அந்தப் பத்து பேரும் இல்லாமல் அவர் மட்டுமே அந்த விஷயத்தைச் சொல்லி இருந்தால் அர்த்தமாய் இருக்காது. அது போலத்தான்

விக்கிரமாதித்தன் அவர்களில் இருந்து மாறுபட்டவர். இங்கே அனைவரும் அலங்காரமாகவும் பூடகமாகவும் பேசிக் கொண்டிருக்கு போது  நேரடியாக பேசுகிறார். வாழ்க்கை பற்றிய தன் அடிநிலை அறிதலைச் சொல்கிறார். வெளியே இருந்து பேசுகிறார். அந்தக் குரல் தனியாக ஒலிக்கிறது. நம் ஒட்டுமொத்த கவிதைப் பின்னணியில்தான் கவிதையாக ஆகிறது.

நாம் புகோவ்ஸ்கியை கொண்டாடுவோம். ஆனால் விக்ரமாதித்தனை புரிந்துகொள்ள மாட்டோம். புகோவ்ஸ்கியை அங்கே கொண்டாடி எழுதுகிறார்கள். அதை வாசித்துவிட்டு நாம் கொண்டாடுகிறோமே ஒழிய நமக்காக ஒன்றும் தெரியாது. விக்ரமாதித்தன் வகையான  எழுத்துக்கு தமிழில் நிறைய முன்னுதாரணங்கள் உண்டு. விக்கிரமாதித்தனை போல பல பெரிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். என்பதை நாம் தனிப்பாடல் திரட்டில் பார்க்கலாம். காளமேகப்புலவர் ,இரட்டையர் போன்ற பலர் இருந்திருக்கிறார்கள்.

அவரைப் புரிந்து கொள்ளவும் அவரை ஒரு முக்கியமான கவிஞர் என்று அடையாளப்படுத்தவும் தமிழ் கவிதையுடன் ஒட்டுமொத்தப் போக்கை அறிந்திருக்கும் அமைப்பால்தான் முடியும். அவ்வாறான வாசகர்கள் தேவை.  அதை  நவீன இலக்கிய அமைப்பில் செய்த பிறகுதான் கல்வித்துறை அமைப்புகளும் அரசு சார்ந்த அமைப்புகளும் அவரை அடையாளம் காணமுடியும். அதைச் செய்கிறீர்கள். அதற்கு என் நன்றி.

ஆறுமுகம் எம்.ஏ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:30

நீலம் குரலில், கடிதங்கள்

நீலம்- குரலில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நலம்.

எது முதல், எது அப்புறம் என்று வகைப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யவேண்டிய அவசியம்.  அதுவும் வாசிப்பு என்று வரும்பொழுது, தனி நேரம் ஒதுக்கமுடியாமல், ஓடிக்கொண்டே, சமைத்துக்கொண்டே, கார் ஓட்டிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் புல் வெட்டிக்கொண்டே காதால் கேட்டால் நன்றாக இருக்கும், ஒலி வடிவில் வெண்முரசு இருக்கிறதா என்று கேட்கும் நண்பர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

பொதுவாக இலக்கிய ஒலி சிவகுமாரின் யூட்யூப்  நிரலை அனுப்புவேன். நானும், வாசித்து முடித்த அத்தியாயங்களையும் நூல்களையும் மீள்வாசிப்பிற்கு ஒலி வடிவை அவ்வப்பொழுது நாடுவேன்.  நான் என்ன கேட்பேன் என்று அறிந்திருக்கும் யூடுயூப் தானியிங்கி, சுபஸ்ரீ அவர்கள், நீலம் நூலின் ஒலி வடிவ அத்தியாயங்களை அவர் பதிவேற்றம் செய்தும் செய்யாததுமாக எனக்கு தகவல் அனுப்பியது. முதல் அத்தியாயத்தை கேட்கலாம் என்று கேட்கப் போனவன் ஏழு அத்தியாயங்களை ஒரே அமர்வில் கேட்டேன்.

“புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன்.” தென்றலாக பேசும்பொழுது அவர் குரலில் கர்வம்.

“அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில்? என் தெய்வமே”  எனச் சொல்லும் மேனகையின் குரலில் பெருமிதம்.

பிச்சி ராதையின் பின்னால் ஓடும் தோழி லலிதையின் குரலில் பேதமை.

தேவயானியின் மணிவயிற்றில் பிறந்த யதுவின் வழி வந்தவர்கள் நாம் என்று யாதவர் கதை சொல்லும்பொழுது, மகிபானுவாக அந்தக் குரலில் ஒரு பக்குவம். நிதானம்.

எந்தக் குரலில் எப்படிப் பேசினாலும், பிரேமையில் திளைக்கும் ராதைக்கென்று தனிக்குரல்.

மூன்றாவது முறையாக, நீலத்தை, எப்பொழுது வாசிப்பது என்று இருந்தேன்.  மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிலா முறை கேட்க வைத்துவிடும் சுபஸ்ரீயின் குரலில் வடிவெடுத்திருக்கும் நீலம்.

நண்பர் சுபஸ்ரீக்கு வாழ்த்துக்கள், நன்றி, அன்பு என எல்லாமும்.

சௌந்தர்,

ஆஸ்டின்,

அன்புள்ள சௌந்தர்

என் மகள் ஆங்கில நூல்களை வாசிக்கையில் கூடவே காதில் ஒலிவடிவையும் ஒலிக்கவிட்டுக் கொள்வாள். இதென்ன வழக்கம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் பின்னர் எனக்கும் அது உதவியாக இருந்தது. உண்மையில் என் உள்ளத்தில் இருக்கும் பல ஆங்கிலச் சொற்களின் ஒலிவடிவை அப்போதுதான் காதால் கேட்கிறேன் என அறிந்தேன்.

இன்று தமிழுக்கே அப்படிப்பட்ட ’வாசகர்கள்’ வந்துவிட்டனர். தமிழ் அறிந்து தமிழ் எழுத்துக்கள் அறியாதவர்கள் ஒரு பெரும் கூட்டம். அவர்களால் தமிழை கேட்கத்தான் முடியும். அவர்கள் தமிழிலலக்கியத்திற்குள் வர ஒலிவடிவங்கள் மிகப்பெரிய வழியை திறக்கின்றன. இன்னொரு தரப்பு தமிழை வாசிக்கவும் தெரிந்து, ஆனால் தமிழின் உணர்ச்சிகரம் மற்றும் உச்சரிப்புகளை அறியாதவர்கள். அவர்களுக்கும் இந்த ஒலிவடிவம் பேருதவி புரிகிறது எனக் காண்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ,

சுபா அவர்களின்”நீலம்” சிறிது கேட்டேன். எனக்கென்னவோ இந்தக் குரல் பதிவு முறையில் உடன்பாடில்லை. அது நம்முடைய கற்பனைத் திறனை கட்டுப்படுத்துகிறது மேலும் நமது மனம் விரிவடைவதை அனுமதிக்க மறுக்கிறது. உதாரணத்திற்கு “பனி விழும் வனத் தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக் கொள்வதை அவள் உணர்ந்திருந்தாள்,” “விதையிலிருந்து முளைக்கும் செடி போல அவள் எழுந்து வந்தாள்,” “தன்னுள் தான் நுழைந்து ஒரு விதையாக ஆக விழைபவள் போல,” எப்பேர்ப்பட்ட வரிகள், இந்த ஒவ்வொரு வரிகளையும் நாம் கற்பனையில் உணர்வதற்குள் குரல் பதிவு எங்கோ சென்றுவிடுகிறது, அதைத் தொடர முடிவதில்லை.

audio book என்பது ஆழ்ந்த வாசிப்பிற்கான தல்ல என்பது எனது புரிதல். கண் பார்வையற்றவர்களுக்கு அல்லது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

பாலன் சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்,

அறிதலுக்கான இயல்புகள் அனைவருக்கும் ஒன்றல்ல. சிலருக்கு செவிசார் நுண்ணுணர்வு மிகுதி. சிலருக்கு அது அறவே இருக்காது. முழுக்க முழுக்க மூளை நரம்பமைப்பு சார்ந்தது அந்த தன்மை.

செவிசார் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு கேட்டால் நெஞ்சில் பதியுமளவுக்கு வாசிப்பால் பதிவதில்லை. அவர்களுக்கு ஒலிநூல்கள் மிக உதவியானவை. செவியுணர்வு குறைந்தவர்களால் ஒலிவடிவை ரசிக்க முடியாது.

மௌனவாசிப்பு, உள்வாசிப்பு எப்போதும் ஆழமானதுதான். ஒரு படி மேலானதுதான். நமக்கு நாமே நடித்துக் கொள்வது அது. பிரதி நமக்குள்ளே நிகழ்வது. நாமன்றி ஆசிரியர்கூட இல்லாத நிலை. இலக்கியம் அவ்வாசிப்பை உத்தேசித்தே உருவாக்கப்படுகிறது.

ஆனால் சில நூல்களுக்கு மேலதிகமாக ஓர் ஒலியொழுங்கு உண்டு. தாளம் என்று சொல்லலாம். அவை செவியில் ஒலிக்கையில் மேலதிகமாக ஓர் அழகு கொள்கின்றன. அவற்றைச் சொல்லிப் பார்த்து வாசிக்கவேண்டும். அவ்வாறு வாசிக்காதவர்களுக்கு வாசிப்பை செவியில் கேட்பது உதவலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2021 11:30

September 7, 2021

பங்கிம் சந்திரர் பிரிட்டிஷ் ஆதரவாளரா?

ஆனந்தமடம் நாவல்

ஆனந்தமடம் வாங்க

அன்புள்ள ஜெ

அவர்களுக்கு வணக்கம்.

அக்னிநதி நாவலை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்நாவல் பெருமழையில் துளித் துளியாய் கரையும் வாசிப்பனுபவத்தை எனக்குத் தருகிறது.

தங்களுடன் பகிரவிரும்பிய செய்தி இந்நாவலில் “ஆனந்த மடம்” புதினம் குறித்து நாவலாசிரியரால் நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது. பங்கிம் சந்திர சட்டர்ஜி கி.பி 1770-களில் ஏற்பட்ட கொடிய பஞ்சம், சந்நியாசிகளின் புரட்சி இவற்றை அடிப்படையாக கொண்டு எழுதிய புகழ் பெற்ற நாவலான சந்திரமடம் முஸல்மான்களுக்கு எதிராக மட்டுமே உள்ளது என்கிறது அக்னிநதி.

பக்கிம் சந்திரர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை வாழ்விப்பதற்காக வந்தவர்கள் என்றும் இந்த உண்மையை புரட்சிகர சந்நியாசிகளும் உணரவில்லை என்றும், ஆங்கிலேயர்களால் தான் இந்துக்களுக்கு விமோசனம், மேன்மை, உயர்வுகள் கிட்டும் என்றும் நம்பியவர் என்கிறது. பக்கிம் சந்திர சட்டர்ஜி கொடிய பஞ்ச நிலைக்கு காரணமான கிழக்கிந்திய கம்பெனியையும் ஆங்கிலேயர்களையும் ஆதரித்துத்தான் அந்நாவலை எழுதினார் என்று விரிவாக அக்னிநதி நாவல் சொல்கிறது.

விக்கிபீடியாவோ சட்டர்ஜி ஆங்கிலேயர்களை போரில் சந்நியாசிகள் வெற்றி கொள்வதாகவும் பிரித்தானியர் அல்லாத ஓர் ஆட்சியையே அவர் விரும்பியதாகவும் சொல்கிறது. அக்னிநதி நாவல் சொல்வதையே எடுத்துகொண்டாலும் இந்நாவல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகே தடை நீக்கப்பட்டுள்ளது. சற்றே குழப்பம்? ஆனந்தமடம் புதினத்தை நீங்களும் சுட்டி காட்டியுள்ளீர்கள். இப்புதினத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஏனோ ஒரு ஆவல் அது அக்னிநதியால் உண்டானது.

–சக்தி

(குவைத்).

***

அன்புள்ள சக்தி

பங்கிம் சந்திரரைப் பற்றிய இக்கருத்துக்கள் இன்று வெவ்வேறு வகையில் இணையம் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன. அதற்கான பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று இந்தியாவில் இந்து மதவாத அரசியல் முன்னிலையில் உள்ளது. அது இந்து மறுமலர்ச்சி, அதன் விளைவான இந்திய தேசிய மலர்ச்சி ஆகிய இரண்டு பேரியக்கங்களையும் தன் மதவாத அரசியலுக்கு உகந்த முறையில் திரித்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

மறுபக்கம் மதவாத அரசியலை எதிர்க்கிறோம் என நினைக்கும் ஒரு தரப்பினர் மொத்த இந்து மறுமலர்ச்சியையும் இந்திய தேசிய மலர்ச்சியையும் எதிர்த்து, அவை இந்துமதவெறியின் எழுச்சி என்று சொல்லி இழிவுசெய்கிறார்கள். அதாவது இந்து மறுமலர்ச்சி, இந்திய தேசிய எழுச்சி இரண்டையும் பற்றி இந்துமதவாதிகளின் தரப்பையே இங்குள்ள இடதுசாரிகளும் ஏற்று, அதனடிப்படையிலேயே தாங்களும் சிந்தித்து, எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அதன் வழியாக அவர்களே இந்துத்துவ வரலாற்றெழுத்தை நிலைநாட்ட உதவுகிறார்கள்.

இந்த இந்து- இந்திய எதிர்ப்புக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதிகளின் ஆதரவு உள்ளது. இதை முற்போக்கு என்னும் பாவனையில் செய்கிறார்கள். ஏனென்றால் இந்த துருவமயமாக்கல் எல்லா அரசியல் தரப்புக்கும் லாபகரமானது. இன்றைய சிந்தனையாளர்கள் செய்யவேண்டியது இந்த துருவப்படுத்தும் அதீதப் பார்வைகளை எதிர்ப்பதைத்தான்.

இன்று ஒட்டுமொத்தக் கருத்துக்களமே திரிபுகள் அரையுண்மைகள் வெறிக்கூச்சல்களால் நிறைந்துள்ளது. உண்மையை மலரிலிருந்து நார் எடுப்பதுபோல மிகமிக கவனமாகத்தான் மீட்டாக வேண்டியிருக்கிறது.

பங்கிம் தன் நாவலை எழுதியது 1882ல். அந்நாவல் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த துறவிகளின் போராட்டம் பற்றியது. பங்கிம் தன் இளமைப்பருவத்தில் செவிவழியாகக் கேட்ட செய்திகளிலிருந்து அந்நாவலை உருவாக்கியிருக்கிறார். அவர் அந்நாவலை எழுதும் போதிருந்த பொதுவான கருத்துச்சூழல் என்ன, அக்காலகட்டத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன என்று நாம் பார்க்கவேண்டும்.

ஆனந்த மடம் எழுதப்பட்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே 1885 இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. இந்திய தேசிய இயக்கம் அதன்பிறகுதான் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றும் அக்காலகட்டத்தில் ஆங்கிலேயரை இந்தியாவை ஒருங்கிணைத்து சட்டத்தின் ஆட்சியை அளித்த நவீன யுகத்தவர் என்று பார்க்கும் கோணமே இந்தியாவில் பரவலாக இருந்தது.

இந்தியா என்னும் கலாச்சார தேசியம் பற்றிய பிரக்ஞை இந்தியர்களின் மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக, மிகச்சிறு வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. இந்தியா என்ற அரசியல் தேசியத்தை அன்று எவரும் அறிந்திருக்கவில்லை. இந்திய தேசியக் காங்கிரஸே கூட நல்லாட்சி நடத்திய ஆங்கிலேயரிடம் பேசி இந்தியர்களுக்கு மேலும் அதிக ஆட்சியுரிமைகளும் சட்டப்பாதுகாப்புகளும் பெறும்பொருட்டு ஓர் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதுதான்.

கோக்கலே வரைக்கும்கூட காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷாரின் நல்ல நோக்கத்தை நம்பியவர்கள், அவர்கள் இல்லையேல் இந்தியா ஒரு தேசமாக நிலைகொள்ளாது என நினைத்தவர்கள். அது ஓரளவு உண்மையும்கூட. ஆங்கிலேயர் அல்லாத இந்திய ஆட்சியாளர்கள் மதவெறியர்களாக, கொள்ளையர்களாக, ஒருவரோடொருவர் பூசலிட்டு மக்களை அழிப்பவர்களாகவே இருந்தனர்.

பிரிட்டிஷாரை ஆக்ரமிப்பாளர்கள், அன்னியர் என முதலில் கருதியவர் திலகர்தான். பின்னர் காந்தி வந்தார், 1918ல். அவர் திலகரின் பார்வையையும் கோக்கலேயின் வழிமுறைகளையும் இணைத்தார். காந்தி பிரிட்டிஷார் ஆக்ரமிப்பாளர்கள், சுரண்டல்காரர்கள் என நினைத்தார். இந்தியாவுக்கு வரும்போதே சுயராஜ்யம் என்னும் கருத்து அவருக்கு இருந்தது. ஆனால் கோக்கலே போல ஜனநாயகத்திலும், சட்டபூர்வ கிளர்ச்சிகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆகவே, பின்னர் இங்கே உருவான மனநிலைகளை முன்னரே எழுதப்பட்ட ஒரு நூலிலும், அதன் ஆசிரியரிலும் நேரடியாகத் தேடுவதென்பது அபத்தமானது. பங்கிம் சந்திரர் அக்காலத்தைய அத்தனை இந்திய சிந்தனையாளர்களையும் போல பிரிட்டிஷ் ஆட்சிமேல் நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருந்தார். அவர்களை இந்தியாவின் காவலர்கள் என்றே நினைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளியல் சுரண்டலை அவர் அறிந்திருக்கவில்லை. வங்கப்பஞ்சத்திற்கும் அச்சுரண்டலுக்கும் இடையேயான தொடர்பையும் உணர்ந்திருக்கவில்லை.

வங்காளத்தின் பொற்காலம் என்பது கிபி 750 முதல் 1120 வரை அங்கே இருந்த பாலா பேரரசின் ஆட்சிக்காலம்தான். இன்றும் வங்கத்து அருங்காட்சியகங்களில் பாலா பேரரசின் பண்பாட்டுச் சின்னங்களே நிறைந்திருக்கின்றன. பாலா பேரரசு பௌத்த மத அடிப்படை கொண்டது. அது ஆப்கானிய சுல்தானியப் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது.

அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை வங்க வரலாறு என்பது மிகக்கொடிய ரத்த வரலாறுதான். சுல்தான்களால் வங்கம் சூறையாடப்பட்டது. அதன் ஆயிரமாண்டுக்காலப் பண்பாடு முற்றாக அழிக்கப்பட்டது. நமக்கு தெற்கே விஜயநகரப் பேரரசு உருவாகி முந்நூறாண்டுகள் நீடித்தமையால் இங்கே பண்பாட்டுச் சின்னங்கள் எஞ்சுகின்றன. வங்கத்தில் அவர்களின் பண்பாட்டுத் தொன்மையின் ஒரு சிறு அடையாளம்கூட எஞ்சவில்லை. முற்றிலும் இடிபாடுகள் மட்டுமே மிஞ்சின.

மற்ற இந்திய நிலப்பகுதிக்கும் வங்கத்திற்கும் மேலும் சில வேறுபாடுகள் உண்டு. வங்கத்தில் ஆரம்பத்திலேயே சுல்தானிய ஆட்சி நிலைபெற்று விட்டது. அவர்கள் பல வலுவான அரசுகளாக நீடிக்கையில் அவர்களுக்கு எதிராக பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகலாயர்களின் மையஅரசு போரிட்டது. ஆகவே வங்கநிலம் குறைந்தது முந்நூறாண்டுகள் போர்க்களமாகவே இருந்தது.

வங்காளத்தின் இருண்டகாலம் என்றே ஐநூறாண்டுகள் நீடித்த சுல்தானிய ஆட்சிக்காலத்தைச் சொல்லலாம். இந்தியாவில் இன்னொரு சமூகத்திற்கு இத்தனை நீண்ட இருண்டகாலம் இருக்க வாய்ப்பில்லை. உலகவரலாற்றிலேயே அரிது. மேலோட்டமாக வங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். சுல்தானிய ஆட்சிமுறையின் மத, இனவெறி ஒருபக்கம். சுல்தான்களும் முகலாயரும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டமையின் அழிவு இன்னொரு பக்கம்.

அந்த இருண்ட ஆட்சிக்காலத்தில்தான் ஐரோப்பிய ஆதிக்கம் உருவாகியது. பிரிட்டிஷார் ஆண்ட இடங்களில் எல்லாமே சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டன. புறவயமான பொதுநீதி கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றமே கல்கத்தாவில் அமைந்தது என்பதை நாம் மறக்கலாகாது. மதம்சார்ந்த நீதிமுறையால், நவாப்புகளின் ஒடுக்குமுறையால் சலிப்புற்றுப் போயிருந்த வங்க மக்களுக்கு அது எத்தனை நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது என்பது வரலாறு. நான் முன்பும் எழுதியிருக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல் கண்களுக்குத் தென்பட மேலும் பல ஆண்டுகள் ஆயின. மேலைக்கல்வி பெற்ற, விரிந்த வரலாற்றுப் பார்வை கொண்ட காந்தி போன்றவர்கள் வரவேண்டியிருந்தது. அன்றைய மக்களுக்குக் கண்ணுக்குப்பட்டது சுல்தான்களின், நவாபுகளின் கொடிய ஆட்சியில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி விடுதலை அளித்தது என்பதே. பங்கிம் சந்திரரின் மனநிலையும் அதுவே. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலின் இறுதியில் தொட்டம்மா பாட்டி பிரிட்டிஷார் நம்மவர் என்று சொல்கிறாள். அதே மனநிலை.

ஆனால் ஆனந்தமடம் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தின் கதை. நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும். நாவலில் அதற்கு முன்பு இருந்த நவாப் ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராக துறவிகளும் துறவிவேடமிட்ட போராளிகளும் உதிரிப்போர்க் குழுக்களாக இருநூறாண்டுகளாகவே போராடி வந்த சித்திரம் உள்ளது. அவர்கள் சாந்தனா என்ற பெயரில் ஒரு கலாச்சார இயக்கமாகவே அன்று மாறியிருந்தனர். வங்கக்கிராமங்கள் முழுக்க இந்த தலைமறைவுப் போர்வீரர்கள் இருந்தனர். அவர்களின் அமைப்பும் இருந்தது. அதில் ஒன்றே ஆனந்தமடம்.

ஆனந்தமடம் நாவலில் நவாபுகளின் அடக்குமுறை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அடக்குமுறைக்கு வழிவிடுவதையும், ஆனந்தமடம் போன்ற துறவியர் அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்புவதையுமே பங்கிம் சித்தரிக்கிறார். நவாப் ஆட்சிக்காலத்தில் இந்து வழிபாட்டுமுறை மற்றும் இந்துக் குடிகள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எழுந்த உணர்ச்சியானது மெல்லமெல்ல பாரதம் தளையுண்டிருக்கிறது என்னும் விரிந்த சித்திரமாக மாறுவதையே பங்கிம்சந்திரரின் ஆனந்தமடம் காட்டுகிறது. வந்தேமாதரம் என்னும் புகழ்பெற்ற பாடலின் பொருள் இதுவே.

பங்கிம் சந்திரர் தனிப்பட்ட எழுத்துக்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை வரவேற்றிருக்கிறார். பிரிட்டிஷார் இல்லாவிட்டால் நவாபுகளின் காட்டாட்சியே நீடிக்கும் என கூறியிருக்கிறார். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளர்களே என அவருடைய அகம் உணர்ந்திருந்தது. ஆனந்தமடம் நாவல் காட்டுவது அதைத்தான்.

இந்த முரண்பாட்டை பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும் பார்க்கலாம். அவர்களின் அரசியல் நிலைபாடுகள், அவர்களின் சமூகக்கொள்கைகள் சமகால பொதுச்சிந்தனையைச் சார்ந்தவையாகவும், உலகியல் நோக்கு கொண்டவையாகவும் இருக்கும். அவர்களின் புனைவுலகு அவர்களே அறியாத ஆழத்தை தொட்டு அறிந்து முன்வைக்கும்.

ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பை பங்கிம் சந்திரர் தர்க்கபூர்வமாக கண்டறிந்து முன்வைக்கவில்லை. ஆங்கிலேயர்களை அவர் தவிர்க்க முடியாதவர்களாக எண்ணினார், அவருடைய ஆழுள்ளம்தான் அவர்களை ஆதிக்கக்காரர்களாக அடையாளம் கண்டது. அவ்வகையில் ஆனந்தமடம் அது எழுதப்பட்ட காலத்திற்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னர் உருவாகவிருந்த உளநிலைகளை முன்னரே சென்று தொட்டுவிட்டது. ஆகவேதான் அது ஒரு கிளாஸிக்.

பின்னாளில் ஆனந்தமடம் இந்தியாவில் உருவாகி வந்த தேசிய எழுச்சியை, ஆங்கிலேய எதிர்ப்பை மிகச்சரியாக பிரதிநிதித்துவப் படுத்தியது. ஆகவேதான் அதை ஆங்கிலேயர் அஞ்சினர், தடைசெய்தனர். வந்தேமாதரம் என்னும் கோஷம் இந்தியாவை அரசியல் மயப்படுத்தியது.

இந்திய வரலாற்றின் தவிர்க்கமுடியாத சில உண்மைகள் உண்டு. இந்தியநிலத்தில் இந்துமதம் ஐநூறாண்டுகளாக ஒடுக்கப்பட்டது. தேக்கநிலை கொண்டு அழியும் தருணத்தில் இருந்தது. அதிலிருந்தே இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. அன்றிருந்த முகலாய, சுல்தானிய ஆட்சிகளின் கொடுமையான அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் அதில் தவிர்க்கமுடியாமல் இருந்தே தீரும்.

இந்து மறுமலர்ச்சியே கலாச்சார இந்தியா அல்லது பாரதம் என்னும் கருத்துருவை மக்கள் மயமாக்கியது. அதையே நாம் பங்கிம் சந்திரரின் நாவலில் காண்கிறோம். அந்தக் கலாச்சார இந்தியா என்னும் கருத்துருவமே இந்திய மக்களை ஒற்றைப்பெருந்திரள் என கட்டி எழுப்பியது. அதுவே இந்தியா என்னும் அரசியல் தேசியத்தை உருவாக்கியது. அதன் வழியாகவே இந்திய சுதந்திரப் போராட்டம் நிகழ்ந்தது. நவீன இந்தியா உருவாகியது.

இன்றைய பாதிவெந்த ஆய்வாளர்கள் [இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதும் பாவனை முற்போக்காளர்கள்] இந்து மறுமலர்ச்சியின் முன்னோடிகளிடம் இருந்த முகலாய, சுல்தானிய ஆட்சிக்கு எதிரான நிலைபாடுகளை இஸ்லாமிய வெறுப்பு என விளக்குகிறார்கள். அந்த முன்னோடிகள் முன்வைத்த கலாச்சார தேசிய உருவகத்தையும் அதன் அடையாளங்களையும் இந்துத்துவ அரசியலின் தொடக்கம் என வர்ணிக்கிறார்கள்.

இதன் வழியாக அந்த தேசிய முன்னோடிகளை மதவெறியர்களாக கட்டமைக்கிறார்கள். அதன்வழியாக இந்தியச் சுதந்திரப் போராட்டமே ஒருவகையான மதவெறிநிகழ்வே என சாதிக்கிறார்கள். அடிப்படையில் அவர்களின் நோக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு எதிராக எழுந்த மத,சாதி வெறிகளை நியாயப்படுத்துவது. பிரிவினைக்கு வழிவகுத்த மதவெறியர்களை தூக்கிப்பிடிப்பதுதான்.

சிலர் மெல்லமெல்ல முகலாய, சுல்தானிய ஆட்சியாளர்களை புனிதப்படுத்த முயல்கிறார்கள். அடுத்த எல்லைக்குச் சென்று இந்தியாவின் மொத்தக் கலாச்சார அடையாளங்களை அழித்த முகலாய, சுல்தானிய ஆட்சியாளர்களை ’அவர்களின் கோணத்தில் பார்த்து’ நியாயப்படுத்த முயல்பவர்களும் உண்டு. இதெல்லாம் ’முற்போக்குப்’ பார்வையில் நிகழ்கிறது. இது வெறும் தற்செயல் அல்ல.

குர்ரதுலைன் ஹைதரின் அக்னிநதி நாவல் அன்றைய சுதந்திரப் போராட்டச் சூழலில் இருந்த விவாதங்களைச் சுட்டிச்செல்கிறது. வந்தேமாதரம் பாடலும் சரி, பங்கிம்சந்திரரின் எழுத்துக்களும் சரி அன்றைய இஸ்லாமியர்களால் முதலில் ஏற்கப்பட்டு மெல்லமெல்ல இஸ்லாமிய தேசியக் கருத்துரு எழத்தொடங்கியபோது வெறுக்கப்பட்டன. அதையே நாவல் குறிப்பிடுகிறது.

ஜெ

***

வந்தேமாதரம் வரலாற்றாய்வின் வீழ்ச்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:35

காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்

பொதுப்புத்தியில் உள்ள நம்பிக்கை என்ன? ‘தனியார் துறை மிகவும் செயல்திறன் மிக்கது. காந்தியத் தொழில்முறை இன்றைய சூழலுக்கு சரிவராது. அது நவீன அறிவியலுக்கு எதிரானது.’ எவ்வளவு மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் இருக்கின்றன என யோசிக்க வியப்பாக இருக்கிறது. அதுவும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று 2000 வருஷத்துக்கு முன்பு பேசிய சமூகத்தில்…

காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:33

சேலம் மாவட்டத்து நடுகற்கள்- சுகதேவ்

அன்புள்ள ஜெ ,

நலம் என்று நினைக்கிறேன். நானும் நலமே. பயிற்சி மருத்துவராக இருந்த சமயத்தில் சேலத்தில் உள்ள நடுகற்கள் , வரலாற்று இடங்கள் குறித்து சிறு சிறு பயணங்கள் செல்வோம். அப்படி சென்ற பயணத்தை பற்றிய குறிப்பு எழுதலாம் என்று தோன்றி எழுதி பார்த்தேன். லோகமாதேவி மேடமிடம் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்டேன். அவர்கள் தான் தாங்கள் ஒசூர் சுற்றி உள்ள நடுகற்களை பார்வையிட சென்று உள்ளதாக கூறினார். அதனால் உங்களிடன் இதை பகிர்ந்து கொள்ள சொன்னார். நடுகற்கள்  பற்றிய உங்கள் கருத்தையும் அதை பார்வையிட செல்வதற்கான அடிப்படைகளை பற்றி உங்கள்  அறிவுரை நேரம் இருக்கும் போது கூற முடியுமா?

சேலத்தின் நடுகற்கள் -1

நன்றி ,

சுகதேவ்.

மேட்டூர்.

அன்புள்ள சுகதேவ்

நடுகற்கள் பற்றிய உங்கள் கட்டுரை ஆர்வமூட்டுவதாக இருந்தது. படங்களும் நன்றாக இருந்தன.  இத்தகைய பயணங்களுடன் இவற்றுடன் இணையும் நூல்களையும் வாசித்துக்கொண்டிருப்பது ஒட்டுமொத்தமான சித்திரம் உருவாக உதவும். ஆநிரை கவர்தல் தமிழிலக்கியத்தில் ஆகோள்பூசல் என சொல்லப்படுகிறது. அதைப்பற்றி வெவ்வேறு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ராஜ்கௌதமனின் ‘ஆகோள்பூசலும் பெருங்கற்கால நாகரீகமும் ’ ஒரு முக்கியமான நூல்.

ஜெ

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:32

பாணனின் நிலம்

அன்புள்ள ஜெ,

இது ஒரு பத்தாண்டுக்கு முன்பு நடந்த சம்பவம். அன்றைக்கு நான் கல்லூரி மாணவன். தமிழ் எம்.ஏ. என் ஆசிரியருக்கு புதுக்கவிதை பிடிக்காது. அதை கேலிசெய்துகொண்டே இருப்பார். ஆனால் அவர் மேற்கோள் காட்டும் கவிதைகள் எல்லாமே அப்துல் ரகுமான், வைரமுத்து வகையானவர்வள் எழுதியவை. அல்லது பிரம்மராஜன் எழுதும் எழுவாய் பயனிலை இல்லாத கவிதைகள்.

தமிழ்ப் புதுக்கவிதைக்காக நான் வாதம் செய்வேன். தமிழ் புதுக்கவிதைக்கு தமிழ்நாட்டில் வேர் இல்லை என்று சொல்வார். குரோட்டன்ஸ் செடிகள் என்று சொல்வார். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வெள்ளை எலிகள் என்று சொல்வார். அவற்றுக்கு பயனும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது.

அவர் சொன்னவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்று எனக்கும் தோன்றியதனால் நான் பெரியதாக வாதம் செய்ததில்லை. ஒரு நாள் விக்ரமாதித்யனின் ஐந்திணை என்ற கவிதைகளை வாசித்தேன். உடனே கொண்டுபோய் ஆசிரியரிடம் காட்டினேன். வழக்கம்போல கேலியாக “என்ன இது? மளிகைக்குறிப்பா?” என்று கேட்டார்.

ஆனால் நாலைந்து நாட்களுக்குப் பிறகு “ஆமாம், இதிலே ஒரு கவித்துவம் இருக்கிறது. இதை நம் மரபிலே உள்ள ஆசிரியப்பாவில் ஒருவகையாக நினைக்கமுடியும்” என்று சொன்னார்.

”வெறும் வர்ணனை அல்ல அவை. இவற்றில் ஒரு பழங்கால பாணனின் பார்வையும் இருக்கிறது. இந்த நிலத்தை அவன் நேரில் பார்க்கவில்லை. கற்பனையிலே பார்க்கிறான். இந்த நிலங்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் நம் கவிதையிலே இருக்கின்றன. அவன் காலூன்றி நின்றிருக்கும் மண் என்பது நம் மொழிதான்” என்றார்.

அவர் பாணன் என்று சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. நான் விக்ரமாதித்யனின் வாழ்க்கையைப்பற்றி அவரிடம் சொன்னேன். அவர் “ஆமாம், பெரிய கள்பெறினே…” என்று சொல்லி சிரித்தார்.

அவர் இன்றைக்கு இல்லை. நானும் என் மண்ணிலே இல்லை. ஆனால் இந்த விஷ்ணுபுரவிருது அளிக்கும்போது என் நினைவுகள் அந்தக் கவிதைகளை தொட்டுச்செல்கின்றன. விக்ரமாதித்யன் அவர்களுக்கு வணக்கம்

பாலகுரு சண்மும்

***

ஐந்திணை

விக்ரமாதித்யன்

குறிஞ்சி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்

முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்

மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்

நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்

பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:32

சவக்கோட்டை மர்மம் – கடிதங்கள்

சவக்கோட்டை மர்மம் – சிறுகதை

அன்புள்ள ஜெ

சவக்கோட்டை மர்மம் தொகுப்பில் வந்திருந்தாலும் இப்போது படித்தபோதுதான் முழுமையாக உள்வாங்க முடிந்தது. குறிப்பாகப் புதிர்ப்பாதைகளை பற்றிய குறிப்புகளைப் படித்த பிறகு. புதிர்ப்பாதைகளாக ஏன் தியானத்தையும் ஞானப்பாதையையும் உருவகித்தார்கள் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கடைசிப்பயணத்தின், சாவின் புதிர்ப்பாதை அது என நினைத்தேன். மனசின் புதிர்ப்பாதை என இன்றைக்கு நினைக்கிறேன்.

வெளியே உள்ள  சத்தங்களை வாங்கி அதுவே சுழற்றிக்கொள்கிறது. வேறொன்றாக ஆக்கிக் கொள்கிறது. வேண்டுமென்றே பாதைகளை குழப்பியடிக்கிறது. எல்லாவற்றையும் தப்பாக ஆக்குகிறது. நம்முடைய பெர்செஷனே நம்மை அலைக்கழியச் செய்கிறது. மனசுக்குள் மேப் வைத்துக்கொண்டு செல்பவன் வழிதவறுவான் என்று மகரிஷி சொன்னதுண்டு. ஆழமான கதை.

சுந்தர்

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தமிழரசி வணக்கத்துடன் எழுதுவது. வட்டச்சுழல் பாதையும் சவக்கோட்டையும் நாம் வாழும் வாழ்க்கையை ஒத்து இருக்கிறது. நாம் முன்னோர்கள் கட்டி வைத்த கோட்டைக்குள் இருக்கும் கல்பாவிய பாதைகளின் ஊடுவழியின் ஊடாகவே சுற்றி சுற்றி வருகிறோம். கல் பாவிய தரை திடமான காலடிகளைக் கொடுத்து பாதுகாப்புணர்வைத் தருகிறது.

பாதுகாப்பை உணரும் போதே அகம் பதறி நிலையின்மையை உணர்ந்து அலை மோதுகிறோம். சிறு சாளரம் வழியாக வரும் காற்றை உணரும் போது ஆசுவாசப்படுகிறோம். இந்த காற்றை உற்றார் உறவினர்னு வைத்துக் கொண்டால் வெக்கைக் காற்றா, தென்றலா, குளிர்காற்றா என்பது அவங்ககிட்ட நமக்கிருக்கும் மனப்புரிதலால் ஆனது.

அங்கேயேயிருக்க முடியாது அடுத்த இடம் தேடி நடக்கிறோம். வேர்த்து விறுவிறுத்து களைத்துப் போகும் போது தெளிந்த ஓடையாக ஒழுகும் தண்ணீரைக்கண்டு தாகம் தணித்து தெளிகிறோம். இந்த நீரோடை நீர் புத்தகங்கள்.

எப்பொழுதாவது வழி தவறி வெளியே வரும் போது புல்தரையில கால் வைக்கிறோம். விண்ணையும் மண்ணையும் அப்பதான் பார்க்க முடியுது. விண் நம்ம ஆசான். மண் திருவல்லிக்கேணி செந்தில்குமார்  மாதிரி நம்ம மனசு ஒத்த தோழமைகள்.

புல் தரையில நிக்க முடியுதா. கண்ணுக்கு எதிர்ல கோட்டைச்சுவர் தெரியுது வெளியே போகலாம். வெளியே என்னயிருக்குன்னு தெரியலை. என்னயிருக்குன்னு தெரியாததனாலயே மனசு பதைக்குது. பாதுகாப்பைத் தேடுது. நம்மை அறியாமலேயே முன்னோர் கட்டி வைத்த கோட்டைக்குள்ள இருக்கற வட்டச்சுழல் பாதையில போய் சுற்ற ஆரம்பித்து சுற்றுகிறோம்.

சாளரம் வழியே காற்று வரும். உற்றார் உறவினர் வருவார்கள். தாகம்வரும். நீரோடை நீர் போல புத்தகங்களினால் தாகம் தணிவோம். ஆசான் வருவார். தோழைமைகள் வருவார்கள். திரும்ப கோட்டைக்குள்ள ஓடி இருளில் புதைவோம். அப்படியே காணாமல் போவோம்.

வாழ்க்கையே சுற்றி சுற்றி வர்றமாதிரிதான் இருக்குது. கோட்டை அரணை உடைத்து வெளியே போகத்தான் மனசு ஏங்குது. ஆனால் ஏதோ ஒன்னு தடுக்குது. அந்த ஒன்னு என்ன.

நன்றி.

தமிழரசி.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.