Jeyamohan's Blog, page 918

September 12, 2021

இளம் முகங்கள், கடிதம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

அன்புள்ள ஜெ

ஸ்டாலின் ராஜாங்கம் பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். இந்தத் தளத்தின் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்களைப் பற்றி ஒரு பட்டியல் போடலாம் என்று தோன்றியது. நான் அவ்வப்போது ஒரு டைரியில் குறிப்புகளாக எடுத்து வைப்பதுண்டு.

இசை, இளங்கோ கிருஷ்ணன், சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ம.நவீன், அகரமுதல்வன், சதீஷ்குமார் சீனிவாசன், ஆனந்த்குமார், சுசித்ரா, பா.திருச்செந்தாழை, மதார், கிரிதரன் ராஜகோபாலன், சரவணக் கார்த்திகேயன், தெய்வீகன், மயிலன் சின்னப்பன்,சுஷீல்குமார், விஷால்ராஜா   என்று ஏராளமான இளம் படைப்பாளர்கள். ஸ்டாலின் ராஜாங்கம், அருட்பா ப.சரவணன் போன்ற ஆய்வாளர்கள், குக்கூ ஸ்டாலின், சிவகுருநாதன் போன்ற களச்சேவை செய்பவர்கள்  சட்டென்று நினைவுக்கு வரும் பெயர்கள்.

இவர்கள் பொதுவான அம்சம் கொண்டவர்கள் அல்ல. ஒரே தரப்பைச் சேர்ந்தவர்களும் அல்ல. விதவிதமான எழுத்துமுறை கொண்டவர்கள். இவர்களின் படைப்புகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். இவர்களில் உள்ள பொதுவான அம்சம் நேர்மையும் தீவிரமும்தான். நீங்கள் பரிந்துரைப்பவர்களில் தகுதியற்றவர்கள் என்று எவரையுமே நான் காணவில்லை. சிலர் இன்னும் கொஞ்சம் மேலே வரவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

இப்படி சீராகத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையினரை அறிமுகம் செய்துகொண்டிருப்பவர்கள் எவருமில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்காமல் பரவலான வாசிப்பு இருந்தால்தான் இது சாத்தியம். இந்தப்படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் விவாதங்களும் வேறெங்கும் இல்லை. இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில் இருந்து சாராம்சமான ஒரு தரப்பை திரட்டி முன்வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் பெரும்பணிகளில் இது முக்கியமானது என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் விழாக்களிலும் தொடர்ச்சியாக இளம்படைப்பாளிகளை அடையாளம் காட்டி அவர்களை வாசிக்க வைக்கிறீர்கள்.

ஆனால் மிகையான பாராட்டுக்கள் இல்லை. பெரும்பாலும் ஒரு வார்த்தை குறைவாகவே சொல்கிறீர்கள். ஆகவே உங்கள் கருத்துக்களுக்கான மதிப்பு மிக அதிகம். எனக்கு வயது அறுபது. தமிழில் வாசிப்பது நின்று பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணையம் வழியாக மீண்டும் ஆரம்பித்தேன். நானெல்லாம் பழைய கணையாழி, தீபம் கோஷ்டி. தமிழில் இத்தனை தரமான எழுத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவருவதும், ஓர் இலக்கிய அலை நிகழ்ந்துகொண்டிருப்பதும் மனநிறைவை அளிக்கிறது. சீராக அவற்றை அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜி.சங்கரநாராயணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2021 11:31

September 11, 2021

பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை

லண்டன் யார்க்‌ஷயரைச் சேர்ந்த பிரபு எஃப்.தோமஸ் தோர்ஸ்டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக தன் வாரிசும் மாணவருமான எஃப்.பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்கத் தன் அந்தரங்கத்தைக் குத்திச் சிதைத்து இம்சை செய்த ஒரு புதிரை அவிழ்க்கும் பொறுப்பை விட்டுவிட்டுச் சென்றமையால் பார்கின்சன் இந்தியா வரவும் ‘உருவப்பன்நிலையமைதிச்’ சித்தாந்தத்தை (Parkinsons Formal Multiplicity Theory) தோற்றுவித்து உலகப்புகழ் பெறவும் நேர்ந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேச்சிப்பாறை மலைப்பகுதியில் சர்வேயராக 1880 முதல் எட்டு வருட காலம் பணியாற்றிய தோர்ஸ்டன் பிரபு ரைபிள்களைத் திருடி விற்றமைக்காகப் பிடிபட்டு தண்டிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டு இறுதி வரை திரும்ப முடியதபடி வாழ்க்கையில் கட்டப்பட்டு உள்ளூர திரும்பி வரும் தினத்திற்காக ஏங்கியபடி மரணப்படுக்கையை அடைந்தார். ரைபிள்கள் உண்மையில் விற்கப்படவில்லை என்பதை பிரபு வெளிப்படுத்தி கீழ்க்கண்ட தகவல்களைக் கூறினார்.

ஆதி மலையுச்சியின் அணுக முடியாத போர்க்குணம் கொண்ட பழங்குடிகளின் பெண்களுடன் உறவு கொள்வதற்கான விலையாகவே அவை தரப்பட்டன. இந்த ரைபிள்கள் பிற்பாடு பழங்குடி கலகங்களில் பயன்படுத்தப்பட்டு பெருஞ்சேதத்தை விளைவித்தன என்றும், பிறகு ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் குறிப்பிட்ட பழங்குடி வம்சம் முழுமையாகச் சிதறடிக்கப்பட்டது என்றும், திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் முதற்தொகுப்பு குறிப்பிடுகிறது.

ஆதிமலைப் பழங்குடியினரின் பெண்களின் உடலழகும் அவர்கள் மிக வினோதமான முறையிலும், பரவசவெறியில் மனநிலையே பிறழும் அளவிற்கு தீவிரமானதாகவும் கொள்ளும் உடலுறவு முறையும், அன்றைய பிரிட்டிஷாரிடையே பரபரப்பாகவும் கிட்டத்தட்ட தேவதைக்கதைகளின் கலையழகுமிக்க பயங்கரத்துடனும் பேசப்பட்டு வந்தன. ராமன் நாயர் என்ற மேஸ்திரி மூலமாகப் பலகாலம் முயன்றும் பெருமளவு பணம் செலவு செய்தும் மிகமிக அபூர்வமானதும் ஆபத்தானதுமான இவ்வனுபவத்தைப் பெற்ற ஒரே வெள்ளையராக தோர்ஸ்டன் பிரபு ஆனார் என்பது எழுபத்திரண்டு வருடங்களுக்குப்பிறகு அவருடைய மரணப்படுக்கையில்தான் வெளியிடப்பட்டது.

ஆயினும் பிறகு எப்போதும் எப்பெண்ணையும் அணுக முடியாதபடி அவரை ஆக்கிய அவ்வனுபவத்தின் உக்கிரத்தை எப்போதுமே அவர் சொற்களாக மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். உறவுக்கான நிபந்தனைகளில் துப்பாக்கி தவிர, ஒருபோதும் உறவு கொள்ளும் பெண்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் முக்கியமானதாகும். அமாவாசை நள்ளிரவில் இடைவெளியற்ற இருட்டு வழியாக மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபு அங்கு ஒரு ஓடைக்கரையில் நிர்வாணமாகப் பழங்குடியினருக்கு கைமாறப்பட்டு அவர்களால் கிராமத்தின் ஒரு  குடிசைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த பெண்ணிடம் அளிக்கப்பட்டார்.

உடலால் மட்டும் பார்த்து பேசி அறிந்த அந்த உக்கிரமான இரவு முடியும் முன்பே கடும் சுரத்தால் பீடிக்கப்பட்டு அரைப்பித்து நிலையில் திரும்பி வந்து ஒருவாரம் நீடித்த நோய்ப்படுக்கையில் சரிந்தவர் ஸ்பரிசங்களால் மட்டும் இருப்புணர்த்தும் பெண்பிம்பங்களின் பித்துப்பிடித்த உலகில் மிதந்தலைந்தார். மீண்டும் ஆசைஎழ மீண்டும் மலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதிமூன்றாம் தடவை அகப்பட்டுக் கொண்டு தண்டிக்கப்பட்டு லண்டன் வந்து வேறு விதமாக வாழ்வை அமைத்துக் கொண்ட போது கூட அவரை ஒரு முள் குடைந்துகொண்டே இருந்தது.

அவ்வனுபவங்களைப் பிரித்து வரிசைப்படுத்தி புரிந்துகொள்ளும் முயற்சிகளினால் மனநோய்க்கு ஆளாகி எட்டுவருடம் சானடோரியத்தில் இருக்க நேர்ந்தது. காலம் நகர்ந்து அனுபவங்கள் பின்னடைந்து விலகிவிலகிச் செல்ல குவிந்து உருவான ஒரு புள்ளியில் இருந்து தெளிவு கிடைத்தது. அவ்வனுபவங்கள் அனைத்துமே ஒரு அனுபவத்தின் பதிமூன்று கூறுகளே என்றும் பின்பு அவை ஒரு தருணமே என்றும் ஒரு தருணம் என்பது எப்போதும் ஒரு கணமே என்றும் அவர் அறியலானார்.

பிரமாண்டமான ஆள்கூட்ட நெரிசல் வழியாக ஊடுருவிப் போகும் ஒரு பயணத்தில், ஒரு கணம் தீண்டித் தொடர முடியாதபடி உடல் அலைகளில் விலகி மறைந்துவிட்ட ஒரு தீற்றலே அது என்ற பிரக்ஞை, அந்தத் துளியிலிருந்து முழு அனுபவத்தையும் மீட்டு படைத்தெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையை நோக்கி அவரை இட்டுச் சென்றது. எஞ்சிய முப்பது வருடங்களும் அவருடைய தனிமை முழுக்க அவ்வனுபவத்தின் மறு அமைப்பிற்காக செலவழிக்கப்பட்டது.

முப்பது வருட தனிமையில் துளித் துளியாக தேக்கிய தீவிரம் ஒரு கணத்தில் ஒரு அறிதலைச் சாத்தியமாக்கியது. பதிமூன்று முறை அவர் புணர்ந்தது ஒரே ஒரு பெண்தான். கன்னங்கரிய திரையில் கரிய கோடுகளை நுட்பமாக பொறித்து அவர் அந்த முகத்தை பதித்தெடுத்த ஓவியத்தை உலகக் கலை வெற்றிகளில் ஒன்றாகவே கருத முடியும். எளிய பார்வையில் கரிய திரை தவிர வேறு எதுவும் தெரியாத அந்தப் பரபரப்பானது தீவிரமான உள்ளத்தை அதன் மீது செலுத்தும் தோறும் உயிர் பெற்று மெல்லத் திறந்து காட்டுகிறது. எஃப்.பார்கின்சன் அம்முகத்தின் கனவால் தாக்கப்பட்டதும் அவருடைய மன அமைப்பை அது தகர்த்ததும் அவர் இந்தியாவிற்கு வந்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாகும்.

தோர்ஸ்டைன் பிரபுவின் நிறைவேறாத இறுதி ஆசையான அம்முகத்தின் தொடர்கண்ணியை தேடிக் கண்டடைந்து விடுதலை இவ்வண்ணம் இன்னொரு காரணத்துக்காக அவர் மேற்கொண்டாரெனினும் எஃப்.பார்கின்சன் ஒரு தூய யதார்த்தவாதியாவார். அந்த உடலுறவின் அற்புத தன்மைக்கு மாயாஜால அம்சம் எதுவும் தர மறுத்து மானுடவியலில் தேடிய அவருடைய அறிவுவாத மனஅமைப்பு அப்பழங்குடியினர் குரங்கு மனிதப்பரிணாமத்தின் ஏதோ ஒரு தளத்தில் நின்றுவிட்டவர்கள் என்றும் குரங்குகளின் உடலுறவுப் பழக்கத்தின் ஏதோ ஒரு நிலையை தொடர்ந்து கடைப்பிடித்தவர்கள் என்றும் தான் தீர்மானிக்கச் செய்தது.

இந்த யுக்திவாத ஆய்வு அடுத்த தளத்திற்கு அவரை இட்டுச் சென்று பேச்சிப்பாறை சர்வே குறிப்புகள் அலுவலகப்பதிவுகள் கடிதங்கள் மற்றும் ராபின்சன் ஜெஃபீரி (‘நாயர் சமூகத்தின் வீழ்ச்சி’ என்ற புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய கனடா தேசத்து மானுடவியல் அறிஞர்) ரெவரண்ட் ஃபாதர் ஜோசப் கல்லன் (பழங்குடிகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகள் ஏழு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன) என்.சிவசங்கரன் நாயர் ஆகியோரின் ஆய்வுகளின் துணையோடு முன்னகர வைத்தன.

பேச்சிப்பாறையின் மறு மலைச்சரிவில் தடிக்காரன் கோணப்பகுதியில் இன்று கிறிஸ்தவ மதம் ரப்பர்த் தொழில் போன்றவற்றை ஏற்று முற்றிலும் நாகரீகமடைந்து சிதறி  விரிந்து வளர்ந்திருந்த ஆதிமலைப் பழங்குடிகளைக் கண்டுபிடித்த எஃப்.பார்கின்சன் அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வியப்பூட்டும் சில தகவல்களை அறிந்தார்.

அவர்கள் தங்கள் அன்னையரை கனவில் வந்து ஆட்கொண்ட பதிமூன்று (வெவ்வேறு) வெள்ளை அப்போஸ்தலர்களை வழிபட்டு வந்தனர். இவ்வாறாக எஃப்.பார்கின்சன் இந்தியாவில் ஒரே சமயம் தோர்ஸ்டனின் காதலியின் பதிமூன்று வடிவங்களையும் தோர்ஸ்டனின் பதிமூன்று வடிவங்களையும் கண்டடைந்தார். இந்தக்கணக்கின் குளறுபடியை சமன் செய்யும் பொருட்டு அவர் உருவாக்கிய சிக்கலான சூத்திரங்களும் வாய்ப்பாடுகளும் அடங்கிய சித்தாந்தமே பிற்பாடு ‘உருவப் பன்நிலையமைதிச் சித்தாந்தம்’ என்று புகழ் பெற்றது. எனினும் இன்று குளோட் லெவிஸ்ட்ராஸ் போன்றவர்களின் அமைப்புவாத மானுடவியல் ஆய்வுகளின் பேரலையில் இது மூழ்கடிக்கப்பட்டு மறைந்துவிட்டது.

மூன்று சரித்திரக்கதைகள்-2, சுபமங்களா 1993

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2021 11:35

பயிற்சிகள் உதவியானவையா?

அண்ணா வணக்கம்

நான் Teaching Character and Creating positive classroom என்ற ஆன்லைன் பாடத்தை coursera என்ற இணையதளம் மூலம்படித்து கொண்டிருக்கிறேன். இதை பற்றி என் நண்பனிடம் பேசி கொண்டிருக்கும்போது அவன் கேரக்டர் என்பது பிறப்பால் வருவது அதை ஆன்லைன் கிளாஸ் மூலம் மாற்றமுடியாது என்றான்.  நான் அதற்கு இந்த வகுப்பின் மூலம் குறைந்தபட்சம் என் வரம்பையாவது (limitations) தெரிந்து கொள்வேன் என்றேன்.  உனக்கு நாற்பது வயதை நெருங்கி கொண்டிருப்பதால் பெரிதாக ஒன்றையும் மாற்றிவிட முடியாது என்றான்.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் நான் முன்பு இருந்தது போல் stiff ஆக இல்லை மிகவும் flexible ஆக தான் இருக்கிறேன் என்றேன். அந்த பிளேக்சிபிலிட்டி அனுபவத்தால் வருவது அதையும் கேரக்டர் மாற்றத்தையும் குழப்பிக்கொள்ளவேண்டாம் என்கிறான் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ஜெ.

அன்புடன்

பன்னீர் செல்வம் ஈஸ்வரன் 

***

அன்புள்ள பன்னீர்செல்வம்

அப்படியெல்லாம் எதையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கொஞ்சநாளுக்கு முன்புவரை அப்படியெல்லாம் எதையும் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

என்னிடமே “ஆன்மிகமான எதையுமே இன்னொருத்தரிடமிருந்து கத்துக்க முடியாது சார். குருங்கிறதெல்லாம் சும்மா” என்று ஒருவர் சொன்னார். நான் எரிச்சலடைந்து “அதை கொஞ்சமாவது எதையாவது கற்று வைச்சிருக்கிற ஒருத்தர் சொல்லணும். நீங்க சொல்லக்கூடாது” என்றேன்.

கற்றுக்கொள்ளக் கூடிய எல்லா வழிகளும் பயனுள்ளவையே. அவற்றை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அது. வகுப்புகள், பயிற்சிகள், நேரடிச்செயல்பாடுகள் எல்லாமே அந்தந்த அளவுக்கு உதவிகரமானவை. இந்த ஆன்லைன் வகுப்பை விட உதவியான வேறு கல்விமுறை இருந்தால் இதை முடித்துவிட்டு அங்கு செல்லலாம்.

எந்த தொழிலிலும் அதன் அடிப்படைகள் எங்கேனும் கற்பிக்கப்படுகின்றன என்றால் ஓடிப்போய் கற்றுக்கொள்வது அவசியம். உண்மையில் நாம் அன்றாடம் செய்யும் செயல்களைக்கூட முறையாக கற்றுக்கொள்வது நல்லது. நான் தொலைபேசித்துறையில் வேலை செய்யும்போது தொலைபேசியில் பேசுவது எப்படி என்றே வகுப்பு எடுப்பார்கள். இன்றைக்குக் கூட செல்பேசியில் பேசுபவர்களுக்கு பேச்சு நடுவே ஓசையில்லாமல் சும்மா இருக்கக்கூடாது என்னும் அடிப்படைச் செய்தி தெரியாது.

மிகச்சாதாரண விஷயங்கள்கூட நம்மில் பலருக்கு தெரியாது. ஒரு பஃபெயில் சாப்பிடத் தெரியாது. வலதுகையால் சாப்பிட்டுவிட்டு அதே கையால் அகப்பையை எடுத்து  மேலும் பரிமாறிக் கொள்வார்கள். முற்றிலும் புதியவர் வீட்டுக்குச் சென்றால் என்ன பேசவேண்டும் என்று தெரியாது. ஒருவர் சொல்லிக் கொடுத்தால் பத்துநிமிடத்தில் திருத்திக் கொள்ளத்தக்க பிழைகள். ஆனால் நம்மை அறியாமல் நம் வாழ்க்கையையே அழித்துக் கொண்டிருக்கும் அவை.

இதெல்லாம் பட்டு அறிந்துகொள்ளலாம் தான். ஆனால் அதற்கு நெடுங்காலமாகும். நீண்ட அனுபவங்கள் தேவைப்படும். அந்த அனுபவங்களின் கசப்பான விளைவுகளும் இருக்கும். அத்தனை அனுபவங்கள் இந்த நவீன காலகட்டத்தில் எவருக்கும் அமையாது.

ஆகவே எதையும் முறையாக கற்றுக்கொள்ள நான் தயங்க மாட்டேன். வேட்டி கட்ட பயிற்சி அளிக்கும் ஒரு வகுப்பு இருந்தால் கூட அந்தவகையில் உதவியானதுதான் என்றே நினைப்பேன். மிகச் சிரமப்பட்டு, மிகச்சிக்கலான அனுபவங்கள் வழியாக கற்றுக்கொள்ளும் விஷயங்களை மிக எளிதாக சில மணி நேரங்களில் கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இவை இன்னொருவரின் அனுபவங்களின் வழியாக கற்றுக்கொள்ளப்பட்டவை. அவை நமக்கு அளிக்கப்படுகின்றன.

அறிவுஜீவிகள் சுயமுன்னேற்ற நூல்களை நையாண்டி செய்வதுண்டு. ஆனால் அந்நூல்கள் ஒருவன் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே வாழ்க்கையின் பல அடிப்படைப் பாடங்களை கற்றுக்கொள்ளச் செய்கின்றன. அந்நூல்களை கற்றவர்களுக்கும் கற்காதவர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

இத்தகைய பயிற்சிகள் ஆளுமையை மாற்றுமா? கண்டிப்பாக மாற்றும். நம்பவே முடியாத அளவுக்கு பெரும் மாறுதல்களை மிக எளிய பயிற்சிகள் அளித்துவிடும். எல்லா வயதிலும் அந்த மாற்றம் நிகழும். அறுபது வயதானவர்களுக்கு அறுபது வயதுக்குமேல் உடலை எப்படி கையாள்வது என்ற பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். தவறுதலாக எடைதூக்கி முதுகெலும்பு பாதிக்கப்பட்ட இருவரிடம் இன்று ஒரேநாளில் பேச நேர்ந்தது

ஆளுமை என்பது  நம் அடிப்படை இயல்புதான். ஆனால் அதன் வெளிப்பாட்டை நாம் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய இயல்புகளை நாமே அவதானித்தாலே அவை மாற ஆரம்பித்துவிடும். ஒரு நிபுணர் சொல்லித்தந்தால் மிக எளிதாக நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். எப்படி நிற்பது, கைகுலுக்குவது, முகமன் சொல்வது என்று ஒரு பயிற்சியை ஒருவர் பெற்றார் என்றால் அவர் மக்களை எதிர்கொள்ளும் முறையே மாறிவிடும். பிறர் அவருடன் பழகுவது மாறும்போது அதற்கேற்ப அவரும் மாறிக்கொண்டே இருப்பார். இந்த மாறுதல்கள் நிகழ்வதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

அக்கல்வி முழுமையானதா என்றால் இல்லை என்றே சொல்வேன். அக்கல்வி மட்டுமே போதுமா என்றாலும் இல்லை என்பதே என் பதில். எதிலும் கற்றுக்கொள்ளக் கூடிய தளமும் தானாகவே அறியவேண்டிய தளமும் உண்டு. ஆனால் அப்படி கற்றுக்கொள்ளக் கூடிய தளம் நாம் நினைப்பதை விட மிகமிக பெரியது.

ஜெ

பா.ராகவன் பயிற்சி அளிக்கும் இணையதளம்

அன்புள்ள ஜெ

பா.ராகவன் அவர்கள் தொடங்கியிருக்கும் எழுத்துப்பட்டறை ஓர் இணையதளம். Bukpet-WriteRoom. இதன் வழியாக ஒருவர் எழுத்தாளர் ஆக முடியுமா? எழுதுவதை இப்படி கற்றுக்கொடுக்க முடியுமா?

எம்.ஆர். செந்தில்வேல்

***

அன்புள்ள செந்தில்,

இலக்கியம், கலைகள் ஆகியவற்றில் கற்றுக்கொள்ளத் தக்க தளம் ஒன்று உண்டு. அதை முறையாக கற்றுக்கொள்வதே நல்லது. எந்தக் கல்வியும் அதற்குரிய கட்டுப்பாடான பயிற்சி வழியாகவே நிகழமுடியும். இன்று உலகம் முழுக்க உரைநடை எழுதுவதற்கும், புனைவு எழுதுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் அவ்வாறு ஒரு பயிற்சியைப் பெறாமல் எழுதுபவர்கள் மிகக்குறைவு

அப்பயிற்சி இல்லாமல் எழுத முடியுமா? முடியும். ஆனால் ஓர் எளிய பயிற்சி முறையால் சாதாரணமாக களையக்கூடிய பிழைகள் சிலசமயம் கடைசிவரை நீடிக்கும். மிகச்சாதாரணமாக தாண்டிவிடக்கூடிய ஒரு தடையை மலையை தோண்டி அப்பாலிட்டுவிட்டு தாண்ட வேண்டியிருக்கும். மிகமிக அற்பமான பிழைகளால் பெரிய பெரிய சாத்தியக்கூறுகள் மறைந்துவிடக்கூடும்.

நம்மைப் பற்றிய ஒன்றை நாமே அறிவதில்லை. அதை ஒருவர் சொன்னதுமே நாம் அறிந்து கொள்கிறோம். அக்கணமே அப்பிழை நம்மிலிருந்து அகன்றும் விடுகிறது. இதை நான் அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன். நான் என் ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து பல ஆண்டுக்காலம் பழகிப்பயிலும் வாய்ப்பைப் பெற்றவன்., அவ்வாய்ப்பு இந்த தலைமுறையில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த வகையான வகுப்புகள் அதை ஈடுசெய்கின்றன.

இன்றைக்கு எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க படைப்பை எழுதியவர்களைப் பற்றிக்கூட வாசகர்களிடையே பெரிய புகார்களும் ஒவ்வாமைகளும் உள்ளன. சொற்றொடர்ப் பிழைகள், அடிப்படையான வடிவப்பிழைகள் சார்ந்த போதாமைகள் அவை. ஏனென்றால் இன்று நம் கல்விமுறையில் மொழிக்கல்வி மிகப் பின்தங்கியதாக உள்ளது. அப்போதாமைகளை மிக எளிதாக பயிற்சியால் களைய முடியும். அதையே உலகமெங்கும் செய்கிறார்கள்.

இப்படிச் சொல்கிறேன். வயலின் வாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியும். லால்குடி ஜெயராமனாகவோ ஏ.கன்யாகுமரியாகவோ ஆவது உங்களுடைய சொந்தத் திறமையால், படைப்பூக்கத்தால், அர்ப்பணிப்பால் நிகழ்வது. லால்குடி ஜெயராமன் கூட முதலில் எளிய வயலின் மாணவனாகக் கற்றுக்கொண்டு அதன்பின்னரே தன் படைப்பூக்கம் சார்ந்து மேலதிகமாக வெளிப்பட ஆரம்பித்திருப்பார்.

இந்தவகையான பயிற்சிகளில் அளிக்கப்படுவது ஒரு சராசரி அறிதலைத்தான். ஒரு தரப்படுத்தப்பட்ட தளத்தையே நமக்கு அளிக்கிறார்கள். அந்த  ‘ஸ்டேண்டேர்ட்’ அளவுக்கு கீழே நாம் நின்றிருந்தால் அங்கே செல்வது வளர்ச்சி. அதன்பின் நம் படைப்புத்திறனால் நம் தனித்தன்மையால் அந்த தரச்சராசரியை நாம் கடந்துசெல்லலாம். நமக்குரிய இடத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2021 11:34

ஆபரணம், கடிதங்கள்-2

ஆபரணம், பா.திருச்செந்தாழை

அன்புள்ள ஜெ

திரூச்செந்தாழையின் எல்லா கதைகளையும் ஒன்றாகத் திரட்டி வாசித்தேன். அவர் எல்லா இணைய இதழ்களிலும் எழுதியிருந்தாலும்கூட இந்த இணையதளம் வழியாகவே எனக்கு அறிமுகமானார். நீங்கள் சுட்டியிருக்காவிட்டால் நான் வாசித்திருக்க மாட்டேன். நீங்கள் சுட்டிக்காட்டுவதுடன் எப்படி வாசிக்கவேண்டும், கதையின் இயல்பு என்ன என்பதையும் சுருக்கமாக சுட்டிக்காட்டுகிறீர்கள். அதேசமயம் கதையை விரிவாக விவாதித்து கதைவாசிக்கும் அனுபவத்தை இல்லாமலாக்குவதுமில்லை.

பா.திருச்செந்தாழை இமையம் போல இங்கே பேசப்படாத ஒரு உலகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்தவகையான எழுத்தின் அழகு என்பது இதிலுள்ள குரூடிட்டிதான். பண்படாத தன்மை. சிற்பங்களில் பெரும்பகுதி கல்லாகவும் ஒரு பகுதி சிற்பமாகவும் இருப்பதுபோல் இருக்கிறது. அந்தப்பகுதியை நோக்கி அந்த செதுக்கப்படாத பகுதி உருமாறிக்கொண்டே இருப்பதுபோல தோன்றுகிறது. அந்த சிற்பங்களின் பாணியில் உள்ளன துவந்தம், ஆபரணம் மாதிரியான கதைகள். முக்கியமான எழுத்தாளர். அவரை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுக்கள்

ஆர்.ஜெயசீலன்

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது

திருச்செந்தாழையின் ஆபரணம் கதை எங்கள் கூட்டுக்குடும்பம் எப்படி உடைந்ததோ அதை அப்படியே திரும்ப உயிரும்சதையுமா பார்த்த மாதிரி இருந்தது.

நிறைந்த பால்செம்பிலிருந்து இடுக்கிவைத்து வெளியே எடுக்கப்பட்டு, சிறிய துணியால் அழுந்தி துடைக்கப்பட்ட நெக்லஸை, தனது மரப்பெட்டியின் நிறைந்த நகைக்குவியலுக்கு மத்தியில் பத்தில் ஒன்றாகப் போடும் முன்பாகத் தலையை இரகசியமாகத் தழைத்து ஒருமுறை நுகர்ந்து பார்த்தாள் மரியம். தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது.

அவளையறியாமல் உதட்டில் மலர்ந்துவிட்ட ஒரு புன்னகையோடு திரும்புகையில் சித்திரையின் அழுது ஓய்ந்துவிட்ட – அதன் வழியாகச் சுடுகின்ற தீர்க்கம் வந்துவிட்ட – கண்களை நேருக்கு நேர் மோதினாள். ஒருகணம் உள்ளம் பதறிவிட்டது. அவள் பார்க்கப் பார்க்க தன் உதட்டில் அரும்பிவிட்ட சிரிப்பைச் சன்னஞ்சன்னமாக அணைத்தபடி வந்தவள், ஒரு புள்ளியில் சித்திரையின் கண்களுக்கெதிரான தனது மினுங்குகின்ற கண்களின் கூர்மைக்கு மாறிவிட்டாள். அந்தப் பார்வைக்கு முன் தன்னைத் தழைத்துக்கொண்ட சித்திரை சற்று முன் தோடுகள் கழற்றப்பட்ட தனது வெற்றுக் காது மடல்களை மென்மையாக நீவியபடி எங்கோ திரும்பிக்கொண்டாள்.

நடுவிலுள்ளவன் கையிலிருந்து உருவிய சேலைத்தலைப்பால் குழந்தையை முற்றிலும் போர்த்தினாள் சித்திரை. திடீரென தன்மீது கவிந்த இருளைக் கிழித்தபடி தனது முகத்தை முண்டி வெளியே வந்தது அதன்முகம். தன்னை மறந்து அந்தச் சிறிய கண்களின் சிரிப்பைப் பார்த்தபடி பால்வாசனை எழுகின்ற அதன் முகத்தை நுகர்ந்து முத்தமிட்டாள் சித்திரை. பிறகு, சட்டென எதையோ அடக்க முயன்றவளாக தன்னை நிதானித்துக்கொள்ளும் முன்பாக, ஜன்னல் கண்ணாடி பதறி விரைந்து மேலேறுவதைப் பார்த்தாள். பிறகு, நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

கதை இந்த இரண்டு சம்பவத்திலேயே தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. எங்கப்பா பத்து வயசுல வீட்ட விட்டு ஓடி வந்து அல்லல் பட்டு தனியா இருந்து மளிகை கடை ஆரம்பிச்சவங்க. கடை கைபிடிச்சவுடனே ஊர்லயிருந்து அண்ணனையும் தம்பியையும் கூட்டி வந்து சேர்ந்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆறு கடை. கடையில பத்து கடை பையன்கள். ஓரே வீட்டில் ஒரே சமையல் என்று சுற்றியிருக்கறவங்க சொந்தம் எல்லாம் பார்த்து பொருமற அளவுக்கு இருந்த பெரிய வீடு.

எங்கப்பாக்கு இருந்த தனி நிமிர்வு இப்பவும் என் கண்ணுக்குள்ள இருக்கு. அண்ணன் தம்பி ஒரு படி கீழன்னு இருந்த ஒரு அடுக்குமுறை அப்ப புரியலை. ஆபரணம் படிச்ச பிறகு புரியுது.எங்கப்பாக்கு நாங்க ஐந்து மக்கள். பெரியப்பாக்கும் சித்தப்பாவுக்கும் குழந்தையில்லை. நான் மூத்தவள். எனக்குப்பிறகு ஒன்பது வருடம் குழ்ந்தையில்லாமலிருந்து அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள்.

பெரிய வீடு. வீட்டில அரிசி பருப்பு சர்க்கரை மூட்டைகள். புளிச்சிப்பம் என்று மளிகை சாமான்கள் உத்திரம் வரை அடுக்கப்பட்டிருக்கும். தினம் மாட்டு வண்டில பொருட்கள் வந்திறங்கும். சைக்கிள்ல கடை பையன்கள் மூட்டைகளை கட்டி வைச்சி எடுத்துட்டு போய்கிட்டேயிருப்பாங்க. குண்டு கணக்கில் விறகு வரும். பானை பானையா சோறு வடிப்பாங்க.

என்னை நீ பொதுப்பிள்ளைன்னு சொல்லிச்சொல்லியே வளர்த்தார்கள். அம்மா மடியில உட்கார்ந்த ஞாபகமேயில்லை. இது ஏன்னு இப்ப புரியுது. இப்படியெல்லாம் முட்டுக்கொடுத்தும் கூட குடும்பம் உடைஞ்சுது. பால் தயிரா மாறுவதற்கு உறை ஊத்துனது எந்த விசயம்னு தெரியாமலே பால் தயிரா மாறி புளிச்சி நொதிச்சி நாற்றமடித்தது.

கடைசியில் சோறாக்கிப் போட்டுப்போட்டே என் உள்ளங்கை தேஞ்சிப்போச்சின்னு ஒருத்தரும் பூண்டும் வெங்காயமும் கை பார்த்தே என் கை ரேகை அழிஞ்சிதுன்னு ஒருத்தரும் சொல்ல எங்கம்மா ஒன்னும் சொல்லலை. இரண்டு பேரும் சேர்ந்து வருசம் தவறாம நீ வயித்த தள்ளிகிட்டு உட்கார்ந்திருந்த உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் சேர்த்து நாங்க பண்டுவம் பார்த்தோம்னு சொல்ற இடத்தில வந்து முடிஞ்சுது. வீடு கடை சொத்து எல்லாமே மூன்று பாகமா பிரித்து தனித்தனி சமையலுக்கு மாறினார்கள்.

கூட்டுக்குடும்பம் பிரிஞ்சி தனிக்குடும்பமா மாறுன ஒவ்வொரு வீட்லயும் சொல்ல ஒரு கதையிருக்கும். கசப்பான பகுதியாயிருந்தாலும் வாழ்க்கையில இதுவும் ஒரு பகுதிதான்.

கதையாசிரியர் இதை தொட்டெடுத்து உள்ளங்கையில வைச்சி நம்ம முகத்துக்கு எதிர்ல காண்பிக்கிறாங்க. ருச்செந்தாழைக்கு  அவருடைய பெயரைப் போலவே கதைகளின் தலைப்பும் அருமையாக அமைகிறது. மனதைத் தொட்ட எழுத்து.

நன்றி.

தமிழரசி சந்திரசேகரன்.

***

சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

ஒரு புதிய வீச்சு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2021 11:32

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் கவிதைகளை நீண்டநாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பன் மறைந்த நாகராசன் விக்ரமாதித்யனின் கவிதைகளை போனில் வாசித்துக் காட்டுவான். அவனுடைய கடிதங்களிலும் விக்ரமாதித்யனின் வரிகள் இருக்கும். அப்படித்தான் விக்ரமாதித்யன் எனக்கு அறிமுகமானார்.

அவருடைய கவிதைகளை இப்போது நான் என் டைரி முழுக்க குறித்து வைத்திருக்கிறேன். எப்போதாவது என்னுடைய பழைய கணக்கு வழக்குகளை துழாவும்போது விக்ரமாதித்யனின் வரிகளும் சேர்ந்து அகப்படுவதை ஓர் ஆனந்தமான விஷயமாக நினைக்கிறேன். சிலசமயம் குத்துமதிப்பாக புரட்டிப்பார்க்கும்போதும் ஏதாவது ஒரு நல்ல வரி அகப்படும். அது ஓர் அற்புதமான உணர்ச்சியை அளிக்கும்.

ஏராளமான வரிகளைச் சொல்லமுடியும் என்றாலும் அவருடைய கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக இன்றைக்கும் இருந்துகொண்டிருப்பது இதுதான்

தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ

கீற்றுக் கொட்டகைகளில்
வேர்க்கடலை விற்றவன் நீ

காயலான் கடையில்
காலம் கழித்தவன் நீ

வீடுவீடாகப் போய்
அழுக்கெடுத்தவன் நீ

வாளியேந்தி
எச்சில் இல்லை  எடுத்தவன் நீ

பத்து வயதில்
ஓடிவந்து
ஓடும் ரயிலில்
பெட்டிபெட்டியாய்த் தாவி
எத்தனை பேர்
உன் காதைத் திருகியிருக்கிறார்கள்.

எத்தனை பேர்
உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள்.

தென்னக ரயில்வேக்கு இன்னமும்
தீராத கடனிருக்கு.

மறக்கமுடியுமா மாநகராட்சிப் பள்ளியில்
மதிய உணவுக்குத் தட்டேந்தி நின்றதை.

மாயக்கவிதை பண்ண
மற்ற ஆளைப் பாரு.

நான்
தொந்தரவுபட்ட பிள்ளையாய் இருந்தவன்.
இன்னமும்
தொந்தரவுபடும் மனுஷன்தான்.

இந்தக் கவிதையை விட்டால் நான் தமிழிலேயே முக்கியமான கவிதை என்று நினைப்பது இராமச்சந்திர கவிராயர் எழுதிய பாடல்

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் அச்சோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே!

தாமரையிலையில் இருக்கும் பெருமாள் எங்கும் பல்லைக்காட்டத்தான் எனக்கு விதித்தான் என்று நொந்து பாடிய கவிஞனின் வழிவந்தவர் போல இருக்கிறார் விக்ரமாதித்யன். இந்த வரியை நான் சொல்லாத நாள் இல்லை. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான். அவ்வளவு போதும், கவிதை ஆகிவிடுகிறது.

ரா. மாணிக்கவாசகம்

***

அன்புள்ள ஜெமோ,

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விளக்கு விருது தவிர விருதுகள் ஏதும் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். இந்த விருது அவருக்கு முக்கியமானது.இந்த முதுமைக்காலத்தில் அவருக்கு நிறைய விருதுகள் வந்துசேரும் என்றால் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கும் எங்காவது கொஞ்சநாள் நிலைத்திருந்ததாகவும் இருக்கும்.

விக்ரமாதித்யனின் கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருபவன். இந்தக்கவிதைகளை விமர்சனம் செய்வதெல்லாம் என்னால் முடியாத விஷயம். நான் கவிதைகளை வாழ்க்கையில் வைத்து பார்ப்பவன். அவருடைய வரிகள் எனக்கு வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தோளை பிடித்து ஆறுதல் சொல்லியிருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துக்கள்

ராஜா குமரவேல்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2021 11:31

வெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு

திரு. ஜெயமோகன் அவர்களின் ‘வெண்முரசு’ நாவல்தொடர், எப்பொழுதும் தன் கதிர்களை உலகிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதவன் போன்றது. என்னைப் போன்ற முதல்நிலை வாசகர்களுக்குக் கண்களைக் கூசச் செய்யும் ஒளியாகப் போய்விடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்.

அந்த வேளையில், திரு. ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் பலரும் வெண்முரசின் ஒவ்வொரு நாவலையும் வாசித்து அவர்களது வாசிப்பவனுபவத்தை எழுதினர். பலர் சிறப்பாக எழுதினர். அந்த வகையில் முனைவர் ப. சரவணன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல் தொடரின் அனைத்து நாவல்களுக்கும் தனது வாசிப்பவனுபவத்தைக் கட்டுரையாக எழுதினார்.

என்னைப் போன்று முதல்நிலை வாசகர்களுக்கு இதுபோன்ற கட்டுரைகள் பெரிய அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். இந்தக் கட்டுரைகள் எந்தவகையிலும் திரு. ஜெயமோகனின் ஆழ்ந்த கருத்துகளைத் திரிக்கவும் சுருக்கவும் கூட்டவும் இல்லை. பல நூறு பக்கங்கள் உள்ள நாவலைச் சில பக்கங்களில் கருத்துச் சுருக்கமாகவும் சிந்தனைத் தெளிவாகவும்  வெளிப்படுத்தின. என்னைப் போன்ற திரு. ஜெயமோகன் மீது தீராப் பற்றுக் கொண்ட வாசகர்கள் கண்டிப்பாக அக்கட்டுரைகளைப் பாராட்டியே தீர்வர் என்பதில் ஐயமில்லை.

முனைவர் ப. சரவணன் அவர்கள் வெண்முரசின் ‘முதற்கனல்’ நாவலைப் பற்றிக் கூறும்போது, “அது நெருப்பால் ஆனது அல்ல. வெறுப்பால் ஆனது என்கிறார். திரெளபதியின் கண்ணீர் மட்டும் அல்ல அவரைப் பல ஆயிரம் பெண்களின் கண்ணீர்தான் ‘முதற்கனல்’ ஆகும். முதற்கனலைப் பற்றிக் கூறும் பொழுது, ‘மகாபாரதத்தின் முதற்கனல் எது?’ என்று கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக் கொண்டால், அது ‘மகாபாரதத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு பெண்ணின் ஆற்ற முடியாத துயரங்களின் திரள்’ என்பதையே விடையாக ஏற்க நேரும்” என்று அந்த நாவலின் மையப்புள்ளியை வரையறுத்துள்ளார்.

பெண்களின் துயரம் கண்ணீராக வெளிப்படும். ஆண்களின் துயரம் சொல்லாக வெளிப்படும் என்பதையும் முதற்கனலில் கூறியுள்ளார். அம்பை பீஷ்மர் மீது கொண்டுள்ள கோபத்தையும் அன்பையும் இந்நாவல் வழி அறியலாம். அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இந்த நாவலில் காணமுடிகிறது.

அவர் எழுதிய பின்வரும் தொடர் இப்பகுதிக்கு மணிமகுடமாக உள்ளது.  “புகழையும் பழியையும் சமஅளவில் பெறுவதுதான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ளதோ! என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குச் சான்றுகளாக நாம் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொருவர் பீஷ்மர்” என்கிறார்.

‘நீலம்’ நாவலைப் பற்றிய கட்டுரையில் நீலத்தோடு சங்க இலக்கிய அடிகளையும் இணைத்து நம் கண் முன்னே கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பு. இப்பகுதியில் ராதையைப் பற்றித்தான் முழுவதுமாக வருகிறது. சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சி இன்றி வெண்முரசினை வாசிக்க இயலாது. “அத்தகைய பயிற்சி அற்றவர்களுக்கு இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் தெரியும். தொடர்ந்த பயிற்சியாலும் முயற்சியாலும் இரண்டு செந்தமிழ்ச் சொற்கள் இணைவதால் உருப்பெறும் படிமத்தை உணரக் கற்றுக்கொண்டால், இந்த நாவல் கற்கண்டாக இனிக்கத் தொடங்கிவிடும்” என்கிறார் முனைவர் ப. சரவணன்.

நாவலைப் பற்றி மட்டும் கூறாமல், அதனோடு தொடர்புடையவற்றைத் தேடிக் கண்டறிந்து நமக்கு அளிப்பவராக இருக்கிறார் இவர்.

வெண்முரசில் துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியோரின் அவனமானங்களை நோக்குமிடத்து புலப்படுபவன, துரியோதனன் யானைக்கு நிகரான வலிமையுடன் திகழ்வதாலேயே தன்னுடைய வலிமைக்குச் சிறிதளவு இழுக்கு ஏற்படும்போதும் அவன் தன்னுள்ளேயே பொங்கிக் கொந்தளித்துச் சரிகிறான். துரோணர் அதீத திறனிருந்தும் தன்னுடைய குலமுறைப் பிறழ்வாலேயே எல்லா இடத்திலும் சரிக்கப்படுகிறார். அதன் பின்விளைவாக அவரின் ஆசைகள் விரிந்து வரிந்து பேராசைகளாக மாறிவிடுகின்றன. கர்ணன் தன்னுடைய தனித்திறமையை நிறுவ முயலும் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பு குறித்து பழிக்கப்பட்டே எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். புறக்கணிப்பின் வலியே அவனுக்கு மேலும் மேலும் வலிமையை வாரி வழங்குகிறது.

மூவரும் பல்வேறு காலங்களில் அவமானப்பட்டாலும் தங்களது ஆன்மாவைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் அவர்களிடம் காணப்படுகிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வையும். துரியோதனனுக்கும் பீமனுக்குமான இடையேயான பிரிவுக்கான காரணத்தினை இக்கட்டுரைத் தொகுப்பில் மிக அழகாகக் கூறியுள்ளார்.

‘இந்திர நீலம்’ பற்றிய கட்டுரையை வாசிக்கும் பொழுது அதிசயத்துப் போனேன். ‘இந்திரப்பிரஸ்தம்’ பற்றி இதில் அறிந்தேன். அது மட்டும் அல்லாது இளைய யாதவரைப் பற்றி திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியதைச் சுருக்கத்தினை மட்டும் விரும்பும் வாசகர்களுக்காக முனைவர் ப. சரவணன் பின்வரும் பத்தியை எழுதியுள்ளார்.

“இளைய யாதவரின் அகத்தையும் புறத்தையும் சுற்றிப் பெண்கள் இருப்பது போலவே துவாரகைக்குள்ளும் வெளியிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இளைய யாதவரும் துவாரகையும் பெண்களின் கனவுகளில் நீங்கா இடம்பெற்று விடுகின்றனர். இனி உருவாகும் ‘இந்திரப்பிரஸ்தம்’ அகத்திலும் புறத்திலும் துவாரகையைப் போலவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘துவாரகை’ ஓர் ஆணால் உருவாக்கப்பட்ட பெண்ணிய நகரம். ‘இந்திரப்பிரஸ்தம்’ ஒரு பெண்ணால் உருவாக்கப்படும் மற்றொரு பெண்ணிய நகரம்”.

‘மாமலர்’ என்ற நாவல் தொடர்பான கட்டுரையின் வாசிக்கும்போது, ‘மாமலர்’ என்றால் ‘மிகப் பெரிய மலர்’ என்று நினைத்தேன். ‘அவ்வாறு அல்ல; அதன் பொருளே வேறு’ என முதல் மிக அழகாகத் தன் கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார்.

“ ‘மாமலர்’ என்பது, ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலர். இது, கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். இது, பீமன் அதன் அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர்வடிவம். ‘மாமலர்’ என்ற சொல், சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் (குறுந்தொகை, பாடல் எண் – 51)

நெய்தல் நிலங்களில் வளரும் முட்கள் நிறைந்த கழிமுள்ளிச் செடியில் பூத்த கரிய நிறமுடைய முண்டக மலர். இங்கு ‘மா’ என்பது, ‘கருமை’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாவலில் பீமன் அடைவது, தடித்த, தூய வெண்ணிற இதழ்களைக்கொண்ட, காம்பில் பால் வடியும் மலர்.”

என்று விளக்கியுள்ளார் முனைவர் ப. சரவணன். அதுமட்டுமின்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் சிலவற்றுள் ‘மாமலர்’ என்ற சொல்லை வெவ்வேறு பொருண்மைகளில் பயன்படுத்தி யுள்ளதையும் இக்கட்டுரையில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன்.

‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையில் இந்த நாவல் ‘நீலம்’ நாவலைப் போலவே தனித்து விளங்குகிறது என்பதை முழுமையாக வாசித்ததால், ‘நீலம்’ நாவல் மொழியிலும் கதைப் பின்னலிலும் தனித்துவம் வாய்ந்தது என்கிறார். அதுபோலவே, இந்த ‘மாமலர்’ நாவலும் இரண்டு விதங்களில் தனித்துவம் வாய்ந்தது என்கிறார் முனைவர் ப. சரவணன்.

“ஒன்று – இந்த நாவல் முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக் கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது. இரண்டு – இந்த நாவலில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீள்கின்றன. தனிஊசலின் அலைவுபோலப் பின்னுக்கும் முன்னுக்கும் ஆடி ஆடி இறுதியில், நடுவில் நிலைகொள்கிறது.”

இது போன்று வெண்முரசின் ஒவ்வொரு நாவல் பற்றிய கட்டுரைத் தொகுப்பிலும் தன் வலிமையான எழுத்தின் வழியாக ‘வெண்முரசு’ நாவல் தொடரை நம் கண்முன்னே கொண்டு வருவதுடன், அதனுடன் தொடர்புடைய இலக்கிய அடிகளையும் சான்றாகக் கூறியுள்ளமை மனமார்ந்த பாராட்டு தலுக்குரியது.

வெண்முரசினைப் படிப்பதற்கும் கொடுப்பினை வேண்டும். அந்தக் கொடுப்பினைகள் (நேரமும் மனநிலையும்) முனைவர் ப. சரவணன் போன்றவர்களுக்குக் கிடைத்துள்ளது. அவர், ‘தான் பெற்ற பெரும்பேறு பிறருக்குக் கிடைக்கும் வேண்டும்’ என்பதற்காகவே இக்கட்டுரைகளை எழுதியுள்ளார் என நினைக்கின்றேன்.

உலகின் மிகப் பெரிய நாவல்களுள் ஒன்றான ‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கும் அவற்றைப் படித்து, ஒவ்வொரு நாவலுக்கும் தனித்தனியாக, விரிவாகக் கட்டுரையை எழுதிய முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் என்னைப் போன்றவ வாசகர்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

. பிரியா சபாபதி,

மதுரை.

‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2021 11:30

September 10, 2021

இன்றைய சிற்பவெற்றிகள் எவை?

அன்பின் ஜெ,

இந்த கேள்விகளை எனக்கு கேட்கலாமா என்று தெரியவில்லை. எப்படி கேட்பதும் என்பதும் கூட. இவற்றை நான் பல சந்தர்பங்களில் எண்ணியதுண்டு. எவரிடமாவது கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உங்களிடம் அதை கேட்டுவிடுகிறேனே. அவற்றை இங்கு ஒருவாறு அடுக்க முயற்சிக்கிறேன்.

நிகழ்காலத்தின் அல்லது சமகாலத்தின் கலைச் செல்வங்கள் அல்லது கலை வெற்றிகள் என்று அறியப்படுபவை எவை? கடந்த எழுபது ஆண்டுகளில் ஒரு இந்திய மனதின் தமிழ் மனதின் உண்மையான அகவயமான கலை சாதனை என்று இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அறியப்படுவது எதாவது எஞ்சுமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?  கலை வெற்றி என்பது இலக்கியத்திலும் ஏடுகளிலும் தான் மிஞ்சுமா?

இப்போது நாம் கான்கிரீட்களால் ஆன வீடுகளில் குடியிருக்கிறோம் எந்த ஒரு வளைவும் குழைவும் இல்லாத அறைகள். ஒரேமாதிரியானவை. ஒரு வித பெட்டித்தன்மையுடன் (inside of the box) இருக்கிறது.  இது நாம் வாழும் இடத்தின் நிலை. என் வீட்டின் தெரு எல்லையில் ஒரு ஆலயம் எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். வெறும் சிமெண்ட் சிலைகளாலும் காரைகளாலும் எழுப்பப்படும் கோபுரம், தூண்கள். அந்த சிலைகளுக்கு skeleton ஆக இரும்புக்கம்பிகள். அதன் மேல் மூக்கும் காதும் கைகளும் உருவாகி தெய்வமாகும். இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து மூக்கோ முகரையோ பெயர்ந்து நம் கையயும் காலையும் கீறும் கிழிக்கும் அளவிற்கு. அதுவும் சரி செய்து பூசி மொழுகி வண்ண வண்ண பெயிண்ட்களால் அலங்கரிக்கப்பட்டுவிடும். ஒரு வித ப்ளாஸ்டிக் தன்மையாக படுகிறது. இது வழிபடும் இடத்தின் நிலை.

மரபான ஆலயங்களில் கருங்கல் சிலைகளின் நிகர் ஆகாது தான். என் கேள்வி இந்த மன நிலையை எப்படிப் புரிந்து கொள்வது பற்றி தான்.  நாஸ்டால்ஜியாவுடனோ பழங்காலம் என்ற உடனேயே வருவதனால் எழும் எழுச்சி போன்றவைகளால் தான் நாம் அதனை பெரும் வெற்றிகளாக கருதுகிறோமா? அன்றைய நாட்களில் இருந்த அம்மக்கள் அத்தகைய செல்வங்களை எழுப்பும் போது எந்த ஒரு சலிப்பும் கொள்ளவேயில்லையா?

மேலும் இன்று அத்தகைய பழங்கோயில்களின் சுவர்களையும் சிற்பங்களையும் ஒரு சுற்று சுற்றி, மறைத்தும் மறைக்காததுமாக மின்சாரத்திற்காக அமைக்கப்படும் வயரிங் பைப்கள் ஒரு வித ஆசூயை ஏற்படுத்துகிறது.  நடைமுறையில் இக்கால சூழ் நிலைக்கு ஏற்ப மின்சாரம் தேவைதான். தவிர்க்கவியலாது தான். இருந்தாலும் அந்த எண்ணத்தை மறுக்க முடியவில்லை. இன்றும் கூட கோபுரத்தின் உச்சியை ஒளியூட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பியும் அதில் மாட்டியிருக்கும் குழல் விளக்கும் என்னை அணுகவிடாமல் செய்கின்றன.

இன்று இந்நிலையில் இந்த சிமெண்ட் காரை ஆலயங்களே இன்னும் ஐநூறு அறுநூறு வருடங்களுக்கு பின்னர் பெருங்கலைச் செல்வங்களாக அறியப்பட்டுவிடுமா? வெண்முரசில் எழும் futuristic vision (தீர்க்க தரிசனத்தின்) பார்வையாக, “சூதர்கள் இவற்றைப் பாடப்போகிறார்கள். சூதர்கள் இவற்றை பாடாமல் ஒதுக்கிவிடுவார்கள் என்று நீ அஞ்சுகிறாயா?” என்று எதிர்காலத்தின் விழிப்புணர்வுடன் இருக்கும் இடங்களை நான் இவற்றோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறேன். என் காலகட்டத்தின் குரல்களாக ஒலிக்கபோகும் கலை பொக்கிஷங்கள் எவை?

சர்வதேச அளவில் இன்றைய கட்டிடக் கலையின் செல்வங்களாக  பூர்ஜ் கலிஃபா’வோ மலேசியாவின் இரட்டைக் கோபுரமோ இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் கடந்த எழுபது ஆண்டுகளில் லட்சியவாதத்தில் இருந்து உலகமயமாக்கத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம். நாம் இருப்பது ஒருவகை transitional காலகட்டம் என்பதனால் இப்படியொரு செயலற்ற தன்மை மந்த நிலை இருக்கிறதா? நம் தமிழகத்தில் சென்னையின் கத்திப்பாராவின் க்ளோவர் லீஃப் வடிவிலான மேம்பாலமும் தெற்கே குமரிக்கடலில் எழுப்பட்ட வள்ளுவர் சிலையும் ஈஷா யோகாவினால் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிலையும் ISKCON முதலானவர்களின் செயற்கை வழிபாட்டுத்தலங்களும் தான் கட்டிடக்கலை சிறப்புகளாக எஞ்சுமா? இவையெல்லாம் குறியீட்டு அளவில் வெற்று பூச்சுகளோடு நின்றுவிடுமா?

உண்மையில் சமகாலத்தின் கலை வெற்றியாக ஆழ் அகத்தில் தமிழ் மனமோ இந்திய மனமோ உறையும் ஏதேனும் ஒன்று உள்ளதா? இல்லை வெறும் குறியீட்டுத் தளத்தில் தான் எஞ்ச வேண்டும் என்று இருக்கிறதா? அத்தகைய சாத்தியக்கூறுகள் தங்களுக்குத் தெரிந்து இருக்கிறதா? பின்வரும் காலங்களில் அவற்றை சரியாக இனங்கண்டு கொண்டு பேணிப் பாதுக்காக்கப்பட்டு வரலாற்றால் அவை இந்த காலகட்டத்தின் சாதனையாக எஞ்சலாம் என்று கருதுவதற்கு சிறிய இடமேனும் உண்டா? தெளிவுபெற விரும்புகிறேன். இது சம்பந்தமான விவாதங்களோ சுட்டிகளோ இத்தளத்தில் இருந்தால் பகிரவும்.

நன்றி,
லோகேஷ் ரகுராமன்.

அன்புள்ள லோகேஷ்,

ஒரு பொருள் எப்படி கலைப்படைப்பாகிறது? இரண்டு அடிப்படைகளில். ஒன்று அழகு. இரண்டு குறியீட்டுத்தன்மை.

அழகு என்பது அதன் வடிவத்தின் ஒத்திசைவு, அதன் வண்ணங்களின் இசைவு ஆகியவற்றிலிருந்து உருவாவது. அது பல்வேறு விஷயங்களை உணர்த்துவதாக ஆகும்போது ஒரு குறியீடாக மாறுகிறது. கலைப்பொருள் என்பது பார்ப்பவரிடம் விரிவது, மேலும் மேலும் பொருளேற்றம் கொள்வது. உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குவது.

கலைப்பொருள் அவ்வாறு ஓர் அர்த்தவெளியைச் சுட்டி நிற்பதனால் காலப்போக்கில் அது பொதுப்புழக்கத்தில் ஒரு படிமமாக நிலைகொள்கிறது. அதை வெவ்வேறு தருணங்கள் வெவ்வேறு வகையாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் மதிப்பு பெருகிக்கொண்டே செல்கிறது. நாளடைவில் அது ஒரு தொன்மமாக ஆகிவிடுகிறது.

“திருவாரூர் தேர் மாதிரி” என்ற சொல்லாட்சியே உதாரணம். அலங்காரம், அழகு என்பதற்கும் அது சொல்லப்படுகிறது. நிதானமாக வருவதற்கும் அது சொல்லப்படுகிறது. செல்லும்வழியில் அப்படியே நாட்கணக்கில் கிடப்பதற்கும் அது சொல்லப்படுகிறது.

கலைஞன் அக்குறியீட்டை தன் வெளிப்பாடுக்காக உருவாக்கலாம். அல்லது ஒரு பொருள் காலப்போக்கில் தன்னிச்சையாக அர்த்தமேற்றம் கொண்டு படிமமாக, குறியீடாக ஆகலாம். சில எளிய பொருட்கள் ஒரு நாகரீகத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தையே குறிப்பிடுவனவாக ஆகிவிடுகின்றன. மொகஞ்சதாரோவின் பசுபதி முத்திரைபோல. அந்நிலையில் அவையும் கலைப்பொருட்களாக ஆகிவிடுகின்றன. அவை உருவாக்கப்படும்போது கலைப்பொருளாக உத்தேசிக்கப்படாவிட்டாலும்.

உதாரணமாக, இரண்டாயிரமாண்டுகளுக்கு பிறகு, இன்றைய மானுட நாகரீகமே என்னவென்று தெரியாமல் மறைந்துவிட்டபின்பு, ஒரு பிளாஸ்டிக் பக்கெட் மட்டும் கிடைக்கிறதென்று கொள்வோம். அது நம் நாகரீகத்தையே ஒட்டுமொத்தமாகச் சுட்டும் ஒரு பொருளாக இருக்கும். அதற்கு குறியீட்டுத் தகுதி வரும். கலைப்பொருளாகவும் கருதப்படும்.

இன்று கட்டப்படும் கட்டிடங்கள் இருவகை. கலைநோக்குடன் கட்டப்படுபவை. பயன்பாட்டுக்காக கட்டப்படுபவை. அதேபோலத்தான் சிலைகளும். அவற்றில் எவையெல்லாம் அர்த்தமேற்பு கொண்டு, ஆழ்ந்த பொருள்விரிவை அளிக்கும் குறியீடுகளாக நீடிக்கின்றனவோ அவை கலையாக நிலைகொள்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டதுதான். ஆனால் அது ஒரு கலைப்படைப்பு. அது பிரிட்டிஷ் ஆட்சியின் இருநூறாண்டு காலத்தின், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அளித்த நீதியமைப்பின் குறியீடு. நாம் அதை பார்த்துப்பார்த்து, சினிமாவில் காட்டிக்காட்டி, எழுதி எழுதி அப்படி அதை ஆக்கிவிட்டோம். ஆனால் இன்று கலைநோக்குடன் கட்டப்படும் ஒரு கட்டிடம் எந்த உணர்வையும், சிந்தனையையும் எழுப்பாமல் ஓர் அலங்காரப்பொருளாக நீடித்து மெல்ல பொருளிழந்து மறையவும்கூடும்.

இது கட்டிடம், சிற்பம் ஆகியவற்றில் மட்டுமல்ல. இன்று பல்லாயிரம் கதைகள், கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றில் எவை கலை என நிலைகொள்ளும்? எவை அடுத்தடுத்த தலைமுறையில் நீடிக்கும்? இன்று நாம் அறுதியாகச் சொல்லிவிடமுடியாது. இன்று ஓர் அரசியல் சந்தர்ப்பத்தில் பயன்பாட்டுக்காக முன்வைக்கப்பட்ட ஓர் அறிக்கை காலப்போக்கில் பேரிலக்கியமாக கருதப்படவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, நேருவின் சுதந்திரநாள் பிரகடனம்.

ஒரு பொருள் கலைப்படைப்பாக நீடிப்பதற்கு ‘அழகு’ மட்டுமே காரணம் அல்ல. அழகியல் என்னும் சொல் அவ்வகையில் மிகவும் திசைதிருப்பக்கூடிய ஒன்று. அழகு என நாம் சொல்வது ஒத்திசைவை. கண்ணுக்கும் காதுக்கும் தெரியும் ஒத்திசைவு அது. வடிவம், வண்ணம், ஏற்ற இறக்கங்களில் அந்த ஒத்திசைவு இருந்தால் நாம் அழகு என்கிறோம்.

கலைக்கு அது இன்றியமையாதது அல்ல என நவீனக் கலைமரபு நம்புகிறது. ஒரு பொருள் தன்னிலிருந்து விரியும் பொருள்விரிவு கொண்டிருக்குமென்றால் அழகில்லையென்றாலும் அது கலைப்பொருளே. நவீனக் கலைப்படைப்புகள் பலவும் அழகற்றவை. ஒத்திசைவுக்கு பதிலாக மீறலையும் சிதைவையும் முன்வைப்பவை. நவீன ஓவியங்கள், சிற்பங்களை பாருங்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் கடைசியாக கட்டிடக்கலையில் நமக்குரிய ஒரு கலைவடிவம் உருவாகியது. ஆங்கிலோசாக்ஸன் பாணி கட்டிடக்கலையும் நமது கட்டிடக்கலையும் இணைந்து உருவானது அது. அதற்குப்பின் நம் கட்டிடக்கலை என்பதே நகலெடுப்பதுதான். நான் நல்ல புதிய கட்டிடங்களை இந்தியாவில் கண்டிருக்கிறேன், ஆனால் அவற்றைவிட மேலான அவற்றின் மூலவடிவங்களை மேலைநாடுகளிலும் சிங்கப்பூரிலும் கண்டிருப்பதனால் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

நமக்குரிய நவீனக் கட்டிடக்கலை உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கனவே நமக்கிருக்கும் மரபான கட்டிடக்கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. கல்லால் ஆன நம் ஆலயக் கட்டிடக்கலை இன்று செலவேறியது. அதை சிமெண்டில் செய்யும்போது அந்த அமைப்பின் இயல்பு சிதைகிறது. நமக்குரிய எட்டுகட்டு பாணி வீடுகள் இன்று கட்டப்படுவதில்லை. அவற்றை கான்கிரீட்டில் நகல்செய்யும்போது இயல்பான அழகு வெளிப்படுவதில்லை.

மதம்சார்ந்த புதிய குறியீடுகள் கட்டிடங்களாகவும் சிலைகளாகவும் வடிக்கப்படுகின்றன. பிர்லா மந்திர் போன்றவை ஆடம்பரமானவை. அவற்றை கலை என கருத முடியவில்லை. ஆனால் சில அரிய சமண ஆலயங்கள் இந்தியாவெங்கும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய சில கலைவெளிப்பாடுகள் இந்தியாவெங்கும் உள்ளன.

தமிழகத்தில் உள்ளவற்றில் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்திலுள்ள மைத்ரி மந்திர் என்னும் பொன்னுருளை வடிவக் கட்டிடமும் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆதியோகி சிலையும் மிகமுக்கியமான கலைப்படைப்புக்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இவற்றின்மேல் ஈடுபாடு கொண்டவர்கள், பார்த்து நிறைவடைபவர்கள் சிலரே.

எளிய அரசியல் மற்றும் மதக்காழ்ப்புகளால் அவற்றை இழிவுசெய்பவர்கள் உண்டு. புதிய கலைப்பாணிகளை உணராமல் கண்ணுக்குப் பழகியவற்றையே தேடுபவர்களும் உண்டு. உலகின் பலநாடுகளுக்குச் சென்று மாபெரும் கலைப்படைப்புகளை கண்டவன், கலையை அறிந்தவன் என்னும் வகையில் இவையிரண்டும் கலைவெற்றிகள் என்று ஆணித்தரமாகச் சொல்ல தயங்க மாட்டேன்.

இவை இரண்டுமே இந்தியக் கலைமரபை ஒட்டியவை அல்ல. மேலைக் கலைமரபைச் சார்ந்தவை. அதை ஓர் இந்தியக்கலை ஆர்வலன் என்றவகையில் குறையாகச் சொல்லலாம். மைத்ரி மந்திர் ஒரு நவீன கட்டிடம், நவீனக் கட்டுமானப் பொருட்களால் மட்டுமே இயல்வது. அதிலுள்ளது ஐரோப்பிய நவீனத்துவம் உருவாக்கிய புதிய கலைப்பாணி. ஆதியோகி இந்தியச் சிற்பக்கலையின் சாயல் இன்றி, ஐரோப்பியச்  செவ்வியல் சிற்பங்களின் பாணியிலேயே அமைந்திருக்கிறது. கொஞ்சம் கவனிப்பவர்கள் அதில் அமெரிக்காவின் சுதந்திரதேவிச் சிலையின் சாயலைக்கூடக் காணமுடியும்.

ஒரு சிற்பம், அல்லது கட்டிடம் நம்முள் மேலும் விரிய வேண்டுமென்றால் அதை உருவாக்கியவரின் உளநிலையை, கொள்கையை, கனவை நாம் கூர்ந்தறிய வேண்டும். பெரும்பாலும் கட்டிடங்கள் மற்றும் பெருஞ்சிற்பங்களில் அவற்றுக்கான தத்துவமும் கனவும் ஒரு தத்துவவாதியால் உருவாக்கப்பட்டு சிற்பியால் அது பொருள்வயமாக எழுப்பப்பட்டிருக்கும். அவ்வாறு அந்த மெய்யியல் பின்னணியை அறியாமல் வெறும் விழிகளால் நாம் கலைப்படைப்பை அறியமுடியாது.

நம் மரபான ஆலயங்களை பொறுத்தவரை நாம் அதிகம் கற்காதவர் என்றாலும் நமக்கு அவற்றின் தத்துவ உள்ளடக்கம் செவிச்செல்வமாக ஓரளவு தெரிந்திருக்கிறது. நம் ஆழுள்ளம் அவற்றின் குறிப்பொருளை மரபுவழியாக அறிந்திருக்கிறது. ஆகவே நமக்கு அவை பொருள் விரிவை அளிக்கின்றன. புதிய கட்டிடங்கள் அவ்வாறல்ல, நாமே சற்று முயன்று தெரிந்துகொள்ள வேண்டும். செய்யுளை கவிதை என நினைப்பவர் நவீனக் கவிதையை கவிதையாக எண்ணாமல் போவதுபோல. சற்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை மலர்களை ஞானத்தின் வெளிப்பாடுகளாகக் கண்டவர். மலர்களின் உட்பொருள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். மலர்யோகம் என அவருடைய முறைமையைச் சொல்லமுடியும். இந்த பூமியை ஒரு மாபெரும் மலராக கண்டவர். மலரிதழ்களின் தொகுதிபோல் அமைந்த மைத்ரி மந்திர் [ஒற்றுமைக் கட்டிடம்] அத்தரிசனத்தின் வெளிப்பாடு. அதை அறிய அறிய அக்கட்டிடத்தின் ஒளியும் அழகும் நம்மில் பெருகுகின்றன. அவர்கள் அந்த கட்டிடத்தின் தூண்கள் உட்பட ஒவ்வொன்றுக்கும் குறியீட்டுப் பொருள் அளிக்கிறார்கள்.

ஜக்கி வாசுதேவ் அமைத்திருப்பது சிவன் சிலை. ஆனால் சிவனை மானுடரில் எழுந்த முதல்யோகி என்று அல்லது யோகமுதல்வன் என்று அவர் உருவகிக்கிறார். ஆகவே ஒரு ‘உலகளாவிய’ தன்மைகொண்ட முகமாக சிவனை வடித்திருக்கிறார். இந்தியத்தன்மை கொண்ட முகம் அல்ல அது. அணிகளில், அடையாளங்களில் இந்திய அழகியல் இருக்கிறது. முகம் ரோமன்முகம் போலிருக்கிறது. இந்தியச் சிற்பவியலின் முத்திரை இலக்கணப்படி அந்த முகம் அமையவில்லை, மேலைநாட்டு நேர்நோக்கு அழகியல்படி அமைந்துள்ளது. அதாவது ஒரு சர்வதேச சிவன். அந்த நோக்கின் வெளிப்பாடென கருதுகையில் அச்சிலையின் அழகு பெருகுகிறது.

இன்றிருக்கும் கலைவெளிப்பாடுகளில் எவை மக்களிடம் சென்று பெருகி மேலும் மேலும் பொருட்செறிவு கொண்டு கலைப்படைப்பாக தலைமுறைகளைக் கடந்து செல்லும் என இன்று சொல்லிவிடமுடியாது. இன்றிருக்கும் சர்வசாதாரணமான ஒரு பொருள் காலப்பெருக்கில் அர்த்தமேற்றப்பட்டு கலைப்படைப்பாக நிலைகொள்ளவும்கூடும். நாம் அதை கணக்கிட முடியாது. நாம் செய்யக்கூடுவது இன்று கலையென வருவனவற்றை உணர்வது மட்டுமே. அவற்றில் இவையிரண்டும் முதன்மையானவை.

ஜெ

நமது கட்டிடங்கள் உருமாறும் சிவம் கட்டிடங்கள்-கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2021 11:35

ராவுத்தர் மாமாவின் கணக்கு

சில நாட்களுக்கு முன்பு ஆட்டுக்கறி சாப்பிட்டு அருண்மொழிக்கு முதல்முறையாக அலர்ஜி வந்தது. முகத்தில் தடிப்புகள் வந்து மூட்டுகளில் வலியும் மூச்சுத்திணறலும். டாக்டர் மாரிராஜ் சொன்ன மருந்துகளால் ஒரே நாளில் சரியாகியது. ஆனால் இனிமேல் வாழ்க்கையில் மட்டனுக்கு இடமில்லை. “அய்யோ, எங்க ராவுத்தர் மாமா அருமையா கறிகொண்டுவந்து சாப்பிடக் கத்துக்குடுத்தாரே” என கண்ணீருடன் ஏங்கினாள். இரண்டுநாள் ராவுத்தர் மாமா பேச்சாக இருந்தது.

இந்தக்கட்டுரையில் பேசப்படும் அந்த ராவுத்தர் மாமா அருண்மொழியின் பேச்சில் முப்பதாண்டுகளாக மாதமொருமுறையாவது தோன்றிக்கொண்டே இருக்கும் மனிதர். வாழ்க்கையின் பெரும்பாலான சந்தர்ப்பங்களைப் பற்றி குட்டி அருண்மொழிக்கு ராவுத்தர் மாமா ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறார். மனிதர்களின் குணாதிசயங்கள் மிக ஆழமாக நெஞ்சில் பதியும் அவ்வயதில் உயர்குணங்கள் மட்டுமே கொண்ட அந்த ஆளுமை அத்தனை அண்மையில் இருந்திருக்கிறது.

ஒற்றை வரியில் அந்த மொத்த மெய்ஞானத்தையும் ‘ஒவ்வொருத்தரும் அவங்க பாட்டுக்கு இருப்பாங்க. நாம நம்ம பாட்டுக்கு இருக்கணும்’ என்று சுருக்கிவிடலாமென நினைக்கிறேன். இன்றுவரை மற்றவர்களின் குறைகளை அருண்மொழி உணர்வதே இல்லை. அவளுடைய குன்றா உற்சாகமும் இயல்பான அன்பும் அதன் விளைவுதான்.

அருண்மொழியின் அப்பாவின் பேச்சிலும் ராவுத்தர் அடிக்கடி வந்துகொண்டிருப்பார். அவருடைய இல்லத்திற்கு சென்றதைப் பற்றிய பேச்சுக்கள் செவியில் விழுந்திருக்கின்றன. நான் ராவுத்தரைச் சந்தித்ததில்லை. சந்தித்திருக்கலாமென இப்போது தோன்றுகிறது.

ராவுத்தர் மாமாவின் கணக்கு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2021 11:34

இலங்கை முகாம்கள், கடிதம்

தேசமற்றவர்கள் தேசமற்றவர்கள் – கடிதம் ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள் ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். உங்கள் உணர்வுகள், பதிவுகள், தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவிப்புகள் நிறைவளித்தது. முதல்வருக்கு அன்பு நன்றிகள்.

முதல்வர் அறிவிப்புக் குறித்து மறுவாழ்வு முகாம் உறவுகளிடம் அவர்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளக் கேட்டேன். யுகவதனி ‘இருட்டுக்குள்ள இருந்தோம். வெளிச்சம் வந்த மாதிரி இருக்குப்பா’நண்பர் சிங்கப்பூர் குணசேகரனும் அவ்விதம் உணர்ந்ததாகவேச் சொன்னார்.

அரசின் அறிவிப்புகளுள் ஒன்றான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்கும் மறுவாழ்வு முகாம் மாணாக்கர்கள் முதல் ஐம்பது பேருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டண செலவினங்களை அரசே ஏற்கும் எனும் அறிவிப்பு கேட்டவுடன் சகோதரர் எஸ்.கே.பி. கருணாவை மானசீகமாக அணைத்துக் கொண்டேன்.

2015 ஆண்டு மே 5 ஆம் தேதி சேகர் மறைவுக்குப் பின் சில நாட்களில் நடந்த ஊட்டி முகாமில் அரங்கா, கருணாவின் எண் கொடுத்து பேச சொன்னார். முகாம் இறுதி நாளன்று பேருந்தில் திரும்பும் போது காளிப்ரசாத் அறிமுகம் கிடைத்தது. சென்னை திரும்பி கருணாவை தொடர்புக் கொண்டேன். அவ்வாரம் சென்னை வருவதாகவும் நேரில் சந்திக்கலாம் எனவும் சொன்னார்.

மாலை நேரம் அவரை சந்தித்தவுடன் ‘சொல்லுங்க’ என்று அனைத்தையும் கேட்டு… உடனே ‘அவங்க கூட இருக்கறது நம்ம கடமைங்க. நான் சீட் தர்றேன்… அழைச்சுட்டு வாங்க உங்க நம்பரை சேவ் பண்ணித்தான் வச்சிருக்கேன்…’ அவ்வளவுதான். அடுத்த முறை ‘வெண்முரசு’ விழாவின் போது சென்னை கன்னிமரா அரங்கில் சந்தித்தேன்… ‘வாங்கபசங்கள அழைச்சுட்டு வாங்க…’ தொடர்ந்து மூன்று ஆண்டுகள்ஒரு முறை கூட மறுதலித்ததில்லை…

ஒவ்வொரு முறை மாணாக்கர்கள், பெற்றோர்களுடன் அவரது கேபினில் சந்திக்கும் போதும் அவர்களுடன் அன்போடு உணர்வுபூர்வமாக அவர் பேசிக் கொள்வதை உடனமர்ந்து கவனித்திருக்கிறேன். அவர்கள் கல்வியில் வளம் பெற வேண்டும் எனும் அவரது விருப்பத்தை குழந்தைகளிடம் போல பகிர்ந்துக் கொள்வார். அவர்களும் அவரது உணர்வுகள் புரிந்து தேர்ச்சிப் பெற்று, இன்று பணியில் இருக்கின்றனர். கிளம்பத் தயாராகும் போது ‘கண்டிப்பா சாப்ட்டுத் தான் போகணும்’ என கல்லூரி உணவு விடுதிக்கு அனுப்பி வைப்பார் அகதியர் குறித்த துயரமும், அன்பும், அரவணைப்பும். அத்தனை மாணாக்கர், பெற்றோர் அனைவரது அன்பையும்  நன்றியையும் சகோதரர் கருணாவிற்கு சமர்பிக்கின்றேன்.

அரசின் கவனத்திற்குள் அவர்கள் வந்தது மகிழ்ச்சியே என்பதற்கப்பால் பவானி சாகர் முகாம் தலைவர் நடராஜன் ஐயா பகிர்ந்துக் கொண்ட அவர்களது அடிப்படையான உணர்வுகளை உங்களிடம் தொகுத்துப் பகிர்ந்துக் கொள்கிறேன். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் வந்த அகதிகள் சார்ந்த குறைந்தபட்ச என் உணர்வுகளை அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக பகுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

1983 இறுதி தொடங்கி மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம் வரையிலான முதற்காலம். அவரது மரணம் துவங்கி 2009 மே மூன்றாம் வாரம் வரையிலான இரண்டாம் காலம். 2009 மே மாதத்திற்குப் பின் சமகாலம் வரை. வருந்தி வந்த உறவுகளை அன்போடு அரவணைத்த முதற்காலம், தொடர்ந்து ஏறக்குறைய 18 ஆண்டுகள் கடும் கட்டுப்பாடு, நெருக்கடிகள். அனைத்தையும் எதிர்கொண்டு ‘தற்போதைய தமிழக அரசு செய்யவில்லையெனில். இனி ஒரு போதும் ஒன்றும் நடக்கப் போவதில்லை’ எனும் ஒளிக்கீற்று உருவானது.

தமிழக முகாம்கள் அனைத்தும் மறுவாழ்வுத் துறை நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. காவல் உளவுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாதம் ஒருமுறை வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரி வழி அவர்களுக்கான மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. அச்சமயம் முகாம் சார்ந்த ஒவ்வொருவரும் நேரில் வர வேண்டும். வெளியிடங்களுக்கு கல்வி மற்றும் பணி சார்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் நேரில் வந்தாக வேண்டும். கோழிவிளை, களியக்காவிளை முகாமினர் சென்னையில் கல்வி மற்றும் பணியில் இருந்தாலும் உரிய நாளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருவதென்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பகிர்ந்துக் கொண்டார். இந்நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசு மாற்று ஏற்பாடு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.

இரு சக்கர மூன்று சக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டாலும் அவர்கள் பெயரில் பதிவு செய்ய இயலாது. ‘ஊர்காரங்க’ பெயரில் தான் பதிவு பெற்றாக வேண்டும். அவ்வாறு பதிவு செய்து முழுப் பணமும் கட்டிய பின்பு வாகனத்தை இழந்தவர்கள் இருக்கின்றார்கள். இன்றைய சூழலில் வாகனங்கள் அத்தியாவசிய பட்டியலில் உள்ளது. முகாம்கள் ஊருக்கு வெளியே அமைந்துள்ளதால் வாகனத் தேவையும் உள்ளது. எனது வழக்குரைஞர் நண்பர்கள் இருவரிடம் இது குறித்துக் கேட்டேன். வாகன பதிவிற்கு குடியுரிமை அவசியம் ஆனால் தற்காலிகமாக எனும் அடிப்படையில் மாநில அரசு இது குறித்து முடிவெடுக்க இயலும் என்றனர்.

முகாம்களில் கழிவறை வசதிகள் பெரும்பாலும் இல்லை. அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இப்பணியை முன்னெடுக்க முடியும் என்கின்றனர். அரசு அனுமதித்தால் வாய்ப்புள்ளவர்கள் அவர்களாகவே கட்டிக் கொள்ள முன்வருவர் என்றார். முன்பு முகாமினர்க்கும் ‘ஊர்காரங்’களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் காவல்துறை இருவர்க்கும் பொதுவாக நடந்துக் கொள்ளும் நிலை தற்போது சற்று மாறியுள்ளது என்றார். ‘முகாமினர் பெருங்குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. எளிய தவறுகளுக்கு கிடைக்கும் பாரபட்சமான நீதி அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்கிறது’ என்கிறார். முன்பு பிரச்சனை குறித்து முகாம் தலைவரிடம் கூறி அவருடன் காவல்துறை அல்லது மறுவாழ்வுத் துறை செல்லும் வழமை மாறியுள்ளதை குறிப்பிட்டார். இளைய தலைமுறையினர் ‘ நாமளே பார்த்துக்கலாம்’ எனும் மனநிலையில் கும்பலாக எதிர்கொள்வது அச்சமூட்டுவதாக பகிர்ந்துக் கொண்டார்.

முத்துராமன் முத்துராமன்

உங்கள் பதிவு வெளியான ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பின்பு பவானி சாகர் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வந்ததை பகிர்ந்துக் கொண்டார். உரிய அமைச்சர் அல்லது முதல்வர் ஒருமுறை வந்தால் தங்கள் சூழல்களையும் நெருக்கடிகளையும் உணர்ந்து தீர்க்க இயலும் இந்த அரசின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். நேற்று முந்தினம் தமிழ் இந்து தினசரி பேட்டி எடுத்ததாகவும் வரும் ஞாயிறன்று கட்டுரை வெளியாகும் எனத் தெரிவித்ததாகவும் சொன்னார். ‘ஊர்காரங்க’ – நம் சமுகம் – அரூபமாக கவனங்கொள்ளும் இடைவெளி குறைந்தால், மறைந்தால் அவர்கள் நிம்மதியாக மூச்சிழுத்து 1983 -1991 முதற்கால கட்ட அரவணைப்பு கூடிய ‘மறுவாழ்வு’ வாழ இயலும் என்றே நம்புகிறேன்.

அவர்கள் அன்பையும் நன்றியையும் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.

எக்கணத்துளியிலும்
அன்புடனும் நன்றியுடனும்

முத்துராமன்

***

அகதி வாழ்வு

அகதிகள் ஒரு கடிதம்

இலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2021 11:33

வெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்,

உலகெங்கிலும் உள்ள வெண்முரசு வாசகர்கள், கூடி உரையாட இணையவழி மெய்நிகர் கூடுகைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.

தொடர் உரையாடல்களின் அடுத்த பகுதியாக, வரும் வாரம் நண்பர் ரம்யா “முதற்கனலில் பீஷ்மர்” என்ற தலைப்பில் பேசுவார். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும்.

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு, சூம் வழியே நிகழ்வு நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாள் 12. செப்டம்பர் 2021

நேரம் :- இந்திய நேரம் மாலை 06:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137 (லாஓசி)

நன்றி!!!

அன்புடன்,

விஷ்ணுபுரம் நண்பர்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2021 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.