Jeyamohan's Blog, page 911

September 24, 2021

பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை

தன்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவும் மறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றியும் அவர் தலைமையில் நடந்த மாபெரும் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளையும் மறைக்க தொடர்ந்து விவாதித்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தும்போது இந்த நிலை ஏற்படத்தான் செய்யும். நானும் பலருடன் இது பற்றி விவாதித்திருக்கிறேன். புனா ஒப்பந்தம் எங்களுக்கு பெருந்தீங்கு விளைவித்து விட்டது என்று கூறும் பலருக்கு புனா ஒப்பந்தத்தைப் பற்றி சரியான புரிதலே இல்லை. புரிதலை விடுங்கள், அது சம்பந்தமான தகவல்களே தெரியவில்லை. அது மிகவும் வருத்தமாக இருந்தது. உண்மையில் நடந்ததைத் தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்கலாம். தெரிந்து கொள்ளாமலே விலக்கித் தள்ளுவதால் யாருக்கு நன்மை?

பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2021 11:31

September 23, 2021

அசோகமித்திரனும் ஆன்மீகமும்

அன்புள்ள ஜெ

இது ஒரு முகநூல் குறிப்பு

கோவைக்கு அசோகமித்திரன் வந்திருந்தார். மெல்லிய பகடி இழையோடும் அவரின் சிற்றுரை முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. ஒருவர் கேட்டார். “உங்களுக்கு இந்த உள்ளொளி தரிசனம், ஆன்ம தேடல் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லியா?”

“அப்படின்னு இல்ல. நானொரு மத்தியதரக் குடும்பஸ்தன். ஒரு நல்ல டூத் பேஸ்ட்டை அறுபது வருடமா தேடறேன். அதுவே கிடைக்க மாட்டீங்குது. இதுல எங்க ஆன்ம தேடலுக்கு எல்லாம் போறது”

அசோகமித்திரன் ஆன்மிகமான தேடல்கள் இல்லாதவரா? உங்கள் கருத்து என்ன?

செல்வக்குமார்

அன்புள்ள செல்வா,

அந்தக் கேள்விக்கு அசோகமித்திரன் அவ்வாறு நையாண்டியாகப் பதில் சொல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். பொதுவாக ஆன்மிகமான தேடல் கொண்டவர்களின் பொது இயல்பு அதை சம்பந்தமில்லாதவர்களிடம் பேசாமலிருப்பது. பெரும்பாலும் மென்மையான கேலி வழியாக அதைக் கடந்துசெல்வது.

அசோகமித்திரன் பொதுவாக ஆன்மிகத்தேடல், மதம் பற்றி எதுவும் சொல்லமாட்டார். அதன் மேல் ஐயத்துடன் கேட்பவர்களுக்கு முன் தன்னை முழுமையாக மூடிக்கொள்வார். தத்துவார்த்தமான ஓங்கிய பேச்சுகளைப் பேசுபவர்களிடம் அந்தப்பேச்சு பயனற்றது என்று பொதுவாகச் சொல்வார். அகத்தேடல் பற்றி அகத்தேடல் இல்லாதவர்களிடம் பேசலாகாது என்னும் எச்சரிக்கை ஒருபக்கம். அத்தகைய எந்தப் பேச்சையும் உடனே பிராமணசாதிப் பேச்சாக திரிக்கும் மொண்ணைகள் பற்றி எப்போதும் அவருக்கிருந்த அச்சம் இன்னொரு பக்கம்.

ஆனால் பதிவாகிவந்த பல்வேறு பேட்டிகளிலும் முன்னுரைகளிலும் அசோகமித்திரன் அவரிடம் என்றுமே இருந்த அகத்தேடல், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர் வெவ்வேறு மரபுகளை சார்ந்து செய்துகொண்ட ஆன்மிக- யோகப் பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார். அப்படி பயிற்சிகள் எடுத்துக்கொண்ட, அதைப்பற்றி சொன்ன தமிழ் எழுத்தாளர்கள் வேறு எவருமில்லை. அவருக்கு அமானுடமானவை என்று சொல்லத்தக்க சில அனுபவங்களும் உள்ளன என்று சொல்லியிருக்கிறார்.

அந்த அகத்தேடல் சார்ந்த அனுபவங்களுடன் இணைந்த ஆளுமைகள் சிலரையும் அசோகமித்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் முக்கியமானவர் மணிக்கொடி எழுத்தாளரான கி.ரா.கோபாலன். அவர் பின்னாளில் துறவியாகி மறைந்துபோனார். மானசரோவரின் கதைநாயகனுக்கு கி.ராவின் சாயல் உண்டு என்று சொல்லப்படுவதுண்டு. முன்னரும் சில கதைகளில் அவர் வேறு பெயரில் வந்திருக்கிறார்.

அசோகமித்திரன் தன் பேட்டிகளில் அளித்த மெல்லிய குறிப்புகள், மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு அப்பால்  [எனக்கு பல ஆலோசனைகள் அளித்திருக்கிறார், தெளிவுகள் தந்திருக்கிறார்] அவருடைய கதைகளையே நாம் அவருடைய ஆன்மிகத்தேடலுக்கான சான்றுகளாகக் கொள்ளவேண்டும். மற்றபடி அவருடைய அந்தரங்க ஆழம் அது. நாம் அறியமுடியாது.

அசோகமித்திரனின் கதைகளில் மிகத்தொடக்க காலம் முதல் அகத்தேடல், அல்லது ஆன்மிகத்தேடல் மிக வலுவான ஒரு கருவாக இருந்துள்ளது. சொல்லப்போனால் தமிழில் மிக அழுத்தமாகவும் நுட்பமாகவும் ஆன்மிகத்தேடலை கலையாக்கிய மிகச்சிலரில் புதுமைப்பித்தனுக்குப் பின் அவரே முதன்மையானவர். ஜெயகாந்தன், க.நா.சு, ஆகியோர் அடுத்தபடியாக.

[அகவயத்தேடல் அல்லது ஆன்மிகத்தேடல் அற்ற எழுத்துக்கள் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோருடையவை. பின்னாளில் வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோருடையவை. அவை முழுக்கமுழுக்க உலகியல் சார்ந்தவை.]

இன்னும் சிலநாட்கள், பிரயாணம் முதலிய ஆரம்பகாலக் கதைகளில் ஆன்மிகத்தேடலின், அகப்பயிற்சிகளின் பல நுண்ணிய தளங்களை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ஆன்மிகப் பயிற்சிகளைச் செய்பவர்களுக்குத் தெரியும், எங்கே அவை தவறுகின்றன என்பது ஒவ்வொரு ஆன்மசாதகனையும் குழப்பியடிக்கும் மிகமிக நுட்பமான வினா என்பது. அதை அவர் ஒருவர்தான் தமிழில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரனின் ஆன்மிகத்தேடல் வெளிப்படும் அடுத்தகட்டக் கதைகள் ‘விடுதலை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ போன்றவை. அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் செல்வாக்கில் இருந்த நாட்கள் அவை. இக்காலக் கதைகளில் அறிவார்ந்த, தத்துவம் சார்ந்த ஆன்மிக அணுகுமுறை உள்ளது.

மூன்றாம் கட்டக்கதை என்றால் ‘கோயில்’ போன்றவை. இக்காலகட்டத்தில் அவர் மீண்டும் மாயங்கள் எனத்தக்க அனுபவநிலைகளுக்குள் செல்கிறார். முதல் கட்ட ஆன்மிகக் கதைகளில் அந்த மாயம் எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அதாவது எய்துதல் கைதவறிச்செல்வதைச் சொல்வதாக உள்ளது. மூன்றாம் காலகட்டக் கதைகளில் அந்த மாயம் அடிப்படையான ஒன்றைக் கண்டடைவதைச் சித்தரிப்பதாக உள்ளது, எய்துவதாக உள்ளது என்பது நான் கண்ட வேறுபாடு. அது அசோகமித்திரன் அடைந்த பரிணாமம்.

மூன்றாம் காலகட்டக் கதைகளின் உச்சம் மானசரோவர். தமிழில் ஆன்மிகத்தேடல் பற்றி எழுதப்பட்ட முக்கியமான மூன்று நாவல்கள் என்றால் அசோகமித்திரனின்  ’மானசரோவர்’, ஜெயகாந்தனின் ’விழுதுகள்’ க.நா.சுவின் ‘அவதூதர்’ ஆகியவற்றையே சொல்லமுடியும். [எம்.வி.வெங்கட்ராமின் ’காதுகள்’ நல்ல முயற்சி, கலையென ஆகவில்லை என்பது என் மதிப்பீடு] அவற்றில் முதன்மையானது மானசரோவர்தான். அதை வாசிக்க உலகியலுக்கு அப்பால் செல்லும் உளநிலை, தனிப்பட்ட மெய்த்தேடல் தேவை. ஆகவே இங்கே அதிகம் பேசப்படாத ஆக்கம் அது.

அசோகமித்திரனிடம் மெல்லிய நகைச்சுவை எப்போதும் உண்டு. ஆனால் எப்போதும் கேலியாகப் பேசுபவர் அல்ல. அவர் பேச நேரும் சூழல் எதிர்மறையானது அல்லது நுண்ணுணர்வற்றது என்று உணர்கையில் அவர் மேற்கொள்ளும் தடுப்புநடவடிக்கைதான் தன்னைத்தானே கேலிசெய்துகொள்வது. எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் நையாண்டி வழியாக தன்னை கேட்பவருக்குக் கீழே வைப்பதுபோல பாவனைசெய் ’பொத்தினாப்போல’ கடந்துசெல்வது.

உண்மையிலேயே ’டூத்பேஸ்ட் தேடலை’த்தான் வாழ்நாள் முழுக்க அவர் எழுதினார் என அவர் சொன்னதைக் கொண்டு அங்கிருந்தவர்கள் முடிவுகட்டினார்கள் என்றால் அவர் அந்த சபையைப் பற்றி கொண்ட கணிப்பு மிகச்சரியானது என்றுதான் பொருள்.

தமிழிலேயே மிக அதிகமாக, மிக உச்சமாக ஆன்மிகத் தேடலை எழுதியவர் அவர். அதைப்பற்றிப் பேசியவர். அவரிடம் ஒரு கூட்டத்தில் ஒர் ஆசாமி எழுந்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் என்னதான் செய்வார்? அவருடைய அந்த நட்பார்ந்த ஆனால் கசந்த கேலியை, அந்த சமயத்தில் அவர் முகத்தில் அவர் தருவித்துக்கொள்ளும் ஒரு பயந்த அப்பாவியின் பாவனையை, என்னால் மிக அருகே என காணமுடிகிறது.  அப்போது அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருப்பார் என்றும் படுகிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:37

இன்னும் ஒரு கேள்வி

இரு  கேள்விகள்

இன்னொரு கேள்வி. இது கேள்வி அல்ல, பதில்தான். கேள்வி வடிவில் அனுப்பப்பட்டது. வழக்கம்போல வாசகி. இப்போது என்னை வாசிக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். இளம்பெண்கள் வாசிக்க விரும்பும் எதையும் நான் எழுதவில்லை என்பது என் எண்ணம். ஆனாலும் வாசிக்க வருகிறார்கள். பலர் நீலம் வழியாக வாசிக்க வந்திருக்கிறார்கள் என்பது ஒரு வியப்பு. நற்றுணை போன்ற கதைகள் வழியாக வாசிக்க வந்தவர்களும் பலர் உள்ளனர்.

அன்புள்ள ஜெ

உங்களைப் பற்றிய விமர்சனம் என்றபெயரில் கடுமையாக வசைபாடி எழுதப்பட்ட ஒரு நூலைப் பற்றிய செய்தியை என் நண்பன் எனக்கு அனுப்பினான். நான் உங்களை வாசிப்பதில் அவனுக்கு கோபம். நான் வாசிப்பது மட்டுமல்ல ஆராதிக்கவும் செய்கிறேன். அதில் தயக்கமே இல்லை. எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீலம் என்னை அப்படிப் புலம்ப வைத்துவிட்டது.

என்ன சொல்ல வருகிறேன் என்றால் முகநூலில் சமீபத்தில் பிடித்த பத்து தமிழ் ஆளுமைகள் என்று ஒரு கேள்விக்கு பலர் பதில் எழுதியிருந்தனர். அவர்களில் ஏராளமான இளைஞர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தது. எழுத்தாளர்களின் பட்டியல் அல்ல, பிடித்த ஆளுமைகள் அல்லது பிடித்த விஷயங்களின் பட்டியலில் எல்லாம் உங்கள் பெயர் இருந்தது. வேறு தமிழ் எழுத்தாளர்களின் பெயர் மிகக்குறைவாகவே இருந்தது. மழை பிடிக்கும், காந்தி பிடிக்கும் என்பவர்கள் அந்தவரிசையில் உங்கள் பெயரைச் சொல்லியிருந்தனர்.

நான் அதைப்பற்றி ஆச்சரியப்பட்டேன். இணையத்தை திறந்தாலே உங்களைப் பற்றிய அவதூறுகளும் வசைகளும்தான் உள்ளன. நான் உங்களைப்பற்றி தெரிந்துகொண்டதெல்லாம் தப்பான விஷயங்கள்தான். எவ்வளவு தப்பான திரிபுகள் என்று வாசிக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஆனால் உங்கள் முக்கியத்துவத்தை அது எந்தவகையிலும் குறைக்கவில்லை. உங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும், உங்களை தலைமேல் வைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

அப்படியென்றால் இவர்கள் எதை எண்ணி இந்த வசைகளை உருவாக்குகிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன?

திவ்யா ராஜ்

அன்புள்ள திவ்யா,

நான் இதைத் தலைகீழாகப் பார்க்கிறேன். அதை முன்னரும் சொல்லியிருக்கிறேன். என் சொற்களுக்கு இருக்கும் முக்கியத்துவமே அவற்றின்மேல் அத்தனை மூர்க்கமான தாக்குதல்களை நிகழ்த்தவைக்கிறது. எவ்வண்ணமேனும் அதை உடைத்தாகவேண்டும் என்னும் கட்டாயத்தை உருவாக்குகிறது. ஆகவேதான் திரிபுகள், அவதூறுகள் வந்துகொண்டிருக்கின்றன.

அத்தனை கூட்டான உழைப்பு அந்த எதிர்ப்பு வேலைக்கு அளிக்கப்படுகிறதென்பதே என் சொற்கள் எத்தனை முக்கியமானவை என்பதை காட்டவில்லையா? தமிழில் இதற்குமுன் வேறெந்த எழுத்தாளனின் சொற்களையாவது இத்தனை ஒருங்கிணைந்து ஆவேசமாக எதிர்த்திருக்கிறார்களா? அந்த நூல் எனக்கிருக்கும் முக்கியத்துவத்திற்கான மாபெரும் சான்று.

ஏன் அந்த எதிர்ப்பு? அரசியலியக்கங்களை பொறுத்தவரை அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்புக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும் அவர்கள் எதிர்த்து உடைத்தாக வேண்டும். கீழ்த்தர அரசியல் அதை அவதூறுகள், திரிபுகள் வழியாகவே செய்யும்.

அரசியலியக்கங்கள் சார்ந்த மனநிலைகொண்ட எழுத்தாளர்களும் அவ்வகைச் செயல்பாட்டுக்கு பழகிவிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட பொறாமையும் காழ்ப்பும் கொண்ட  ‘சோட்டா’ எழுத்தாளர்களும், சில்லறை வம்பர்களும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். அரசியலாளர்களுக்கு தங்கள் தரப்பை முன்வைக்க இந்த மறுப்பை நிகழ்த்தியாகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. சோட்டா எழுத்தாளர்களும் வம்பர்களும் இதன்வழியாகவே ஏதேனும் இடத்தை இலக்கியத்தில் அடையமுடியும் என்னும் தேவை உள்ளது.

அவை சீரிய வாசகர்களை, என் எழுத்துக்களை வாசிப்பவர்களை நோக்கிப் பேசப்படுவன அல்ல. வாசிப்பவர்களுக்கு உடனே அந்த வசையும் அவதூறும் எத்தனை அபத்தமானவை என்று தெரிந்துவிடும் என அவற்றை எழுதுபவர்களுக்கே தெரியும். அவை ஏற்கனவே அவர்களின் தரப்பில் இருப்பவர்களை, ஓர் அணியாகத் திரண்டவர்களை நோக்கித்தான் பேசுகின்றன. அல்லது புதிய வாசகர்களை நோக்கி.

புதியவாசகர்கள் இரு வகை. யாராவது ஏதாவது ஆவேசமாகவோ தர்க்கபூர்வமாகவோ சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்று பேசிக்கொண்டிருப்பவர்கள் முதல்வகை. அவர்களில் பாதிப்பேர் ஏற்கனவே ஓர் அரசியல்சார்பு கொண்டிருப்பார்கள். அச்சார்பு பெரும்பாலும் அவர்களின் சாதி, மதம் சார்ந்ததாகவே இருக்கும்.

இந்தத் தரப்பினர் அச்சார்பை ஒட்டி மட்டுமே வாசிப்பார்கள். எந்நிலையிலும் அதைப்பேணிக்கொள்ளவே முயல்வார்கள். புனைகதைகளை வாசிக்கும் கற்பனை இவர்களுக்கு இருப்பதில்லை. புனைவை வெறும் செய்தித்தொகுப்பாகவும் கருத்துநிலைபாடாகவும் மட்டுமே இவர்களால் அணுகமுடியும்.

இன்னொரு சாரார் எதையும் தாங்களே வாசிக்க, சுயமாக மதிப்பிட முயல்பவர்கள். பொதுவாக புனைகதைகளை கற்பனையுடன் வாசிப்பவர்கள், அதை வாழ்வனுபவமாக ஆக்கிக்கொள்வார்கள் இவர்கள். வாழ்க்கை என்பது வெறும் அரசியல் அல்ல, அது வாழ்க்கையின் நுண்பொருள்தளங்களால் ஆனது என அறிந்திருப்பார்கள். அதைத்தேடி வாசிப்பார்கள். அதிலிருந்து மேலே சிந்திப்பார்கள்.

எனக்கு தேவை இரண்டாவது வகை வாசகர்கள். அவர்கள் மட்டும் என்னை வாசித்தால்போதும். மற்றவர்களை ஆரம்பத்திலேயே இந்த அவதூறு, திரிபு, வசையாளர்கள் சல்லடையாக நின்று நிறுத்திவிடுவார்கள் என்றால் அது நல்லதுதான். எஞ்சியோரிடம் நான் ஆழமாக உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதையே நீங்கள் காண்கிறீர்கள்.

ஜெ

அமேஸான் ஜெயமோகன் நூல்கள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:33

குமரியின் பயணம் – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!  நீங்கள் மேலும் மேலும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று எழுதிக்கொண்டே இருக்கவும். நாங்களும் அதை வாசித்தவண்ணமே இருக்கிறோம்.

இரண்டு வாசிப்பு ஜாம்பவான்கள் (அரங்கசாமி, ஹூஸ்டன் சிவா) சொன்னபிறகு, ‘குமரித்துறைவி’ குறுநாவலை, நானும் ஒரே மூச்சில் வாசிப்பது என்று வாசித்துவிட்டேன். அலுவலகம் இருக்கும் நாட்களில் கூட, இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு மேல் ஆரம்பித்து, 12 முதல் 15 வெண்முரசு அத்தியாயங்களை வாசித்துவிடுவேன். அந்த தைரியத்தில், மகன் ஜெய், ப்ளாக் பீன்ஸ், சீஸ், குவாக்காமொலி வைத்து மடித்துக்கொடுத்த கெஸடியாவை இரவுணவாக சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்கு, குமரித்துறைவி வாசிக்க ஆரம்பித்தேன்.

பதினொன்றரை மணிக்கு முடித்துவிட்டேன். முதல் பத்தியில் கொஞ்சம் மயங்கி நின்றேன். கதை சொல்லியின் நீண்ட பெயரை, தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் என இரண்டு முறை வாய்விட்டு சொல்லிப் பார்த்தேன். பதினெட்டு படைநிலைகளில் முதல்நின்றனர், பட்டனர், வென்றனர் என்ற வரியில் ‘பட்டனர்’ வார்த்தையை ரசித்தேன். சரி, இந்த வேகத்தில் போனால், நாளைக்கு, ஹூஸ்டன் சிவா போன் செய்து, ‘என்ன ஒரே மூச்சில் வாசித்தீர்களா என்று கேட்டால், தலையைச் சொறிய வேண்டும் என்று பரபரவென்று வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

எங்கள் வீட்டுக் கல்யாணங்களில், எனது நிலைமை, தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமனின் நிலைமைதான். நான்தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். கடந்த இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களாக எந்தக் கல்யாணத்தையும் விருந்தினராக கலந்துகொண்டு ரசித்ததில்லை. ஆதலால், வீரமார்த்தாண்டன் செய்து வைத்த குமரித்துறைவியின் கல்யாணத்தை ஆற அமர உட்கார்ந்து கண்குளிர பார்த்தேன்.  எனது பெரிய சகோதரிகளின் கல்யாணத்தின்பொழுது நான் ஐந்தாம் வகுப்பில் இருந்தேன். இந்தக் கல்யாணத்தில் இருந்த பிள்ளையாருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. அப்பொழுது நான் தொந்தியுள்ள குண்டுப்பையனாக மகிழ்வு நிறைந்தவனாக இருந்தேன். இப்பொழுது அந்த மஹாராஜாவைப் போல ஒரு தந்தையாக.

மங்கலநாண் இட்டபின் அவர் தன் மகளைத் தொடமுடியாது. ஆகவே அது அவர் கடைசியாக அவளைத் தொடுவது  – இந்த இடத்தில் என் மனம் இன்னொரு முறை நகர மறுத்தது. மகள் சிந்துவை கைபிடித்து கொடுத்த நாள் வந்து போனது. எங்கள் மாப்பிள்ளை கார்த்திக்  நல்லவர்தான். கொஞ்சம் அவர் மீது கோபம் வந்தது. திரும்பவும் மனதை ஒரு நிலைப் படுத்தி, குறும்புக்கார மீனாட்சியின் கல்யாணத்தில் பார்வையாளனாக மட்டும் இருந்து, மணமகன் வீடு, மணமகள் வீடு என்று வேறுபாடு பார்க்காமல், சுந்தரேஸ்வரர் கைகாட்ட,  ‘முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி’ என உரக்கப் பாடினேன். மகாராஜா ஆணையிட, “ராஜமாதங்கி சியாமளே! மகாசாகர ஹரிதவர்ணே!’ என்று மணமகளுக்குப் பாடிய பாணர்களுடன் இணைந்துகொண்டேன். ஊட்டுப்புரை நிரை ஒன்றில் நின்று காத்திருந்து எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கி சாப்பிட்டேன். நன்றாக சாப்பிட்டாலும் உறங்காமல் பார்த்துக்கொண்டேன். அப்பொழுதுதானே, மீனாட்சி, சுந்தரேஸ்வரருடன் கிளம்பிச் செல்லும்பொழுது வழி அனுப்பிவைக்கமுடியும்.

ஒரு சரித்திர நிகழ்வை, பின்னணியை எடுத்துக்கொண்டு, எல்லோரும் கண்ணீர் மல்கப் பார்க்கும் ஒரு அழகிய கல்யாணத்தை , எந்தச் செலவும் இல்லாமல், தங்கள் சீரிய எழுத்தால் மட்டும் அமோகமாக நடத்தியுள்ளீர்கள். கல்யாணம் ஆன பெண்கள், தங்கள் கல்யாண ஆல்பத்தையும், காணொளியையும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். ஆண்கள், அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால், இந்தக் ‘குமரித்துறைவி’-யின் கல்யாணத்தை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்ததாக மூன்று ஆண்கள் இதுவரை சொல்லிவிட்டார்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு உங்கள் மகள் சொல்லி நீங்கள் எழுதியது. உங்கள் அன்னையின் சொல்.

எழுத்தாளனாக எழுத்து வழிந்து வெளியே போவதும் ஒரு வைரவளையல் மட்டும் மீதியிருப்பதும், மீண்டும் அதிலிருந்து எல்லாம் முளைப்பதும் அருள் தான். ஒருவிதத்தில் விஷ்ணுபுரம் நீலியிலிருந்தும் இதையே எழுதுகிறீர்கள் எனத் தோன்றுகிறது. கற்பனை செய்யச் செய்ய அந்தப் ‘பிழை’ என்ற அம்சம் விரிந்து விரிந்து பிரபஞ்ச தரிசனமாகிறது.

(உண்மையில் வெண்முரசு வெளியான இறுதிநாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை சற்று பெரிய சங்கிலியில் தொடுத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் இக்கதை உதவுகிறது)

எது எப்படியோ, உங்கள் கோட்டைக்கு கதவும் இல்லை, காவலும் இல்லை. எங்கள் நற்பேறு அது.

தந்தையாக அணுகியும், செயல்பாட்டாளனாக சற்று அகன்று நின்றும் இக்கதையை படிக்கலாம். வெவ்வேறு வாசிப்புக்கோணங்களை தானே உருவாக்கித்தருகிறது.

குமரிக்கன்னி பிறந்தவீட்டிலிருந்து மதுரைக்கு மணமாகி சென்றாள் என்பது பண்பாட்டு வரலாற்றில் மெகா கதையாடல். அதன் தத்துவ அர்த்தங்கள். அங்கிருந்து திரும்பி கண்ணகிக்கும் அவள் மலைநாட்டிற்கு வந்ததும் சொல்லமுடியலாம் என பலப்பல கற்பனைச் சாத்தியங்கள்

அன்புடன்

மதுசூதனன் சம்பத்

***

 

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:31

திருவண்ணாமலையில் பாராட்டுவிழா

இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார். செப்டெம்பர் 26 அன்று காலை 10 மணி முதல் மதியம் வரை. இமையத்திற்கும் மொழியாக்க விருது பெற்ற ஜெயஸ்ரீக்கும் பாராட்டுவிழா. நான் கலந்துகொள்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:31

ஜே.ஜே.சிலகுறிப்புகளைப் பற்றி சில குறிப்புகள்

ஜே.ஜே.சில குறிப்புகள் வாங்க

அன்புள்ள ஆசானுக்கு

சுராவின் முக்கியப் படைப்பினை நவீனத்துவத்தின் முடிவிற்கும் பின் நவீனத்துவத்தின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட ஆக்கம் என்றும், இன்னும் நாம் நூலைப்பற்றி பேசவே துவங்கவில்லை என்றும் தளத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

வாசிப்பின் படிகஅடுக்குகளை  அக ஒளி இன்னும் அலசி அளந்துவிட முடியவில்லை. ஆனாலும் தட்டையான வாசிப்பாயினும் ஒரு துவக்கம் இருந்தாக வேண்டும் என்பதாலும், வாசித்து திருத்த தாங்கள் இருப்பதாலும் வாசிப்பை எழுதுகிறேன்.

ஒரு புனைவின் வாசிப்பில் இருமுறைகள் இருப்பதாகத்  தோன்றுகிறது. ஒன்று  அதன் தத்துவத்தை (நவீனத்துவம்/ பின் நவீனத்துவம் என) கண்டடைந்து பரிதியை விட்டு வெளியேறி உள்ள பிசிறுகளையும் உட்குறைகளையும் வெளிப்படுத்தும் அறிவுச் செயல்பாடு. இது பிற ஆக்கங்களுடன் விடாமல் ஒப்பு நோக்கி அலசவும் செய்யும்.

மற்றது துண்டாக ஒரு புனைவினை உள்ளடக்கம் மட்டுமே கொண்டு, உத்தி, வடிவம், ஒளித்து வைத்து விளையாடல், உணர்ச்சி, படிம விளையாட்டு, உண்மைத்தேடல் என வாசிப்பது

முதல் வகைக்கு பரந்து பட்ட கோட்பாட்டு வாசிப்பும் இரண்டாம் வகைக்கு தேடும் உள்ளுணர்வும் தேவை. இவை இயல்பாக இல்லாவிடில் வளர்த்துக் கொள்ளக் கூடியவை. கூட்டு வாசிப்பு வாய்ப்பில்லாததால் உங்களுடன் வாசிப்பைப் பகிர்கிறோம். குற்றம் கடியற்க.

சுகுமாரனின் பின்னுரைப்படி, ஜே ஜே சில குறிப்புகள் இரு புதுமைகளைக் கொண்டுள்ளது. 1 உணர்ச்சிகரம் என்னும் கதை சொல்லும் நடைமுறையை மறுத்து அறிவார்ந்த விவாதத்திற்கான களமாக திறந்து வைத்தது,  2  கதை வடிவத்தை மீறியது.

ஆல்பெர் காம்யு இறந்த மறுநாள் ஜே ஜே இறக்கிறான் என்று கதை துவங்குகிறது. நவீனத்துவம் முடிகிறது , புதிய (பின் நவீனத்துவ ) காலம் துவங்குகிறது என்று இதைக் கொள்ளலாமா?

ஜே ஜே யின் ஆளுமை அறிவுக்கூர்மையுள்ள தர்க்கம் என்னும் கத்தியை கைகளிலும் நாவிலும் கட்டிக் கொண்டு உண்மையை முழுமையை சமரசம் இன்றித் தேடும் இளைஞனாக உள்ளது. அவனைப்புரிந்து கொண்டவர்கள் மூவர்- அவனது பேராசிரியர் மேனன், ஓவிய நண்பர் சம்பத் மற்றும் எழுத்தாளர் ஐயப்பன். ஓவியத்திலிருந்து எழுத்துக்கு இழுத்து வந்த பேராசிரியருக்கு குற்ற உணர்வு உண்டு. ஓவியத்துறையில் விவாதம் குறைவு; எதிரிகளும்.

அறிதலின் துயர், முழுமையின் வெக்கை, தனிமையின் சுமையால் தாக்கப்பட்டவனுக்கு ஒரே வெளிச்சம் மரணம் என்று புரிந்துகொண்டால் எதிர்மறைத் தன்மைக்காக இது பின் நவீனத்துவத்தின் உச்சம் என்றும் கொள்ளலாமா?

ஜே ஜே தன் வாழ்வில் சிறிது செம்பு கலந்திருந்தால் பிழைத்திருக்கலாம். ஆனால் அவன் வழி அது அல்ல. ராமகிருஷ்ணரின் வாழ்வில் ஒரு இளம் வயது சாதகன் அவரிடம் “நான் போகிறேன். என்னால் இவ்வுலகில் இருக்க முடியாது” என்கிறான். சில நாள்கழித்து அவன் உடலை உகுத்து விட்ட செய்தி வருகிறது. மிக குறைவான கர்மா ஸ்டாக் உள்ளவர்கள் வீட்டைப் பூட்டிக்கொள்ளத் துவங்குகிறார்கள்.

ஜே ஜே மீது எரிச்சலும் ஆதுரமும் ஒருங்கே தோன்றுகின்றன.

ரயிலில் உடன் வந்த தோழியிடம் அவளது கவிதையில் பிற்கால நல்ல கவிதைகளுக்கான விதை இருக்கிறது என்று சொல்லி இருந்தால் என்ன? நண்பருடன் விவாதம் முடிந்தவுடன் ஒரு தேனீர் குடித்து நலம் விசாரித்தால் என்ன?   கற்பனையைத் தூண்டும் தந்தையின் மரவேலையில் மனமொன்றி ஈடுபட்டால் என்ன? அம்மாவிடம் அன்புடன் காசு வாங்கிக் கொண்டால் என்ன? உறவுகளை நிலைப்படுத்திக் கொள்ளும் ‘போலித்தனம் ‘ இல்லாதவன் மணம் செய்து கொண்டிருக்காவிட்டால் என்ன?

இது எதுவும் இல்லாததாலேயே அவன் அவனாக இருக்கிறான்.

போலித்தனத்தை எரிக்கும் சினமுள்ள ஒருவன் உண்மையை காணாவிடின், ஒன்று சமரசம் அடையவேண்டும். அது கிடைக்காவிடின் மரணமே விடுதலை தருகிறது. குடும்ப பொறுப்புள்ளவன் இலட்சியவாதி முகமூடி அணிந்து கொள்வதும் போலித்தனம் என்று சொல்லலாம்.  குஷ்டரோகிக்கு உதவும் முன் தன்னிலை மறந்து மதம், சமுதாயம் பற்றி சிந்தித்து மயங்கி விழுபவன் சமுதாயத்திற்கு பாரமாகி விடுகிறான்.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தந்தை காரணம் என்று தோன்றுகிறது. தன்னிலிருந்து வந்த ஒன்று தன் பிம்பமாக இருக்கவேண்டும் என்ற ஆசைக்கும் இயல்பான வளர்ச்சி வேறாக இருப்பதற்கும் உள்ள முரணே எல்லாவற்றிற்கும் காரணம்.

சில தெறிப்புகள்

சுகுமாரன் அவர்கள் சொல்வது போல, நூலின் பல பகுதிகளை மனப்பாடம் செய்து அறிவின் அடையாளமாக வெளிப்படுத்திய காலம் இருந்திருக்கிறது

நீங்கள் சொல்வது போல சுந்தர ராமசாமி ஒவ்வொரு சொல்லையும் கவனத்துடன் வளர்த்து  எழுதி இருக்கிறார்.

கண்டிப்பாக இரண்டாம் முறை படிக்க வைக்கக் கூடிய மேற்கோள்கள் என்று தோன்றியவை:

1 மின் மினி போன்ற பரவசம் ஏற்படுத்தும் பொறிகள் தான் ஜே ஜே யிடம் பிறர் பெற்றது

2 நனவுகளே குழம்பிக் கொண்டிருக்கும் போது கனவுகள் பற்றிச் சொல்வானேன்?

3 மனசாட்சியின் குரலை அதன் அடி நுனியில் தெளிவுறக் கேட்கும் பயிற்சியை இடைவிடாது மேற்கொள்கிறேன். இதை மூளை, பாஷை வடிவத்தில் மாற்றிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளத் துடிக்கிறது. பொறிகள் சரிவர இயங்குவதில்லை. சதா சலனம்; சஞ்சலம்

4 மனித உறவுகளை நேசப்படுத்த வேண்டும்.

5 மூல அர்த்தங்களைப் பற்றி சிந்தித்த மனிதன், அது பற்றி எழுதி, எதிர் நிலைகள் பற்றீ எழுதி, வாதாடி, வியாக்கியானித்து, மீண்டும் எழுதியவற்றில் மூல அர்த்தங்களே சீரழிந்து போய்விட்டன. இச்சீரழிவில் சரியாத துறைகளே இல்லை.

6 தலைமைப் பீடத்திலிருந்து அசட்டுப் பிரியம் ஒழுகிய வண்ணம் இருக்கிறது. உள்நோக்கம் கொண்ட இலவச அன்பு அருவருப்பை ஊட்டுகிறது.

7 ஊசிகளின் மேல் வைக்கோல் போர்கள் சரிக்கப் படுகின்றன. ஊசியை மீண்டும் கண்டுபிடிப்பது மற்றொரு உண்மையான ஜீவனின் அவஸ்தை

8 இங்கு பலர் மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த

9 அறிவின் கதவு திறக்கும் போது, திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. திறப்பதே திறக்காத  கதவுகளைப் பார்க்கத்தானா?

10 மனிதன் சந்தோஷம் கவியும் போது அதிருப்திக்கு ஆளாகி, வந்து சேராத சந்தோஷத்தைக் கனவு காண ஆரம்பித்து விடுகிறான்.

11 கவிதைகளின் மீது நாம் காட்டியிருக்கும் குரூரம் அளவிட முடியாதது

12 செயலின் ஊற்றுக் கண்ணான சிந்தனையை பாதிப்பதே என் வேலை

13 மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது மிகச் சுருங்கிய நேரத்தில் குறுக்குப் பாதை வழியாகக் கிடு கிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகை வாசலைச் சென்றடைகிறேன்.  என்மீது உன்துக்கத்தை எல்லாம் கொட்டு என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்த்தி விட முடிகிறது. (இந்த சிலுவைப்பாடு மனநிலை பெருவலி சிறுகதையை நினைவுறுத்துகிறது)

அன்புடன்

ராகவேந்திரன்

கோவை

ஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:31

பழங்காசு, ஒரு கடிதம்

நாணயங்களுடன் ஓர் அந்தி

அன்பின் ஜெ.! வணக்கம்

நாணயங்களுடன் ஓர் அந்தி – மணி அவர்களைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தபோது இத்துறையில் தொடர்புடைய ஒருவரைப் பற்றி தங்களின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று எண்ணியே இதை எழுதுகிறேன்.

பழங்காசு சீனிவாசன் திருச்சியைச் சேர்ந்தவர். கோட்டாறு மணி ஆர்வம் கொண்டிருப்பதைப் போல பழங்கால நாணயங்களை சேகரிப்பவர் மட்டுமல்லாமல் அதற்கென்று காலாண்டிதழையும் நீண்டகாலம் நடத்தியவர். பிறகு அதுவே முன்னொட்டாக “பழங்காசு”ம் அவருடன் சேர்ந்துவிட்டது. கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் திறனுள்ளவ அய்யா, ஏறக்குறைய முப்பதாயிரம் நூல்களை 50 ஆண்டுகளாக சேர்த்து வைத்துள்ளார். திருச்சி பெல் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக சேர்ந்து இறுதியில் பொறியாளராக ஓய்வு பெற்றிருக்கிறார். சொந்த ஊரில் இருந்தவரை இவ்வளவு பெரிய சேமிப்பை பராமரிக்க முடிந்திருக்கிறது. இப்பொழுது பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை ஆவடியில் மகளின் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நாணயங்கள், நூல்களை வேறொரு வாடகை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறபோதிலும் அது எத்தனை நாட்கள் தொடரும் என்று சொல்லமுடியவில்லை. அந்த செலவை இவருக்குள்ள சொற்ப வருமானத்தில் ஈடுகட்ட முடியவில்லை.

ரோஜா முத்தையா அவர்களிடமிருந்த சேமிப்பை க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற சிலர் முன்கையெடுத்து அவரின் சேமிப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு அளித்துள்ளனர். “ஞானாலயா” கிருஷ்ணமூர்த்தியும், பல்லடம் மாணிக்கமும் சொந்த கட்டிடங்களில் இவற்றை நிலைபெறச் செய்ததைப் போல “பழங்காசு” சீனிவாசன் அவர்களிடம் உரிய நிதியாதாரம் இல்லை. சீனிவாசன் அய்யாவுக்கு ஏற்கனவே 75 வயதை கடந்துவிட்டவர். தான் இருக்கும்வரை எப்படியேனும் பத்திரப்படுத்தி விடுவதில் உறுதியாக உள்ளார். அவ்வளவு பெரிய சேகரிப்பு – அவருக்குப் பிறகு  என்னவாகும் என்கிற கவலை உள்ளது.

ஏற்கனவே பழைய நூல் வியாபாரிகள் குறிப்பிட்ட நபரின் இறந்தவுடன் பல பாகங்களாக பிரித்து விற்று இருப்பதை கண்டு கண்ணீர் விட்டிருக்கிறேன். சீனிவாசன் அய்யாவின் நூல்கள், இதழ்கள், நாணய சேமிப்புகள் பெறுமதியானவை. உரிய இழப்பீட்டை குடும்பத்தாருக்கு அளித்து அவற்றை பொது அமைப்புகள், அரசு முன்வந்தால் பழைய அரிதான நூல்கள், நாணயங்கள் பாதுகாப்பட்டு விடும்.
இதன்பொருட்டு தனிப்பட்ட முறையில் முயற்சித்தபோது தூர கிழக்கு நாட்டில் தொழில் செய்யும் பெருவணிகர் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தன் சொந்த (குக்)கிராமத்தில் அமைத்துள்ள நூலகத்திற்கு ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து கொள்வதாக கூறினார். அதேபோல அரபு நாட்டில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையில் பெருந்தொற்று திடீரென்று அனைத்தையும் முடக்கி போட்டுவிட்டது.

இதுபோன்ற நூலகங்கள் சென்னை போன்ற போக்குவரத்து வலைப்பின்னல் கொண்ட பெருநகரம் ஒன்றில் அமைவதே முதல் தெரிவாக இருக்க வேண்டுமென்று சீனிவாசன் விரும்புகிறார். இந்த நூல்கள், நாணயங்கள் பல இடங்களில் கொஞ்சங் கொஞ்சமாக சிதறிப் போவதைவிட எங்கேனும் இலங்கைக்காவது போய் நல்லபடியாக, பத்திரமாக இருக்குமென்றால்கூட போதுமென்று ஒருமுறை வெறுத்துப் போய் கூறினார்.
இதன் பொருட்டு எனக்கு அறிமுகமுள்ள ஊடகத் துறை நண்பர்களிடம் பேசியதில் (நமது  Jeyamohan.in வலைதள வாசகர்களுக்குத் தெரிந்த) ரியாஸ் நீண்ட நேரம் நடத்திய உரையாடல் இந்து தமிழ்த்திசை நாளேட்டில் பழங்காசு சீனிவாசன் அய்யாவைப் பற்றி நடுப்பக்க கட்டுரை வந்திருந்தது. முனைவர் இளங்கோவனும் தன் வலைப்பூவில் இதை கவனப்படுத்தியுள்ளார். பட்டுக்கோட்டை கூத்தலிங்கம் முன்பு வந்து கொண்டிருந்த “புதிய பார்வை” இதழில் எழுதியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை.

பழங்காசு இதழ் தொகுப்புகள் முழுவதும் என்னிடமுள்ளன.1974-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பதற்கென மதுரையில் கூடி முடிவு செய்த 35 பேர்களில் சீனிவாசன் அய்யாவும் ஒருவர். பல்லாண்டுகளாக குறிப்பாக மாணவர்களுக்கு கல்வெட்டு முதலிய தொல்லெழுத்துக்களைப் வாசிப்பதற்கான பயிற்சியை பயிலரங்குகளில் நடத்தி வந்திருக்கிறார். காசுகள் பற்றிய சேகரிப்பில் தன்னைச் சேர்ந்தவர்களையும் வளர்த்துவிட திருச்சியில் இருந்தபோது நாணயவியல் கழகத்தை நிறுவியிருக்கிறார். இப்பயிற்சியில் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பழங்காசுகள் ஆகியவற்றின் அடிப்படைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

சங்ககால நாணயங்கள், பல்லவர், பிற்காலச் சோழர், பாண்டியர், மொகாலயர், ஆற்காட்டு நவாப் ஆகியோர் வெளியிட்ட நாணயங்களையும் நமது நாட்டில் வணிகத்தின் பொருட்டு வந்த ஐரோப்பியர் நாட்டினரான ஆங்கிலேய, டச்சு, பிரெஞ்சு, டேனிஷ், போர்த்துகீசிய கம்பெனிகளின் காசுகளையும் வரலாற்று குறிப்புக்களோடு தொகுத்து வைத்திருக்கிறார். ஆங்கில-இந்திய அரசு வெளியிட்ட காசுகள், பணத்தாள்கள் மட்டுமல்லாது சமஸ்தான நாணயங்களையும், குறிப்பாக திருவிதாங்கூர், புதுக்கோட்டை, கட்ச், ஜெய்ப்பூர், ஹைதராபாத் சமஸ்தான நாணயங்களையும் வைத்திருக்கிறார்.

அச்சடிப்பதில் பிழையான அல்லது அச்சுப் பொறியில் ஏடாகூடமாக சிக்கி அச்சிடப்பட்ட நாணயங்கள் பலவும் இவரிடம் உள்ளன. ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட காசுகள், மையத்தில் விலகி அச்சிடப்பட்ட காசுகள், இரு பக்கமும் அசோக சிங்கம் அச்சிடப்பட்ட காசுகள், ஓரங்கள் மட்டும்ம் இரு முகப்பும் அச்சிடாது விடப்பட்ட காசுகளென்று வேடிக்கையான நிலையில் பல காசுகள் இவரிடம் உள்ளன.
காசுகளைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் காசுகளைப் பற்றி நிறைய அறிந்தும் வைத்துள்ளார். பழங்கால நாணயங்களைப் பார்த்தால் புதையலை கண்டுபிடித்தவரைப் போல குதூகலிக்கும் இவர் பழமையான ராஜராஜ சோழன் காலத்து தங்க நாணயம், மலையமான் காசுகள் போன்றவற்றையும் வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது பர்மா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அப்போது ஜப்பான் அரசு பர்மாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் கரன்சிகளையும், சிங்கப்பூரில் புழக்கத்தில் இருந்த டாலர் கரன்சிகளையும் அச்சடித்து வெளியிட்டது. போர்க் காலங்களில் இப்படி வெளியிடப்படும் கரன்சிகளுக்கு அவசர கால பணம் என்று பெயர் என்று ஒரு பேராசிரியரைப் போல் விளக்கம் அளிக்கிறவர் சீனிவாசன் அய்யா.

கி.மு. 300 முதல் வெளிவந்த அரிய செப்பு, வெள்ளி தங்க நாணயங்கள் முதல் 1471-ல் கன்னட அரசன் கோனேரி ராயன் என்பவர் வெளியிட்ட காசு தமிழ் எழுத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடுகளான கல்வெட்டு ஆண்டறிக்கை தொகுதிகளும், தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதிகளும், எபிக்ராபிகா இண்டிகா தொகுதிகளும் இவரிடம் உள்ளன. கி.பி.1601 முதல் 2000 ஆண்டு வரையிலான நான்கு நூற்றாண்டு காலத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட காசுகள் மற்றும் பணத்தாள்களின் புகைப்படங்களுடன் கூடிய அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட அட்டவணைத் தொகுப்புகள், மிகப் பெரிய எட்டுத் தொகுதிகளாக இங்கு உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாணயவியல் நூல்களும் வைத்திருக்கிறார்.

கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலை நூல்களுக்கும், தொல்லியல் மற்றும் அகழ்வாய்வுத் தொடர்பான நூல்களுக்கும் பஞ்சமில்லை. மாக்ஸ் முல்லர் தலைமையிலான ஏராளமான அறிஞர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த The Sacred Book of East – 50 பெருந்தொகுதி கொண்ட நூல் தொகுப்பினை தனி நபர் ஒருவரிடம் நான் கண்டது சீனிவாசன் அய்யாவிடம் மட்டுமே. அதனால்தான் மிகவும் கடினமான நூல் எனப்படும் விஷ்ணுபுரம் அப்படியொன்றும் எனக்குப் படாமல் போனது என் நல்லூழாகவும் அய்யா போன்றவர்களின் தோழமையுமே காரணம் என்பேன். இப்பொழுது ஓ.ரா.ந.கிருஷ்ணன் வெளியிட்ட மஜ்ஜிம நிகாய தமிழ் மொழிபெயர்ப்பு 5 முழு தொகுதிகளில் பௌத்த மறைஞானம் போன்றவை வந்திருப்பது உரிய கவன ஈர்ப்பை கோரி நிற்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. அவ்வப்போது ஆவடி சென்று அய்யாவை சந்திப்பது, பேசி வருவது என் மனதுக்கு பிடித்த செயல்களில் ஒன்று. அது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்குமென்று கூறமுடியவில்லை.

பின்வரும் சுட்டிகள்  :
https://www.hindutamil.in/news/opinion/668739-pazhangasu-srinivasan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

ஒரு மனிதர் – முப்பதாயிரம் புத்தகங்கள்

http://muelangovan.blogspot.com/2013/09/blog-post_25.html
நூல் தொகுப்பாளார் : பழங்காசு சீனிவாசன்

https://aggraharam.blogspot.com/2017/10/blog-post.html

கொள்ளு நதீம், ஆம்பூர்.

அன்புள்ள கொள்ளு நதீம்,

உண்மையில் இன்னொரு பண்பாட்டிலென்றால் பெரும்செல்வமாக மாறக்கூடிய சேகரிப்புகள் இவை. சேகரிப்பவரை கோடீஸ்வரராக்கியிருக்கக் கூடியவை. ஆனால் தொடர்ச்சியாக இவ்வகையான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நூல் சேகரிப்பாளர்கள், அரும்பொருள் சேகரிப்பாளர்கள், தொல்பொருள் சேகரிப்பாளர்கள் அவர்களின் இறுதிக்காலத்தில் அச்சேகரிப்பை என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள். வாழ்நாள் முழுக்க உழைப்பு செலவிட்டு, நேரம் செலவிட்டு, பணம்செலவிட்டு சேர்த்த பொருட்கள் எந்த மதிப்பும் இல்லாதவையாக சூழலால் கருதப்படுவதைக் கண்டு ஆழ்ந்த விரக்தி கொள்கிறார்கள். அவற்றை எவரிடமேனும் ஒப்படைத்துவிட்டுச் செல்ல முயல்கிறார்கள்.

தமிழகம் அளவுக்கு தன் பண்பாடு, மொழி பற்றி பீற்றல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை. உலகிலேயே இதைப்போல பண்பாட்டுத்தற்பெருமை பேசும் ஒரு சமூகம் இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் கூடவே பண்பாட்டுக் கல்வியில், பண்பாட்டைப் பேணுவதில் கதமிழகமே இந்தியாவிலேயே முழுமையான அக்கறையின்மையும் அறியாமையும் கொண்ட மாநிலம். முழுக்கமுழுக்க அறியாமை. அறியாமையின் விளைவான மொட்டைப்பெருமிதம். கீழ்த்தரமான பொய்களை தம்பட்டமடித்துக்கொள்ளும் வெட்கமில்லாமை.

தமிழ்ப்பண்பாட்டின் பெரும்செல்வம் என்று சொல்லத்தக்க ஒரு சேகரிப்பைப் பற்றி நீங்கள் எழுதும் இவ்வரிகள் ஆழ்ந்த கசப்பையே அளிக்கின்றன. ஏனென்றால் நான் எழுதவந்த காலம் முதல் வெவ்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள் இந்நிலையில் இருந்ததை கேட்டிருக்கிறேன். நாடெங்கும் முழங்கும் போலிப்பண்பாட்டுப்பெருமிதக் கூச்சல்களுக்குச் செலவிடப்படும் தொகையின் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தால் இவற்றை முறையாகப் பேணிவிடலாம்.

ரோஜா முத்தையா அவர்களின் சேகரிப்பு சிகாகோ பல்கலையால் எடுத்துக்கொள்ளப்பட்டமையால் தப்பித்தது. தமிழகத்தில் எந்த அமைப்பும், எந்த ஆதரவுப்புலமும் இம்மாதிரியான செயல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய நாணயச்சேகரிப்பாளர்களை தொடர்புகொள்வதே உசிதமான செயலாக இருக்கமுடியும். அவர்களுக்கே இவற்றின் அருமை புரியும். இந்தியாவை விட்டு வெளியே சென்றாலே போதும், இச்சேகரிப்புகள் முறையாகப் பேணவும்படும். அதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2021 11:31

September 22, 2021

செயல், தடைகள்

ராம்குமார்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா,

உங்களின் தன்மீட்சி புத்தகம் படித்தேன். எனது வாழ்வில் உள்ள சிறிய குழப்பம்.. நான் IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். நீதியை நிலை நாட்டுவதும், தீயவையிடமிருந்து நல்லவரை காப்பாற்றுவதும், குற்றம் புரிந்தவர்களை தண்டிப்பதும் போன்ற விஷயங்களை என்னால் செம்மையாக செய்ய முடியும் என்று நம்பினேன். அப்போது இதற்குப் பெயர் தன்னறம் என்று எல்லாம் எனக்குத் தெரியாது.

இடையில் காதல் கல்யாணம் வந்தது. என் மனைவி மிகப் பிரியமானவர். என்னை விட்டு சிறிதும் விலகி இருக்க மாட்டார். எனது IPS விருப்பம் அறிந்தே என் மனைவி என்னை மணந்தார். எனினும் என் மனைவிக்கு நான் IPS வேலையால் அவரைப் பிரிந்துவி்டுவோமோ, நம்முடன் இருக்க நேரமே இருக்காதோ என்றெல்லாம் பயம். என்னிடம் IPS வேண்டாம்,IAS ஆகுங்கள் எனக் கெஞ்சுவார்.

நானும் ஒரு சில IPS அதிகாரிகள் “IPS ஆனால் குடும்பதைப் பார்த்துக் கொள்ள முடியாது. உங்கள் மகனின் பிறந்த நாளாக இருந்தாலும் அதில் கலந்துகொள்ள முடியாது” என்றெல்லாம் கூறுவதை நேராகப் பார்த்திருக்கிறேன். மிகுந்த யோசனைக்குப் பிறகு என் மனைவிக்காகவும் அவளின் சிறிய ஆசைக்காகவும் நான் IAS ஆகலாம் என்று முடிவு செய்தேன். ஒரு வருடம் ஆகிவிட்டது. படித்துக் கொண்டிருக்கிறேன். எனினும் ஒரு IAS அதிகாரியாக என்னவெல்லாம் செய்யலாமோ அவை எல்லாம் எனக்குப் பெரிதும் உந்துதலாக இல்லை.

IAS வேலையை எனது லட்சியமாக நானே உருவகப்படுத்திக் கொண்டாலும், எனக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு சோர்வு படிப்பதில் ஏற்படுகிறது. சோர்வைப் பற்றிய வாசகர் கடிதத்திற்கு நீங்கள் “நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்றால், அதில் முற்றாக ஈடுபடுவதொன்றே வழி” என்று பதிலளித்துள்ளீர்கள்.

இந்த வரிகளைப் படித்துப்  பார்க்கையில் IPS வேலையே, எனக்கு தேர்வுக்கான படிப்பில் உந்துதலைத் தருகிறது. இந்த சூழலில் நான் என்ன செய்வது. தன்னறமா இல்லை குடும்பத்திற்காக தன்னறத்தில் சிறிது விலக்கல் ஆகுமா?? நான் தற்போது பொதுத்துறையில் பணிபுரிகிறேன். என்னுடைய பொருளாதார நிலைக்கும் அடுத்த நிலை முன்னேற்றம் தேவை. எனினும் பொருளாதார நிலைக்காக தனியாரில் சென்று எனது முழு நேரத்தையும் அங்கு அளிக்கவும் விரும்பவில்லை. ஒரு பக்கம் எனது தன்னறத்தால் வாழ்வில் அடுத்த நிலை, மறுபக்கம் அந்த அடுத்த நிலையில் குடும்பத்தின் மகிழ்ச்சி எவ்வாறு இருக்குமோ.

எனினும் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். (நான் என் மனைவியிடம் தெரிவித்துத் தானே மணந்தேன், இப்போது ஏன் மாற வேண்டும் என்றும் தோன்றுகிறது..)

ஆர்.பி

தியடோர் பாஸ்கரன்

அன்புள்ள ஆர்.பி

உங்கள் கடிதத்தில் உள்ளது உண்மையான சிக்கல் அல்ல. வெறும் பதற்றம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னும் அச்சிக்கல்களைச் சந்திக்கவில்லை. அச்சூழல்களுக்குள் செல்லவில்லை. அந்த உலகமே உங்களுக்கு தெரியாது. நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். இது வெறும் அச்சமும் குழப்பமும்தான். இதையெல்லாம் இப்போது யோசிப்பதும் மனைவியிடமோ பிறரிடமோ விவாதிப்பதும் அபத்தமான செயல். உங்கள் மனைவி இதைப்பற்றி உங்களிடம் பேசுவதும் தேவையற்றது.

உங்கள் மனைவி ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்பது பழஞ்சொல். செயல்தளத்தில் வெற்றியடைந்தவனுக்கே தன்னம்பிக்கையும் நிமிர்வும் அமையும். அவனே தன் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் உகந்தவன். இன்று ‘கூடவே இரு’ என சொல்லும் இதே மனைவி நாளை குழந்தைகள் வந்து அவர்களுக்கான வாழ்க்கைத்தேடலின்போது நீங்கள் வெற்றியடைந்தவரா என்று மட்டுமே பார்ப்பார். கூடவே இருக்கும்பொருட்டு தோல்வியடைந்தீர்கள் என்றால் குத்திக்காட்டுவார். அதை நீங்களும் உணரவேண்டும்.

அத்துடன், ஆடவர் வினையாற்றிய காலம் முடிந்துவிட்டது. இன்று ஒவ்வொருவரும் ஒரு செயற்களம் கொண்டிருக்கவேண்டும். ஆணோ பெண்ணோ. உங்கள் மனைவி உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்க முயன்றால் காலப்போக்கில் ஏமாற்றமே அடைவார். இன்றைய வாழ்க்கையில் அது இயல்வதே அல்ல. அவர் தனக்கான உலகை கண்டடையவேண்டும். தனக்கான செயல்தளத்தை, தனக்கான வெற்றியை.

ஒரு பெருஞ்செயலுக்காக நாம் தொடங்கும்போது இப்படிப்பட்ட ஐயங்களையும் தயக்கங்களையும் அடைகிறோம். இரு முனைகளிலிருந்து இவை வருகின்றன. ஒன்று நாம் எதிர்கொள்ளும் உலகப்பெருவெளி அந்த தடையை அளிக்கிறது. அதை மீறிச்சென்றால்தான் நாம் தகுதியானவர்கள். விந்தணுவுக்கு கருப்பாதை அளிக்கும் எதிர்ப்பு போன்றது அது. இரண்டு, நாமே நமக்கு தடைகளை உருவாக்கிக்கொள்கிறோம். நம்முடைய தன்னம்பிக்கையின்மையால். இரண்டையும் நாம் கடந்தாகவேண்டும்.

குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ப புறவுலகை உருவாக்கிக் கொள்ளும் ஆண் ஏற்கனவே தோல்வியடைந்த மனிதன். புறவுலகுக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதே உண்மையான அறைகூவல். அதைச்செய்ய அவனுக்கு உதவுபவளே நல்ல மனைவி. குடும்பத்திற்குள் மட்டும் ஆணை நிற்கச்செய்ய முயலும் பெண் அவனுடைய வாழ்க்கையை நுட்பமாக அழிக்கிறாள். அதன்பெயர் அன்பல்ல.

அன்பு ஆக்கபூர்வமானதாக இருக்கும், தியாகம் செய்யும், அளிக்கும். அழிப்பதும், அடைவதில் வெறிகொண்டிருப்பதும் அன்பென்ற பேரில் முன்வைக்கப்படும் சுயநலம் அன்றி வேறல்ல. இது ஆணுக்கும் பொருந்தும். எந்த அன்பின் பேரிலும் பெண்ணின் உலகம் விரிவதை ஆண் தடுக்கலாகாது. எந்த எல்லைவரைக்கும் சென்று ஒத்துப்போகவேண்டும்.

ஆட்சிப்பணியில் இருந்தபடி அறிவுத்தளத்தில் பெரும் பங்காற்றியவர்கள் பலர் உண்டு. முன்னரே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். தன்தேர்வு. என் நண்பர் ராம்குமார் ஆட்சிப்பணியில் இருந்தபடி இலக்கியம் வாசிக்கிறார், கதைகள் எழுதுகிறார், விஷ்ணுபுரம் அமைப்பின் மையத்தூண்களில் ஒருவராகச் செயல்படுகிறார், அதற்குமேல் பல சமூகப்பணிகளும் செய்கிறார். ஆட்சிப்பணியாளராக மிகப்பெரிய அளவில் நற்பெயர் பெற்ற சாதனையாளரும்கூட. செய்ய வேண்டுமென்றால் செய்யலாம். அதற்குரிய தளத்தை தெரிவு செய்துகொள்ளலாம்.

ஆனால் அதெல்லாமே வென்றபின். வெல்வது வரை வெல்வதைப்பற்றி மட்டுமே எண்ணுங்கள். அதில் உளம்குவியுங்கள்.

ஜெ

தன்தேர்வு பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார் ’அகதி’ ராம்குமார் முன்னுரை தேவியின் தேசம் செயலும் கனவும்- கடிதங்கள் செயல் -ஒரு கடிதம் செயல்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2021 11:35

இரு  கேள்விகள்

ஜெயமோகன் அமேசான் நூல்கள்

இரு கேள்விகள். இரண்டுமே பெண்களிடமிருந்து. அதுவும் இளையதலைமுறைப் பெண்கள். அவர்களுக்குத்தான் இந்தவகையான சந்தேகங்கள் வருகின்றன

அ. இப்போதெல்லாம் ஏன் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிகிறீர்கள்? அதை என் ’ஸ்டேண்டேர்ட்’ ஆடையாக ஆக்கிக்  கொள்கிறீர்களா? அது நன்றாக இருக்கிறது என்பது வேறுவிஷயம்…

முதலில் சொல்லவேண்டியது, அந்த ஆடைகளை நான் வாங்கவில்லை. நூற்பு சிவகுருநாதன் மற்றும் நண்பர்கள் எனக்குப் பரிசளித்தவை அவை. அணிவதற்கு வசதியானவை. வேட்டியை அணியும்போது கொஞ்சம் அன்னியமாக இருக்கும். ஆனால் வேட்டி கட்டி கொஞ்சம் பழகிவிட்டால் இந்தியத் தட்பவெப்பத்திற்கு பிற ஆடைகள் அசௌகரியமானவை என்று தோன்றும். அவை காலைக் கவ்விக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.

நம் ஆடைகளை எப்படி தெரிவுசெய்கிறோம்? யோசித்துப்பாருங்கள். திருநங்கையர் ஆணாக பிறக்கிறார்கள். தங்கள் உடலிலும் உள்ளத்திலும் மாறுதல்களை உணர்ந்ததுமே பெண்ணுடை அணிய ஆரம்பிக்கிறார்கள். அவமதிப்புகள், குடும்ப உறவுகளை இழப்பது என மொத்த வாழ்க்கையே மாறிவிடுகிறது. வேலை கிடைக்காது. பிச்சை எடுக்கவேண்டும். ஆணுடை அணிந்து ரகசியமாக இருந்துகொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. உள்ளே மாறிவிட்ட பின் ஒருவர் வெளியே மாறாமலிருக்க முடியாது. வெளியே இன்னொரு ஆடையை அணிவது வேடம் போட்டுக்கொண்டு, எடையைச் சுமந்துகொண்டு அலைவதுபோல தோன்றும்.

நமக்கு அகத்தே எவ்வளவு வயதோ அந்த ஆடையை தேர்வுசெய்கிறோம். சிலர் அறுபது வயதில் தலைச்சாயம் அடித்து இளமையான ஆடைகள் அணிகிறார்கள் என்றால் அவர்கள் அதையே உள்ளூர உணர்கிறார்கள் என்று பொருள். அதில் பிழை ஏதும் இல்லை. என் சிக்கல் என்னவென்றால் நான் எங்கும் ஒரே வயதை உணர்வதில்லை. ஒரு மலையேற்றத்தில், ஒரு சினிமா வேலையில் இளமையாகவே உணர்கிறேன். ஒரு திருமணவிருந்தில், சில மேடைகளில், சில சந்திப்புகளில் முதியவராக உணர்கிறேன். ஆடை அதற்கேற்ப மாறுகிறது.

இன்னொன்றையும் கவனித்தேன். எவராக இருந்தாலும் அரசுசார் வேலையில் இருந்தால் அறுபது வயதில் ‘முதிய’ மனநிலை வந்துவிடுகிறது. அது அதிகாரபூர்வ ஓய்வுபெறும் வயது. நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னரே பணியிலிருந்து விலகினாலும்கூட மானசீகமாக அரசு வேலையில்தான் இருக்கிறோம். ஒரு கடை வைத்திருப்பவருக்கு இப்படி தோன்றாது என நினைக்கிறேன். நான் வேலையை விட்டபின்னரும் அரசுவிடுமுறையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து ‘லாங் ஹாலிடே’ வருமென்றால் மகிழ்ச்சி அடைவதுண்டு. இதேபோலத்தான். இது நான் பிஎஸ்என்எல்லில் இருந்திருந்தால் ஓய்வுபெறும் வயது. 2022 ஏப்ரல் 22 அன்று.

ஜெ

ஆ. சிலர் இணையதளங்களில் மிகமிகக் கடுமையாக உங்களைத் தாக்குகிறார்கள். ஒருமையில் வாடபோடா என்று பேசுவது, கெட்டவார்த்தைகள் சொல்வது. இதெல்லாம் வாசிக்கையில் தமிழில் எழுதுவதனாலேயே ஓர் எழுத்தாளர் இதைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. தமிழில் வேறெந்த எழுத்தாளரையும் இப்படி வசைபாடுவதில்லை.

எதிர்வினையாற்ற வேண்டும் என்று தோன்றினாலும் அவர்கள் ஏங்குவதே அப்படி சில எதிர்வினைகள் வந்து கவனிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் என்றும் தோன்றுகிறது. இவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

அப்படி வசைபாடுபவர்களில் ஒருவர் அவ்வாறு மிகக்கேவலமாக வசைபாடுவதற்குச் சொன்ன காரணம் நான் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பது. எழுத்தாளர்களை மதிக்கவேண்டும் என்ற கொள்கையால் கெட்டவார்த்தை சொல்கிறார்கள் என்றால் அதில் ஒரு முரண்பாடு இருந்தாலும் உயர்ந்த கொள்கைதானே?

கொள்கை, இலக்கியம் என பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலும் அது அவர்களின் மனச்சிக்கல். அப்படி ஒரு கசப்புநிலையிலேயே ஒருவர் இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பெரிய நரகம். அனுதாபம்தான் உள்ளது, மெய்யாகவே.

சிலர் தொழில்முறையாக வசைபாடுபவர்கள். அவ்வாறு வசைபாடியபின் அதேபோல என்மேல் காழ்ப்போ பொறாமையோ கொண்டவர்களிடமிருந்து பணம் கேட்டுப்பெற்றுக் கொள்கிறார்கள். அது ஒரு வாழ்வாதாரம். அதுவும் அனுதாபத்திற்குரியதே.

அவர்கள்மேல் பரிவுதான், வேறெந்த உணர்வும் இல்லை. நான் அப்படிச் சொல்லிக் கேட்கும்போது ஒரு அரசியல்நாகரீகம் கருதிப் பொய்யாகச் சொல்கிறேன் என்று தோன்றும். நீங்கள் உங்களால் மகத்தானது என நம்பப்படும் ஒரு பணியைச் செய்துவிட்டீர்கள் என்றால் மெய்யாகவே அந்த மனநிலை வந்துவிடும். அது நம்மை ஏராளமான சிறுமைகளில் இருந்து விடுவிக்கும். மானுடவாழ்க்கையின் மிகப்பெரிய விடுதலை அதுதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2021 11:34

முதற்காதலின் தளிர்வலை- கடிதங்கள்

முதற்காதலின் பொன்மணிக்கிளை தளிர்வலையோ?

அன்புள்ள ஜெ

முதற்காதலின் பொன்மணிக்கிளை, தளிர்வலையோ இரு கட்டுரைகளையும் வாசித்தேன். அவை மலையாள சினிமாப்பாடல்கள் பற்றிய கட்டுரைகள் அல்ல. அவற்றில் பேசப்பட்டிருப்பது சினிமாவே அல்ல. வாழ்க்கை. ஒரு கட்டுரையில் நுட்பமாகவும் பூடகமாகவும் காமம் பேசப்பட்டிருக்கிறது. இன்னொன்றில் காதலும் அதன் சிதைவும். இரண்டுமே ஆழமான கதைகள் போல் இருக்கின்றன.

மலையாளப் பாடல்கள் பற்றிய கட்டுரைகளில் எல்லாமே இப்படி நுட்பமாக கதைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைத்தான் நான் எப்போதுமே வாசிக்கிறேன்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ,

இன்று காலை ‘நினைவுகளை மனிதர்கள் எப்படி கடக்கிறார்கள்? அல்லது அவையே மனிதர்களை இயல்பாகக் கைவிட்டுவிடுகின்றனவா?’ என்ற வரி உலுக்கிவிட்டது. அன்புள்ள ஜெ, நினைவுகளால் கைவிடப்பட்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா?

எம். ஆர்

***

அன்புள்ள ஜெ

முதற்காதலின் பொன்மணிக்கிளை, தளிர்வலையோ தாமரவலையோ எல்லாம் எத்தனை அற்புதமான சொல்லாட்சிகள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கவிதையாகவே நிலைகொள்கின்றன. சினிமாப்பாடல்களில் மலையாளத்தில் கற்பனாவாதம் மிக உச்சத்தில் உள்ளது

ராஜேஸ்வரி முருகப்பன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.