Jeyamohan's Blog, page 850

January 6, 2022

தன்னறம் நூல்வெளிக்கான வேண்டுதல்…

பால்யகாலத்தில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நேரில் சந்திக்க நேர்கையில், அவர் தன்னுடைய நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்க நேர்ந்தது. அப்போது சுந்தர ராமசாமி, “ஒரு புத்தகம் என்பது நூறு வருடங்கள் ஆயுள் கொண்டதாக இருக்கவேண்டுமெனில், அதற்குரிய நல்நேர்த்தியும் மெனக்கெடலும் அவசியம். படைப்புமுயற்சியில் மட்டுமல்ல, பதிப்புமுயற்சியிலும் நமக்குப் புதுமை தேவை, சமரசங்களற்ற புதுமை. தமிழ்ச்சூழலில் அந்த கவனம் எழவேண்டும்” என்றார். பதிப்புச்சூழல் குறித்த ஆழங்கள் அப்போது அறியாவிடினும்கூட, சுராவின் அந்த சொற்பிரயோகம் எனக்குள் வேர்விட்டு நின்றுகொண்டது.

நேர்மறையான கருத்துகளையும், செயலிலாழ்த்தும் தத்துவங்களையும், போற்றத்தக்க விழுமியங்களையும் சமகாலத்திய இளையமனங்களிடம் கொண்டுசேர்க்கும் நற்கனவில் முளைத்தெழுந்ததுதான் ‘தன்னறம்’ பதிப்பகம். அதேபோல, தமிழ்சூழலில் குழந்தைகளுக்கு வண்ணங்களாலும் கதைகளாலும் அமைந்த அற்புதமான ஓவியவுலகத்தை அறியச்செய்ய வேண்டும் என்கிற பெருவிருப்பத்தின் சிறுவெளிப்பாடே ‘தும்பி’ சிறார் மாத இதழ்.

படைப்புகளுக்கான உட்பக்க மற்றும் அட்டை வடிவமைப்பு, அச்சுக் காகிதத்தின் தேர்வு, அச்சின் தரம், தூதஞ்சலுக்கான புத்தகப்பெட்டகம் என ஒவ்வொரு படிநிலையிலும் தேர்ந்த நேர்த்தியைத் தேடித்தேடிக் கண்டடைகிறது தன்னறம் நூல்வெளி. இயன்றவரை இன்றளவும் இம்முயற்சியை சமரசமின்றி தொடர்ந்துவருகிறோம். அதற்கான இழப்புகள் வருத்தந்தருவதெனினும், நற்படைப்பின் முழுமைக்கு அதற்குரிய மூலப்பொருட்களை ஈந்தாக வேண்டும் என்ற எளியபுரிதல் இன்னும் அகம்விட்டு விலகவில்லை.

சிலசமயங்களில் ஒரு புத்தகம் உருவாகுவதற்கு ஆறுமாத காலம் வரைகூட நாங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. உதாரணமாக, சுதந்திரத்தின் நிறம் மற்றும் உப்புவேலி ஆகியவை அப்படி உருவானவையே. எண்ணிக்கையைப் பொறுத்தவரை மிகக் குறைவான நூல்களையே வெளியிட்டிருக்கிறோம். ஆனால், இந்த குறுகிய காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் தன்னறத்திற்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை என்பது நாங்கள் வணங்கத்தக்க அளவிற்கானவை. பல புதிய முயற்சிகளை முயன்றுபார்த்து பரவலாக்குவதற்கான முன்தடமென சில சூழ்நிலைகளில் தன்னறம் அறியப்படுவதை தற்போதறிகிறோம்.

அண்மைக்காலங்களில், மிகக் குறைவான அளவு புத்தகப் பிரதிகளை அச்சுப்படுத்தும் POD (Print On Demand) அச்சுமுறை பெருகியிருக்கிறது. இது பல நெருக்கடிகளை எளிமைப்படுத்தியிருப்பது உண்மைதான். நூறு அல்லது இருநூறு என்றளவில் ஓர் புத்தகத்தின் மொத்தப்பிரதிகள் இம்முறையில் அச்சிடப்படுகின்றன. ஆகவே, சில வருடங்கள் கழிந்து அத்தகைய புத்தகங்கள் அச்சின்மை நிலைக்குச் சென்றுவிடுகிறது. புத்தகங்களை இருப்பில் வைத்துக்கொள்ளும் சவாலை பதிப்பகங்கள் ஏற்கத் தயங்குவதன்பொருட்டு சிலநூறு பிரதிகள் அச்சில் எஞ்சி வாசகர்களை அடைகிறது.

POD முறையில் புத்தகங்களை அச்சுப்படுத்தத் தயங்கி இன்றளவும் நாங்கள் ஆப்செட் முறையில் குறைந்தது ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் பிரதிகள் என்றளவிலேயே அச்சுப்படுத்தி வருகிறோம். இந்தத் தயக்கத்திற்கு முக்கியக்காரணம், குறைந்த எண்ணிக்கையில் புத்தகத்தை அச்சுப்படுத்துவது ஏதோவொரு தப்பித்தலுணர்வை மனதுக்குத் தருவதால்தான். ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து, இரண்டு அல்லது மூன்றுவருட காலத்தில் வெவ்வேறு தளங்களிலுள்ள மனிதர்களிடம் அதை ஒப்படைப்பதற்காக அகமடைகிற ஓர் பொறுப்பேற்றலை என்றும் நாங்கள் தக்கவைத்துக்கொள்ள விழைகிறோம்.

அதற்குக் காரணம், அப்படி நாங்கள் அச்சுப்படுத்தி வாசகமனங்களிடம் கொண்டுசேர்ப்பித்த சில புத்தகங்கள், சிறிது காலகட்டத்திற்குப் பிறகு பொதுவெளியில் அதற்குரிய உள்ளடக்கம்சார் உரையாடலையும், சலனத்தையும் எழுப்புவதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். ‘தன்மீட்சி’யும், ‘இன்றைய காந்திகள்’ மற்றும் ‘உப்புவேலி’யும் அண்மைய உதராணங்கள் எனச் சொல்லலாம்.

பாவண்ணன், ஜெயமோகன், அரவிந்த் குப்தா உள்ளிட்ட மூத்த ஆசிரியர்கள் பலரால், ‘சர்வதேச பதிப்பகங்களுக்கு இணையாக தமிழ்ச்சூழலில் தன்னறம் பதிப்பகம் தனது நேர்த்தியால் வளர்ந்து வருகிறது’ என்று வாழ்த்துப் பெறுகையில், மகிழ்வைவிட பொறுப்புமும் அச்சமுமே மிகுகிறது. தன்னறத்தின் ஒவ்வொரு நலம்விரும்பிகளும் முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் இப்பவரை வாழ்த்துரைத்து வருகிறார்கள். இதுவரையிலான அத்தனை ஆசிச்சொற்களையும் இக்கணம் நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘விலையில்லா பிரதிகள்’ முன்னெடுப்பு என்பது தன்னறத்தின் இன்றியமையாத ஓர் ஆத்மச்செயல்பாடு. இன்றுவரை, தோராயமாக மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விலையில்லா பிரதிகளாக வாசகர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் இம்முயற்சி சாத்தியம்தான் என்பதற்கு இந்த முன்னெடுப்பு முன்னுதாரணமாக மாறியுள்ளது… இவ்வளவு விரிவாக ‘தன்னறம் நூல்வெளி’ குறித்த இப்பதிவு நீள்வதற்கு காரணமிருக்கிறது.

2022ம் ஆண்டிற்கான சென்னைப் புத்தகக் கண்காட்சியானது, நோயச்ச சூழ்நிலைகளின் பாதுகாப்புக் காரணங்கள் கருதி காலந்தள்ளி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகாலம் மிகவும் தொய்விலிருந்த பதிப்பகச்சுமைகளை இப்புத்தகக் கண்காட்சி ஓரளவு மீட்டெடுத்துவிடும் என்கிற நம்பிக்கை சற்று தளர்ந்திருக்கிறது. தன்னறம் நூல்வெளி வாயிலாக இப்புத்தகக் கண்காட்சிக்கு பத்து புதிய நூல்கள் அச்சுப்படுத்தும் செயல் கிட்டத்தட்ட நிறைவடையும் சூழலிலுள்ளது.

கடந்த புத்தகக் கண்காட்சியில் வெளியான ‘யதி: தத்துவத்தில் கனிதல்’ புத்தகத்தின் பலநூறு பிரதிகள் சேகரிப்புக்கிடங்கில் தேங்கிக்கிடக்கிறது. மேலும், தேவதேவன் கவிதைகளின் இரு பெருந்தொகுப்புகள் உள்ளிட்ட புதிய நூல்களையும், இருப்பிலிருக்கும் புத்தகங்களையும் புத்தகக் கண்காட்சி வாயிலாக நிறைய தோழமைகளிடம் சேர்ப்பிக்க இயலும் என்ற நம்பிக்கொண்டு இருந்தோம் நேற்றுவரை. ஆனால், ஜனவரி புத்தகக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்த பிறகு, கடன்சுமையின் பாரம் அழுத்தத் தொடங்கியிருக்கிறது. எப்படி இந்த இடர்காலத்தைக் கடக்கப்போகிறோம் என்று சத்தியமாகத் தெரியவில்லை.

ஆகவே, மீண்டும் நாங்கள் உங்கள் முன்பு எங்கள் கோரிக்கையை இறைஞ்சுதலாக முன்வைக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கிய ‘மீண்டெழ’ எனும் திட்டத்தின் நீட்சியை இவ்வாண்டும் செயல்படுத்துகிறோம். இத்திட்டத்தின்படி, வாசகத் தோழமைகள் தன்னறம் நூல்வெளியுடன் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்து, ரூ 3000 அல்லது ரூ 5000 தொகையை முன்கூட்டியே செலுத்துவது அவசியமாகிறது. இவ்வாறு முன்கூட்டியே தொகை செலுத்தும் நண்பர்கள் தன்னறம் நூல்வெளியின் சார்பாக ரூ 1000 அல்லது ரூ 2000 மதிப்புள்ள புத்தகத்தை கூடுதலாகப் பெறுவார்கள். அதாவது, ரூ 3000 செலுத்தும் நண்பர் ரூ 4000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். மற்றும் ரூ 5000 செலுத்தும் நண்பர் ரூ 7000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். தொகை செலுத்தி உறுப்பினரான ஒவ்வொருவரும் இரண்டு வருட காலத்துக்குள் தங்களுக்குரிய தொகைக்கான புத்தகங்களைப் பெற்றிருப்பார்கள்.

உதவிகோரலின் வழியாகவே இதுவரையில் தும்பியும் தன்னறமும் தன்னுடைய இருப்பை நீட்டுவித்து நகர்வதை கண்கூடாகக் கண்டுவருகிறோம். ஆகவே, இம்முறையும் உங்கள் முன்பாக இந்த கோரிக்கையை இறைஞ்சுதலாக முன்வைத்து காத்திருப்பதைத் தவிர உகந்த வழி ஏதுமில்லை எனக் கருதுகிறோம். உறுப்பினராகி இணைந்து தன்னறத்திற்கு செயல்பலம் தருகிற அத்தனை மனிதர்களையும் இக்கணம் நெஞ்சில்வைத்து வணங்குகிறோம். ஒரு பதிப்பகமாக தமிழ்ச்சூழலில் ‘தன்னறம் நூல்வெளி’ தரந்தாழாமல் செயலியங்கத் துணையிருங்கள்!

~

தும்பி /தன்னறம் வங்கிக்கணக்கு விபரங்கள்:

THUMBI

Current A/c no: 59510200000031

Bank Name – Bank of Baroda

City – Erode

Branch – Moolapalayam

IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)

UPI ID – “thumbi@upi “

Gpay – 9843870059

உதவிபகிர விரும்புகிற தோழமைகள் மேற்கண்ட வங்கிக்கணக்கில் தொகை செலுத்திவிட்டு, thannarame@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9843870059 என்ற தொலைபேசி எண்ணிற்கோ உங்களுடைய முழுமுகவரியையும், பரிவர்த்தனைத் தகவல்களையும் அனுப்பவேண்டுகிறோம்.

~

கரங்குவிந்த நன்றிகளுடன்,

சிவராஜ்

தன்னறம் நூல்வெளி

9843870059 I www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 08:11

January 5, 2022

எழுத்தாளனும் பயணங்களும்

அன்புள்ள ஜெ

இந்த கேள்வியை பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாலும் தொடர்ந்து இதுகுறித்து சிந்தனை வந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் இக்கடிதம்.

முன்பு ஒருமுறை இலக்கியத்தின் வழி ஒருவர் செல்லாத நிலங்களை காணவியலுமா என கேட்டிருந்தேன். அதற்கு தளத்தில் இலக்கியத்தில் நிலக்காட்சிகளை காணுதல் என்ற தலைப்பில் மிக நீண்ட பதிலொன்றை அளித்தீர்கள். அதன் பிறகு தான் என் ஐயம் நீங்கியது. ஆனால் வேறொரு கேள்வி முளைத்திருக்கிறது.

இலக்கியம் ஒரு வாசகனுக்கு, அவன் கண்டிராத நிலங்களை, வாழ்க்கை சூழலை, உச்ச தருணங்களை, மெய்மைகளை கற்பனையில் சமைத்த வாழ்வின் மூலம் வழங்குகிறது. கற்பனையின் வழி அது சாத்தியம் என்பதே இலக்கியம் என்னும் கலையின் அடித்தளம். இன்று ஒரு வாசனாக என் அறிதல்களில் ஒன்றானது என்று இதை என்னால் முன்வைக்க இயலும்.

நான் அதிகமாக அறிந்த ஒரேயொரு பெருநாவலாசிரியர் தாங்கள் தான். உங்கள் சொற்களின் வழி சென்று பிற ஆசிரியர்களை அறிய சென்று கொண்டிருப்பவன். தாங்கள் பெரும் வாசகரும் கூட. அத்தோடு பெரும் பயணியும்.

ஒரு இலக்கிய வாசகன் கட்டாயம் பயண செய்தாக வேண்டும் என்பது இலக்கியத்தை மறுப்பதாக சென்று முடியும். ஆனால் பெரும் நாவல்களின் ஆசிரியன் கட்டாயம் பயணம் செய்பவனாக தான் இருக்க வேண்டுமா ? குறிப்பாக மானுடர்களை அவர்களின் நிலத்தில், வரலாற்றின் பெருங்களத்தில் வைத்து நோக்கும் ஆசிரியன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி சொல்லும் போதே தஸ்தாயெவ்ஸ்கி நினைவிற்கு வருகிறார். அவரோ பனித்துளியின் வழி சூரியனை நோக்குபவர். மிகச்சிறு கால அளவையும் நில எல்லையையும் உருபெருக்கி மானுடத்தின் என்றுள்ள வினாக்களான தகிக்கும் சூரியனை ஆராய்கிறார். இன்னும் டால்ஸ்டாயை வாசிக்காததால் அவர்குறித்து தெரியவில்லை.

இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் எனக்கு தோன்றுவது, இலக்கிய வாசகன் சொற்களில் இருந்து காட்சிகளை கனவுகளை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் நாவலாசிரியர் காட்சிகள் இல்லாது எப்படி சொல்லோவியம் தீட்ட முடியும் ? அதன் பொருட்டு தான் பயணங்கள் மேற்கொள்கிறார்களா ? ஒருவேளை இந்த கேள்விகள் எல்லாம் பிழையாக கூட இருக்கலாம். என் புரிதலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. இது பதிலளிக்க தகுதியானது தான் என்றால் விடை சொல்லவும் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

இலக்கியத்திற்கு நிபந்தனைகள், விதிமுறைகள், வகுக்கப்பட்ட வழிகள் ஏதுமில்லை. வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்துகொண்டிருந்த இலக்கியமேதைகள் உண்டு. வாழ்நாள் முழுக்க ஒரே ஊரிலேயே வாழ்ந்த மேதைகளும் உண்டு. அந்த படைப்பாளியின் இயல்பு, அவர் அடைந்த வாழ்க்கையனுபவங்கள் சார்ந்தது அது.

இப்படிச் சொல்லலாம். எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் இருந்து அவனுள் செல்லவேண்டிய அனுபவ சாரம் தேவை. அந்த அனுபவங்களுக்கு அவன் அளிக்கும் எதிர்வினைதான் ஒருவகையில் இலக்கியப்படைப்பு. அனுபவம் சிறு துளியாகக்கூட இருக்கலாம். ஆனால் அது அவனை சீண்டுகிறது, அமைதியிழக்கச் செய்கிறது, மேலும் மேலும் என சிந்தனை விரியச் செய்கிறது, கண்டடைதல்களை அளிக்கிறது.

அந்த அனுபவத்தளம் மேலைநாட்டுப் படைப்பாளிகளுக்கு மிகுதி. அதிகம் பயணம்செய்யாதவர் தஸ்தயேவ்ஸ்கி. இன்னொரு பெயர் ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஆனால் தஸ்தயேவ்ஸ்கி சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வதைமுகாமில் வாழ்ந்திருக்கிறார். சிங்கர் போலந்தில் பிறந்து முதல் உலகப்போரில் புலம்பெயர்ந்து அலைக்கழிந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்து ஒரு வாழ்க்கையை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தல்ஸ்தோய் உட்பட பல இலக்கியமேதைகள் போர்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் மாபெரும் வதைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

ஐரோப்பியப் படைப்பாளிகள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பயணம் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. குறிப்பாக அவர்கள் இளமையில் ஓர் ஐரோப்பியப் பயணம் மேற்கொள்கிறார்கள். பலசமயம் தன்னந்தனி ‘முதுகுப்பையர்’களாக. ஐரோப்பா அவர்களின் பண்பாட்டின் நாற்றங்கால். அவர்களின் வரலாறு நிகழ்ந்த மண். அவர்களின் மூதாதையரின் நினைவுகள் அமைந்த நிலம். அது அவர்களை வாழ்நாளெல்லாம் தொடர்கிறது.

இன்னும் ஆச்சரியமாக ஒன்றை கவனித்தேன். பெரும்பாலானவர்களுக்கு பாரீஸ் ஒரு கவற்சியாக இருந்திருக்கிறது. பலர் பாரீஸில் வாழ்ந்திருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் கூட. பழைய பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்கூட கொஞ்சநாள் பாரீஸில் வாழ்ந்திருக்கிறார்கள். பாரீஸ் அவர்களின் நாகரீகத்தின் தளிர்முனை. அதுவும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

இந்திய, தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் பெரும்பாலும் நடுத்தர, அடித்தள மக்கள். நமக்கு நம் லௌகீக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவே கடும் போராட்டம் தேவையாகிறது. ஆகவே வாழ்க்கை பற்றிய ஓர் அச்சம் உள்ளது. படிப்பு, வேலை, ‘செட்டில்’ ஆவது என்றே நம்முடைய வாழ்க்கைப்போக்கு உள்ளது. நம் பிழைப்புக்கல்விக்கு வெளியே கொஞ்சம் இலக்கியம் படிக்கவே போராடவேண்டியிருக்கிறது.

நமக்கு ஆழமான அனுபவங்கள் மிக அரிது. எளிமையான ஓரிரு அனுபவங்களுடன் இளமை முடிந்துவிடுகிறது பிறகு அந்த எளிமையான அனுபவங்களைக் கொண்டே நாம் மொத்த வாழ்க்கையையும் மதிப்பிடுகிறோம். அதற்கேற்ப நம் இலக்கியமும் பலவீனமாக உள்ளது. ஆழ்ந்த வினாக்கள் இல்லை, ஒட்டுமொத்தப்பார்வை இல்லை.

ஆழ்ந்த அனுபவங்கள் இல்லாத எழுத்தாளர்கள்தான் மேலோட்டமான ஆக்கங்களை எழுதுகிறார்கள். அவர்கள் இருவகை. ஒன்று எளிமையான அன்றாடச் சிக்கல்களை அப்படியே எழுதி வைப்பவர்கள். பெரும்பாலும் ஆண்பெண் உறவுகள். சில்லறை சமூகப்பிரச்சினைகள். இன்னொரு சாரார், தங்கள் அனுபவ வறுமையை உணர்ந்துகொண்டு வேண்டுமென்றே செயற்கையாக அதிதீவிர , மிகக்கொடூர, மிகைப்பாலுணர்வுகொண்ட எழுத்துக்களை எழுதுகிறார்கள். இன்று பாலியல் தளங்களைப் பார்த்து பயின்றவற்றை இலக்கியமாக எழுதும்போக்கே உள்ளது.

ஒரு மேலைநாட்டு இளைஞருக்கு அவர்களின் கல்விமுறையே அடிப்படையான ஐரோப்பிய வரலாறு, ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பியப் பண்பாடு சார்ந்து ஒரு பயிற்சியை அளித்துவிடுகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். இசையிலும் கலையிலும் ஓர் ஆரம்பப்பயிற்சி அங்கே இயல்பாக அமைகிறது. எட்டாம் வகுப்பு படித்த மாணவன் புரமித்தியூஸ் என்றால் யார் என்றும் ராஃபேலின் ஓவியத்தின் இயல்பு என்ன என்றும் தெரிந்து வைத்திருப்பான். மேலதிகமாக அறிந்துகொள்ள அவன் பயணம் செய்கிறான்.

இந்தியாவில் எங்கும் அத்தகைய பயிற்சி இல்லை. நம் கல்வி பிழைப்புக் கல்வி. நம் குடும்பங்களில் பண்பாட்டுக் கல்வி என்பதே இல்லை என்பதுடன் அது தேவையில்லை, அது பிழைப்புக் கல்வியைக் கெடுக்கும் என்னும் எண்ணமும் உள்ளது. ஆகவே நமக்கு நாம் வாழும் நிலத்தின் பண்பாடு, வரலாறு, நம் கலைமரபு பற்றி அடிப்படை அறிவுகூட கிடையாது. ‘உயர்கல்வி’ என இங்கே சொல்லப்படும் கல்வியை அடைந்தவர்கள்கூட அவ்வகையில் தற்குறிகளே.

அதற்குத்தான் பயணம் தேவைப்படுகிறது. ஓரு மேலைநாட்டு எழுத்தாளன் ஐரோப்பாவில் பயணம் செய்வதுபோலத்தான் நாம் இந்தியப்பெருநிலத்தில் பயணம் செய்வது. நம் வரலாற்றின் நாற்றங்கால். நம் பண்பாட்டின் குறியீட்டு வெளி. நம் நினைவுகளின் நிலம். அதை கற்றறியலாம். ஆனால் நேரில் அனுபவித்து அறிவது எழுத்தாளனுக்கு ஆழமான அகப்புரிதலை அளிக்கிறது. பாரதி, தாகூர், தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, பஷீர், சிவராம காரந்த் அனைவரும் பயணம் வழியாகவே அதை அறிந்தனர்.

இன்று ஓவியக்கல்லூரிகளில், கலைகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் எல்லாம் அவர்களின் கல்வித்திட்டத்தின் பகுதியாகவே இந்தியப்பயணம் உள்ளது. வேளாண்மைக் கல்வியின் பகுதியாகவே இந்தியப்பயணம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இலக்கியவாதிகளுக்குத்தான் பயணமும் அதன் ஆழ்ந்த புரிதலும் மிக உதவியானவை, ஆனால் அவர்களில் பலர் பயணம் செய்வதே இல்லை.

பயணம் என்பது பலவகையான அனுபவங்களுக்கு நம்மை திறந்து வைப்பதுதான். அத்துடன் நேரடியாக அறிந்துகொள்ளுதலும்கூட. வரலாற்றையும் பண்பாட்டையும் நூல்களில் பயில்வதை விட பல மடங்கு ஆழமானது பயணம் செய்து அறிவது. ஏனென்றால் எழுத்தாளனுக்கு தேவை செய்திகள், தகவல்கள் அல்ல. படிமங்கள். அவை நேரடி அனுபவங்களாக, கண்கூடான காட்சிகளாகவே கிடைக்கும். கிருஷ்ணா நதி மகாபலேஸ்வரில் தோன்றுகிறது என்பது செய்தி. அது ஊறிப்பெருகும் மலையுச்சியில் அமைந்த மாபெரும் மலர்வெளியை நேரில் பார்ப்பது ஆழ்ந்த அனுபவம்.

என்னென்ன வேடிக்கைகள் என எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தமிழ் எழுத்தாளர் மேடையில் பேசினார். ‘தமிழகத்திற்கு வெளியே கல்லில் செதுக்கிய சிற்பங்களே இல்லை. வடக்கே பெரிய கோயில்கள் இல்லை’ நான் அவரிடம் அரைநாள் பயணத்தில் பேலூர் ஹலபீடு செல்லலாம் என்றேன். அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள்தான் உலகிலேயே விருந்தோம்பல் கொண்டவர்கள் என மேடையில் பேசுகிறார்கள். இந்த வகையான குறுகல்கள் எழுத்தாளனின் எழுத்தையும் சூம்பிப்போக செய்யும்.

இந்தியாவை பார்ப்பது இந்திய எழுத்தாளனுக்கு ஒரு இன்றியமையாத தேவை என நினைக்கிறேன். அனுபவக்குறைபாடுகளை ஈடுகட்ட, படிமத்தொகையை உருவாக்கிக்கொள்ள, பண்பாட்டை சொந்த அனுபவமாகவே உணர்ந்துகொள்ள அது வழி வகுக்கிறது. முடிந்தால் ஓர் ஐரோப்பியப் பயணமும் தேவை என்றே சொல்வேன். இன்று ஒரு தோள்பையுடன் கிளம்பிச்சென்றால் மிஞ்சிப்போனால் இரண்டுலட்சம் ரூபாயில் ஐரோப்பாவை பார்த்துவிட முடியும். அது அளிக்கும் அகத்திறப்பு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஒரு கொடை.

ஜெ

பயணம் இரு கேள்விகள்

பெண்களின் பயணம்,கடிதம்

பயணம் – பெண்கள்- கடிதங்கள்

கிளம்புதல்,பெண்கள்

பெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 10:35

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி 2022 ஜனவரி இதழ் வெளியாகியிருக்கிறது. இவ்வாண்டின் இன்னொரு சிறுகதையை இதில் எழுதியிருக்கிறேன். சடம். சடலம் என்னும் வார்த்தை அதிலிருந்து வந்தது. சடம் என்றால் அசைவற்றது. அசைவென அதில் திகழ்வதுதான் உயிர், உள்ளம், தன்னுணர்வு என பலபெயர் பெற்று இங்கே சூழ்ந்திருப்பது

ஓலைச்சுவடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 10:33

ரூமியின் வைரங்கள்

ரூமியின் வைரங்கள் வாங்க

வணக்கம் ஜெ,

தாங்கள் நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

ருபாயியத் எனும் நான்கடிப்பாடல்களும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூமியின் கவிதைகளும் ‘ரூமியின் வைரங்கள்’ எனும் பெயரில் கஸல் மறுபதிப்பாகியுள்ளது. இத்தொகுப்பில், போகிறபோக்கில் ரமீஸ் பிலாலி இப்படி ஒருவரியை மொழிப்பெயர்த்துள்ளார்.

‘அரை மூச்சின் அளவே இவ்வாழ்வில்
காதலை தவிர வேறு எதையும் விதைக்காதே’

இந்த வரியை படித்துவிட்டு வேறு எதையும் அதற்கு மேல் நினைத்து பார்க்க முடிவதில்லை. சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தேன். இந்த வரியின் எதிர் பிம்பத்தை கிழக்கு இலங்கை கவிஞர் பாத்திமா மின்ஹா அவருடைய நாங்கூழ் தொகுப்பின் கவிதை ஒன்றோடு பொருத்தி பார்க்க முடிகிறது.

‘நேசமல்லாக்கடலில்
வலைஞனின் கொடுங்கனவு
துடிதுடித்து மாயும் மீன்’

உலகம் முற்றும் அழிந்துவிடும்,  இறுதியில் இறைவன், தான் மட்டுமே இருக்கும் தனித்த நிலை இஸ்லாமிய நம்பிக்கையில் இருக்கிறது. முற்றுப்பெறாத அன்பின் வடிவம். கருணையின் சுனை. இரக்கத்தின் பேரூற்று. அது வழியாகவே மெய்யன்பர்கள் இறைநேசத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். வைரம் இங்கே ‘இறைநேசத்தில்  மெல்ல மெல்ல இறுகிப்போதலை’ குறிக்கிறது. குன்றாத உறுதியும் அழியாப்பற்றும் சுட்டுகிறது.

‘மெளனமே இறைவனின் மொழி
மற்றதெல்லாம் தவறான மொழிப்பெயர்ப்புகளே’

சரியான சூழல் அமைந்தால், ஒரு மரத்துண்டு கல்லாக மாறிவிடும்.  சில சமயங்களில் மரம் புதைந்து கரியாகி, அந்தக்கரி அழுத்தம், வெப்பம் காரணமாக பல லட்சம் ஆண்டுகள் கழித்து வைரமாகவும் மாறும். மண்ணுக்குள் ஆழமாய் புதைந்த நிலக்கரி, தவத்தின் விளைவாய் வைரமாகிவிட்ட பல பரிணாமங்களையும். குணாதிசயங்களை ஒவ்வொரு கவிதையும் பிரதிபலிக்கின்றன. வைரத்தின் மெளனம், ஒளி, பொறுமை, வலி, தேடல் என ஒரு கெலடோஸ்கோப்பின் வழி உடைந்த வளையல்துண்டுகளின் காட்சிகளாக விரிகின்றன.

‘உன் உள்ளத்தில் ஒளி இருந்தால்
வீடடையும் வழி அறிவாய்’

‘ஒவ்வொரு வீட்டிற்கும் சாளரம் ஆவாய் நீ’

சாளரத்தை பற்றி பேசிவிட்டு, ஓரிடத்தில் இதயத்திலிருந்து மற்றொரு இதயத்திற்கான தெய்வீக பரிபாஷை இது, இதற்கு நடுவில் கதவுகள் எதற்கு சுவரில்லாத இதயத்தில் என்று மனதின் ஆழ்திறப்புகளை நோக்கி ,

‘என்னிடம் வா
உயிரின் ஆழங்களுக்கு அழைத்து
செல்கிறேன்’

என கொக்கிப்போட்டு இழுக்கிறது.

பக்தாத் நகரவீதியில் பல வண்ணமயமான கடைகள் இருக்கின்றன. சர்பத்கள், இனிப்பு பண்டங்கள், பழக்கூடைகள் என சந்தைக்குள் நுழைந்து விதவிதமான கடைகளை கடந்து செல்கிறார்கள் முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி.  ஒரு கடையின் மீது மட்டும் அவர்களுக்கு தீரா ஈர்ப்பு. எல்லா இனிப்பு பண்டங்களிலும் பானங்களிலும் ஈக்கள் மொய்த்தாலும் அந்த கடையின் சர்பத் போத்தல்களில் மட்டும் ஈக்கள் இல்லை. கடை உரிமையாளரிடம் ஏன் உங்கள் பானத்தை மட்டும் ஈக்கள் மொய்ப்பதில்லை என கேட்கிறார்கள்

‘தீயை ஈக்கள் மொய்ப்பதில்லை’ என்கிறார்கள் உரிமையாளர் ஹஜ்ரத் ஹம்மாத். பின்னாளில் முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி பெருந்தகைக்கு ஞானகுருவாகவும் அவர் திகழ்ந்தார்கள்.

மெய்மையான உயிரின் ஆழங்களுக்கு அழைத்து செல்ல இப்படித்தான் சம்பவங்கள் தோற்றுவாயாக அமைந்துவிடும்.

‘நன்மையும் தீமைகளுக்கும்
அப்பால்
உள்ளது ஒரு வெளி’

ஹஜ்ரத் ராபியா பசரியா ஒரு கையில் வாளிதண்ணீரை எடுத்துக்கொண்டு பசரா நகரில் திரிகிறார்கள். பொதுமக்கள் அவர்களிடம் கேட்டார்கள்.

‘கையில் வாளியோடு எங்கே செல்கிறீர்கள்? ‘

‘நரகத்தை அணைக்கத்தான். மனிதர்கள் நரகத்திற்கு பயந்து இறைவனை வணங்குகிறார்கள்’ என கூறினார்கள். ‘வேறு எதற்காக மனிதர்கள் இறைவனை வணங்கவேண்டும் ?

‘வணக்கம், உண்மையான நேசத்தின் விளைவால் அல்லவா இருக்க வேண்டும்’ என்றார்கள்.

‘இறைக்காதலுக்கு வெளியே ஒவ்வொரு காதலும் துன்பமே’

‘வாழ்வின் சாரத்தை எடுத்துக்கொண்டேன்
மற்றவர்களுக்கு எலும்புத்துண்டுகளை எறிந்துவிட்டேன்’

எனும் கவிதை, சூஃபியாக்களின் மைய பேசு பொருளை குறிப்பிடுகிறது.  இதையே அஜ்மீர் க்வாஜா மொய்னுதீன் ஷிஸ்தி இப்படி குறிப்பிடுகிறார்கள்.

‘எல்லோரிடத்திலும் அன்பு
யாரிடத்திலும் பகை இல்லை ‘

வெகுநாட்கள் கழித்து, தனது ஞானகுரு டில்லி நிஜாமுத்தீன் மகபூபே இலாஹியை aமீர் குஸ்ரோ சந்திக்கிறார்கள். நிஜாமுத்தீன் அமர்ந்திருக்கும் குதிரையின் குளம்பில் நேசத்தோடு மாறி மாறி முத்தமிடுகிறார் அமீர் குஸ்ரோ.

‘எழுந்திரு ! உன் காதல் முழுமையடைந்துவிட்டது
உன்னை பொருந்திக்கொண்டேன்’ என்கிறார்கள் நிஜாமுத்தீன் மகபூபே இலாஹி.

நன்றி
முகம்மது ரியாஸ்

ரமீஸ் பிலாலி இணையப்பக்கம்

காடு, நிலம், தத்துவம்

இசையும் மொழி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 10:32

விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-7

விஷ்ணுபுரம் விழா -1 விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் பேச்சை கேட்டேன். மிகச் சிறந்த பேச்சு. அத்தனை அடர்த்தி. ஒருசொல் மிகை இல்லை. அத்தனை தகவல்கள். மூன்றுதரம் கேட்டேன். ஒரு நல்ல சிறுகதைபோல சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தது. ஒரு பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான நல்ல உதாரணம்.

புதுவருட வாழ்த்துகள்.

அன்புடன்

அ. முத்துலிங்கம்

ப்ரியம்வதா

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்.நன்றி யோகேஸ்வரன். ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல மூன்று நாட்களும் அவருடன் உடனிருந்து வழி அனுப்பி வைத்தீர்கள். இறுதியாக நீங்கள் அவர்கள் இருவரிடமும் ஆசி வாங்கும் போது உங்களை பிள்ளை போல “நல்லா இருடா யோகா” என்று சொன்னார்கள்.

இந்நேரம் அண்ணாச்சி டீ குடிக்க ஆசப்படுவார் என்று கூப்பிட்டு போகும் போது கூட பரவாயில்லை… இந்நேரம் அவருக்கு ஒரு சிகிரெட் தேவைப்படும் என்று நீங்கள் அவரை அழைத்துச் சென்றது தான் ஆச்சரியமாக இருந்தது…

அவர் சொன்ன தேவைகளையும் சொல்லாதவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தீர்கள். நிஜமாகவே ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போலத்தான் இருந்தது…

ரம்யா

நிகிதா

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் ஆவணப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. உண்மையில் இதற்கு முன்னால் வந்த ஆவணப்படங்களை என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன். அவர்களால் பார்க்கமுடியவில்லை. ஏன் என்று உங்கள் குறிப்பில் இருந்து புரிந்துகொண்டேன். இது ஏற்கனவே விக்ரமாதித்யன் அவர்களை கவிதை வழியாக அறிந்தவர்களுக்காக எடுக்கப்படுவது. இன்னொருவர் பார்த்தால் என்ன ஏது என்றே தெரியாது.

காரில் செல்லும்போது விக்ரமாதித்யன் ததும்பிக்கொண்டே இருக்கிறார். என்ன சொல்கிறார் என்பதுகூட முக்கியமல்ல. அந்த உணர்ச்சிகள், உடலசைவுகள். அதே போல பகவதி அம்மா அவருக்கே உரிய நையாண்டியுடன் பேசிக்கொண்டே இருந்தவர் விக்ரமாதித்யன் உள்ளே இருப்பதை ஒரு சிறு அசைவு வழியாக வெளிப்படுத்துகிறார். இந்த வகையான நுட்பங்கள் ஆவணப்படத்தில்தான் வரமுடியும். சினிமாவில் அவை நடிப்பாகவே இருக்கும். இயல்பாக வராது.

ஆனந்த்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

செல்வக்குமார்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழா அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. மொத்த தமிழகத்தில் இருந்தும் இலக்கியம் வாசிக்கும் இத்தனைபெர் வந்து ஓர் இடத்தில் தங்கி சாப்பிட்டு இலக்கியம்பேசி கொண்டாடிவிட்டுச் செல்வதென்பது மிக மிக அரிதான நிகழ்வு. தமிழில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்கின்றதா என்பதே சந்தேகம்தான்.

நான் விழாவில் திளைத்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அரங்குகளில் விவாதங்களைக் கேட்பது, வெளியே புத்தகங்களைத் துழாவுவது, புதிய நண்பர்களைக் கண்டடைவது எல்லாமே பெரிய கொண்டாட்டங்களாக இருந்தன. விழா முடிந்தபோது வந்த ஆறுதல் இனி கோவை புத்தகக் கண்காட்சி வரும், அதில் கொஞ்சம் திளைக்கலாம் என்பது மட்டும்தான்.

டைனமிக் நடராஜன்

விழாவில் நான் கண்ட குறை பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் அவையில் தொடர்ச்சியாக இல்லை என்பதுதான். அவர்களால் இன்னொருவர் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அவர்கள் வந்து அமர்ந்ததுமே எழுந்து சென்றார்கள். அல்லது முழுநேரமும் வெளியே நின்றிருந்தனர். ஓர் இளம் எழுத்தாளர் பேசும்போது அடுத்த தலைமுறை எழுத்தாளர் அவையில் இருந்து கவனிப்பதென்பது மிகமிக முக்கியமானது. இரண்டுபேருக்குமே அது உதவியானது. அவ்வாறுதான் தலைமுறைத் தொடர்ச்சி உருவாகிறது,

போகன், லக்ஷ்மி மணிவண்ணன், அமிர்தம் சூரியா, சு.வேணுகோபால் ஆகிய நால்வரும்தான் மெய்யான ஆர்வத்துடன் அத்தனை அரங்குகளிலும் இருந்து பங்களிப்பாற்றியவர்கள். அவர்களுக்கு எழுத்துமேல் இருக்கும் பேஷன் ஆச்சரியமானது. அவர்களைப்போன்றவர்களால்தான் இலக்கியம் வாழ்கிறது.

செந்தில்வேல்

விஷ்ணுபுரம் விழா-2

விஷ்ணுபுரம் விழா -1

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 10:31

அருஞ்சொல் – கடிதம்

அருஞ்சொல் – இணையதளம்

வணக்கம்!

சமஸ்ஸின் அருஞ்சொல் தொடக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

அவரின் அருஞ்சொல்லில் மற்ற பகுதிகளை தவிர்த்து கலை இலக்கிய பகுதிகளுக்காக வரவிருக்கும் வாசகர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு அவருக்கு பெரும் சவால் ஒன்று காத்திருக்கிறது.

ஒரு இலக்கிய வாசகனாகநான் காலச்சுவடின் சந்தாதாரராக இருந்திருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறேன். எல்லா பகுதிகளுக்கும் காலச்சுவடு வந்து சேர்ந்திருக்கிறது. இதழின் கட்டமைப்பு, தாள்தரம், இவைகளில் காலச்சுவடு சிறப்பாகவே இருந்தது. பிறகு உயிர்மையும் வாங்கினேன். ஆனால் மெல்ல மெல்ல என்னையறியாமலேயே நான் இந்த இதழ்களிலிருந்து விலகிகொண்டிருந்தேன். ஒவ்வொரு மாதமும் காலச்சுவடுக்காக காத்து கொண்டிருப்பேன். வந்தவுடன் அன்றிரவே வாசித்துவிடுவது, நான் பணியிலிருந்து வீடு திரும்ப தினமும் இரவு பதினொன்றாக ஆகும். அந்த இரவிலும் எனக்கு எதாவது தபால் வந்திருக்கிறதா என்று காண்பேன். அப்படிதான் பிள்ளைகெடுத்தான் விளையை நள்ளிரவில் வாசித்தேன்.

காலச்சுவடு, உயிர்மை இரண்டிலிருந்தும் நான் என்னையறியாமலே விலகியதற்கு காரணம் அதன் போதாமையும், உள்ளடக்கமும். அதன் அப்பட்டமான அரசியலும் காரணம். ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேல் ஒன்று உள்ளது அது நீங்கள். உங்கள் இணையதளம். உங்கள் இணையதளம் என்னை ஆட்கொண்ட வேகமும் அதனில் நான் மூழ்கிவிட்டதும் ஒரு முக்கியமான காரணம். உங்கள் தளத்தில் இல்லாத என ஒன்றை நான் எந்த இதழிலாவது கண்டடைய முடியுமா? அதி தீவிர இலக்கிய தேடல் கொண்ட ஒரு வாசகனின் பாதை முற்றுப்பெறும் இடம் உங்கள் தளமாகத்தான் இருக்கிறது.

அருஞ்சொல் என்றில்லை ஏற்கனவே உள்ள வல்லினம், திண்ணை என எந்த இலக்கிய இதழ்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் இருக்கும் ஒரே பெரிய சவால் உங்கள் இணையதளம் தான். உங்கள் இணையதளத்தில் இல்லாத ஒன்றை அதற்கிணையான தீவிரத்தை எந்த இதழ் அடையுமோ அதுவே நிலைக்கும்.

அதற்கு உங்கள் தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆராய்ந்து அறிந்திருக்க வேண்டும். அது இயலாத காரியம் அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். தமிழின், இந்தியாவின் பிறமொழிகளின், உலக இலக்கியங்களின் இலக்கிய கர்த்தாக்களின் சிறந்த படைப்புகளின் திறன் ஆய்வு கட்டுரைகளை உங்கள் தளத்திலன்றி வேறு எந்த இலக்கிய இதழ்களிலும் பின்னோக்கி காணகிடைக்காது. நேற்று உங்கள் தளத்தில் லஷ்மி மணிவண்ணனின் கட்டுரையை பின்தொடர்ந்து சென்று, மழைதானா அது? என்ற வரியில் உடையும் முன் காருர் நீலகண்டபிள்ளையின் ”கொச்சுக்ரஹஸ்த”யில் நீங்கள் கண்டைந்த அந்த தெய்வதரிசனத்தை எனக்கும் கடத்தி இரவு இரண்டு மணிவரை உறங்காமல் என் நாலு வயது மகளை இறுக அணைத்தபடியே புரண்டுகொண்டிருந்தேன் .

(நேற்று வார இறுதிநாள் விடுமுறைக்கு முந்தின நாள் சம்பளமும் வந்திருந்தது. குடும்பத்தோடு “மால்” சென்று திரும்பி உறங்கும் முன்னர் உங்கள் தளத்தை துழாவி காரூர் நீலகண்ட பிள்ளையின் அந்த சின்ன குலமகள்”என்னுள் ஏற்கனவே இருக்கும் அந்த பெருந்துயரத்தை கீறிவிட்டாள். பிறகு …இளம்பருவத்து தோழி, Life is beautiful ,ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், என்று மனம் சிதறிக்கொண்டிருந்தது).

அன்புடன்

ரகுபதி

கத்தார் .

***

அன்புள்ள ரகுபதி,

சமஸின் அருஞ்சொல் சிறப்பாகவே வெளிவந்துகொண்டிருக்கிறது. அது இன்றைய தமிழ்ச்சூழலில் உள்ள பல சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, இன்றைய வாசகர்கள் ஓரிரு பத்திகளுக்கு மேல் வாசிப்பதில்லை. பொறுமையில்லை என்பதல்ல. மொழிப்பழக்கம் குறைவு. ஆங்கில வழியில் கற்றவர்கள். ஆகவே தமிழ் அவர்களுக்கு இயல்பானதாக இல்லை. எழுத்துருக்களை கூட்டிக்கூட்டி வாசிக்க வேண்டியிருக்கிறது. சரி, ஆங்கிலமாவது தெரியுமா என்றால் நடைமுறைத் தேவைக்குரிய ஓர் ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருக்கும். ஆகவே சுருக்கமான வரிகளாலான முகநூல் வம்புகளிலேயே பெரும்பாலானவர்களுக்கு நாட்டம் உள்ளது.

சமஸ் உத்தேசிப்பது அனைவரும் எழுதும் நடுநிலை இதழ். அத்தகைய இதழை எல்லா ‘கடுநிலை’ அரசியல்தரப்புகளும் எதிர்ப்பார்கள். தங்கள் எதிர்த்தரப்பு என முத்திரை குத்தி அவதூறு செய்து வசைபாடுவார்கள். உண்மையான நடுநிலையாளர்களே அவற்றுக்கு வாசகர்களாக வருவார்கள். ஆனால் இன்று அத்தகையவர்கள் அருகி வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்துத்துவ வெறியர்கள் அல்லது இந்துமதத்தையே வெறுக்கும் எதிர்க்காழ்ப்பாளர்கள்.

இச்சவால்களை அருஞ்சொல் வெல்லவேண்டும். அது ஓர் இலக்கிய இதழ் அல்ல. அது செய்திஇதழ்தான்.செய்திகளை வெளியிடுபவை நாளிதழ்கள், இது செய்திகளை ஆராயும் இதழ். இன்று ஓர் இலக்கிய இதழை தரமாக நடத்தவேண்டும் என்றால் சொந்தக்காசில், வாசகனுக்கு ஒரு பைசா செலவில்லாமல் நடத்தவேண்டும்– என் தளம் போல, அல்லது வேறு இணைய இதழ்களைப்போல. ஏனென்றால் இங்கே இலக்கியவாசகர் குறைவு. அவர்கள் பணம் செலவு செய்யவும் மாட்டார்கள். அவர்களை நம்பி அச்சிதழ் நடத்த முடியாது. அருஞ்சொல் இதழில் உள்ள இலக்கியத்தை ஓரு பொது இதழின் இலக்கியப் பக்கம் என எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு பிரதிநிதித்துவப் பக்கம். இலக்கியத்தின் ஒரு துளி ‘சாம்பிள்’.

என்னுடைய இணைய தளத்திற்கும் பிறவற்றுக்கும் பெரிய வேறுபாடுண்டு. இது ஓர் எழுத்தாளனுடைய தளம். எழுத்தாளனின் தீவிரம் இதில் உள்ளது. நீங்கள் அவனுடன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே ஒரு தொடர்ச்சி உங்களுக்கு அமைகிறது. பிற தளங்கள் பொதுச்சூழலை முன்வைக்கின்றன. அவற்றில் பலவகைக் குரல்கள் உள்ளன. அங்கே அந்தத் தொடர்ச்சி இருக்காது. ஆனால் அவை முக்கியமானவை. அவை இங்கே என்ன நிகழ்கின்றது என்று காட்டுபவை.

ஜெ

***

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

மின்பரப்பியமும் மாற்றும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 10:30

January 4, 2022

எழுத்துரு பற்றி, மீண்டும்…

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? மொழியை பேணிக்கொள்ள… புலம்பெயர் உழைப்பு மொழிக்கு அப்பால்…

அன்பிற்குரிய ஜெ,

தமிழை ஆங்கில எழுத்துகளை உபயோகித்து எழுதலாம் எனும் தங்களின் பரிந்துரை எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமாகும்? தமிழ் என்ற சொல்லை Tamil என எழுதுவதே தவறான கற்பிதம் தானே. எனில், பள்ளி – பல்லி, புளி – புலி இவற்றை வேறுபடுத்துவது எவ்வாறு?

இந்தோனேசிய புத்தமடத்தின் நூலகம் பற்றிய தங்களின் பதிவு ஒன்றில், அவர்கள் (இந்தோனேசியர்) சில லத்தீனிய உருக்களையும் (ஆங்கில எழுத்துகளோடு) ஆங்கில எழுத்துகள் நிறைவு செய்யாத ஓசைகளுக்கு உபயோகப்படுத்துவதாக இருந்தது. இது தமிழுக்கும் வழி் வகுக்குமா?

நாஞ்சில் நாடன் அவர்களின் பழைய ஒரு உரையில், தற்போது உபயோகப்படுத்தும் தமிழ் சொற்களே (இலக்கியத்திலும், குறிப்பாக கவிதைகளில்) குறைவுதான் என பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் வரும்காலத்தில் ஆங்கில எழுத்து கொண்டு தமிழ் செய்வது பல சொற்களை அழிக்காதா?

மன்னிக்கவும், இதே கேள்வி முன்னமே தங்களிடம் வந்திருக்கலாம். தங்களின் பழைய பதிவுகளையும் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கறேன். இதே போன்ற கேள்விக்கு பழைய பதிவு ஏதும் கிடைக்காத்தால் இந்த கேள்வி.

தங்களின் குறளினிது உரையில், விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே பசும்புல் தலைகாண்பது அரிது. குறளில் விசும்பின் துளி என்பதற்கான தரிசனம் எனக்கு தாமதமாகவே கிடைத்தது.

தங்களின் பழைய பதிவுகளை இப்போதுதான் வாசித்து கொண்டிருக்கிறேன். கேள்விகளில் பிந்தியிருப்பதற்கு மன்னிக்கவும்.

பாலாஜி.

***

அன்புள்ள பாலாஜி

நான் இவ்விஷயத்தை தொடர்ந்து பேசுவது ஓர் நடைமுறைச்சூழல் கண்ணுக்குப் படுவதனால்தான். இங்கே இரண்டு எழுத்துவடிவங்களை [லிபி] பயில்வது இன்றைய மாணவர்களுக்குக் கடினமாக உள்ளது. ஆங்கிலமே பயிற்றுமொழியாக, தொழில்வணிக மொழியாக இருக்கையில் தமிழ் இரண்டாம் மொழியாக ஆகிவிடுகிறது. ஆகவே ஆங்கிலத்தில் புழங்கியபடி கூடுதலாக தமிழ் எழுத்துக்களை பயில்வதும் நினைவில் நிறுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு கடினமானதாக மாறிவிட்டிருக்கிறது.

இங்கே தமிழ் பேச்சுமொழியாக உள்ளது, ஆனால் வாசிக்கப்படுவது குறைகிறது. இச்சூழலை எதிர்கொள்ளும் வழி என்பது அனைவரும் கட்டாயமாக கற்றுக்கொள்ளும், பழக்கம் கொண்டிருக்கும் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவதே என்பது என் கருத்து. உடனடியாகச் செய்யவேண்டியதல்ல அது. காலப்போக்கில் மெல்லமெல்ல கொண்டுவரவேண்டிய ஒரு மாற்றம். நிபுணர்களால் செய்யப்படவேண்டிய ஒன்று.

இங்கே தமிழை இரண்டாமொழியாகப் பயின்றாலும் அதில் சரளமாக வாசிப்பவர்கள் அரிதினும் அரிதாகி வருகிறார்கள் என்பது கண்கூடு. எனவே தமிழிலக்கியம் போன்றவை பெரும் பின்னடைவை எதிர்காலத்தில் சந்திக்கலாம். ஆங்கிலத்தை எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. இப்போதே தமிழை ஆங்கில எழுத்துருக்களில்தான் தட்டச்சு செய்கிறார்கள். கணிப்பொறி அதை தமிழ் எழுத்துக்களாக ஆக்குகிறது. அதையே பொதுநெறியாகக் கொள்ளலாம்.

ஆங்கில எழுத்துருக்களில் தமிழை எழுதினால் இரண்டு லிபிகள் கற்பதனால் உருவாகும் பிரச்சினையை கடக்கமுடியும். மாணவர்கள் ஒரே லிபியை படித்தால்போதும்,  தமிழிலும் சரளமாக வாசிக்கமுடியுமென்னும் நிலை அமையும். ஏற்கனவே தமிழில் பேசிக்கொண்டிருப்பதனால் அவர்கள் நிறைய வாசிப்பார்கள். இன்றுள்ள தடை வாசிப்புக்கு இருக்காது. எதிர்காலத்தில் நிகழவிருப்பது இதுதான். இன்றே அந்நிலை நோக்கித்தான் செல்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன் நான் இதை எழுதியபோது கொந்தளித்தனர். இன்று நடைமுறைச்சூழல் அங்கே நாம் மெல்ல மெல்லச் செல்வதையே காட்டுகிறது.

தமிழில் எழுத்துருக்களை மாற்றுவதொன்றும் அரிய அடாத செயல் அல்ல. பிராமி, சோழர்வட்டெழுத்து என தமிழ் வெவ்வேறு எழுத்துருக்களில் காலந்தோறும் மாற்றி மாற்றி எழுதப்பட்டபடியேதான் இருக்கிறது. இன்றுள்ள எழுத்துருக்கள் எழுநூறு ஆண்டுகள் வரலாறு கொண்டவை. இருநூறாண்டுகளுக்கு ஒருமுறை வடிவங்களில் மிகப்பெரிய மாற்றம் இதிலேயே நடந்துகொண்டும் இருக்கிறது. இதில் செண்டிமெண்ட் பார்ப்பவர்கள் எந்த செண்டிமெண்டையும் எதிர்த்த பெரியார் வழிவந்தவர்கள் என்பதுதான் விந்தை.

இது ஒன்றும் புதிய எண்ணம் அல்ல. இதை சுதந்திரம் கிடைத்தபோதே இந்த முறையை கல்வித்துறை அறிஞர்கள் முன்வைத்தனர். இந்திய மொழிகள் அனைத்தையும் ஆங்கில லிபியில் எழுதவேண்டும் என வாதிட்ட முன்னோடி அறிஞர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள். இந்திய அரசு அதற்காக பல கமிட்டிகளை அமைத்துள்ளது. பல அறிஞர்கள் பலவகையான பரிந்துரைகளை அளித்துள்ளனர். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது சம்பந்தமாகவே நான்கு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதை எப்படிச்செய்வது என்பதை கல்வித்துறையாளர், மொழியறிஞர்கள் கூடி முடிவுசெய்யவேண்டும். நாம் மண்டையைக் குழப்பிக்கொள்வதில் பொருள் இல்லை. இன்று தேவையாக இருப்பது மொழியரசியல், மிகையுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு உண்மைச்சூழலைப் பார்க்கும் சமநிலையை நம் சமூகத்தில் உருவாக்குவது மட்டுமே.

எந்த மொழியையும் எழுத்துருவில் முழுமையாக எழுதிவிட முடியாது. எந்த மொழியிலும் எல்லா ஒலிக்கும் எழுத்து இருக்காது. எழுதியவற்றில் இருந்து ஒரு பழக்கம் வழியாக நாம்தான் ஒலியை அடைகிறோம். காகம் என்பதிலுள்ள இரண்டு ’க’ களும் வெவ்வேறு உச்சரிப்பு கொண்டவை. ஆனால் அதை அவ்வெழுத்துக்கள் காட்டவில்லை. நாமே பயின்று பழகியிருக்கிறோம். To என்பது Go என்பதும் வேறுவேறு உச்சரிப்பு என்பது மொழிப்பழக்கமே. ஆகவே எந்த லிபியிலும் எல்லா உச்சரிப்பையும் பழகிக்கொள்ளமுடியும். எழுதமுடியாத ஏதும் இல்லை. இன்றே எல்லாவற்றையும் ஆங்கில எழுத்துக்கள் வழியாகவே டைப் செய்கிறோம். இதோ இக்கட்டுரையே அப்படித்தான் எழுதப்படுகிறது.

நான் சொல்வது செண்டிமெண்ட்களை கடப்பதைப் பற்றித்தான். மொழி செயல்படும் விதத்தைப் பற்றிய அடிப்படைத் தெளிவை அடையுங்கள் என்றே சொல்கிறேன். மொழியில் எழுத்துக்கள் என்பவை வெறும் குறிகள், அடையாளங்கள் மட்டுமே. அவை அல்ல மொழி. மொழி என்பது சொற்களும் அச்சொற்களுக்குப் பொருள் அளிக்கும் பண்பாட்டுப் பின்புலமும்தான். மொழியை உறையவைக்க முடியாது. நவீனத்தேவைகளுக்காக மாறிக்கொள்ளாத மொழிகள் அழியும்.

மொழி வாழ்வது சொற்களிலோ எழுத்துக்களிலோ அல்ல. பயன்பாட்டின் வழியாகவே. ஒரு மொழி நிகழ்வது அதன் அன்றாடப்பயன்பாடு மற்றும் அதிலுள்ள அறிவுத்தொகுப்பின் சமகாலத்தன்மை வழியாகவே. தமிழின் எழுத்துருக்கள் மாறாமல் சொற்கள் மாறாமல் இருந்து அதைப்பேசுபவர்கள் குறைந்தால், அதன் இலக்கியங்கள் படிக்கப்படாமலானால் அது அழிவதை தடுக்கமுடியாது. அதை எப்படி பேணிக்கொள்வது என்பதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எந்த மொழியிலும் புதிய சொற்கள் உருவாகிக்கொண்டும் பழைய சொற்கள் வழக்கொழிந்து கொண்டும்தான் இருக்கும். உயிருள்ள உடலில் புது செல்கள் தோன்றி பழைய செல்கள் மடிவதுபோல. எந்த மொழியும் அத்தனை சொற்களையும் பயன்படுத்த முடியாது. எந்த மொழியிலும் அன்றாடப்புழக்கம் என்பது மூவாயிரம் சொற்களுக்குள்ளேயே அமையும் என்பது மொழியியலாளர்களின் அறிதல். ஒரு மொழி விரிந்த சூழலுக்குள் பலகோடிப் பேரால் பேசப்பட்டால் பயன்படுத்தப்படும் சொற்களின் எண்ணிக்கை குறையும். மிகக்குறைந்த சொற்களில், மிக எளிய இலக்கணத்துடன் இருப்பதனால்தான் ஆங்கிலம் உலகமொழியாக புழங்குகிறது. பல லட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவை துறைசார் சிறுவட்டங்களிலேயே புழங்குகின்றன. உலகளாவிய ஆங்கிலம் இரண்டாயிரத்துக்கும் குறைவான சொற்களால் பேசப்படுகிறது. ஆகவே சொற்கள் அழிவது பற்றி, எல்லா சொற்களும் புழங்காமை பற்றி பேசுவதெல்லாம் மொழிகளின் இயக்கம் பற்றிய புரிதல் இல்லாமையால்தான்.

ஜெ

எழுத்துரு ஓர் எதிர்வினை -2 எழுத்துரு ஓர் எதிர்வினை மொழி மதம் எழுத்துரு- கடிதம் தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும் எழுத்துரு விவாதம் ஏன்? எழுத்துரு கடிதங்கள் எழுத்துருக்கள்-எதிர்வினைகள் தமிழ் எழுத்துக்கள், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 10:35

இலக்கியம் பாடமாக- கடிதங்கள்

இலக்கியம் பாடமாக ஆகலாமா?

அன்புள்ள ஜெயமோகன்,

கொஞ்சம் பொதுமைப்படுத்திவிட்டீர்களோ என்று தோன்றியது.

எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமானது “ஒரு நாள் கழிந்தது” சிறுகதை மூலம், 1980-இலோ 81-இலோ (1985 வரை அவர் பள்ளி துணைப்பாடங்களில் வரவில்லை என்று நீங்கள் எழுதி இருப்பது தகவல் பிழை.) பொறியியல் கல்லூரிக்குப் போவதற்கு முன் தமிழ்ப் பாடத்தில் “ஆண்மை” சிறுகதை துணைப்பாடமாக இருந்தது. பொன்னகரத்தையும் துணைப்பாடமாகத்தான் படித்தேன் என்று நினைக்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (நிச்சயம் பதின்ம வயதுகளில் படித்தேன்.) சேதுப்பிள்ளையும், அண்ணாதுரையும் திரு.வி.க.வும் main பாடங்களில் இருந்தன.

ஒரு நாள் கழிந்ததைப் படித்துவிட்டு புதுமைப்பித்தனை உள்ளூர் நூலகங்களில் (செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி) தேடி இருக்கிறேன், கிடைத்ததில்லை. சேலம் மாவட்ட நூலகத்தில் கிடைத்த தொகுப்பை அங்கேயே உட்கார்ந்து படித்திருக்கிறேன். (மகாமசானம், செல்லம்மாள், சுப்பையா பிள்ளையின் காதல்கள், பால்வண்ணம் பிள்ளை, காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாபவிமோசனம்…) பிறகு எப்படியோ கிடைத்ததை நானும் என் அம்மாவும் உட்கார்ந்து பேசி இருக்கிறோம். (என் அம்மாவுக்கு காலனும் கிழவியும் ரொம்பப் பிடிக்கும்.)

(பற்றாக்குறையாக) சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு புதுமைப்பித்தன் பேர் தெரிந்தால் யோசிக்காமல் வாங்கவும் ஒரு நாள் கழிந்தது சிறுகதைதான் முக்கியக் காரணம். அதனால் துணைப்பாடங்களில் வந்தால் அலுத்துவிடும் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணங்களுக்கு விதிவிலக்குகளாவது உள்ளன…

அன்புடன்

ஆர்வி

***

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலம்

பள்ளிகளில் இலக்கியங்களைப் பாடமாக வைப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்வது உண்மை. அதனால் இலக்கியம் பிரபலம் ஆவதில்லை. அங்கே பாடமாக இருக்கும் படைப்பாளிகள் பிரபலமாக அனைவராலும் வாசிக்கப்படுவதில்லை.

கதையை பாடமாகப் பார்க்கும்போது ஒரு வெறுப்பும் உதாசீனமும் வருகிறது. அதை மிகமிகத் தவறாகவே நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆகவே நாம் தவறான வாசிப்புக்கும் பழகிவிடுகிறோம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். இயல்பாகவே கலையிலக்கிய ஆர்வமும் கற்பனை வளமும் கொண்ட ஒரு வாசகன் ஒரு கதையை வாசித்ததுமே அதிலுள்ள கலையம்சத்தால் ஈர்க்கப்படுகிறான். உடனே அவன் இலக்கியவாசகன் ஆகிவிடுவதில்லை. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒரு தொடக்கம் நிகழ்ந்துவிடுகிறது. கலையார்வமோ கற்பனையோ இல்லாத வாசகர்களுக்கு அப்படி ஒரு தொடக்கம் நிகழ்வதில்லை. அவர்கள்தான் மிகப்பெரும்பான்மையினர்.

சிறுபான்மையினர்தான் இலக்கியத்துக்குள் வரமுடியும். கற்பனை இல்லாதவர்கள் இலக்கியத்தை வேறேதோ காரணத்துக்காக வாசிக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காக. சிலசமயம் கல்வித்துறை ஆய்வுகளுக்காக. அவர்கள் வாழ்க்கைமுழுக்க வாசித்தாலும் இலக்கியத்தை உணரமுடியாது. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அரசியலையோ இலக்கணத்தையோ கொள்கைகளையோ இலக்கியத்தில் பார்ப்பார்கள். புதியதாக இலக்கியத்தில் இருந்துஒன்றுமே அவர்களுக்குக் கிடைக்காது. அல்லது தங்கள் வளர்ப்பில் இருந்து கிடைத்த சாதாரணமான சாதிமதப் பார்வையை இலக்கியத்தில் போட்டுக்கொண்டிருப்பார்கள். இலக்கியம் அவர்களுக்கு உரியது அல்ல. தன்னை தனிமனிதனாக நிறுத்தி கற்பனையில் உலகத்தை விரிவாக்கம் செய்பவர்கள் வாசிக்கவேண்டியது.

அத்தகைய மாணவர்களுக்கு இலக்கியம் பள்ளி நாட்களில் அறிமுகமாவது சிறப்புதான். நான் புதுமைப்பித்தனின் ஒரே ஒரு கதை வழியாகவே இலக்கியத்தை அறிந்தேன். ஒருநாள் கழிந்தது என்ற கதை எனக்குப் பாடமாக இருந்தது. இன்றைக்கு நான் வாசிப்பதெல்லாம் அதில் இருந்துதான். அந்தக்கதை எனக்கு பிடிபடவில்லை. ஆனால் மிகப்பெரிய ஈர்ப்பு உருவாகிவிட்டது

ஜெயராமன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 10:33

கேளாச்சங்கீதம், கடிதங்கள் 12

கேளாச்சங்கீதம்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெமோ,

‘கேளாச்சங்கீதம்’ கதையில் வரும் நிலை பல பேருக்கு வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும். கடைசியில் வரும் அந்த வரி, இந்த  கதையை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது (“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?”).

நான் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் போது ஏன் எப்போது என்றே தெரியாமல் கிட்டத்தட்ட கணேசனின் நிலைக்கு ஆளானேன். வீட்டினுள்ளே சுற்றி கொண்டிறாமல் நண்பர்களோடு வெளியே செல்லும் பழக்கமும், வாசிக்கும் பழக்கமும், எதையும் பகுத்து ஆராயும் தன்மையும் உடையவனாக இருந்த நான் எவ்வாறு அந்த நிலைக்கு ஆளானேன் என்றே தெரியவில்லை. நோட்டு புத்தங்கங்கள் பூராவும் அவள் பெயரை எழுதி வைத்திருப்பேன். பைத்தியம் போல் எந்நேரமும் அவளையே நினைத்து கொண்டிருப்பேன். இனக்கவர்ச்சியில் ஆரம்பித்து, காமத்தை கடந்த காதலாகி, கடைசில்  ஒருதலைக்காதலாகவே அது முடிந்தது. கடைசிவரை என் காதலை அப்பெண்ணிடம் வெளிப்படுத்தவில்லை (தாழ்வு மனப்பான்மை).

கணேசனை போல அது முடிவிலா அக பயணமாக அமைந்திருக்க கூடும். நல்ல வேலையாக நண்பர்கள் துணை கொண்டு அதை கடந்தேன். அதே நண்பர்களே எனது பள்ளி கால தோழியின் பால் எனக்கு இருந்த சிறிதளவு ஈர்ப்பை இனம் கண்டு கொண்டு, எனது காதலை மடை மாற்றினார்கள். கடைசியில் இதிலிருந்து விலக தோழியிடம் பேச, அது காதலாகி, கல்யாணத்தில் முடிந்தது (தோழிக்கு கல்லூரி நிகழ்வு தெரியும்).

இப்போது பழையவை நினைத்து பார்ப்பதில்லை. நினைத்தாலும் சிரித்து கொள்வேன். ஆனால் உங்கள் கதையை படித்த பிறகு, நாமும் அதை அனுபவித்திருக்கிறோம் என்ற சந்தோஷம் வந்தது.  தன்னை “துறந்து” மற்றதை பூஜிப்பதை பக்தி என்பர். கணேசனின் நிலையும் அதுவே. இலக்கியங்கள் காதலை தெய்வ நிலையில் வைப்பது அதன் பொருட்டே.

நீங்கள் கணேசனின் நிலையில் இருந்திருக்கீர்களா? அப்படி இல்லை என்றால் எப்படி அதை உங்களால் உண்மை நிலைக்கு நிகரான அனுபவமாக கொடுக்க முடிகிறது?

அன்புடன்

ஆர்

***

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை உயிர்மையில் படித்தபோது மிக அபூர்வமான ஒரு மனநிலையை அடக்கமாக எழுதிய கதை என்னும் எண்ணம் வந்தது. பலபேருக்கு அந்தக்கதை புரியாது என்றும் தோன்றியது. அவர்கள் கைவிஷம் என்பதை நேரடிப்பொருளாகவே எடுத்துக்கொள்வார்கள் [அற்புதமான கவர்ச்சியை அளிக்கும் ஓர் அழகனுபவத்தை அளிப்பது எப்படி விஷம் ஆகியது என்பதுதான் கதையே]

ஆனால் உங்கள் தளத்தில் வந்துகொண்டிருக்கும் கடிதங்களைப் பார்க்கையில் எங்கும் இந்தவகையான அதீத அனுபவங்கள் உள்ளன என்னும் என்ணம் ஏற்பட்டது. பல குடும்பங்களில் நிகழ்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் இந்த அனுபவம் வழியாகச் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள். ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம் இது. அயனெஸ்கோவின் காண்டாமிருகம் போல நம் நடுவே நாமறியாமல் இது புழங்கிக்கொண்டிருக்கிறது

எஸ்.ஸ்ரீனிவாஸ்

***

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 10:31

விஷ்ணுபுர விழாவும் ஆண்டு நிறைவும்- இரம்யா

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

பன்னிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா எனக்கு முதல் முறை. ”முதல் முறை” எப்பொழுதுமே நினைவுப் பெட்டகத்துக்கு அணுக்கமானது. இந்த ஒரு வருட காலமாக எத்தனை முதல்முறை அனுபவங்களை நான் சேமித்திருக்கிறேன். இந்த வருடத்தின் துவக்கத்தில் நிகழ்ந்த மதாரின் கவிதை வெளியீட்டு விழாவில் தான் உங்களை முதல் முறை சந்தித்தேன். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே கடிதங்கள் வாயிலாக எண்ணங்களின் வழியாக உங்களுடன் உரையாடியிருக்கிறேன் என்றாலும் முதல் முறை சந்திப்பு என்பது பொக்கிஷமானது. அங்கிருந்து தான் எனக்கான என் நண்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தார்கள்.

பள்ளியிலோ கல்லூரியிலோ உள்ளொடுங்கி ஓரிரண்டு நண்பர்களோடு சுருங்கி தனிமையில் சிந்தனைகளோடு தான் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறேன். பின்னும் குறிக்கோள்கள் இலட்சியம் எனும் பாதையில் எந்த உணர்வுகளுக்கும், புனைவுலகங்களுக்கும் நான் இடம் கொடுத்ததில்லை. உலகியலில் இருபத்தியெட்டு வருடங்களாக உழன்று பலதரப்பட்ட தத்தளிப்புகளோடு நின்றிருக்கும் போது கிடைத்த பொக்கிஷம் விஷ்ணுபுரமும், நீங்களும். அங்கிருந்து இப்போது இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. சென்ற வருடம் வாசிப்பின் அறிதலின் ஆண்டாக அமைந்தது என்றால் இந்த ஆண்டு செயலின் ஆண்டாக அமைந்தது.

ஆவணப்படத் தயாரிப்பாளர் மயன் விக்கி அண்ணாச்சி குடும்பத்துடன்

இறுதி விடைபெறுதலின் போது கிருஷ்ணன் சார் உங்களிடம் “ரம்யாவை சந்தித்தது ஆறு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது என்பதை நம்ப முடியுதா சார்?” என்று கேட்டு சிரித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “சார். புதிய வாசகர் சந்திப்பு நிகழ்ந்து ஆறு மாதம் தான் ஆகியிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை” என்றேன். ”இரண்டு நாட்கள் சந்திப்பில் நாம் வாழ்க்கூடிய வாழ்க்கை நுணுக்கமானது. விரித்து விரித்து பொருள் கொள்ளக்கூடியது. சாதாரணமாக வாழ்பவர்களுக்கு இந்த அடர்த்தியான காலம் கிடைப்பதில்லை” என்றார் அவர்.

ஜிட்டு மரணத்தைப் பற்றிக் கூறும் போது “மரணம் என்பதன் இறுதியை ஒவ்வொரு நிகழ்வின்/ நாளின்/ உணர்ச்சியின்/ வெற்றி/ தோல்வியின்/ காதலின்/ காமத்தின்/ உணர்வுகளின்/பற்றுகளின் இறுதியிலேயே அழித்து அதற்கு மரணத்தைப் பரிசளிக்க முடியுமானால் காலமற்ற பரிமாணத்தில் வாழலாம்.” அதன் வழி காலம் நீட்டிக்கப்படுகிறது என்ற கருத்தை நான் அடைந்தேன். ஆனால் அப்படி நீட்டிக் கொள்வதற்கு ஏதுவான வாழ்க்கையை நாம் வாழ் வேண்டும். வாசிப்பில் அது சாத்தியமாகிறது. இயற்கையில் கரைகையில் அது சாத்தியமாகிறது. ஆனால் அதைவிடவும் செயல்களின் வழி மேலும் சாத்தியமாகிறது. சந்திப்புகளும், புதிய மனிதர்களுமே அதை மேலும் சாத்தியப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்த ஒரு வருடத்தில் புதியவாசகர் சந்திப்பு, மதுரை குக்கூ நிகழ்வு, குரு பூர்ணிமா நிகழ்வு, கோவை கவிதை முகாம், ஊரடங்கு கால ஜூம் கலை நிகழ்வுகள் இவை யாவற்றிற்கும் முத்தாய்ப்பாக விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்ந்தமைந்திருக்கிறது. இவற்றின் வாயிலாக இந்த ஒரு வருட காலம் என்பது மிக நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து விட்டாற் போன்ற பிரமையைத் தருகிறது.

விஷ்ணுபுரம் விழா என்று பேசப்பட ஆரம்பித்ததிலிருந்து அது தொடர்பான ஆளுமைகளிலேயே முழு கவனமும் எனக்கு இருந்தது. முதலில் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என வாசித்து அவரைப் புரிய முற்பட்டேன். அதைத் தொகுத்துக் கொள்ள கவிஞர் லஷ்மி மணிவண்ணன், மதார், ஆனந்த் குமார் ஆகியோருடனான உரையாடல் உதவியது. பின்னும் குழுவாக கவிதைகள் வாசித்தல், அதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என ஜெயராம், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் ஆகியோருடன் பயணத்தைத் தொடர்ந்தேன். தொகுத்துக் கொள்ள கட்டுரை எழுதியபின் ஒரு நிறைவு ஏற்பட்டது. அதன் பின் விருந்தினர்களாக அழைக்கப்பட்ட எட்டு ஆளுமைகளையும் ஒவ்வொருவராக அவர்களின் படைப்புகள் வழியாக அணுக்கமாக்கிக் கொண்டேன்.

அவர்களில் இருவரைப் பற்றி மட்டுமே கட்டுரை எழுத முடிந்தது. அதன் பின் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய தயாரிப்புகளை ஆரம்பித்தேன். மனதிற்கு அணுக்கமாகியிருந்த வீரபத்ருடு கவிதைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள அவரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும், ராஜூ அவர்கள் எழுதிய குறிப்புகளும், ஜெ பகிர்ந்த கட்டுரைகளும் பெரிதும் உதவின. இஸ்மாயில் எழுதிய கட்டுரையை நான் மொழி பெயர்த்தது எனக்கு அறிதலாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து https://vishnupuramguests2021.wordpress.com/ என்ற தளத்தை உருவாக்கி விழாவில் கலந்து கொள்ளும் ஆளுமைகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துக் கொண்டேன்.

விக்கி அண்ணாச்சி கட்டுரைகளை தொகுத்தபோது சாம்ராஜ் அவர்களின் கட்டுரை விடுபட்டதை அவர் என்னிடம் கூறியபோது ஏனோ மகிழ்வாக இருந்தது. இத்துணை கவனமாக கவனித்து தளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து மகிழ்ந்தேன். விழா அன்று குறிப்பாக அதிகப்படியான மக்கள் அதை பார்வையிட்டிருந்தார்கள். சாம்ராஜ் அவர்களின் கட்டுரையை நீங்கள் உங்கள் சிறப்புரையில் குறிப்பிட்டு “எத்திசைச் செல்லினும்” என்பதற்கு விளக்கமளித்தீர்கள். இன்று சாம்ராஜ் அவர்களின் கட்டுரையை மீண்டும் படித்து அவற்றை பதிவேற்றினேன். இனி எப்போதும் உதவப்போகும் தளம் அது.

முதல் நாள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட நாளாக அமைந்தது. இடைப்பட்ட குறுகிய இடைவேளை நேரத்திலும் ஆளுமைகளை சந்திப்பது உரையாடுவது என கழிந்தது. கோகுல்பிரசாத், கோபாலகிருஷ்ணன், காளிபிரசாத், சுஷில்குமார், செந்தில் ஜெகன்நாதன், ஜா.தீபா, பா.திருச்செந்தாழை, சோ.தர்மன் என எட்டு ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் படைப்புலகம் குறித்த உரையாடலாகவும் அமர்வுகள் அமைந்தது. சோ.தர்மன் ஐயா மற்றும் கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தவிர பிற அனைத்து ஆளுமைகளும் சமகால புதிய எழுத்தாளுமைகள் அல்லது துறைசார் எழுத்தாளர்கள் எனலாம்.

எனவே இவர்களைப் பற்றிய அறிமுகத்தோடு சமகாலத்தில் கவனிக்கத்தக்க பிற எழுத்தாளுமைகளையும் அறிமுகம் செய்து கொண்டேன். மயிலன் ஜி சின்னப்பன், கார்த்திக் பால சுப்ரமணியன் என மேலும் சிலரின் எழுத்துக்கள் இந்தத் தேடலில் அறிமுகமானது. நண்பர்களுடன் கடந்த மாதம் முழுவதும் நிகழ்கால எழுத்தாளுமைகளைப் பற்றி அவர்களின் புனைவுலகம் பற்றி கலந்துரையாடுவது விவாதிப்பது என அறிதலான பயணமாக அமைந்தது. செந்தில் ஜெகன் நாதன் மற்றும் சுஷில்குமாரிடமெல்லாம் பேசக் கிடைத்த தருணங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அறிதலைப் பெருக்கிக் கொண்டேன் எனலாம்.

வழக்கறிஞர் செந்தில்,பாரதி இளங்கோ

தமிழினி மின்னிதழ் அது தேர்வு செய்யும் கதைகளுக்காக புகழ் பெற்றது. ஒரு படைப்பை கோகுல்பிரசாத் தேர்வு செய்யும் விதத்தைப் பற்றிச் சொன்ன போது அதிலிருக்கும் நேர்மை, உண்மை, கூர்மை மற்றும் மேக்ரோ/மைக்ரோ வாழ்வுச் சித்தரிப்புகளை கவனத்தில் கொள்வதாகச் சொன்னது அறிதலாக இருந்தது.

ஆளுமையும் எழுத்தாளருமான ஜா.தீபா அவர்களுக்கு நெறியாளராக என்னை சேர்த்ததிலிருந்து அவருடைய புனைவுலகம் வழியாக, வேலைகள் வழியாக அவர்களுக்குள் புக முற்பட்டேன். கதைகளை வாசித்து முடித்துவிட்டு அதைப் பற்றி தொகுத்துக் கொள்ள எழுதிப் பார்த்தேன். அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களுடன் உரையாடினேன். அது மேலும் அவர்களின் உலகத்தை அணுக்கமாக்கிக் கொள்ள உதவியது. ஆவணப்படங்களுக்காக அவர் கடந்து வந்த வலி மிகுந்த பாதைகள் அளப்பரியது. விசாகபட்டினத்தில் கங்காவரம் ஆவணப்படப் பிடிப்பின் போது கைதாகி காவல் நிலையம் சென்றது, பொதிகை மலை உச்சியை முதலில் அடைந்த பெண் என சவால் நிறைந்த ஆவணப்படத் தயரிப்புப் பணிகள் அவருடையது. இது தவிரவும் சினிமா உலகிற்குள் செல்லும் பெண்களைச் சுற்றி அவர்களின் குடும்பங்கள் இடும் கட்டுப்பாடுகள் என இன்னல்களையும் தாண்டி ஒரு வெற்றிகரமான பெண்மணியாகத் திகழ்வது ஊக்கமாக இருந்தது.

ஊடகம் சார்ந்த பல முக்கிய நிறுவனங்களுக்கு (எண்டமோல், விகடன்) கிரியேடிவ் கண்சல்டண்ட் ஆக அவர் இருப்பது குறிப்பிடத்ததக்கது. துறை சார்ந்த ஒரு எழுத்தாளராகவும் புனைவு எழுத்தாளராகவும் இருந்து கொண்டு இயக்குனராகும் கனவோடு பயணிக்கும் அவர்களின் ஆளுமையும் கனவும் செயலூக்கமும் மிகப் பிடித்துப் போனது. அந்த அமர்வில் “Identity writing” சார்ந்து சுழன்ற கேள்விகளும் அதற்கு தீபாவின் நிலைப்பாடும் என சென்ற விவாதம் எனக்குள் பல கேள்விகளை உருவாக்கியது. சுஷில்குமார், செந்தில் ஜெகன்நாதன் ஆகியோரின் அரங்கிலும் கூட இந்த ஒரு கருத்துடன் கேள்விகள் வந்த வண்ணமாய் அமைந்தன.

இந்த எட்டு அமர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அடுத்த நாள் காலை ஜெ -வுடனான தேனீர் நடைபயணம் (சின்ன வாக்) உதவியது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் உலகம் சார்ந்து தாங்கள் காணக்கூடிய விடயங்கள், உணர்வுகள் சார்ந்து கட்டற்று எழுதக்கூடியதைக் காணமுடிகிறது. இங்கிருந்து ஒரு நான்கு வருடத்தில் அவர்கள் என்ன எழுதப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்றார். அப்படியானால் புதிய எழுத்தாளுமைகளுக்கு இந்த அரங்கு மேலும் தொடர்ந்து பயணிக்க உந்துகோலாக மட்டுமே முதன்மையாக எடுத்துக் கொள்ளக் கூடியது என்பதை உணர்ந்தேன்.

மூன்று நாட்களும் காலை நடைபயணத்தில் நகைப்பும் பேச்சுகளும், அனுபவப் பகிர்தலைத் தாண்டி ஜெ வாசிப்பை நோக்கி எழுத்தை நோக்கி பல நல்ல பார்வைகளைத் திறந்து வைத்தார். கிருஷ்ணன் சார், சீனு, விஷால் ராஜா மற்றும் அஜிதனின் கேள்விகள் மற்றும் நுணுக்கமான பார்வைகள் இந்த உரையாடல்களை மேலும் அறிதலை நோக்கிச் செலுத்தியது.

கட்டற்று எழுதுவது, தானாக வருவதை எழுதுவது அதைப்பற்றிய விமர்சனத்தை வைக்கும் போது ”கலை” என்ற ஒற்றைச் சொல்லில் அவற்றையெல்லாம் நிராகரிப்பது பற்றிய செயலை நண்பர் ஒருவர் எழுப்பினார். ஜெ அந்தக் கேள்விக்கு ”சிலம்பாட்டத்தில் ஆசானாக இருப்பவரும் கட்டற்று எந்த சிந்தனையுமில்லாமல் சிலம்படிகளை எதிர் கொள்வார். அது கலை. ஆனால் சிலம்பாட்டம் என்ற கலையைப் பற்றி ஏதுமறியாமல் அதை எதிர் கொள்ளும் ஒரு நபரும் கலை என்று சொன்னால் அது தகாது. முதலில் கட்டற்று தொடங்கினாலும் எழுதுபவனுக்கு தன்னுடைய கலையைப் பற்றிய முழுமையான அறிமுகம் காலப்போக்கில் நிகழ வேண்டும். அந்தக் கலையின் கோட்பாடுகளைப் பயில வேண்டும். அது சார்ந்த விரிவான அறிமுகம் இருக்க வேண்டும். அது கலை என்ற பிரக்ஞை இருக்க வேண்டும். தமிழில் எழுதக் கூடிய ஒரு படைப்பாளிக்கு தமிழ் இலக்கியத்தில் தான் நிற்கக் கூடிய இடத்தைப் பற்றிய அறிதலும் புரிதலும் இருக்க வேண்டும். தன் கலை கடந்து வந்த பாதையை அவன் சரிவர புரிந்திருக்க வேண்டும். அதன் பின் தன் எழுத்தை மதிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தன்னை நோக்கி வரும் விமர்சனத்தை அவன் கூர்மையாக கவனிக்க வேண்டும். உள்ளீடற்ற விமர்சனத்தை புறந்தள்ளலாம். ஆனால் ஒரு எழுத்தைக் கவனித்து அது நோக்கி வைக்கப்படும் அறிவார்ந்த விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். ”எழுத்தாளனோ வாசகனோ தன் மொழி சார்ந்த முக்கியப் படைப்புகளையும், முக்கியமான இந்தியப் படைப்புகளையும், உலக இலக்கியங்களையும், ஆளுமைகளையும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவன் நின்று கொண்டிருக்கும் இடம் தெரியும்” என்றார்.

தொடர்ந்து விஷால் “stylist writing” பற்றிய கேள்வியை முன் வைத்தார். அது பற்றிய விளக்கமும், எப்படி stylist writing ஒரு inferior writing ஆக இருக்கிறது என்பதையும் ஜெ விளக்கினார். ”ஒரு படைப்பை வாசிக்கும் போது resistance இல்லாமல் இருப்பது ஒரு inferior writing. ஒரு நல்ல படைப்பு முதலில் தடையைக் கொடுக்க வேண்டும். ஆனால் செயற்கையாக அந்த resistance உருவாக்கப்பட்டால் அதுவும் நல்ல படைப்பல்ல” என்றார். “மரண வாக்குமூலம் கொடுப்பவன் stylist ஆக இருக்க முடியாது” என்ற வரியோடும், உலக அளவிலும், தமிழிலும் அப்படியான stylist writers பற்றிய அறிதலோடும் அந்த உரையாடலை நிறைத்துக் கொண்டேன்.

ஏற்கனவே புதிய வாசகர் சந்திப்பில் உலக இலக்கியங்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் ஒரு முறை வேறுவகையில் பிரித்து அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டது போல அமைந்தது ஜெ -வின் காலை உரையாடல்கள்.

”ஒரு புத்தகம் உதவாது என்பதை எப்போது முடிவு செய்து படிப்பதை நிறுத்துவீர்கள்?” என்று கிருஷ்ணன் சார் ஜெ -விடம் கேட்டபோது இத்தனை வாசிப்புக்குப் பின்னும் ஒரு மாணவனாக நின்று ஆசிரியரிடம் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் என்று நினைத்தேன். ஒன்றில் ஐந்து பங்கு பக்கத்திலும் எதுவும் தெளிவாக எடுத்தியம்பப் படவில்லை எனில் அதை நிறுத்துவது நல்லது என்று ஜெ கூறினார். மிகச் சிறிய விடயமாக இருந்தாலும் வாசகர்களுக்கு பயனுள்ளது.

கோட்பாடுகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றிச் சொல்லும்போது கட்டற்று காட்டாற்று வெள்ளம்போல பேசிய சோ.தர்மன் ஐயாவின் எழுத்தை உதாரணம் காட்டினார். தான் ஒரு எழுத்தாளன். வேறு எந்த இஸத்துக்குள்ளும் என்னை அடைக்காதே என்பது ஒரு கலைஞனால் தான் சொல்ல முடியும் என்றார். ஒட்டுமொத்தமாக இந்த தேனீர் நடை அறிதலை நோக்கிய நடையாக அமைந்தது எனலாம்.

இரண்டாம் நாளின் சிறப்பு விருந்தினர்களான இயக்குனர் வசந்த் சாய், கவிஞர் சின்ன வீரபத்ருடு, ஜெய்ராம் ரமேஷ், கவிஞர் விக்ரமாதித்யன் ஆகியோரின் அரங்குகள் இனிமையாக அமைந்தது. சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் அணுக்கமாகியது போலவே அவரின் உணர்வுப்பூர்வமான பேச்சும் மனதிற்கு அணுக்கமாகியது. அரங்குக்குப் பின்னான உரையாடளில் அவர் ஜெ -வை வியந்து கொண்டே இருந்தார். தன்னுடைய வேலையால் (இ.ஆ.ப) இழந்தது ஒன்று உண்டானால் ஜெயமோகன் போல இப்படி ஒரு முன்னெடுப்பை செய்ய முடியாமல் இருந்தது தான். இத்தனை சுய நலமில்லாமல் இலக்கியத்திற்காக தலை கொடுக்க முடியாமல் இருப்பதே தான் இழந்தது என்றார். சுற்றி நின்று அவரிடம் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்த எங்களை ஒருமுறை வெறித்து நோக்கிவிட்டு “எங்கள் இளைஞர்களெல்லாம் சினிமாக்களுக்கு பின் தான் செல்கிறார்கள். உங்களைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது” என்று பெருமூச்செறிந்தார். தெலுங்கு இலக்கிய உலகைப் பற்றியும் குறிப்பாக கவிதையின் போக்கு பற்றியும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தமிழ்-தெலுங்கு மொழி இலக்கியத்திற்கான சில முன்னெடுப்புகளை ஜெ -வின் உதவியோடும், ஆர்வமான உங்களுடனும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மாலையில் ஒளிபரப்பப்பட்ட விக்கி அண்ணாச்சியின் ஆவணப்படம் நெகிழ்ச்சியாக இருந்தது. திரளாக அமர்ந்து விக்கி அண்ணாச்சியுடனும், பகவதி அம்மாவுடனும் அதைப் பார்த்தது அந்த நெகிழ்வை மேலும் கூட்டியது எனலாம். எனக்கு அருகிலிருந்த சீனு கண்கள் வேர்த்து அழுது கொண்டிருந்தார். “There is no miracle. Poetry itself a miracle” என்ற வரி ஒலித்துக் கொண்டே இருந்தது. கவிஞர் விக்ரமாதித்யன் எனும் தமிழ்ப்பாணனும் அப்படியான miracle தான். மிக இயல்பாக எந்த செயற்கைத் தோற்றமும் கலந்துவிடாது கவிஞரைக் காணிக்க வேண்டும் என்று ஆனந்த் குமார் முயற்சித்துக் கொண்டிருந்ததை அருகமைந்து பார்த்துக் கொண்டிருந்தவள் என்கிற முறையில் அது அப்படியாக அமைந்து அரங்கு நெகிழ்ந்ததைக் கண்டு கலங்கிவிட்டேன்.

மூன்றாவது நாள் காலையும் மாலையுமென சின்ன நடைகளும் பகல் முழுவதுமாக ஆசானுடன் உரையாடளுமாக தொடர்ந்தது. விக்கிபீடியாவுக்கான மாற்றாக பங்களாபீடியாவைப் போல தமிழில் கொண்டு வரும் விடயம் இறுதியாக எல்லோர் மனதில் எஞ்சியது. அதை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒருவரின் கேள்விக்கு ஜெ, “உதவிக்கு ஆட்கள் இருந்தால் மூன்று வருடம் இல்லையேல் பத்து வருடத்தில் நானே ஒற்றை ஆளாக செய்துவிடுவேன்” என்றார். அந்த ஊக்கம் யாவருக்கும் உந்து கோலாக அமைந்தது. அதை சாத்தியப்படுத்த நாங்களும் உள்ளோம் என்று ஜெ -விடம் சொன்னோம். அடுத்த வருடம் அந்தப் பணியை ஆரம்பித்தால் நித்தமும் அன்றாட வேலைகளில் ஒன்றாக பாவித்து அவற்றை செய்து முடிக்கலாம் என்று தோன்றியது. இந்த மாற்று ஏற்பாடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஏனோ அழிசி ஸ்ரீநி உடன் நினைவிற்கு வந்தார். இந்த முறை தன்னுடைய பதிப்பகத்திலிருந்து விற்பனைக்காக புத்தக ஸ்டால் விழாவில் அமைத்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒட்டுமொத்த அவரின் உழைப்பையும் ஒரு நொடியில் அழித்துவிட்ட விடயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அமேசன் கிண்டிலைப் போல ஒரு க்ளவுடை நாம் ஏன் உருவாக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதைக்கு மாற்று வழிகள் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த முன்னெடுப்பும் மாற்று யோசனைகளும் கூட யாவரும் சேர்ந்து செய்யக் கூடியது தான். இத்தனைக்குப் பிறகும் ஒரு செயல்வீரராக எந்தச் சுணக்கமும் இல்லாமல் பதிப்பாளராக பணியை அவர் தொடர்வது மகிழ்வாக இருந்தது. விக்கிபீடியாவுக்கான மாற்று தளமும், அழிசி ஸ்ரீநி கிண்டிலில் இலவசமாகக் கொணர்ந்து தற்போது அழிக்கப்பட்ட நூல்களுக்கு மாற்றான ஒரு தளமும் என செல்ல வேண்டிய பாதை கண் முன் இருந்தது.

மேலும் இறுதி நாளிலும் நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் கேள்விகளுக்கு ஜெ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மாலை நண்பர்களைப் பிரியும் மெல்லிய சோகம் படர்ந்து வாட்ட ஆரம்பித்துவிட்டது. ஜெ வை வழியனுப்பிவிட்ட பிறகு, விக்கி அண்ணாச்சி, லஷ்மி மணிவண்ணன், பகவதி அம்மாவுடன் அதே பேருந்தில் நானும் வீடு வந்து சேர்ந்தேன். கோவையில் இறங்கியதிலிருந்து செல்லும் வரை வழியனுப்பி வைத்த நண்பர்கள் சூழ நான் இருந்ததும் என் வாழ்வில் முதல் முறை. சுஷில், ஆனந்த் குமார், குமார்ஷண்முகம், ஷாகுல் அண்ணா, சுபா, செந்தில், விஜய சூரியன் அண்ணா என அன்போடு அரவணைத்துக் கொண்டவர்களுக்காக இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்வேன். வந்த பிறகும் இந்த இரண்டு நாட்களும் பிரிவாற்றாமை துரத்திக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறோம்.

உலகாயதத்தில் முழுவதுமாக மூழ்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள் தாம். ஆனால் அப்படியல்லாது மனிதர்கள் மேல் தீரா அன்பு கொண்ட பித்தர்களை என் வாழ்வில் கண்டு கொண்டமைக்கு மகிழ்கிறேன். சீனுவும், செல்வேந்திரனும் பேசும் போது அத்துணை அன்பை உணர முடிகிறது.  நிகிதா, ஜெயராம், அஜி இத்துணை அணுக்கமாகிப் போவார்கள் என்று நினைத்திருக்கவில்லை. யாவரும் அன்றாடங்களைத் தொடர சிரமப்படுவது வலியை மேலும் கூட்டி அணுக்கமாக்குகிறது. சுஷில்குமாரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் (சப்தாவர்ணம்), கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பும் (டிப் டிப் டிப்) வெளியிடும்போது எனக்கே நிகழ்ந்தது போல பேருவகை அடைந்தேன். அத்தகைய எண்ணம் ஏற்படும் அளவு அன்போடும், அதே சமயம் கண்டிப்போடும் இருப்பதும், என் இந்த இலக்கியப் பயணத்தை ஊக்குவிப்பதுமென அவர்கள் இருப்பது நிறைவளிக்கிறது. ஊர் வந்து சேர்ந்து அலுவலகம் செல்லும் முன் காலை ஆனந்த்ஸ்ரீநி மாமாவிடம் பேசியது ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொள்ளவும், மேலும் பயணத்தைத் தொடரவும் உதவியது. இன்னும் உலகாயதத்தில் மூழ்கவியலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் எனலாம். மெதுவாக ஒட்டியும் ஒட்டாமலும் என இங்கே ஒளிந்து கொள்ள முற்படுகிறேன்.

இந்த வருடம் நிறைவடையவிருக்கிறது ஜெ. விஷ்ணுபுர விழாவுடன் இதனை நிறைவு செய்து கொள்கிறேன். வாசிப்பையும், எழுத்தையும், அறிதலையும் தாண்டி மனிதர்களை இந்த ஆண்டில் சேர்த்திருக்கிறேன் எனலாம். தனியனென உணரச் செய்யவியலாமல் எத்துணை இனிய நினைவுகளை இவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். மீட்ட மீட்ட விரிந்து கொண்டே செல்லும் காலம். இந்த 2021 மட்டும் இதுகாறும் நான் வாழ்ந்த ஆண்டுகளிலேயே மிக நீண்ட ஆண்டு எனலாம். இனி வரக்கூடிய காலங்களையும் நான் விரித்து விரித்து நீட்டி வாழ்ந்து கொண்டே இருப்பேன். சுஷில்குமாரின் சிறுகதைகளில் வரும் அப்பா தன் மகனை நோக்கி சொல்லக் கூடிய வரி ஒன்று உண்டு. “மனுசங்க தான் மொக்கா முக்கியம்… பணம் காசு மயிரெல்லாம் தானா வரும். எனக்குப் பொறவு ஒனக்கு நாலு பேரு வேணும்லா டே?” அப்படியான நாலு நல்ல மனிதர்களை என் வாழ்க்கைக்கு சேர்த்துக் கொண்ட ஆண்டாக இது அமைந்தது.

உங்களின் எழுத்துக்களின் வழியாகத்தான் இந்த கால நீட்டிப்பையும் மதுரத்தையும் அடைந்திருக்கிறேன். மேலும் மேலும் செயல்களின் ஆண்டாக அடுத்த வருடத்தை நிறைத்துக் கொள்வேன். இந்த ஆண்டின் அறிதலுக்காகவும், நினைவுகளின் மனிதர்களுக்காகவும், தருணங்களுக்காகவும் நன்றி ஜெ.

பிரேமையுடன்

இரம்யா.

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்

விஷ்ணுபுரம் விழா 2021- கதிர் முருகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.