Jeyamohan's Blog, page 676

November 23, 2022

அறிவியக்கம் என்றால் என்ன?

வணக்கம் ஜெயமோகன்,

உங்கள் வலைதளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் பொழுது “அறிவியக்கம்” என்ற சொல் அடிக்கடி முக்கிய இடங்களில் பேசப்படுகிறது. அதன் பொருள் எனக்கு சரியாக புலப்படவில்லை. நீங்கள் அறிவியக்கம் குறித்து சற்று விரிவாகக் கூற முடியுமா?

நன்றி,

அனீஷ்.

*

அன்புள்ள அனீஷ்

இப்படி ஒரு கேள்வி வருமென நினைத்திருக்கவில்லை, நல்லது.

ஒரு சமூகத்தில் இலக்கியம், தத்துவம், மதக்கொள்கைகள், அறிவியல், நீதி, சமூகவியல் என பல தளங்களில் அறிவார்ந்த ஆய்வுகளும், சிந்தனைகளும் நிகழ்கின்றன. கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை விவாதங்கள் வழியாகவும், நூல்கள் வழியாகவும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அறிவு தொடர்ச்சியாக ஒரு சமூகத்தில் நிகழ்ந்துகொண்டே இருப்பதைத்தான் அறிவியக்கம் என்கிறோம். ஏன் அது இயக்கம் என்றால் அது தொடர்ச்சியாக ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகள் தோறும் பரவுகிறது. சமூகத்தை ஓர் உடல் எனக்கொண்டால் இந்த நுண்ணிய இயக்கத்தை அதன் மூளை எனலாம். நம்முள் மூளை எப்போதுமே சொல்வெளியாக ஓடிக்கொண்டே இருப்பதைப்போல ஒரு சமூகமும் தனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.

நம் மனத்துக்கு அறிந்தும் அறியாததுமான பல அடுக்குகள் இருப்பது போல சமூகத்திற்கும் பல மன அடுக்குகள் உள்ளன. சமூகத்தின் வெளிப்பாடாக நாம் காண்பது அதன் மேல்மனம் அல்லது கான்ஷியஸ். அதற்கு அடியில் சப்கான்ஷியஸ் என்னும் ஆழுள்ளங்கள் உள்ளன. அவை உடனே தெரிவதில்லை. வரலாற்றை திரும்பிப்பார்த்தால் அவை தெரியும்.

இப்போது தமிழ்ச்சூழலில் வெவ்வேறு அறிவுத்தரப்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று விவாதித்துக்கொண்டிருக்கின்றன. அந்த விவாதங்களையே நாம் ஊடகங்களில், சமூக ஊடகங்களில், இலக்கியங்களில் காண்கிறோம். இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறிவியக்கம் என்கிறோம்.

அறிவியக்கத்தை ஒவ்வொருவரும் உணரமுடியும். ஆனால் தெளிவாக அடையாளம் வகுக்க முடியாது. மிகப்பாமரர்கூட அறிவியக்கத்தின் ஓர் இடத்தில்தான் உள்ளனர். அதை விளிம்பு என்று கொள்ளலாம். அறிவியக்கம் அதன் மையத்தில்தான் தெளிவாகக் காணும்படி உள்ளது. ஏதேனும் ஒருவகையில் கருத்துக்களை உருவாக்குபவர்களே அதன் மையம்.

அறிவியக்கத்தின் நியூக்ளியஸ் எனப்படும் மையத்தில் உள்ளவர்கள் தத்துவஞானிகள், வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள். அவர்களே புதியவற்றை கொண்டுவருகிறார்கள். அவற்றின்மேல்தான் மொத்த அறிவியக்கமும் எதிர்வினையாற்றுகிறது. அந்த விவாதம் வழியாகவே சமூகங்கள் சிந்திக்கின்றன. சிந்தனை வழியாகவே அவை முன்னகர்கின்றன.

சிந்தனையாளர்களே நுண்மையத்தில் செயல்படுபவர்கள். அவர்களின் சிந்தனைகள் அரசியல் களத்தில் வேறுசிலரால் கொண்டுவரப்படுகின்றன. அரசியல் களத்தில் அவை உக்கிரமான பிரச்சாரங்கள் வழியாக மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டு கண்கூடான விசையாக ஆகின்றன.

உதாரணமாக, திராவிட இயக்கக் கருத்தியல் இன்று மிக வலுவானது. அதன் ஆளுமைகளாக ஈ.வெ.ரா , சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி ஆகியோர் தெரிகின்றனர். ஆனால் அவர்கள் வெளிப்பாடுகள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகள் பலர் உள்ளனர்.

அவர்கள் பல நுண்ணிய தரப்புகளாகச் செயல்பட்டனர். கே.என்.சிவராஜ பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை போன்ற தமிழாய்வாளர்கள் தமிழின் தனித்தன்மையை நிறுவியவர்கள்.  தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் (தமிழிசை இயக்கம்) சி.வை.தாமோதரம் பிள்ளை, (தமிழ் பதிப்பியக்கம்)  மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், இலக்குவனார் (தனித்தமிழ் இயக்கம்) போன்றவை திராவிட இயக்கத்தின் மூலவடிவங்கள். ஞானியார் சுவாமிகள் போன்றவர்கள் அதன் ஆன்மிக முன்னோடிகள்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும் அந்த நியூக்ளியஸில் செயல்படுபவர்கள். ஆனால் நேரடியாக அல்ல. அவர்கள் சமூகத்தின் ஆழுள்ளத்தை அறிபவர்கள், ஆழுள்ளத்தை கட்டமைப்பவர்கள், அவர்கள் வழியாகவே அந்த ஆழுள்ளம் வெளியாகிறது. அவர்களின் பணி மேலும் நுண்மையத்தில் நிகழ்கிறது. உடனடியாக வெளியே தெரியவதில்லை.

தமிழ்ச்சமூகத்தில் புதுமைப்பித்தனின் செல்வாக்கை நேரடியாகக் காணமுடியாது. புதுமைப்பித்தனை இலக்கிய ஆர்வலர்களே வாசித்திருப்பார்கள். ஆனால் அவர்களே இதழாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் ஆகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் வழியாக புதுமைப்பித்தன் சாமானியர்களையும் பாதிக்கிறார்.

உலகம் முழுக்க இப்படி நுண்மையத்தில் இருந்து மையத்திற்கும் அங்கிருந்து விளிம்புநோக்கியும் சிந்தனை பரவுகிறது. இந்த அறிவுச்செயல்பாடையே அறிவியக்கம் என்கிறோம். இதில்தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். எங்கே எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். எங்கே செயல்படவேண்டும் என்பது உங்கள் தெரிவு

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:35

அறிவியக்கம் என்றால் என்ன?

வணக்கம் ஜெயமோகன்,

உங்கள் வலைதளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் பொழுது “அறிவியக்கம்” என்ற சொல் அடிக்கடி முக்கிய இடங்களில் பேசப்படுகிறது. அதன் பொருள் எனக்கு சரியாக புலப்படவில்லை. நீங்கள் அறிவியக்கம் குறித்து சற்று விரிவாகக் கூற முடியுமா?

நன்றி,

அனீஷ்.

*

அன்புள்ள அனீஷ்

இப்படி ஒரு கேள்வி வருமென நினைத்திருக்கவில்லை, நல்லது.

ஒரு சமூகத்தில் இலக்கியம், தத்துவம், மதக்கொள்கைகள், அறிவியல், நீதி, சமூகவியல் என பல தளங்களில் அறிவார்ந்த ஆய்வுகளும், சிந்தனைகளும் நிகழ்கின்றன. கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை விவாதங்கள் வழியாகவும், நூல்கள் வழியாகவும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அறிவு தொடர்ச்சியாக ஒரு சமூகத்தில் நிகழ்ந்துகொண்டே இருப்பதைத்தான் அறிவியக்கம் என்கிறோம். ஏன் அது இயக்கம் என்றால் அது தொடர்ச்சியாக ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகள் தோறும் பரவுகிறது. சமூகத்தை ஓர் உடல் எனக்கொண்டால் இந்த நுண்ணிய இயக்கத்தை அதன் மூளை எனலாம். நம்முள் மூளை எப்போதுமே சொல்வெளியாக ஓடிக்கொண்டே இருப்பதைப்போல ஒரு சமூகமும் தனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.

நம் மனத்துக்கு அறிந்தும் அறியாததுமான பல அடுக்குகள் இருப்பது போல சமூகத்திற்கும் பல மன அடுக்குகள் உள்ளன. சமூகத்தின் வெளிப்பாடாக நாம் காண்பது அதன் மேல்மனம் அல்லது கான்ஷியஸ். அதற்கு அடியில் சப்கான்ஷியஸ் என்னும் ஆழுள்ளங்கள் உள்ளன. அவை உடனே தெரிவதில்லை. வரலாற்றை திரும்பிப்பார்த்தால் அவை தெரியும்.

இப்போது தமிழ்ச்சூழலில் வெவ்வேறு அறிவுத்தரப்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று விவாதித்துக்கொண்டிருக்கின்றன. அந்த விவாதங்களையே நாம் ஊடகங்களில், சமூக ஊடகங்களில், இலக்கியங்களில் காண்கிறோம். இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறிவியக்கம் என்கிறோம்.

அறிவியக்கத்தை ஒவ்வொருவரும் உணரமுடியும். ஆனால் தெளிவாக அடையாளம் வகுக்க முடியாது. மிகப்பாமரர்கூட அறிவியக்கத்தின் ஓர் இடத்தில்தான் உள்ளனர். அதை விளிம்பு என்று கொள்ளலாம். அறிவியக்கம் அதன் மையத்தில்தான் தெளிவாகக் காணும்படி உள்ளது. ஏதேனும் ஒருவகையில் கருத்துக்களை உருவாக்குபவர்களே அதன் மையம்.

அறிவியக்கத்தின் நியூக்ளியஸ் எனப்படும் மையத்தில் உள்ளவர்கள் தத்துவஞானிகள், வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள். அவர்களே புதியவற்றை கொண்டுவருகிறார்கள். அவற்றின்மேல்தான் மொத்த அறிவியக்கமும் எதிர்வினையாற்றுகிறது. அந்த விவாதம் வழியாகவே சமூகங்கள் சிந்திக்கின்றன. சிந்தனை வழியாகவே அவை முன்னகர்கின்றன.

சிந்தனையாளர்களே நுண்மையத்தில் செயல்படுபவர்கள். அவர்களின் சிந்தனைகள் அரசியல் களத்தில் வேறுசிலரால் கொண்டுவரப்படுகின்றன. அரசியல் களத்தில் அவை உக்கிரமான பிரச்சாரங்கள் வழியாக மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டு கண்கூடான விசையாக ஆகின்றன.

உதாரணமாக, திராவிட இயக்கக் கருத்தியல் இன்று மிக வலுவானது. அதன் ஆளுமைகளாக ஈ.வெ.ரா , சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி ஆகியோர் தெரிகின்றனர். ஆனால் அவர்கள் வெளிப்பாடுகள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகள் பலர் உள்ளனர்.

அவர்கள் பல நுண்ணிய தரப்புகளாகச் செயல்பட்டனர். கே.என்.சிவராஜ பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை போன்ற தமிழாய்வாளர்கள் தமிழின் தனித்தன்மையை நிறுவியவர்கள்.  தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் (தமிழிசை இயக்கம்) சி.வை.தாமோதரம் பிள்ளை, (தமிழ் பதிப்பியக்கம்)  மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், இலக்குவனார் (தனித்தமிழ் இயக்கம்) போன்றவை திராவிட இயக்கத்தின் மூலவடிவங்கள். ஞானியார் சுவாமிகள் போன்றவர்கள் அதன் ஆன்மிக முன்னோடிகள்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும் அந்த நியூக்ளியஸில் செயல்படுபவர்கள். ஆனால் நேரடியாக அல்ல. அவர்கள் சமூகத்தின் ஆழுள்ளத்தை அறிபவர்கள், ஆழுள்ளத்தை கட்டமைப்பவர்கள், அவர்கள் வழியாகவே அந்த ஆழுள்ளம் வெளியாகிறது. அவர்களின் பணி மேலும் நுண்மையத்தில் நிகழ்கிறது. உடனடியாக வெளியே தெரியவதில்லை.

தமிழ்ச்சமூகத்தில் புதுமைப்பித்தனின் செல்வாக்கை நேரடியாகக் காணமுடியாது. புதுமைப்பித்தனை இலக்கிய ஆர்வலர்களே வாசித்திருப்பார்கள். ஆனால் அவர்களே இதழாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் ஆகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் வழியாக புதுமைப்பித்தன் சாமானியர்களையும் பாதிக்கிறார்.

உலகம் முழுக்க இப்படி நுண்மையத்தில் இருந்து மையத்திற்கும் அங்கிருந்து விளிம்புநோக்கியும் சிந்தனை பரவுகிறது. இந்த அறிவுச்செயல்பாடையே அறிவியக்கம் என்கிறோம். இதில்தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். எங்கே எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். எங்கே செயல்படவேண்டும் என்பது உங்கள் தெரிவு

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:35

குலசேகர ஆழ்வார்

 

குலசேகர ஆழ்வார் அரசராக இருந்து அடியவர் ஆனவர். தன்னை அரங்கன் ஆலயத்துப் படிகளாக உருவகித்துக் கொண்டவர். அந்த நெடும்பயணத்தின் வழியைத்தான் பக்தி என்று சொல்கிறோம் என்று தோன்றுகிறது.

குலசேகர ஆழ்வார்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:34

காரந்தின் ‘அழிந்த பிறகு’ வெங்கி

அன்பின் ஜெ,

சிவராம காரந்த்தின் “அழிந்த பிறகு” இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் பட்டியலிட்டிருந்த NBT வெளியிட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இருந்ததென்று நினைக்கிறேன்.

கன்னடத்தில் 1960-ல் வெளியாகியிருக்கலாம். காரந்த்தின் முன்னுரை ஜனவரி, 1960 காட்டுகிறது. தமிழ் முதல் பதிப்பு 1972-ல் வெளிவந்திருக்கிறது. சித்தலிங்கையா மொழிபெயர்த்திருக்கிறார். வாசிப்பனுபவத்தில் மொழிபெயர்ப்பு என்று எக்கணத்திலும் தோன்றச் செய்யாத நேர்த்தியான அழகான மொழிபெயர்ப்பு. அரை/முக்கால் நூற்றாண்டு கடந்த பிராந்திய செவ்வியல் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடுகளுக்காக நேஷனல் புக் டிரஸ்டிற்கும், சாகித்ய அகாடமிக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

“அழிந்த பிறகு” நாவல் மனதுக்கு மிக நெருக்கமாயிருந்தது. ஒரு அருமையான கிளாஸிக்!. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னும் அதன் விகசிப்பு/இருப்பு/இளமைத் தன்மை அப்படியே ஜ்வலிக்கிறது. அதன் விசாரங்களும், தேடல்களும் இன்றைக்கும் பொருந்திப் போகும் தன்மையும், நிகழ்கணத்தில் நிற்கும் மதிப்பும் கொண்டவை.

“அழிந்த பிறகு” நாவல் வாழ்வின் அடிப்படை கேள்விகளும், ஆழமும் கொண்டு பயணித்தாலும் ஒரு திரில்லரின் சுவாரஸ்யத்தை தன்னுள் தக்கவைத்துக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது ஜெ. சினிமா அறிமுகங்கள் எழுதும்போது ஸ்பாய்லர் அலர்ட் குறிப்பிடுவது போல், இதன் கதையைச் சொன்னால் இதற்கும் ஸ்பாய்லர் அலர்ட் போடவேண்டுமோ என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன். கதை முன்னரே தெரியாமல், புதிதாக நாவலைப் படித்தால் மிகப் பிரமாதமான வாசிப்பனுபவம் கிட்டும். யசவந்தர் எனும் இயல்பான மனிதனின் வாழ்க்கைச் சித்திரம்தான் கதை என்றாலும், காரந்த்தின் எழுத்தில் யசவந்தரின் குணங்களும், ஆளுமையும், வாழ்வின் பக்கங்களும் புதிது புதிதாய் ஒவ்வொன்றாய் சுவாரஸ்யமாக வெளிப்படும் அந்த அழகு அபாரமானதொன்று. ஒரே அமர்வில் படித்து முடிக்கத் தூண்டும் மாய எழுத்து. காட்சிகளும், நிலப்பரப்பும், மனிதர்களும் நம்முள் நுழைந்து ஒன்றாகி விரியும் அதிசயம்!. எனக்கு ஒரு கலைப் படத்தை திரையில் பார்த்தது போன்று பரவசமாய் இருந்தது.

“அழிந்த பிறகு” – யசவந்தரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரின் இருப்பு அவரைச் சுற்றிலும் குடும்பத்திலும், உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் உருவாக்கிய தடங்கள்/சலனங்கள் என அருமையான வாசிப்பனுபவம். உடன் யசவந்தரின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் காரந்திற்குக் கிடைக்கும் வாழ்வின் தரிசனங்கள். நாவல் ஓட்டத்தில் அங்கங்கு வெளிப்படும் பாத்திரங்களையும், யசவந்தருக்கும் அவர்களுக்குமான உறவுகளையும், யசவந்தர் குறித்த அவர்களின் மனப்பதிவுகளையும் வாசிப்பில் அறிவது இன்னும் பரவசமும், சுவாரஸ்யமும் தரக்கூடியதாய் இருந்தது. என்னைக் கேட்டால் இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச கலைச் சினிமா ரசிகர்களும் தவறவிடக் கூடாத நாவல் “அழிந்த பிறகு” என்றுதான் சொல்வேன்.

இருபதாம் நுற்றாண்டின் மத்திம காலத்தைய கர்நாடகாவின் அந்த உட்கோடி மலைக்குன்றுக் கிராமங்கள் (சிர்சி சுவாதி அருகே பெனகனஹள்ளி, ஹொன்னகத்தே, சாணெகெட்டி), குமட்டி நிலப் பரப்புகளையும், அதன் மனிதர்களையும், அவர்களின் சந்ததிகளையும், பண்பாடுகளையும் அறிந்துகொண்டது மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. பரிச்சயமான மும்பை, பூனா, லோனாவாலா, கண்டாலா நிலங்களை நாவலில் கண்டதும் மகிழ்ச்சி. பருவமழைக் காலங்களில் கண்டாலாவின் பசுமையை மனதுள் நினைத்துக் கொண்டேன்.

பகவந்த ஹெக்டே (யசவந்தரின் அப்பா), பார்வதியம்மாள், சங்கர ஹெக்டே, சம்பு ஹெக்டே, மூகாம்பா, ராம ஹெக்டே, சீதாராம ஹெக்டே, கமலம்மா, மஞ்சையா, ஜலஜாட்சி, சிறுவர்கள் யசு, ஜெயந்தன், பகு, தாரேஸ்வரத்துச் சரசி என்னும் கலைவல்லி, இலக்கியம் வாசிக்கும் இந்துமதி…எல்லோரையும் அம்மக்களின் கலாச்சார இழைகளுடன் சந்தித்து, பரிச்சயப்படுத்தி வந்தது ஓர் இனிய நல்பயணம்.

நாவலின் இறுதியில் இந்த உரையாடல்…

பந்த் அவர்களே! பிறப்பிறப்பு, ஆன்மா, பரமான்மா பற்றிய விஷயங்களில் உங்கள் கருத்தும் அவர் கருத்தும் எவ்வாறிருந்தன?”

வட துருவம், தென் துருவங்கள்தான்! அவருடையது ஒருவகையான அத்வைதம். அதை நவீன அத்வைதம் என்று அழைக்கட்டுமா? துவைதிகள் சங்கராச்சாரியாரை நாஸ்திகர் என்று அழைத்ததைப்போல, நானும் ஏதாவது பெயரைத் தரலாம். ஆனால் அது அப்படி இல்லை. அவர் தனிமனித வாழ்க்கையை நம்பினார். தனிப்பட்ட ஆன்மாவை நம்பவில்லை. அதனால் அவருக்கு பரமாத்வைப் பற்றிய பிரச்சினையே முக்கியமானதல்ல. பக்தி, மோட்சம் இவற்றிலும் அவருக்கு அக்கறையில்லை. அப்படியானால் அவர் நாஸ்திகரா என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். உயிருள்ளவற்றையெல்லாம் அன்போடு கண்டார் அவர். அவருடைய மனப்பரப்பில் எல்லா வாழ்க்கையும் ஒரே மாதிரிதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில், உயிர்களில் அன்றும் இன்றும் என்றும் வேறுபாடு காணாத ஒருவைகையான அத்வைதச் சிந்தனை அவருடையது. அத்வைதம் என்றது இதற்காகத்தான். அது அவருடையதேயான ஒருவகை அத்வைதம்.. ”

ஒவ்வொரு மனித வாழ்விலும் மறைவிற்குப் பின் இறுதியில் எஞ்சுவது என்ன என்று யோசித்துப் பார்த்தால்…எண்ணங்கள் பின்னிப்பின்னி எங்கோ இழுத்துச் செல்கின்றன.

வெங்கி

அழிந்த பிறகு- இணைய நூலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:31

தாமஸ் புரூக்ஸ்ய்மா- கடிதம்

தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தாமஸ் புரூக்ஸ்மா போல முழுவதும் மகிழ்ச்சியாலான மனிதரை நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.   தமிழ் விக்கி பக்கத்தில் அவரது புகைப்படத்தை பார்க்கையில் ’’ஒரு வெளிநாட்டு இளைஞர்’’ என்று மட்டும் தோன்றியது. இதுவரை வாசித்திருந்த அனைத்து தமிழ் மொழிபெயர்ப்புகளை காட்டிலும் அவரது   திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அனைத்தும் மிக எளிமையாக பொருள் சொன்னது. இரண்டு வரி குறளை பொருள் சிதையாமல் ஆங்கிலத்தில் கொண்டு வந்திருப்பது மாபெரும் பணி என்பது அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும்

சில நாட்களுக்கு முன்பு தாமஸ் புரூக்ஸ்மாவுடனான மெய்நிகர் உரையாடலில் அவரை சந்தித்து உரையாடினோம்., முழுக்க முழுக்க மகிழ்ச்சியாலானவர். முகமும் கண்ணும் மூக்கும் எல்லாம் எப்போதும் மலர்ந்து சிரித்தபடியே இருக்கும் ஒருவரை நான் அதுவரை கண்டதில்லை. அவரது தமிழ் அத்தனை அழகு. தமிழறியாதவர்களின் மழலைத்தனமின்றி, அவரது இதயத்திலிருந்து அவர் உணர்ந்து தமிழ் பேசுவதையும் தமிழ் மொழிமீது அவருக்கிருந்த உள்ளார்ந்த மதிப்பும் காதலும் ஆச்சர்யமூட்டின, கொஞ்சம் குற்றஉணர்வும் இருந்தது அவரளவுக்கு எனக்கு தமிழ் மீது அத்தனை காதல் இல்லையே என்று.

ஆர்வமுள்ள சிறுவனை போல கேள்விகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கேள்விக்கும் உடனே பதிலளித்து விடாமல் கண்களை மூடி கேள்வியை சரியாக கிரகித்து பின்னர் தன் நினைவுகளுக்குள் மூழ்கி முத்தெடுத்தது போல பொருத்தமான பதில்கள் சொன்னார்

தமிழ்மொழி பயில்கையில் கடினமாக இருந்தென்றாலும் அம்மொழியின் மீதுள்ள பிரியத்தினல் அதை கற்றுத் தேர்ந்த தாகவும் தமிழுக்கு நன்றியுள்ளராக இருப்பதாகவும் சொன்னது சிறப்பு

’தெய்வம் தொழாஅள்  கொழுநன்  தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை’’ உள்ளிட்ட திருக்குறளின் கருத்துக்களனைத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருக்கு உடன்பாடுள்ளதா / என்பதற்கு அவர் சொன்ன விளக்கமும் மிக சிறப்பு.  ’’அப்பெரும் படைப்பை அணுகுகையில் தங்களது சொந்த கருத்துக்களை அப்பால் வைத்துவிட்டு அணுகுவது நல்லது என்றும் , அந்த கொழுநன் என்பதை அப்படியே பொருள் கொள்ள வேண்டியதில்லை அது இணையராக இருக்கலாம் ஆசிரிய மாணவ உறவாக இருக்கலாம், அந்த குறள் சொல்வது ஒரு உறவில் அவசியம் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பை ’’என்றார். உண்மையிலேயெ அசந்து போனேன்

அந்த பதில் ஒரு புதிய திறப்பு ஒரு படைப்பை முறையாக அணுக அவர் உண்மையில் அன்று எங்களுக்கு பயிற்சி அளித்தார் என்று சொல்ல வேண்டும்

ஒளி நிரம்பிய ஆளுமை அவர். அவரது உள்ளொளிதான் அத்தனை பிரகாசித்திருக்கிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சி அல்லாது அவரை நாங்கள் இத்தனை அணுக்கமாக அறிந்து கொண்டிருக்க முடியாது.  தமிழ் விக்கியில் இடம்பெற்றிருக்கும் தாமஸ் புரூக்ஸ்மா போன்ற மிக முக்கிய மிக நேர்மையான படைப்பாளிகளை அதுபோல  அறிமுகப்படுத்தியது மிக மிக சிறப்பு. உங்களுக்கும் ஆஸ்டின் செளந்தருக்கும் இதன் பொருட்டு தனித்த நன்றிகள்

அன்புடன்

லோகமாதேவி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:31

சிங்களத்தில் அம்புலி மாமா  – எம்.ரிஷான் ஷெரீப்

 

AMBILI MAAMA-PHOTOS (1)

அம்புலி மாமா  தமிழ் விக்கி

அம்புலி மாமா பற்றிய உங்கள் பதிவு பல பால்ய கால ஞாபகங்களைக் கிளறி விட்டது. நான் வாசித்த முதல் கதைப்புத்தகம் ‘அம்புலி மாமா’. சிறுவர் கதைகள் மாத்திரம் உள்ளடங்கிய கதைகளின் களஞ்சியம் அது. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வெளிவரத் தொடங்கிய அம்புலிமாமா இதழ் ஏழு தசாப்தங்களைக் கடந்து தற்போது நின்று போயிருப்பது வருத்தத்தைத் தருகிறது. 

அவற்றிலுள்ள கதைகள் பின்னாட்களில் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்ததாக அறியக் கிடைத்தது. என்றாலும் கதைகளை வாசிக்கும்போது நாம் மனதில் உருவகித்துக் கொள்ளும் காட்சிகளைப் போல அவை இருக்காது, இல்லையா? 

இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம், சிந்தி, சந்தாளி, பஞ்சாபி, ஒடிய, அஸ்ஸாமிய மொழிகளில் மாத்திரமல்லாமல், அந்தக் கால கட்டத்தில் இலங்கையில் சிங்கள மொழியிலும் வெளிவந்து கொண்டிருந்த சிறுவர்களுக்கான சஞ்சிகை அது. சிங்கள மொழியில் நான் பிறப்பதற்கு முன்பே 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ‘அம்பிலி மாமா’ எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்த அந்த சஞ்சிகை இனக்கலவர காலத்தோடு வெளிவருவது நின்று போன ஒரு குறிப்பிடத்தக்க சஞ்சிகையாகும்.

இலங்கையில் அந்தக் காலகட்டத்தில் ‘அம்பிலி மாமா’ இதழ்களுக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த இதழ்களை வாசித்த சிங்கள வாசகர்கள் பலரும் இன்றுவரையில் அவற்றைத் தமது வருங்கால சந்ததியினருக்காக சேகரித்து வைத்திருப்பதைக் காண முடிகிறது. அம்புலிமாமா என்று கூறியதுமே அவற்றிலுள்ள வேதாளக் கதைகள் உடனே நினைவுக்கு வருவதாக இன்றும் அவர்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள். 

அம்புலி மாமா இதழ் சிங்களத்தில் வெளிவருவது நின்று போன பிறகும் கூட, 1989 – 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வியமைச்சராகவிருந்து பின்னர் படுகொலை செய்யப்பட்ட லலித் அத்துலத்முதலி, ஆங்கில அம்புலி மாமா இதழ்களில் வெளிவந்த வேதாளக் கதைகளை மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்த்து பிரசுரிக்க ஏற்பாடு செய்திருந்ததை அறியக் கிடைக்கிறது. 

சிறுவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய, நல்லறங்களைப் போதிக்கக் கூடிய, சிறந்த கற்பனை ஆற்றல்களை வளர்க்கக் கூடிய அம்புலிமாமா போன்ற இதழ்கள் தமிழில் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே எனது அவா. 

இத்துடன், சிங்களத்தில் வெளிவந்த ‘அம்பிலி மாமா’ இதழ்களின் முன்னட்டைகள் மற்றும் உட்பக்கங்கள் சிலவற்றின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். அவற்றை அவதானிக்கும்போது பௌத்த அறநெறிப் பாடசாலைகளில், பிள்ளைகளுக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த ‘அம்பிலி மாமா’ இதழ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாலேயே போகப் போக அவற்றின் அட்டைகளில் புத்தரின் ஓவியங்களும், புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

எம்.ரிஷான் ஷெரிஃப்

mrishansh@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:31

புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 54 வது கூடுகை 25.11.2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .

பேசு பகுதிகள் குறித்து நண்பர் சரவணன் உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்”

முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 10:30

November 22, 2022

என்றேனும் ஒரு நாள்…

நிமிர்பவர்களின் உலகம்

ஜெ,

அருஞ்சொல் பேட்டியை கண்டேன். அதனுடன் இணைந்த சர்ச்சைகளையும் கண்டேன். அதில் நீங்கள் சொன்ன ஒரு வரிதான் இங்கே உபிக்களின் பிரச்சினை. அதை விவாதமாக ஆக்கக்கூடாது என்றுதான் அபத்தமாக அறைக்கலன் சர்ச்சையை உருவாக்குகிறார்கள்.

என் கேள்வி இதுதான். அந்த இடத்தில் அப்படி நீங்கள் சொல்வதற்கு என்ன காரணம்? அது பொருத்தமானதுதானா? அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் நட்சத்திரங்கள் என எல்லாரும்தான் எப்படியோ விக்கிப்பீடியா என்ட்ரியாக ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிலைகளும் நினைவுச்சின்னங்களும் உள்ளன. காலத்தில் எவர் நிலைகொள்வார் என எவருக்கு தெரியும்? உங்கள் முதன்மையை நீங்கள் ஏன் அங்கே முன்வைத்தீர்கள்? 

பிகு, நானும் சீண்டலாகவே கேட்கிறேன். மு.க பற்றிச் சொன்னீர்கள். மோடி பற்றி அதைச் சொல்வீர்களா? (இதை ஒரு பின்னூட்டமாக எவரோ இட்டிருந்தார்கள்)

பிரபாகர் ராம்

***

அன்புள்ள பிரபாகர்,

நான் ‘திட்டமிட்டு’ ஒன்றைச் சொல்வதில்லை. முடிந்தவரை தன்னியல்பாக, நா மீது கட்டுப்பாடில்லாமல் இருப்போமே என்பதுதான் எழுதவந்த காலம் முதல் என் கொள்கை. எழுத்தாளனின் கடமை என்பதே அப்படி தன் அகத்தின் ஓட்டத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்தான் என நினைக்கிறேன். தவறோ, சரியோ அவன் வெளிப்பாடு கொள்வதே முக்கியம். அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியதுதான்.

அந்த அரங்கில் அதைச் சொன்னமைக்குக் காரணம் என இப்போது இப்படி தோன்றுகிறது. இந்தியா இன்னும் ஒரு நவீன நாடு அல்ல. இது பழைய நிலவுடைமைக்கால மனநிலைகள் பொதுச்சூழலில் அப்படியே நீடிக்கும் நாடு. மன்னர் வழிபாடு, அதிகார வழிபாடு இங்கே பொதுமக்களை மட்டுமல்ல படித்தவர்களையும்கூட ஆட்டிப்படைக்கிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் முன் இங்கே நம் பொதுமக்களின் எல்லா தரப்பினரும் காட்டும் அடிதொழுதலும் துதிபாடலும் நாகரீக நாடுகள் எவற்றிலும் காணப்படாதவை. இந்த அடிதொழுதலுக்கு எதிரான எந்த சிந்தனையும் இங்கே பொதுவெளியில் முன்வைக்கப்படுவதில்லை.

அதிகாரத்தையும் அதைக் கையாளும் அரசியலாளர்களையும் கூசக்கூச புகழ்வதும், கண்ணீர்மல்கப் பணிவதும் இங்கே எழுத்தாளர்களிடம்கூட காணக்கிடைக்கிறது. 2003 ல் நான் சுட்டிக்காட்டி பெரிய விவாதமாக ஆனது இது. இன்று சமூக ஊடகச்சூழலில் எழுத்தாளர்களிடம் அந்த மனநிலை பலமடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த புகழ்பாடல்களும் அடிவிழுதலும் எப்படியோ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லும் என்றும், விளைவாக சில தனிப்பட்ட லாபங்கள் கிடைக்கலாம் என்றும் நம்புகிறார்கள். இணையவெளியில் அடிதொழும் பாமரக்  கூட்டம் பெரிது என்பதனால் அதனுடன் சேர்ந்துகொள்ளும்போது ஒரு கும்பலைத் திரட்டிக்கொள்ளும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. எழுத்தினூடாக வாசகர்களை ஈட்டிக்கொள்ள முடியாதவர்களின் ஒரு வகை சபலம் இது.

உலகம் முழுக்க சிந்திப்பவர்களின் வழி என்பது அதிகாரத்திற்கு எதிரானதுதான். அதுவே ஜனநாயகத்தின் செயல்முறை. இங்கே அந்த உளநிலைகள் தொடங்கப்படவே இல்லை.  இங்கே அதிகாரத்தின் ஏதேனும் ஒரு தரப்பைச் சார்ந்து கட்சிகட்டிக்கொண்டிருப்பதே அரசியல் நடவடிக்கை என கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அதிகாரத் தரப்புகளுக்கு அப்பால் நின்று செயல்படும்  அரசியலே உண்மையான ஜனநாயகப் பணி. சிற்றரசியல் (Micro Politics) என அதை நான் அழைப்பேன். அத்தகைய அரசியலைச் செய்யும் அனைவரையும், ஒருவர் கூட விடாமல், இந்த முப்பதாண்டுகளில் ஆதரித்து எழுதி வருகிறேன்.

இந்தியச் சூழலில் அறவே இல்லாமலிருப்பது அறிவுவழிபாடுதான். நேற்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, நான் சொல்வன ஏன் விவாதமாகின்றன என்று. என் பதில் இது. நான் சொல்வன சாதாரணமான கருத்துக்கள்தான். ஆனால் அவற்றை ஓர் எழுத்தாளன் சொல்வது இங்குள்ள சாமானியர்களை துணுக்குறச் செய்கிறது. சாமானியர்களுக்குச் சமானமான அறிவுத்தகுதி கொண்ட எழுத்தாளர்களை எரிச்சலடைய வைக்கிறது. ஓர் அரசியல்வாதி, ஒரு அதிகாரி அதைச் சொன்னால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

ஒவ்வொரு முறை ஒரு கருத்து விவாதமாக ஆகும்போதும் எழுந்து வரும் குரல்களைக் கவனியுங்கள். ‘இவர் யார் இதைச் சொல்ல?’ என்கிறார்க்ள். தமிழ்ச்சூழல் எனக்கல்ல, அறிவுச்செயல்பாட்டிலுள்ள எவருக்கும் அந்த தகுதி உண்டென நினைக்கவில்லை. அந்த கேள்வியை புதுமைப்பித்தனிடம் ராஜாஜி கேட்டார். ஜெயகாந்தனிடம் கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் இங்கே எழுத்தாளன் கருத்து சொல்லும்போது துணுக்குற்று அதை பற்றி கூச்சலிடுகிறார்கள். அதுவே விவாதம் எனப்படுகிறது. இங்கே எவர் எந்த எழுத்தாளரை எதன்பொருட்டு வசைபாடினாலும் உடனே சிலநூறுபேர் சென்று கூடி கொண்டாடுவதை கவனியுங்கள். அந்த மனநிலையின் நீட்சியே இவ்விவாதங்கள்.

கவனியுங்கள். இங்கே அரசியல்வாதிகளுக்கு நாளும்பொழுதும் கூசக்கூச புகழ்மொழிகளை சொல்வது எவருக்கும் பிரச்சினை இல்லை. அந்த புகழ்மொழிகளை தாங்களும் தொண்டை புடைக்கக் கூவும் அதே கும்பல், ஓர் அரசியல்வாதியின் பெயரை உச்சரிப்பதே அபச்சாரம் என நினைக்கும் அதே கூட்டம், ஓர் எழுத்தாளனை அவன் வாசகர் சிலர் பாராட்டினால் எரிச்சலடைகிறது. ஓர் எழுத்தாளன் தன் வாசகர்கள் மற்றும் நண்பர்களுடன் எதையேனும் செய்ய ஆரம்பித்தால் ‘அடிப்பொடிகள்’ என வசைபாடுகிறார்கள். ஏனென்றால் ஓர் எழுத்தாளனுக்கு அப்படி ஒரு ஏற்பு அமைவதை அவர்களால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் எழுத்தாளனின் இடம் மிகமிகச் சிறியது.

இச்சூழலில்தான் அதைச் சொல்கிறேன். இன்றல்ல, 1991ல் ஒரு பேட்டியிலேயே இதை இப்படியே சொல்லியிருக்கிறேன். அறிவுவழிபாட்டுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு சமூகத்தை நோக்கி அறிவு வழிபடற்குரியது என்று சொல்வதுதான் அது. அறிவுவழிபாடே ஐரோப்பாவின் ஆன்மபலம். அதன் ஒரு தொடக்கமேனும் எதிர்காலத்தில் நம் சமூகத்தில் உருவாகவேண்டும் என்பதற்கான முன்னெடுப்பே அது. இதுவே என் வாழ்க்கையென இதுகாறும் உள்ளது. பத்மஶ்ரீ பட்டம் வரும்போது அதை மறுக்கத் தோன்றியதும் இதனால்தான், அந்தச் சிறுபணிவு தேவையா என்னும் தயக்கம். இதைப் புரிந்துகொள்ளவும் சிலர் இருக்கக்கூடும்.

அறிவியக்கவாதியின் முதன்மை என்றால் என்ன? நீங்கள் சொல்வதுபோல புகழ்பெற்றவர்கள் சமூக நினைவில் நீடிப்பார்கள். அதிகாரம் கொண்டவர்கள் தங்களுக்கே தெருத்தெருவாக நினைவுச்சின்னங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உண்மையான மாமனிதர் சிலர் ஆளுமைக்குறியீடுகளாக ஆகி, தொன்மங்களாக மாறி நிலைகொள்வார்கள்- டாக்டர் கே போல. ஆனால் சிந்தனையாளன், இலக்கியவாதி நிலைகொள்ளும் இடம் அவர்களெல்லாம் நிலைகொள்ளும் அந்த வெளி அல்ல. அவர்கள் நிலைகொள்ளும் இடம் நினைவின் பரப்பு. அங்கே அவர்கள் அசைவற்ற சிலைகளாக நிற்கிறார்கள். சிந்தனையாளனும் இலக்கியவாதியும் நிலைகொள்வது சிந்தனையின், கனவுகளின் வெளியில். அது உயிருள்ளது, தொடர்ச்சியாக வளர்வது. நாம் நேற்றைய அரசியல் தலைவரை ‘அறிந்து வைத்திருக்கிறோம்’ ஆனால் புதுமைப்பித்தனிடம் ‘உரையாடிக்கொண்டிருக்கிறோம்’. இதுதான் வேறுபாடு. மூன்றாம் குலோத்துங்கனும் வரலாற்றில் இருப்பாவான், ராஜராஜசோழன் திருவுருவாக நீடிப்பான், கம்பனே இன்றைய ரசனையில் இன்றென வாழ்பவன். இதுவே நான் சொல்ல வந்தது.

அறிவியக்கவாதியின் முதன்மை என்பது எனக்காக நான் சொல்லிக்கொள்வது அல்ல. விஷ்ணுபுரம் அமைப்பின் அத்தனை செயல்பாடுகளும் இந்நோக்கம் கொண்டவையே. எழுத்தாளர்களை கொண்டாடுகிறோம். அவர்களின் அகவைநிறைவுக்கு விழா எடுக்கிறோம். அவர்களுக்காக மலர்கள் வெளியிடுகிறோம். கவனியுங்கள், இவற்றை தமிழகத்தில் எங்கள் அமைப்பு அன்றி எத்தனைபேர் செய்கிறார்கள்?  ஒவ்வொரு நாளும் இங்கே அரசியல்வாதிகளுக்கு என்னென்ன கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன என்பதை கருத்தில்கொண்டு இதை பாருங்கள்.

புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவகமும் சிலையும் அமைப்பதென்பது எங்கள் நீண்டகாலக் கனவுகளில் ஒன்று. அதை நண்பர்களிடம் பலமுறை விவாதித்துள்ளோம். நிகழவும்கூடும். இன்னும் பணமிருந்தால் சி.வி.ராமனுக்கும், ராமானுஜனுக்கும், க.நா.சுவுக்கும், சுந்தர ராமசாமிக்கும், அசோகமித்திரனுக்கும் சிலை அமைப்பேன். இதோ ஐரோப்பா சென்று வந்துள்ளேன். அங்கே ஒவ்வொரு நகரிலும் பெருங்கலைஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் இருக்கும் நினைவகங்களும், மாபெரும் சிலைகளும் என்னை பரவசம் அடையச் செய்கின்றன. என்றோ ஒருநாள் நாமும் அவ்வாறு ஆகக்கூடும் என நான் கனவு காண்கிறேன். இன்றைப்போல அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்திற்கும் தாசர்களாக என்றும் இருந்துகொண்டிருக்க மாட்டோம் என்றும், நமக்கும் அறிவுவழிபாட்டு மனநிலை உருவாகும் என்றும், இங்கும் அறிவு செழிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். அதையே அந்த மேடையில் சொன்னேன்.

அங்கே கூடி அமர்ந்திருந்தவர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கு பயில்பவர்கள். அவர்களில் சிலர் அப்பதவிக்குச் செல்லக்கூடும். அவர்களில் சிலர் உள்ளத்திலேனும் அதிகார வழிபாட்டுக்கு எதிராக அறிவுவழிபாட்டு மனநிலையை உருவாக்க முடிந்தால், குறைந்தபட்சம் அப்படி ஒரு மனநிலை உண்டு என்னும் எண்ணத்தை உருவாக்க முடிந்தால், அதுவே என் வெற்றி எனக் கொள்வேன். ஆட்சிப்பணி என்பது அதிகாரத்தை கையாள்வது, உச்ச அதிகாரத்திற்கு மிக அணுக்கமானது. அவர்களில் சிலர் அதிகாரப் போதையில் மூழ்காமலிருந்தால் அது அவர்களுக்கும் நல்லது. அவர்கள் சந்திக்கப்போகும் அதிகார மையங்களிடமிருந்து சற்று விலகி அறிவுச்செருக்குடன் நின்றிருக்கவும் அந்த புரிதல் உதவும். அவர்கள் எடுக்கவேண்டிய நிலைபாடு ஒன்றுண்டு, அவர்கள் அதிகாரத்தின் தாசர்களாக வாழவிருக்கிறார்களா அறிவின் உபாசகர்களாக ஆகவிருக்கிறார்களா என்று. அவர்களில் இரண்டு பேர் அறிவின்மீதான பற்று கொண்டால்கூட வெற்றிதான்.

அறிவின்மீதான பற்றும், நான் அறிவியக்கத்தின் பிரதிநிதி என்னும் பெருமிதமும்தான் ஓர் ஆட்சிப்பணி அதிகாரியை காக்கும் கவசம்.அது இல்லையேல் அவர்கள் மிக விரைவாக விழுமியங்களில் நம்பிக்கை இழப்பார்கள். அதிகார அரசியல் வட்டங்களில் இருந்து அவமானங்களையும் சந்திப்பார்கள். அந்த மேடையில் அரசியலதிகாரம் அனைத்துக்கும் அப்பால் நின்றிருக்கும் அறிவின் ஆணவம் என்ற ஒன்றை முன்வைத்தேன். அதை பெற்றுக்கொண்டவர் சிலர் இருப்பார்கள் என்னும் நம்பிக்கையில். உண்மையில், சென்ற முப்பதாண்டுகளில் அவ்வண்ணம் என்னிடமிருந்தே அதை அடைந்த சிலர் இன்றைய இந்திய ஆட்சிப்பணியில் உண்டு. எங்கிருந்தாலும் தங்களை சிந்தனையாளர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். அவர்களே அத்துறையில்  சாதனையாளர்களாகவும் திகழ்கின்றனர். ஏன், இன்றைய ஆட்சியதிகாரத்தின் தரப்பிலேயே அறிவியக்கத்தின் இடத்தை, அறிவியக்கவாதியின் நிமிர்வை உணர்ந்தவர்கள் சிலரேனும் உண்டு.

அறிவுக்கு முதன்மை அளிக்கும் பார்வை பொதுவெளியில் வருகையில் பாமரர் அதிர்ச்சிதான் அடைவார்கள். அவர்கள் என்னவென்றே அறியாத ஒன்று அறிவியக்கவாதியின் தன்னம்பிக்கையும் நிமிர்வும். ஆனால் அக்காணொளியைப் பார்க்கும் ஆயிரம் பேரில் ஐம்பதுபேருக்கு அறிவியக்கத்திலுள்ள நிமிர்வு ஓர் ஈர்ப்பை அளிக்கும். அவர்களே நம்மவர். அவர்களை மட்டும் உத்தேசித்தே அது சொல்லப்படுகிறது.

ஜெ

பிகு: நீங்கள் சொன்ன அந்த ‘கமெண்ட்’டை போட்டவர் சமூகவலைத்தளங்களில் நிறைந்திருக்கும் பலநூறு தற்குறிகளில் ஒருவர் என நினைக்கிறேன். பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள், சமூகவலைத்தள வம்புகளிலிருந்து ஒருவரி அபிப்பிராயத்தையும் உருவாக்கியிருப்பார்கள். அதை எங்கும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள்தான் பெரும்பாலும் எங்கும் சென்று கமெண்ட் போடுகிறார்கள்.

நான் தடம் இதழுக்கு அளித்த முதல்பேட்டியில் மோடியைப்பற்றியும் இதையே சொல்லியிருந்தேன் என அங்கங்கே புரட்டிப் பார்ப்பவர்கூட கண்டிருக்க  முடியும். மு.க. இலக்கியவாதியும்கூட. அவருக்கு நாவலாசிரியராக தமிழிலக்கியத்தில் ஓர் இடம் உண்டு. மோடி வெறும் அரசியல்வாதி. வரலாறெங்கும் அவரைப் போன்றவர்கள் வந்துசென்றுகொண்டே இருக்கிறார்கள்.

நமக்குரிய சிலைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 10:34

குறிஞ்சிக்குமரனார், பாவாணரின் தொடர்தழல்

மலேசியாவில் தேவநேயப் பாவாணரின் குரலாக ஒலித்தவர் குறிஞ்சிக் குமரனார். பெங்களூர், மும்பை, கல்கத்தா என எல்லா ஊர்களிலும் பாவாணர் மரபைச்சேர்ந்த ஒருவர் கிட்டத்தட்ட முனிவர் போல அதை பரப்புவதற்கென்றே வாழ்ந்திருப்பார். பாவாணரின் தீவிரம் தீபோல தொற்றிக்கொள்ளக்கூடியது. எந்த இலட்சியமானாலும் அதன்பொருட்டே ஒருவன் வாழ்ந்தான் என்றால் அவன் தனக்கான வழித்தோன்றல்களை பெறுவது உறுதி. 

குறிஞ்சிக்குமரனார் குறிஞ்சிக்குமரனார் குறிஞ்சிக்குமரனார் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 10:34

ஒருபாலுறவு, கடிதம்

ஒருபாலுறவு மின்னூல் வாங்க

ஒருபாலுறவு வாங்க

ஜெயமோகன் நூல்கள் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். அமெரிக்க வாழ்க்கையில் குழந்தைகளைப் பற்றிய கனவுகள் (ஆமாம் அந்த ஹார்வர்ட் படிப்பு, டாக்டராவது) சிதைவுறவிருக்கும் தருணங்களை , எனக்கு முன்னர் இங்கு செட்டிலாகிவிட்ட நண்பர்களின் உரையாடலில், அவர்களது அனுபவங்களில் இருந்து கிடைக்கும்.  அதில் முக்கியமாக,  வெள்ளிக்கிழமை மாலைகளில் அனைவரும் வெகுசீக்கிரம் கிளம்பி சென்றுவிட, எனது பங்களாதேஸ் நண்பரும் நானும், தோளில் கணினிப் பையை மாட்டியவண்ணம் பேசும் தருணங்களில், அவர் சொல்லும் வாழ்வியல் அனுபவங்கள். அதில் சில பதட்டமான சம்பவங்களும் இடம்பெறும். அவருக்குத் தெரிந்த நண்பரும் மனைவியும் சொந்த மகனால் சுடப்பட்டதை ஒரு நாள் பகிர்ந்தார். அவர்கள் மகனின் ஒருபாலுறவு சமாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாததால்,  நடந்த சம்பவம் அது.  

இங்கே LGBTQ பற்றித் தெளிவாக புரிந்துகொள்ள அத்தனை தகவல்களும் கிடைக்கும் நாட்டில் வாழ்கிறோம். எந்த நடிகன், எந்த நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி Gay, எந்த நடிகை லெஸ்பியன் என்பது வெளிப்படை. நீண்ட நாள் திருமணமாகி சந்தோஷமாக இருக்கும் தம்பதிகள் என்று பத்திரிகைகள் வெளியிடும் புகைப்படங்களில் ஒருபாலினத்தில் மணந்துகொண்டவர்களின் படங்கள் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் வெளிப்படையாக தனது ஒருபாலின மணம்பற்றி பேசுகிறார்கள்.  நிறுவனம் நடத்தும் விழாக்களுக்கு, உங்களது கணவனை அல்லது மனைவியை அழைத்து வாருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, உங்களின் Significant other என்று politically திருத்தமாக சொல்வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், தனக்கென வரும்பொழுது ஏன் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.

குழந்தை, படிப்பு, கல்யாணம் கடந்து, வேறுவிதமான உரையாடல்கள் இருப்பதில்லை. வளர்ந்த நாடாக இருந்தாலும், பள்ளி / கல்லூரிக்குச் செல்லும் பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி பாலியல் தொந்தரவுகள் உண்டு. முகம் சுண்டி வீடு வரும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள், அடுத்து என்ன என்ற பேச்சுக்களைத் தவிர வேறு இருப்பதில்லை.    ஒருபாலுறவு மன நிலையை இயற்கையால்  நிந்திக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய புரிதல்களை வளர்த்துக் கொள்வதில் எந்தவிதமான முயற்சிகளும் இல்லை. இந்தியப் பண்பாடு இதை ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பண்பாட்டில் ஆராய்ச்சி செய்தவர்கள் போல் ஒரு மனநிலை.

நான் பதின்ம வயதில் இருக்கும்பொழுது, பொதுவாசகனாக எழுதிய ஒரு கவிதை உண்டு. அதில் தான் விரும்பும் பெண்ணிடம் காதலைச் சொல்பவனிடம், அந்தப் பெண் அவனது அண்ணனைக் காதலிப்பதாக முடித்திருப்பேன். இப்பொழுது எழுதினால், அந்தப் பெண் அவனது அக்காவைக் காதலிப்பதாக சொல்வாள் என்று எழுதுவேன் என்று சொல்லி நண்பர்களை ஒருபாலுறவு சம்பந்தமான உரையாடல்களுக்குள் உள்ளிழுப்பேன். இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள், பரவாலேயே அங்கிள் நீங்கள் முற்போக்காக யோசிக்கிறீர்கள் என்று அவர்கள் எனக்கு மேலும் பல புரிதல்களை கொடுக்கும் விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். குழம்பும் மனநிலையில் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகளைக் காப்பாற்றும் Trevor Project பற்றியெல்லாம் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். இதே  கவிதையை இலக்கியம் வாசிக்காத பெற்றோர்களிடம் சொன்னால், முகத்தில் ஒரு முகச்சுளிப்புதான் மிஞ்சுகிறது.   

‘ஒருபாலுறவு’ நூலில் எஸ் என்பவரின் கடிதத்திற்கு, தங்கள் பதிலில் //என்றாவது இந்தியாவிலிருந்து ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு செல்லமுடியும் என்றால் இந்தச் சமூகத்திற்கான முகமூடி தேவை இல்லை. அங்கே நீங்கள் இயல்பாக இருக்கலாம். அதற்காக முயலுங்கள் இயலவில்லை என்றால் இங்கே இன்னொருவராக நீடியுங்கள்// என்று கூறியிருப்பீர்கள்.   நிலைமை அங்கே இருப்பதைவிட பரவாயில்லை. புரிதல் மேம்பட, ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் தொடரவேண்டும். நண்பர்களுக்கு நீங்கள் சொன்ன பதில்களில் உள்ள நுண்மையான விஷயங்கள்  உரையாடல்களில் இடம்பெற்று, சமூகம், மற்ற உறவுகளைப்போலவே, ஒருபாலுறவையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

–    ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது. எல்லா உயிர்களிலும் காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பதுவருடங்கள் கூட ஆகவில்லை.

–    இந்துப் பண்பாடு ஓரினச்சேர்க்கை போன்றவற்றை பரிவுடன் மட்டுமே அணுகியிருக்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான  நூலாதரங்களைக் காட்டமுடியும்.

மற்றவர்கள் பேசக்கூசும் விஷயத்தை, நண்பர்களின், சமூகத்தின் நலன் கருதி பதில் எழுதி, விவாதித்து நூலாகத் தொகுத்து, வெளியிடும் உங்களுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

மானுடம் சிறக்க, பரிசாக கொடுக்கும் நூல்களின்  வரிசையில், ‘ஒருபாலுறவு’ நூல் நிச்சயம் இடம்பெறவேண்டும்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 10:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.