Jeyamohan's Blog, page 672

November 28, 2022

ரத்தசாட்சி- முன்னோட்டம்

என்னுடைய கைதிகள் சிறுகதையை ரஃபீக் இஸ்மாயில் திரைக்கதை அமைத்து இயக்கும் ரத்தசாட்சி படத்தின் முன்னோட்ட. ஆகா ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:36

இலக்கியத்தை அறிந்துகொள்ள…

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் மின்னூல் வாங்க நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வாங்க

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்ற  நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்படி ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கிறேன். 1998 விஷ்ணுபுரம் வெளிவந்திருந்தது. அதன் மீதான விமர்சனங்கள்  தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பெரும்பாலானவை அரசியல் ரீதியான எதிர்விமர்சனங்கள். 2000க்குப் பிறகு தான் உண்மையில் விஷ்ணுபுரத்திற்கு சரியான வாசக எதிர்வினைகள் வரத்தொடங்கின. உடனடியாக வாசித்து கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களுடன் படிப்பவர்கள். அரசியல் ரீதியான செயலூக்கம் கொண்டவர்கள். ஒரு எதிர்க்கருத்தை உடைத்து நொறுக்கி தங்கள் கொள்கை மீதான விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பு கொண்டவர்கள்.

ஆனால் ஒன்று தெரிந்தது. விஷ்ணுபுரம் சட்டென்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. அதன் வாசகர்களாக அமைந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சிற்றிதழ் உருவாக்கிய நவீனத்துவம் சார்ந்த மனநிலை கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு உண்மையிலேயே பண்பாட்டுச் சிக்கல்கள், ஆன்மீக வினாக்கள் இருந்தன. அவர்களின் தலைக்குமேல் கோபுரங்கள் எழுந்து நின்றிருந்தன. அவற்றிலிருந்து தெய்வங்கள் கீழே பார்த்துக்கொண்டிருந்தன. அந்த மாபெரும் வெளியை என்ன செய்வதென்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது விஷ்ணுபுரம் அவர்களுக்கு வழி காட்டியது. அவர்களைத் தங்களைத் தாங்களே மதிப்பிடவும், தங்களை விரிவாக்கிக்கொள்ளவும், கண்டடையவும் வழியமைத்துக் கொடுத்தது. நான் அந்த வாசகர்களை நோக்கி உரையாட விரும்பினேன்.

1990 முதல் தமிழிலக்கியத்தில் ஒரு திருப்புமுனை எழத்தொடங்கியிருந்தது. முதலில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த தமிழ்மணி இதழ் இணைப்பு நவீன இலக்கியத்தை பொது வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது. பின்னர் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா, அதன் பிறகு இந்தியா டுடே மாலன் மற்றும் வாசந்தியின் ஆசிரியத்துவத்தில் நவீன இலக்கியத்தை பரவலாக கொண்டு சென்று சேர்த்தது. ஒரு புதிய தலைமுறை வாசகர்கள் உள்ளே வந்தனர். அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றி எந்த அறிமுகமும் இருக்கவில்லை. கல்கியிலிருந்து சுஜாதா வழியாக சாண்டில்யனுக்கு வந்து இலக்கியத்தை படிக்கத்தொடங்கியவர்கள். இலக்கிய மதிப்பீடுகள் பற்றி இலக்கிய வரலாறு பற்றி அவர்களுக்கு சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்பினேன்.

இன்னொரு பக்கம் அன்று உருவான வெவ்வேறு இலக்கிய அரங்குகளில் நவீன இலக்கியத்தின் மரபையோ அதன் நெறிகளையோ அறியாமல் மிக மேலோட்டமாக ஓரிரு கோட்பாட்டு நூல்களைப் படித்துவிட்டு வந்து வெறும் குழப்பங்களையே கருத்துகளாக முன்வைக்கும் சிலர் எழுந்து வந்திருந்தனர். இன்று திரும்பிப் பார்க்கையில் அவர்கள் உருவாக்கிய பாதிப்பு என்பது எதுவுமே இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்து கேலிக்குரியவர்களாக்கி விலகிச் சென்றதைத் தவிர என்று தெரிகிறது. ஆனால் அன்று அவர்கள் ஒரு தீய விளைவை உருவாக்கிவிடக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஆகவே முறையாக எது இலக்கியமோ அதை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இலக்கிய கொள்கைகளின் அறிமுகம், இலக்கிய அழகியலின் அறிமுகம், இலக்கிய வரலாறு, இலக்கிய நூல்களின் பரிந்துரைப்பட்டியல் ஆகியவை அடங்கிய ஒரு நூலை எழுதினேன். அத்தகைய ஒரு நூல் தமிழுக்கு புதிதுமல்ல. க.நா.சுவின் ‘படித்திருக்கிறீர்களா?’ அப்படிப்பட்ட ஒன்று. சுந்தர ராமசாமி நூலாக வெளியிடவில்லை என்றாலும் உருட்டச்சு நகலெடுத்து வைத்திருந்த நூல்பட்டியல் ஒன்று சிற்றிதழ் சார்ந்த வாசகர்களிடையே புழக்கத்தில் இருந்தது. உண்மையில் இலக்கிய மதிப்பீடுகள் இந்தப்பட்டியலின் வகையாகத்தான் நிலை கொண்டிருந்தன. எவற்றை படிக்க வேண்டும், எவை முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தப் பட்டியல்கள்  கூறின. பட்டியல்கள் என்பவை வெறும் பட்டியல்கள் அல்ல. எப்போதும் அதை ஒட்டி ஒரு விவாதமும் இருக்கிறது. பட்டியல்களை விட அந்த விவாதங்கள் தான் மேலும் வழிகாட்டியாக அமைகின்றன.

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் சுந்தர ராமசாமி உருவாக்கிய பட்டியலின் தொடர்ச்சி. வேதசகாயகுமாரின் சிறுகதை வளர்ச்சி பற்றிய நூல் அதற்கு இன்னொரு முன்னோடிப் படைப்பு. முதல் பதிப்பை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆனால் மிக அதிகமான பிழைகளுடன் மிக அவசரமாக அச்சிடப்பட்ட அந்த நூல் ஒரு முறை புரட்டிப் பார்த்த பின் திரும்பி எண்ணிப்பார்க்கவே கூசும் அளவுக்கு என்னைச் சோர்வில் ஆழ்த்தியது. பின்னர் தமிழினி வசந்தகுமார் அந்நூலை சிறப்பாக வெளியிட்டார். அப்போது அதை மேலும் தரவுகள் சேர்த்து விரிவாக்கினேன். உயிர்மை, கிழக்கு ஆகிய பதிப்பகங்கள் அதை வெளியிட்டிருக்கின்றன.

இந்நூலின் எல்லை என்பது 2000. அதற்குப்பின் நிகழ்ந்த இலக்கிய வளர்ச்சிகள் பற்றி இந்நூல் கூறவில்லை. உண்மையில் இந்நூலை அடுத்த இருபதாண்டுகளின் இலக்கிய வளர்ச்சியை உள்ளிட்டு விரிவாக்கியிருக்க வேண்டும். அப்படி ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் வெவ்வேறு வேலைகளில் சிக்கிக்கொண்டு அதை முழுமைப்படுத்த முடியாத நிலையிலிருக்கிறேன். எனினும் இன்றைய வாசகர்களுக்கு தமிழில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பது பற்றிய ஒரு புரிதலாக இந்நூல் பங்களிப்பாற்றும் என்று தோன்றுகிறது. நவீன இலக்கியத்தில் இதுகாறும் உருவாகிவந்த வாசிப்பு முறை மற்றும் இலக்கிய நம்பிக்கைகள் பற்றிய ஒரு புரிதலையும் இது அளிக்கும். வரும் ஆண்டுகளில் இதை மேலும் முழுமைசெய்யவேண்டும் என்னும் எண்ணம் என்னுள் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நியுஜெர்சியில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளரான ரிச்சர்ட் டைலரைப் பார்த்தபோது அவர் என்னுடைய நூல்களில் படிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது நவீனத்தமிழிலக்கிய அறிமுகமே என்று சொன்னார். இந்நூல் சிற்றிதழ் சார்ந்து வாசிக்கவும் எழுதவும் வருபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் கல்வித்துறையாளர்களாலேயே இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் தமிழில் நவீன இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் பிறிதொரு நூல் தமிழில் எழுதப்படவில்லை. இதற்கு முன்னோடி நூல் இல்லை என்பது போலவே இதற்கு வழி நூல்களும் இல்லை என்பதும் வியப்புக்குரியதுதான். அந்த தனித்தன்மையே இந்நூலை மீண்டும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வைக்கிறது என்று நினைக்கிறேன். இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஜெ

14.06.2022

சுந்தர ராமசாமி

வாசந்தி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:35

கொல்லிப்பாவை

ஓர் இதழுக்கு ஏன் கொல்லிப்பாவை என்று பெயரிட்டார்கள்? நான் தமிழில் எழுதிய முதல் சிற்றிதழ். என் முதல் கவிதை கைதி அதில் வெளிவந்தது. அன்றைய சிற்றிதழாளர்களுக்கு ஒரு தற்கொலை மனநிலையே இருந்ததா? கொல்லிப்பாவையை தொடங்கியவர் ராஜமார்த்தாண்டன். பின்னர் நடத்தியவர் கட்டைக்காடு ராஜகோபாலன். சுந்தர ராமசாமி அதில் எழுதினார். அவர்கள் அனைவருமே அந்த ரகசியக்குதூகலத்தில் இருந்தார்களா என்ன?

கொல்லிப்பாவை சிற்றிதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:34

முத்தம், ஒரு கடிதம்

மைத்ரி நாவல் வாங்க

அன்புள்ள ஜெ

அஜிதன் இந்தக் காணொளியில் ஒரு விஷயம் சொல்கிறார். ’அப்பா இப்பகூட என்னைப் பார்த்தால் அணைத்து முத்தமிடுவார்’. ஆச்சரியமாக இருந்தது. அப்படி வளர்ந்த மகனை அணைத்துக்கொள்வதையோ முத்தமிடுவதையோ நான் கண்டதில்லை. அது சரியானதா?

எம்

அன்புள்ள எம்,

அது சரியா தவறா என்று தெரியவில்லை. அது ஒரு பழக்கம். விலங்குகள் அதைச் செய்கின்றன. நான் செய்கிறேன். எனக்கு என் மகன் மிகமிக அணுக்கமானவன், அருமையானவன். அவனை தொடுகை வழியாக அறிவதுபோல் வேறெவ்வகையிலும் அறிய இயல்வதில்லை.

ஆனால் என் மகன் நிலையில் இருக்கும் எவரையும் அவ்வாறே அணைத்துக் கொள்கிறேன். பல தருணங்களில் முத்தமிட்டதும் உண்டு. பெண்களிடம் ஒரு விலக்கத்தை கடைப்பிடிக்கிறேன் – சைதன்யா தவிர.

மிஷ்கின் உணர்ச்சிகரமாக நெகிழும்போது அதைச் செய்வதை கண்டிருக்கிறேன். அது ஒரு வழக்கம். தீயதென்றால் இருந்துவிட்டுப் போகட்டும் என்பதே என் நினைப்பு

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:31

கனவு இல்லம், கடிதம்

கனவு இல்லம் குளச்சல் மு யூசுப் தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள ஜெயமோகன்,

கனவில்லம் குறித்த உங்கள் கட்டுரையை முன்வைத்து, முதன்முதலாக  ஒரு கடிதம் எழுதுகிறேன்.

உங்களது வாசகனாக இருந்த நான், விஷ்ணுபுரத்திற்குப் பிந்தைய  25 ஆண்டுகளாக உங்களை நண்பராகக் கருதி வருகிறேன். அருகருகில் இருந்தும் நாம் அபூர்வமாகவே சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு சந்திப்பின்போதும் நீங்கள் சொல்லும்  தகவல்களும் ஆலோசனைகளும் என்னுடைய நினைவுத் திறனைக் கடந்தும் மனதுக்குள் தங்கி நிற்கும். என்னுடைய தனிப்பட்ட சில வாழ்வியல் இடர்பாடுகள் உட்பட, சங்க இலக்கியங்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ததுவரை நான் மேற்கொண்ட பல நல்லவைகளின் பின்னணியிலும் உங்கள் ஆலோசனைக் கரங்கள் செயல்பட்டன என்பதை எல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.

தங்கள் கட்டுரையில், அரசு கனவில்லம் வழங்கியவர்களில் கப்பல் கம்பெனிகளின் தலைமைப் பொறுப்பை வகித்து, தற்போது வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் நமது நண்பருக்கும், பாராளுமன்ற உறுப்பினரான தோழருக்கும் வழங்கியதை அவர்களுக்குக் குடியிருக்க உதவும் என்று நீங்கள் எழுதியதைக் கேலி செய்வதாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் விருதுகளுக்குத் தகுதியுள்ளவர்களே தவிர அரசு வழங்கும் இலவசங்களுக்குத்  தகுதியுள்ளவர்கள் அல்ல என்பது என்னுடைய கருத்து.

இது எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முயற்சிதானே தவிர நலிந்த எழுத்தாளர்களுக்கான உதவியல்ல என்று நீங்கள் வாதிடக்கூடும். ஏற்கனவே, எல்லா நலன்களுடனும் கௌரவமாக வாழ்கிறவர்களைத் தேடித்தேடி கௌரவப்படுத்துகிற அதே வேளையில், அதே விருதைப் பெற்று விட்டு, நீரோடைப் புறம்போக்கிலும், வாடகை வீட்டிலும், c/o முகவரியிலும், ரேஷன் அரிசியிலும் உயிர் வாழ்கிற விருதாளர்களை நீங்களும் அறிவீர்கள்.

பெரிய அளவு பொருளாதார இலாபமற்ற, கனவில்லத்திற்கு முந்தைய சாகித்திய அகாதெமி விருதைப் பெறுவதற்கே, தகுதியற்ற சில தமிழ் எழுத்தாளர்கள் என்னென்ன திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு பெற்றுக்கொண்டார்கள் என்பதும், தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளரான உங்களுக்கு அது கிடைக்காத காரணத்தையும் நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. இப்போதைய சூழலில் அதை வழங்க முன்வந்தால் நீங்கள் மறுத்து விடுவீர்கள் என்ற உண்மையை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

புகழுக்காக விஷத்தைக் குடிக்கவும் முன்வருகிற நபர்கள் வாழும் மண்ணில் இனி, விருதுடன் இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வீடும் கிடைக்கும் என்றால் இலக்கியத் துறையில், வணிக ரீதியான தரகுப்பணிகள் மேலும் சிறந்து விளங்கும்.  சுயமரியாதையும் திறமையுமுள்ள, அரசியல் செல்வாக்கோ பணபலமோ இல்லாத, மண்சார்ந்த, வாழ்வியல் அனுபவங்களுடன்கூடிய எழுத்தாளர்கள் சாதனையாளர்களாகும் வாய்ப்புகள் குறையும். இனி, செல்வந்தர்களின், செல்வாக்குப் படைத்தவர்களின், துணைவேந்தர்களின், பேராசிரியர்களின் புழங்குதளமாக மாறப்போகிறது தமிழ் இலக்கிய உலகம். உண்மையில் இதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ற ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

குளச்சல் மு யூசுப்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல் விருது – கடிதங்கள்

அன்புள்ள யூசுப்,

தமிழகத்தில் நல்லெண்ணத்துடன் தொடங்கப்படும் திட்டங்கள்கூட காலப்போக்கில் திரிபடைந்து தன்னலம் நோக்கிகளின் கைகளுக்குச் செல்வது வழக்கமாக நிகழ்வது. உலகியலில் எல்லா லாபங்களுக்காகவும் முழுமூச்சாக முண்டியடித்தல், ஒரு துளிகூட விடாமல் தேற்றி எடுத்துக்கொள்ளுதல் என்பது இங்கே இயல்பான சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது. 

இப்போது சாகித்ய அக்காதமி விருதின் பணமதிப்பு இதனூடாக பலமடங்காகிவிட்டிருப்பதனால் ஊழல் பெருக்க மிகுந்த வாய்ப்பு உள்ளது. இன்று அதில் இருப்பவர்கள் ஊழலில் புழுத்த ஆளுமைகள். நடுவர்களாக வரும் பேராசிரியர்கள் எந்த எல்லைக்கும் இறங்கும் நபர்கள். ஆகவே வரும்காலத்தில் சாகித்ய அக்காதமி விருதுகளின் தரம் கீழிறங்க, கமிஷன் வியாபாரமாக அது சீரழிய எல்லா வாய்ப்புகளும் உண்டு.

ஆனால் ஒரு திட்டம் தொடங்கப்படும்போது அதற்கான நம்பிக்கையை அளிப்பதும், நல்லவற்றை எதிர்பார்ப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. ஆகவேதான் என் வாழ்த்துக்கள். இவ்விருது இலக்கியம் மீதான அரசின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. இது இந்திய அளவில் கவனிக்கப்படும் திட்டம் என்பதனால் முன்னோடியானதும்கூட. தமிழ்ச் சூழலிலேயே எழுத்து – இலக்கியம் என்பதற்கு பொதுமக்கள் பார்வையில் ஒரு முக்கியத்துவம் உருவாகி வரும். 

சாகித்ய அக்காதமி விருது, கலைஞர் விருது போன்றவற்றை பெற்றவர்களே இப்போது இதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அந்த அளவுகோல் இப்போதைக்கு புறவயமானதுதான். ஆனால் இந்த கனவு இல்லம் உண்மையிலேயே இது தேவைப்படும் நிலையில் உள்ள வறிய எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும், அல்லது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம். அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:31

விஷக்கன்னி – வெங்கி

குறிஞ்சிவேலன் தமிழ் விக்கி

விஷக்கன்னி இணைய நூலகம்

அன்பின் ஜெ,

நலம்தானே?

கடந்த சில வாரங்களாக நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன் (archive.org தளத்தில் மின்னூல்கள் கிடைத்தன).

சமீபத்தில் குறிஞ்சிவேலன் ஐயா மொழிபெயர்த்த பொற்றேக்காட்டின் “விஷக்கன்னி” வாசித்தேன். இரண்டு நாட்கள் அந்த மலபார் மலைக் காடுகளில் சுற்றியலைந்த உணர்வு.

நாவலின் அந்த முப்பதாம் அத்தியாயத்தை நிதானத்துடன் வாசித்து முடித்து கடந்து செல்ல முடியவில்லை. ஒருவகை அமைதியின்மையும், வெற்றிடமும் உள்ளுக்குள் உருவாகி அடிப்படை வாழ்வு பற்றிய கேள்விகளால், எண்ணங்களால் தவிப்புற்று வாசிப்பை மூடிவைத்து சிந்தனையின் சங்கிலியில் சிக்கி, மீண்டு, மறுபடி வாசிப்பு துவங்க இடைவெளி தேவைப்பட்டது. ஒரு நல்ல எழுத்து மனதில் என்னவெல்லாம் நிகழ்த்துகிறது?.

நாவலில் நுழைவதற்கான சரியான வாசலை/மனத்தயாரிப்பை/விழைதலை ஓ.என்.வி. குரூப்பின் சிறப்பான முன்னுரை தந்தது.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு கேரளம் மூன்று ஆட்சிப் பகுதிகளைக் கொண்டிருந்தது. திருவிதாங்கூர், கொச்சி எனும் இரு நாடுகளும், சென்னை மாகாணத்தின் பிரிவாக மலபார் மாவட்டமும் இருந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த பாவப்பட்ட சில விவசாயிகள் தங்களிடமிருந்த சொற்ப உடைமைகளை விற்று மூட்டை கட்டிக்கொண்டு வடக்கு பிரதேசமான மலபாரிலுள்ள வயநாடன் மலைப் பிரதேசத்திற்கு குடியேறத் தொடங்கினார்கள். அங்கே மனிதக் காலடிச்சுவடுகள் பதியாத செழிப்பான பள்ளத்தாக்குகள் அவர்களுடைய யாக பூமியாயிற்று. செழிப்பும் செல்வமும் ஈட்டும் பிரகாசமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் மனங்களில். கொடுங்குளிரும், மலேரியாவும், காட்டு விலங்குகளும் ஒன்று சேர்ந்து வியூகம் அமைத்து அவர்களை எதிர்த்தன. அந்த சவாலை ஏற்று பயிர் செய்யும் மகத்தான யாகத்தினுள் புகுந்தார்கள். ஆனால் பலரும் அந்த யாகத்திலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்கள். மனோகரமான அந்த மலைக்காட்டுச் சரிவுகளில் இயற்கையின் தயாளத்தையும், கொடூரத்தையும் அவர்கள் ஒருசேரக் கண்டார்கள்

தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். குறிஞ்சிவேலன் ஐயாவை அன்புடனும், நன்றியுடனும் மனதில் நினைத்துக் கொண்டேன்.

மேற்கு மலைக்காடுகளில் முதல் தலைமுறையின் இருப்பிற்கான/வாழ்தலுக்கான போராட்டங்கள் அறிய துக்க இழை ஒன்று மனதை தொந்தரவு செய்தவாறே இருந்தது. நுண்ணிய அவதானிப்புகளில் காடுகளின் விவரணைகளும், மனிதர்களின் இயல்புகளும், இயற்கையும் பொற்றேகாட்டின் எழுத்தின் மாயத்தில் மனதில் ஆழமாய் உள்நுழைந்தன. வேர்பிடிக்கப் பரிதவிக்கும் ஆன்மாக்களின் நூறு நூறு வாழ்க்கைக் கதைகள்.

ஃபாதராக விரும்பும் பதினேழு வயது இளைஞன் அந்தோணி, அந்தோணியின் சித்தப்பா செரியான், முல்லைப்பூமாலை போல் புன்னகைக்கும் பதின்பருவத்து ஆனிக்குட்டி, கடின உழைப்பாளி மரியம், மரியத்தின் கணவன் சோம்பேறி மாத்தன், மரியத்தின் மகள் மேரிக்குட்டி, அந்தோணியின் மேல் ஆசைப்படும் மாதவி, மாதவியின் மேல் மோகம் கொள்ளும் வர்க்கி, மலபாரில் தாக்குப்பிடிக்க முடியாமல் மைசூருக்கு ஓடி அங்கு ஓட்டல் தொழில் நடத்தும் வரீதுகுஞ்ஞு, பட்லாம் எஸ்டேட்டின் பால், தறமூட்டில் சாக்கோ, குஞ்சாண்டி, டீக்கடை சாக்கோச்சன், மந்திரவாதினி கரிம்பாத்தி கும்பா, மீன் பிடிக்க நஞ்சு காய்ச்சும் காட்டுவாசிகளான கரிம்பாலர்கள்… என எளிதில் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்.

முப்பதாம் அத்தியாயம் புதிதாகக் கட்டப்பட்ட அழகான அந்த பங்களாவின் உணவறையில் ஆரம்பிக்கிறது. பங்களாவைச் சுற்றிலும் பசுமையான புல் தரை. பல வண்ணங்களில் பூச்செடிகள். செல்வம் ஒளிரும் அலங்காரத்தில் அறைகள். உணவு மேஜையில் உயர்தர ஒயினும், பல்வேறு வகையான சுவை உணவு வகைகளும். காட்சியை அப்படியே இரண்டு மைல் தொலைவில் குன்றின் சரிவிலிருக்கும் தொம்மனின் குடிசைக்குக் கொண்டு செல்கிறார் பொற்றேகாட். தொம்மன் கஞ்சி காய்ச்ச, மழையில் நனைந்த அடுப்புடன் போராடிக் கொண்டிருக்கிறான். அருகில் ஒரு பாயில் இரண்டு குழந்தைகள் கைகால்களை அகற்றி நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறார்கள்.

ஓராண்டிற்கு முன்புதான் தொம்மன் திருவிதாங்கூரிலுள்ள ஆரக்குழை என்ற இடத்திலிருந்து மலபாருக்கு வந்தான். ஊரில் சொத்து அத்தனையும் விற்று 700 பிரிட்டிஷ் ரூபாய்கள் எடுத்துக்கொண்டு அவனும், தம்பி செரியானும், அவன் மனைவியும், நான்கு குழந்தைகளுமாக மலபாருக்கு வந்தார்கள். வந்த நான்கு மாதங்களுக்குள் மூத்த குழந்தை ஜுரம் கண்டு இறந்துவிட்டது. அடுத்த இரண்டு மாதத்தில் தம்பி செரியானும் மலேரியாவினால் இறக்கிறான். சென்ற மாதம் ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அவன் மனைவியும் இறந்தாள். பயிர்களையெல்லாம் பன்றி புகுந்து நாசமாக்கி எல்லாமே நஷ்டமாகிவிட்டன. கடனும் ஏற்பட்டுவிட்டது. ஆகாரத்திற்கும் வழியில்லை. அவனுக்கும் மலை ஜுரம் பிடித்திருக்கின்றது. இளங்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கூட யாருமில்லை. நான்கு வயது இட்டூப்பிற்கும் ஜுரம் தொடங்கி இருக்கிறது. இனிமேல் அவர்களும் இங்கே கிடந்து சாகமுடியாது. அதனால் திரும்பவும் சொந்த ஊருக்கே செல்லவேண்டும். யாரும் உதவுவதாக இல்லை. அவனுக்கு உதவி செய்யக்கூடியவர்களும் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

கடைசி முயற்சியாக பணம் கேட்டுப் பார்க்கலாம் என்று ஆறு வயது ஔசேப்பையும், நான்கு வயது இட்டூப்பையும் அழைத்துக்கொண்டு நான்கு மாத கைக்குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு மழையில் நடந்து அந்த பங்களாவிற்கு வருகிறான் தொம்மன். உதவி கிடைக்கவில்லை. நிலைத்திருந்த மழையின் பேரோசையில், தொம்மன் தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தன் குடிசைக்கு – அந்தகாரத்திற்கு…நிச்சயமற்ற தன்மைக்கு…பயங்கரத்துக்கு… – திரும்புகிறான்.

அத்தியாயம் இப்படி முடிகிறது…

மாதா கோயிலின் கட்டிட வேலை பாதி முடிவதற்கு முன்பே அதன் அருகில் உள்ள மயானத்தின் பரப்பளவை அதிகரிக்க வேண்டியதாயிற்று. மரணத்தின் கூட்டல் குறியைப்போல அங்கே சிலுவைகள் அதிகரிக்கத் தொடங்கின. ஒரு புதிய மரச் சிலுவையின் கீழே தொம்மனும், அதற்கு அருகில் உள்ள சிறிய சிலுவையின் கீழே இட்டூப்பும் புதையுண்டு கிடந்தார்கள். தொம்மனின் கைக்குழந்தையை காட்டு நரி கடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டது. சிரங்கு பிடித்த ஔசேப்பை, சள்ளிப்பரப்பன், மாரிக்குன்னில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்.

குறிஞ்சிவேலன்

நாவலை முடித்துவிட்டு பொற்றேகாட் பற்றியும், தமிழ் விக்கியில் குறிஞ்சிவேலன் ஐயா பற்றியும், இணையத்தில் குறிஞ்சிவேலன் ஐயாவின் சில நேர்காணல்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த விஷக்கன்னியின் பூமியிலிருந்து வெளிவர வெகுநேரம் பிடித்தது.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2022 10:31

November 27, 2022

கீழ்ப்படிதல் மனித இயல்பா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கேப்டன் வெங்கட் என்ற ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் ட்விட்டர் பதிவை படித்தேன்.

https://twitter.com/CaptVenk/status/1585873059910914048

Following orders is not natural for humans. Soldiers are de-humanised to make them follow orders unquestionably. It’s unfair to expect a behaviour from them like any other non-dehumanised person, the moment they retire.

உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது. கேள்வி கேட்காமல் உத்தரவிற்கு கீழ்படிவதற்காக ராணுவ வீரர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். ராணுவ வீரர்கள் ஒய்வு பெற்றவுடனே அவர்களிடம் மனிதத்தன்மை உள்ள ஒரு நபரிடம் இருந்து எதிர் பார்க்கும் நடத்தையை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. 

உடனே இந்த மனித இயல்பை குறித்து தங்கள் ஏதேனும் கூறியுள்ளீர்களா என்று தங்கள் வலை தளத்தில் தேடினேன். தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.

சரி. அக்னிவீர் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் நேர்/எதிர்மறை பாதிப்பு குறித்து குறித்து ஏதேனும் உரையாடல் / பதிவு உள்ளதா என்றும் தேடினேன். அதற்கும் தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை அக்னிவீர் திட்டம்  அப்போது மிகவும்  அரசியலாக்க பட்டதால் தாங்கள் கருத்து பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

கேப்டன் வெங்கட்டின் “உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது” என்னும் வரி எனக்கு தற்கால குழந்தைகளை நினைவு படுத்தியது. தற்கால பெற்றோரின் மிக பெரிய குறையே தங்கள் குழந்தைகள் தங்கள் பேச்சை (அதாவது உத்தரவை) கேட்பதில்லை என்பதே.

தயவு செய்து தாங்கள் “உத்தரவிற்கு கீழ்படிதல்” பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன். தற்கால பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

மிக்க நன்றி

அன்புடன்

சந்தானம்

****

அன்புள்ள சந்தானம்

இந்தவகையான விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் மனித இயல்பு என்ன என்னும் வினாவை தேடிச்செல்பவை. மேலோட்டமாக ஓர் அரட்டைக்களத்தில் விவாதிக்கலாம். மேலதிகமாக விவாதிக்கவேண்டும் என்றால் விலங்கியல், மானுடவியல், நாட்டாரியல் தரவுகள் மற்றும் கொள்கைகளை வைத்துக்கொண்டு பேசவேண்டும்.

ஆனால் அதிலும் அறுதியாக ஏதும் சொல்லிவிட முடியாது. அதில் உறுதியான வெவ்வேறு தரப்புகள் இருக்கும். நம்முடைய சொந்த அனுமானங்களின் அடிப்படையில் ஒரு தரப்பை தெரிவுசெய்துகொள்ளவேண்டியதுதான்.

இந்த விவாதத்தில்  நான் என் தரப்பென ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அப்படி முன்னரே ஓர் உறுதியான புரிதலை அடையவும் விரும்பவில்லை. எழுத்தாளனின் இயல்பல்ல அது. இந்த விவாதத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

முதலில் உசாவவேண்டிய வினா இது. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மனிதனின் அடிப்படை இயல்பா இல்லையா?

விலங்கியல் என்ன சொல்கிறது? நாம் பார்க்கும் விலங்குகள் இரண்டுவகை. மந்தையாக வாழ்பவை, தனியாக வாழ்பவை. புலி தனியான விலங்கு. மான் மந்தை விலங்கு. மந்தை விலங்குகள் மந்தைகளுக்குரிய நெறிகள் கொண்டுள்ளன. பெரும்பாலான மந்தைவிலங்குகளில் உறுதியான தலைமை உண்டு. தலைமையின் ஆணைக்கு அந்த மந்தையின் அத்தனை விலங்குகளும் மறுப்பின்றி கட்டுப்பட்டாகவேண்டும். இல்லையேல் மந்தைவிலக்கம் முதல் கொலை வரை தண்டனைகள் உண்டு.

மனிதனுக்கு பரிணாமத்தில் அணுக்கமான விலங்குகள் சிம்பன்ஸிக்கள். அவை மந்தை விலங்குகளே. நாம் காணும் குரங்குகள் மந்தையாகவே வாழ்கின்றன. அவற்றில் தலைவன் உண்டு, அவன் ஆணைக்கு மொத்த மந்தையே முற்றிலும் கட்டுப்பட்டது. சும்மா குற்றாலத்துக்குச் சென்று ஒருமணிநேரம் குரங்குகளை கவனியுங்கள். தாட்டான் என ஊர்க்காரர்கள் சொல்லும் பெரிய ஆண்குரங்கு தலைமையேற்றிருப்பதை, அதன் ஆணைகளை அத்தனை குரங்குகளும் அப்படியே ஏற்பதை காணலாம். தாட்டான் தரையில் கையால் தட்டினால் அவ்வளவுதான், ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. மீறப்பட்டால் கொலைதான்.

மானுட இனமும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்றே எல்லா தொல் மானுடவியலாய்வுகளும் சொல்கின்றன. மானுடவியலும் நாட்டாரியலும் பழங்குடிகளைப் பற்றிச் சொல்லும் எல்லா விவரணைகளிலும் அவர்களிடமுள்ள தலைமை சார்ந்த ஒருங்கிணைப்பை  குறிப்பிடுகிறார்கள். பழங்குடிகளில் தலைவனின் ஆணை என்பது குடிகளால் மறுசொல் இன்றி ஏற்கப்படவேண்டிய ஒன்று. இன்றும் அப்படித்தான். இப்போது மலைக்குச் சென்றாலும் பார்க்கமுடியும். கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பது பழங்குடிகளின் அடிப்படை இயல்பு. ஆகவே பழங்குடிகளிடம் மானுடப்பண்பு இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?

அதே மனநிலைதான் நாட்டார்ப் பண்பாட்டிலும் உள்ளது. ஊர்க்கட்டுப்பாடு, ஊர் நாட்டாமை இல்லாத கிராமங்களே இல்லை. மிக மிக மெல்லத்தான் அக்கட்டுப்பாடுகள் விலகி வருகின்றன. அவ்வாறு விலகிய கிராமங்களில்கூட திருவிழாக்களின்போதும் சாவு போன்ற சடங்குகளின்போது மீறமுடியா ஆணைகள் உண்டு.

ஆக, நாமறிந்த மானுட இயல்பு என்பது கட்டளைக்கு கீழ்படிவதே. மானுட இனம் விலங்கிலிருந்து அப்படித்தான் பரிணாமம் அடைந்துள்ளது. சேர்ந்து வேட்டையாடவும், சேர்ந்து போரிடவும் அந்த கீழ்ப்படிதல் உதவியாக இருந்துள்ளது. கீழ்ப்படிதல் கொண்ட சமூகங்களே வென்று ,தங்கி வாழ்ந்தன அவையே இன்றுள்ள சமூகங்களாயின.

இன்றைய ராணுவங்கள் எல்லாம் அந்த பழங்குடி ராணுவத்தின் செம்மைசெய்யப்பட்ட வடிவங்களே. பழங்குடிகளின் குழுமனநிலை, தாக்குதல் மனநிலை, கொண்டாட்ட மனநிலை அப்படியே இன்றும் ராணுவத்தில் நீடிக்கிறது. மீறமுடியாத தலைமையும் கீழ்ப்படிதலும் அவ்வாறுதான்.

கீழ்ப்படிதல் ஓரளவுக்கேனும் இல்லாத எந்த அமைப்பும் இருக்க இயலாது. பள்ளி முதல் அலுவலகங்கள் வரை. தொழிற்சாலை நெறிகள், சாலைநெறிகள், தொழில்நெறிகள் என நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டிய எத்தனை ஆணைகள் இங்குள்ளன. எத்தனை ஒழுக்க நெறிகளை இயல்பாக ஏற்று கடைப்பிடிக்கிறோம். சட்டை இல்லாமல் சந்தைக்குப் போகிறோமா என்ன? நாம் பிள்ளைகளுக்கு அளிக்கும் ‘நாகரீகப்’ பயிற்சியே அடிப்படையில் கீழ்ப்படிதல்தானே?

மனித குல வரலாற்றிலேயே தனிமனிதன், தனிச்சிந்தனை எல்லாம் மிக அண்மையில் உருவானவை. எப்படி நீட்டி வரலாறு எழுதினாலும் ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் தொடங்குவதுதான் அச்சிந்தனை. அவர்களிடமிருந்தே உலகம் கற்றுக்கொண்டது. தனிமனிதன் என்னும் உருவகத்தில் இருந்தே தனிமனிதனுக்கான ஆன்மிகம், தனிமனிதனுக்கான உரிமைகள் என வளர்ந்து ஜனநாயகம் வரை வந்தனர்.

இந்தியாவில் அஹம் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படும் தனிமனிதன் என்னும் தத்துவ உருவகம் என்றும் உண்டு. ஆனால் சமூக வாழ்க்கையில் அது இல்லை. குழு அடையாளம், குடும்ப அடையாளமே ஒவ்வொருவருக்கும் இருந்தது. இருநூறாண்டுகளுக்கு முன்புவரை தன் வாழ்க்கை பற்றிய எந்த முடிவையும் எவரும் எடுக்க முடியாது. தொழில், குடும்பம், உறவுகள் எல்லாமே மரபால், இனக்குழுவால், சமூகநெறிகளால் எடுக்கப்படும்.

1951-ல் நடந்த முதல் இந்தியப் பொதுத்தேர்தலில் வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்பட்டபோது பலருக்கு சொந்தமாகப் பெயர்களே இருக்கவில்லை என்று ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆண்களுக்கு இனக்குழுவின் பெயரும் பெண்களுக்கு கணவன்பெயருமே அடையாளமாக அமைவது சாதாரணமாக இருந்தது. பெயர்களை அளித்து, அவர்கள் ஒரு விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்தது தேர்தல் கமிஷன். இன்னமும் ஜனங்கள் முழுமையாக கற்கவில்லை. (காந்திக்கு பிறகு இந்தியா)

உங்கள் பாட்டியோ தாத்தாவோ எப்படி கல்யாணம் செய்துகொண்டார்கள்? தெரிவு இருந்ததா? முடிவெடுக்கும் உரிமை இருந்ததா? இயல்பாக, மறுசிந்தனை இல்லாமல் கட்டளைக்கு அடிபணிந்தார்கள் அல்லவா? அதுவே இயல்பென எண்ணினார்கள் அல்லவா? நம் சமூகத்தில் பெண்கள் தங்களை தனிமனித ஆளுமை என எப்போது நம்ப ஆரம்பித்தனர்?

இது ஒரு வாதம். இதற்கு மறுவாதம் என எதைச் சொல்லலாம்? இந்த அடிபணியும் இயல்பு உயிரியல் சார்ந்தது, மானுடப்பரிணாமத்தில் உருவாகி வந்தது. ஆனால் கலாச்சாரம் அதற்கு எதிரானது. அதுதான் தொடர்ச்சியாக மனிதனை கட்டமைத்தபடி வந்திருக்கிறது. இன்றைய மனிதன் கலாச்சாரத்தின் சிருஷ்டி. அவனுக்கு அவன் தனிமனிதன் என சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் தனித்தன்மையை, உரிமையை நம்புகிறான்.

இன்றைய மனிதனின் இயல்பு அவனுக்கு இருக்கும் கலாச்சார பயிற்சியால் உருவானது மட்டுமே. அவனிடமிருக்கும் உயிரியல்பு இரண்டாம்பட்சமே. ஆகவே கீழ்ப்படிதல் அவனுக்கு இயல்பானது அல்ல. ஆணைகளை மீறுவதும், தனித்தன்மையை பேணுவதுமே மானுட இயல்பு. இப்படி வாதிடலாம். மீறுபவனே மானுட இயல்புக்கு அணுக்கமானவன். கீழ்ப்படிபவன் எதிரானவன்.

ஆக, கேள்வி உயிரியல்பா கலாச்சாரப்பயிற்சியா எது மனிதனை உருவாக்குகிறது என்பதாக எஞ்சும். அது தத்துவார்த்தமான கேள்வி. அதற்கு இருபக்கமும் நின்று நிறைய வாதிடலாம். இருபக்கத்துக்கும் பேரறிஞர்கள் துணைவருவார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2022 10:35

கீழ்ப்படிதல் மனித இயல்பா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கேப்டன் வெங்கட் என்ற ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் ட்விட்டர் பதிவை படித்தேன்.

https://twitter.com/CaptVenk/status/1585873059910914048

Following orders is not natural for humans. Soldiers are de-humanised to make them follow orders unquestionably. It’s unfair to expect a behaviour from them like any other non-dehumanised person, the moment they retire.

உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது. கேள்வி கேட்காமல் உத்தரவிற்கு கீழ்படிவதற்காக ராணுவ வீரர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். ராணுவ வீரர்கள் ஒய்வு பெற்றவுடனே அவர்களிடம் மனிதத்தன்மை உள்ள ஒரு நபரிடம் இருந்து எதிர் பார்க்கும் நடத்தையை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. 

உடனே இந்த மனித இயல்பை குறித்து தங்கள் ஏதேனும் கூறியுள்ளீர்களா என்று தங்கள் வலை தளத்தில் தேடினேன். தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.

சரி. அக்னிவீர் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் நேர்/எதிர்மறை பாதிப்பு குறித்து குறித்து ஏதேனும் உரையாடல் / பதிவு உள்ளதா என்றும் தேடினேன். அதற்கும் தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை அக்னிவீர் திட்டம்  அப்போது மிகவும்  அரசியலாக்க பட்டதால் தாங்கள் கருத்து பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

கேப்டன் வெங்கட்டின் “உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது” என்னும் வரி எனக்கு தற்கால குழந்தைகளை நினைவு படுத்தியது. தற்கால பெற்றோரின் மிக பெரிய குறையே தங்கள் குழந்தைகள் தங்கள் பேச்சை (அதாவது உத்தரவை) கேட்பதில்லை என்பதே.

தயவு செய்து தாங்கள் “உத்தரவிற்கு கீழ்படிதல்” பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன். தற்கால பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

மிக்க நன்றி

அன்புடன்

சந்தானம்

****

அன்புள்ள சந்தானம்

இந்தவகையான விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் மனித இயல்பு என்ன என்னும் வினாவை தேடிச்செல்பவை. மேலோட்டமாக ஓர் அரட்டைக்களத்தில் விவாதிக்கலாம். மேலதிகமாக விவாதிக்கவேண்டும் என்றால் விலங்கியல், மானுடவியல், நாட்டாரியல் தரவுகள் மற்றும் கொள்கைகளை வைத்துக்கொண்டு பேசவேண்டும்.

ஆனால் அதிலும் அறுதியாக ஏதும் சொல்லிவிட முடியாது. அதில் உறுதியான வெவ்வேறு தரப்புகள் இருக்கும். நம்முடைய சொந்த அனுமானங்களின் அடிப்படையில் ஒரு தரப்பை தெரிவுசெய்துகொள்ளவேண்டியதுதான்.

இந்த விவாதத்தில்  நான் என் தரப்பென ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அப்படி முன்னரே ஓர் உறுதியான புரிதலை அடையவும் விரும்பவில்லை. எழுத்தாளனின் இயல்பல்ல அது. இந்த விவாதத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

முதலில் உசாவவேண்டிய வினா இது. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மனிதனின் அடிப்படை இயல்பா இல்லையா?

விலங்கியல் என்ன சொல்கிறது? நாம் பார்க்கும் விலங்குகள் இரண்டுவகை. மந்தையாக வாழ்பவை, தனியாக வாழ்பவை. புலி தனியான விலங்கு. மான் மந்தை விலங்கு. மந்தை விலங்குகள் மந்தைகளுக்குரிய நெறிகள் கொண்டுள்ளன. பெரும்பாலான மந்தைவிலங்குகளில் உறுதியான தலைமை உண்டு. தலைமையின் ஆணைக்கு அந்த மந்தையின் அத்தனை விலங்குகளும் மறுப்பின்றி கட்டுப்பட்டாகவேண்டும். இல்லையேல் மந்தைவிலக்கம் முதல் கொலை வரை தண்டனைகள் உண்டு.

மனிதனுக்கு பரிணாமத்தில் அணுக்கமான விலங்குகள் சிம்பன்ஸிக்கள். அவை மந்தை விலங்குகளே. நாம் காணும் குரங்குகள் மந்தையாகவே வாழ்கின்றன. அவற்றில் தலைவன் உண்டு, அவன் ஆணைக்கு மொத்த மந்தையே முற்றிலும் கட்டுப்பட்டது. சும்மா குற்றாலத்துக்குச் சென்று ஒருமணிநேரம் குரங்குகளை கவனியுங்கள். தாட்டான் என ஊர்க்காரர்கள் சொல்லும் பெரிய ஆண்குரங்கு தலைமையேற்றிருப்பதை, அதன் ஆணைகளை அத்தனை குரங்குகளும் அப்படியே ஏற்பதை காணலாம். தாட்டான் தரையில் கையால் தட்டினால் அவ்வளவுதான், ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. மீறப்பட்டால் கொலைதான்.

மானுட இனமும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்றே எல்லா தொல் மானுடவியலாய்வுகளும் சொல்கின்றன. மானுடவியலும் நாட்டாரியலும் பழங்குடிகளைப் பற்றிச் சொல்லும் எல்லா விவரணைகளிலும் அவர்களிடமுள்ள தலைமை சார்ந்த ஒருங்கிணைப்பை  குறிப்பிடுகிறார்கள். பழங்குடிகளில் தலைவனின் ஆணை என்பது குடிகளால் மறுசொல் இன்றி ஏற்கப்படவேண்டிய ஒன்று. இன்றும் அப்படித்தான். இப்போது மலைக்குச் சென்றாலும் பார்க்கமுடியும். கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பது பழங்குடிகளின் அடிப்படை இயல்பு. ஆகவே பழங்குடிகளிடம் மானுடப்பண்பு இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?

அதே மனநிலைதான் நாட்டார்ப் பண்பாட்டிலும் உள்ளது. ஊர்க்கட்டுப்பாடு, ஊர் நாட்டாமை இல்லாத கிராமங்களே இல்லை. மிக மிக மெல்லத்தான் அக்கட்டுப்பாடுகள் விலகி வருகின்றன. அவ்வாறு விலகிய கிராமங்களில்கூட திருவிழாக்களின்போதும் சாவு போன்ற சடங்குகளின்போது மீறமுடியா ஆணைகள் உண்டு.

ஆக, நாமறிந்த மானுட இயல்பு என்பது கட்டளைக்கு கீழ்படிவதே. மானுட இனம் விலங்கிலிருந்து அப்படித்தான் பரிணாமம் அடைந்துள்ளது. சேர்ந்து வேட்டையாடவும், சேர்ந்து போரிடவும் அந்த கீழ்ப்படிதல் உதவியாக இருந்துள்ளது. கீழ்ப்படிதல் கொண்ட சமூகங்களே வென்று ,தங்கி வாழ்ந்தன அவையே இன்றுள்ள சமூகங்களாயின.

இன்றைய ராணுவங்கள் எல்லாம் அந்த பழங்குடி ராணுவத்தின் செம்மைசெய்யப்பட்ட வடிவங்களே. பழங்குடிகளின் குழுமனநிலை, தாக்குதல் மனநிலை, கொண்டாட்ட மனநிலை அப்படியே இன்றும் ராணுவத்தில் நீடிக்கிறது. மீறமுடியாத தலைமையும் கீழ்ப்படிதலும் அவ்வாறுதான்.

கீழ்ப்படிதல் ஓரளவுக்கேனும் இல்லாத எந்த அமைப்பும் இருக்க இயலாது. பள்ளி முதல் அலுவலகங்கள் வரை. தொழிற்சாலை நெறிகள், சாலைநெறிகள், தொழில்நெறிகள் என நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டிய எத்தனை ஆணைகள் இங்குள்ளன. எத்தனை ஒழுக்க நெறிகளை இயல்பாக ஏற்று கடைப்பிடிக்கிறோம். சட்டை இல்லாமல் சந்தைக்குப் போகிறோமா என்ன? நாம் பிள்ளைகளுக்கு அளிக்கும் ‘நாகரீகப்’ பயிற்சியே அடிப்படையில் கீழ்ப்படிதல்தானே?

மனித குல வரலாற்றிலேயே தனிமனிதன், தனிச்சிந்தனை எல்லாம் மிக அண்மையில் உருவானவை. எப்படி நீட்டி வரலாறு எழுதினாலும் ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் தொடங்குவதுதான் அச்சிந்தனை. அவர்களிடமிருந்தே உலகம் கற்றுக்கொண்டது. தனிமனிதன் என்னும் உருவகத்தில் இருந்தே தனிமனிதனுக்கான ஆன்மிகம், தனிமனிதனுக்கான உரிமைகள் என வளர்ந்து ஜனநாயகம் வரை வந்தனர்.

இந்தியாவில் அஹம் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படும் தனிமனிதன் என்னும் தத்துவ உருவகம் என்றும் உண்டு. ஆனால் சமூக வாழ்க்கையில் அது இல்லை. குழு அடையாளம், குடும்ப அடையாளமே ஒவ்வொருவருக்கும் இருந்தது. இருநூறாண்டுகளுக்கு முன்புவரை தன் வாழ்க்கை பற்றிய எந்த முடிவையும் எவரும் எடுக்க முடியாது. தொழில், குடும்பம், உறவுகள் எல்லாமே மரபால், இனக்குழுவால், சமூகநெறிகளால் எடுக்கப்படும்.

1951-ல் நடந்த முதல் இந்தியப் பொதுத்தேர்தலில் வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்பட்டபோது பலருக்கு சொந்தமாகப் பெயர்களே இருக்கவில்லை என்று ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆண்களுக்கு இனக்குழுவின் பெயரும் பெண்களுக்கு கணவன்பெயருமே அடையாளமாக அமைவது சாதாரணமாக இருந்தது. பெயர்களை அளித்து, அவர்கள் ஒரு விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்தது தேர்தல் கமிஷன். இன்னமும் ஜனங்கள் முழுமையாக கற்கவில்லை. (காந்திக்கு பிறகு இந்தியா)

உங்கள் பாட்டியோ தாத்தாவோ எப்படி கல்யாணம் செய்துகொண்டார்கள்? தெரிவு இருந்ததா? முடிவெடுக்கும் உரிமை இருந்ததா? இயல்பாக, மறுசிந்தனை இல்லாமல் கட்டளைக்கு அடிபணிந்தார்கள் அல்லவா? அதுவே இயல்பென எண்ணினார்கள் அல்லவா? நம் சமூகத்தில் பெண்கள் தங்களை தனிமனித ஆளுமை என எப்போது நம்ப ஆரம்பித்தனர்?

இது ஒரு வாதம். இதற்கு மறுவாதம் என எதைச் சொல்லலாம்? இந்த அடிபணியும் இயல்பு உயிரியல் சார்ந்தது, மானுடப்பரிணாமத்தில் உருவாகி வந்தது. ஆனால் கலாச்சாரம் அதற்கு எதிரானது. அதுதான் தொடர்ச்சியாக மனிதனை கட்டமைத்தபடி வந்திருக்கிறது. இன்றைய மனிதன் கலாச்சாரத்தின் சிருஷ்டி. அவனுக்கு அவன் தனிமனிதன் என சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் தனித்தன்மையை, உரிமையை நம்புகிறான்.

இன்றைய மனிதனின் இயல்பு அவனுக்கு இருக்கும் கலாச்சார பயிற்சியால் உருவானது மட்டுமே. அவனிடமிருக்கும் உயிரியல்பு இரண்டாம்பட்சமே. ஆகவே கீழ்ப்படிதல் அவனுக்கு இயல்பானது அல்ல. ஆணைகளை மீறுவதும், தனித்தன்மையை பேணுவதுமே மானுட இயல்பு. இப்படி வாதிடலாம். மீறுபவனே மானுட இயல்புக்கு அணுக்கமானவன். கீழ்ப்படிபவன் எதிரானவன்.

ஆக, கேள்வி உயிரியல்பா கலாச்சாரப்பயிற்சியா எது மனிதனை உருவாக்குகிறது என்பதாக எஞ்சும். அது தத்துவார்த்தமான கேள்வி. அதற்கு இருபக்கமும் நின்று நிறைய வாதிடலாம். இருபக்கத்துக்கும் பேரறிஞர்கள் துணைவருவார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2022 10:35

கோ.மா.கோதண்டம்

எண்பதுகளில் வார இதழ்கள் வாசிப்பவர்களுக்கு கண்ணில்பட்டுக்கொண்டே இருந்த பெயர் கோ.மா.கோதண்டம். மொழியாக்கம், சிறுவர் இலக்கியம், செய்திக்குறிப்புகள் என விரிவாக எழுதியவர். இன்று அவருடைய இடம் பழங்குடிகள் மற்றும் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை பொதுவாசிப்புத் தளத்தில் தொடர்ந்து எழுதியவர் என்பதுதான்

கோ.மா.கோதண்டம் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2022 10:34

கோ.மா.கோதண்டம்

எண்பதுகளில் வார இதழ்கள் வாசிப்பவர்களுக்கு கண்ணில்பட்டுக்கொண்டே இருந்த பெயர் கோ.மா.கோதண்டம். மொழியாக்கம், சிறுவர் இலக்கியம், செய்திக்குறிப்புகள் என விரிவாக எழுதியவர். இன்று அவருடைய இடம் பழங்குடிகள் மற்றும் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை பொதுவாசிப்புத் தளத்தில் தொடர்ந்து எழுதியவர் என்பதுதான்

கோ.மா.கோதண்டம் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2022 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.